குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, October 4, 2025

வீட்டுக்கு வந்த டிரம்ப் மற்றும் அஜித் தோவல் - தொடர்ச்சி

எலியார் பூனைகளுக்குப் பயப்படவில்லை. 

ஆகவே நான் இன்கம்டாக்ஸ் அல்லது இ.டி. வழியைத் தேர்ந்தெடுத்தேன்.

அதற்கு காரணம் நானல்ல. 

கனவில் வந்தவர்கள்.

வள்ளலார் கருணையைக் கொஞ்சம் தள்ளி வை எனக் கனவில் வந்து சொன்னார்.

காந்தி மகானோ அகிம்சை என்றால் பாதகம் என்றும் அந்தக் காலத்தில் மனசாட்சி உள்ளவர்கள் இருந்தார்கள். ஆனால் இந்தக் காலத்தில் கொலைகாரனை கூட அண்ணா என்றும், தலைவர் என்று அழைக்கும் படுபாதகர்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் கருணையோ, பொறுமையோ காட்டினால் உன்னை அழித்து விடுவார்கள் என்றும், பிரதமர் மோடி அவர்கள் கூட என்னைப் பற்றி காந்தித் திரைப்படத்துக்குப் பின்பு தான் எல்லோருக்கும் தெரிய வந்தது என்று சொன்னார் அல்லவா? இதையெல்லாம் கவனத்தில் வை என்றும் கனவில் வந்து உபதேசித்தார்.

என் மூளை பல உபாயங்களைத் தேடியது. அதில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்தது.

எலியைப் பிடிக்கலாமே தவிர கொல்லக் கூடாது. அது சட்ட விரோதம் என பீட்டா வழக்குத் தொடுக்கும் அபாயம் வேறு இருக்கிறது. 

முதலில் வழக்கு, அதன் பிறகு விசாரணை, வக்கீல் செலவு என இத்தியாதிகள் நடந்து தீர்ப்பு வரும் வரை அது கொலையாக கருதப்படும் அபாயம் வேறு இருக்கிறது.

ஆகவே இந்த வழியைத் தேர்ந்தெடுத்தேன்.

மரண பயத்தைக் காட்டிட்டான் பரமா? - வசனம் நினைவிருக்கிறதா? 

எலிக்கு மரண பயத்தைக் காட்ட வேண்டிய தருணம் வந்து விட்டது.

கொலை அல்ல, மரண பயம்..! 

இதெல்லாம் தேவையா? பேசாமல் எலியைப் பிடிக்க உத்தரவு போடச் சொல்லி, டெல்லி கோர்ட்டில் வழக்கு போட்டு விடலாமா எனக் கூட நினைத்தேன். செலவு ரொம்ப ஆகும். ஆகவே அதை தள்ளி வைத்து விட்டேன்.

படுக்கையறையின் அருகில் இருக்கும் சிலாப்பில் எலியார் விடிகாலையில் வந்து விடுவதைக் கண்டுபிடித்தேன். அடுத்த நாள் திட்டத்தினைச் செயல்படுத்த வேண்டியது என முடிவெடுத்தேன்.

விடிகாலையில் எலியார் சிலாப்பிற்கு வந்து, தன் பற்கள் மூலம் சில்மிஷத்தில் இருந்தார். 

கோதையை எழுப்பி பெட்ரூம் கதவைச் சாத்தி விட்டு வெளியில் நில், கையில் ஒரு துண்டு அவசியம். தரையில் அடிப்பது திட்டம். எலியார் பாதித்து விடக்கூடாது என்பது முக்கியம் என திருதிருவென விழித்துக் கொண்டிருந்தவளிடம் விவரித்தேன்.

வழக்கம் போல மண்டையை ஆட்டி விட்டாள். 

லைட்டைப் போட்டவுடன், அறைக்கதவைச் சாத்தி விட்டு வெளியில் நின்றாள்.

என் கையில் ஒரு பிரம்பு. 

லைட்டைப் போட்டவுடன் எலியாருக்கு பீதியில் கிலி பிடித்து விட்டது. குடுகுடுவென பீரோ வழியாக இறங்கி கதவருகில் வந்தவருக்கு மூச்சே நின்று போனது.

சாத்தப்பட்ட கதவு. 

எலியாருக்கு திகில் கிளம்ப கட்டிலுக்குள் கீழ் ஓடி ஒளிந்தார்.

என் கையில் இருந்த பிரம்பால் ஒரு தட்டு.

எலியாருக்கு ஒன்றுக்கு ரெண்டுக்கு வந்திருக்கும் போல.
 
தட தடவென அங்குமிங்கும் ஒலிம்பிக் போட்டியில் ஓடுவது போல ஓடிக் கொண்டிருந்தார்.

இனி திட்டத்தின் அடுத்த பகுதி.

கோதை லேசாக கதவைத் திற எனக் கத்தினேன்.

சத்தம் கேட்ட கோதை கதவைத் திறக்க, எலியாருக்கு திருப்பதி சொர்க்க வாசல் திறந்த போல இருந்தது போல. கூட்டத்தினர் திருப்பதி பெருமாளை பார்க்க முண்டியடிப்பது போல கதவிடுக்கு வழியாக வரவேற்பறைக்குச் செல்ல, அங்கே தூக்கக் கலக்கத்தில் எழுந்த கோதை தலை விரி கோலத்துடன், கையில் துண்டுடன் பத்ரகாளி போல நிற்கிறாள்.

எலியாருக்கு எப்படி இருந்திருக்கும் என ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.

சொர்க்கவாசலா? நரகவாசலா? 

எலியாருக்கு எந்த வாசல்?

ஓடி வந்த எலியாரின் அருகில் துண்டால் ஒரு தரையில் சாத்து சாத்தினாள் கோதை. 

எலியார் துள்ளிய துள்ளலைப் பார்த்தேன்.

உயரம் தாண்டுதலுக்கு ஒலிம்பிக் கமிட்டியார் எலிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

பீட்டா அமைப்பினர் இதற்கெல்லாம் வழக்குத் தொடுக்க கூடாது. எலியாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஒரு வேண்டுதல். அம்புட்டுத்தான்.

அன்றிலிருந்து எலியாரைக் காணவில்லை.

இன்கம்டாக்ஸ், என்ஃபோர்ஸ்மெண்ட் இண்டலிஜென்ஸ் ஆட்களைப் பார்த்து எதற்கு எலி அல்ல கிலி பிடித்தலைகிறார்கள் என எலியாருக்குப் புரிந்திருக்கும்.

வாலைச் சுருட்டிக் கொண்டு, பிள்ளையாரிடம் போய் விட்டார் போல எலியார். ஏனென்றால் பிள்ளையார் இந்துக் கடவுள் அல்லவா?

எலியாருக்கு அவரை விட்டால் வேறு போக்கிடம் இல்லையே. 

கனவு மூலமாக வந்த வள்ளலார் எலியை விரட்டி விட்டார் என்றும் வைத்துக் கொள்ளலாம். கடவுள் மனித ரூபாய் அல்ல ரூபாய நமஹ!

வளமுடன் வாழ்க.

04.10.2025

இட்லி கடை - பணத்திமிர்


ஒரு உண்மைக் கதையைப் படியுங்கள். அதைத் தொடர்ந்து இட்லி கடைக்கு வருவோம்.

கிராமத்திலிருந்து சென்னை வந்த ஒருவர், அமெரிக்கா செல்கிறார். அங்கு ஒரு ஹோட்டலைத் திறக்கிறார். அவரின் வாழ்க்கையில் அவரின் அம்மாவின் சமையல் குறிப்புகள் பற்றிய பல செய்திகளை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்கிறார். இந்தியாவுக்கு வந்தால் அவரின் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு அவரும், அவரின் அம்மாவும் சமையல் செய்கிறார்கள். 

அவர் பல தோல்விகளைச் சந்திக்கிறார். சவால்களை எதிர் கொள்கிறார். எல்லாவற்றிலும் வெற்றி கண்டு அமெரிக்கா மட்டுமல்ல, தற்போது திருப்பதியில் கூட ஒரு ஹோட்டல் துவங்க வேலை நடந்து கொண்டிருக்கிறது. அவர் யார் தெரியுமா?

மைலாப்பூர் எக்ஸ்பிரஸ் ஹோட்டலின் உரிமையாளர் ஜெய். 

அமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கிறது அவரின் உணவுகள். ஏன் திரும்ப இந்தியாவில் அதுவும் திருப்பதியில் ஹோட்டல் ஆரம்பிக்கிறார்? அவருக்குத் தெரிந்திருக்கிறது அமெரிக்கா பற்றி. திட்டமிடல்.

ஒரு மாபெரும் ஹோட்டல் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வெற்றிக் கொடி நாட்டி இருக்கிறார்.

இவ்வளவுக்கும் அவர் ஒரு பிராமண வகுப்பில் பிறந்தவர். அவரின் குடிப் பெருமையை ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படுத்துகிறார். அவர் விற்பனை செய்யும் உணவுகளில் அவைகள் வெளிப்படுகின்றன.  அவரிடம் வேலை செய்யும் பணியாளர்களிலிருந்து எல்லாவற்றிலும் அதைப் பயன்படுத்துகிறார். 

அவர் மிகச் சரியான வகையில் தன்னையும், தன் குடிப் பெருமையையும், தன்னைச் சார்ந்த நபர்களின் வாழ்க்கையிலும் முன்னேற்றத்தைக் கொண்டு வருகிறார். அதை எல்லோரும் வெறுக்கா வண்ணம் சாத்தியப்படுத்துகிறார்.

உணவு என்கிற போது சமூகநீதி உண்டு.  உணவின் பெயர்களில் சாதி இருந்தாலும், அதன் சுவைக்கு முன்னால், அதன் வியாபாரத்துக்கு முன்னால் எதுவும் எடுபடாது.

ஆனால் கல்வியில் அது இல்லை. 

அமெரிக்க கல்லூரி ஒன்றின் ஆய்வறிக்கையில் - பார்ப்பனர்கள் ஒரு பள்ளியின் பாடத்திட்டத்திலிருந்த தலித் என்கிற வார்த்தை இந்திய வரலாற்றில் இல்லை எனக் குறிப்பிட்டு, அதை நீக்க வேண்டுமென்று முடிவெடுத்திருக்கிறார்கள். அதை குழுவில் சமர்ப்பித்த போது, பார்ப்பனர்களின் சதியால் பொய்யான தகவல் தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, அந்த பாடத்திட்டத்தினை நிராகரித்திருக்கிறார்கள் அந்தப் பள்ளியினர். 

https://scroll.in/article/808394/california-to-decide-today-whether-hindu-groups-can-dictate-what-dalits-call-themselves-in-textbooks

மேலே இருக்கும் இணைப்பில் இருப்பதைப் படித்துக் கொள்ளுங்கள். அந்தளவுக்கு பிராமணர்கள் தலித் என்கிற வார்த்தையின் மீது வன்மம் கொண்டுள்ளனர் என அந்த நிகழ்வு காட்டுகிறது. இணைப்பை கிளிக் செய்து படித்துப் பாருங்கள்.

இதோ மற்றுமொரு ஆதாரம். எந்த நாட்டுக்குச் சென்றாலும் இந்து என்ற ஒற்றை வார்த்தையின் பின்னால் மறைந்து கொண்டு நடக்கும் சதிகளைப் படித்துப் பாருங்கள்.

https://csrr.rutgers.edu/wp-content/uploads/2025/05/hindutva-in-america.pdf




அமெரிக்காவில் தலித்துகளும் உள்ளனர். அவர்கள் ஜெய் நடத்தும் மைலாப்பூர் எக்ஸ்பிரஸுக்குச் சென்றால் அவர்களை யாரும் தடுப்பது இல்லை. 

பணத்திற்கு ஏது சாதி?

ஒரு தாய் தன் மகனை தொழிலதிபராக மாற்றியது தான் இந்தக் கதை. 

இனி இட்லி கடைக்கு வருவோம்.

தனுஷ் பற்றி எல்லோருக்கும் அக்குவேறு ஆணிவேராகத் தெரிந்திருக்கும்.  அசுரன் படத்தையும் பார்த்திருப்பீர்கள். 

இந்த இட்லிகடை திரைப்படம் அவரின் கற்பனையில் உருவான படமாம். இயக்கமும் அவரே.

என்ன கதை ? 

ஒரு கிராமத்தில் சாலையோரமாய் இருக்கும் உணவகத்தினை தனுஷின் அப்பா ராஜ்கிரண் நடத்தி வருகிறார். சிறுவனாக இருந்த பொழுது முதற்கொண்டு அவருடன் உணவகத்துக்கு வரும் தனுஷ் வளர்கிறான். உணவு தயாரிப்பு பற்றிப் படிக்கிறான். ராஜ்கிரண் அவனை இங்கேயே இருந்து, இந்த உணவகத்தை நடத்தி வா என்கிறார். அவன் மறுத்து விடுகிறான். சென்னை செல்கிறான், பின்னர் அமெரிக்கா செல்கிறான். 

அமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு உணவகத்தின் உரிமையாளர் மகளை விரும்புகிறான். திருமணம் நிச்சயமாகிறது. அப்பாவை திருமணத்துக்கு அழைக்கிறான். அவர் முடியாது என்கிறார்.  திருமண ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். அடுத்த நாளில் ராஜ்கிரண் இறக்கிறார். 

இறுதிச்சடங்கிற்காக இந்தியா வருகிறான். பின்னர் பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பின்னால் அப்பா விட்டுச் சென்ற இட்லிக் கடையை நடத்துகிறான். வில்லன் அமெரிக்க காதலியின் அண்ணன். லாஜிக்கெல்லாம் பார்க்க கூடாது.

அவனுடன் படித்த பெண்ணைத் திருமணம் செய்கிறான். எதிர்த்த அமெரிக்க  மச்சானை அகிம்சா படி சமாளித்து அவனை இந்த இட்லிக் கடையில் மாவாட்ட வைக்கிறான். 

இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் என்ன தெரியுமா?

ஊரில் பேசிக் கொல்(?)கிறார்கள் இப்படி.

“அப்பன் பெயரை மகன் காப்பாற்றி விட்டான்”

சுபம்.  

இந்தப் படத்தைப் பார்த்த மாத்திரத்தில் புட் பிளாக்கர் குஞ்சாமணிகளுக்கு குஷி வந்திருக்கும். ஆட்டுக்கல்லில் ஆட்டும் மாவு இட்லி, அம்மிக்கல்லில் அரைத்து வைக்கும் சாம்பாரின் சுவைக்கு இந்த உலகில் ஈடு இல்லை. அந்தப் பாரம்பரியத்தை விட்டு விடலாமா? இதற்கு முன்னால் காசு, பணமெல்லாம் தூசு. சாதி,சனத்தை விட்டு விட்டு வெளி நாட்டுக்கு ஏன் போய் பணம் சம்பாதிக்க வேண்டும். 

இந்த இட்லியைச் சாப்பிட்டுச் செல்லும் மக்கள் பாராட்டும் வார்த்தைகளை விட உயர்ந்த ஒன்று இந்த உலகில் உள்ளதா? 

அனைவரும் இதற்குத்தானே பிறந்தோம். 

இதை விட ராக்கெட் விடுவது, டெக்னாலஜியில் வளர்வது, கோடிகளில் சம்பாதிப்பது எல்லாம் ஒன்றுமே இல்லை. இந்தப் படம் அதைத்தான் சொல்கிறது. பாரம்பரியத்தினைக் காப்பாற்ற வேண்டுமாம்.

யாதும் ஊரே யாவரும் கேளீர் (உறவினர்) என்றுச் சொன்னார் கலியன் பூங்குன்றனார்.  

இல்லையில்லை என் ஊரே எனக்குப் போதும் என்கிறது இட்லிகடை.

மண் சுவர், ஓலைக்கூரை வேய்ந்த சிறு கடை, மரப்பெஞ்சுகள் இரண்டு, அடுப்பு, அம்மிக்கல், ஆட்டுக்கல் - பாரம்பரியம்.

1800 களில் இந்தியாவை ஆண்டு வந்த ஆங்கிலேயனுக்கு, இந்தியாவில் இருந்த சாதி கொடுமைகள் பெருத்த அவமானத்தை தந்தது. 

  • பிராமண குலத்துக்குத்தான் கல்வி - எல்லோருக்கும் அன்று இல்லை.
  • அக்ரஹாரத்துக்குள் தலித்துகள் வரவே கூடாது.
  • தலித்துக்கு என சேர் என்ற பெயரில் ஊரை விட்டு ஒதுக்கிய இடத்தில் வீடுகள். 
  • தலித்துக்கு என சொத்துக்கள் கிடையாது.
  • பரம்பரையான கூலிகள் அவர்கள்.
  • குளத்தில் குளிக்க அனுமதி இல்லை.
  • தெருவில் நடக்க அனுமதி இல்லை.
  • கோவிலுக்குள் கடவுளைக் கும்பிட அனுமதி இல்லை.
  • முலையின் சைசுக்கு வரி கட்ட வேண்டும்.
  • கிணற்றில் தண்ணீர் எடுக்க அனுமதி இல்லை.
  • மேல் துணி போட அனுமதி இல்லை.
  • காலில் செருப்பு அணிய அனுமதி இல்லை.
  • நீதிமன்றத்தில் நீதிபதியிடமிருந்து 16 அடி தள்ளி நிற்க வேண்டும்.

தென் தமிழகத்தில் பரவி இருந்த மனித வன் கொடுமைகள் இவை.

பெரியார் தென் தமிழகத்தினை திராவிடக்குடும்பம் எனக் குறிப்பிட்டு மேலே குறிப்பிட்டுள்ள கொடுமைகள் செய்தோரை எதிர்த்தார். 

படிப்பறிவில்லாதவர்களைப் படிக்க சொன்னார், கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். பெரியார், அண்ணா, கலைஞர் என இன்றும் தொடர்கிறது சாதிய வன் கொடுமைகள். இதோ தமிழ் நாட்டிலிருக்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் பிராமணரைத் தவிர வேறு எவரும் கருவறைக்குள் சென்று கடவுளை வழிபட முடியாது. இப்படியான சூழல் இருக்கும் போது, இந்த இட்லி கடை.

பிரதமர் மோடியின் விஸ்வகர்மா திட்டம், ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் ஆகியவை பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் திட்டங்கள் அல்லவா? இன்றைக்கும் தமிழ் நாட்டு மாணவர்களின் கல்விக்கான தொகையை தராமல் தடுத்துக் கொண்டிருக்கிறது பிஜேபி அரசு.

இட்லி கடை என்ன சொல்ல வருகிறது?

  • வண்ணான் மகன் வண்ணான்
  • தோட்டி மகன் தோட்டி
  • ஆசாரி மகன் ஆசாரி
  • தோட்டக்காரன் மகன் தோட்டக்காரன்
  • சாதியும் சனமும் தேவை (எதற்கு இட்லி தின்பதற்கு)
  • அமெரிக்கா தேவையில்லை, பணம் தேவையில்லை. படிப்புத் தேவையில்லை. இப்படி எதுவும் தேவையில்லை.
  • அப்பன் பெயரைக் காப்பாற்ற வேண்டும். குலப் பெருமையை விட்டு விடக்கூடாது.

அந்த ஊரில் ராஜ்கிரண் மட்டும்தானே உணவகம் வைத்திருந்தார். அவரின் ஆசையை அவரின் மகன் நிறைவேற்றுவது எப்படி தவறாகும் என்று கேட்பீர்கள். அது தனிப்பட்ட ஒருவரின் ஆசை. அந்த ஆசையை மகன் நிறைவேற்றி இருக்கிறான், அதுதானே படம். அதை இப்படி விமர்சிக்க வேண்டுமா எனவும் கேட்பீர்கள்.

சினிமாக்காரர்களை முதலமைச்சராக துடித்துக் கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு. பக்கத்து மாநிலத்தில் ஒரு சினிமாக்காரர் துணை முதலமைச்சராக ஆக்கிய பெருமை தென் இந்தியாவுக்கு உண்டு. படித்தவர்களையும், படிக்காதவர்களையும் சேர்த்து மூளை மழுங்கச் செய்யும் தந்திர வித்தை கொண்டது சினிமா. 

இப்போது சொல்லுங்கள். நான் விமர்சிப்பது சரிதானே?

சமூக நீதிக்காக இன்றைக்கும் இணையத்தில் கம்பு சுத்திக் கொண்டிருக்கும் என்னைப் போன்றோருக்கு இந்தப்படம் மாபெரும் எரிச்சலைத் தந்தது. 

ஒரு பிராமணர் தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களை அமெரிக்கா வரை கொண்டு சென்று, அவர்களின் வாழ்வியலை உயர்த்துகிறார்.

ஆனால் இவரோ அதெல்லாம் தேவையில்லை என தன் வாழ் நாளை சமூகநீதிக்காக வாழ்ந்தவர்களை அசிங்கப்படுத்தி, தானும், தன்னைச் சேர்ந்தவர்களும் வாழ்க்கையில் எல்லா நிலையிலும் முன்னேற்றமடைவது தவறு எனப் படமெடுத்துக் கொண்டிருக்கிறார். சாதி சனம் முக்கியம் என்று பேசுகிறார்.

இதற்கு என்ன காரணமாக இருக்கும்?  வேறென்ன பணம் வந்தால் பத்தும் பறந்து போகும்.

கொஞ்சமாவது மனித சமூகத்தின் மேன்மைக்காக சிந்திக்க வேண்டும். ஆனால் அதற்கான தகுதி இருப்பவர்களிடம் இதைக் கேட்கலாம்.  இல்லாதவர்களிடம் கேட்டு என்ன பலன்?

சமூக நீதிக்கான போராட்டத்தைச் சீர்குலைக்கும் நயவஞ்சகமான படம் இது.  

இது கோடாலிப்படம். 

தீட்டிய மரத்தில் கூர் பார்க்கும் அவலம்.

இது படமல்ல, அசிங்கம்.

வளமுடன் வாழ்க.

04.10.2025

ஒரு குசும்பு விமர்சனம் : இட்லி கடைத் திரைப்படத்தில் ராஜ்கிரண் ஆட்டுக்கல்லில் இட்லிக்கு மாவு அரைப்பார். அதில் தான் சுவை அதிகமாம். ஒரு விஷயத்தை தனுஷ் மறந்து போனார். தனுஷ்க்கு ஆட்டுக்கல்லே தேவையில்லை. நித்யா மேனனே போதுமே? பின்னர் எதற்காக இன்னொரு ஆட்டுக்கல்? இந்த இடத்தில் இயக்குனர் தனுஷ் கொஞ்சம் ரசனை மறந்து விட்டார் என்பது அடியேனின் பார்வை.