குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, February 23, 2017

எங்கே சென்றாயோ நீ?

நேற்றுக்கு முதன் நாள் இரவு நாளை ”திருப்பூர் வரைக்கும் போய்ட்டு வரலாமா? வக்கீல் உடனே வரச்சொல்கிறார்” என்றார் என் நண்பர். வெயில் அதிகமானதாலும் பணியும் அதிகமானதாலும் உடல் அயர்ச்சியடைந்திருந்தது. உண்மையில் நேற்று ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். முடியவில்லை. நண்பர் ஆறு வருடங்களுக்கு முன்பு வழக்கொன்றினைத் தொடுத்திருந்தார். 

வழக்கில் தொடர்புடையவரை அழைத்து இருவருக்கும் பொதுவாக ’பஞ்சாயத்து’ செய்து வைக்க முயன்று கொண்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக வழக்கு விபரங்கள், தற்போதைய நிலை பற்றி விசாரிக்கச் சென்றால் சரியாக நேற்று வாய்தா தேதி. இரண்டாவது அழைப்பாக வர பதினைந்து நாட்கள் வாய்தா பெற்றுக் கொண்டு திருப்பூரிலிருந்து கிளம்பினோம். இனி இருவருக்குமான பஞ்சாயத்து மிச்சம் இருக்கிறது. யாருக்கும் சங்கடம் வராமல் நேர்மையாகச் செய்து கொடுக்க வேண்டும். 

ஏழு வருடங்களாக நடக்கும் பிரச்சினை ஏதோ ஒரு நொடியில் சரி செய்யப்பட்டால் நல்லதுதானே. மனிதர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க கொஞ்சூண்டு கவனம் தேவை. இல்லையென்றால் இது போன்ற பஞ்சாயத்துக்கள் தேவையற்ற எதிரிகளை உருவாக்கி விடும் ஆபத்து மிகுந்தவை. கத்தி மீது நடப்பது போலத்தான் இது. கொஞ்சம் பிசகினாலும் வெட்டி விடும்

திருப்பூரில் வெயில் 100 ஃபாரன்ஹீட்டைத் தொட்டது. எங்கெங்கும் காய்ந்து கிடந்த செடி கொடிகள் கண்ணில் பட்டன. காற்று உடலைச் சுட ஆரம்பித்தது. கண்கள் மசமசக்கத் தொடங்கின. பெட்டி பெட்டியாக காங்கிரீட் கட்டடங்கள் மட்டுமே தெரிந்தன. ஆனால் பச்சைகள்?? திருப்பூர் வெயிலில் பார்பிக்யூவில் வைக்கப்பட்ட மட்டன் போல வறுபட ஆரம்பித்தேன். நண்பர் காரை விரட்டிக் கொண்டிருந்தார். காரில் ஏசி இல்லை. வரும் வழியெங்கும் வெயிலின் தாக்கம் குறையவே இல்லை. அவினாசி வந்து சேர்ந்தோம். அங்கும் கொதித்துக் கொண்டிருந்தது. செல்பேசியில் கால நிலை அளவுகள் எகிறிக் கொண்டிருந்தது. கருவலூர் வழியாக கோவில்பாளையத்துக்கு வந்த பிறகு தான் வெயிலின் தாக்கம் குறைய ஆரம்பித்தது. சிலுசிலுவென காற்று தன் சூட்டினைக் குறைக்க ஆரம்பித்தது.

ஏதோ ஒரு இடத்தில் கண்ணில் குட்டை  ஒன்று தென்பட்டது. அதில் தண்ணீர் கிடந்தது. அதைப் பார்த்ததும் தான் மனதுக்குள் கொஞ்சமே கொஞ்சம் சிலுசிலுப்பேற்பட்டது.

என் சிறு வயதில் நன்கு நினைவில் இருக்கிறது. தீபாவளி அன்றைக்கு வெடி வெடிக்க முடியாது. வானம் கொட்டிக் கொண்டே இருக்கும். மழையில் நெற்மணிகள் நனைந்து போய் விடும். மழை எப்போதும் பெய்து கொண்டே இருக்கும். மழைக்காலங்களில் தேங்கிக் கிடக்கும் குட்டைகளில் தவளைகளின் “டொர்ராங் டொர்ராங்” சத்தம் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆலங்கட்டி மழையில் அடி வாங்கி இருக்கிறேன். வாசலில் வந்து கொட்டும் வெண்பனிக்கட்டிகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து விழுங்கி இருக்கிறேன். கொட்டிக் கொண்டிருந்த மழை நான் வளர வளர கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருவதை என்னால் உணர முடிகிறது.

குறுவை, சம்பா சாகுபடிகள் இப்போது இல்லை. கோடைச் சாகுபடியும் இல்லை. குளங்கள் பொறுக்குத் தட்டிக் கிடக்கின்றன. ஆடு மாடுகளைக் காணமுடியவில்லை. பசும் புற் தரைகளைக் கூட காணவில்லை. மரங்கள் வெப்பத்தில் வாட்டியவை போல சோம்பிக் கிடக்கின்றன. குளிக்கும் தண்ணீரில் நுரையே வருவதில்லை. உப்புச் சேர்ந்து தண்ணீரின் அமுது அழுக்காகிக் கிடக்கிறது.

என் வயதொத்தவர்கள் உங்கள் நினைவுகளைப் பின்னே ஓட்டிப் பாருங்கள். நம் வயதில் சுமார் 30 வருடங்களுக்கு முன்னால் பெய்த மழை இப்போது பெய்கிறது எனத்  தோன்றுகிறதா? இல்லை அல்லவா? ஆக நம் முன்னே ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது.

நம்மை விட்டு வெகுதூரம் போய் விட்டது மழை. தண்ணீரோ பூமியின் அடியாளத்துக்குள் சென்று ஒளிந்து கொண்டு விட்டது. தண்ணீர் இல்லாமல் வாழப் பழகிக் கொண்டிருக்கிறோம். இனி குளிப்பது என்பது கூட எவராலும் முடியாது போய் விடும் போல. குடிக்கவே தண்ணீர் இல்லாமல் குளிப்பது எங்கே. டிவிக்களில் உடல் துர்நாற்றப்போக்கிகளின் விளம்பரங்கள் அதிகமாகின்றன.

மனித குலத்தை அழிக்கும் ஆயுதமாக தண்ணீர் நம் முன்னே நின்று கொண்டிருக்கிறது. காலம் தப்புவதற்குள் சரி செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 

வீடெங்கும் ஒரு மரத்தையோ தெருவெங்கும் மரங்களை வளர்த்து மழைக்கு அழைப்பு விடுப்போம். தண்ணீரைச் சேகரித்து வைக்க ஏற்பாடுகளைச் செய்வோம். 

இல்லையெனில் நம் வருங்கால சந்ததியினர் நாசா புதிதாக கண்டுபிடித்த கிரகங்களுக்கு செல்ல நேரிடும். ஜோசியக்காரர்களுக்கு கணக்குப் பிழையாகி விடும் ஆபத்தும் ஏற்பட்டு விடும். புதிய கிரகங்கள் புதிய கணக்குகள் என்றால் கொஞ்சம் சங்கடம் தானே???

1 comments:

Nagendra Bharathi said...

அருமை

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.