குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, February 19, 2017

சசிகலா விடுதலையாக இயலுமா? மீண்டும் ஓர் அலசல்

சசிகலா தீர்ப்பு - விடுதலை அலசல் பற்றி எழுதிய ஒரு சில மணிகளில் பல நண்பர்களிடமிருந்து அழைப்பு வந்தது. சொல்லி வைத்தாற் போல பெரும்பாலும் சசிகலாவை எதிர்த்தே பேசினார்கள். அது அவர்களின் பிரச்சினை. 

மீடியாக்கள் கட்டமைக்கும் பிம்பத்தை வைத்து ஒருவரை குற்றவாளி, நல்லவர் என்று அனுமானித்துச் செயல்படும் போக்கு உலகெங்கும் இருக்கும் வழக்கமான ஒன்று. செய்தி தாள்களும், டிவி சானல்களும் இல்லாத காலங்களில் இருந்த நிம்மதி இன்று மக்களுக்கு இல்லை. அது போகட்டும் ஒரு பக்கம்.

என்னிடம் பேசிய அனைவரும் சொல்லி வைத்த மாதிரியே சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்குத் தெரியாத ஒன்றா உங்களுக்குத் தெரிந்திருக்கும்? என்றே கேட்டார்கள். எனக்குத் தெரியும் தெரியவில்லை என்பதெல்லாம் பிரச்சினையே இல்லை. எல்லா விஷயமும் எல்லாருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்பதும் கட்டாயமில்லை. சட்டத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது. சட்டப்படியான வழிகள் இருக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்று ஆராய்வதில் தான் எனக்கு ஆர்வம். அதற்கு பிரபலமான குற்ற வழக்கை ஆதாரமாக வைத்திருக்கிறேன். 

தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் என்ற கதைகளை எழுதியவன் அடியேன். விருப்பு, வெறுப்பின்றி ஒரு விஷயத்தை என்னால் அறிய இயலும். வாழ்க்கை என்னை பக்குவப்படுத்தி இருக்கிறது. ஆதரவு தெரிவிப்பதும், பின்னர் விலக்கி கொள்வதும் அதனால் பலனடைவதும் அரசியல் சார்ந்தவை. ஒரு விரல் நீட்டி ஒருவனைக் குற்றவாளி என்கிற போது மூன்று விரல்கள் குற்றவாளி என்றுச் சொல்கிறவனை நோக்கிக் நீட்டிக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடுகின்றார்கள். ஆக தீயவர்கள் என்று எவரையும் விரல் நீட்டிட முடியாது என்பது உண்மை.

எது தர்மம் என்று கண்டுபிடிக்க சாதாரண மனிதனால் முடியவே முடியாது. தர்மத்தின் பாதை தனை கண்டறிவது வெகு சூட்சுமமானது. 

ஜெயலலிதா இறந்து போனது அவர் செய்த தர்மத்தின் பலன் என்று அறிகிறேன். அவர் அனைவருக்கும் உணவிட்டார். யார் பணத்தில் என்பதை ஆராய்ச்சி செய்வதை விட அவர் மூலம் என்பதுதான் இங்கே முக்கியம். அன்னதானத்தின் பலன் அவரை அவருக்கு நேர இருந்த அவமானத்திலிருந்து விடுபட வைத்திருக்கிறது. முதலமைச்சராக இருந்து நோயினால் இறந்து போனார். தர்மம் அவருக்கு நேர இருந்த அவமானத்திலிருந்து அவரைக் காப்பாற்றி விட்டது என்றே என் மனது நினைக்கிறது. அவர் இறக்கும் போதும் முதலமைச்சராகத்தான் இருந்தார். எப்படிச் செத்தார்? அதன் சர்ச்சை என்றெல்லாம் போகாதீர்கள். இறந்து விட்டார் அவ்வளவுதான் விஷயம். முதலமைச்சராக இருந்து ஜெயிலில் அடைபட்டு நான்காண்டுகள் தண்டனை பெற்று ஜெயிலில் கிடப்பது என்பது அவரின் மன நிலையை எவ்வாறெல்லாம் பாதிக்கும் என்று நினைத்துப் பாருங்கள். 

இறைவனின் தர்மம் என்கிற நூலில் கட்டப்பட்ட மனிதன் எப்போதும் தர்மத்தின் பால் கட்டுண்டவனே. ஏனென்றால் பிறக்கும் போதே இறக்கும் வரம் வாங்கி வந்தவன் மனிதன்.

சரி வழக்கு விபரத்துக்கு வந்து விடுகிறேன்.

அடியேன் எழுதிய 547 பக்கத்தீர்ப்பு ஜெயலலிதா சசிகலா இளவரசி சுதாகரன் விடுதலையாக சாத்தியமா? ஓர் அலசல் பதிவுக்கு அட்சாரம் சேர்க்கும் விதமாக ஜூனியர் விகடனில் வெளியான ஒரு பத்தி சாட்சியம் கூறுகிறது.

இதோ அந்தப் பத்தி. ( நன்றி ஜூனியர் விகடன்)

1991-1996 வரை நடைபெற்ற ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக திமுக ஆட்சியில் ஜெயலலிதா மீது பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. அந்த வழக்குகளை எந்தெந்த வக்கீலிடம் கொடுப்பது என்ற மீட்டிங்கின் போது நடைபெற்ற சம்பவம் பற்றி ஜூனியர் விகடனில் வெளியானது கீழே இருக்கிறது.

===============================================================

‘யார் யார் என்னென்ன வழக்குகளை எடுத்துக்கொள்ளப் போகிறீர்கள் என்பதை ஆலோசித்துச் சொல்லுங்கள்’’ என்றார் ஜெயலலிதா.  

வழக்கறிஞர்கள் ஒவ்வொருவராக கருத்துகளை முன்வைத்தார்கள். மேஜையின் இன்னோர் ஓரத்தில் உட்கார்ந்திருந்த வழக்கறிஞர் ஒருவர், ‘‘சவாலான வழக்குகளைக் கையாளும் பிரபல வழக்கறிஞர்கள்கூட ஜெயிக்கக் கூடிய வழக்குகள் மீதுதான் கண் பதிப்பார்கள். இது சாதாரண வழக்கறிஞர்களுக்கும் பொருந்தும். அந்த வகையில், ஜெயிக்கக் கூடிய டான்சி வழக்கை நான் எடுத்துக்கொள்கிறேன்’’ என்றார். 

அத்தனை பேரின் பார்வையும் அவர் பக்கம் திரும்பியது. அந்த வழக்கறிஞர், என்.ஜோதி. ஜெயலலிதா ஆச்சர்யத்தோடு பார்த்தார். ‘‘அரசு நிலத்தை முதல்வரே வாங்கியதாகச் சொல்லி டான்சி வழக்கைப் போட்டிருக்கிறார்கள். இதை வைத்து என்னைத் தேர்தலில் நிற்கவிடாமல் தடுக்க முடியும் என தி.மு.க-வே நம்பிக் கொண்டிருக்கும் வழக்கு அது. அந்த வழக்கில் எப்படி ஜெயிக்க முடியும் என நம்புகிறீர்கள்?’’ எனக் கேட்டார் ஜெயலலிதா. 

‘‘டான்சி வழக்கு ரொம்ப சிம்பிளான வழக்கு. நாம் ஜெயிப்பதற்கான நிறைய ஸ்கோப் இருக்கிறது’’ என அடித்துச் சொன்னார் ஜோதி. ‘‘எப்படிச் சொல்கிறீர்கள்’’ எனக் கேட்ட ஜெயலலிதா, தனது பக்கத்தில் இருந்த பி.ஹெச்.பாண்டியனை எழுப்பிவிட்டு அங்கே ஜோதியை அமர வைத்தார்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் அடங்கிய புத்தகம் ஒன்றைப் புரட்டிய ஜோதி, அதை ஜெயலலிதாவிடம் காட்டினார். ‘‘கேரளா பள்ளிக் கல்வித்துறை பள்ளிகளுக்கு சர்க்குலர் ஒன்றை அனுப்பி, ‘அனைத்துப் பள்ளிகளிலும் காலையில் தேசிய கீதம் கட்டாயம் பாட வேண்டும்’ எனச் சொன்னது. ஒரு பள்ளியில் இரண்டு மாணவர்கள் மட்டும் தேசிய கீதம் பாடப்பட்டபோது ஓரமாகப் போய் நின்று கொண்டார்கள். ‘ஜெகவோ மதத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் நாங்கள். தேவனை மட்டுமே வழிபடுவோம். தேசிய கீதத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், என் பிள்ளைகள் அதைப் பாட மாட்டார்கள். அது எங்கள் மதத்துக்கு எதிரானது’ என அந்த பிள்ளைகளின் தந்தை பிஜு இம்மானுவேல் பள்ளிக்குக் கடிதம் அனுப்பினார். அதைப் பள்ளி நிர்வாகம் ஏற்காமல், மாணவர்களைப் பள்ளியைவிட்டு நீக்கியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கேரளா அரசு வெற்றி பெற்றது. சுப்ரீம் கோர்ட்டில் பிஜு இம்மானுவேல் அப்பீல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘தேசிய கீதம் பாடம் வேண்டும் என கேரளா அரசு சொன்னது சட்டம் அல்ல. அது சுற்றறிக்கைதான். நன்னடத்தை விதி, சட்டம் ஆகாது’ என பிஜு இம்மானுவேலுக்குச் சாதகமாக 1986-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி தீர்ப்பளித்தது’’ எனச் சொல்லி முடித்த ஜோதி, ‘‘அரசு விற்பனை செய்யும் ஆவின் பாலை அரசு ஊழியர்கள் வாங்கக்கூடாது எனச் சொல்ல முடியுமா? அரசு நிலத்தை அரசு ஊழியர் வாங்கக் கூடாது என்பது நன்னடத்தை விதிதான். அது சட்டம் அல்ல. அதனால் டான்சி வழக்கில் நாம் ஜெயிக்க முடியும்’’ என்றார் ஜோதி.  

சசிகலா ஜாதகம் - 17 தொடரில் ஒரு பார்ட்
==============================================================

இதைத்தான் நான் முன்பு எழுதி இருந்தேன். இப்போது நான் எழுதி இருப்பதற்கும் டான்சி வழக்கில் ஜெயலலிதா விடுதலை பெற்றதும் உங்களுக்கு நினைவில் வந்து விடும் என்று நினைக்கிறேன். இந்தப் புத்திசாலித்தனம் தான் வேண்டும். டான்சி வழக்கில் ஜெயலலிதா விடுதலை பெற்றது சட்டப்படி சரியானது அல்லவா?

அடுத்து இன்னொரு வெகு முக்கியமான பாயிண்டினை உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அதுவும் ஜூனியர் விகடனில் வெளிவந்த ஒரு பத்தியில் வெளியாகி இருக்கிறது. அது கீழே,

================================================================
‘‘ஜெயலலிதாவின் கணக்கில் வராத பணத்தை வைத்து, மற்ற மூவரும் நிறைய நிறுவனங்களைத் தொடங்கினார்கள். ஒரே நாளில் பத்து நிறுவனங்கள் தொடங்கப்பட்ட வரலாறும் உண்டு. மற்ற மூவருக்கும் வேறு எந்த வருமானமும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இவர்கள் தொடங்கிய இந்தப் பல நிறுவனங்களுக்கு, சொத்துக்களை வாங்குவதைத் தவிர வேறு எந்த பிசினஸும் இல்லை. ‘இவை எல்லாம் எனக்குத் தெரியாமல் நடந்தது’ என ஜெயலலிதா சொல்ல முடியாது. அவருடைய வீட்டு முகவரியை வைத்தே பெரும்பாலான நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. வங்கிக் கணக்குகளில் பணம் போடும்போது, எண் 36, போயஸ் கார்டன் என்ற முகவரியைக் குறிப்பிட்டே பணம் செலுத்தியிருக்கிறார்கள். ரத்த உறவாக இல்லாதபோதும், ஜெயலலிதாவின் வீட்டில்தான் இவர்கள் தங்கியிருந்தார்கள். அதனால் எல்லா குற்றங்களிலும் எல்லோருக்கும் பங்கு உண்டு’’ எனத் தெளிவாகத் தீர்ப்பு சொன்ன உச்ச நீதிமன்ற நீதிபதிகள், குன்ஹா விதித்த அதே தண்டனையை உறுதி செய்தார்கள்.
=================================================================

இது போன்ற வழக்குகளில் எண்ணற்ற தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தத் தீர்ப்புகளைப் படித்துப் பார்த்து எங்கோ மறைந்து கிடக்கும் அந்த ஒரு பாயிண்டினைப் பிடித்தால் வழக்கு மீண்டும் தூசி தட்டப்பட்டு மொத்தமாக முடிக்கப்படும் சாத்தியங்கள் இருக்கின்றன. 

யார் அதைச் செய்வார்கள் என்று பார்ப்போம்? 

பணம் வந்த வழி என்ன என்று இதுவரை ருசுப்படுத்தப்படவே இல்லை. பதவியில் இருந்ததால் முறைகேடாக வந்த பணம் என்றால் அது எப்படி? அதற்கு என்ன ஆதாரம்? அந்தப் பணம் அதிகாரத் துஷ்பிரயோகத்தினால் வந்தது என்று ருசுப்படுத்தப்பட்டதா? இந்த வழக்குகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் குற்ற எண்கள் சரியானவைதானா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன? எல்லாவற்றிற்கும் கேள்விகள் தேடினால் விடை கிடைத்தாலும் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம்.

 அது தர்மத்திற்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

2 comments:

தாமரை செல்வன் said...

1. நன்னடத்தை விதிகளை மீறியவரை நடத்தை கெட்டவர் என அழைக்கலாமா?

2. பணம் என்பது ஒரு எவிடன்ஸ், ஒரு அரசு ஊழியரிடம் பணம் இருக்கிறது என்றால் அந்தப் பணம் எப்படி வந்தது என நிரூபிக்க வேண்டிய கடமை அவருக்குத்தான். காரணம் அன்பளிப்பைக் கூட அரசு ஊழியர்களைப் பொறுத்த வரை இலஞ்சமாகத்தான் கருத முடியும்.

3.3800 Sqft நிலம் போயஸ் கார்டனில் 8 லட்சம் கொடுத்து வாங்கப்பட்டது நடராஜன் வழியாக. அதன் அப்போதைய கைட்லைன் வேல்யூ 15,73,814/-. (குன்ஹா தீர்ப்பு பக்கம் 489) ஆக 7,73,814 ரூபாய் குறைவாக வாங்கப்பட்டிருக்கிறது. ஒரு அரசு ஊழியர் இப்படி 50% தள்ளுபடிக்கு நிலம் வாங்குவதை 1) இலஞ்சம்2) அதிகார துஷ்பிரயோகம் என இரண்டு விதங்களில் மட்டுமே அடக்க முடியும். ஆக குற்றத்தின் மதிப்பீடு இதனால் இன்னும் அதிகமாகும்.

நெல்லைத் தமிழன் said...

சரியான செய்தி. உங்கள் இடுகை நியானமானது. சரியான கருத்துக்கள் உடையது.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.