குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Friday, March 17, 2017

எனக்கு இன்னொரு பெயர் இருக்கு

”என்னங்க? வைத்தியரு இருக்காரான்னு கேட்டு போன் வந்துச்சு?”

“என்னா? வைத்தியரா? யாரது?”

“தெரியலிங்க, அவரு வந்தவுடனே அழைக்கச் சொல்றேன்னுச் சொல்லிட்டேன்”

இனி இவள் நக்கல் வேற தாங்க முடியாதே என்று நினைத்து முடிக்கவில்லை அதற்குள் போன் வர ”வைத்தியர் சம்சாரம் பேசுகிறேன்” என்று ஆரம்பித்தாள் மனையாள்.

யாரோ ஒருவர் எதைப் படிச்சாரோ என்னத்தைப் புரிஞ்சுக்கிட்டாரோ தெரியவில்லை. வைத்தியரு இருக்காருன்னு அழைச்சிருக்காரு போலன்னு நினைச்சுக்கிட்டு அவரைத் திரும்பவும் அழைத்தேன். மனதுக்குள் ஒரு குஷி இருந்தாலும் ஏதோ ஒரு இடத்தில் இடித்தது. அவர் ஏன் என்னை வைத்தியர் என்று அழைத்தார்? ஒரு வேளை புற்று நோய்க்கு மருந்து பற்றி எழுதி இருந்தேனே அதற்காக இருக்குமோ என்று கூட நினைத்தேன்.

எனக்கு மட்டும் தான் இப்படியெல்லாம் பிரச்சினை தேடி வரும் போல. பிளாக்கில் என்ன எழுதி இருக்கிறேன் எனப் புரிந்து கொள்ள முடியாமல் தவித்துப் போனார் போல என்னை வைத்தியர் என்று அழைத்தவர். இது ஒன்று தான் பாக்கி இருக்கிறது. இனி அந்த வேலையையும் செய்து விட வேண்டியதுதான்.

என்னிடம் அருமையான மூட்டு வலி நிவாரணிக்கான தைலம் ஒன்றின் செய்முறை இருக்கிறது. இனிமேல் அதைத் தயாரித்து விற்பனை செய்து விட வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டு அவரிடம் பேச ஆரம்பித்த எனக்குத் தலை கிறுகிறுக்காத குறைதான் போங்கள்.

அதைச் சொன்னால் நீங்கள் இரண்டு நாளாவது விட்டு விட்டு சிரித்துக் கொண்டே இருப்பீர்கள் என்பதால் சொல்லி விடுகிறேன். அவருக்கு ஒரு பெண் பழக்கமாம். அவருக்கும் அதுவுக்கும் நல்ல பிரண்ட்ஷிப் சென்று கொண்டிருந்ததாம். அதுக்குத் திருமணமாகி குழந்தைகள், கணவர் எல்லாம் இருந்தாலும் இவர் கூட நல்ல பிரண்ட்ஷிப்பாம். திடீரென்று அது இவருடன் பேசவில்லையாம். என்ன செய்வதென்றே தெரியவில்லையாம். அதை இவருடன் பேச வைக்க வேண்டுமாம். இதுதான் அவரின் பிரச்சினை. இவருக்கு நான் மருந்து கொடுக்க வேண்டும். இவர் என்னை என்ன நினைத்து வைத்தியர் என்று அழைத்திருக்கிறார் என்று இப்போது தெரிந்திருக்குமே?

ஆமாம், அதே தான். வசிய மருந்து வைத்தியர். மருந்து கொடுப்பவரெல்லாம் வைத்தியர் தானே? கேப்பிடேஷன் கட்டணம் கொடுக்காமல், நீட் எழுதலாமா கூடாதா என்றெல்லாம் யோசிக்காமல் அதுமட்டுமல்ல கல்லூரிக்கே போகாமல் எப்படி வைத்தியர் என்று அழைக்கப்படுகிறேன் என்று தெரிந்து கொள்ளுங்கள்? அவனவன் கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்து வைத்தியராகின்றான்கள். ஆனால் நானோ ஒரே ஒரு பதிவு எழுதியதன் காரணமாக வைத்தியராகி விட்டேன். 

மதுரை சூரியன் எஃப். எம் ரேடியோவிலிருந்து சுடன் பால் என்பவர் எனது மாந்திரீக வைத்திய அனுபவத்தைப் பற்றி பேட்டி எடுத்து ஒளிபரப்பினார். அன்றிலிருந்து ஆரம்பித்தது வினை. என் தொடர்பு எண்ணை யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று சத்தியம் செய்து வாங்காத குறையாகக் கேட்டுக் கொண்டேன். கையில் அடித்தா சத்தியம் செய்தேன், சும்மா வாயால் தானே சொன்னேன் என்று நினைத்து கொடுத்து விட்டார் போல சுடன்ன்ன்ன் பால்..!

யார் யாரோ போன் போட்டு  உங்களைப் பார்க்க வரணும் என்று கேட்க ஆரம்பித்தார்கள். ஆசிரமத்திற்குச் சென்றேன் அங்கு ஒருவர் என்னை உங்களது சிஷ்யனாக்கிக் கொள்ளுங்கள் என்று படுத்த ஆரம்பித்தார். அந்தக் கலை உங்களிடமிருந்து அழிந்து போய் விடக்கூடாது என்பதற்காகத்தான் சிஷ்யனாகச் சேர விரும்புகிறேன் என்று அனத்த ஆரம்பித்தார். அவரிடமிருந்து தப்பித்து வீடு வந்து சேர்ந்தேன். 

மதுரையில் இருந்து ஒருவர் அழைத்து புலம்ப ஆரம்பித்தார். அவருக்கு மூன்று பெண் குழந்தைகளாம். வெல்டிங்க் பட்டறை வைத்திருந்தாராம். கண் தெரியவில்லையாம். இப்போது டெய்லரிங் யூனிட் போட்டு தொழில் செய்கிறேன் சார், இருந்தாலும் கடன் கட்டி மாளவில்லை. வரவுக்கும் செலவுக்கும் சரியாகவே இருக்கிறது என்னை எப்படியாவது இந்தப் பிரச்சினையில் இருந்து காப்பாற்றுங்கள் என்று கதற ஆரம்பித்தார். அவரின் அனத்தல் தாங்க முடியாமல் அவருக்கு கடன் பிரச்சினை மற்றும் தொழில் மந்தப் பிரச்சினையிலிருந்து வெளிவர ஒரு உபாயத்தைச் சொல்லிக் கொடுத்தேன். என்ன ஆனதோ தெரியவில்லை? போனும் வரவில்லை. சரியாகி விட்டால் சந்தோஷம்.

இப்போது நினைத்துக் கொள்ளுங்கள். பாட்ஷா படத்தில் ரஜினி ஒரு இடத்தில் சொல்வாரே? 

எனக்கு இன்னொரு பெயர் இருக்கு!

Thursday, March 2, 2017

வாசகர் கடிதம் - பதில்

உங்கள் பிளாக் நன்றாக இருக்கிறது. 


மகள் நிவேதிதாவிற்கு கடிதம் - 19 ஜூன் 2016

இந்த கடிதம் இதுவரை நான் படித்ததில் நா. முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதத்திற்கு பிறகு மிகச் சிறந்த கடிதம்.



நீ எப்போதுமே தனியாள் என்பதை நினைவில் வைத்துக் கொள். உனது பிரச்சினையும், மகிழ்ச்சியும், வலியும் உன்னை மட்டுமே சார்ந்தது. அதை வேறு எவரும் உணர்ந்து கொள்ளக் கூட முடியாது. உன் வாழ்க்கைப் பயணத்தில் கூட வருபவர்கள் எவரும் நிரந்தரம் இல்லை என்பதை நீ முடிவு கட்டிக் கொள்ள வேண்டும். வேறு யாரும் உனக்கு எந்த வித காரியத்தையும் பயனின்றி செய்ய மாட்டார்கள் என்பதை நீ நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த வரிகளை நான் மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறேன்.

உங்கள் நண்பர் ஜஹாங்கீர் ஆலம் பற்றி படிக்கும் போது எனக்கு என் நண்பன் ஞாபகம் வந்தது. அவர் எப்படி இறந்தார் என்று பதிவில் இல்லையே. அல்லது உங்களுக்கு தகவல் தெரியவில்லையா?

தாெடர்ந்து எழுதுங்கள். நன்றி.

கார்த்தி
01/03/2017


கார்த்திக்,

தங்களின் கடிதத்துக்கு நன்றி.

பெரிய கோடீஸ்வரன் வீட்டுக்  குழந்தைகள் எப்படியெல்லாம் வளர்க்கப்படுமோ அப்படித்தான் வளர்ந்தான் என் நண்பன். அவனுக்கு கிடைக்காத ஒன்றும் இல்லை என்றே சொல்லலாம். அவனது அம்மா அவன் மீது கொண்ட பாசம் அளவிட முடியாதது. பையன் உருப்பட மாட்டேன் என்கிறானே என்று அவனின் அப்பா அவன் மீது கோபம் கொண்டிருந்தார். இவர்களுக்குள் நான் சிக்கி இருந்தேன்.

ஆலம் நிறைய சிகரெட் குடிப்பான். அனைத்தும் காட்டம் மிகுந்த ஃபாரின் சிகரெட். அவனுக்குள் காதல் தோல்வி என்றொரு நிறைவேறாத சோகம் ஒன்றிருந்தது. அது யார்? ஏன் அப்படி ஆனது என்ற விஷயமெல்லாம் எனக்கு நன்கு தெரியும். அந்தக் காதல் விபரீதங்களைக் கொண்டு வந்து சேர்த்து விடும் அளவுக்கு தாக்கமுடையது. பணக்காரன் ஏழை என்கிற வித்தியாசத்தைத் தாண்டியும் ஒரு சில காரணிகள் அந்தக் காதலுக்கு இருந்தது. காதல் என்பது எல்லைகளற்ற உணர்ச்சி. அதை அடக்கி ஆள்வது என்பது மனிதனால் முடியாத ஒன்று. இயலாமையால் விட்டு விட நேரிடலாம். ஆனால் அந்த நிறைவேறாத காதலினால் எண்ணற்ற அனர்த்தங்கள் பிற்காலத்தில் உருவாகி வாழ்க்கையை சிக்கலானதாக்கி விடும். அவன் தன் காதல் தோல்வியை சிகரெட் புகை போக்கி விடும் என்று நினைத்தான். அதைத்தான் அவை செய்தன. அம்மா தான் போனில் ”அவன் இறந்து விட்டான் புற்று நோய்” என்றார்கள். மனது வலித்தது.

அவனுக்குப் பிடித்த சிகரெட் என்னையும் பிடித்திருந்தது. ஒரு நாள் மாலை நேரத்தில் அதுவும் என்னிடமிருந்து விடைபெற்றது. தெரிந்தோ தெரியாமலோ ஒட்டிக்கொள்ளும் பழக்கத்தை அவ்வளவு எளிதில் மனது விட்டு விட ஏற்றுக் கொள்ளாது. அதன் பின் விளைவுகளை புத்தியில் உரைக்கும் படி உணரச் செய்தால் மனது எங்கோ ஓடி ஒளிந்து கொள்ளும். அந்த உரைக்கும்படி சொல்வது எப்படி என்பது தான் தந்திரம்.

நான் வேலை நிமித்தமாக வெளியூர் வந்து விட்டேன். அதன் பிறகு அவனுடனான தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு இருந்தது. ஊருக்குச் செல்லும் போதெல்லாம் அவன் வீட்டினைக் கடக்கும் போது அவனுடனான நினைவுகள் நெஞ்சில் அழுந்திக் கொள்ளும். காலம் அதற்கான மருந்தினை எனக்குத் தந்து இருக்கிறது. எதுவும் நிரந்தரம் இல்லையே. அந்த உண்மை உரைக்க ஆரம்பித்த பிறகு மனது இலேசாகி விட்டது.

தொடர்ந்து படியுங்கள். வாழ்த்துக்கள்.


Wednesday, February 15, 2017

புத்திசாலி சாமர்த்தியசாலி ஒரு நீதிக்கதை

புத்திசாலிகள் வெற்றிபெறுவதில்லை. சாமர்த்தியசாலிகளே வெற்றி பெறுகின்றார்கள். இரண்டு நபர்களை உதாரணமாகச் சொல்லலாம். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் புத்திசாலியானவர். நம் பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் புத்திசாலி மட்டுமல்ல சாமர்த்தியசாலியும் கூட. அறிவு மட்டும் இருந்தால் பணியாளராக இருக்கலாம் . சாமர்த்தியமும் இருந்தால் முதலாளியாக இருக்க முடியும் என்பதற்கு இவர்களே சாட்சி.

சாமர்த்தியசாலிகளைப் பற்றிய ஒரு நீதிக்கதை உண்டு. அதை இப்போது படியுங்கள். 

ஒரு ஊரில் புத்திசாலி பணக்காரன் ஒருவன் இருந்தான். அவனுக்குச் சொந்தமாகப் பெரிய ஆட்டு மந்தைக் கூட்டம் இருந்தது. நிலங்களும் பெரிய அளவில் இருந்தன.  அவன் ஆடுகளை வளர்ப்பது அழகு பார்ப்பதற்கு அல்ல, அவைகளின் தோலுக்காகவும், கறிக்காவும் தான் வளர்த்து வந்தான். அவன் பணக்காரனாக இருந்தாலும் மகா கருமி. அவன் நிலத்தைச் சுற்றிலும் வேலி போட அவனுக்கு விருப்பமில்லை. வேலி போட்டால் செலவு அதிகமாகும் என்ற நினைப்பு. 

அந்த ஆடுகளில் ஒரு சில புத்திசாலிகள் இருந்தன. அவைகள் இவன் தங்களைக் கொன்று பிழைக்கின்றான் என்றும் பேசிக் கொண்டன. அதனால் கூட பல ஆடுகள் அருகில் இருக்கும் காடுகளுக்குத் தப்பிச் சென்றும் விட்டன. அடிக்கடி ஆடுகள் வேலி தாண்டிச் சென்றும் விடும். இதன் காரணமாக அவனுக்கு அதிக இழப்புகள் ஏற்பட்டன.

இந்தப் புத்திசாலி பணக்காரன் செலவும் ஆகக்கூடாது, ஆடுகளும் தப்பித்துச் செல்லக்கூடாது, இதற்கொரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று நினைத்தான்.

ஒரு நாள் அனைத்து ஆடுகளையும் அழைத்து அவைகளிடையே பேச ஆரம்பித்தான்.

ஆடுகளுக்கு எப்போதும் இறப்பே வராது என்றும், அதன் தோல்களை நீக்கும் போது வலியே ஏற்படாது என்றும், அதனால் அவைகளின் உடல் நன்கு பாதுகாக்கப்பட்டு, மீண்டும் தோல் வளர்ந்து எப்போதும் சாவதே இல்லை என்றும் அவைகளுக்கு நம்பிக்கை ஊட்டி வசியப்படுத்தினான்.

ஆட்டு மந்தைக் கூட்டத்தின் மீது அவன் அளவற்ற அன்பு கொண்டுள்ளதாகவும், அவைகளின் நன்மைக்காக உலகில் இருக்கும் அத்தனை நலன்களையும் அவைகளுக்குச் செய்து வருவதாகவும், அந்த ஆடுகளின் நன்மையைத் தவிர வேறு எதையும் அவன் சிந்திப்பதே இல்லை என்றும், அவன் அவைகளுக்கு நல்ல எஜமானனாக இருப்பதாகவும் விவரித்துப் பேசினான்.

அவைகளுக்கு எந்தக் காலத்திலும் துன்பம் ஏற்படவே ஏற்படாது என்றும், அவைகளுக்குத் துன்பம் ஏற்படவே கூடாது என்பதற்காக அவன் தன் வாழ் நாளையே தியாகம் செய்து பணி செய்து வருவதாகவும் பேசினான். அப்படி அவைகளுக்குத் துன்பம் ஏற்பட்டு விட்டால் அது தான் உயிரோடு இருக்கும் வரையில் நடக்காது என்றும் வீராவேசமாகப் பேசினான்.

அதுமட்டுமல்ல அந்த ஆடுகளில் பல ஆடுகளே இல்லை என்றும் அவைகளும் நாளை நல்ல எஜமானனாகும் தகுதி உடையவை என்றும், பல ஆடுகள் சிங்கங்கள் என்றும், பல ஆடுகள்  புலிகள் என்றும், பல ஆடுகள் பின் நவீனத்துவ எழுத்தாளர்கள் என்றும், பல ஆடுகள் தியாகமே உருவான தொண்டர்கள் என்றும் ஆடுகளையே ஆடுகள் இல்லை என்ற தோற்றத்தினை உருவாக்கினான். அவன் பேசியதைக் கேட்ட ஆடுகள் தங்களை ஆடுகளே இல்லை என நம்ப ஆரம்பித்தன.

அவன் பேசப் பேச ஆடுகளுக்கு அவன் மிக நல்ல எஜமானன் என்று தோன்றின. அவைகள் அவனை நம்பின. அன்றிலிருந்து எந்த ஒரு ஆடும் வேலி தாண்டிப் போவதில்லை. அவன் நிலத்துக்குள்ளேயே வசித்து வர ஆரம்பித்தன. அவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆடாக கொன்று தோலை உரித்து, கறியை விற்பனை செய்து சுகமாக வாழ்ந்து வந்தான்.

அந்த ஆடுகள் தாங்கள் கொல்லப்படுவதையோ, தாங்கள் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறோம் என்பதையோ அறிந்திருக்கவில்லை. தங்கள் எஜமானன் மீது அளவற்ற அன்பும், பக்தியும் கொண்டிருந்தன.

கதையைப் படித்து விட்டீர்களா?

இந்தக் கதையில் வரும் ஆடுகள் யார்? அந்த சாமர்த்தியசாலியும் புத்திசாலியுமான எஜமானன் யார் என்று உங்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும். ஆகவே.... !!!




Tuesday, February 7, 2017

துளசி அய்யா வாண்டையார் - மறக்க இயலாத மாமனிதர்

பனிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு கணிணி அறிவியல் தான் படிக்க வேண்டுமென்ற ஆவலில் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால் மாமாவோ மெடிக்கல் வைப்பதற்குப் படி என்றுச் சொல்லிக் கொண்டிருந்தார். அதிமுக செயலாளர் குழ.செல்லையாவிடம் சென்று சிபாரிசு கடிதம் வாங்கிக் கொண்டு தஞ்சாவூர் மெடிக்கல் கல்லூரியில் அப்ளை செய்தோம். ஆனால் சீட் கிடைக்கவில்லை. எனது மனதுக்குள் கணிணி மட்டுமே விஸ்வரூபம் எடுத்து நின்றது. ஒரு வருடம் வீட்டில் இருக்க வேண்டியதாகி விட்டது. குமுதம் புத்தகத்தில் வெளியான கணிணி படத்தை கட் செய்து சுவற்றில் ஒட்டி வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பேன்.

அடுத்த கல்வியாண்டில் எப்படியாவது கணிப்பொறிப் படிப்பில் சேர்ந்து விட வேண்டுமென்ற ஆவலில் முயற்சிகளை மேற்கொண்டேன். எனது உறவினர் ரங்கசாமி மற்றும் பூண்டி புஷ்பம் கல்லூரியில் படித்த  குருவின் மூலமாகவும் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் பேராவூரணி தொகுதி எம்.எல்.ஏ சிங்காரத்தைச் சந்தித்து சிபாரிசுக் கடிதம் பெற்றுக் கொண்டேன். ரங்கசாமியின் சித்தப்பாதான் எம்.எல்.ஏ. இவரும் பூண்டி துளசி அய்யா வாண்டையாரும் நல்ல நண்பர்கள் என்று கேள்விப்பட்டேன். பூண்டி புஷ்பம் கல்லூரியில் சீட்டுக்கு அப்ளை செய்திருந்தேன். இண்டர்வியூவிற்கு வரச் சொல்லிக் கடிதம் வந்திருந்தது.

(துளசி அய்யா வாண்டையார்)

பூண்டி சென்று துளசி அய்யா வாண்டையார் அவர்களின் வீட்டுக்குச் சென்று அவரிடம் மாமா கொடுத்திருந்த லெட்டரைக் கொடுத்து அவரிடம் ஆசி பெற்றுக் கொண்டு கல்லூரிக்குச் சென்றேன்.

முதன் முதலாக பிரின்ஸிபல் மெய்பொருள் அவர்களை அவரது கேபினில் சந்தித்தேன். என்னைப் பார்த்ததும் உன்னால் ஸ்டூலில் எல்லாம் உட்கார முடியாது ஆகவே நீ காமர்ஸ் எடுத்துப் படி என்றுச் சொல்லி கம்ப்யூட்டர் படிப்புக்கு அனுமதி தர முடியாது என்றுச் சொல்லி மறுத்து விட்டார்.

சரியான கோபம் வந்து விட்டது. மீண்டும் துளசி அய்யா வாண்டையாரைச் சந்திக்கச் சென்றேன். ”சீட் கிடைத்து விட்டதாப்பா?” என்று கேட்க நான் விஷயத்தைச் சொன்னேன். அடுத்த பத்தாவது நிமிடத்தில் பிரின்ஸ்பல் அய்யா வீட்டுக்கு வந்து விட்டார். அவரிடம் ”ஏன் இவனுக்கு கம்ப்யூட்டர் படிக்க அனுமதி கொடுக்கவில்லை?” என்று கேட்டார். ”இவனால் ஸ்டூலில் உட்கார முடியாது” என்றுச் சொன்னார் பிரின்ஸிபல். ”அதைத் தூக்கி தரையில் வைத்துச் சொல்லிக் கொடு” என்று உறுமினார். ஆடிப்போய் விட்டார் பிரின்சிபல்.

ஒரு வழியாக கணிணி படிக்க அனுமதி கிடைத்து கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்தேன். ஹாஸ்டல் துவங்க நாள் ஆகும் என்பதால் பூண்டியில் இருந்த நடராஜன் என்பவரது அறையில் தங்கிக் கொண்டேன். என் தம்பி ஜெயபாலும், நவ நீதகிருஷ்ணனும் வகுப்பு லீவு போட்டு விட்டு சைக்கிளில் என்னைக் கொண்டு போய் கல்லூரியில் விட்டு மீண்டும் அழைத்து வருவார்கள். மூன்றாவது மாடியில் எனக்கு வகுப்பு இருந்தது. நான் படியில் தவழ்ந்து சென்று வகுப்பறைக்குள் செல்லும் போது எனது டிரஸ் எல்லாம் வியர்வையில் நனைந்திருக்கும். அறை குளுகுளுவென இருக்கும். கொஞ்ச நேரத்தில் வியர்வை சரியாகி விடும். அய்யாவின் முயற்சியால் மூன்றாவது மாதத்தில் முன்னாள் அதிமுக மந்திரிகள் அழகு திருநாவுக்கரசரும், எஸ்.டி.எஸும் சைக்கிள் வழங்கினார்கள். அதன் பிறகு ஹாஸ்டலில் இருந்து வகுப்பறைக்குச் சென்று வருவது எளிதானது.

இதற்கிடையில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. அய்யா வீட்டில் பல ஏழை மாணவர்கள் தங்கி படித்து வந்தனர். அவர்களுக்கு இருக்க இடமும், உணவும், கல்விக்கு பணமும் கொடுத்துப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். பெரிய கோடீஸ்வரர் அய்யா. பூண்டி என்கிற ஊர் மட்டுமல்ல சுத்துப்பட்டு ஊர் பூராவும் அய்யா குடும்பத்தினருக்குச் சொந்தமானது.

தினமும் அவர் பகவத் கீதை வகுப்பு நடத்துவார். தினமும் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தேன். ஒரு நாள் நான் உட்கார முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த அய்யா அவரருகில் நாற்காலி ஒன்றினைக் கொண்டு வந்து போட்டு அருகில் உட்கார்ந்து கொள் என்றுச் சொல்லி விட்டார். என்னால் மறுக்கவே முடியவில்லை. அவரருகில் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வகுப்பினைக் கேட்க ஆரம்பித்தேன். பிரச்சினை என்னவென்றால் கீழே பிரின்ஸ்பல் உட்கார்ந்திருந்தார். அத்துடன் எனக்குப் பாடம் எடுக்கும் புரபசர்கள் வேறு உட்கார்ந்திருந்தனர். அது எனக்கு அசகவுரியமாக இருக்க ஹாஸ்டல் திறந்ததும் வகுப்புக்கு வருவதை நிறுத்தி விட்டேன்.

அதன் பிறகு எனக்கும் பிரின்சிபல் அவர்களுக்கு நல்ல உறவு ஏற்பட்டது. அடிக்கடி அவரைச் சந்தித்து பேசிக் கொண்டிருந்து விட்டு வருவதுண்டு. ஒரு தடவை அட்டெண்டன்ஸ் குறைந்து விட்டது. பிரின்ஸ்பல் எனக்கான ஃபைனை அவர் செலவு செய்து கட்டினார். கணிணி புரபஸர் சக்ரவர்த்தி, சிவகுமார் ஆகியோரிடமிருந்து செலவுக்குப் பணம் பெற்றுக் கொள்வதுண்டு. அப்போதெல்லாம் வீட்டுக்குச் சென்று பணம் வாங்கி வந்தால் தான் உண்டு. ஒரு முறை பிரின்ஸ்பலிடமிருந்தும் செலவுக்குப் பணம் வாங்கிக் கொண்டேன். எந்த வித முகச் சுளிப்பும் இன்றி கொடுப்பார். திரும்பக் கொடுக்கும் போது வைத்துக் கொள் என்று சொல்வார். மறுத்து விடுவேன்.

என் வசதிக்காக வகுப்பறையை எனது ஹாஸ்டல் அறைக்கு அருகில் மாற்றிக் கொடுக்க உத்தரவிட்டவர் அய்யா. மூன்று வருடம் வரை வெகு சொகுசாக இருந்தேன். எனக்கு என்ன தேவையோ அவரிடம் சென்றால் உடனே கிடைக்கும் படி செய்து விடுவார். அவர் அப்போது எம்.பி ஆக இருந்தார். தினமும் அவரைச் சந்திக்க முடியாது. சந்திக்கும் போதெல்லாம் நன்றாக இருக்கின்றாயா? என்று கேட்பதை அவர் தவிர்க்கவே இல்லை.

ஒரு தடவை கல்லூரியில் ஸ்ட்ரைக் நடந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன் என்று பிரின்ஸிக்கு படுபயங்கர கோபம். சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருந்தார். அய்யாவிடம் சென்றேன். அடுத்த நொடி சஸ்பெண்ட் ரத்தாகி விட்டது. ஹாஸ்டலில் உணவு சரியில்லை என்று மாணவர்கள் போராட்டம் நடந்தது. ஆனால் எனக்குப் பிரச்சினை இல்லை. மாணவர்களுடன் சேரவில்லை என்றால் அவர்கள் என்னை தனிமைப் படுத்தி விடுவார்கள். வேறு வழி இன்றி பசியுடன் போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஹாஸ்டல் வார்டன் என்னைப் பற்றி அய்யாவிடம் தவறாக போட்டுக் கொடுத்து விட்டார். வேறு வழி இன்று ஹாஸ்டலின் உணவு தரம் பற்றி அய்யாவிடம் சென்று விவரித்து விட்டேன். உடனடியாகச் சரி செய்தனர். அதன் பிறகு வார்டன் என்னுடன் எந்தப் பிரச்சினையையும் செய்வதில்லை. 

ஒரு தடவை கல்லூரி லீவ் முடிந்து வீட்டிலிருந்து ஹாஸ்டலுக்குச் சென்ற போது பஸ் கிடைக்காமல் வேறு வழி இன்றி இரவு அய்யா வீட்டின் முன்புறம் இரவு தூங்க வேண்டியதாகி விட்டது. அவர் அமர்ந்திருக்கும் சாய்வு நாற்காலியில் படுத்து உறங்கி விட்டேன். அவர் தினமும் வெளியில் வந்து அமரும் பெஞ்ச் அது என்று எனக்குத் தெரியாது. நான் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு அனைவரிடமும் அவனை எழுப்பி விடாதீர்கள் என்றுச் சொல்லி விட்டுச் சென்றாராம். தூங்கி விழித்தவுடன் அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். படபடப்பு அதிகமாகி விட்டது. அய்யாவை மீண்டும் பார்த்து மன்னிப்புக் கோரினேன். சிரித்து விட்டு ”நன்றாகப் படி என்றுச் சொல்லி ஆசீர்வதித்தார்.

ஹாஸ்டலில் எனக்கு எந்த அறை வசதியோ அதைத்தான் தருவார்கள். விரும்பும் போதுதான் விடுதிக் கட்டணமும் கட்டுவேன். எதையும் கேட்கமாட்டார்கள். கல்லூரியில் நானொன்றும் பிரச்சினை செய்பவனல்ல. சாலையில் போராட்டம் நடக்கும் அவ்வழியே செல்லும் போது நாமும் சிக்கிக் கொள்வோம் அல்லவா அது போல கல்லூரியில் மாணவர்கள் செய்யும் போராட்டத்தில் விரும்பவில்லை என்றாலும் கலந்து கொண்டுதான் ஆக வேண்டிய சூழல். இது போன்ற சிக்கல்கள்தான் எனக்கு ஏற்பட்டன.

ஹாஸ்டலில் எனக்கு ராஜ வாழ்க்கை தான். மெஸ்ஸில் சப் வார்டன்கள், உணவு கிட்டங்கியாளர்கள். பரிமாறுபவர்கள், சமையற்காரர்கள் அனைவரும் என்னுடன் நட்புடனே பழகி அந்த நட்பின் காரணமாக அதீதமாக கவனித்தார்கள். ஒருவருக்கு ஒரு முட்டை தான் ஆனால் எனக்கோ நான்கைந்து முட்டைகள். உருளை சிப்ஸ் என்றால் ஒரு வாளி கிடைத்து விடும். ஞாயிறுகளில் மொடா மொறு மொறு தோசை போட்டு தனியாக உட்கார்ந்து சாப்பிட்டு வருவேன். கேட்கும் சுவையில் ரசம், குழம்புகள் செய்து தருவார்கள். துவையல் அறைத்துக் கொடுப்பார்கள். எனது நண்பர்கள் பெருமூச்சு விடுவார்கள். அவ்வப்போது அவர்களுக்கு என்னால் முடிந்த பொருள் உதவியை வழங்குவேன். ராஜேந்திரன் என்றொரு சர்வர் இன்னும் இருக்கிறார். அவரின் செல்லப்பிள்ளையாகத்தான் இருந்தேன். சாப்பிடுங்க சாப்பிடுங்க என்றுச் சொல்லி தட்டை ரொப்பி விடுவார்.

முதல் வகுப்பில் தேறிய பிறகு சர்ட்டிபிகேட்ஸ் பெற்றுக் கொண்டு அய்யாவைச் சந்தித்து விடை பெற்றுக் கொண்டேன். 

இருபது வருடம் கடந்து சென்ற பிறகு, எனது நண்பரின் திரைப்பட ஷூட்டிங் தஞ்சாவூரில் நடந்து கொண்டிருந்தது. அதைப் பார்ப்பதற்காக என்னை அழைத்திருந்தார். அங்கு சென்ற போது பூண்டிக்குச் சென்று அய்யாவைப் பார்த்து விட்டு வந்தேன். எனது காரை அய்யா வீட்டின் முன்பு நிறுத்தவே கூடாது என்று தடுத்தார்கள். புது ஆட்கள், புது ரூல்ஸ்.

என்னைப் பார்த்ததும் “நன்றாக இருக்கின்றாயா?” என்று கேட்டார். ”மாமா எப்படி இருக்கிறார்? எப்படி இங்கு வந்தாய்? என்ன செய்து கொண்டிருக்கிறாய்? யார் உன்னை அழைத்து வந்தது?” என்று விசாரித்தார். டிரைவரிடம் ”பார்த்துக் கூட்டிக் கொண்டுச் செல்” என்றுச் சொன்னார். புது ஆட்கள் எல்லாம் திணறிப் போய் விட்டனர். 

இருபது ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தாரோ அதே போலத்தான் இன்றைக்கும் இருந்தார். அவர் மாறவே இல்லை. பெரிய மனிதர்கள் என்றைக்கும் பெரியமனிதர்களாகவே இருப்பார்கள்.

என் வாழ்வில் என் கனவுப் படிப்பான கணிணி அறிவியல் படிக்க உதவி செய்து இது நாள் வரையிலும் என் மனதிலிருந்து நீங்கவே நீங்காத மாமனிதராய், கோவில் கோபுரமாய் உயர்ந்து நிற்கிறார் துளசி அய்யா வாண்டையார் அவர்கள்.

இது போல உங்கள் அனைவருக்கும் யாரோ எங்கோ ஒருவர் உதவி இருப்பார். அவரின் உதவியாலே உங்கள் வாழ்க்கையில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அவர்களை வருடத்தில் ஒரு தடவையாவது நினைத்துப் பாருங்கள். அதுவே நாம் அவர்களுக்குச் செய்யும் நன்றிக்கடன். 



Friday, February 3, 2017

கெணத்தடிப்பாம்பு - சிறுகதை

மலைகள் இணைய 114 இதழில் வெளியான கிணத்தடிப்பாம்பு என்கிற சிறுகதை இங்கு வெளியிடுகிறேன். ஆசிரியர் சிபிச் செல்வனுக்கு நன்றிகள் பல. மலைகள் இணையப்பக்க இணைப்பு : http://malaigal.com/?p=9735

இனி சிறுகதையை தொடர்ந்து படிக்கவும்:-

சாயங்காலம் பள்ளிக்கொடத்திலிருந்து வீட்டுக்கு வரும் போது கெணத்தடியில் ஆட்கள் குறைவாக இருந்ததைப் பார்த்தேன். வீட்டுக்கு வடக்கே இரண்டு தெரு தாண்டி கிழ மூலையில் பெரிய கெணறு ஒன்னு நாலு பொறமும் தண்ணி இறைக்க சகடைகள் தொங்கியபடி இருக்கும். மரத்தினால் செய்யப்பட்டிருக்கும் இந்த சகடைகள் மீது கயித்தப் போட்டு தண்ணி எறைக்கனும். கட கடவென சவுண்டு விட்டுக்கிட்டு சுத்தும் சகடைகள். வெத்து வாளி உள்ளே போவதும் தண்ணி வாளி வெளியே வருவதுமாய் பொழுதன்னைக்கும் சத்தம் கேட்டபடியே இருக்கும். யாராவது குளிச்சிக்கிட்டும், துணி தொவைச்கிட்டும், தண்ணி எடுத்துக்கிட்டும் இருப்பாங்க.

குளிக்கிறதுக்கும் துணி தொவைக்கிறதுக்கும் அந்தப் பகுதிப் பெண்கள் பொழுது மசங்கின நேரத்தில் அந்தக் கெணத்துக்குச் செல்வார்கள். பாவாடையை மார்பின் மேலே தூக்கிக் கட்டிக் கொண்டு கெணத்திலிருந்து நீர் எறைச்சு மேலே ஊத்திக் கொண்டு குளிப்பார்கள். கெணத்துக்கு குளிக்கச் செல்வதற்கு முன்பே சீவக்காயை வடிச்ச கஞ்சியோடு சேர்த்து குழப்பி தலையில் தடவி கொண்டை போட்டுக் கொள்வார்கள். குளிச்ச பின்னாடி வழுவழுன்னு மின்னும். கையோடு அழுக்குத் துணியையும், உப்புச்சவக்காரத்தையும் கொண்டு போவார்கள். அவங்க குளிக்கும் போது ரவுண்டா முட்டை மாதிரி இருக்கும் மைசூருசாண்டல் மேல்சோப்பு வாசம் அடிக்கும்.

கல்யாணம் ஆனவர்கள் கையோடு வாளியில் துவைக்க துணிகளையும்,. குழந்தைகளையும் அழைத்துச் சென்று வாளியில் தண்ணி எறைச்சு சிண்டுகளைக் குளிப்பாட்டி இடுப்பில் துண்டைக் கட்டி விட்டு தலையை காயவைன்னுச் சொல்லி விடுவார்கள். துணிகளைத் தொவச்சு பிழிஞ்சு வாளியில எடுத்து வெச்சுட்டு குளிப்பார்கள். அதுவரைக்கும் சிண்டுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டும், குளிக்கிற தண்ணி வழிஞ்சோடும் வாய்க்காப் பக்கமாக கால்களை நனைச்சுக்கிட்டும் அம்மாகிட்டே திட்டு வாங்கிக் கொண்டும் பராக்குப் பார்த்தபடி கழிப்பார்கள்.

அது பொதுக்கெணறு. யாரு வேண்டுமானாலும் தண்ணி எடுத்துக் கொள்ளலாம். சைக்கிளில் ரெண்டு பக்கமும் செப்புக் குடத்தைக் கட்டிக்கிட்டு ட்ரிப்அடிப்பார்கள் ஆண்கள். வேலையாட்களுக்கு தண்ணி சுமக்கிறது பெண்டு நிமித்தும் பெரிய வேலை. எல்லா வீட்டிலும் கெணறுகள் இருக்காது. ஒரு சில வீடுகளில் தான் கெணறு இருக்கும். வற்றவே வற்றாத தண்ணீர் அமிர்தமென சுரந்து கொண்டே இருக்கும் கெணறுகள் எங்கள் வீட்டிலும் இருந்தன.

கைகாட்டி கொல்லையில் ஒரு கெணறு இருந்தது. தண்ணீர் வற்றிப்போகவே போகாது. ஏற்றமிரைத்து தான் விவசாயம் நடக்கும். நெலக்கல்லை தான் அதிகம் பயிர் செய்வார்கள். உளுந்து, துவரை, மரவள்ளிக்கிழங்கு போடுவார்கள். கொல்லையைச் சுத்தியிலும் தென்னமரமும், பலாக்காய் மரமும் இருக்கும். இந்தக் கெணத்துத் தண்ணீ உப்புகரிக்கும். தென்ன மரத்துக்கும், பயிர்களுக்கும் ஏத்தம் போட்டு எறைச்சு தண்ணி ஊத்தனும். கல்லைக்கு வாய்க்காலில் வரும் தண்ணியை தட்டு வெச்சு விசிறி அடிக்கணும். தரை நனையனும். வடக்குக் கொல்லை சோம்பி வீட்டுக்காரரு போரைப் போட்டாரு. கெணத்து தண்ணீயெல்லாம் காணாமப் போச்சு.

வடக்கித் தெரு கெணத்துத் தண்ணிக் கொஞ்சம் சப்பைமாதிரி இருக்கும். குளிக்க மட்டும்தான் பயன்படும். ஆனால் எங்கள் வீட்டுக் கெணத்துத்தண்ணி குடிக்க டேஸ்டா இருக்கும். தெக்கித் தெருவிலிருந்தெல்லாம் தண்ணி கொண்டு போக தவலைப்பானை, கொடமெல்லாம் கொண்டு வந்து விடுவார்கள். இரும்பு பூட்டையில் தொங்கிக் கொண்டிருக்கும் வாளியில் இறைத்து நிரப்பிக் கொண்டு சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு செல்வார்கள். அம்மா யாரையும் ஒன்றும் சொல்லமாட்டார்கள்.

கெணத்துக்கு உறை கொண்டு வந்து போட்டார்கள். மழை பேஞ்சா கெணத்து வாய் மண்ணெல்லாம் கரைஞ்சு போய் அகன்று விடும். கெணத்து வாயைச் சுத்திலும் ரவுண்டு ரவுண்டா புல் தரையைச் செதுக்கு அடுக்கி வைக்கணும். இருந்தாலும் வாய் அகண்டு போயிடும். வீட்டில் செமண்டு உரையை வாங்கி வந்து பதினெஞ்சு அடிக்கு போட்டு விட்டார்கள். அடிக்கடி கெணத்துக் கயிறு அறுந்து போகும். ரப்பர் கயிறு வாங்கி வந்து போட்டார்கள். இந்த ரப்பர் கயிறு பூட்டையில் சிக்கிக் கொண்டு இறைக்க முடியாது.

மழை பேஞ்சுடுச்சின்னா கெணத்தில் தண்ணீ நெறஞ்சு கிடக்கும். கையாலே தொடலாம். வழிந்தோடும். தண்ணி சுண்ணாம்பு கலந்த மாதிரி இருக்கும். கொஞ்ச நாளுல பளிங்கு மாதிரி ஆயிடும். தண்ணீ குறைஞ்சாத்தான் அம்மா வடக்கித் தெருக் கெணத்துக்கு குளிக்க அழைத்துச் செல்வார்கள். அந்த வடக்கித் தெரு கெணத்தடியைச் சுற்றிலும் நான்கடி அகலத்துக்கு சிமெண்ட் போட்டு பார்டரு கட்டி தண்ணி போக வழி வைத்திருந்தார்கள். மூன்று துவைக்கும் கல்லும் கட்டி இருந்தார்கள். அவ்வப்போது சண்டைகள் நடக்கும். கொஞ்ச நேரம் தான் சத்தமாக்க் கேட்கும். ஆம்பளைங்க யாரும் அந்தப் பக்கம் போக மாட்டாங்க. குளியலும் துவைத்தலும் முடிந்ததும் ஆரவாரமின்றிக் கிடக்கும். வடக்கித்தெரு சுப்பைத்தேவர் வீட்டுப்பக்கமாய் குளிக்கிற தண்ணி, துவைக்கிற தண்ணி வடிந்து போகும். அவர் வாழை போட்டிருந்தாரு. அந்த வாழைகளும் சவுக்காரத்தண்னி, சீயக்காய் தண்ணீ, வடிச்ச கஞ்சித் தண்ணி, மஞ்சத்தண்ணியெல்லாம் குடிச்சு வளமா வளந்து கொலை கொலையா தள்ளுச்சு.

சவுக்காரத்தண்ணி வாழைக்காய்னு சொல்லி ராவுத்தப்பய வெலையைக் குறைச்சுப்பிட்டான் குட்டியம்மாஎன்று சாயங்காலமா வீட்டு வந்த சுப்பையாத்தேவர் அம்மாகிட்டே புலம்பிக்கிட்டு இருந்தார். கைகாட்டியில ஏலக்கட வச்சிருக்கிற ராவுத்தருக்கு இந்த வெஷயத்தை எவனோ போய் சொல்லிப்புட்டான்என கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார்.

போன வாரம் வடக்கித் தெரு கெணத்துக்குள்ளே பாம்பு விழுந்துடுச்சுன்னு பேசிக்கிட்டாங்களேண்ணே, பாம்பைப் பிடிச்சாச்சா?” என அம்மா கேக்க ”அதையேன் கேக்கிற குட்டியம்மா! சம்முகம் வாத்தியாரு பொண்டாட்டி கெணத்துல தண்ணி எடுக்கப் போயிருக்கா, வாளியோடு தலையை நீட்டிகிட்டு பாம்பு வந்ததைப் பார்த்தவ கத்துன கத்துல ஊரே கூடிடுச்சு. அவளுக்கு பாம்பப் பார்த்துப் பயமா? என்னமா நடிக்கிறாங்கறே. பத்தடி நீளமெருக்கும். தண்ணிக்குல கிடந்து ஊருது. நல்லபாம்பு மாதிரி தெரியுது. எவனும் கிட்டக்கே போக மாட்டேங்குறானுங்க. இன்னும் எடுக்கலை இந்த சனிக்கிழமை ஊருல கூட்டம் போட்டு தான் ஆளை அனுப்பனும்னு அருணாலம் சொன்னான்” என்றார்.

இனி அந்தப் பக்கம் எவரும் போக மாட்டார்கள். வடக்கித் தெரு சுப்பையாதேவரு வாழைகளுக்குத்தான் சிரமம். சவுக்காரத் தண்ணி கெடக்காம வாடிப்போய்டும். தெக்கிவீடு சலுவா வீட்டில ரெண்டு கெணறு இருக்கும். சப்பைத்தண்ணின்னு. யாரும் சீந்த மாட்டாங்க. கைலி மாதிரி லுங்கியைக்கட்டிக்கிட்டு மேலே துண்டைப் போட்டுக்கிட்டு திரியும் சலுவாகிட்டே தண்ணி எரைச்சுக்கிறேன்னு எவரும் போய் கேக்கமாட்டாங்க. ராவுத்தரு வீட்டுல போய்த் தண்ணி எடுக்கறதான்னு வீராப்பு.

மேக்கால கொலுசு வீட்டில ஒரு கெணறு இருந்துச்சு. பூமியோட பூமியா ரெண்டு பக்கமும் கவட்டைக் கம்புல பெரிய மரச்சகடை மாட்டிக் கிடக்கும் கெணத்தைச் சுத்தியும் செடியும் கொடியும் மரமுமாய் இருக்கும். பாம்பு கீம்பு வந்துரும்னு அந்தக் கெணத்துப் பக்கமும் யாரும் போக மாட்டாங்க.

வீட்டுக்கு வீடு கெணறு இருந்தாலும் எங்க வீட்டுக் கெணத்துத்தண்ணி மாதிரி டேஸ்டுஎங்கேயும் இல்லைன்னுச் சொல்லிக்கிட்டே தெனமும் குடிக்கத் தண்ணி வேணும்னு சொல்லிக்கிட்டு வந்துகிட்டே இருப்பாங்க. பெரிய மாமரத்தடி நெழலு குளுகுளுன்னு இருக்கும். தண்ணி எடுக்க வர்ரவுங்க நெழல்ல உக்காந்து ஊர்க்கதை உலக கதையெல்லாம் அம்மாகிட்டே பேசிட்டுதான் கெணத்துல தண்ணி எறைக்கவே போவாங்க. அம்மாவும் அவங்கிட்டேப் பேசிக்கிட்டே ரெண்டு மூனு குடம் தண்ணியை வீட்டுக்கு கொண்டு வந்துடுவாங்க.

மார்கழி மாசம் வந்துச்சுன்னா குளிரு பின்னும். வாசப்பக்கம் வந்தா பல்லு தந்தியடிக்கும். பள்ளிக்கொடத்துக்குப் போக குளிக்கணும்கிறதை நெனச்சாலே சில்லிடும். சூரியன் கொஞ்சமா வெளிய வந்து தலையை நீட்டியவுடனே கிணத்துல தண்ணி எறைச்சு பொக்கையில நெப்பி வைச்சுக்கிட்டு குளிச்சா வெது வெதுன்னு இருக்கும். சூரியன் வாரதுக்கும் குளிக்கிறதுக்கும் ஸ்கூலுக்குப்போறதுக்கும் இழுத்துக்கோ பறிச்சுக்கோன்னு இருக்கும். அவசர அவசரமா மோத்தண்ணிச் சோறை மாங்காய் ஊறுகாயோட தின்னுட்டு பைக்கட்டை எடுத்துக்கிட்டு பிரேயர் ஆரம்பிக்கிறதுக்குள்ளே போய்ச் சேர்வது பெரும்பாடா இருக்கும். தை ஒன்னாம் தேதி வந்துடுச்சுன்னா குளிரு கொஞ்சம் குறையும். இருந்தாலும் மார்கழி மாசக் குளிரு குளிருதான்.

கோடைகாலமென்று நினைக்கிறேன். சாயங்காலமா குளிக்கலாம்னு கெணத்தடிக்குப் போய் தண்ணி இறைக்கப்போனா உள்ளே கருகருவென பாம்பு நெளியுது. அம்மாகிட்டே வந்து சொன்னேன். மறு நாள் தட்டுக்கூடையில வைக்கோலப் போட்டு உள்ளே கட்டித் தொங்க விட்டாங்க. வேடிக்கைப்பார்க்க கருவேல மரத்தடியில இருந்த திண்டுல உக்கார்ந்திருந்தேன். அம்மா கெணத்தடிப்பக்கமா வரவே கூடாதுன்னுட்டாங்க. கூடையை மேலே கொண்டு வந்தா பாம்பு குதிக்குமுன்னு சொல்லியிருந்தாங்க. பயத்துல தான் தள்ளி உக்காந்திருந்தேன். ஆட்கள் சுற்றிலும் நின்று கொண்டு ஒரு ஆள் கயிறை இழுக்க மெதுவா தட்டுக்கூடை மேலே வந்தது. அதில் கயிற்றில் சுற்றிக் கொண்டு பனிரெண்டு நீளத்துக்குப் பாம்பு கூடையில இருந்த்தைப் பாத்து விட்டு ஆளுக எல்லாம் தெரிச்சு ஓடுனாங்க. கயித்தை மரத்துல கட்டிப்புட்டு கம்பை எடுக்க ஓடுனாங்க. அந்தப் பாம்பு அதுக்குள்ளே சீறிக்கிட்டு ஒரே தாண்டு. சரியா நான் உக்காந்திருந்த திண்டுக்கிட்டே விழுந்துச்சு. பயத்துல நான் கத்துன கத்துல பாம்பு வக்கப்போரு ஓரமா வேகமாகச் செல்ல ஒரு ஆளு ஓடி வந்து கம்பால ஒரே அடி. நடுங்கிப் போயிட்டேன். அத்தப் பெரிய கருகரு நாகப்பாம்பை பக்கத்துல பாத்தா சிரிப்பா வரும்? அம்மா என்னைத் திட்டிகிட்டே இருந்தாங்க. அதுதான் கடைசி. அந்தப் பாம்பைப் பார்த்ததுக்கப்புறம் கெணத்தடிப்பக்கமே போவதில்லை. வீட்டின் அருகில் இருக்கும் பொக்கைத்தண்ணியில தான் குளிப்பேன்.

Wednesday, February 1, 2017

சிவன்கோவில் புளியமரம்

அமைதியான விடிகாலைப் பொழுது. மயிலொன்றின் அகவல் சத்தம் கேட்டு விழித்தேன். மூச்சு சரியாக ஓடிக் கொண்டிருக்கிறதா என்று கவனித்து விட்டு எழுந்தேன். பிள்ளைகள் இருவரும் இன்னும் சிறிது நேரத்திற்குள் எழுந்து கொள்வார்கள். விடிகாலை பொழுதின் அமைதி அவர்களுக்கு நற்சிந்தனை, ஊக்கம், சிறந்த செயல்பாடு ஆகியவற்றினைத் தரும் என்பதற்காக சிறு வயதிலிருந்தே ஐந்து மணிக்கு எழுந்து கொள்ள பழக்கப்படுத்தினோம். விடுமுறையானாலும் விடிகாலை ஐந்து மணி தான். இன்னும் கொஞ்ச நாட்களில் நான்கரை மணிக்கு பழக்கப்படுத்தி விட வேண்டும். இரவு ஒன்பதரைக்கு தூங்கச் செல்லவும் பழக்கப்படுத்தி இருக்கிறேன். 

அமைதியான காலைப் பொழுதின் துவக்கத்திலே படிப்பதையும், அலுவலக வேலைகளையும் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்து விடுவது வாடிக்கை. நாளொன்றுக்கு சிவில் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினைப் படித்து விடுவது வாடிக்கை. அள்ள அள்ளக் குறையாத அற்புதமான சட்ட விளக்கங்கள், பிரச்சினைகளுக்கான தீர்வுகள் என அசத்தும் தீர்ப்புகளைப் படிக்கவில்லை என்றால் எனக்கு நாளே ஆகாது. அதை முடித்து விட்டால் ஏகப்பட்ட கடமைகள் வரிசை கட்டி நிற்கும். ஒவ்வொன்றாய் முடித்து வர இந்த விடிகாலை ஒழுங்கமைவுச் செயல்கள் அன்றைய தொடர் பணிகளை எந்த இடையூறும் இன்றி செவ்வனே செய்து வர உதவிடும்.

நிசப்தம் மணிகண்டனின் வலைப்பூவை தினமும் படித்து விடுவதுண்டு. தன் வேலையையும் செய்து கொண்டு, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை செம்மைப்படுத்தி உதவி வரும் மனப்பாங்குடன் இப்படியான ஆட்கள் பூமியில் அவதரிப்பது அரிதிலும் அரிது. மணிகண்டனை நினைக்கையில் மனது இளகி விடும். அந்த வகையில் தினமும் அவரின் பிளாக்கை படித்து விடுவது வாடிக்கையாகிப் போனது.

இன்றைக்கு அவரின் ஆளுமைன்னா என்னன்னு தெரியுமா? என்ற பதிவினைப் படித்து விட்டு கொஞ்ச நேரம் அமைதியாக உட்கார்ந்து இருந்தேன். மனம் சலனமற்று இருந்தது. சிந்துவின் மனதை என்னால் உணர முடிந்தது. ஆணாக நான் என் உடலால் பட்ட துயரங்களை விட பெண்ணான அந்தப் பெண் பெரும் துயரங்களை அனுபவித்திருப்பார். வார்த்தைகளால் விவரித்து விட முடியாத வலிகள் அவை. என்னாலும் விவரித்து விட முடியாது. வலிகள் தரும் வேதனையை விட விவரிப்பது என்பது மிக அதிக வலியைத் தரும். இந்த உலகில் வலியும், வேதனையும், துன்பமும் இல்லாதவர்கள் தான் ஏது? ஒவ்வொருவரின் வலி அவரவருக்கு மட்டுமே சொந்தம். ஆறுதலான வார்த்தைகள் வேண்டுமெனில் சிறிது வலியைக் குறைப்பது போலத் தெரியலாம். ஆனால் உண்மையில் அது குறைவதே இல்லை. அவரவர் வலியை அவரவர் அனுபவித்துதான் ஆக வேண்டும். பிள்ளைகளானாலும் சரி, மனைவியானாலும் சரி. நம் வலியை அவர்களால் பெற்றுக் கொள்ள முடியுமா? முடியாது.

சிந்துவின் “எல்லோருக்கும்தான் துக்கம் இருக்கு...எனக்கு இருக்கிற துக்கம்தான் பெரிய துக்கம்ன்னு நான் நினைச்சுட்டு இருக்கேன்...உங்க துக்கம்தான் பெருசுன்னு நீங்க நினைச்சுட்டு இருக்கீங்க..இல்லையா?” இந்த வார்த்தைகள் உண்மைதான். துக்கம் என்பது சாதிப்பதற்கான ஊன்றுகோல். வாழ்க்கையைக் கடந்து செல்வதற்கான பாதை. வாழ்வின் நிதர்சனத்தை சுட்டிக்காட்டும் சுட்டி. வாழ்வின் நிலையாமையை வெளிப்படுத்தும் வெளிச்சம். துக்கமும் துயரமும் துன்பமும் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை.

ஒவ்வொருவருக்கும் துக்கமும், தாழ்வு மனப்பான்மையும் இருந்து கொண்டே தான் இருக்கும். சமூகச் சூழல், பொருளாதாரச் சூழல் ஆகியவற்றை முன்னிருத்தி ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு நொடியில் துக்கமும், தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் அவர்கள் வாழ்ந்து முடியும் வரை. இல்லையென்று எவராலும் மறுக்க முடியாது.

எப்போதுமே ஊனமுற்றவனாக இருக்கிறேன் என்ற சிந்தனை வந்ததே இல்லை. என்னிடம் ஒரு சிலர் ”எப்படி சார் சமாளிக்கின்றீர்கள்?” என்பார்கள். ”உங்களால் ஓட முடியும், நடக்க முடியும் என்னால் அது இரண்டும் முடியாது அவ்வளவு தான் விஷயம்” என்றுச் சொல்லி முடித்து விடுவேன்.

சிந்துவின் அச்சீவபிள் டார்க்கெட்டை அவர் அடைந்து விட்டார் என்றால் அவரை வளர்த்த அந்த முகம் தெரியாத பெரியவர்களை விட நான் தான் அதிக சந்தோஷம் அடைவேன். அவருக்கு எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கட்டும். 

தடம் மாறிச் சென்று கொண்டிருக்கிறது. இதோ இணைப்புத்தடம் வந்து விட்டது.

ஐந்தாம் வகுப்பு வரை ஆவணம் அரசினர் துவக்கப்பள்ளியில் தான் படித்தேன். மாமா அப்பள்ளியில் பணி செய்து கொண்டிருந்தார். தரையில் போடப்பட்டிருக்கும் குட்டைப்பலகையில் அமர்ந்து தான் கல்வி. அனவயல் கணேசன் வாத்தியார் தான் பிரபலம், கணக்கு வாத்தியார். வாய்ப்பாட்டு சொல்லவில்லை என்றால் பின்புறம் பழுத்து விடும், உள்ளங்கைகள் இரண்டும் சிவந்து விடும். வாசகம் என்றொரு தோழன் இருந்தான். கணேசன் வாத்தியார் மூன்றாம் வாய்ப்பாடு சொல் என்றால் நன்றாகச் சொல்லிக் கொண்டிருந்தவனுக்கு வரிசை தப்பி விடும். கால்சட்டையிலேயே ஒன்றுக்குப் போய் விடுவான். கைகாட்டியிலிருந்து வரும் விச்சாணி எனும் சிவசுப்ரமணியனுக்கு கால்களும், கைகளும் உதறெலெடுக்க ஆரம்பித்து விடும். ஒரு சில நாட்களில் உப்பு நீர் அபிஷேகத்தையும் நடத்தி விடுவான். விச்சாணி செய்திருக்கும் ஒரு செயல் ஆஹா ரகம். மனிதன் என்றால் மனிதன் அவன் தான். ஏலக்கடை மற்றும் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டும் விவசாயமும் செய்து வருகின்றான்.

துவக்கப்பள்ளிக்கு வடபுறம் சேரிக்குச் செல்லும் தார்ச்சாலை. சாலையின் வடபுறம் குடை போல பரந்து விரிந்து கிடந்த புளியமரம் ஒன்று இருந்தது. மரத்தின் நேர் மேற்கே சற்று வடபுறமாக சிதிலமடைந்து கிடந்த சிவன் கோவில் ஒன்றும் இருந்தது. அந்தச் சிவன் கோவிலில் இருக்கும் ஆவுடையார் சிலையை என் தாத்தா மாணிக்கதேவர் தான் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு தஞ்சாவூர் பக்கம் சென்று வண்டியில் கொண்டு வந்து சேர்த்தாராம். கம்பி போட்ட கதவுக்குப் பின்னால் பெரிய உருவத்துடன் கருகருவென இருப்பார் சிவனார்.  விழா நாட்களில் மாலையும் சந்தனமுமாகச் ஜொலிப்பார். பிற நாட்களில் தனி வாசம் தான். 



இந்தப் புளியமரத்தின் அடியில் தான் விவசாய வேலைகள் பலவும் நடக்கும். கதிர் அடிப்பது, நெற்மணிகளைத் தூசி இன்றி காற்றிலாட்டி சுத்தம் செய்வது, நெற்மணிகளைக் காய வைப்பது. கதிர் அடித்து போர் போட்டு வைத்து பின்னர் போர் அடித்து நெற்மணிகளைச் சேர்ப்பது, அவித்த நெற்மணிகளைக் கொண்டு வந்து காய வைப்பது, எள் அடிப்பது, தூசி தட்டி சுத்தம் செய்வது போன்ற அனைத்து வேலைகளும் இந்த மரத்தின் அடியில் தான் செய்வார்கள். நல்ல இனிப்பு புளியங்காய்கள் கிடைக்கும். பழங்களும் இனிக்கும். 

பள்ளியில் இடைவேளை விட்டால் போதும். மாணவர்கள் அனைவரும் அந்த மரத்தடிக்கு விளையாடச் செல்வதுண்டு. சிலர் மரமேறி உயரத்தில் உட்கார்ந்திருப்பார்கள். ஒரு சிலர் பளிங்கு வைத்து லாக் விளையாடுவர்கள். பெண்கள் நொண்டியாட்டம் விளையாடுவார்கள். கபடி விளையாடுவார்கள். ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். சிலர் அதன் பெருத்த வேர்களுக்கிடையில் துண்டு விரித்து தூங்கிக் கொண்டிருப்பார்கள். ஒரு சிலர் தாயம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஒரு சில கிராமத்துப் பெண்கள் தரையில் பல்லாங்குழி பறித்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். சில மாணவர்கள் கிட்டி விளையாடுவார்கள். பள்ளியில் மணி அடித்ததும் கூடுகளுக்குள் சென்று சேரும் பறவைகள் போல வகுப்புகளுக்குள் சென்று சேர்ந்து விடுவார்கள். அடியேனும் நாள் தவறாது நண்பர்களுடன் விளையாடச் செல்வதுண்டு.

புளியமரத்தின் நேர் வடக்கில் தூண்டிக்காரன் கோவில் உள்ளது. ஆள் உயரத்தில் குதிரையில் கையில் வாளுடன் முறுக்கிய மீசையுடன் தூண்டிக்காரன் உட்கார்ந்திருப்பார். கோவிலை ஒட்டி புதுக்குளம் இருக்கிறது. தூண்டிக்காரன் கோவிலின் நேர் மேற்கே பின்புறமாக பிடாரி அம்மன் கோவில் இருக்கிறது. இங்கு தான் ஊர் திருவிழாவின் போது முளைப்பாரி கொட்டி, பிடாரி அம்மனுக்கு ஆடு வெட்டி பலி கொடுத்து விழா எடுப்பார்கள். 

ஆவணம் கிராமத்து மக்களைத் தாயைப் போல அரவணைத்து ஆதரவளித்தது அந்தப் புளியமரம். சாதாரண மரமில்லை அது. பத்து ஆட்கள் சேர்ந்து கட்டிப் பிடிக்கும் அளவு பெரியது. பெரிய பெரிய கிளைகள் விரிந்து கிடந்தன. அந்தப் புளியமரம் இப்போது அங்கு இல்லை. அது எப்போது வளர ஆரம்பித்தது என்ற வரலாற்றினைச் சொல்ல எவரும் இல்லை. அந்த மரம் பூமியிலிருந்து வெளிவந்து எண்ணற்றோருக்கு உதவிகளைச் செய்தது. காலம் மாற மாற அம்மரமும் காணாமல் போனது.

நேற்று விடிகாலையில் சிவன் கோவிலும், புளியமரமும் நினைவிலாடின. எழுதுவது போல கனாக்கண்டேன். எனக்கு விளையாட இடம் கொடுத்தது அந்தப் புளியமரம். அதன் நிழலில் நான் சந்தோஷமாக விளையாடினேன். அதன் நிழலில் மறைந்து போன சிவபக்தர் வேலாயுதனார் திருச்சிற்றம்பலம் சிவபெருமானைப் பற்றி வீச்செழுத்தில் எழுதிய ஆசிரியப்பா பாடல்களை அச்சுக் கோர்ப்பதற்காக, எனது அழகான கையெழுத்தில் எழுதிக் கொடுக்க இடமளித்தது அந்தப் புளியமரம். அவ்வப்போது பச்சைப்புளியங்காய்களை தின்னக் கொடுத்தது அது. அந்தப் பள்ளிக் கூடத்தில் படித்து முடித்து இன்றைக்கு சுமார் 30 வருடங்கள் கடந்து விட்டன. அந்த மரம் செய்த உதவியை நான் மறந்து விட்டேன். அதுவாகவே எனக்குள் இருந்து கொண்டு தன்னை வெளிப்படுத்திக் கொண்டு விட்டது இன்றைக்கு. அந்தப் புளியமரத்தினை ஊர்க்காரர்கள் மறந்து இருக்கலாம். ஆனால் நான் மறக்கவில்லை. அது என்னை மறக்கவும் விடவில்லை. 

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு 

(குறள் 110 - அதிகாரம்: செய்நன்றி அறிதல்)

மேலே கண்ட குறள் உங்களுக்குப் புரியும் தானே? 


Wednesday, January 18, 2017

கெணத்தடிப்பாம்பு

இவனுக்கும் பாம்புக்கு ஏதோ முன் ஜென்ம பகை இருக்கிறதோ என்று உங்களுக்கு நினைவிலாடும். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. பாம்புகள் இருக்கும் இடத்தில் நான் இருக்கிறேன். அவ்வளவுதான். அதுகள் வசிக்க வேண்டிய இடங்களிலெல்லாம் மனிதர்கள் வசிக்க ஆரம்பித்தால் வேறு எங்கே செல்லும்?  நாய்கள் மாதிரி பாம்புகளும் மனிதர்களுடன் தான் வசிக்கும். வேறு வழி?

வீட்டிற்கு வருகை தரும் மயில்கள் கிட்டத்தட்ட 25க்கு மேல் இருக்கும். வீட்டின் மொட்டை மாடி மீது காலையிலும் மாலையிலும் தோகை விரித்து ஆடிக்கொண்டிருக்கும். வீட்டுக்கு வரும் நண்பர்கள் சாலையில் நின்று வேடிக்கைப் பார்ப்பார்கள். பறவைகள், முயல்கள், காடைகள், காக்காய்கள், குருவிகள், அணில்கள், சிட்டுக்குருவிகள், நாரைகள் ஆகியவைகள் வசிக்கும் இடமெல்லாம் வீடுகள் ஆகி விட்டன. அவைகளும் வேறு வழி இன்றி நம்மோடு வசிக்க ஆரம்பித்து விட்டன. 

எனது சிறு குழந்தைப் பருவத்தில் ஆழ்துளைக்கிணறுகள் இல்லை. கிணறுகளும் குளங்களுமே ஒவ்வொரு கிராமத்தின் தண்ணீர் தேவையை நிறைவேற்றின. அறிவியலின் வளர்ச்சி காரணமாக கிணறுகள் ஆழ்துளைக் கிணறாக வடிவெடுத்தன. குளங்களுக்கான தேவையும் அற்றிப் போக கொஞ்சம் கொஞ்சமாக அவைகள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. மழையும் குறைய ஆரம்பித்தன. குளங்கள் அழிய அழிய பூமியின் தண்ணீர் வற்ற ஆரம்பித்து விட்டன. எந்தளவுக்கு தண்ணீர் வெளியில் எடுக்கின்றோமோ அந்தளவுக்கு தண்ணீர் பூமிக்குள் செல்ல வேண்டுமென்பதை மறந்து விட்டோம். விளைவு இப்போதைய தண்ணீர் பஞ்சம். எதிர்காலத்தில் என்ன ஆகுமோ என்று நினைக்கவே பயமாக இருக்கிறது.

சென்னையில் கேன் வாட்டர் தான் குடிக்கின்றார்கள். நல்ல தண்ணீர் இப்போது கிடைப்பதே இல்லை. கோவையில் நல்ல தண்ணீர் கிடைப்பது அரிதாகிக் கொண்டிருக்கிறது. தண்ணீர் சுத்திகரிப்பு இப்போது பெரிய தொழிலாக மாறி உள்ளது. இந்த ஒவ்வொரு பிரச்சினைக்கும் காரணம் நாமே. வேறொருவரை விரல் நீட்டிக் குற்றம் சொல்ல எவருக்கும் அருகதை இல்லை. ஏனென்றால் தமிழக அரசு கொண்டு வந்த அற்புதமான மழை நீர் சேகரிப்பு திட்டத்தினை இதுவரையிலும் எத்தனை வீடுகளில் செயல்படுத்தி வருகிறோம் என்று யோசித்துப் பாருங்கள். 

எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே இப்போதைய மனிதனின் நோக்கம். கொடுப்பது என்பதை மறந்தே போய் விட்டான்.

கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்னால் கிராமத்துப் பெண்களின் வாழ்க்கை முறையில் ஒரு சிறு துளியை அனுபவக் கதையாக எழுதி உள்ளேன். அது மலைகள் டாட் காமில் வெளியாகி உள்ளது. படித்துப் பாருங்கள்.

இணைப்பைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளவும்.

நன்றி : ஆசிரியர் சிபிச்செல்வன் மற்றும் மலைகள் இணையதளம்.

Thursday, January 5, 2017

பாம்பு உடன் பயணம்

வாசலின் வடமேற்கு மூலையில் மண்வெட்டி இருந்தது. அதை எடுக்கச் சென்ற போது அதன் கீழே சுருண்டு கொண்டு படுத்திருந்தது அது. கட்டம் கட்டமாக நல்ல தடியாக இருந்தது. அலறிய அலறலில் அந்தப் பாம்பு பரலோகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பத்து வயதில் முதன் முதலாக தனியாக பாம்பு பார்த்த அனுபவம் மனதுக்குள் பயத்தினை எழுப்பி விட்டு விட்டது. பாம்பின் மீது அன்றிலிருந்து பயம் தொடர ஆரம்பித்தது.

வீட்டுக்கு மேல்புறம் செடி கொடிகள் மண்டிய நிலம் இருந்தது. அதன் வடமேற்கு மூலையில் பாம்புப் புற்றொன்று இருந்தது. அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்கமாட்டேன். பாம்புப் புற்று இருந்த இடத்திற்கு வடபுறம் என் வகுப்புத் தோழன் பழனிவேலின் தென்னந்தோப்பு இருந்தது. யாரும் அந்தப் பக்கம் வரமாட்டார்கள் ஏனென்றால் அந்தப் பாம்பு புற்றுக்குள் நாகங்கள் இருக்கின்றன என்று சொல்லக் கேள்வி.

ஒரு முறை வீட்டின் பின்புறத்தில் மாடுகள் கட்டி இருக்கும் வேப்பமரத்தடியைத் தாண்டி இருக்கும் முருங்கைமரத்தின் அருகில் காரப்பழம் மரம் இருந்தது. அதில் பழம் பறிக்கச் சென்றேன். அந்த இடத்தில் சிறிய எலுமிச்சை செடி ஒன்றிருந்தது. அதன் அருகில் ஏதோ அசைவது போலத் தெரிந்தது. தூர இருந்தபடி கல்லைத் தூக்கி அந்தப் பகுதியில் வீசினேன். திடீரென்று தலையைத் தூக்கி படமெடுத்து மிரட்டியது நாகப்பாம்பு. அவ்விடத்தில் இருந்த அடியேனை அடுத்த நொடி காணவில்லை. வீட்டுக்குள் வியர்க்க விறுவிறுக்க உட்கார்ந்திருந்தவனுக்கு, ”உனக்கு மட்டும் ஏண்டா இப்படியெல்லாம் நடக்குது” என்ற திட்டு கிடைத்தது. நானா அதுகளைத் தேடிப்போய் வம்பிழுக்கிறேன். அதுகள் அல்லவா என்னுடன் வம்பிழுக்க வருகின்றன? 

நல்ல மழை பெய்து வீட்டின் வடபுறமுள்ள கிணற்றின் வாய் வரைக்கும் தண்ணீர் நிரம்பி இருந்தது. அந்த தண்ணீர் பால் போல இருக்கும். குளிப்பதற்கு தண்ணீர் இறைக்கச் சென்ற போது அதற்குள் நல்ல நீளமான அது குளியல் போட்டுக் கொண்டிருந்தது. பூட்டைக்கயிற்றில் தட்டுக்கூடையை வைத்து அதன் மீது வைக்கோல் போட்டு உள்ளே விட்டபோது நீச்சல் அடித்தது போதும் என்று கருதி தட்டுகூடையில் ஓய்வெடுக்க வந்து விட்டது. மெல்ல கயிற்றை மேலே கொண்டு வந்தார்கள். அது நான் எங்கிருக்கிறேன் என்று பார்த்ததோ என்னவோ தலையைத் தூக்கி ஒரு படத்தை எடுத்து ஒரே குதி, தூரமே இருந்த என்னருகில் வந்து விழுந்தது அந்தப் பாம்பு. முடிகள் சில்லிட்டன எனக்கு. இப்போது நினைத்தாலும் அதே கதைதான். படத்தின் வியூபாயிண்டில் ஏதோ கோளாறு ஏற்பட வேறுபக்கமாய் வேகவேகமாகச் சென்றது. அதற்குள் ஒரே போடு. தோலை மட்டும் தனியாக உரித்துக் கொண்டு சென்று விட்டார் பாம்பு பிடிக்க வந்தவர். 

கோவை வீட்டின் முன்புறம் வேப்பமரம். முன்னாலே இரண்டு தென்னைமரங்கள், பின்புறம் இரண்டு தென்னை மரங்கள், கொய்யாமரம், கருவேப்பிலை, மருதாணிச் செடிகள் என்ற தோட்ட எஃபெக்டில் இருக்கும் வீட்டைச் சுற்றிலும் அதுகள் ராஜ்ஜியம் தான் அதிகம்.

நானும் மனையாளும் வெளியில் சென்று வீடு திரும்பினோம். வாயில் கம்பிகளில் ஒருவர் தொங்கி கொண்டிருந்தார். எதிர்த்த வீட்டுப்பையன் அதை பரலோக பிதாவிடம் அனுப்பி வைத்தான்.

வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். பத்து பனிரெண்டு அடி இருக்கும். ஊர்ந்து வந்து அப்படியே வீட்டைச் சுற்றிக் கொண்டு பின்புறமாகப் போனது. நான் உட்கார்ந்திருக்கிறேன் என்ற பயமெல்லாம் அதுக்கு இருந்ததா என்று தெரியவில்லை. பெட்ரூம் சன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு மயில்கள் ஆட்டம் போடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த போது அந்த பனிரெண்டடி ஜீவன் வேலியோரம் இருந்த இண்டு இடுக்குகளில் தலையை நீட்டி எதையோ தேடிக் கொண்டிருந்தது. பசங்களை அழைத்துக் காட்டினேன். நாங்கள் பார்ப்பதை கொஞ்சம் கூட சட்டை செய்வதாகத் தெரியவில்லை.

மனையாள் மேல் நிலைத்தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற மோட்டார் போடச் செல்லும் போது அருகிலிருக்கும் சின்னக் குச்சியின் மீது ஏறி தலையை நீட்டி அம்மணியைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு பின்னர் எங்கோ சென்று விட்டது. பயத்தில் முகமெல்லாம் வெளிறிப் போய் வெடவெடத்துக் கொண்டிருந்தார்.

இரவு பால்காரர் பால் ஊற்ற வரும் போது சின்னஞ் சிறிய அதுவை அம்மணி தெரியாமல் மிதித்தே முக்தி அடைய வைத்து விட்டார். அது என்ன பாம்பு? மிதித்ததால் விஷம் ஏதும் பட்டிருக்குமோ என்ற பயத்திலே இருந்தார். நானோ தூங்குவதாக பாவனை செய்து கொண்டு இரவுகளில் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நல்லவேளை ஒன்றும் ஆகவில்லை.

சமீபத்தில் மனையாளுக்கு கையில் பிராக்சர் ஏற்பட்டதால் பூச்சியூர் வைத்தியரிடம் வாரா வாரம் சென்று வந்து கொண்டிருந்தோம். வைத்தியரைப் பார்த்து விட்டு வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதிக்குச் சென்று வருவது வாடிக்கை. ஆசிரமத்திற்குச் செல்லும் போது அங்கு வரும் மெய்யன்பர்களுக்கு உணவு சமைக்க கொஞ்சம் காய்கறிகளை வாங்கிச் செல்வேன். கடந்த மாதம் கையை நீவி விடுவதற்காக பூச்சியூர் சென்றோம். ஆசிரமத்திற்காக வடவள்ளி உழவர் சந்தையில் கொஞ்சம் காய்கறிகளை வாங்கிக் கொண்டு பூச்சியூர் சென்றோம். 

பூச்சியூர் பஸ் ஸ்டாண்டில் அமர்ந்து கொண்டு ஹோண்டா ஆக்டிவாவின் பின் சீட்டைத் திறந்து காய்கறிகளை சீட்டின் அடியில் வைக்கலாம் என்று நினைத்து திறந்தபோது சீட்டின் லாக் செய்யுமிடத்தில் சுருண்டு படுத்திருந்தது அது. வீட்டிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரம். அந்தப் பாம்பு என்னுடன் கூடவே வந்திருந்திருக்கிறது. ஆடவில்லை அசையவில்லை. நிஷ்டையில் இருந்தது அது. கொஞ்சம் அதிர்வு ஏற்பட்டாலும் பாம்புகள் வெளியில் சென்று விடும். ஆனால் இந்தப் பாம்போ யோகத்தில் இருந்தது. மனதுக்குள் சிலீர் என்றது.  

அங்கிருந்த சலூன்காரர் கம்பினைத் தூக்கிக் கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும், ”அய்யோ அது சுருட்டை” என்றுச் சொல்லி தூரப்போய் விட்டார். பின்னர் வயதான போலீஸ்காரர் அதன் நிஷ்டையைக் கலைத்து வெளியில் தூக்கிப் போட்டு மோட்சத்துக்கு அனுப்பி வைத்தார். மனையாள் பதறிக் கொண்டிருந்தார். அந்த சிலீர் ஏற்பட்ட பிறகு நடுக்கமாக இருந்தது. அந்தச் சுருட்டை இருக்கிறதே தலையைத் தூக்கி ஒரு சீறு சீறி விட்டு செல்லமாய் கடித்து வைப்பாராம். கடுமையான விஷம் கொண்டவராம் அந்தச் சுருட்டை. 

ஆக்டிவாவை சர்வீஸ் செய்து பாலீஸ் போட்டுக் கொண்டு வந்து விட்டேன். ஆனாலும் தினமும் வண்டியை எடுக்கும் போது சுருட்டையின் நினைவு வருவதும் பின் சீட்டினை திறந்து பார்ப்பதுமாய் இருக்கிறேன். 

காதலி மட்டும் தான் எப்போதும் நினைவிலிருப்பாள் என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனம்? என்று தினமும் நினைத்துக் கொள்வதுண்டு. பாம்பென்றால் படையே நடுங்குமாம். நானென்ன சுண்டைக்காய்!

Wednesday, January 4, 2017

நட்சத்திரப்படி பெயர் வைப்பது நல்லதல்ல

இது கலிகாலம். பணம் மட்டுமே கோலோச்சும் உலகம். பெண்களிடமிருந்து வெட்கம், நாணம் என்ற உணர்ச்சி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய் விடும். திருடன் பணம் வைத்திருந்தால் அவனுக்கு தான் முதல் மரியாதை கிடைக்கும்.  பணத்தினை வைத்து தான் மனிதன் அளவீடு செய்யப்படுவான். நல்ல குணம், நல்ல உள்ளங்கள், நல்ல செயல்களை உலகம் கேனத்தனம் என்று சொல்லி விடும். பிழைக்கத்தெரியாதவன் என்ற பட்டமும் கொடுக்கும். 

ஜோசியக்காரர்களுக்கும், மாந்திரீக ஆட்களுக்கும் அதிக மரியாதை கிடைக்கும். பூசாரிகளுக்கு மிக அதிக மரியாதையைக் கொடுப்பார்கள். சூட்சுமான சில விஷயங்களைக் கற்றுக் கொண்டவர்களின் காலடியில் கொண்டு போய் பணத்தினைக் கொட்டும். புத்தி மாறிப்போய், சுய நலம் மிகுந்து நன்மை தீமைகளைப் பற்றி கண்டுகொள்ளாமல் இன்றைய நாளுக்கான வாழ்க்கையை பற்றி மட்டுமே சிந்திக்கும். எவன் எக்கேடு கெட்டால் என்ன? எனக்கு நானும் என் குடும்பமும் மட்டுமே முக்கியம் என கருத வைக்கும். சாலையில் அடிபட்டு கிடந்தால் கூட கண்டும் காணாமல் ஓடும். ஒவ்வொருவரும் தனக்கான சுகத்தை மட்டுமே யோசிப்பார்கள்.

வெகு சமீபத்தில் நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவருடன் பேசிக் கொண்டிருந்த போது கிடைத்த பகீர் விஷயம் இது. இப்போதும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டு சகோதரர்களிடையே  நிகழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை இது. 

அப்பா இறந்த பிறகு அண்ணனும் தம்பியும் பாகம் பிரித்துக் கொண்டார்கள். பெரும் சொத்து இருவருக்கும் கிடைத்தது. வேண்டாம் என்று பிரித்துக் கொடுத்த தம்பியின் ஒரு பகுதி சொத்து அருகில் சாலை வந்ததால் பெரும் விலை மதிப்பு கொண்டதாகி விட அண்ணனுக்கு கடும் எரிச்சல். தம்பி நம்மை விட பெரிய பணக்காரன் ஆகி விடுவானே என்ற பொறாமையில் தனக்கு மிகவும் நெருக்கமான மாந்திரீகர் ஒருவரைச் சந்திக்கிறார். மாந்திரீகர் தம்பிக்கு சில காரியங்களைச் செய்தால் சொத்தினை உங்களிடமே கொடுக்கும்படி செய்கிறேன் என்றுச் சொல்ல அதற்கான வேலைகளைச் செய்யும்படி அண்ணன் கேட்டுக்கொள்கிறார்.

தொடர் மாந்திரீக வேலைகளால் தம்பிக்கு உடல் நிலை சரியில்லாமல் போகின்றது. தம்பியின் மனைவி பிரிந்து போகின்றார்.  பிள்ளைகள் அம்மாவுடன் செல்கின்றார்கள். தம்பி உணவுக்காக அண்ணனிடம் கையேந்துகிறார். சொத்து பத்துக்கள் இருந்தாலும் உடனடியாக எதுவும் செய்ய முடியாத நிலையில் பாதிப்பு அதிகமாகின்றது. தம்பிக்காக செய்யும் செலவுகளுக்காக அண்ணன் தம்பியிடம் சொத்தினை எழுதிக் கேட்கிறார். தாத்தாவின் சொத்துக்களை விற்க முடியாது என்ற தகவலைத் தாங்கி பிரச்சினை தம்பியின் மனைவி மூலமாக வக்கீல் நோட்டீஸ் மூலம் வருகிறது.

தம்பியின் மகன் படித்த புத்திசாலியாக இருக்கிறான். அண்ணன் மீண்டும் மந்திரவாதியை அணுக, அவரோ தம்பி மகனின் பிறந்த நேரம், தேதி போன்றவற்றை கேட்கிறார். சொத்து பிரித்தவுடன் தம்பியிடம் எந்த வித ஒட்டும் உறவும் கொள்ளாத அண்ணனுக்கு இது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. மந்திரவாதி ’கவலையை விடுங்கள், முட்டாள் சனங்க இப்போ அதிகம் இருக்கின்றார்கள்’ என்றுச் சொல்லியபடியே தம்பி மகனின் பெயரைக் கேட்க அடுத்த சில நொடிகளில் தம்பி மகனின் ஜாதகமே கையில் கிடைக்கிறது. இது சரிதானா என்று ஆராய்ந்து தரும் படி மாந்திரீகர் கேட்க அண்ணன் தன் சதியை தொடர்கிறார். திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக புரோக்கர் மூலமாக அணுகி தம்பி மகனின் ஜாதகத்தைப் பெறுகிறார். மந்திரவாதி கொடுத்த ஜாதக கணிப்பும், புரோக்கர் மூலமாக கிடைத்த ஜாதகமும் அச்சு அசல் ஒன்றே. இது எப்படி என்று தெரிந்து கொள்ள அண்ணன் மீண்டும் மந்திரவாதியை அணுக அவர் ’இது ஒன்றும் பெரிய விஷயமில்லை, இப்போதெல்லாம் நட்சத்திரப்படி தானே மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பெயர்களை வைக்கின்றார்கள். அதனால் எளிதாக கண்டு கொள்ள முடியும்’ என்றுச் சொல்கிறார்.

’சில ஜோதிட கணிப்பாளர்கள் பிரசன்னம் பார்க்கிறேன் என்றுச் சொல்லி ஜாதகத்தை அப்படியே அலசுவார்கள். இந்த விஷயம் தெரியாத மண்டுகள் ஜோசியக்காரரை கடவுள் என போற்ற ஆரம்பித்து விடுவார்கள்’ என்றுச் சொன்னார் அந்த மாந்திரீகவாதி.

திடீரென்று தம்பியின் மகன் தனக்கு ஏதோ நேர்ந்ததை புரிந்து கொள்கிறான். ஒரு சில அறிகுறிகள் மூலம் தன் குடும்பத்திற்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளை அந்தப் பையன் அட்சர சுத்தமாகப் புரிந்து கொண்டு மலையாள தேசத்து ஆட்களைப் பிடிக்கின்றான். தொடர்ந்து தன் பெரியப்பாவின் வேலைகளைக் கண்டுபிடித்து தன் அப்பாவை அந்தப் பாதிப்பிலிருந்து மீட்கிறான், மீண்டும் குடும்பம் ஒன்று சேர்கிறது. அதைக் கண்டு அண்ணனுக்கு கடும் கோபம் ஏற்படுகிறது. எழுதிக் கொடுக்கிறேன் என்ற சொன்ன தம்பி ஆரோக்கியமாக நடமாடுவதைக் கண்டு கோபம் கொள்கிறான். மீண்டும் மந்திரவாதியை அணுக முயற்சிக்கும் நேரத்தில் மலையாள தேசத்து ஆட்களின் கைங்கரியத்தால் கை கால்கள் இழுத்துக் கொள்கின்றன. பெட்டில் தான் எல்லாமுமாக கிடக்கிறார். தம்பி பத்து வருடங்களாக அனுபவித்த வந்த கொடும் பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறார். அண்ணன் சந்தித்த அதே மாந்திரீகரைச் சந்தித்து அவர் செய்த அத்தனை விஷயங்களையும் நீக்குகிறார் தம்பி. அண்ணனிடமும் காசு வாங்குகிறார் தம்பியிடமும் காசு வாங்குகிறார் மாந்திரீகர். அது அவர் தொழில் தர்மம் என்றாராம் தம்பியிடம். அந்த தம்பிதான் என்னுடன் பேசிக் கொண்டிருந்தவர்.

விஜய் மல்லையா கடன் வாங்கி தொழில் செய்வது தொழில் தர்மம் என்றால் கட்டாமல் கம்பி நீட்டுவதும் தொழில் தர்மம் தான்.

அவர் சொன்ன பல மாந்திரீக விஷயங்களை எழுத ஆரம்பித்தால் நடுக்கம் வரும். அந்தளவுக்கு கடும்பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் என்றுச் சொன்னார். எனக்கு கடவுள் மீது தான் நம்பிக்கை என்றாலும் இது போன்ற விஷயங்களில் நம்பிக்கை இல்லை. ஆனால் என் சிறு வயதில் நடந்த ஒரு சம்பவம் எனக்குள்ளே இன்னும் பதியமிட்டிருக்கிறது.

என் சித்தி, அம்மாவின் தங்கை இருந்தவாறு திடீரென்று கைகால்கள் இழுத்துக் கொண்டு வாயில் நுரை தள்ளி காக்காவலிப்பு போல கிடப்பார். திருமணமாகி மூன்றாவது வருடத்தில் ஆரம்பித்தது இந்தப் பிரச்சினை. நடு இரவில் கயிறை எடுத்துக் கொண்டு மரத்தில் தூக்குப் போட பல தடவை முயற்சித்து காப்பாற்றினார்கள். சின்னம்மா அடிக்கடி இவ்வாறு ஆரம்பிக்க, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியாரை வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். முதன் முதலாக வீட்டுக்கு வந்தவர் கையில் சிலுவைக் குறி தாங்கிய செயினை கையில் வைத்துக் கொண்டு வீட்டு மனையைச் சுற்றி நடக்கிறார். கூடவே அனைவரும் செல்ல இரண்டு இடங்களில் அந்தச் செயின் தானாகவே சுற்ற ஆரம்பித்தது. இரண்டு இடங்களிலும் நான்கு அடி ஆழத்தில் மண்ணால் சீலை செய்யப்பட்ட ஒரு வஸ்து கிடைக்கிறது. அதை எடுத்து உடைத்து என்னவோ செய்தார்கள். அதன் பிறகு சின்னம்மாவுக்கு காக்கா வலிப்பும் வருவதில்லை, இரவில் கயிறையும் தூக்கிக் கொண்டு ஓடமாட்டார்கள். இந்தச் சம்பவம் என் வாழ்வில் நடந்த ஒன்று.

பகுத்தறிவுக்குத் தொடர்பே இல்லாத, அறிந்து கொள்ள முடியாத பல்வேறு மர்மங்களை உள்ளடக்கியது இந்த உலகம். உடனே இது சுத்த பைத்தியக்காரத்தனம் என்று நினைக்க வேண்டாம். சூரியனைப் பார்த்து திரும்பும் சூரியகாந்தி, தொட்டால் சுருங்கும் தொட்டால் சிணுங்கி போன்ற தாவரங்கள் நமக்குப் புரிந்து கொள்ள முடியாத அமைப்புக் கொண்டவை. இது போன்ற இன்னும் எத்தனையோ பகுத்தறிவுக்கு ஒப்பாதவை இருக்கின்றன.

ஜாதகப்படி, நட்சத்திரப்படி பெயர் வைப்பது எல்லாம் கடந்த பத்து பதினைந்து வருடங்களாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றன. நம் முன்னோர்கள் எவரும் ஜாதகம் பார்த்து நமக்கு பெயர் வைக்கவில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

சொல்ல விரும்பினேன் எழதி விட்டேன். 

Monday, January 2, 2017

பல்லாங்குழி தாயம் பம்பரம்

அரையாண்டு விடுமுறையில் பசங்க இருவருக்கும் உருப்படியாக ஏதாவது கற்றுக் கொடுக்கலாம் என்ற நினைப்பில் பல்லாங்குழி, தாயம், பம்பரம் ஆகியவை வாங்கிக் கொடுக்க முயன்றேன். 

பல்லாங்குழியை கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வாங்கி விட்டேன். ஆனால் புளியங்கொட்டைக்கு எங்கே போவது?  முள்ளங்காடு வனத்தில் மரத்துக்கு மரம் திரிந்து குரங்குகள் தின்று போட்ட புளியங்கொட்டைகளை பொறுக்கி எடுத்து வந்தேன்.  சொரசொரப்பான பல்லாங்குழியை தேய்க்கும் காகிதம் வைத்து தேய்த்து அதில் வார்னீசு அடித்து காய வைத்து ஒரு வழியாக பெண்ணுக்கும் பையனுக்கும் சொல்லிக் கொடுத்தேன்.

ஒரு வாரமாக காலையிலிருந்து இரவு வரை டிவி ஆஃப் செய்து இருந்தது. இருவரும் டிவி பக்கம் போகவே இல்லை. அடுத்து தாயக்கட்டைக்கு அலைந்து திரிந்து ஏதோ ஒரு ஸ்டோரில் பிடித்து விட்டோம். பிறகு தாயக்கட்டங்கள் உருவாக்கி விளையாடக் கற்றுக் கொடுத்தேன். தாயம் தாயம் என்று ஒரே சத்தம்.

செம்மேட்டில் பசங்க பம்பரம் சுற்றிக் கொண்டிருந்தார்கள். விசாரித்து இரண்டு பம்பரங்களை வாங்கிக் கொண்டு வந்து சுற்றி விடலாம் என்று முயற்சித்தால் தலைகீழாக சுற்றியது. மனையாளோ நமுட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருந்தாள். பசங்க இருவரும் என்னப்பா இது? என்று கேள்வி கேட்டு டென்சன் படுத்திக் கொண்டிருந்தார்கள். கடையில் பம்பரக்கயிற்றை சிறிதாக நறுக்கிக் கொடுத்து விட்டான். அதைக் கண்டுபிடித்து சற்றே நீளமான கயிறாக எடுத்து சுற்றி விட்டால் ’உம்..உம்’ என்று சத்தத்துடன் பம்பரம் அருமையாக சுற்றியது.

பசங்க இருவரும் பம்பரம் சுற்றி விட முயற்சித்து காலையில் ஆரம்பித்து மதியம் போல பம்பரம் விட பழகிக்கொண்டனர்.

ஒரு வழியாக மூன்று விளையாட்டுக்களையும் பசங்களுக்கு கற்றுக் கொடுத்த சந்தோஷம். வீட்டில் கார்ட்டூன் சானலும் ஓடவில்லை, டிவியும் ஓடவில்லை. அதுபாட்டுக்கு இருந்தது. தெருவில் நின்று பம்பரம் விட்டுக் கொண்டிருந்தார்கள். 

நிவேதிதா பம்பரம் விடுவது எப்படி என்று சொல்லித் தரும் வீடியோ கீழே.


உங்கள் பசங்களுக்கும் கற்றுக் கொடுங்கள்.  நம் பாரம்பரிய விளையாட்டுக்கள் எத்தனையோ இருந்தன. எனக்குத் தெரிந்து இவை மூன்றும் நான் அடிக்கடி விளையாடியவை. கிட்டிப்புள், பளிங்கு விளையாட்டுக்களைக் கற்றுத் தர வேண்டும். 

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Wednesday, December 28, 2016

மாமனார் மருமகன்

உலக மக்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் அதற்கென்று சில காரியங்களைச் செய்தால் தான் அந்த மாபெரும் சிம்மாசனம் கிடைக்கும். கிடைத்த சிம்மாசனத்தை தக்க வைக்க பெரும் போராட்டங்களை செய்தால்தான் அந்த அடையாளம் தொடர்ந்து நீடிக்கும். இல்லையென்றால் நாளடைவில் மறந்து போவார்கள். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சினிமாக்காரர்களுக்கு முதல் சிம்மாசனம் கிடைக்கும்.

சினிமாவை தன் வாழ்வியலோடு வாழ்க்கைப் பாதையாக மாற்றிய சமூகம் இந்த உலகில் உண்டென்றால் அது நம் தமிழகம் தான். ஆந்திராவையும் விட்டு விட முடியாது. சினிமாவில் நடிக்கும் ஹீரோக்கள் நாட்டை ஆள வந்து விடுகின்றார்கள். நாட்டையே தூக்கிக் கொடுத்து விடும் அளவுக்கு சினிமா ஹீரோக்களுக்கு சிம்மாசனம் கொடுத்திருக்கிறோம்.

சினிமாவில் ஹீரோ போடும் சட்டை,  அவர் தலைமுடியில் செய்யும் மாற்றம், ஹீரோயின் கட்டும் சேலை முதற்கொண்டு தமிழ் சமுதாயம் விடாது தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்துகிறார்கள். தன் பிள்ளைகள் இன்னார் ரசிகன் என்று சொன்னால் புளகாங்கிதமடைகின்றார்கள். அந்தளவுக்கு சினிமாவுக்குள் தங்கள் வாழ்க்கையை புகுத்திக் கொண்டிருக்கும் சமூகம் தமிழர் சமூகம்.

தானும் கெட்டு தன் தலைமுறைகளையும் கெடுத்து அழிவின் பாதைக்குத் தள்ளிக் கொண்டிருக்கும் ஒரே ஒரு சமூகம் தமிழர் சமூகம் மட்டுமே. இதில் எவருக்காவது மாற்றுக்கருத்து இருந்தால் பின்னூட்டமிடவும். பதில் தருகிறேன். (கம்யூனிஸ்ட்வாதிகள் ஏன் சினிமா ஹீரோ கோடிக்கணக்கில் சம்பளம் பெறுவதைப் பற்றி ஒரு கேள்வி கூட கேட்கமாட்டேன் என்பது எனக்குப் புரியவே இல்லை. கம்யூனிஸம் என்பது சினிமாத் தொழிலாளிகளுக்கு இல்லையா?)

எழுத்தாளர்களுக்கு அந்த சிம்மாசனம் கிடைத்து விடுமா? என்றால் இதுவரைக்கும் யாருக்கும் கிடைக்கவில்லை. சினிமாவில் வசனம் எழுதலாம், சில கில்லாடி எழுத்தாளர்கள் சினிமா இயக்குனர்களானாலும், ஹீரோக்களுக்கு கிடைக்கும் சிம்மாசனம் போல அவர்களுக்குக் கிடைத்து விடுவதில்லை.

இரண்டு வருடங்களாக சாரு நிவேதிதாவின் எழுத்தினை முதல் வாசகனாகப் படித்து, பதிவேற்றி வந்த பழக்கத்தின் காரணமாக சுயசரிதைத் தன்மையான எழுத்துக்களே எனக்கு வசமாகி இருக்கின்றன. ஆனால் அந்த சுயசரிதை தன்மை எழுத்துக்களை எழுத்துலகம் அங்கீகரிப்பதில்லை என்பதை கொஞ்ச காலமாக அனுபவித்து வருகிறேன். மனதை வருடும் சம்பவங்களாக பல பத்திரிக்கைகளைக்கு எழுதி அனுப்பினேன். அனைத்தும் திரும்பி வந்து விட்டன. ஒரு பத்திரிக்கை ஆசிரியர் போனில் அழைத்து நீங்கள் எழுதுவது நன்றாகத்தான் உள்ளது. ஆனால் இது எழுத்து வடிவமல்ல என்றுச் சொல்லி நான் எழுதும் சுயசரிதைத் தன்மையான பதிவுகளை சிறுகதைகளாக்குவது எப்படி என்று விவரித்தார். ஆச்சரியமாக இருந்தது. 

(சாரு நிவேதிதாவின் பழைய இணைய வடிவமைப்பு பக்கம்)

சுயசரித பதிவுகளைப் படிக்கும் போது எழுதுபவர்களுடன் மன நெருக்கம் உண்டாகும் உணர்ச்சி இருக்கும். சிறுகதை படிக்கும் போது வெளியில் இருந்து வாசிப்பது போல இருக்கிறதே என அவரிடம் வினவினேன். அந்த உணர்ச்சி வேறுபாடு எழுதப்படும் போக்கில் இருக்கும் குறை என்றுச் சொன்னார்.

என்னை ஒரு நாவலைப் படிக்கச் சொன்னார். அந்த நாவல் பா.சிங்காரத்தின் ’புயலிலோ ஒரு தோணி’ மற்றும் ’கடலுக்கு அப்பால்’. மூன்று வாரங்களாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு பக்கங்களுக்கு மேல் தாண்ட முடியவில்லை. அப்படியே உள் இழுத்துக் கொண்டு விடுகிறது அந்த நாவல். மீள நேரமாகின்றது. 

தமிழக நாவல் வரிசையில் இந்த நாவல் எவராலும் மறக்கமுடியாத நாவல் என்றாலும் பா.சிங்காரத்தை பெரும்பான்மையான தமிழர்களுக்குத் தெரியவே தெரியாது. ஆக மக்களின் மனதில் எப்படி எழுதினாலும் சிம்மாசனம் என்பது கிடைக்காது என்பது தெரிந்து போயிற்று.

ஒரு நண்பர் சொன்னார், தங்கம் எழுதுவதில் ஒரு கணக்கு இருக்கிறது. அதில் சிறந்தவர் ஜெயமோகன் பின்னர் ராமகிருஷ்ணன். உட்லாக்கடி எழுத்துக் கணக்குப்படி எழுதுபவர்கள் கமர்ஷியல் எழுத்துக்காரர்கள். ஒரு சிலர் ஏதோ ஒரு பவுண்டேஷனிடம் காசு வாங்கிக் கொண்டு எழுதுவார்கள். அவர்கள் ஒன்றிரண்டு புத்தகங்களோடு நின்று போவார்கள்.

பல வெற்றிகரமான எழுத்தாளர்களைப் பார்த்தீர்கள் என்றால் அவர்கள் அனைவரும் வருமானத்துக்கு குறைச்சல் இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள். இல்லையென்றால் ஏதாவதொரு கட்சி, பெரும் பணக்காரன் ஆகியோர்களை நண்பர்களாய் வைத்திருப்பார்கள். இந்தக் கணக்குச் சரியாக இருந்தால் தான் தொடர்ந்து எழுத முடியும். லெளகீக வாழ்க்கையின் சிக்கல்களில் சிக்கிக் கொள்ளா வண்ணம் இருப்பவர்களால் தான் தொடர்ந்து எழுதி வெற்றிகரமாக வலம் வர முடியும். 

அதன் படி இப்போது தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்கள் என்று (வேறு எவரும் எழுதினால் எளிதாக படைப்புச் சரியில்லை என்று மறுதலித்து விடுவதும், ஏதோ இவர்கள் தான் எழுத்துலகத்தின் கடவுள்கள் போல கருதிக் கொண்டு பிற எழுத்தாளர்களை விமர்சிக்கும் காமெடியும் தொடர்ந்து எழுத்துலகத்தில் நடைபெற்றுக் கொண்டே வருவதை நாமெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம்) கருதிக் கொள்வோர்கள் உண்டல்லவா? என்றும் சொன்னார்.

நண்பரின் கூற்றுப்படி பார்த்தால் ஏதோ ஒரு பின்புலம் இருப்பவர்களால் தான் எழுத்துலகில் தொடர்ந்து பயணிக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள முடியும். அந்தப் பின்புலங்களின் மனசு நோகா வண்ணம் எழுத வேண்டும் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

சினிமாவுக்குள் அரசியல் என்றால் எழுத்துலகில் அதை விடப் பெரிய அரசியல் இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. ஒருவனின் குழந்தையை இன்னொருவன் பார்த்து கண் இப்படி இருக்கிறது, கால் இப்படி இருக்கிறது, கலர் சரியில்லை என்று விமர்சிப்பது போலத்தான் பிறரின் படைப்பை விமர்சிப்பது. அதை எவரும் புரிந்து கொள்வார் இல்லை. அவரவர் குழந்தை அவரவருக்குப் பெரிது. இதில் குறையென்ன காண்பது?  ஆக எழுதுவதில் ஒரு கணக்கு இருக்கிறது என்பது புரிந்தது. அந்தக் கணக்கின் விடையைப் போட்டு விட்டால் எழுத்துலகத்தின் கடவுள்களில் நாமும் ஒருவராக மாறி விடலாமா என்று யோசித்தால் வரிசை கட்டி நம் முன்னே நிற்கும் எழுத்தாளர்களைப் பார்த்தால் திகிலடிக்கிறது. நாமாவது அந்த வரிசைக்கு வருவதாவது? சாத்தியமே இல்லாத சாத்தியம். இருந்தாலும் ஒரு நப்பாசை. நரி திராட்சைக்கு ஆசைப்பட்டது போல.

ஆகையால் நானும் பலப் பல புத்தகங்களைப் படித்து மெருகேற்றி சிறுகதைகள் எழுத ஆரம்பிக்கலாம் என்று உட்கார்ந்தால் தொடர்ந்தாற் போல நான்கு பக்கங்களுக்கு மேல் எழுதவே முடியவில்லை. எழுதியதை மீண்டும் படித்துப் பார்க்கும் போது, பாதிக்குப் பாதி காணாமல் போய் விடுகிறது. இப்படியே தொடர்ந்து விடிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை முயற்சிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. ஆறு மணிக்குப் பிறகு காய்கறி நறுக்கிச் சுத்தம் செய்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அன்றைய உணவு ஈயமாகி விடுகிறது.

அதன் பிறகு லெளகீக வாழ்க்கைப் பயணத்தின் தொடர்ச்சி நிகழ ஆரம்பித்து விடுகிறது. அடுத்த நாள் காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை மீண்டும் இதே கதை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மலைகள் இணைய இதழில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார்கள். இனி தொடர்ந்து பல இதழ்களில் வெளியிடலாமென்பதற்காக உலகத் தரத்துடன் (உலக  நாயகன் பாதிப்பு) எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இன்னொரு பக்கம் ஓஷோவும், பா.சிங்காரமும், சுஜாதாவும், ஜட்ஜ் பலராமய்யாவின் முப்பு குரு விஷயமும் இழுத்துக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமின்றி விகடன் குழுமத்தின் வயிற்றெரிச்சல் செய்திகள் வேறு இழுத்துக் கொண்டிருக்கின்றன. ஆகவே மாமனார் மருமகன் பதிவை இன்னொரு நாள் எழுதுகிறேன். 

இணையத்தில் படித்த இந்தக் கவிதையோடு இந்தப் பதிவை முடித்து வைக்கிறேன். இருந்தாலும் அந்த எழுத்துக்கடவுள்கள் வரிசை மட்டும் கண்ணை உறுத்திக் கொண்டே இருக்கிறது. குஷ்பூவுக்கு கோயில் கட்டியது போல எவராவது ஒருவர் எனக்கு ஏதோ ஒரு மூலையில் கல்லாவது வைத்து மஞ்சள் தடவி அதன் மீது குங்குமம் வைத்து வழிபடமாட்டாரா என்ற ஆசை துரத்து துரத்துவென துரத்திக் கொண்டிருக்கிறது.

கொற்றவை சிம்மாசனம் (கவிதை)
------------------------------------------------------

சிகப்பு கம்பளம் சிம்மாசனம்
சிதரடிக்கும் நட்சத்திரம் சிம்ம சொப்பணம்
செந்தமிழ் கொற்றவை கூர்வாளடா
நுனி நாக்கில் ஆங்கிலத்தைக் கொண்டாளடா

சிந்தையில் சிகரத்தைச் செலுத்தி நல்லறிவுடன்
பாட்டனும் பூட்டனும் பேசிய தமிழ்மொழி
அகரத்தின் ஆனிவேரில் ஓல்கா செம்புகழுடன்
பட்டினியில் பட்டறிவு பூசிய செம்மொழி
வென்றிட போர் விதம் பலவுண்டு
தலை நின்றிட சொற்குணம் கைகொண்டு
நித்தய நற்சோறு காணோம் இன்று

கலையில் கரைந்தவை நிற்பவை நிலைத்தவை
ஏட்டிலே வெடித்தவை கற்றவை சுரந்தவை
பாட்டிலே படர்ந்தவை கொற்றவை கொணர்ந்தவை
போரிட்டு முடித்துவை தூற்றிட தொடர்ந்து செய்
சிகப்பு கம்பளம் சிம்மாசனம்
சிதரடிக்கும் நட்சத்திரம் சிம்ம சொப்பணம்
செந்தமிழ் கொற்றவை கூர்வாளடா
நுனி நாக்கில் ஆங்கிலத்தைக் கொண்டாளடா

நன்றி: பூந்தளிர் ஆனந்தன்

Wednesday, December 14, 2016

ஆலங்கட்டி மழை

கோவையில் கடுமையான குளிர். உடல் சில்லிடுகிறது. ஆனால் மழைதான் வரமாட்டேன் என்கிறது. நேற்று காலையில் விளாங்குறிச்சிப்பக்கம் நனையும் அளவு தூறல் விழுந்தது. பின்னர் நாள் முழுதும் மேகமூட்டமாய் இருந்தது. அவ்வப்போது வெளியில் வந்து கருக்கி கலைந்து கொண்டிருந்த மேகங்களைப் பார்ப்பதும் பின்னே வீட்டுக்குள் செல்வதுமாய் இருந்தேன். ஆளை அடிக்கும் மழை பெய்தால் நன்றாக இருக்கும். மழை பெய்யும் போது கையை நீட்டிக் கொண்டு சேரில் அமர்ந்து கொள்வதுண்டு. கொட்டும் மழையை ரசிக்க ஒரு மனசு வேண்டும். ஆனால் வானமோ ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன பணக்காரன் ஏழை கதை போல ஏமாற்றிக்கொண்டிருந்தது.

அது என்ன கதை என்கின்றீர்களா? சொல்கிறேன்.

ஒரு நரி பெரிய ஆடு ஒன்றுடன் நட்புக் கொண்டதாம். நரி ஆட்டுடன் நட்புக் கொள்ள பெரிய காரணம் ஒன்றும் இல்லை. ஆட்டில் இரண்டு பெரிய கொட்டைகள் தொங்கிக் கொண்டிருப்பதை நரி பார்த்து விட்டது. அது எப்போதாவது வெளியில் விழுந்து விடும். நன்றாகச் சாப்பிடலாம் எனவும் அது எப்போது விழுமோ தெரியாது ஆகவே ஆட்டுடன் நட்புக் கொண்டு அதன் பின்னாலே திரிந்தால் கொட்டைகள் இரண்டும் விழும்போது சாப்பிட்டு விடலாம் என்ற ஆசையில் அதனுடன் சுற்றிக் கொண்டிருந்தது. கொஞ்ச காலம் சுற்றிக் கொண்டிருந்து விட்டு கொட்டைகள் எப்போது விழுவது நாம் எப்போது சாப்பிடுவது? என்று நினைத்துக் கொண்டே ஆட்டுடனான நட்பை விலக்கிக் கொண்டு சென்று விட்டது. ஆட்டின் கொட்டைகள் எப்போது விழுவது எப்போது நரி சாப்பிடுவது? நடக்கின்ற காரியமா? இதே போலத்தான் பணக்காரனுடன் நட்புக் கொள்வதும் அவன் உதவுவான் என்று நினைப்பதும். கதை புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். மழை இப்போதெல்லாம் பணக்காரன் போலத்தான் நடந்து கொண்டிருக்கிறது. 

மழையும் இதே கணக்காக கோவையில் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கின்றது. என் நினைவுகளில் ஊடாட தொடங்கின மழைக்கால அனுபவங்கள்.

ஆவணம் கிராமத்தில் கொஞ்சம் வயக்காடுகள் உள்ளன. என் சிறு வயதிலெல்லாம் சைக்கிள் அல்லது மாட்டு வண்டிகளில் தான் பயணம் செய்யலாம். இப்போது இருப்பது போல வீட்டுக்கு இரண்டு மோட்டார் வாகனங்கள் அப்போதெல்லாம் இல்லை. உரம் போட, மருந்து அடிக்க, களை பறிக்க இப்படி சனி அல்லது ஞாயிறுகளில் வேலை இருந்தால் நானும் வண்டியோடு வயலுக்குச் செல்வதுண்டு. பண்ணண்டாம் குளத்திலிருந்து வரும் தண்ணீரை வயலுக்கு அருகில் மடையை உயர்த்தி கட்டினால் தண்ணீர் தேங்கி வயலுக்குள் செல்ல ஆரம்பிக்கும். பயிர்களுக்குள் நடந்தால் கணுக்கால் அளவு தண்ணீர் இருக்க வேண்டும் அப்போதுதான் உரம் போடலாம். மருந்து அடிக்க தண்ணீர் கொஞ்சம் குறைவாக இருக்க வேண்டும். 

வயல் வரப்புகளில் உளுந்துச் செடி இருக்கும். எலிகள் வயலுக்குள் நுழைந்து நெற்கதிர்களைக் கடித்திடா வண்ணம் இந்த உளுந்தங்காய்கள் எலிகளுக்கு உணவாய் மாறும். தப்பிப் பிழைத்தவைகளை ஆய்ந்து வீட்டுக்கு கொண்டு வந்து வெயிலில் காய வைத்து உளுந்தை பிரித்து எடுக்க வேண்டும். கொத்துக் கொத்தாய் கருப்புகலரில் உளுந்தங்காய்கள் இருக்கும். 

வண்டியில் இருந்து இறங்கியதும் வயலோரமாய் செல்லும் கிளை ஆற்றில் கண்கள் சிவக்கச் சிவக்க ஆட்டம் போடுவேன். கரையில் மண் வரப்புச் செய்து அதில் தண்ணீரை வழி மாற்றி பின்னர் ஆற்றில் செல்ல விடுவது எனது வாடிக்கை. மீன் குஞ்சுகள் மாட்டும் என்று எதிர்பார்ப்பேன். ஒன்று கூட சிக்காது. மாமா இருந்தால் நடக்காது. அமைதியாக உட்கார்ந்து கொள்ளவில்லை என்றால் முதுகு பழுத்து விடும். போஸ் இருந்தால் ஆட்டம் அதிகமாகி விடும். அவன் உரம் போட்டு வரும் வரை ஆட்டம்தான். 


இது போன்ற ஏதோ ஒரு நாளில் வயலுக்குச் சென்றிருந்த போது மழை கொட்ட ஆரம்பித்தது. மழையோடு உரமிட்டால் தண்ணீரில் சென்று விடும் என்பதற்காக உரம் போடவில்லை. வண்டியின் கீழே உட்கார்ந்து கொண்டான் போஸ். ஆனால் நானோ ஆற்றுக்குள் அமிழ்ந்து கொண்டேன். தலை மீது சுள் சுள்ளென்று மழை கொட்ட ஆற்று நீர் வெது வெதுப்பாக இருக்க மழையில் நனைந்து கொண்டே தண்ணீருக்குள் அலைந்து கொண்டிருந்தேன். மழை விடுவதாகத் தெரியவில்லை. போஸ் உரத்தை மூட்டையாகக் கட்டி மேலே தார்ப்பாயைச் சுற்றி வைத்து விட்டு வீட்டுக்குப் போகலாம் என்றுச் சொன்னான். பசி வேறு வர வண்டியில் அமர்ந்து கொண்டேன். துண்டைத் தலையின் மீது போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். 

வண்டிமாடுகள் அசைந்து கொண்டிருந்தன. மழையோ கொட்டிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் மழை நிற்க சில்லென்ற காற்று வீசியது. மீண்டும் படபடவென்று மழை கொட்ட அதனுடன் வெள்ளையாக ஏதோ விழுந்தது. பனிக்கட்டி போல இருந்தது. ஆலங்கட்டி மழைடா என்றான் போஸ். திடு திடுவென கொட்டியது. வலித்தாலும் எடுத்துக் கைகளில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தேன். அவ்வப்போது வாயில் போட்டுக் கொள்வேன். சில்லென்று இருக்கும். மழையில் நனைந்து கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.

எட்டாவது படிக்கும் போது ஆலங்கட்டி மழையில் சிக்கியதுண்டு. அதன் பிறகு இதுவரையிலும் ஆலங்கட்டி மழையை நான் பார்க்கவே இல்லை. மழை பெய்கிறது. நானும் நனைகிறேன். ஆனால் ஆலங்கட்டியைத்தான் காணவில்லை. ஆலங்கட்டி என்று ஏன் அழைக்கின்றார்கள் என்று தெரியவில்லை. 

Tuesday, November 29, 2016

கண்ணில் தெரியும் கபாலிகள்

பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை ஆண்ட போது, உப்புக்கு வரி விதித்தார்கள். அதை எதிர்த்து காந்தி உப்புச் சத்யாகிரகத்தைத் ஆரம்பித்தார். வேதாரண்யத்தில் ராஜாஜி தங்கி இருந்து உப்புச் சத்யாகிரகத்தை நடத்த திட்டமிட்டார். காவல்துறையினர் இவரை உப்பு எடுக்க விடாது தடுக்க வேண்டும் என்று கருதி அதற்கென முன்னேற்பாடுகளில் இருக்கும் போது இரவே தண்ணீர் எடுத்து உப்புக் காய்ச்சி உப்பை எடுத்து விட்டாராம் ராஜாஜி. அப்போராட்டத்தின் போது போலீஸார் அடிதடி நடத்த கையிலெடுத்த உப்பை விடாது பிடித்துக் கொண்டு போராடினாராம் ஒருவர். அவர் கையை மண்ணில் வைத்து மிதிக்க கட்டை விரல் தனியாக துண்டாகப் போய் விழுந்ததாம். இப்படி ஒரு காட்சியை ‘மண்ணில் தெரியுது வானம்’ என்ற நாவலில் விவரித்திருக்கிறார் ஆசிரியர் ந.சிதம்பர சுப்ரமணியன். இன்றைக்கு ஒரு நாள் வங்கி வாசலில் நிற்பதுக்கு கூட வலிக்கிறது. அன்றைக்கு தன் உயிரைக் கொடுத்து இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர்கள் எங்கே? ஒரே ஒரு நாள் வெயிலில் நின்றால் குதிக்கும் நாம் எங்கே? வெட்கமாக இல்லையா?

அப்போது பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சம்பளம் பெற்றுக் கொண்டு தன் நாட்டு மக்களையே அடித்தவர்கள் பிரிட்டிஷ்காரர்கள் இல்லை. நம்மவர்கள் தான். நம் இந்திய மன்னர்கள் தான் வயிற்றைக் கழுவுவதற்காக பிரிட்டிஷாரிடம் கூலி வாங்கிக் கொண்டு சுதந்திரத்திற்காகப் போராடிய தன் சகோதரனை அடித்து உதைத்து மண்டைகளைப் பிளந்து பலரை பரலோகம் போக வைத்துக் கொண்டிருந்தனர். வெள்ளைக்காரனிடம் தன்மானத்தை அடகு வைத்து வயிற்றுப் பிழைப்புக்காக அவன் காலை நக்கிக் கொண்டு ஊழியம் வாங்கிக் கொண்டிருந்தனர்.

இதே நாவலில் ஒரு இடத்தில் பத்திரிக்கை அலுவலகத்தில் நடந்த ஒரு விஷயத்தை அழகாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். உலகப்போர் நடந்து கொண்டிருந்த போது இந்தியாவும் கலந்து கொண்டதாக பிரிட்டிஷார் அறிவித்தனர். போர் காலமாகையினால் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன. தினசரி பதிவு செய்து ஒரு வருடம் நடத்தினால் அரசே தினசரிக்கான பேப்பரை மானிய விலையில் கொடுக்கும். (இன்றைக்கும் இந்த விஷயம் நடந்து கொண்டிருக்கிறது எவருக்காவது தெரியுமா?) அவ்வாறு கொடுக்கப்பட்ட பேப்பர் பண்டிலை கள்ளமார்க்கெட்டில் விற்று கறுப்புப்பணத்தை உருவாக்கினார்கள் என்று நாவலில் பதிவு செய்திருக்கிறார். அந்த இதழின் ஆசிரியர் ஒருவர் காந்தியின் பால் பற்றுக் கொண்டவர் என்றும் மற்றொருவர் வியாபாரி என்று எழுதி உள்ளார்.

காந்தி காங்கிரஸ்ஸைக் கலைத்து விட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் எவரும் கேட்கவில்லை. பதவிக்கு வந்ததும் அரசு நிலங்களை தங்கள் பெயர்களில் மாற்றிக் கொண்டனர் என்றும் ஒரு விஷயத்தை நாவலில் விவரித்திருக்கிறார் ஆசிரியர். அந்த நாவலின் முன்னுரையில் எழுதப்பட்ட ஆண்டு 1969 என்று தேதியிடப்பட்டுள்ளது. அன்றைக்கே ஆரம்பித்து விட்டனர் தம் ஆட்டத்தினை சுய நலக்கும்பல்கள். கதர் உடுத்தி மக்களிடையே வேஷம் போட்ட அந்த நயவஞ்சகக் கும்பல் தன் குடும்பத்தினையும் தன் நலத்தினையும் மட்டுமே உத்தேசித்து இந்திய மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்து கொழுக்க ஆரம்பித்தனர். அதைத்தான் அந்த நாவல் விரிவாக எடுத்துச் சொல்கிறது.

இந்தியா சுதந்திரம் அடையப் போராடி எத்தனையோ உயிர்கள் போராட்டக்களத்தில் பலியாயின. அப்போது  பலியாகக் காரணமாயிருந்த காவல்துறையிலும், ராணுவத்திலும் இருந்தவர்கள் பெரும்பான்மை இந்தியர்களே. அவர்களே வயிற்றுப் பிழைப்புக்காக போராட்ட வீரர்களை அடித்துக் கொன்றனர். பிரிட்டிஷ் அரசிடம் வேலை செய்வதைக் கவுரவம் என்றுச் சொல்லித் திரிந்தார்கள் பல சுயநலவாதிகள் அன்றைக்கு.

சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து இந்தியாவில் இன்னும் தெருவில் படுத்திருக்கும் ஏழைகள் குறையவில்லை. எல்லோருக்கும் கிடைக்க வேண்டிய பலனை தன் சுய நலத்தினால் குவித்து வைத்துக் கொண்டு இந்திய மக்கள் தொகையில் சுமார் 1 சதவீதமாக இருக்கும் சுய நலக்கும்பல்கள் குபேரர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கும் பலருக்கு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தவுடன் எரிகிறது. 

60 ஆண்டுகால ஆட்சியில் கொள்ளையடித்து குவித்து வைத்து கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கும் பல சுயநலநரிகள் போக வழி தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். கோடிகளில் சம்பளம் பெற்று கள்ளப்பணத்தை வளர்த்துக் கொண்டிருக்கும் பல நடிகர்கள் செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கின்றனர். கல்வித் தந்தைகள் இனி என்ன செய்வது என்று தெரியாமல் பிரதமரை கடும் கோபத்துடன் தனிமைகளில் திட்டிக் கொண்டிருக்கின்றனர். ஊழல் அரசு அலுவலர்கள் தங்கள் அநியாயமாக திரட்டி வைத்திருக்கும் பணத்தை வெள்ளையாக மாற்ற அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். 

இருக்க வீடே இல்லாதவர்கள் பலர் இருக்க ஒருவன் பல வீடுகளை வாடகைக்கு விட்டுக் கொண்டிருக்கின்றான். இதெல்லாம் எப்படி சாத்தியமானது? என்றால் அது கள்ளப்பணம். கறுப்பு பணம் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? 

அரசின் சட்டம் 250000க்கும் மேல் சம்பாதித்தால் கணக்கு காட்டு என்கிறது. ஆனால் எவரும் காட்டுவதில்லை. சம்பாதிக்கும் பணத்தைக் கணக்கு காட்டியே தீர வேண்டும் என்றால் குதிக்கின்றார்கள். சட்டத்தை மதிக்கமாட்டேன் என்கிறார்கள்.  தெருவில் இறங்கிப் போராடுகின்றார்கள். 

தெருவோரம் படுத்து இருக்கும் ஏழைகளுக்காக என்றைக்காவது போராடினார்களா இந்த வெள்ளை வேட்டி குறு நில மன்னர்கள்? இல்லையே? ஊழலில் குவித்த பணம் வெற்றுக் காகிதமாய் போய் விடுமே என்பதற்காக கூட்டம் கூட்டி கூப்பாடு போடுகின்றார்கள்.

கள்ளப்பணத்தை வைத்துக் கொண்டு நிலத்தின் விலையை ஏற்றுகிறார்கள், பொருட்களை வாங்கிப் பதுக்குகின்றார்கள். பொருட்களின்  விலையேறுகிறது. கள்ளப்பணத்தினால் தான் சாதாரண நேர்மையான ஒருவனால் இடம் கூட வாங்க முடிவதில்லை. இதையெல்லாம் சரி செய்ய அரசு முடிவெடுத்தால் குதிக்கின்றார்கள். போராடுகின்றார்கள். ஊழல் பணத்தால் தன் ஆசை நிறைவேற அதிக விலை கொடுத்துப் பொருட்களை வாங்குகிறார்கள். அதே விலைக்கு சாதாரண மக்களும் வாங்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகி விடுகிறது. நான் சொல்லும் இந்த விஷயம் உண்மையா இல்லையா என்று யோசித்துப் பாருங்கள்.

இதோ பருப்பு விலைகுறைந்து வருவதாக விகடன் வெளியிட்ட செய்தி. கீழே இருக்கும் இணைப்பினைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளவும். கருப்புப் பணத்தைக் கொண்டு பதுக்கி வைத்த பருப்பு வகைகள் வெளியில் வர ஆரம்பித்திருக்கின்றன.

http://www.vikatan.com/news/india/73668-reason-behind-decrease-in-dal-prices.art

ஊழல் பணத்தினால் தங்கள் குழந்தைகளுக்கு விலைக்கு படிப்பினை வாங்கி விடுகின்றார்கள். கள்ளப்பணத்தினால் தங்கள் மகன் மகள்களை சினிமாவில் நடிக்க வைத்து கோடிகளில் சம்பாதிக்கின்றார்கள். இப்படி இந்தியாவெங்கும் ஊழல்வாதிகளும், சுய நலக்கும்பல்களும் அக்கிரமமாகச் சம்பாதித்த பணத்தினால் இந்தியர்களைச் சுரண்டிக் கொண்டே இருக்கின்றார்கள். இந்தியர்கள் மேலும் மேலும் ஏழைகளாகிக் கொண்டே இருக்கின்றார்கள். விலைவாசியும் விண்ணில் ஏறிக் கொண்டிருக்கின்றது. வீட்டு வாடகை 1000 ஆக இருந்தது இன்றைக்கும் 10000 ஆகி விட்டது. இந்த உயர்வு யாரால் ஏற்படுத்தப்படுகிறது என்று யோசித்துப் பாருங்கள். உழைப்பவர்களின் பணத்தினை தான் ஊழல் செய்த பணத்தினால் வைத்து இருக்கும் சொத்துக்களை வைத்து மேலும் உறிஞ்சுகின்றார்கள். 

அன்றைக்கு சுதந்திரப் போராட்டத்தின் போது தன் சகோதரனையே கொன்றொழித்த பிரிட்டிஷ் அடிமைகளாக இருந்த இந்தியர்களையும், இன்றைக்கு கள்ளப்பணத்திற்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு எதிராகப் போராடும் சுதந்திர இந்தியர்களுக்கும் ஏதாவது வேறுபாடுகள் தெரிகின்றனவா? 

இந்திய அரசின் இந்த நடவடிக்க பாமர மக்களுக்கு பல சிரமங்களைக் கொடுக்கிறது என்பது உண்மைதான். அந்தச் சிரமங்கள் எதிர்கால தம் சந்ததியினருக்கு நல்லதைக் கொண்டு வரும் என்று புரிந்து கொள்ள வேண்டும். எதிர்கால சந்ததியினர் சுகமாக வாழ நாம் இந்தச் சிரமங்களை ஏற்று இந்திய அரசுக்கு ஆதரவு நல்க வேண்டும். கருப்புப்பண கோட்டான்களும், ஊழல் பெருச்சாளிகளும் மக்களை திசை திருப்ப தாங்கள் வைத்திருக்கும் அதர்ம பணத்தினைக் கொண்டு பல்வேறு விஷயங்களை முன்னெடுப்பார்கள். அந்தக் கபாலிகளிடம் ஜாக்கிரையாக இருக்க வேண்டும். 

சினிமாவில் வந்த பாடல் வரிகள் இவை. படியுங்கள். உண்மையை உணருங்கள்.

என்ன தேசமோ?
இது என்ன தேசமோ?
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ?
தர்மம் தூங்கிப் போகுமோ?
நீதி வெல்லுமோ?
இங்கு வேதமாகுமோ ?
என்ன தேசமோ? இது என்ன தேசமோ?

இன்பம் துன்பம் என்பது
இரவு பகலைப் போன்றது
காலம் நாளை மாறலாம்
காயம் எல்லாம் மாறலாம்
காலம் நாளை மாறலாம்
காயம் எல்லாம் மாறலாம்
சோகமென்ன தோழனே
சூழ்ச்சி வெல்வாய் வீரனே
எதிர்த்து நின்று போரிடு
இன்று ஓய்வெடு
நீ இன்று ஓய்வெடு
என்ன தேசமோ?
இது என்ன தேசமோ?

பிறக்கும் போதும் பேரில்லை
இறக்கும் போதும் பேரில்லை
இடையில் தானே குழப்பங்கள்
வாழ்க்கையோடு வழக்குகள்
இடையில் தானே குழப்பங்கள்
வாழ்க்கையோடு வழக்குகள்
ஜெயிக்கபோகும் மானிடா
மயக்கம் இங்கே ஏனடா
உறுதியோடு கேளடா
உண்மை நீயடா
ஓ... உண்மை நீயடா

என்ன தேசமோ?
இது என்ன தேசமோ?
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ?
தர்மம் தூங்கிப் போகுமோ?
நீதி வெல்லுமோ?
இங்கு வேதமாகுமோ ?
என்ன தேசமோ? இது என்ன தேசமோ?

நன்றி:- பாடலாசிரியர் வைரமுத்து. இயக்குனர் பாலு மகேந்திரா மற்றும் ந.சிதம்பர சுப்பிரமணியன்

இந்த சமயத்தில் இந்தப் பாடல் சொல்லும் அர்த்தங்கள் பல. கண்ணில் தெரியும் கபாலிகளைப் பாருங்கள். கபாலிகளிடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்க மீண்டும் ஒரு சுதந்திரப்போரினை நம் பாரத அரசாங்கம் அறிவித்திருக்கிறது என்பதை நினைவில் கொண்டு கபாலிகளுக்கு எதிராகப் போராடுவோம் வாருங்கள்.

இந்தியத் தாய்க்கு வணக்கம் !