குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Friday, July 7, 2017

இறைவனின் கண்ணீர்

மனிதனுக்கு பகுத்து அறியும் அறிவு இருப்பதினாலே அவன் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அனுபவத்தின் அறிவு கிடைக்கும் போது எல்லாமும் முடிந்து சமூகத்தில் இருந்து ஒதுங்கி விடுகிறான். பிறகு புலம்புகிறான். இறந்து போகின்றான்.

தற்சமயம் தமிழ் நாட்டில் (எவன் சொன்னான்னு தெரியவில்லை?) பிரபலமாக இருப்பது “பிக் பாஸ்” என்ற நிகழ்ச்சி என்கிறார்கள். யூடியூப்பில் பிக் பாஸும் சீமானும் டிரண்டில் இருக்கின்றார்கள். சீமானின் நாம் தமிழர் கட்சி படு வேகமாக வளர்கிறது என்றும் சொல்லிக் கொள்கின்றார்கள். பிக் பாஸில் ஜூலியான டிரண்ட் என்கிறார்கள். 

பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒரு சில தடவைப் பார்த்திருக்கிறேன். காயத்ரி என்றொரு பெண்(?????). அந்தப் பெண்ணின் மூளைக்குள் இருப்பது ஒன்றே ஒன்றுதான் - ஈகோ. உடம்பு, மனசு முழுவதும் ஈகோ. இதனால் அவருக்குக் கிடைப்பது என்ன என்று பார்த்தால் ஒன்றுமில்லை. அந்த ஈகோவிற்காக அவர் வாழ்கிறார். அவரின் முழு மனித தன்மை அவரிடமிருந்து விலகி ஓடி விட்டது. அவர் எந்த நொடியும் எந்தப் பொழுதும் தனக்காக என்றொரு வாழ்க்கையை வாழவே இல்லை. 

கஞ்சா கருப்பு - கஞ்சா இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு போதைப் பொருள். அதை தன் பெயரோடு இணைத்துக் கொண்டவரிடம் மனிதத் தன்மை இருக்குமா என்று எதிர்பார்ப்பது வீண்.

சக்தி - இயக்குனர் வாசுவின் மகனாக இல்லை என்றால் ஒரு தெரு நாய் கூட இவரைத் திரும்பிப் பார்க்காது. அது ஒன்று தான் இவருக்கான தகுதி. ஆனாலும் மனசு முழுக்க அகங்காரம். தன் நிலை மறந்து வாழும் ஒரு ஜீவாத்மா.

ஓவியா, ரைசா, ஜூலி, பரணி, வையாபுரி, நமீதா, அனுயா, ஆர்த்தி, ஸ்ரீ, கணேஷ், சினேகன் (டயனமிக் திருமணப் புகழ்), ஆரார் - இவர்களைப் பற்றி நீங்களே நான் எப்படி அவதானித்துள்ளேன் என அவர்களையும் அவதானித்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் யோசியுங்கள். உங்களை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு நொடியும் நம்மிடமிருந்து போவது நம் வாழ் நாளும் இளமையும். ஆனால் அடைவது அனுபவம். குழந்தைப் பருவத்திலிருந்து இது நாள் வரையிலும் நம்மை வாழவே விடாமல் பலரின் சிந்தனைகளுக்காக, வழிகாட்டுதலுக்காக, பிறரின் மூளையை நம் மூளைக்குள் திணித்துக் கொண்டு அந்த வழியாகவே வாழ்ந்து கொண்டு வந்து கொண்டிருக்கின்றோம். உண்மையாக நமக்காக வாழ்ந்து வந்திருந்தால் கோபம், தாபம், எரிச்சல், பொறாமை இன்னும் என்னென்னவோ பிரச்சினைகள் எதுவும் இன்றி வாழ்ந்து வந்திருக்கலாம். ஆனால் சமூகத்தின் கட்டுப்பாடு என்ற பெயரில் தனி மனிதன் தன் இயல்பு மறைந்து, தன் நிலை மறந்து வேறு எவருக்காகவோ வாழ்ந்து வருகின்றான். யோசித்துப் பாருங்கள்.

திரு மூலர் அன்றே எழுதி வைத்துச் சென்றார். நீயே கடவுள் என்று. எவரும் நம்புவதும் இல்லை. அதைப்பற்றிச் சிந்திப்பதும் இல்லை. இங்கே இந்த வீடியோவைப் பாருங்கள். கடவுளின் கண்ணீர் என்ற ஒன்று உங்களுக்குத் தெரிய வரும். இந்த மனது உங்களிடம் இருக்கிறதா? அவ்வாறு இருந்தால் நீங்களும் கடவுளே!


Tuesday, May 16, 2017

பாசக்காரி

சக மனிதனை எந்த வித பிரதிபலனும் இல்லாமல் நேசிக்கும் மனது இருப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். உறவுகளும் நட்புகளும் எப்போதும் பலனை எதிர்பார்த்து தான் இருக்கும். பலன் இல்லாமல் பிரியமாக இருக்கும் உயிர்கள் இவ்வுலகத்தில் இருக்கவே முடியாது. கொடுத்தால் தான் உறவு. கொடுக்கவில்லை என்றால் பகை தான். 

நாம் ஏன் கடவுளிடம் பக்தியாக இருக்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள். அவரால் நமக்குப் பலன் இருக்கிறது. ஆகவே கடவுளே, தெய்வமே என்றெல்லாம் அவரைப் போற்ற ஆரம்பித்து விடுகிறோம். ஒரு பேச்சுக்கு என வைத்துக் கொள்ளுங்கள். தவறு செய்தால் அடுத்த நொடியே கடவுள் கொல்கிறார் என்றால் மனித குலம் என்ன செய்திருக்கும்? கடவுளையே கொலை செய்து விட முயற்சிப்பார்கள். தவறு செய்கிறார்கள் என்றுச் சொன்னால் அடுத்த நொடி மனிதனுக்குள் இருக்கும் மிருகம் வெளியில் வந்து விடும். அவரவருக்கு அவரவர் சட்டம். அவர்களுக்குத் தெரிந்ததே நீதி. துரியோதனனுக்கு அவன் செய்தது சரி அல்லவா? 

பெண்களின் மீது எனக்கு எப்போதுமே (வழக்கம்தானே என்று நினைக்காதீர்கள்) காதல் அல்ல அன்பு. அன்பு என்பது வேறு. காதல் என்பது வேறு. உடனே திரைப்படங்களில் எழுதப்படும் வசனங்களை நினைவில் கொண்டு வந்து குழப்பிக் கொள்ளாதீர்கள். எதற்கெடுத்தாலும் சினிமா நினைவில் வந்து விடுவதுதான் தமிழனின் பெரும் பலவீனம். 

திருக்குறளையாவது படித்தால் பிரயோஜனம் உண்டு. சினிமா வசனங்களைப் படிப்பதினால், நினைவில் வைத்துக் கொள்வதால் என்ன ஆகப் போகின்றது. ஒரு பிரயோஜனமும் இல்லை. எனக்கு நிறைய நண்பிகள் உண்டு. எனக்கென்று ராமர் கோடு வைத்திருக்கிறேன். அந்தக் கோட்டினை நான் எப்போதும் தாண்டியதில்லை. ஆனால் ஒரு சில பெண்கள் என் வாழ்வில் கடந்து சென்றவர்கள் சுவடுகளை உருவாக்கிச் சென்றிருக்கின்றார்கள். அதீத அன்பு அல்லது எரிச்சல் அல்லது பொறாமையின் காரணமாக மனதுக்குள் கீறி விட்டுச் சென்று விடுவார்கள். அதன் காரணமாக வெகு ஜாக்கிரதையாக இருப்பேன். பெண்கள் பலன் கருதிதான் பழகுவார்கள் என்று மனம் நினைக்கத் தொடங்கி விட்டது. அதன் காரணமாக பல்வேறு உப சிந்தனைகளும் என்னை அவ்வப்போது ஆட்கொள்ளும். ஒரே ஒரு வீடியோ அதை நொறுக்கித் தள்ளியது. 

நேற்றைக்கு முதல் நாள் மாலையில் யூடியூப்பில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எதேச்சையாக ஒரு வீடியோ கண்ணில் பட்டது. முதன் முதலாக பார்த்தேன். என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் துளிர்த்துக் கொண்டது. மனையாள் பதறி விட்டாள். என்ன ஆச்சு? என்று கேட்க வீடியோவைக் காட்டினேன். அமைதியாகி விட்டார்.  நீங்களே பாருங்கள். மனசு நெகிழ்ந்து விடும். பாசக்காரர்களாக இருந்தால் உங்கள் கண்ணில் நிச்சயம் கண்ணீர் துளிர்க்கும். 


பாசக்காரி அல்லவா இவள்? இவளின் அன்புக்கு அந்த நொடியில் அவளுக்கு ஏற்பட்ட அந்த அழுகைக்கு விலை ஏதும் உண்டா? அருகில் உட்கார்ந்திருக்கின்றானே ஒருவன் அவன் எவ்வளவு கொடுத்து வைத்தவன்? இப்படி ஒரு அன்பினை எங்காவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? பெண்கள் அன்பினால் நிரம்பியவர்கள் அல்லவா?


Saturday, May 13, 2017

பாகுபலி 2 - 360ல் ஓர் அலசல்

பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் திரைப்படத்தினை விமர்சனம் செய்பவர்களை பல்வேறு கொடூர வார்த்தைகளால் யாரால் புகழப்படுகின்றார்களோ அவர்களை நன்றி கெட்டு வைது கொண்டு இருக்கின்றார்கள். திரைவிமர்சனம் செய்பவர்களின் எதிர்மறையான விமர்சனங்களைப் படித்து விட்டு பலரும் படம் பார்க்க வர மாட்டார்கள் என்று அவர்கள் நினைப்பதால் திட்டுகின்றார்கள். ஏன் எதிர்மறையான விமர்சனங்கள் வருகின்றன? என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. காக்காய்க்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதால் அவர்கள் இப்படி நிலைகுலைந்து விடுகிறார்கள். இருந்தாலும் உண்மை என்று ஒன்று உண்டல்லவா?

ஹோட்டலில் சாப்பிடப் போகின்றவர்கள் உணவு எப்படி இருக்கிறது, ருசி எப்படி இருக்கிறது, தரம் எப்படி இருக்கிறது என்று பலரிடமும் பகிர்ந்து கொள்வார்கள். உணவு நன்றாக இருந்தால் நன்றாக இருக்கிறது என்பார்கள். நன்றாக இல்லையென்றால் நன்றாக இல்லை என்பார்கள். ஆனால் அதற்காக ஹோட்டல்காரர்கள் உணவு நன்றாக இல்லை என்பவர்களை நீயென்ன சமையல் படித்திருக்கின்றாயா? எந்த ஹோட்டலில் வேலை செய்தாய் என்றா கேட்கின்றார்கள்? இல்லையே! ஒரு உணவின் ருசியை சாப்பிட்டுப் பார்த்தால் சொல்லி விடலாம். அதற்காக சமையல் கலைஞனாக இருக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? விமர்சனங்களை மூன்று நாட்கள் கழித்து எழுதுங்கள் என்கிறார்கள் சினிமாக்காரர்கள். ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். ஒரு ஹோட்டலில் சாப்பிடச் செல்கிறான் ஒருவன். அவனுக்கு வாந்தி பேதி எடுத்து மருத்துவமனையில் கிடக்கின்றான். அவன் அந்த ஹோட்டலில் சாப்பிட்டதால் தான் வாந்தி பேதி வந்தது என்று சொன்னால் என்ன தப்பு? அவ்வாறு பிறரிடம் சொன்னால் தானே பலரும் தப்பித்துக் கொள்வார்கள். அவ்வாறு உடனே சொல்லாமல் மூன்று நாட்கள் கழித்துச் சொல்லலாமா? இது தவறில்லையா? 

திரைப்படத்தைப் பார்த்ததும் நன்றாக இருக்கிறதா? இல்லையா? என்று படிக்காதவன் கூட சொல்லி விடுவான். ஒரு நாவல் படிக்கிறோம் என்றால் அதை எழுதத் தெரிந்தவனோ அல்லது முன்பே எழுத்தாளனாக இருப்பவனோ தான் விமர்சிக்க வேண்டுமென்றால் அதெல்லாம் நடக்கக் கூடிய ஒன்றா? சினிமாக்காரர்கள் பொதுவில் பேசும் போது நான்கும் சிந்தித்துப் பார்த்து பேச வேண்டும்.

சிந்திக்கும் அளவுக்கு சினிமாக்காரர்கள் ஒன்றும் பெரிய புத்திசாலிகள் இல்லை எனலாம். அவர்களில் மிகச் சிறந்த ஆளுமைகளும் இல்லை. தங்களின் புகழ் மாயையில் ஒரு விஷயத்தை மறந்து விடுகின்றார்கள். நாங்கள் தான் தமிழ் நாட்டை ஆள்கிறோம் என்பதாக அவர்களுக்கு எப்போதும் ஒரு மமதை உண்டு. இதை விட முட்டாள் தனமான சிந்தனை வேறு எதுவும் இருக்க முடியாது. ஏன் அப்படிச் சொல்கிறேன் என்பதற்கு காரணம் உண்டு.

எம்.ஜி.ஆரை வைத்து, கலைஞரை வைத்து, ஜெவை வைத்து, விஜயகாந்தை வைத்து சம்பாதிக்க நினைப்பவர்களின்  மேற்கண்டவர்களை உசுப்பேத்தியே அரசியலுக்கு வர வைத்து அரசியலுக்குள் நுழைத்து விடுகின்றார்கள். மேற்கண்ட தலைவர்களால் பிரயோஜனம் இல்லையென்றால் அடுத்த கட்சிக்குத் தாவி விடுவார்கள். அவர்களுக்குத் தேவை அரசியல், அதிகாரம், பணம். அதற்குத் தேவை சினிமாக்காரர்களின் புகழ். தலைவர்கள் தான் அனைத்துப் பழிச்சுமைகளையும் ஏற்பார்கள். அவர்களை அரசியலுக்குள் இழுத்தவர்கள் எதிரிகளாகி விடுவார்கள். சினிமாக்காரர்கள் தன் புகழால் விளையும் எதிர்காலப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். ரஜினியால் பணமும் புகழும் அதிகாரமும் கிடைக்க வேண்டும் என விரும்புவர்களுக்குத்தான் ரஜினி தேவை என்பதை அவர் புரிந்து வைத்திருக்கின்றாரா என்று தெரியவில்லை.

ஒரு சினிமாக்காரர் விமர்சனம் செய்பவர்கள் எந்த இன்ஸ்டிடியூட்டில் படித்தார்கள்? சினிமா என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் எல்லாம் விமர்சனம் செய்கின்றார்கள் என்றெல்லாம் திட்டிக் கொண்டிருந்தார்.  பொது வெளியில் திரைப்படத்தினை மக்கள் பார்ப்பதற்காக வெளியிடுகிறார்கள். படம் எப்படி இருக்கிறது என்றுச் சொல்லக் கூடாது என்கிறார்கள். இது என்ன சட்டமோ? அவர்களுக்கான நியாயமோ? தெரியவில்லை.

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமா என்னைப் பொறுத்தவரை ஒரு சில தனியார் கூட்டத்தால் நிர்வகிக்கப்படும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை மதிக்காக அமைப்பு. அவர்களுக்கு எந்த வித சட்டமும், விதியும் இல்லை. ஆட்சிக்கு வரும் எந்த அரசும் கண்டு கொள்வதில்லை என்பதும் அதற்குப் பல்வேறு காரணிகள் காரணமாய் இருக்கின்றன என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சினிமாவின் புகழ் மற்றும் இதர இன்பங்களையும் முன்னிட்டு அரசு தொடர்புடையவர்கள் சினிமாவைக் கண்டு கொள்வதே இல்லை என்பதுதான் உண்மையாக இருக்கக் கூடும். 

அடுத்து ஒரு முக்கியமான உளவியல் பிரச்சினை பற்றிப் பார்த்து விட்டு பாகுபலிக்குள் செல்லலாம்.

ஒரு காரில் பார்த்தேன், ”மை டாட் ஈஸ் மை ஹீரோ” - என் தந்தை என் ஹீரோ என்று ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது. உலகெங்கும் இருக்கும் பிரச்சினையே இதுதான். அடிமைத்தனத்தினை இப்படித்தான் சொல்வார்கள். என் தந்தை என் ஹீரோ என்பது அடிமைத்தனம். ஒவ்வொருவரும் தனிப்பட்டவர்கள், தனிப்பட்ட பண்பு நலன்கள் கொண்டவர்கள். ஆனால் அதை எவரும் புரிந்து கொள்வதில்லை. எப்போது என் தந்தை என் ஹீரோ என்று ஒரு சமூகம் சொல்ல ஆரம்பித்ததோ அன்று ஆரம்பித்தது இந்த ஹீரோயிசம் பிரச்சினை. தலைவரிலிருந்து சினிமா ஹீரோ வரை எல்லாவற்றிலும் ஹீரோயிசத்தில் மாட்டிக் கொள்கின்றார்கள். ஹீரோயிசத்தின் முடிவு என் தலைவர் என்ற அடிமை மனப்பான்மை. ஹீரோ இல்லாமல் எதுவுமே இல்லை என்ற ஒரு மாயையைக் கட்டமைத்து விட்டார்கள். தலைமை, தலைவர், மேலதிகாரி, தந்தை, தாய் என்று எல்லாவற்றிலும் ஹீரோயிசத்தினைக் கொண்டு வந்து திணித்து விட்டார்கள். நாவல் எழுதினால் கூட ஹீரோ, ஹீரோயின் வேண்டும்.

இங்கு யாரும் யாருக்கும் தலைவரும் இல்லை, எவரும் எவருக்கும் தொண்டனும் இல்லை என்பதை மனது புரிந்து கொள்ள மறுக்கிறது. ஆதர்ஷ ஹீரோ அது எதுவானாலும் சரி இங்கிருப்பவர்களுக்கு வேண்டும். அவர் வழி தான் இவர் நடப்பார். அடிமைத்தனத்தில் சுகம் கண்டவர்களுக்கு அதன் அபாயகரமான வழிகாட்டுதலின் அர்த்தம் புரிவதில்லை. அன்புக்கு அடிமையாக இருப்பதும், கடமைக்கு கட்டுப்பட்டு நடப்பதும் வேறு. இது வேறு. இந்த ஆதர்ச ஹீரோயிசம் தான் மனிதனைப் படுகுழிக்குள் தள்ளி புதைத்து விடுகிறது.

இங்கு ஹீரோ, ஹீரோயின் என்று எவரும் இல்லை. இயற்கைதான் ஹீரோ. வாழ்க்கை தான் ஹீரோயின். இயற்கையோடு இயைந்து வாழ்வதுதான் வாழ்க்கை. நம் முன்னே இருப்பது நம் வாழ்க்கை மட்டும் தான். பிறப்பு எப்படி நம் கையில் இல்லையோ அது போல இறப்பும் நம் கையில் இல்லை. ஆனால் வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கையில் பெரும்பாலும் நாம் வாழ்வதே இல்லை. ஆப்பிள் நிறுவன ஸ்டீவ் ஹாக்கின் இறுதிப் பேச்சு என்றொரு மெசேஜ் வாட்சப்பில் வந்து கொண்டிருக்கிறது. படித்துப் பார்த்தீர்கள் என்றால் கொஞ்சமேனும் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் என்னவென்று புரியும்.

அடுத்து மற்றொரு கேனத்தனமான விஷயத்தைப் பற்றியும் பார்த்து விட வேண்டும். விசுவாசம் என்பது அடிமைத்தனத்தின் உச்சகட்டம். சுத்தப் பைத்தியக்காரத்தினத்தின் மற்றொரு வார்த்தை என்னவென்றால் அதன் பெயர் விசுவாசம். ஒருவன் தவறே செய்தால் கூட அதைச் சுட்டிக்காட்டக் கூட அனுமதி மறுக்கும் விசுவாசம் என்கிற வார்த்தை சுத்தப் வேறொரு முட்டாள்தனத்தின் வேறு வார்த்தை..

கதைக்கு வந்து விடுவோம்.

பாகுபலி முதல் பாகத்தின் கதை - கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பதாக முடிந்து விட்டது.

உலகே இந்தக் கேள்விக்கான பதிலை எதிர்பார்த்துதான் காத்துக்கிடக்கிறது என்றார் திவ்யதர்ஷினி. சிலம்பாயி பேத்திக்கு பேசக் கத்துக் கொடுக்கணுமா? டிடியின் சின்னப்பத்தாவோ பெரியப்பத்தாவோ எனக்குச் சரியாக நினைவில் இல்லை. அது ஜாக்கெட் போடாது. சிறு வயதில் அழுது அடம் பிடித்து பால்குடிக்க சண்டை போட்டேன் என்பதால் என்னைப் பார்த்தாலே அதற்கு கொஞ்சம் திகில் ஆகி விடும். அது பெயர் தான் சிலம்பாயி. சிலம்பாயி பேச்சு ஆவணத்தில் பிரபலம். டிடி அச்சு அசல் சிலம்பாயி. மரபணு தோற்காது அல்லவா? டிடியின் அப்பா நீலகண்டன் இறப்பதற்கு முன்பு வீட்டுக்கு வந்திருந்த போது டிடியைப் பற்றிச் சிலாகித்து பேசிக் கொண்டிருந்தார். அருமை பெருமைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தக் கதை ஒரு பக்கம் இருக்கட்டும்.

டிடி எல்லோரையும் கட்டிக் கட்டிப் பிடித்து கமல் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார். பேசாமல் டிடிக்கு டாக்டர் பட்டம் கொடுத்து விடலாம். விஜய் டிவி அதற்கான வேலையைச் செய்ய வேண்டும். எது எதுக்கோ எவன் எவனுக்கோ விழா எடுக்கிறது விஜய் டிவி. டிடியினால் பிழைத்துக் கொண்டிருக்கும் விஜய் டிவி தன் தொகுப்பாளினிக்கு டாக்டர் பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்து அதை விழாவாக எடுக்கும் என நம்பலாம்.

இரண்டாம் பாகம் பாகுபலியை கோவை மணீஷ் தியேட்டரில் அம்மு, ரித்திக்கின் தொல்லை தாங்காமல் பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. இத்தனைக்கும் நெட்டில் இருக்கிறது, தேடிப் பிடித்து டவுன் லோடு செய்து பாருங்களேன் என்றால் ’போப்பா’ என்று ஒரு வார்த்தையில் மறுத்து விட்டார்கள்.

சாண்டில்யன், கல்கி ஆகியோரின் வரலாற்றுப் புதினங்களைப் படித்ததினால் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்று ஓரளவு யூகித்து இருந்தேன். அந்தளவுக்கு ராஜமெளலி மீது கவனம் இருந்தது. இரண்டாம் பாகத்தின் கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். எழுத வேண்டியதில்லை.

பாகுபலியின் அறிமுகம் ஹீரோயிசத்தின் வெளிப்பாடு. பல நூறு பேர் சேர்ந்து இழுக்கும் தேரை ஒற்றை ஆளாக இழுத்து வந்து யானை மீது மோத விடுகிறார். மதம் பிடித்த யானை அடங்கிப் போகிறது. என்ன ஒரு ஹீரோயிசம்? ரஜினி 100 பேரை அடிக்கிறார் அதை விடவா என்று நீங்கள் சிரிப்பது புரிகிறது. அதுமட்டுமல்ல ஹீரோவிடம் இருக்கும் கருணை வேறு எவருக்கும் இல்லாத ஒன்றாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. குச்சிக் கால்கள் கொண்ட மன்னன். கருப்புச் சுவடு படிந்த உதடுகள். நடிக்கவே தெரியாத வெற்று வரட்டு முகம். இவர் தான் ஹீரோ. தியேட்டரில் விசிலடிச்சான் குஞ்சுகள் வாயில் விரலை வைத்து விசிலடிக்கின்றார்கள். இதன் காரணம் நம் சமூகம் கட்டமைத்திருக்கும் ஹீரோயிசம்.

தமிழர்கள் எடுத்த அந்தக் கால மன்னர் படங்களை இயக்குனர் பார்த்திருந்தால் இவரை ஹீரோவாக போட்டிருக்க மாட்டார். ஹீரோவுக்கு 25 கோடி என்றும் இயக்குனருக்கு 100 கோடியும் சம்பளமாகக் கொடுத்திருக்கின்றார்கள் என்று இண்டஸ்ட்ரீயில் பேசிக் கொள்கின்றார்கள். உத்தமர்கள் அலுவலகம் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சுமார் 35 கோடி வரியாக இந்தியாவுக்கு கிடைக்குமே?

எம்.ஜி.ஆர் என்ற ஹீரோயிசத்தின் காரணமாக நாம் தமிழ் நாட்டையே ஆளக் கொடுத்திருக்கிறோம். இது தான் ஹீரோயிசத்தினை நம்பியதன் விளைவு. ஹீரோ நன்றாக இருக்க வேண்டும். அதற்கு காமெடியன்களும், இதர அல்லைக்கை நடிகர்களும் ஹீரோவுக்கு உதவ வேண்டும். இதைத்தான் காலம் காலமாக சினிமா சொல்லிக் கொடுத்துக் கொண்டே வருகிறது. மற்றவர்கள் எல்லாம் வாழவே வேண்டாம். ஹீரோ மட்டும் வாழ்ந்தால் போதும். அவர் நூறு அல்ல லட்சம் பேரை வாழ வைப்பார் என ஒவ்வொரு படத்திலும் ஹீரோயிசத்துக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எம்.ஜி.ஆர் தமிழகத்தில் தனியார் கல்வி நிலையங்களுக்கு அனுமதி கொடுத்து விட்டு எத்தனை பேரை பிச்சைக்காரனாக்கி இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
\
பாகுபலி கதையில் ராஜிய பரிபாலனத்திற்கு பட்டாபிஷேகம் செய்யும் முன்பு ராஜிய யாத்திரை சென்று விட்டு வா என்கிறார் சகிக்கவே முடியாத முகமும், பாவனையும் கொண்ட ராஜமாதா ரம்யா கிருஷ்ணன். அரியணையில் குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டு ”இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்” என்று கிரைண்டர் குரலில் கத்துகிறார். முதல் பாகத்தில் காலகேயனை வென்றவர் தான் மகிழ்மதியின் மன்னன் என்பதால் பாகுபலி காலகேயனை அடித்து துவைத்துக் கொண்டிருக்கும் போது முதுகிற்குப் பின்னால் இருந்து கொல்கிறான் பல்வாள்தேவன். அதையெல்லாம் விட்டு விட்டார்கள். மன்னனின் கடமை தம் குடிமக்களைக் காப்பது என்பதால், போரின் போது குடிமக்களைக் காப்பாற்றி எதிரியை துவம்சம் செய்த பாகுபலியே மன்னன் என்று அறிவித்து விட்டார் ராஜாமாதா. தொடர்ந்து ”இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்” என்கிறார்.

ராஜமாதா தன் மகனுக்கு வாக்கு கொடுத்தாராம். அதுவும் எப்படி? ஓவியத்தில் ஒரு பெண்ணைப் பார்ப்பார், அப்பெண்ணை தன் மகன் விரும்புகிறாராம், அவரையே மணமுடித்து வைப்பதாக வாக்குக் கொடுப்பாராம். அந்தப் பெண் சபையில் நான் பாகுபலியைத்தான் விரும்புகிறேன் என்கிறாள். ஆனால் நான் கொடுத்த வாக்கு என்னாவது? ராஜமாதா உடனே உனக்கு பெண் வேண்டுமா? இல்லை ராஜ்ஜியம் வேண்டுமா? என பாகுபலியிடம் கேட்கிறார். பாகுபலி நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன் என்று ராஜ்ஜியத்தை மறுக்கிறார். பல்வாள் தேவனை மன்னனாக்கி, பாகுபலியை படைத்தளபதி ஆக்குகிறார். தொடர்ந்து ”இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்” என்கிறார் ராஜமாதா. இதற்கு முன்புச் சொன்ன சாசனம் என்ன ஆச்சு என்று அவருக்குத் தெரியுமா? இல்லை கதை எழுதிய ராஜமெளலியின் அப்பாவுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. சுத்த நான்சென்ஸ்.

இதுவாவது பரவாயில்லை. மன்னனைக் கொல்ல வந்தார்களாம், இதற்குக் காரணம் பாகுபலி என்கிறார்களாம். உடனே மொட்டையன் சத்தியாராஜை அழைத்துப் பாகுபலியைக் கொல்லச் சொல்கிறார் ராஜாமாதா. ராஜமாதா விசாரிக்க மாட்டார், பிறர் சொல்வதை மட்டுமே கேட்பார் என்று கேனத்தனமான கதை. புல்லரிச்சு புல்லரிச்சு சொரிய ஆரம்பித்து விட்டேன். ராமமெளலியின் கதையை எந்த வார்த்தையால் சொல்லிப் பாராட்டுவது என்றே புரியவில்லை. தன் மகன் பல்வாள் தேவனின் சூழ்ச்சி தெரிந்ததும் தேவசேனாவின் பிள்ளையை மன்னாக்குகிறார். ஆற்றில் விழுந்து ஒற்றைக் கையில் பிள்ளையை தண்ணீருக்கு மேலே பிடித்தபடி இறந்தும் போகிறார். தன் மகன் விட்ட அம்பு முதுகில் தைக்க உயிர் போகிறது ராஜமாதாவுக்கு. பிள்ளை பெரிய ஆளாகி மகிழ்மதியை மீட்கிறார். சிறை வைத்திருந்த அன்னையின் சபதத்தை நிறைவேற்றுகிறார்.

பாகுபலியும், தேவசேனாவும் ஒரே கையில் மூன்று அம்புகளை வில்லில் வைத்து விடுவார்கள் அல்லவா அது ஒரு கார்ட்டூன் புகைப்படத்தில் வந்தது. அதை அப்படியே சுட்டு விட்டார் இயக்குனர்.

பாகுபலியும், பல்வாளும் பூணூல் போட்டிருக்கிறார்கள். கழற்றி வைத்து சண்டையிடுகின்றார்கள். பூணூல் எந்தளவுக்கு முக்கியமாக இருக்கிறது என்பதையும், பூணூலின் மகத்துவத்தையும் அறிந்தவராக இயக்குனர் இருந்திருக்கிறார் என்பது இந்தப் படத்தின் ராஜதந்திரம்.

1000 கோடி கலெக்ஷன் என்கிறார்கள். அந்த ஆயிரம் கோடி எப்படி எவ்வாறு வந்தது என்று கணக்குக் கேட்டுப் பாருங்கள்? ஒருவர் பதில் சொல்ல மாட்டார். 1000 கோடி வரவு என்றால் என்ன அர்த்தமென்பது சினிமா தயாரிப்பாளர்களுக்கு நன்கு தெரியும், இவர்களுக்கு நன்கு தெரியும் என்பது இந்தியாவின் உத்தமர்கள் அலுவலகமும் அறியும்.

கோவை மணீஷ் தியேட்டரின் டிக்கெட்டில் சீரியல் நம்பர் மட்டுமே இருந்தது. மற்றபடி டிக்கெட்டின் விலை இல்லை, தேதி இல்லை. வேறு எதுவுமே இல்லை. மோடி அவர்கள் கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்றார். வெறும் டோக்கனைக் கொடுத்து லட்சக்கணக்கில் காசு வசூலிக்கும் தியேட்டர்களை கண்டு கொள்ளவே இல்லை. அரசியல், சினிமா இரண்டும் கூட்டுக்களவாணித்தனத்தின் குறியீடு. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினைக் கேலிக்கூத்தாக்கும் சினிமா அமைப்பினை கண்டு கொள்ளாமல் களவாணித்தனத்தினை அரசு செய்து வருகிறது.

இரண்டரை லட்சத்துக்கு மேல் வருமானம் வந்தால் சாமானியனிடம் வரி கட்டச் சொல்லி கட்டாயப்படுத்தும் உத்தமர்கள் அலுவலகம் பைசாவுக்கு பெயராத சிறு பேப்பரைக் கொடுத்து வசூல் செய்யும் சினிமாக்காரர்களை ஏன் கண்டுகொள்வதில்லை என்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? ரொக்கமாக கையில் காசு வைத்திருந்தால் அபராதம் போடுவோம் என்றார்களே அந்த உத்தரவுகள் எல்லாம் சினிமா தியேட்டர்களுக்குக் கிடையாதா?

சுத்த கொங்குத் தமிழனான சத்தியராஜை கட்டப்பாவின் கேரக்டரை வைத்து நன்றாக செய்திருக்கிறார் இயக்குனர். போதாத குறைக்கு மன்னிப்பும் கேட்டிருக்கிறார் சத்தியராஜ். திரைப்படத்தில் நீ நாய் தான் என்று அடிக்கடிச் சொல்கிறார்கள். கட்டப்பா அதற்கொரு பஞ்ச் டயலாக் அடிக்கிறார். நான் நாய் தான், மோப்பம் பிடித்தேன் என்று. விசுவாசத்தின் பெயர் அடிமை. அடிமைத்தனத்தின் பெயர் அயோக்கியத்தனம். தர்மத்தினை விசுவாசத்தின் பெயரால் அழிப்பது அயோக்கியத்தனம்.

இந்திய அரசியல் தலைவர்களிடம் இல்லாத அரிய விஷயம் விசுவாசம். விசுவாசம் இருந்தால் சாகும் வரை தொண்டன்வாகவே மட்டுமே இருக்க முடியும். எப்போதும் தலைவராக இருக்க முடியாது. பன்னீர் செல்வம் அவர்கள் விசுவாமாக இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

ஹீரோயின் செலக்சனில் முற்றிலுமாகத் தோற்று இருக்கிறார் ராஜமெளலி. முதல் பாகத்தில் ஹீரோயினாக இருக்க கொஞ்சம் கூட தகுதி இல்லாத  உடல் மட்டும் சிவந்த கலரில் இருக்கும் தமன்னாவை என்ன சிந்தனையில் தேர்ந்தெடுத்தாரோ தெரியவில்லை. இரண்டாம் பாகத்தில் தேவசேனாவாக வரும் அனுஷ்காவிடம் இளவரசித்தன்மைக்கான எந்த உடல் மொழியும் இல்லை. இளவரசியின் உடல் தகுதி என்று ஒன்று உண்டு. உங்களுக்குப் புரிய வேண்டுமெனில் இதே சினிமாவில் ருத்ரம்மா தேவி என்றொரு படம் வந்தது, அப்படத்தில் ராணாவும் அனுஷ்காவும் ஒரு பாடலில் வருவார்கள். அந்தப் பாடலில் ஒரு சிற்பம் வருமல்லவா அதன் உடல் மொழியைப் பாருங்கள். அதற்குப் பெயர் பெண். சிவப்புத் தோல் எல்லாம் ஹீரோயின் என்றால். இயக்குனருக்கு தமன்னாவும், அனுஷ்காவும் போதும் போல. இயக்குனர் இன்னும் காம்ப்ளானில் இருக்கிறார். இவர் எப்போது காஃபி குடிப்பாரோ தெரியவில்லை. இன்னும் வளரணும் சாரே!

சினிமா கிராபிக்ஸ் சுத்த மட்டம். இதை விட அருமையான கிராபிக்ஸ் எல்லாம் பார்த்திருக்கிறோம். பனைமரத்தினை வளைத்து உயர எம்பி அரண்மனைக்குள் நுழைந்து சண்டை இடுகின்றார்களாம். ஒரு ராஜாவை அவ்வளவு எளிதில் அண்டக்கூட முடியாது. அந்தளவுக்கு அரண் வைத்திருப்பார்கள். ஆனால் இப்படத்திலோ போர் என்கிற போர்வையில் காமெடி செய்து கொண்டிருக்கின்றார்கள். கதையில் காமெடி, வசனத்தில் காமெடி, படமாக்கியதில் சொதப்பல் என்று அத்தனையும் சொதப்பி வியாபாரத்தில் மட்டும் வெற்றி அடைந்த ராஜமெளலிக்குப் பெயர் சினிமா வியாபாரி.

அவர் இயக்குனர் அல்ல. கலைஞனும் அல்ல. சட்டத்திற்கும் புறம்பான வழியில் பணம் சம்பாதிக்கு ஒத்துழைக்கும் எவரும் என்னைப் பொறுத்தவரை ..... எழுத விரும்பவில்லை. இதோ புகைப்படத்தில் சாட்சி இருக்கிறது. சாமானியனைக் கட்டுப்படுத்தும் அரசாங்கம் சினிமா என்கிற ஒரு சிறு கூட்டத்தினைக் கட்டுப்படுத்தவில்லை என்பதற்கான சாட்சி  இது.



பாகுபலி திரைப்படத்தினைக் கொண்டாடி மகிழும் பல்வேறு உள்ளங்களுக்கு இந்தப் பதிவு வித்தியாசமானதாக இருக்கலாம். இது தான் உண்மை என்பது உங்கள் உள்ளங்களுக்குத் தெரிந்திருக்கும். உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்துப் பாருங்கள். நம்மைச் சுற்றி நடக்கும் நாடகங்களை. அதனால் நாம் என்னென்ன இழந்திருக்கிறோம் என்பதை. நம் வாழ்க்கையை நாம் வாழ இந்தச் சமூகம் விடுவதே இல்லை. ஒவ்வொரு விஷயத்திற்கு முன்னுதாரணங்களைக் காட்டி பிறர் வழி நடக்க வைக்கும் கொடூரமான சிந்தனையில் சிக்கி இருக்கிறோம் என்பதை ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள். பாதைகள் பல இருக்கலாம். அவைகள் தூரத்தைக் கடந்துச் செல்லத்தானே உதவ வேண்டுமே ஒழிய அதே பாதை தான் வாழ்க்கையாக இருக்கக் கூடாது. பாலம் என்பதும் பாதை என்பதும் கடக்கத்தானே ஒழிய வசிப்பதற்கு இல்லை. நாம் இன்னும் சாலையில் தான் வாழ்கிறோம். அந்தச் சாலையிலிருந்து நாம் வெளியில் வர வேண்டும்.

பாகுபலி போன்ற படங்கள் நம்மிடம் இருக்கும் பணத்தைப் பறித்துக் கொள்கின்றன. நம்மையும் கீழ்மைச் சிந்தனைகளில் சிக்க வைத்து விடுகின்றன. புரியும் தன்மை கொண்டவர்களுக்கு எளிதில் புரிந்து விடும். ஆனால் வெள்ளை மனம் கொண்டவர்களின் கதையை என்னவென்றுச் சொல்வது. பாகுபலி ஆந்திராவின் முதலமைச்சரானால் இதன் அர்த்தம் உங்களுக்குப் புரியலாம். அல்லது புரியாமல் கூடப் போகலாம். நாம் நாமாக இருக்க இது போன்ற மூளை மழுங்கச் செய்யும் படைப்புகளை நிராகரிக்க வேண்டுமென்பது எனது ஆவல்.

நான் இந்தப் பதிவில் எழுதி இருக்கும் விஷயங்கள் பல குழப்பங்களைத் தரலாம். உங்களுக்குள் பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கலாம். அனைத்துக்குமான பதிலை நீங்களே உங்களுக்குள் தேடிக்கொள்ளுங்கள்.

Thursday, May 4, 2017

சசிகலா சீராய்வு மனு - விடுதலையாவாரா?

சட்டம் பல குற்றவாளிகள் தப்பித்தாலும் பரவாயில்லை ஒரு நிரபராதி தப்பிக்கக் கூடாது மன்னிக்கவும் தண்டிக்கப்படக்கூடாது என்கிறது. அது சரியானது தான். குற்றவாளிகளில் பலர் இதில் பல வகைகள் இருக்கின்றன. பரம்பரைக் குற்றவாளிகள், தொழில் முறைக் குற்றவாளிகள், அரசியல் குற்றவாளிகள், பயன் கருதி குற்றம் செய்யும் குற்றவாளிகள், உணர்ச்சிக் குற்றவாளிகள் இப்படி போகின்றன லிஸ்ட். சட்டம் குற்றவாளிகளை திருத்தி நல் வழிப்பாதைக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற அற்புதமான விஷயத்தைத்தான் முன்னெடுக்கிறது. மனித உயிரின் மீது கரிசனம் கொண்டவையாகத்தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இருக்கிறது. 

சசிகலா அவர்கள் தன்னை வழக்கிலிருந்து விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பது இதைத்தான் காட்டுகிறது. ஏதாவது வழி இருப்பின் விடுதலை கிடைக்கக் கூடிய சாத்தியங்களைக் காட்டி விடுதலை பெறலாம் என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கி இருக்கும் வசதிகளில் ஒன்று.

பத்திரிக்கைச் செய்திகளில் வெளிவந்த 1991 வழக்கின் தீர்ப்பினை முன்னிறுத்தி சீராய்வு மனுச் செய்திருக்கிறார் என்பது சரியான விளக்கம் தான். ஆனால் இன்னும் இது போன்ற பல தீர்ப்புகள் இருக்கக் கூடும். ஏதாவது ஒரு தீர்ப்புக்குள் இடைச்செருகலாய் சசிகலா அவர்கள் விடுதலையாகும் சாத்தியங்களை ஏதாவதொரு நீதிபதி அலசி இருப்பார். ஒவ்வொரு தீர்ப்பினையும் அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால் சசிகலா அவர்களின் விடுதலைக்கு வித்திடப் போகும் அந்த ஒரு சட்டத்தின் துணுக்கு இருக்கும்.

ஏசிபி மற்றும் பிரிவென்சன் ஆஃப் கரப்ஷன் சட்டத்திலும் பல்வேறு வழிகள் இருக்கின்றன. இரண்டு சட்டங்களின் படி தீர்ப்பு வழங்கப்பட்டவைகளை கூர்ந்து பார்த்தால் பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல பேர் விடுதலையாகி இருக்கின்றனர். பிரிவென்சன் ஆஃப் கரப்ஷன் சட்டத்தையும், இதுகாறும் வழங்கப்பட்ட தீர்ப்புகளையும், அதுமட்டுமின்றி அரசு அதிகாரிகளின் ஊழல் வழக்குகளில் தொடர்புடைய பலர் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்புகளையும் படித்தால் 100 அடிச் சாலை திறந்து விடும். சம்பந்தபட்ட வக்கீலின் புத்திசாலித்தனத்தில் இருக்கிறது விஷயம்.

வேறேதேனும் சிக்கல்கள் இல்லாது இருந்தால் சசிகலா அவர்கள் விடுதலையாகி விடுவார் என்றே நினைக்கிறேன். சசிகலா வெளியில் வந்தால் அதிமுக வெகு ஸ்ட்ராங்காக ஆகி விடும் என்றும் நினைக்கிறேன்.

அரசியலும்  சட்டமும் இரயிலின் தண்டவாளப் பாதை போன்றது. ஆனால் ஏதோ ஒரு இடத்தில் இரு தண்டவாளங்களும் ஒன்று சேரும். பின்னர் பிரிந்து சென்று விடும். இரயிலின் பாதை போலத்தான் அரசியலும் சட்டமும். 

பார்க்கலாம் விதி என்ன செய்கிறது என்று? 

Monday, May 1, 2017

செப்டம்பர் 31

நேற்றுக் காலையில் ஏழு மணிக்கே வேலை விடயமாக வெளியில் சென்று பத்து மணி வாக்கில் வீடு வந்து சேர்ந்தேன். நல்ல வெயில். சூடு தான் பிரச்சினை. கொதிக்கிறது அனல். முக்கியமான வீதிகளில் கம்பங்கூழ் பானைகள் துண்டுகள் கட்டி அமர்ந்திருக்கின்றன. ஒரு முறை திருப்பூர் கோர்ட்டுக்குச் சென்று விட்டு வரும் வழியில் கம்பங்கூழ் குடித்தேன். புளிப்பு உடலெங்கும் புல்லெரிக்க வைத்தது. ஆனால் நண்பரோ அசராமல் அனைத்தையும் குடித்தார். அப்படியே திரும்பக் கொடுத்து விட்டேன். அந்த அனுபவத்தினால் கம்பங்கூழ் என்றால் காத தூரம் ஓடிப் போ என்கிறது மனசு.

நுங்குகள் ஐந்து ரூபாயாம். வெட்டித்தருகின்றார்கள். பதனீ குடித்துப் பார்க்கலாம் என்று கொஞ்சம் வாங்கி வாயில் வைத்தால் சாக்கரீன் சுவை மிளிர துப்பி விட்டேன். ஒரு முடை நாற்றம் வேறு வந்தது. அதில் நுங்கைச் சீவிப் போட்டு மட்டை மட்டையாகக் குடிக்கின்றார்கள். ஆனால் எனக்குத்தான் ஆகவில்லை. நுங்கை வைத்து இப்படி ஒரு பிசினஸ் செய்யலாம் என்பதே ஆச்சரியம் தான். ஆனால் பாருங்கள் வருடம் முழுமைக்கும் நுங்கு கிடைக்கிறது. அதில் தான் ஏதோ ஒரு உள்குத்து இருக்கிறது. அது என்னவென்று புரியமாட்டேன் என்கிறது.  ஒரு தடவை வீட்டுக்கு வந்த உறவினர் விழா நாட்களில் கோவையில் சாணி விற்றே கோடீஸ்வரனாகலாம் போலவே என்று சொல்லிக் கொண்டிருந்தார். வீட்டு வாசலில் தெளிக்க சாணி வாங்க மனையாள் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தாள்.
(திருமணத்திற்கு முன் இப்படி இருந்த நான்)

வீட்டுக்கு வந்து அயர்ந்து போய் படுத்து விட்டேன். வெயிலில் கருவாடு போலக் காய்வது என்பது சாதாரணமா? பசங்க டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். மதியம் மூன்று மணி போல நீயா? நானாவில் மறதி கணவர்கள் மனைவிகள் என்றொரு தலைப்பில் கணவர்கள் மீது குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார்கள் பெண்கள். இதெல்லாம் சகஜம் தானே? அதைப் பார்த்து மனையாள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள். 

தன் குடும்ப விஷயத்தை, அதுவும் தன் கணவனின் ரகசியத்தை வெளியில் கசிய விடலாமா என்றெல்லாம் தெரியாமல் பிளந்து கட்டிக் கொண்டிருந்தனர். மறதி என்பது மனிதனுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்பதில் யாருக்கேனும் எள்ளளவாவது சந்தேகம் இருக்கிறதா? அப்படி இருந்தால் அதை உடனடியாக மறந்து விடுங்கள். சந்தேகம் இருக்கவே கூடாது. நல்லது நடந்தால் நினைக்கும் மனது கெடுதல் நினைந்தால் மறக்கத்தான் நினைக்கும் அல்லவா? அதைத் தவறு என்கிறார்கள் இல்லத்தரசிகள். இருக்கட்டும். 

பெண்கள் எப்போதுமே குறை பேசி பழக்கமானவர்கள். நிறையை மட்டும் பார்க்காமல் குறையை மட்டுமே குத்திக் காட்டிக் கொண்டிருப்பார்கள். குறை சொன்னால் தான் நிவர்த்திச் செய்து கொள்ளலாம். ஆகையால் அதுவும் தவறில்லை. சரி கணவனிடம் தானே பேசுகின்றார்கள். தங்கள் தகப்பன், தாய், அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகளை விட்டு விட்டு வந்திருக்கின்றார்கள். பேசினால் தப்பில்லை. அடித்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். குடும்பத்தின் ஆணி வேர் அல்லவா பெண்கள்? இப்படிச் சரண்டர் ஆகி விட்டாயே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. எவன் எவனுக்கோ அடிபணிந்து வேலை செய்யும் போது மனைவியிடம் சரண்டர் ஆவது ஒன்றும் தப்பில்லை என்கிறேன். சரிதானே சரண்டரானவர்களே? அடக்கம் தான் அமைதிக்கு வழி! (தத்துவங்களில் சொல்லப்பட்டிருக்கிறது)

காதலின் மோக லாகிரியில் சிக்கி காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறும் பெண், காதலின் உச்சத்தை நுகர்ந்து விட வாழ்க்கையெனும் மோக வளைக்குள் நுழைகின்றாள். வாழ்க்கையின் வாசலில் வசந்தம் தன் அழகான வரவேற்பைத்தரும். அந்த வரவேற்பில் மகிழ்ந்து வாழ்க்கை எனும் வீட்டுக்குள் நுழைந்த பெண், நாளடைவில் காதலின் மோக லாகிரியிலிருந்து விலகி, இயற்கையின் மகத்துவமான தாய்மை எனும் அவதாரமெடுக்கின்றாள். 

கண்ணதாசன் கூட சொல்வார்,”இறைவன் ஒருவனின் ஆத்மாவுக்கு மட்டுமே பொறுப்பேற்றுக் கொள்கிறான். ஆனால் தாயோ ஒருவனின் ஆத்மாவுக்கும், உடலுக்கும் பொறுப்பேற்றுக் கொள்கின்றாள்”. இதை விட ஒரு பெண்ணின் மகத்துவத்தை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது.

தாய்மையின் உயர்வைக் காட்டும் ஒரு கதையைக் கூட அர்த்தமுள்ள இந்து மதத்தில் எழுதி இருப்பார். கதையைப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆகவே மனையாளிடம் மதி மயங்கிக் கிடப்பது (இதைத்தான் மறதி என்கிறார்கள்) ஒன்றும் தவறில்லை. 

மனையாளுடன் சேர்ந்து நானும் நீயா நானாவைப் பார்க்க ஆரம்பித்தேன். அதிலொரு பெண்மணி தன் கணவன் தங்கள் கல்யாண நாளைக் கூட நினைவில் வைத்திருப்பதில்லை எனவும், நான் முதன் முதலாக இந்த வீட்டுக்கு வந்தது அந்தத் தேதியில்லையா? அதைக் கூட அவர் மறந்து ஒரு வாழ்த்துக்கூட சொல்வதில்லை என்று வேதனையாகச் சொன்னார். எனக்கு அந்தப் பிரச்சினையெல்லாம் இல்லை. மறக்கவா முடியும் அந்தத் தேதியை?அருகில் அமர்ந்திருந்த மகள், ”அப்பா! உங்கள் கல்யாண தேதி என்னப்பா?” என்று கேட்க, நானும் உடனே வெகு சந்தோஷமாக, ”செப்டம்பர் 31” என்றேன்.

(திருமணத்திற்குப் பிறகு இப்படி ஆகி விட்டேன். கவனிக்க மீசை காணாமல் போய் விட்டது)

மகள் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் மனைவியோ டிவி பார்த்துக் கொண்டிருந்தவள் எழுந்து கடு கடுவென அடுப்பங்கரைக்குள் சென்றாள். ”இந்தக் கோபிநாத்துக்கு ஏன் தான் இந்த வேலையோ தெரியவில்லை? நாசமாப் போறவன் ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமாக, எரிச்சலைக் கிளப்பி விடுகின்றான்” என்று அவரை ஒருமையில் திட்டிக் கொண்டிருந்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இவளுக்கு என்ன ஆனது என்று இதுவரைக்கும் தெரியவில்லை.

நான் தேதி மட்டும் தான் சொன்னேன். அதுக்கு எதுக்கு இவ்வளவு கோபம் கொள்கிறாள் இவள்? ஆமாம் செப்டம்பர் 31 தேதி இருக்கிறது தானே நண்பர்களே? 

Thursday, April 27, 2017

கொளுத்தும் வெயில் குளிரும் நினைவுகள்

கோவையில் இப்படி வெயில் அடிக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அரை மணி நேரம் வண்டியில் சென்ற மனையாளின் தோல் சிவந்து வெந்தது போல ஆகி விட்டது. கோவையில் கோடையில் வெயிலாக இருந்தாலும் சுடாது. ஆனால் இப்போது சுட்டெரிக்கிறது. நாளொன்றுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் ஆகாரம் குடிக்க வேண்டியதாகி விட்டது. சர்பத் கடைகளைக் கண்டால் மனசு அங்கே இழுத்துச் சென்று விடுகிறது. கவுண்டம்பாளையத்தில் திவ்யா சர்பத் என்றொரு கடை இருக்கிறது. நாற்பது வருடமாக சர்பத் விற்பனை செய்கிறாராம் அந்தக் கடைக்காரர். பதமாக வெயிலுக்கு இதமாக அதிகக் குளிர்ச்சியும் இல்லாமல் சர்பத் போட்டுத் தருகிறார். அந்தப் பக்கம் சென்றால் அவரைடம் எலுமிச்சை சர்பத் குடிக்காமால் நகர்வதில்லை. வெயில் என்றால் இதுதான் வெயில் என்பது போல அனத்து அனத்து என்று அனத்துகிறது.

வீட்டின் முன்னே இருக்கும் வேப்பமரம் கூட ஏனோ ஊடல் கொண்ட காதலி போல உஷ்ணக்காற்றினைத் தள்ளுகிறது. போதாதற்கு வேப்பம்பூவைக் கொட்டுகிறது. தமிழக அரசியலில் நொடிக்கொரு திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. செய்தி டிவிக்களுக்குத் தீனி. நான் சுத்தமாக செய்திச் சானல்களை பார்ப்பதை நிறுத்தி விட்டேன். விவாதம் நடந்தால் அந்தப் பக்கம் எட்டிக் கூட பார்ப்பதில்லை. செய்தித் தாளில் அரசியல் செய்திகள் என்றால் நகர்ந்து விடுவேன். துரோகிகளும், சுய நலக் கொடூரர்களும் நிரம்பிய அரசியல் செய்திகளைப் படிப்பதினால் என்ன பிரயோஜனம்? அதுமட்டுமில்லை சினிமா செய்திகளை மொத்தமாக படிப்பதை நிறுத்தி விட்டேன். எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து இதுவரை சினிமாச் செய்திகளைப் படித்ததினால் என்ன பலன் என்று யோசித்தேன். நிறுத்தி விட்டேன். காசும் நேரமும் கரியானது மட்டுமே பலன்.









(சிறு வயதில் நான் குளித்து மகிழ்ந்த ஊருக்கே உயிர் கொடுத்து வரும் ஆவணம் கிராமத்தில் இருக்கும் குளங்களும் அதன் பெயர்களும்)

கோடையில் பிச்ச நரிக்குளம் மட்டும் சற்றே தண்ணீர் சுண்டி விடும். ஆவணம் மாரியம்மன் கோவிலின் வாசல் வழியாகத் தெற்கே சென்றால் நான்கு புறமும் கொல்லைகள் சூழந்த, தென்மேற்குப் பகுதியில் காடுகள் நிரம்பிய குளம் தான் அது. குளத்துத் தண்ணீர் சற்றே சந்தனக்கலரில் மாறி இருக்கும். இருந்தாலும் அந்தக் குளத்தில் குளிப்பது சுகம். நடு மத்தியான நேரத்தில் செல்வதுண்டு. தண்ணீரின் மேல் பகுதியில் சூடாக இருக்கும். ஆனால் உள்ளே சிலீரென்று இருக்கும். இரண்டு மணி நேரம் தண்ணீருக்குள் ஆட்டம் போட்டு, நீச்சல் அடித்து கண்கள் ரத்தக் குழம்பாக சிவந்த உடன் தான் வெளியில் வருவதுண்டு.

நானும், வேலைக்காரன் போசும் ஆவணத்தான் குளத்துக்கு கிழக்கே இருக்கும் வயலில் கோடைப்பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச மோட்டாருடன் செல்வோம். அது மண்ணெண்ணெய் மோட்டார். ஆரம்பத்தில் கொஞ்சம் பெட்ரோல் ஊற்றி ஸ்டார்ட் செய்து பிறகு மெதுவாக மண்ணெண்ணெய்க்கு மாற்ற வேண்டும். ஹோசில் தண்ணீர் ஊற்றி நிரப்பிய பிறகு ஸ்டார்ட் செய்தால் குளத்திலிருந்து தண்ணீரைப் பம்ப் செய்து மடையில் கொட்டும். அந்த மடைக்குள் உட்கார்ந்து கொண்டு தலையைப் பம்ப் தண்ணீரில் காட்டி குளிப்பேன். ஜாலியாக இருக்கும். மசங்கும் நேரத்தில் தான் குளத்துக்குச் செல்வதுண்டு. கொக்குகள் ஒற்றைக்காலில் தவமிருந்து கொண்டிருக்கும். மீன்கள் மாட்டினால் கொத்திக் கொண்டு மரங்கள் அடர்ந்து நிரம்பிய ஆறும் குளமும் இணைந்த கரைகளில் இருக்கும் மரங்களில் சென்று அமர்ந்து மீனை ருசித்துக் கொண்டிருக்கும்.

தண்ணீர் இறைக்க குளத்துக்குச் செல்வதென்றால் இளம் தேங்காய் ஒன்றும், வெல்லக்கட்டி, பொட்டுக்கடலை கொஞ்சமும் எடுத்துக் கொண்டு சென்று விடுவோம். தேங்காயைப் பொத்து அதற்குள் பொட்டுக்கடலை மற்றும் வெல்லக்கட்டி இரண்டையும் சேர்த்து, தேங்காய் தண்ணீரோடு சேர்த்து மூடி வைத்துக் கொள்வோம். குளத்தங்கரையில் கிடக்கும் காய்ந்து போன விறகுளைக் கொண்டு வந்து போட்டு எரியூட்டி அதில் இந்தத் தேங்காயைச் சுட்டு எடுத்து ஆற வைத்து ஓட்டினை எடுத்து விட்டு சாப்பிட்டால் அள்ளும். அதன் சுவையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

மாலை மசங்கும் வேளையில் நன்றாக குளித்து விட்டு, இலேசாகக் குளத்து நீர் குளிர ஆரம்பிக்கும் சமயத்தில் சுட்ட தேங்காயைச் மாட்டு வண்டியின் நுகத்தடியில் அமர்ந்து கொண்டு சிதறும் தண்ணீரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு ருசிப்பது என்பது இப்போது நினைத்தால் கூட நடக்கும் காரியமா? அவனவன் லட்சங்களைக் கொட்டி கடற்கரை, இயற்கை கொஞ்சும் இடங்களுக்குச் சென்று வெறுமையாகத் திரும்புகின்றனர். வாழ்க்கையோடு இயைந்து இருக்கும் இது போன்ற மகிழ்ச்சி தரும் உணர்வுகளைக் காசால் பெற்று விட முடியுமா? 

உண்மையில் வயலுக்கு வேலை செய்யத்தான் செல்கிறோம். ஆனால் அந்த வேலையிலும் மகிழ்ச்சி கிடைக்கிறது அல்லவா? அது போல எந்த வேலையில் கிடைக்கிறது சொல்லுங்கள்? கணிணியில் உட்கார்ந்தால் உடலும் மனசும் அலுத்துப் போகும். இப்போதைய உடல் உழைப்புகள் எதுவும் விவசாய வேலை தரும் மகிழ்ச்சியைப் போல மகிழ்ச்சியைத் தந்து விட முடியுமா? தோட்ட வேலைக்குச் சென்று திரும்பும் போது கையில் தேங்காய், மாங்காய், கத்தரிக்காய்களைக் கொண்டு வந்து சமைத்து உண்ணும் வேலைக்காரியின் உணவுக்கு முன்னால் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் உணவின் சுவை நிற்க முடியுமா?



கிர்லோஸ்கர் தண்ணீர் இறைக்கும் பம்பு செட்

கோடையில் வெயிலுக்கு இதமாக வடக்கித் தெரு சுப்பையாத் தேவரின் கொல்லையில் அருவி போலக் கொட்டிக் கொண்டிருக்கும் பம்பு செட்டிற்கு குளிக்கச் செல்வதுண்டு. அப்போது வழியில் என் நண்பன் பனை மரத்துக் கள் விற்றுக் கொண்டிருப்பான். அவனிடத்தில் சென்று ஒரு லிட்டர் கள்ளைக் குடித்து விட்டு, பம்பு செட்டில் ஆட்டம் போட்டு விட்டு வீடு வந்து சேர்ந்தால் சூடான சோற்றுடன் கொதிக்கும் மீன் குழம்பினை ஊற்றிக் கொண்டு கவளம் கவளமாக சாப்பிட்ட நாட்கள் இனி வரத்தான் கூடுமா? நிச்சயம் வராது. 

நான்கு சுவற்றுக்குள் கதவைச் சாத்திக் கொண்டு தலையில் மோண்டு ஊத்தும் தண்ணீர் உடலைத் தழுவும் போது ஆற்றுக்குள் குளிக்கும் போது இருந்த சுகம் இல்லை என மனசு முழுக்க ஏக்கம் பரவுகிறது. காவிரி ஆறும், மழையும் வறண்டு போய் வெம்மையானாலும் அந்த இளம் பிராயத்து நினைவுகள் மட்டும் மனதூடே ஊடுறுவும் போது கொஞ்சூண்டு சிலிர்ப்பாக இருக்கத்தான் செய்கிறது.

Wednesday, April 19, 2017

ரூடோஸ்ஸின் வருகை

எனக்கு நாயென்றால் அப்படி ஒன்றும் பிடிக்காத விஷயமல்ல. அதுவும் ஒரு உயிர் தானே என்றளவில் கொஞ்சம் பிரியம் இருக்கின்றது. எனக்கொரு தோழி நெட்டில் அறிமுகமானவர் பிலிப்பைன்ஸில் இருக்கிறார். நான் சிரமப்பட்ட காலத்தில் உடனுக்குடன் எனக்கு பணம் அனுப்பி வைத்தார். பள்ளி, கல்லூரி, ஹாஸ்டல், கடைகள் என நல்ல வசதியான பெண்மணி. அங்கிருந்து வருடம் ஒரு தடவையாவது பரிசுகள் வரும். நான் எதுவும் அனுப்புவதில்லை. போன் கூட அவர் தான் செய்வார். இணையத்தில் பேசிக் கொள்வதுண்டு. அவர் ஊரில் நாய்க்கறி பேஃமசாம். அவரிடம் கேட்டேன். அருமையாக இருக்கும் என்றார். அன்றிலிருந்து அவரிடம் பேசுகின்ற போதெல்லாம் செத்துப் போன நாய்கள் அவரின் பின்னே அவரைத் துரத்துவது போல நினைவலைகள் வந்து விடும். விவசாயமெல்லாம் அழிந்து போன பிறகு நாய்க்கறியைத் தின்னாமல் மனுசனையா தின்ன முடியும். எனக்கென்னவோ இந்தியாவில் இன்னும் கொஞ்ச நாளில் நாய்க்கறி பிரபலமாகி விடும்  போல. நம்ம நாடு போகிற போக்கினைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. 

பிலிப்பைன்ஸுக்கு வா என்று பத்து ஆண்டுகளாக அழைத்துக் கொண்டிருக்கிறார். குடும்பத்தோடு செல்ல வேண்டும். இப்ப ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும்.

நேற்றைக்கு முதல் நாள். நானும் பையனும் ஒரு கடையில் நின்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண், அங்கிள் இங்கே மருத்துவமனை ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார். சரவணம்பட்டி காளப்பட்டி சாலையில் ஒரு மருத்துவமனையைப் பார்த்த நினைவில் இந்தப் பக்கம் என்று கைகாட்டி விட்டேன். கடையிலிருந்து வீட்டுக்குத் திரும்பினால் அந்தப் பெண்கள் தெரிந்தார்கள். அதிலொரு பெண் நடக்கவே முடியாமல் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தார். சாலையைக் கடந்து வந்தார்கள். மருத்துவமனையில் டாக்டர் இல்லை. சோர்ந்து போய் விட்டார்கள். அந்தப் பெண்ணைத் தொட்டுப் பார்க்க உடல் கொதித்துக் கொண்டிருந்தது. சரியான காய்ச்சல். வெயில் வேறு அனத்திக் கொண்டிருந்தது. பையனை இன்னொரு பெண்ணுடன் இறக்கி விட்டு விட்டு அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு இரண்டொரு மருத்துவமனைக்குச் சென்றால் ஒருவரும் இல்லை. ஒரு வழியாக மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைக் கண்டுபிடித்து அங்கு கொண்டு போய் விட்டேன். மருத்துவர் இருந்தார். மீண்டும் என் பையனும் இன்னொரு பெண்ணும் இருக்கும் இடத்திற்கு வந்து அந்தப் பெண்ணை வண்டியில் ஏற்றிக் கொண்டு திருப்பினேன். அப்போது அந்தப் பெண், ”ரித்திக், வெயிலில் நிற்காதே, நிழலில் நில்” என்று இரண்டு மூன்று தடவை சொன்னது. எனக்குச் சரியான எரிச்சல். நான் வெயிலில் இவள் தோழியை அழைத்துக் கொண்டு நாயாய் அலைந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இந்தப் பெண்ணுக்கு யார் மீது அக்கரை என்று பார் என்று கடுப்பானது. காலம் மாறுகிறது என்பது பளிச் சென்று புரிந்தது. அப்பெண்ணை மருத்துவமனையில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தேன். நன்றி சார் என்றது அப்பெண். நல்லா இருங்கம்மா என்றுச் சொல்லி விட்டு பையனை அழைத்துக் கொண்டு வீடு வந்தேன். நீ பாட்டுக்கு இப்படி உதவி செய்யக் கிளம்பி விடாதே ரித்திக் என்று அவனிடம் சொல்லி வைத்தேன். எதுக்கும் இருக்கட்டும். சரி அடுத்த கதைக்கு வந்து விடுகிறேன்.

சிறுவயதில் செவலை நாயொன்றும், கருப்பு நாயொன்றும் வீட்டில் இருந்தது. செவலை நாய் நல்ல நாய். வீட்டை விட்டு எங்கும் செல்லாது. ஆனால் கருப்பு நாயோ எமகாதக நாய். ஊர் சுற்றி. கையில் இருந்தாலும் கடித்து தின்று விடும். அதை நான் அடித்து துரத்தி விடுவேன். அப்போதெல்லாம் நாய்க்குப் பெயர் வைப்பதெல்லாம் இல்லை. நாயை நாயென்றுதான் அழைப்போம். ஆனால் இப்போதோ வேறு நிலை.  நாய்க்கு வைக்கும் பெயரைக் கேட்கும் போதெல்லாம் அது நாயா இல்லை ஆளா என்றொரு குழப்பம் வந்து விடும் எனக்கு. 

இன்றைக்கு எனக்கு ஒரு மெயில் வந்தது. ரிப்ளை செய்யும் போது அது ஆணா பெண்ணா என்று  குழப்பம் ஏற்பட எதுக்கு வம்பு பேசாமல் டியர் என்று போட்டு விடுவோம் என்று நினைத்து டியர் <அந்த பெயர் போட்டு> மெயில் அனுப்பி விட்டேன். அது ஒரு பெண்ணாக இருந்து நான் ஆணல்ல என்று ஆரம்பித்து அதுவே தொடர்கதையாகி, ஏற்கனவே திருமணமானவன். அதுவும் நாற்பதுகளில் இருப்பதால் நாய் குணம் வேறு வந்து விடும் என்பார்கள். எக்குத்தப்பாக ஆகிவிட்டால் நன்றாகவா இருக்கும்? சரி விஷயத்துக்கு வந்து விடலாம்.

அந்தச் செவலை நாய் ஒரு நாள் வாய் கிழிந்து வந்தது. இடது பக்கம் தோல் கிழிந்து தொங்கியது. எதித்த வீட்டுப் பெண்மணி வெங்காய வெடியை கருவாட்டுக்குள் வைத்துச் சுருட்டிப் போட்டு விட்டார். அதை எடுத்துக் கடித்திருக்கிறது. வெங்காய வெடி வெடித்து இடது பக்கம் தோல் கிழிந்து தொங்கி விட்டது. இடது பக்க பற்கள் எல்லாம் வெளியில் தெரிந்தது. எனக்குப் பயமாகவும், பாவமாகவும் இருந்தது. சாப்பாடு வைத்தேன். சாப்பிட்டது ஆனால் சோறு இடது பக்கமாக வெளியில் வந்து விட்டது. கொஞ்ச நாளில் அது வாசலில் படுத்திருந்தது. பட்டினியாகவே கிடந்து இறந்து போனது. வீட்டின் பின்புறம் குழி வெட்டி புதைத்து விட்டோம். 

கருப்பு நாயை பஞ்சாயத்திலிருந்து நாய் பிடிக்க வந்தவன் பிடித்துக் கொண்டு போய் விட்டான் போலும். நீண்ட நாட்கள் அதைக் காணவில்லை. ஊர் சுற்றிக் கொண்டிருந்தால் சும்மாவா? வீட்டுக்கே ஆகாது என்பார்கள். நாயைச் சொல்லவா வேண்டும்? அதுகளுக்கு அப்போது பீட்ச்சா அடச்சே பீட்டா, ப்ளூகிராஸ் மாதிரியெல்லாம் ஆட்கள் இல்லை. இப்போதல்லவா இருக்கின்றார்கள். அவனவன் ஆட்களை ஆடுகள் கழுத்தறுப்பது போல அறுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதைக் கேட்க ஆட்கள் இல்லை. நாயை அடித்தாலோ அல்லது மாட்டை அடித்தாலோ கேஸ் போடுகின்றார்கள். சிறு வயதில் மாட்டு வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போது சண்டித்தனம் செய்யும் மாட்டினை சாட்டையால் விளாசி இருக்கிறேன். அப்போது இந்த பீட்டாக்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்? மாட்டுக்குப் பதிலாக இவர்கள் நுகத்தடியில் கழுத்தை கொண்டு வந்து நீட்டி வண்டியை இழுப்பார்களா? என்று தெரியவில்லை. என்ன நியாயமோ என்ன சட்டமோ? ஒன்னும் சரியில்லை.

கிரடிட் கார்டுகள், பண அட்டைகள் வந்தாலும் வந்தன. மனிதன் இப்போது பைத்தியம் பிடிக்காத குறையாகத்தான் திரிகின்றான். ஏசியில் ஐந்து நிமிடம் நின்று ஏடிஎம்மில் பணம் எடுப்பது அப்போதெல்லாம் கவுரவம் நிரம்பியது. ஆனால் இப்போதோ ஏடிஎம் என்றாலே அலறல் தான் கேட்கிறது. டெக்னாலஜி வந்தாலும் வந்தது பிடித்தது சனியன். கருப்புப் பணத்தை இனி கண்ணால் கூட பார்க்க முடியாது போலும். ஆனால் அரசியல்வாதிகள் காட்டிலோ மழையோ மழைதான். ஒரு கார் வாங்கலாம் என்றால் நாய்க்கு நாக்குத் தள்ளிய மாதிரி நமக்கு நாக்குத் தொங்கி விடுகிறது. கவுன்சிலர் ஆனவுடனே ஸ்கார்ப்பியோவில் வருகின்றார்கள். என்ன தான் தில்லுமுல்லு செய்வார்களோ தெரியவில்லை. அடுத்தவன் பணத்தில் வாழ்வதுக்கும் ஒரு மச்சம் வேண்டும். மச்சம் மட்டும் இருந்து என்ன ஆகப் போகிறது? புத்திசாலித்தனமும் வேண்டும். மோடி சரியான அரசியல்வாதியாக இருக்கிறார். கருப்புப் பணத்தை மீட்கிறேன் என்றார். நாமெல்லாம் நினைத்தோம். அரசியல்வாதிகள், பெரும் பணக்காரர்கள் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்டு வந்து விடுவார் என. ஆனால் பாருங்கள் என்ன நடந்தது என்று. இது தான் பிரதமர் மோடி. வெகு புத்திசாலியானவர். திறமையானவர். யாரை எங்கே எப்படி என்ன என்பதெல்லாம் அவரிடம் பாடம் படித்துக் கொள்ள வேண்டும். இது வரை இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் ஆகச் சிறந்தவர் மோடி அவர்கள் தான் என்கிறேன். இப்படி ஒரு ட்விஸ்டை நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்களா? நிச்சயமாக இப்படியெல்லாம் நடக்குமா என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டீர்கள். அதுதான் பிளான். அதுதான் திட்டம்.

சரி திரும்பவும் எங்கேயோ போய் விட்டேன். இந்த மூளை இருக்கிறதே அது படுத்தும் பாடு இருக்கிறதே? பெரிய ரோதனை இதோடு. உங்களுக்கும் போர் அடித்திருக்கும் அல்லவா?

இரண்டு நாட்களுக்கு முன்பு ரித்திக் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் வரும் போது. அவன் கூடவே குட்டியாக, செவலை நாய்க்குட்டி ஒன்று அவனுடன் வந்து விட்டது. ரித்திக்குக்கு நாய், பூனை என்றால் பிரியம். ஆனால் மனையாளுக்கோ ஆகவே ஆகாது. அப்பா இந்த நாயை வளர்க்கலாமா? என்று கேட்க இரண்டு மாதம் வீட்டில் சும்மாதானே இருக்கின்றார்கள், பொழுது போக்காக இருக்கட்டும் என்றுச் சொல்லி சரி என்றுச் சொல்லி விட்டேன்.

போன மாதம் கருகருவென நாய்க்குட்டி ஒன்றினை வளர்க்கலாம் என்று நினைத்து கவுண்டரிடம் சொல்லி வைத்திருந்தேன். அவரும் திரிந்தலைந்து 22 நகங்களுடன் கருப்பு நாய்க்குட்டி ஒன்றினைப் பிடித்து வைத்திருந்தார். எனது நண்பர் நாயை ஓசியில் வாங்கக் கூடாது. யாருக்கும் கொடுக்கவும் கூடாது என்றுச் சொல்லி விட கவுண்டரிடம் வேண்டாம் என்றுச் சொல்லி விட்டேன். அத்தோடு நாய் வளர்க்கும் ஆசை போய் விட்டது. ஆனால் அதுவே வீடு தேடி வருகிறது.

ரூடோஸ் தற்போது

ரூடோஸ் எதிர்காலத்தில்

லேப்ராடர் வகை நாய்க்குட்டி அது. எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை? யார் வளர்த்ததோ தெரியவில்லை? அதற்குச் சாப்பாடு போட்டு, குளிப்பாட்டி, கழுத்திலொரு பட்டியைக் கட்டி, அத்துடன் கயிற்றைக் கட்டி விட்டான் பையன். காலையில் ஷாம்பூ போட்டு குளிப்பாட்டி, நாய்க்கடைக்குச் சென்று கழுத்துப் பட்டி, கயிறு வாங்கி வந்து மாட்டி காலையிலும் மாலையில் ஜாக்கிங்க் சென்று கொண்டிருக்கின்றார்கள் ரித்தியும், அம்முவும். இப்போது அது நன்றாக இருக்கிறது. இன்றைக்கு காலையில் பேப்பரைக் கடித்துக் குதறி விட்டது. ஒரு அதட்டுப் போட்டேன். அவ்வளவுதான் அருகிலேயே வரமாட்டேன் என்றது. ஒரு வழியாக சமாதானம் செய்து அதன் பயத்தைப் போக்க வேண்டியதாகி விட்டது.

இதற்கொரு பெயர் வையுங்கள் சாமி என்று கேட்டேன். 

”ரூடோஸ்” என்றார்.  எங்கிருந்தோ வந்தது ரூடோஸ். இப்போது என்னுடன் இருக்கிறது. காலையில் எழுந்ததும் அதனுடன் கொஞ்ச நேரம் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மாலையில் அதனுடன் விளையாடுவதும் சந்தோஷம் தருகிறது. ஒரு குழந்தையைப் போல அதனுடன் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

பக்கத்து வீட்டில் சைபீரியன் ஹஸ்கி என்ற பெய்லி (பெயர்) வளர்கிறது. மாலையில் வாக்கிங் செல்லும் போது பெய்லியைப் பார்த்து கர்ண கடூரமாகக் குலைக்கிறது ரூடோஸ். சரியான காமெடி. பயமில்லாமல் குலைத்து விட்டு ஓடோடி வந்து அருகில் அமர்ந்து கொள்கிறது.

பசங்க இருவரும் டிவி பார்ப்பதை கொஞ்சம் நிறுத்தி இருக்கிறார்கள்.

குறிப்பு: எல்லா பத்திகளிலும் நாய் வந்திருப்பதைக் கவனிக்கவும். உன் வீட்டில் நாய்க்குட்டி வளர்க்கிறாய் என்பதற்காக ஊர் கதையெல்லாமா அளப்பது என்று நீங்கள் கேட்டீர்கள் என்றால் அதற்குத்தான் இந்தக் குறிப்பு.

Thursday, March 30, 2017

நிலம் (36) - பட்டா நிலத்தில் உள்ள மரங்களை வெட்டுவது எப்படி

மரத்தை ரம்பம் போட்டு அறுத்தா வெட்டி போடலாம். இவரு மரத்தை எப்படி வெட்டுவது என்று சொல்லித்தரப் போகின்றாரா? என்று நீங்கள் நினைக்கலாம். இப்படியெல்லாம் ரூல்ஸ் இருக்கிறதா என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக மெனக்கெட்டு எழுதுகிறேன். யாரோ ஒருவருக்காவது உபயோகப்பட்டால் அதை விட சந்தோஷம் வேறில்லை. இந்தத் தலைப்பின் வீரியத்தைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு உண்மைச் சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுத்தான் புரிய வரும்.

சென்னைப் பக்கம் ஒரு நகரத்தில் எனக்குத் தெரிந்த நல்ல வசதியானவர் புதியதாக காம்ப்ளக்ஸ் ஒன்றினை வாங்கினார். அதைச் சுத்தப்படுத்தி புதிய பெயிண்ட் அடிக்க காண்ட்ராக்ட் விட்டிருக்கிறார். பெயிண்டர் பெயிண்ட் அடிக்கும் போது காம்பளக்சின் சுவற்றில் சாலையோரமிருந்த மரத்திலிருந்து இரு சிறிய கிளைகள் முட்டிக் கொண்டிருந்திருக்கின்றன. பெயிண்டர் அருவாளால் இரண்டடிக்கு வெட்டிப் போட்டு விட்டு பெயிண்ட் அடித்திருக்கிறார். வெட்டிப்போட்ட கிளையை எதிரில் இருந்த ஹோட்டல்காரர் எடுத்து எரித்து விட்டார். பெயிண்ட் அடித்து முடித்து விட்டார்கள். அடுத்த இரண்டு நாட்களில் விஏஓவிடமிருந்து ஓலை வந்திருக்கிறது. தாசில்தார் எப்படி முன் அனுமதி பெறாமல் கிளையை வெட்டினீர்கள் என்றும் எஃப்.ஐ.ஆர் போடப் போகின்றோம் என்றுச் சொல்ல இவர் ஒன்றும் புரியாமல், நானெங்கே வெட்டினேன் என்று குழம்பி விசாரித்திருக்கிறார். மேற்படி சம்பவம் தெரிய வர இவருக்கு ஒன்றும் புரியவில்லை.

சாலையோர மரம் நம் கட்டிடத்தின் சுவற்றில் முட்டிக் கொண்டிருக்கிறது. அதை பெயிண்ட் அடிக்க இரண்டடிக்கு வெட்டினால் அது பிரச்சினையாகி உள்ளதே என்று விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார். காம்ப்ளக்ஸின் எதிரில் இருந்த ஆட்டோகாரர்கள் அதை போட்டோ எடுத்து ஆர்.டி.ஓ வரை கம்ப்ளைண்ட் கொண்டு சென்றிருக்கின்றார்கள். தாசில்தான் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கையை விரித்து விட்டார். இதற்கிடையில் அந்தப் பகுதி கவுன்சிலர் வேறு வீட்டுக்கு வந்து இவரை மிரட்டி இருக்கிறார். மரம் வெட்ட வேண்டுமெனில் என்னிடம் பர்மிஷன் கேட்டு அல்லவா வெட்டி இருக்க வேண்டும் என்று சொல்ல இவர் பிரச்சினை பெரிதாகிக் கொண்டிருக்கிறது என எம்மை அணுகினார். அதைத் தொடர்ந்து சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து சரி செய்து கொடுத்தோம்

இப்போது மரத்தினை வெட்டினால் என்ன ஆகும் என்று உங்களுக்குப் புரிந்திருக்குமே?

நிலம் உங்களுடையதாகவே இருக்கலாம். அதில் உள்ள மரமும் உங்களுடையதாக இருக்கலாம். ஆனால் அதை வெட்ட வேண்டுமெனில் கட்டிங்க் ஆர்டர் பெற வேண்டும் என்பது விதி. யாரும் புகார் கொடுக்காதவரைக்கும் பிரச்சினையில்லை. புகார் கொடுத்தால் வம்புதான் வரும். பூமியில் வசிக்க மட்டுமே நமக்கு உரிமை உள்ளது. வீடு கட்ட அனுமதி வாங்க வேண்டும், வரி கட்ட வேண்டும். பூமிக்கு கீழ் எது இருந்தாலும் அது அரசுக்கு மட்டுமே சொந்தம். புரிகிறதா உங்களுக்கு இப்போது? 

மனிதன் இந்தப் பூமியில் வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது தான் உண்மை. பிச்சைக்காரன் கூட தனக்குக் கிடைக்கும் பிச்சைப் பணத்தைச் சேர்த்து வைத்தான் என்றாலும் அதற்கும் வருமான வரி கட்ட வேண்டும். இதுதான் நிதர்சனம். இதுதான் உண்மை.

உலகத்தின் கட்டமைப்பு இப்படித்தான் இருக்கிறது. இதை உருவாக்கியவன் மனிதனே. எவரும் புதிதாக வந்து இப்படியான கட்டமைப்பினை உருவாக்கவில்லை. எல்லா பிரச்சினைக்கும் மனிதனே காரணம். அவனே கேள்வி, அவனே பதில்.

Thursday, March 16, 2017

பழைய சோறும் வெங்காயமும் டாக்டர் விசாகனின் மறைவும்

வாழ்க்கை எண்ணற்ற அனர்த்தங்களை உள்ளடக்கியது. புரிந்து கொள்ள முடியாத பல கணக்கு வழக்குகளைத் தன்னகத்தே கொண்ட மர்மம் பொருந்தியது. அப்படி எனது வாழ்க்கைப் பயணத்தில் என் கூட வந்த ஒருவரின் கணக்கினை முடித்து வைத்தது காலம்.

எனது நண்பரும் பல் மருத்துவருமான விசாகன் அவர்கள் கடந்த வாரம் தான் ஓட்டி வந்த காரால் ஆக்சிடெண்ட் ஆகி மரணமடைந்து விட்டார். நானும் அவரும் கோவிலுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தோம். சென்னையிலிருந்து வரும் வழியில் இரவில் கார் ஆக்சிடெண்ட் ஆகி விட்டது. மறு நாள் காலையில் வீட்டுக்கு வந்து விடுவேன் என்றுச் சொன்னவர் இன்னும் வரவில்லையே என்று நினைத்து அழைத்தால் ரிங்க் போய்க் கொண்டிருந்தது. ஒருவரும் எடுக்கவில்லை. சென்னையிலிருந்து அழைப்பு வர எடுத்தால் ஆக்சிடெண்டில் இறந்து விட்டார் என்றார்கள்.

இதயம் ஒரு நிமிடம் நின்று பின் துடிக்க ஆரம்பித்தது. ஆயிரம் கிலோ பாரத்தைத் தூக்கி நெஞ்சுக்குள் வைத்தமாதிரி நெஞ்சு கனக்க ஆரம்பித்தது. கண்களிலிருந்து கண்ணீர் வரவா என்று துடித்துக் கொண்டிருந்தது. பிள்ளைகளும், மனையாளும் வருத்தப்படுவார்களே என  கண்களுக்குள் மனசு தானாகவே கேட்டைப் போட்டது. உடல் சோர்ந்து போனேன். சாப்பிடவே பிடிக்கவில்லை. வருத்தம், துன்பம், துயரம் அனைத்தும் அழுத்த மனசு பாரமாகி விட அன்றைய நாள் முழுவதும் எனக்கு இருப்பே கொள்ளவில்லை. 

மறு நாள் திருச்சிக்குச் சென்று கடைசியாக அவரின் முகத்தைப் பார்த்ததும் கரையிட்டிருந்த துயரம் வெடித்துச் சிதறியது. உடல் அதிர கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோட அவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். ”அவ்வளவு அவசரமா உங்களுக்கு?” என்று அவரிடம் மனசு கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது. ஒரே ஒரு கேள்விக்கு ஆயிரம் பதில்களைச் சொல்லும் அவர் மவுனமாக கிடந்தார்.

ஒரு முறை வீட்டுக்கு வந்திருந்த போது மனையாளிடம் ”தங்கச்சி, பழைய சோறு, மோர், சின்ன வெங்காயம் வெட்டிப் போட்டு, கொஞ்சம் பச்சை மிளகாயை நறுக்கிப் போட்டு கையால் கரைத்துக் கொடும்மா?” என்றார். மனையாளும் செய்து கொடுக்க சாப்பிட்டவர் ”இதுநாள் வரைக்கும் இப்படி ஒரு சுவையான கஞ்சியை நான் குடித்ததே இல்லைம்மா!” என்றுச் சொல்லி அனைத்தையும் குடித்தார். அடியேனுக்கும் கொஞ்சம் கொடுத்தார்.

அவருக்கும் எனக்குமான நட்பு எப்போதுமே சர்ச்சைகள் மிகுந்ததாகவே இருந்தன. அவரின் கருத்துகளும், அவரின் முடிவுகளும் எனக்கு உகந்ததாக இருந்ததில்லை. இருவருக்கும் போனில் வாக்குவாதம் வரும். போனைக் கட் செய்து விடுவோம். ஆனால் அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் அடுத்த போன் வரும். இப்படித்தான் எங்களது நட்பு சென்று கொண்டிருந்தது.

இனி பழைய சோற்றினைப் பார்க்கும் போதெல்லாம் அவரின் நினைவு நிழலாடுவதை என்னால் தடுத்து நிறுத்த முடியாது என் காலம் வரை. ஆனாலும் காலம் அதற்கான மருந்தினை எனக்கு அளித்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

Sunday, March 5, 2017

இன்றைக்கு முதல் நாள்

நாடு, மொழி, இனம், உறவுகள் இவைகளுக்கு அப்பாற்பட்டு ஒருவன் இயங்க முடியும் என்றால் அது சாத்தியமே இல்லாத ஒன்றாகத்தான் இருக்கும். ஒவ்வொருவரின் மனதும் ஒவ்வொரு குப்பைத்தொட்டி. அழுகி நாற்றம் வீசும் கருத்துக்களும், முன் பதிவுகளும் கடைசிக் காலம் வரை அவனை அக்குப்பைத்தொட்டிக்குள்ளேயே சிக்கிக் கொள்ள வைத்து விடும். குப்பைத்தொட்டியில் இருந்து வெளியில் வந்தால் அல்லவா உலகத்தின் அற்புதமான தரிசனம் கிடைக்கும்? ஆனால் அதற்கான சிறு முயற்சியைக் கூட எவரும் எடுப்பதில்லை. குப்பைத்தொட்டியில் இருந்து வெளிவருவது எப்படி என்று எவரும் எளிதான முறையில் சொல்லிக் கொடுப்பதும் கூட இல்லை. இந்த நிலையில் மனிதனுக்கு எங்கே விடிவுகாலம் வரப்போகிறது? ஆளும் பிஜேபியினர் நிதர்சனத்தை உணர்ந்து அரசியல் செய்ய வேண்டும். பெரும் பிரயத்தனம் செய்து ஆட்சிக்கு வந்திருக்கின்றார்கள். வந்ததும் மக்களின் வாழ்வாதாரத்தில் கையை வைத்தார்கள். கருப்பு பணமென்றுச் சொல்லி மக்களை அலைய விட்டார்கள். இப்போது தமிழகத்தை சுடுகாடாக்க முயல்கின்றார்கள். 

நெடுவாசல் நான் பிறந்த ஊர். 16ம் தேதியிலிருந்து நடக்கும் போராட்டம் இன்றைக்கும் முடிவில்லாமல் இழுத்துக் கொண்டே செல்கிறது. டிவிக்களில் விவாதங்கள், நொடிக்கொரு தடவை செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. காலையில் தொடங்கி இரவு வரை தொடரும் அஹிம்சா போராட்ட்டம், போராட்டக்களத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகமெங்கிலிருந்தும் வரும் மக்கள். 

ஒரு கிராமம் அந்தக் கிராமத்தில் இருக்கும் மக்கள் எங்களூரும் எங்கள் தொழிலும், நாங்களே எங்கள் நிலத்திற்கு முதலாளியாக இருந்து சம்பாதிக்கும் போக்கும் மாறிப்போய் விடும் என்று போராடுகிறார்கள். மக்களுக்காக அரசா? இல்லை அரசுக்காக மக்களா? என்று தெரியவில்லை. ஆளும் மத்திய அரசிலிருந்து ஒருவரும் நெடுவாசலுக்கு வர மாட்டேன் என்கிறார்கள். ஒருவர் நெடுவாசலில் வாழ்வுரிமைக்காக போராடுபவர்களுடன் நக்சலைட்கள் இருக்கின்றார்கள் என்கிறார். இனி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நெடுவாசலில் இருக்கின்றார்கள் என்பார்கள். சைனா மறைமுகமாக நெடுவாசலுக்கு சப்போர்ட் செய்கின்றார்கள் என்பார்கள். போராட்டக்களத்தில் இருக்கும் எமது ஊர் வினோத்குமார் தமிழக பாஜகவின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரை நெடுவாசலுக்கு வாருங்கள் என்று அழைக்கிறார். எவரும் வரவில்லை. 

நெடுவாசல் கிராமத்தார் தங்கள் வயிற்றுப் பசிக்காக தங்கள் நிலத்தில் உழுது பயிரிட்டு விவசாயம் செய்து அமைதியாக வாழ வேண்டும் என்பதற்காகப் போராடுகின்றார்கள். ஆனால் பிஜேபியினரும், அவர்களின் அடி வருடிகளும் தங்கள் வயிற்றுப் பசிக்காக பிறரை அழித்தாவது அரசியல் பிழைத்து வயிற்றுப்பசி போக்க வேண்டும் என்பதற்காகப் பேசுகின்றார்கள். இதில் யார் அது இது என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

கிராம வளர்ச்சியில் தான் முன்னேற்றம் இருக்கிறது என்கிறது அரசியல் சாசனம். ஆனால் கிராம ஒழிப்பில் தான் நாட்டின் வளர்ச்சி இருக்கிறது என்கிறது பிஜேபி அரசாங்கம்.

அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்த போது கோவையில் நெடுவாசல் ஹைட்ரோ கார்பனுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்த இருக்கிறோம் நீயும் வருகின்றாயா என்று கேட்டார். 

பதினோரு மணி வாக்கில் கேஜிசினிமாஸ் தியேட்டர் முன்புறம் உள்ள டீக்கடையின் முன்பு ஒன்று சேர்ந்தோம். ஐந்து நிமிடம் கூட இருக்காது. ஆர்ப்பாட்டத்தின் போது பேசக்கூட விடவில்லை. கைது செய்து விட்டார்கள். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க சிறிய ஆர்ப்பாட்டத்தை நடத்தக் கூட விடமாட்டேன் என்கிறது இந்த ஜனநாயக ஆட்சி. அடியேனை காவல்துறை அதிகாரி ஒருவர் ”வெயிலில் நின்று கொண்டு சிரமப்படாதீர்கள், மத்தவங்க போராடுகின்றார்கள், நீங்கள் ஏன் சிரமப்படுகின்றீர்கள்?” என்று கேட்டுக் கொள்ள வேறு வழியின்றி வீடு வந்து சேர்ந்தேன். அண்ணனும் ஊர்க்காரர்களும் கைது செய்யப்பட்டு எங்கேயோ கொண்டு போய் வைத்திருந்தார்கள். மாலையில் விடுதலை செய்து விட்டார்கள். 

அரசியல் சதுரங்க விளையாட்டில் பகடைகளாக மக்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். மாற்றம் ஒன்றே மாறாதது. பகடைகள் தானாகவே உருளும் சாத்தியங்கள் உருவாக ஆரம்பித்தால் அரசியல் சதுரங்க விளையாட்டு மாறி விடும். 

மக்களுக்கு எதிரான எந்த ஒரு விஷயமும் அழிந்தே போகும். இல்லையெனில் மக்களுக்கு எதிரானவர்களை காலம் அழித்தே விடும். அரசியல்வாதிகள் வரலாற்றினைப் படிக்க வேண்டும்.


Thursday, March 2, 2017

கருப்பு தங்கம் - அரசியல் துரோக சூழ்ச்சியில் மக்கள்

என்னால் இப்படித்தான் பார்க்க முடிகிறது. நெடுவாசல் கிராமத்தை மட்டுமல்ல தமிழகத்தையே சுடுகாடாக்காமல் மத்திய அரசு விடாது. தமிழர்களை அகதிகளாக்கி அலைய விடாமல் விடமாட்டார்கள் என்பதை காங்கிரஸ் கட்சியும் சரி பாஜகவும் சரி தொடர்ந்து செய்து வருவார்கள். காரணம் தமிழகத்தின் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் கருப்புத் தங்கம். தற்போதுதான் மீடியாக்களில் தமிழகத்தில் புதையுண்டு கிடக்கும் கருப்புத் தங்கம் பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாக செய்திகள் கசிய ஆரம்பிக்கிறது.

இதற்காகத்தான் ஓ.என்.ஜி.சி நிறுவனம் தன் ஆராய்ச்சியை தமிழகமெங்கும் நடத்தியது. ஆராய்ச்சி நடத்திய காலங்களில் டெக்னாலஜி வளரவில்லை. டிவி செய்திகளும் பத்திரிக்கைச் செய்திகளும் கிடைப்பதற்கும் உலகளாவிய அறிவியலை அனைவரும் தெரிந்து கொள்ளும் வசதியும் இல்லாத காலத்தில் ஓ.என்.ஜி.சி ஆராய்ச்சி நடத்தியதால் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. அதை அரசியல் கோடிகளும்,கோடிகளுக்கு மாமா வேலை பார்க்கும் மாமாக்களும் ”அப்போது சும்மா இருந்தீர்கள், இப்போது ஏன் எதிர்க்கின்றீர்கள்?” என்று மடத்தனமாக பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை என்பதை நான் இதனுடன் சேர்த்து பார்க்க விரும்புகிறேன். ஏனென்றால் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் இதுதான் உண்மை எனக் காட்டுகிறது. மழை அதிகம் பெய்தால் வேறு வழி இன்றி கர்நாடகா தண்ணீர் திறந்து விடுவது இயற்கையை எதிர்க்க முடியாமல் தான். காவிரி தண்ணீருக்கும் இந்தத் தமிழகத்தின் கருப்புத் தங்கத்துக்கும் நிச்சயம் தொடர்பு இருந்தே ஆக வேண்டும். அது அப்படித்தான் இருக்கமுடியும்.

காவிரியில் தொடர்ந்து தண்ணீர் வந்தால் முப்போகமும் தமிழகத்தில் விளையும். அவ்வாறு விளைய ஆரம்பித்தால் கருப்புத்தங்கம் பற்றி பேச்சே எடுக்க முடியாது. வறட்சி, ஏழ்மையை உருவாக்கி விட்டால் மக்களை எளிதில் மடக்கி விடலாம் என்ற திட்டமாகக் கூட இருக்கலாம். 

சுப்ரீம் கோர்ட் தண்ணீர் திறந்து விடு என்று உத்தரவு போடுகிறது. ஆனால் கர்நாடகா அதைச் செய்யவில்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்டவுடன் சசிகலாவைக் கைது செய்கிறது காவல்துறை. தமிழகத்தில் மட்டும் சட்டம் காப்பற்றப்பட வேண்டும் ஆனால் கர்நாடகத்தை எவரும் கேள்வி கூட கேட்கவில்லை. மத்திய அரசு சட்டத்தை மதிக்காத மாநில அரசிடம் விளக்கம் கூட கோரவில்லை. ஆனால் தமிழகத்தில் எது நடந்தாலும் கேள்வி கேட்கிறது. இதிலிருந்து தெரிகிறதா கருப்புத்தங்கத்தின் அரசியல்? காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காத காரணம் தமிழகத்தின் அடியில் இருக்கும் கருப்புத்தங்கம் மட்டுமே காரணமாக இருக்க வேண்டும்.

பாஜகவின் இல.கணேசனின் பேச்சு இதை உறுதிப்படுத்துகிறது. ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமெனில் ஊர் அழியலாம் என்று பேச இந்தக் கருப்புத் தங்கமும் அதன் மூலம் கிடைக்கும் பலன்களும் தான் காரணமாக இருக்க முடியும்.

காவிரி வழக்குகள் ஆண்டாண்டுகாலம் நீதிமன்றத்தில் தேங்கிக் கிடப்பதிலும் ஏதோ ஒரு அரசியல் சூழ்ச்சி இருக்கிறது என்றே நம்பத்தோன்றுகிறது. தாஜ் ஹோட்டல் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் அதிரடியாக தீர்ப்பு வழங்கிய வேகம் காவிரி வழக்குகளில் எங்கே சென்றன? போபால் விஷ வாயு வழக்கில் 15000 பேர் கொல்லப்பட்டார்கள். குற்றவாளி எந்த தண்டனையும் இன்றி சுகமாக இறந்து போனார். சாதாரண முறையில் தண்டனை பெற்று வெளி வந்தார்கள் அனைத்துக் குற்றவாளிகளும். 

மக்கள் கொல்லப்பட்டால் கூட நீதிமன்றத்தால் எதையும் செய்து விட முடியாது என்பதை இந்த வழக்கும், வழக்கு நடத்தப்பட்ட விதமும் சொல்லிக் கொண்டே இருக்கிறது.

மக்கள் அரசு அதிகாரத்தின் முன்பு அடிமைகள் என்பதை போபால் விஷவாயு வழக்கு சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறது. நீதிமன்றங்கள் அரசியலின் முன்னே எதுவும் செய்ய முடியாது. உத்தரவு போட்டாலும் நிறைவேற்றுவது அரசு தானே? அந்த உத்தரவு அரசுக்கு எதிராக இருந்தால் எந்த அரசு நிறைவேற்றும்? நீதிமன்றத்தால் என்ன செய்து விட முடியும்? சட்டம் அரசியலின் முன்னே வாய் மூடி நிற்கின்றது. 

அரசியலில் சுயநலக்கோடிகள் கூட்டம் மிகுந்திருக்கிறது. வாரிசுகள் வரிசை கட்டி அரசுக்கட்டிலில் அமர போட்டி போடுகின்றார்கள். கூடவே மாமாக்களையும் சேர்த்துக் கொண்டு குதிரையின் முன்னே கட்டித் தொங்க விடப்படும் கொள்ளுப் பையைப் போல பதவி, பணம் இரண்டையும் காட்டி தங்கள் பக்கம் நியாயம் இருப்பதாக பிறரைப் பேச வைக்கின்றார்கள். 

நீதிமன்றத்தில் வழக்குப் போட்டாலும் ஜெயிக்க முடியாது. ஏனென்றால் நீதிமன்றங்கள் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்றுச் சொல்லிய தீர்ப்புகள் இருக்கின்றன. மத்திய அரசின் கொள்கை முடிவு தமிழக மக்களை கூண்டோடு கைலாசம் அனுப்புவது அல்லது அகதிகளாக தமிழர்களை ஓட விடுவது. இந்தக் கொள்கை முடிவினை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளத்தானே செய்யும்? மக்கள் கொல்லப்படனும் என்று அரசு நினைத்தால் அதைக் கூட அரசின் கொள்கை முடிவு என்றுச் சொல்லி நீதிமன்றங்கள் தீர்ப்பு எழுதி விடும். பாஜகவின் இல.கணேசன் தான் அரசின் கொள்கை என்னவென்று தெளிவாகப் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றாரே? இதை விட வேறு என்ன சாட்சியம் தேவைப்படுகிறது?

தமிழகத்தில் இப்போது இருக்கக் கூடிய அரசியல் நிலவரம் சரியில்லை. பாஜகவின் ஆட்டி வைக்கும் பொம்மை அரசியல் தான் நடைபெறுகிறது என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. அம்பிக்களின் பத்திரிக்கைகள் அனைத்தும் பாஜகவுக்கு ஆதரவாகத்தான் எழுதுவார்கள். பேசுவார்கள். மக்களைத் திசை திருப்புவார்கள். அம்பிக்களின் மீடியாவும், சுயநலம் மட்டுமே பொது நலமென கொள்கை கொண்ட ஒரு சில தமிழ் மீடியாக்களும் எல்லாவற்றையும் மறைத்து விடுவார்கள். 

மத்திய அரசின் அசைவுகளுக்குத் தகுந்தாற்போல அசையும் மாநில அரசினால் மக்களுக்கு நன்மை செய்து விட முடியும் என்று நினைக்க முடியவில்லை. சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை, நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றுச் சொல்வதெல்லாம் அரசியல் என்றே நினைக்கிறேன். பெட்ரோலியத்துறையின் அரசாணைகள், மாற்றப்பட்ட விதிமுறைகள் எதையும் எவரும் படிக்கவில்லை என்றே நினைக்கின்றேன். ஏற்கனவே ஏலம் விட்டு இந்த நிறுவனத்துக்கு தான் இந்த இடம் என்று அனுமதி கொடுத்து விட்டது மத்திய அரசு. அதுமட்டுமல்ல மக்களுக்கு எந்த விதக் கெடுதலும் ஏற்படாது என்று செய்தி அறிக்கையும் வெளியிடுகிறது. மத்திய அரசுக்குக் கட்டுப்பட்ட மாநில அரசு அனுமதி தர மாட்டோம் என்கிறது என்றுச் சொல்வதில் இருக்கும் வேறுபாடுகளைக் கவனிக்க வேண்டும்.

பாஜகவின் ஒலிபெருக்கிகள் ”சமூக விரோதிகள் சேர்ந்து விட்டார்கள், கலவரம் நடக்கும், தியாகம் செய்ய வேண்டும், பெட்ரோலிய இறக்குமதி குறைக்கப்பட வேண்டும்” என்றெல்லாம் விடாது ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் கேஸ் விலையை அதிரடியாக உயர்த்துகிறது மத்திய அரசு. இனி பெட்ரோலின் விலையையும் அதிரடியாக உயர்த்துவார்கள். இறக்குமதி அதிகமாகிறது என்பார்கள். பொருளாதார விற்பன்னர்கள் விலையேற்றத்துக்கு காரணங்களை அடுக்குவார்கள். விலை குறைக்கப்பட வேண்டுமெனில் உள் நாட்டுப் பெட்ரோலிய உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டுமென்ற கட்டாயத்தை உருவாக்குவார்கள். மக்களும் வேறு வழி இன்றி நெடுவாசல் கிராமம் மட்டுமல்ல தமிழக விவசாயத்தைப் பலி கொடுக்க ஆதரவு தர ஆரம்பித்து விடுவார்கள்.

இதில் ஒரு நன்மை என்னவென்றால் பெட்ரோலியத்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் இந்த நேரம் சன் பெட்ரோ கெமிக்கல்ஸ், டகால்டி பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனங்கள் தமிழகத்தைச் சுடுகாட்டுச் சாம்பலாக்கி இருக்கும். மலையையே விழுங்கியவர்கள் இதையெல்லாம் விட்டிருப்பார்களா? இதன் காரணமாகத்தான் மக்களுக்கு ஆதரவாக எதிர்க்கின்றார்களோ என்னவோ தெரியவில்லை. எதிலும் பலனில்லாமல் வெறுமனே வேடிக்கைப் பார்ப்பதில் கேடிகளுக்கு என்ன லாபம்? ஆற்று மணல் எடுக்க காவிரியில் தண்ணீர் திறக்கக் கூடாது என்று அரசியல் கேடிகளுக்குப் பணம் கொடுத்தார்கள் என்று செய்திகள் கசிந்தன. நெருப்பு இல்லாமலா புகை வரும்?

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது தமிழக பூமியின் அடியில் கிடக்கும் கருப்புத் தங்கத்தை எடுக்கும் வரை மத்திய அரசு விடாது ஓயாது என்றே நினைக்கத் தோன்றுகிறது. தென் தமிழகம் பாலைவனமாகி தமிழர்கள் அகதிகளாகப் போகும் நாட்கள் கண்ணில் தெரிய ஆரம்பித்திருக்கிறது.

மக்களின் போராட்டங்கள் நூற்றுக் கணக்கான் உயிர்களைப் பலி வாங்க ஆரம்பித்தால் பிசுபிசுத்துப் போய் விடும் என்று அரசியல் கோடிகளுக்கு நன்கு தெரியும். மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் என்றும் தெரிந்தும் அனுமதி கொடுக்கிறது மத்திய அரசு என்றால் அவர்கள் சொல்லும் ஜால்ஜாப்புகளை நம்ப வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பது ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை மாதிரி தான் இருக்கிறது. 

ஆடு - மக்கள், ஓநாய் - அரசு.  இறுதியில் வெற்றி யாருக்கு என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

1000 கோடி ரூபாய் வருமானம் கொண்டவர்கள் கட்சி மாறி கட்சிக்கு வந்து அமைச்சராகி அல்லக்கை ஆகி பின்னர் நான் நல்லவன் என்றுப் பேசிக் கொண்டலைகின்றார்களே இவர்களைத்தான் அரசியல் கோடிகள் என்று எழுதி இருக்கிறேன். கோடிகள் இல்லையென்றால் குப்பனும் சுப்பனும் கல்வி அமைச்சராக முடியுமா? இல்லை திடீர் புனிதர் வேஷமும் போட முடியுமா? வயிற்றுப்பாட்டுக்கு வழி இல்லாதவர்கள் தானே தர்மம் பற்றி பேசுவார்கள். நாங்கள் நல்லவர்கள் என்று கோடிகள் தான் பேசுவார்கள். பணத்தின் வாசம் சாக்கடையையும் மணக்க வைத்து விடும் அல்லவா?

Monday, February 27, 2017

மன்னித்து விடு - கொடூரத்தின் மனப்பான்மை

அஹமத் புக்காதீர் - எனக்குப் பிடித்த அரபி பாடகர். அவரின் லாஸ்ட் ப்ரீத் பாடல் தான் நெடுவாசல் கிராமத்தின் கடைசி மூச்சு என்கிற வீடியோவின் பின்னனியாக ஒலிக்கிறது. மனதை உருக்கும் அற்புதமான குரல். டன்டனக்க டனக்கு நக்கா கும்மு கும்மு இசை கருவிகள் இல்லாமல் வெறும் ஹம்மிங்க் சவுண்டுடன் அழுத்தப்பட்ட ஸ்ருதியுடன் அற்புதமாக உருகி இருப்பார்.

இதோ அந்தப் பாடல். 



மான் வகையறாக்கள் அஹமத் புக்காதீரைக் கேட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதைத் தமிழில் கொண்டு வருவதுதான் அவர்களுக்குப் பிரச்சினையாக இருந்திருக்கும் போல. இவர்கள் எல்லாம் அப்படியே காப்பி அடிப்பதில் மன்னர்கள் அல்லவா? 

அஹமத்தின் ஃபர்கிவ் மீ என்றொரு அற்புதமான பாடலை கீழே இருக்கும் இணைப்பில் கேளுங்கள். படத்தொகுப்பு கண்ணீரை வரவழைத்து விடும். ஆனால் இப்பாடலில் இருக்கும் க்ரூரம் கொடுமையானது. பாடலைப் பாருங்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்குப் புரியும். பிச்சை போடுவது கூட க்ரூரம் என்கிறேன் நான். ஒரு சில விஷயங்கள் மனித தன்மை கொண்டதாக இருந்தாலும் இரக்கம் என்பது பிறரின் மீது செலுத்தும் ஆகப் பெரிய குற்றச் செயல் என்றே நினைக்கிறேன்.

தன் மானத்தைக் கீறி விடும் எந்த ஒரு மனிதாபினச் செயலானாலும் அது க்ரூரமே ! 


எனக்கு இதைப் போன்ற அனுபவங்கள் பல ஏற்பட்டன. ஒரே ஒரு தடவை பேருந்தில் தட்டுத் தடுமாறி ஏறி உட்கார்ந்தேன். அருகில் இருந்த ஒருவர் 100 ரூபாயைக் கொடுத்து வைத்துக் கொள்ளச் சொன்னார். புரிகிறதா எனது இந்த பதிவின் அர்த்தம். இதைத்தான் கொடூரம் என்கிறேன்.

Sunday, February 26, 2017

Come on my Brothers let us join, decide which now, do not delay



இந்தியாவின் வளர்ச்சி என்கிற பெயரில் இந்தியாவிற்கே உணவளிக்கும் எங்கள் தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை அழித்திட முனைந்திருக்கும் இந்திய அரசே! ஆளும் அதிகாரவர்க்கதினரே!

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் யூத இனத்தை கேஸ் சாம்பரில் குவித்து கொன்றொழித்தானே அதைப் போல எங்களையும் கேஸ் என்கிற பெயரில் கொல்லப் போகின்றீரா?

எங்களுக்கு நல்லது செய்வீர்கள் என்று நம்பித்தானே ஓட்டுப் போட்டோம் எங்கள் உயிரைப் பறிக்க முதுகில் குத்திக் கொல்ல வருவீர்கள் என்று நினைக்கவில்லையே?

வீடு வீடாக வந்தீர்களே! நாங்கள் உங்களை எங்கள் பிரதி நிதியாகத்தானே பார்த்தோம் ஆனால் எமதர்மனின் பிரதிநிதிகளாக எப்போது மாறினீர்கள்?

இரத்தமும் சதையும் எலும்பும் நிறைந்த உங்கள் உடம்புக்குள் இதயம் என்று ஒன்று இல்லாமல் போய் விட்டதா?

ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமானால் ஒரு ஊர் அழியலாம் என்கிறாரே ஒருவர், எங்கள் குழந்தைகளையும் எங்களையும் கொன்று விட முடிவெடுத்து விட்டுத்தான் பேசுகின்றீர்களா?

உங்களிடம் ராணுவம் இருக்கிறது, போலீஸ் இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது. எங்களிடம் இயலாமையும் கண்களில் வழிந்தோடும் கண்ணீரும் தான் இருக்கிறது இந்திய அரசே!

உலகத்தின் ஒப்பற்ற நாகரீக தமிழர்களை இருக்க இடமில்லாமல் அழித்து விட முயன்று விட்டீர்களா? தமிழும் தமிழனும் உங்களுக்கு என்ன கெடுதலைச் செய்தார்கள்?

நம்பி நம்பி கெட்டவர்கள் நாங்கள். இப்போது நாங்கள் இருக்கும் இடத்தையும் அழித்து எங்களை நாடில்லா வீடில்லா மனிதர்களாக ஆக்கப் போகின்றீர்களா?

நாங்கள் வாழும் இடத்தையும் பறித்துக் கொண்டு எங்களையும் விரட்டி அடிக்கப் போகின்றீர்களா?

உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் முசோலினிக்களும் இருந்த இடம் தெரியாமல் அழிந்தார்களே. வரலாற்றினை மறந்தா போனீர்கள்?

நேதாஜி அழைத்தார் என்பதற்காக உயிருக்கு அஞ்சாமல் வெற்று நெஞ்சினைக் காட்டி துப்பாக்கிக் குண்டுகளை எங்கள் நெஞ்சில் பெற்று மண்ணோடு மண்ணாய் செத்துப் போன வரலாறு எங்களுக்கு உண்டு.

எங்கள் வாரிசுகளுக்காக எதிர்காலத்தை தேக்கி நிற்கும் சமுதாயத்தின் நல்வாழ்வுக்காக நாங்கள் எங்கள் உடம்பில் இறுதி மூச்சு இருக்கும் வரை அஹிம்சா வழியில் போராடுவோம்.

நெடுவாசலையும் நெடுவாசல் மக்களையும் காப்பாற்றுங்கள்

நெடுவாசல் கிராமம் இந்தியாவின் தலைப்புச் செய்தியாக மாறும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. எனது ஊர் அது. நான் பிறந்த ஊர். எனது தந்தை மாணிக்கதேவர், அவரின் தகப்பனார் அருணாசலத்தேவர், அவரின் தகப்பனார் நாடதேவர் இப்படியாக வாழையடி வாழையாக வாழ்ந்த ஊர். எங்கள் குடும்பத்திற்கு நாடி வீடு என்றொரு பட்டப்பெயரும் உண்டு. எனது வீட்டுக்கு முன்னால் நெடுவாசல் கிராமத்தின் தெய்வமான நாடியம்மன் இருக்கிறார். நெடுவாசல் திருவிழா சுத்துப்பட்டு ஊரெங்கும் புகழ் பெற்றது. படத்தேர் திருவிழாவின் அசத்தல் நிகழ்ச்சி.

நெடுவாசலைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் கீழே இருக்கும் கூகுள் மேப் இணைப்பினைக் கிளிக் செய்து சுற்று வட்டாரங்களைப் பாருங்கள். எங்கெங்கும் பசுமை மண்டிய விவசாய பூமி எம் ஊர்.


என் சிறு வயதில் ஓ.என்.ஜி.சி வண்டிகள் அடிக்கடி வந்து செல்லும். வெடி வைப்பார்கள். வெடிக்கும் போது நடக்கக்கூடாது என்பார்கள். நாடங்குளத்தருகில் தான் மண்ணெண்ணெய் டெஸ்ட் செய்தார்கள். அப்போதெல்லாம் இந்தக் காலத்தில் இருப்பது போன்று டெக்னாலஜி வளர்ச்சி ஏதும் இல்லை. அரசாங்கம் மண்ணெண்ணெய் டெஸ்ட் செய்கிறது என்ற பெருமையில் மட்டுமே ஊர் மக்கள் இருந்தார்கள். நம்ம ஊரில் மண்ணெண்ணெய் இருக்கிறதாம் என்ற பெருமை மட்டுமே. ஆனால் அதனடியில் கொலைகார எண்ணம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவில்லை. அந்தளவுக்கு அப்பாவித்தன்மை கொண்டவர்கள் எம் மக்கள். நெல், உளுந்து, நிலக்கடலை, எள், சிறுதானியப் பயிர்கள், மா, பலா, வாழை, காய்கறிகள் என எங்களூரில் விளையாத உணவுப்பொருட்களே இல்லை எனலாம். தென்னந்தோப்புகள் அதிகம். தேங்காய்கள் அதிகம். உலகெங்கும் நாங்கள் விளைவிக்கும் விவசாயப்பொருட்கள் உண்ணப்படுகின்றன. புதுக்கோட்டை மாவட்டம் வறட்சி மாவட்டம் என்பார்கள். ஆனால் நெடுவாசல் காவிரி ஆற்றின் கடைமடைப் பகுதி. காவிரி ஆறு நெடுவாசலின் கிழக்கே செல்கிறது. ஊருக்கே உணவளிக்கும் உன்னத ஊர் நெடுவாசல்.


எனது சகோதரி ஜானகியும் சித்தி செவையாளும் போராட்டக்களத்தில்

எக்கானமிக்ஸ் டைமில் 2016ம் வருடம் ஒரு செய்தி வெளியானது. மத்திய அரசின் ஓ.என்.ஜி.சியால் கண்டறியப்பட்ட எண்ணெய் வளமிக்க பகுதிகளில் ஆயில் எக்ஸ்புளோரேஷனுக்காக வெளி நாட்டு நிறுவனங்களை ஏலத்தில் பங்கு கொள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர் மற்றும் துபாய் போன்ற நாடுகளில் ரோடு ஷோவை நடத்தி வந்திருக்கிறது. இத்தனை செலவு செய்து விட்டு சும்மா இருக்குமா அரசு?  அதன் பிறகு நடத்தப்பட்ட ஏலத்தில் தற்போது ஜெம் லேபரட்டரீஸ் பிரைவேட் நிறுவனத்திற்கு நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்றுச் சொல்லி மீத்தேன் வாயுவை எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான பகுதி என்று மத்திய அரசுக்குத் தெரியாதா? இல்லை பாரதப்பிரதமருக்குத்தான் தெரியாதா? எல்லாம் அனைவருக்கும் தெரியும். உலகிற்கே உணவளிக்கும் பகுதி இது என்று அனைத்து அரசியல்தலைவர்களுக்கும் நன்கு தெரியும். தெரிந்தும் செய்கின்றார்கள் என்றால் என்ன காரணம்?

போராட்டக்களத்தில் இருப்பவர்களை பிரிவினை வாதிகள் என்கிறார் பாஜகவின் ஹெச்.ராஜா. இல.கணேசன் ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமெனில் ஒரு மாவட்டம் தியாகம் செய்யணும் ஒரு மாவட்டம் நன்றாக இருக்க வேண்டுமெனில் ஒரு கிராமம் தியாகம் செய்ய வேண்டும் என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றார். பாஜகவின் மாநிலத் தலைவர் இதுவரை அமைதியாக இருந்து விட்டு இப்போது போராடுகின்றார்கள் என்கிறார். ஆக இவர்களின் பேட்டியை வைத்துப் பார்க்கும் போது நெடுவாசலை சுடுகாடாக்க முடிவே செய்து விட்டார்கள் என்றே தெரிகிறது. மத்திய அமைச்சர்கள் மக்களின் விருப்பமின்றி எந்தத் திட்டமும் செயல்படுத்த மாட்டோம் என்கிறார்கள். ஆனால் ஆளும் பிஜேபி அரசின் அங்கத்தினர்கள் மத்திய அமைச்சர்களின் பேச்சுக்கு எதிராகப் பேசுகின்றார்கள். போராடினால் தேசத்துரோகி என்கிறார்கள் பிஜேபியினர்.

ஒரு ஊரையே அழித்துத்தான் பிறரின் அடுப்பு எரிய வேண்டுமா? ஊர் மக்களைக் கொன்றொழித்துதான் இந்திய மக்கள் உணவு சமைக்க வேண்டுமா? இப்படியெல்லாம் பேச இல.கணேசன் அவர்களின் மனது என்ன கல்லா? ஏன் இத்தனை வன்மமாகப் பேசுகின்றார் என்றே தெரியவில்லை. உணவை விட இயற்கை எரிவாயு தான் அவசியமா? விவசாயத்தை விட அடுப்பு எரிக்கவும், கார்கள் ஓட்ட பெட்ரோல் தான் அவசியமா? இல.கணேசன் அவர்கள் உணவுக்குப் பதிலாக இயற்கை எரிவாயுவை உண்கின்றாரா? அவர் குடும்பத்தாரும் அப்படித்தான் இயற்கை எரிவாயுவை குடிக்கின்றார்களா? என்று தெரியவில்லை.

மத்திய அரசு மக்களை எப்படி ஏமாற்றுகிறது என்பதை புதிய தலைமுறையில் வெளிவந்திருக்கும் இந்தச் செய்தி அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகிறது.

செய்தி கீழே:


மத்திய அரசின் மக்கள் நயவஞ்சகத் திட்டம்

ஷேல் கேஸ் திட்டத்தை, புதுபுதுப் பெயர்களில் செயல்படுத்த, முயற்சி தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு குத்தாலம் உள்ளிட்ட மிகச்சில இடங்களில் ஷேல் கேஸ் எடுக்கப்போவதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது புதிய தலைமுறை. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட விழிப்புணர்வு மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பால், திட்டத்தை நிறுத்திவைத்தது ஒஎன்ஜிசி (ONGC). இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் என்ற பொதுப்பெயரில், கைவிடப்பட்ட அந்த ஷேல் கேஸ் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

ஷேல் கேஸ் எனப்படும் பாறை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு, காவிரிப் படுகையில் அமைந்திருக்கும் குத்தாலம், சிதம்பரம் அருகில் உள்ள புவனகிரி, அடியக்காமங்கலம், கமலாபுரம், கூத்தாநல்லூர், ராமநாதபுரம், பெரிய நரிமனம், சீர்காழி அருகே உள்ள காளி ஆகிய இடங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டவை ஆகும். இதில், காவிரி படுகையை மையப்படுத்தி, இரண்டு மண்டலங்கள், பெயரிடப்படாமல் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதில், முதல் மண்டலம், 948 சதுர கிலோமீட்டர் பகுதியை உள்ளடக்கியதாக உள்ளது. பெயரிடப்படாத இரண்டாவது மண்டலத்தின் எல்லை, ஆயிரத்து 542 சதுரகிலோ மீட்டர் பரப்பளவை கொண்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்தில் ஆரம்பிக்கும் இந்த புள்ளியானது, வடக்கு தெற்காக, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை தாண்டி முடிவடைகிறது.

ஹைட்ரோகார்பன் திட்டம் என்ற பெயரில் குறிக்கப்பட்டுள்ள, பெயரிடப்படாத, இரண்டாவது மண்டலத்தின் வரைபடத்தில், நரிமனம், திருவாரூர், கீழ்வேளூர், அடியக்காமங்கலம், பள்ளிவார்மங்கலம், விஜயாபுரம், கமலாபுரம், நன்னிலம், கூத்தாநல்லூர், பூண்டி, மாத்தூர், கோவில்களப்பால், திருக்காலூர், பெரியகுடி, துளசபட்டினம் ஆகியவையும், தஞ்சாவூர் காவிரி துணை படுகை பகுதிகள் என குறிப்பிடப்பட்டு, அதில், வடதெரு, நெடுவாசல் மற்றும் கிருஷ்ணாபுரமும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஷேல் கேஸ் எடுக்கப்போவதாக பட்டியலிப்பட்டுள்ள பகுதிகளின் மொத்தப் பரப்பளவு (ஆதார ஆவணங்களின்படி) 3 லட்சத்து 81 ஆயிரம் ஏக்கர். 40க்கு 40 என வைத்தால், சராசரியாக 150 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதிகளை தன்னகத்தே கொண்டது, முழுமையான பெயரிடப்படாத, இரண்டாவது மண்டலமாகும். இந்த இரண்டாவது பகுதியில், ஷேல் கேஸ் எடுக்க வழங்கப்பட்டிருக்கும் உரிமங்கள், வருகிற 2019ஆம் ஆண்டோடு காலவதியாகிவிடும். இதன் காரணமாக, ஹைட்ரோகார்பன் என்ற பொதுப்பெயரில், கச்சா எண்ணெய் எடுப்பதாக கூறி, ஷேல் கேஸ் எடுக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவே, புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ள ஆதாரங்கள் கூறுகின்றன.

இந்த இரண்டாவது மண்டலத்தைப் போன்றே, முதல் மண்டலத்திற்கான பெயர்களும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இரண்டாவது மண்டலத்தில் இடம்பெற்ற பகுதிகளை தவிர்த்து, பெயரிடப்படாத முதல் மண்டலத்தில், ஷேல் கேஸ் எடுக்க, கடலூர் மாவட்டத்தில் 14 இடங்களும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9 இடங்களும், அரியலூர் மாவட்டத்தில் 6 இடங்களும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 இடங்களும், திருவாரூர் மாவட்டம் ஒரு இடமும் இனங்காணப்பட்டு குறிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கான ஷேல் கேஸ் எடுக்கும் உரிமமும், புதிய தலைமுறைக்கு கிடைத்திற்கும் ஆவணத்தின்படி, வருகிற 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தோடு முடிவடைகிறது.

ஷேல் கேஸ் எடுக்க வெளிப்படையாக 8 இடங்களின் பெயர்கள் தெரியவரும் நிலையில், நெடுவாசல் உள்ளிட்ட 51 இடங்கள், பெயர் வெளியிடப்படாமலேயே, ஷேல் கேஸ் எடுப்பதற்காக, இனங்காணப்பட்டு குறிக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் 61 இடங்களில் ஷேல் கேஸ் எடுக்கப்பட இருப்பது, அதற்கான ஆய்வு பணிகள், அடுத்தடுத்த கட்டங்களில், விரைந்து அனுமதி வழங்கப்பட்டு தொடங்கப்படலாம் என்பதே, புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ள ஆதார ஆவணத்தின்படி தெரியவரும் பேரதிர்ச்சி தரும் உண்மையாகும்.

செய்தி இணைப்பு : http://tv.puthiyathalaimurai.com/detailpage/ImportantNews/special-news/35/81826/shell-gas-project-in-the-name-of-hydrocarbon-gas-stunning-truth

இந்தியமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். நெடுவாசல் போன்ற தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இயற்கை எரிவாயு எடுத்து மொத்தமாக தமிழக நெற்களஞ்சியத்தை சுடுகாடாக்கி பீஹார் போன்ற ஏழைகள் நிறைந்த மாநிலமாக மாற்றிட மத்தியில் ஆளும் அரசு கடும் பிரயத்தனங்களைச் செய்து வருகிறது.

அதிகாரத்தில் இருப்பதற்காக இந்தியாவின் நெற்களஞ்சியத்தை அழிக்க தனி நபர் சார்ந்த நிறுவனங்களின் துணை கொண்டு மத்திய அரசின் இத்தகைய ரகசிய செயல்பாடுகளை அதி தீவிரமாக எதிர்க்க வேண்டும். தமிழக நெற்களஞ்சியத்தில் வாழும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முதலாளி. சொந்தத் தொழில் செய்யும் முதலாளிகள். நெற்களஞ்சியத்தை அழித்து ஒழித்து விட்டால் மொத்தமாக வேலையிழந்து பஞ்சைப் பராரியாக ஊரு விட்டு ஊருக்கு பஞ்சம் பிழைக்கச் செல்வார்கள் என்பதாலும் அப்போது வெகு எளிதாக அரசியல் லாபம் பெறலாம் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது.

உணவா? அடுப்பெரிக்க வாயுவா? எது வேண்டும் உங்களுக்கு என்பதை முடிவெடுங்கள்.

மத்திய அரசின் கொடூரத்தின் முன்னே அதிகாரத்தின் முன்னே எழும் எங்கள் ஊரின் அவலக்குரலைக் கேளுங்கள். உண்ண உணவு, இருக்க இடம், உடுத்த உடை, அமைதியான வாழ்க்கை வாழ்ந்து பிறருக்கும் உணவளித்து வரும் எங்களை மத்திய அரசின் அரக்கப் பிடியில் இருந்து காப்பாற்ற வாருங்கள்.

வருவீர்கள் என்கிற நம்பிக்கையோடு உங்களின் ஆதரவுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.

இங்கனம் நெடுவாசல் மக்களின் ஒருவனாக !

Saturday, February 25, 2017

ஈஷாவினால் சாபம் பெற்றனரா அரசியல் தலைவர்கள்?

சிறிய வயதில் மஹாசிவராத்திரி அன்றைக்கு மாலையில் அம்மா என்னைக் கொண்டு போய் சிவன் கோவிலில் அமர வைத்து விட்டு வீட்டுக்கு போய் விடுவார்கள். மழையூர் சதாசிவம் உருகி உருகிப் பாடிக் கொண்டிருப்பார். கல்லூரி படிப்பு வரையிலும் இந்தச் சம்பவம் நடந்து கொண்டிருந்தது. இரவின் இடையில் சுக்கு மல்லி காஃபி கிடைக்கும். விடிகாலையில் சுண்டல்,பொங்கல் இப்படி ஏதாவதொன்று கிடைக்கும். அப்போதெல்லாம் ஏன் இரவு முழுவதும் கண் விழித்திருக்கிறோம் என்று தெரியாது. அம்மா சொன்னாங்க, செஞ்சாச்சு.

கரூரில் இருக்கும் போது நெரூர் சதாசிவாநந்தா ஜீவசமாதியின் முன்னால் இருக்கும் சிவன் கோவிலுக்கு நானும் மகன் ரித்திக்கும் மஹாசிவராத்திரியன்று சென்று விடுவோம். இரவு முழுவதும் சிவன் கோவிலின் முன்புறம் இருக்கும் பகுதியில் உட்கார்ந்திருப்போம். ரித்திக் வயது மூன்று இருக்கும். தூங்கி விடுவான். மடியில் படுக்க வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன்.

காலம் செல்லச் செல்ல மஹாசிவராத்திரியன்று கண் விழிப்பது குறைந்து விட்டது. தென் கயிலை செம்மேட்டில் காளஹஸ்திக்கு நிகரான ராகு கேது ஸ்தலமான முட்டம் முத்துவாளி அம்மன் கோவில் இருக்கிறது. பரிகார ஸ்தலம். முதன் முதலில் பாலைக் கொண்டு நாகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும் போது ஊதா கலரில் பால் அவர் மீது வடிந்தது. அதன் பிறகு இரண்டு வருடம் வாரா வாரம் வெள்ளிக்கிழமை அன்று சென்று கொண்டிருந்தேன். சிறுவாணி சாலையிலிருந்து ஆலந்துறை பள்ளி அருகில் பிரியும் சாலை மிகவும் மோசமாக இருக்கும். ஒரு தடவை எரிச்சலில் முத்துவாளி அம்மனிடம் இனி ரோட்டைச் சரி செய்தால் தான் உன்னைப் பார்க்க வருவேன் என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். ஒருவருடம் அந்தப்பக்கம் போகவே இல்லை. 

ஒரு நாள் மாலையில் கோவிலின் அர்ச்சகர் சிவகுரு நாதனிடமிருந்து போன் வந்தது. ”நாளை மஹா சிவராத்திரி வருகிறது. அபிஷேகத்திற்குக் கரும்புப் பால் இந்தப் பக்கம் கிடைக்கவில்லை. ஆகவே நீங்கள் வாங்கிக் கொண்டு வாருங்கள்” என்றார். மனையாள் பரபரத்தார். எனக்கோ 80 கிலோ மீட்டர் தூரம் சென்று வர வேண்டுமே என்ற கடுப்பு. சாலை நன்றாக இருந்தாலும் பரவாயில்லை. வெகு மோசம் என்று கடுப்படித்துக் கொண்டிருந்தேன். வழியின்றி மறுநாள் நானும் மனையாளும் கரும்புச் சாருடன் கிளம்பினோம். ஆலந்துறை தாண்டி சாலையில் பயணித்த போது பள்ளமும் குழியுமான சாலை வரப்போகிறது என்ற கடுப்பில் சென்று கொண்டிருந்தேன். 

ஆனால் கோவில் வரை புத்தம் புதிய சாலை கருகருவென நாகப்பாம்பு போல பளபளத்துக் கொண்டிருந்தது. கோவிலின் அருகில் இருந்த பாலத்தை முதல் நாள் தான் திறந்து வைத்தார்களாம். அசந்து போனேன். அந்தப் பேரழகி மல்லிகைப் பூச்சூடி மோகனப் புன்னகையுடன் அழியாத பேரழகுடன் நகைத்துக் கொண்டிருந்தாள். நாகேஸ்வரர் பாம்பு படம் எடுக்க உலகை ஆளும் மன்னன் போல ஓங்கி உயர்ந்து பூக்களிடையே பூவாய் மலர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருந்தார். அன்றிலிருந்து அந்த அம்மாளுடன் எந்த வம்பு வழக்கும் வைத்துக் கொள்வதில்லை. 

இந்த வருடம் கரும்புச் சாறு வாங்கிக் கொண்டு சென்றோம். வழியெங்கும் காவல்துறையினர் வெயிலில் காய்ந்து கொண்டிருந்தனர். அவர்களும் சக மனிதர்கள் தானே. ஒரு நிமிடம் வெயிலில் நின்றால் கூட நமக்கு காய்ந்து விடும். அவர்களின் நிலைமை என்னவென்று சொல்ல. அவர்களின் அம்மாக்கள் அந்த நிலையில் அவர்களைப் பார்த்தால் பெத்த வயிறு எப்படி பதை பதைக்கும்? ஒருவர் வருகிறார் என்பதற்காக இத்தனை பேர் துயரப்பட வேண்டுமா? எத்தனை பேருக்கு என்னென்ன நோய்கள் இருக்கின்றனவோ? என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றனவோ? எல்லாம் மறந்து வெயிலில் நின்று வாடிக் கொண்டிருந்தனர். மனதுக்குள் பாரமாக இருந்தது.

முட்டத்துப் பேரழகனையும் பேரழகியையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு குருநாதரைத் தரிசிக்கலாம் என்று கிளம்பினால் அக்கப்போர் ஆரம்பித்தது. இந்தப் பக்கம் போ அந்தப்பக்கம் போ என்று அழிச்சாட்டியம் செய்தார்கள். ஒரு வழியாக வனத்துறை செக் போஸ்ட் அருகில் சென்று அப்படியே இடது புறம் திரும்பி விடலாம் என்றால் கார் பார்க்கிங்கை அதற்கு முன்பே ஒதுக்கி கார்களை அந்தப்பக்கம் விட்டுக் கொண்டிருந்தார்கள். டி.எஸ்.பி ஒருவரிடம் செக் போஸ்ட் வரை அனுமதியுங்கள் என்றால் முடியாது சார், பிரைம் மினிஸ்டர் பாதுகாப்பு புரோட்டோகால் என்று மறுத்து விட்டார். நானெப்படி சார் நடந்து செல்வது என்று கேட்டால் நாங்கள் தூக்கிக் கொண்டு போய் விடுகிறோம் என்றுச் சொன்னார். போலீஸ் தூக்கிக் கொண்டு போனால் முரசொலி மாறன் கதையாக மாறி விடும் அபாயமும், அய்யோ கொல்றாங்களேன்னு கத்தினால் யாரும் படம் பிடிக்க வரமாட்டார்கள் என்கிற காரணத்தாலும் அவரின் ஐடியாவை நிராகரித்து காரை திருப்பி வந்த வழியே மீண்டும் வந்து காருண்யா வழியாக ஆஸ்ரமத்தின் பின்புற வழிப்பாதைக்குச் சென்றேன்.

ஜோதி ஸ்வாமி மாட்டு வண்டியை பூட்டிக் கொண்டு வந்தார். அதில் ஏறி ஆற்று வழியாகச் சென்றால் ஆற்றில் சுத்தமாகத் தண்ணீர் இல்லை. காய்ந்து போய் கிடந்தது. ஆசிரமத்தில் அனேகர் வந்திருந்தனர். வெள்ளிங்கிரி மலைக்கு சென்று வந்தவர்கள் ஆங்காங்கே படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் ஆற்றில் குழி வெட்டி தண்ணீர் பிடித்து காக்காய் குளியல் போட்டுக் கொண்டிருந்தனர். குரு நாதரைத் தரிசித்து விட்டு வெளியில் வந்தால் டம் டம் என்று ஸ்பீக்கர்கள் அலற ஆரம்பித்தன. அங்கிருந்த குரங்குகள் படபடப்பில் எங்கோ சென்று மறைந்தன. அந்த இடமே அதிர ஆரம்பித்தது. வெள்ளிங்கிரி மலையின் அமைதி முற்றிலுமாக குலைய ஆரம்பித்தன. அதிரும் ஒலிகள், கார்களின் அசுர சத்தம். ஹெலிகாப்டர்களின் கொடூரச்சத்தம். மலையெங்கும் எதிரொலித்தன. மலையேறும் பக்தர்களை காவல்துறையினர் விடாது தடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு நிறுவனத்திற்காக ஆன்மீக வழிபாட்டினைத் தடுப்பது இந்தியாவில் மட்டுமே அதுவும் தமிழகத்தில் மட்டுமே நடக்கக்கூடிய விஷயம்.

சமீபத்தில் ஈஷா மீது பத்திரிக்கைகளில் வெளிவந்த கோவை புரபசர் பெண்கள் பிரச்சினையிலிருந்து ஈஷாவுக்கு செல்பவர்கள் கூட்டம் குறைந்திருந்தது. அதை ஈடுகட்டும் விதமாக ஜக்கி அவர்களின் புத்திசாலித்தனத்தினால் உருவானதுதான் ஆதியோகி சிலை. வெறும் எட்டு மாதங்களுக்குள் உருவாக்கப்பட்டவை என்று விழாவில் பேசினார். ஜக்கியின் அரசியல் பார்வை புத்திசாலித்தனமானது. ஜக்கி ஒரு யோகா மாஸ்டராகி இன்று பிரதமரையே தன் இடத்திற்கே வரவழைக்கும் வல்லமை பெற்றவராக இருக்கிறார் என்றால் அவரிடம் செல்லும் சாதாரண மனிதனின் நிலையை என்னவென்று சொல்வது?  மாதம் ஒரு இலட்சத்து ஐம்பாதாயிரம் சம்பளம் பெறும் ஒரு ஐடிகாரர் மாதம் தோறும் தன் சம்பளத்தில் ஏழு சதவீதத்தை ஈஷாவுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார். 

தெஹல்வாவில் வந்த ஜக்கியின் ஒரு ஹாபி (பொழுதுபோக்கு) கீழே:

He drives straight from Coimbatore to Bangalore, with people meeting him while he’s driving. This is his usual thing — he’ll take somebody in his car for a quick meeting. Ahead another car is waiting with somebody else, and he’ll drop off the first person and pick up the next.

Three hundred and fifty kilometres in four hours. Average speed: 87 km/h. He doesn’t stop, just gas station to gas station. Never takes a driver. Find somebody who can drive better than him and he’d let them drive! He can’t bear people who drive with fear and not with skill.

Everyone thinks it’s a Lexus... it’s a Toyota! A black Land Cruiser. Range: 650-700 km. He had it painted matt black when he bought it second-hand. The guy he got it from wanted to be seen in a Lexus and so imported its front guard. Now he’s been trying to get a Toyota one, but it’s difficult.

He could take the faster Salem road — it’s a four-lane highway now — but there’s a 25-30 km unfinished section and you can lose an hour there, easy. So he drives through the mountains instead, going through Dinbumghat and Chamrajnagar, and then a smaller route, villages and little-little towns and all those names he did a long time ago. Malavalli! My god, he was last here 32 years ago. He likes 
this drive.

Next to his seat there’s a bottle of mineral water, a hanky and a packet of paper napkins. There’s also his trusty menthol inhaler (his staff places it wherever he sits). There’s always this little nude white tube he’s frequently sniffing. They take off the packaging since he doesn’t want to be seen endorsing a brand. He loves the smell.


பிரைம் மினிஸ்டர் யோகா நோய்களிலிருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் விடுவிக்கும் என்று பேசினார். ஆச்சரியமாக இருந்தது. எந்த முனிவர் யோகா செய்து கொண்டிருந்தார்? எந்தக் குருகுலத்தில் யோகா சொல்லிக் கொடுக்கப்பட்டது? பதஞ்சலி யோகா என்பது உடலுக்கான உடற்பயிற்சியே தவிர ஆன்மீக விழிப்புணர்வுக்கான தகுதி அல்ல என்று விவரம் தெரிந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். 

உலகிற்கே அதீத ஆன்மீகத்தைச் சுட்டிக்காட்டிய புத்தர் எந்த யோகா செண்டருக்குச் சென்றார்? மாபெரும் மறை பொருளை தன்னகத்தே கொண்டு உலகின் ஒப்பற்ற ஒரு வழிகாட்டியாகத் திகழும் திருக்குரானை ஓதிய முஹம்மது அவர்கள் எந்த யோகா செண்டருக்குச் சென்று பயிற்சி பெற்றார்? ஜென் தத்துவத்தில் மனித மனங்களை ஆன்மீகப் பாதைக்குத் திருப்பி தன்னுணர்வு பெற வைத்தக் குருமார்கள் எந்தெந்த யோகா செண்டருக்குச் சென்று வந்தார்கள்? சித்தர்கள் என்றுச் சொல்கின்றோமே அவர்கள் எந்த யோகாவைச் செய்து வந்தார்கள்? யோகா என்பது உடற்பயிற்சிக்குத்தானே ஒழிய மனம் அமைதி பெற அல்ல என்பதினை நாட்கள் செல்லச் செல்லத்தான் புரிந்து கொள்ள முடியும்? 

விடாமல் பீட்சா பர்கர் தின்பவர்களுக்கு யோகா ஆரோக்கியத்தினைத் தந்திடுமா? அசைவ உணவையே விரும்பிச் சாப்பிடுவர்களுக்கு யோகா என்ன நலத்தைத் தரும்? சாப்பிடவே உணவில்லாத உகாண்டா ஏழைகளுக்கு யோகா பசியைத் தீர்க்குமா?  

பிரதமர் இவ்வாறு பேசியது எனக்கு ஆச்சரியத்தினைத் தந்தது. அரசியலும் ஆன்மீகமும் ஒன்று சேர்வது மக்களை முட்டாளாக்கத்தானே தவிர அவர்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஒவ்வொரு அக்கவுண்டிலும் கருப்பு பணத்தை மீட்டு வந்து கட்டுவேன் என்றுச் சொன்ன பிரதமர் நம் பணத்தை நம் அக்கவுண்டில் கட்ட வைத்த அரசியல் சாணக்கியத்தனம் மிகுந்தவர். அவர் இவ்வாறு பேசியதற்கும் ஏதாவது ஒரு சாணக்கியத்தனம் இருக்கலாம்.

ஆன்மீக வாதிகள் துயரப்படும் மனிதர்களுக்கு வழிகாட்டியாகத்தான் இருக்க வேண்டும். ஒரு வழிகாட்டி எப்போதும் தன்னை தலைவன் என்றுச் சொல்லிக் கொள்ளாது. வழிகாட்டி இதுதான் வழி என்று சுட்டிக் கொண்டிருக்கும்.

எதையும் நம்பித்தான் ஆவேன் என்பவர்களுக்கு இதைத்தான் நம்ப வேண்டும் என்றுச் சொல்கின்றவர்கள் தான் குருக்களாக இருப்பார்கள். தமிழர் இனத்தில் எத்தனையோ முனிவர்கள், ரிஷிக்கள், சித்தர்கள் தங்களை மறைத்துக் கொண்டு வழிகாட்டிகளாக மட்டுமே இருந்திருக்கின்றனர். புகழ் பெற்ற ஆன்மீக தலங்களில் தங்களை மறைத்து மூர்த்திகளை முன்னிலைப்படுத்தும் அவர்கள் எங்கே?

இவ்விடத்தில் உங்களுக்கு ஒரு கதை. மஹாபாரதக் கதையின் முடிவில் கலியுகம் தொடங்குகிறது. பாண்டவர்களும், கிருஷ்ணனும் வந்த வேலை முடிந்ததும் உலகை விட்டு விட்டு கிளம்பினர். ஆட்சியில் பரிட்சித்து அமர்கின்றார். ஒரு நாள் காட்டில் வேட்டையாடச் செல்லும் பரிட்சித்து சமிகர் என்றொரு முனிவரின் குடிலுக்குள் நுழைகின்றார். அவர் தியானத்திலிருக்கிறார். அவர் பலமுறை முனிவரின் கவனத்தை திருப்ப முயன்றும் இயலவில்லை. ஆகவே கடுப்பில் குடிலின் அருகில் செத்துக் கிடத்த பாம்பினை எடுத்து தியானத்திலிருந்த முனிவரின் கழுத்தில் போட்டு விடுகிறார். அதை அப்போது அங்கு வந்த முனிவரின் மகன் சிரிங்கன் பார்த்து விட்டு கடும் கோபத்த்தில் இன்றிலிருந்து ஏழாவது நாள் பரிட்சித்து பாம்பு கடித்து இறந்து போவான் என்று சாபமிடுகின்றான். ஏழாவது நாளில் பரிட்சித்து பாம்பு கடித்து இறந்து போகின்றான். கதை முடிந்து விட்டது. 

இப்போது நிகழ்காலத்திற்கு வருவோம். இது தானே உண்மை. இந்த நிமிடம் தானே உண்மை. நாளை என்பது வரப்போவது? அப்போது நாமிருப்போம் என்பதற்கு உத்தரவாதமில்லை. நேற்று என்பது நடந்து விட்டது. அதற்குள் நம்மால் நுழைந்து செயல்பட முடியாது. ஆகவே ... ! தொடருங்கள்...!!!

குருநாதர் இருக்கும் இடம் சப்த ரிஷிகள் வந்து தங்கி அங்கிருந்து ஆகாய மார்க்கமாக ஏழாவது மலையில் குடிகொண்டிருக்கும் வெள்ளிங்கிரி அப்பனைத் தரிசிக்கச் செல்லும் பகுதி. வெள்ளிங்கிரி மலை ரிஷிகளும், முனிவர்களும், யோகிகளும் தவம் செய்யும் இடம். மலைக்குச் சென்று வந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். மலையிலிருந்து வரும் ஏழு வாத்திய இசைக்கோர்வைகள். ஓங்காரமிட்டு மலை தேடி வரும் பக்தர்களுக்கு அருளை அள்ளி வழங்கும் தென் கயிலையின் அமைதியை ஸ்பீக்கர் ஒலிக்க விட்டுக் கெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆன்மீக விழிப்புணர்ச்சி பெற அமைதிதான் தேவை. அதற்காகத்தான் யோகிகள் அமைதி நாடி காடுகளுக்குள் சென்று விடுவார்கள். ஆனால் இங்கோ ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அமைதி இல்லா இடத்தில் அமைதி ஏற்படுமா? ஆன்மீக விழிப்புணர்ச்சி ஏற்பட்டு தன்னை அறிதலும் நடக்குமா? நடக்கக்கூடிய சாத்தியங்களும் இருக்கின்றனவா? 

தென்கயிலையில் தியானமேற்றிக் கொண்டிருக்கும் வாசியோகிகளின் அமைதியையும், ரிஷிகளின் தவத்தையும் கலைக்கும் எவரும் அவர்களின் சாபத்தினை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டிய விதி இருக்கிறது. தென் கயிலையின் அமைதியைக் கெடுக்கக் காரணமாக இருந்தவர்களின் குடும்பங்கள் சிதறியிருக்கின்றன. அரசியல் தலைவர்கள் முகவரி இல்லாமல் போய் இருக்கின்றார்கள். நான்கு நாட்களாக விடாது தென் கயிலையை அமைதி குலைத்திருக்கிறார்கள். முனிவர்களின், ரிஷிக்களின் சாபம் சும்மா விட்டு விடாது என்றே நினைக்கிறேன். முனி சாபம் பலித்தே ஆக வேண்டும். பரிட்சித்து மன்னன் கதை அதைத்தான் சொல்கிறது.

கேதார்நாத் உங்கள் அனைவருக்கும் நினைவிலிருக்கும் என நம்புகிறேன். அயோக்கியத்தனம் அதிகமானதால் அதுவே தன்னை ஒரு உலுப்பு உலுப்பிக் கொண்டு அழித்துச் சுத்தப்படுத்திக் கொண்டது. அதுபோல தென் கயிலையும் தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ளும் என்று நம்புகிறேன்.

அதற்குச் சாட்சியாக கீழே ஒருவர் எழுதி இருப்பதை இணைப்பினைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள்.

http://ramananvsv.blogspot.in/2013/06/blog-post_30.html

என் மீது எரிச்சலில் இருப்பவர்களுக்கு ஒரு பாட்டினை சமர்ப்பிக்கின்றேன். சிவராத்திரியன்று எப்படி கொண்டாட வேண்டுமென்பதற்கு பயிற்சி பெற கீழே இருக்கும் பாடலினைப் பாருங்கள். சீக்கிரம் முக்தி பெற்று விட எளிய பயிற்சி இது. இந்த முக்தியை விட வேறு முக்தியெல்லாம் நமக்கெதுக்கு???