குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label நெடுவாசல் ஹைட்ரோ கார்பன். Show all posts
Showing posts with label நெடுவாசல் ஹைட்ரோ கார்பன். Show all posts

Thursday, March 2, 2017

கருப்பு தங்கம் - அரசியல் துரோக சூழ்ச்சியில் மக்கள்

என்னால் இப்படித்தான் பார்க்க முடிகிறது. நெடுவாசல் கிராமத்தை மட்டுமல்ல தமிழகத்தையே சுடுகாடாக்காமல் மத்திய அரசு விடாது. தமிழர்களை அகதிகளாக்கி அலைய விடாமல் விடமாட்டார்கள் என்பதை காங்கிரஸ் கட்சியும் சரி பாஜகவும் சரி தொடர்ந்து செய்து வருவார்கள். காரணம் தமிழகத்தின் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் கருப்புத் தங்கம். தற்போதுதான் மீடியாக்களில் தமிழகத்தில் புதையுண்டு கிடக்கும் கருப்புத் தங்கம் பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாக செய்திகள் கசிய ஆரம்பிக்கிறது.

இதற்காகத்தான் ஓ.என்.ஜி.சி நிறுவனம் தன் ஆராய்ச்சியை தமிழகமெங்கும் நடத்தியது. ஆராய்ச்சி நடத்திய காலங்களில் டெக்னாலஜி வளரவில்லை. டிவி செய்திகளும் பத்திரிக்கைச் செய்திகளும் கிடைப்பதற்கும் உலகளாவிய அறிவியலை அனைவரும் தெரிந்து கொள்ளும் வசதியும் இல்லாத காலத்தில் ஓ.என்.ஜி.சி ஆராய்ச்சி நடத்தியதால் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. அதை அரசியல் கோடிகளும்,கோடிகளுக்கு மாமா வேலை பார்க்கும் மாமாக்களும் ”அப்போது சும்மா இருந்தீர்கள், இப்போது ஏன் எதிர்க்கின்றீர்கள்?” என்று மடத்தனமாக பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை என்பதை நான் இதனுடன் சேர்த்து பார்க்க விரும்புகிறேன். ஏனென்றால் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் இதுதான் உண்மை எனக் காட்டுகிறது. மழை அதிகம் பெய்தால் வேறு வழி இன்றி கர்நாடகா தண்ணீர் திறந்து விடுவது இயற்கையை எதிர்க்க முடியாமல் தான். காவிரி தண்ணீருக்கும் இந்தத் தமிழகத்தின் கருப்புத் தங்கத்துக்கும் நிச்சயம் தொடர்பு இருந்தே ஆக வேண்டும். அது அப்படித்தான் இருக்கமுடியும்.

காவிரியில் தொடர்ந்து தண்ணீர் வந்தால் முப்போகமும் தமிழகத்தில் விளையும். அவ்வாறு விளைய ஆரம்பித்தால் கருப்புத்தங்கம் பற்றி பேச்சே எடுக்க முடியாது. வறட்சி, ஏழ்மையை உருவாக்கி விட்டால் மக்களை எளிதில் மடக்கி விடலாம் என்ற திட்டமாகக் கூட இருக்கலாம். 

சுப்ரீம் கோர்ட் தண்ணீர் திறந்து விடு என்று உத்தரவு போடுகிறது. ஆனால் கர்நாடகா அதைச் செய்யவில்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்டவுடன் சசிகலாவைக் கைது செய்கிறது காவல்துறை. தமிழகத்தில் மட்டும் சட்டம் காப்பற்றப்பட வேண்டும் ஆனால் கர்நாடகத்தை எவரும் கேள்வி கூட கேட்கவில்லை. மத்திய அரசு சட்டத்தை மதிக்காத மாநில அரசிடம் விளக்கம் கூட கோரவில்லை. ஆனால் தமிழகத்தில் எது நடந்தாலும் கேள்வி கேட்கிறது. இதிலிருந்து தெரிகிறதா கருப்புத்தங்கத்தின் அரசியல்? காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காத காரணம் தமிழகத்தின் அடியில் இருக்கும் கருப்புத்தங்கம் மட்டுமே காரணமாக இருக்க வேண்டும்.

பாஜகவின் இல.கணேசனின் பேச்சு இதை உறுதிப்படுத்துகிறது. ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமெனில் ஊர் அழியலாம் என்று பேச இந்தக் கருப்புத் தங்கமும் அதன் மூலம் கிடைக்கும் பலன்களும் தான் காரணமாக இருக்க முடியும்.

காவிரி வழக்குகள் ஆண்டாண்டுகாலம் நீதிமன்றத்தில் தேங்கிக் கிடப்பதிலும் ஏதோ ஒரு அரசியல் சூழ்ச்சி இருக்கிறது என்றே நம்பத்தோன்றுகிறது. தாஜ் ஹோட்டல் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் அதிரடியாக தீர்ப்பு வழங்கிய வேகம் காவிரி வழக்குகளில் எங்கே சென்றன? போபால் விஷ வாயு வழக்கில் 15000 பேர் கொல்லப்பட்டார்கள். குற்றவாளி எந்த தண்டனையும் இன்றி சுகமாக இறந்து போனார். சாதாரண முறையில் தண்டனை பெற்று வெளி வந்தார்கள் அனைத்துக் குற்றவாளிகளும். 

மக்கள் கொல்லப்பட்டால் கூட நீதிமன்றத்தால் எதையும் செய்து விட முடியாது என்பதை இந்த வழக்கும், வழக்கு நடத்தப்பட்ட விதமும் சொல்லிக் கொண்டே இருக்கிறது.

மக்கள் அரசு அதிகாரத்தின் முன்பு அடிமைகள் என்பதை போபால் விஷவாயு வழக்கு சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறது. நீதிமன்றங்கள் அரசியலின் முன்னே எதுவும் செய்ய முடியாது. உத்தரவு போட்டாலும் நிறைவேற்றுவது அரசு தானே? அந்த உத்தரவு அரசுக்கு எதிராக இருந்தால் எந்த அரசு நிறைவேற்றும்? நீதிமன்றத்தால் என்ன செய்து விட முடியும்? சட்டம் அரசியலின் முன்னே வாய் மூடி நிற்கின்றது. 

அரசியலில் சுயநலக்கோடிகள் கூட்டம் மிகுந்திருக்கிறது. வாரிசுகள் வரிசை கட்டி அரசுக்கட்டிலில் அமர போட்டி போடுகின்றார்கள். கூடவே மாமாக்களையும் சேர்த்துக் கொண்டு குதிரையின் முன்னே கட்டித் தொங்க விடப்படும் கொள்ளுப் பையைப் போல பதவி, பணம் இரண்டையும் காட்டி தங்கள் பக்கம் நியாயம் இருப்பதாக பிறரைப் பேச வைக்கின்றார்கள். 

நீதிமன்றத்தில் வழக்குப் போட்டாலும் ஜெயிக்க முடியாது. ஏனென்றால் நீதிமன்றங்கள் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்றுச் சொல்லிய தீர்ப்புகள் இருக்கின்றன. மத்திய அரசின் கொள்கை முடிவு தமிழக மக்களை கூண்டோடு கைலாசம் அனுப்புவது அல்லது அகதிகளாக தமிழர்களை ஓட விடுவது. இந்தக் கொள்கை முடிவினை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளத்தானே செய்யும்? மக்கள் கொல்லப்படனும் என்று அரசு நினைத்தால் அதைக் கூட அரசின் கொள்கை முடிவு என்றுச் சொல்லி நீதிமன்றங்கள் தீர்ப்பு எழுதி விடும். பாஜகவின் இல.கணேசன் தான் அரசின் கொள்கை என்னவென்று தெளிவாகப் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றாரே? இதை விட வேறு என்ன சாட்சியம் தேவைப்படுகிறது?

தமிழகத்தில் இப்போது இருக்கக் கூடிய அரசியல் நிலவரம் சரியில்லை. பாஜகவின் ஆட்டி வைக்கும் பொம்மை அரசியல் தான் நடைபெறுகிறது என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. அம்பிக்களின் பத்திரிக்கைகள் அனைத்தும் பாஜகவுக்கு ஆதரவாகத்தான் எழுதுவார்கள். பேசுவார்கள். மக்களைத் திசை திருப்புவார்கள். அம்பிக்களின் மீடியாவும், சுயநலம் மட்டுமே பொது நலமென கொள்கை கொண்ட ஒரு சில தமிழ் மீடியாக்களும் எல்லாவற்றையும் மறைத்து விடுவார்கள். 

மத்திய அரசின் அசைவுகளுக்குத் தகுந்தாற்போல அசையும் மாநில அரசினால் மக்களுக்கு நன்மை செய்து விட முடியும் என்று நினைக்க முடியவில்லை. சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை, நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றுச் சொல்வதெல்லாம் அரசியல் என்றே நினைக்கிறேன். பெட்ரோலியத்துறையின் அரசாணைகள், மாற்றப்பட்ட விதிமுறைகள் எதையும் எவரும் படிக்கவில்லை என்றே நினைக்கின்றேன். ஏற்கனவே ஏலம் விட்டு இந்த நிறுவனத்துக்கு தான் இந்த இடம் என்று அனுமதி கொடுத்து விட்டது மத்திய அரசு. அதுமட்டுமல்ல மக்களுக்கு எந்த விதக் கெடுதலும் ஏற்படாது என்று செய்தி அறிக்கையும் வெளியிடுகிறது. மத்திய அரசுக்குக் கட்டுப்பட்ட மாநில அரசு அனுமதி தர மாட்டோம் என்கிறது என்றுச் சொல்வதில் இருக்கும் வேறுபாடுகளைக் கவனிக்க வேண்டும்.

பாஜகவின் ஒலிபெருக்கிகள் ”சமூக விரோதிகள் சேர்ந்து விட்டார்கள், கலவரம் நடக்கும், தியாகம் செய்ய வேண்டும், பெட்ரோலிய இறக்குமதி குறைக்கப்பட வேண்டும்” என்றெல்லாம் விடாது ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் கேஸ் விலையை அதிரடியாக உயர்த்துகிறது மத்திய அரசு. இனி பெட்ரோலின் விலையையும் அதிரடியாக உயர்த்துவார்கள். இறக்குமதி அதிகமாகிறது என்பார்கள். பொருளாதார விற்பன்னர்கள் விலையேற்றத்துக்கு காரணங்களை அடுக்குவார்கள். விலை குறைக்கப்பட வேண்டுமெனில் உள் நாட்டுப் பெட்ரோலிய உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டுமென்ற கட்டாயத்தை உருவாக்குவார்கள். மக்களும் வேறு வழி இன்றி நெடுவாசல் கிராமம் மட்டுமல்ல தமிழக விவசாயத்தைப் பலி கொடுக்க ஆதரவு தர ஆரம்பித்து விடுவார்கள்.

இதில் ஒரு நன்மை என்னவென்றால் பெட்ரோலியத்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் இந்த நேரம் சன் பெட்ரோ கெமிக்கல்ஸ், டகால்டி பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனங்கள் தமிழகத்தைச் சுடுகாட்டுச் சாம்பலாக்கி இருக்கும். மலையையே விழுங்கியவர்கள் இதையெல்லாம் விட்டிருப்பார்களா? இதன் காரணமாகத்தான் மக்களுக்கு ஆதரவாக எதிர்க்கின்றார்களோ என்னவோ தெரியவில்லை. எதிலும் பலனில்லாமல் வெறுமனே வேடிக்கைப் பார்ப்பதில் கேடிகளுக்கு என்ன லாபம்? ஆற்று மணல் எடுக்க காவிரியில் தண்ணீர் திறக்கக் கூடாது என்று அரசியல் கேடிகளுக்குப் பணம் கொடுத்தார்கள் என்று செய்திகள் கசிந்தன. நெருப்பு இல்லாமலா புகை வரும்?

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது தமிழக பூமியின் அடியில் கிடக்கும் கருப்புத் தங்கத்தை எடுக்கும் வரை மத்திய அரசு விடாது ஓயாது என்றே நினைக்கத் தோன்றுகிறது. தென் தமிழகம் பாலைவனமாகி தமிழர்கள் அகதிகளாகப் போகும் நாட்கள் கண்ணில் தெரிய ஆரம்பித்திருக்கிறது.

மக்களின் போராட்டங்கள் நூற்றுக் கணக்கான் உயிர்களைப் பலி வாங்க ஆரம்பித்தால் பிசுபிசுத்துப் போய் விடும் என்று அரசியல் கோடிகளுக்கு நன்கு தெரியும். மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் என்றும் தெரிந்தும் அனுமதி கொடுக்கிறது மத்திய அரசு என்றால் அவர்கள் சொல்லும் ஜால்ஜாப்புகளை நம்ப வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பது ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை மாதிரி தான் இருக்கிறது. 

ஆடு - மக்கள், ஓநாய் - அரசு.  இறுதியில் வெற்றி யாருக்கு என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

1000 கோடி ரூபாய் வருமானம் கொண்டவர்கள் கட்சி மாறி கட்சிக்கு வந்து அமைச்சராகி அல்லக்கை ஆகி பின்னர் நான் நல்லவன் என்றுப் பேசிக் கொண்டலைகின்றார்களே இவர்களைத்தான் அரசியல் கோடிகள் என்று எழுதி இருக்கிறேன். கோடிகள் இல்லையென்றால் குப்பனும் சுப்பனும் கல்வி அமைச்சராக முடியுமா? இல்லை திடீர் புனிதர் வேஷமும் போட முடியுமா? வயிற்றுப்பாட்டுக்கு வழி இல்லாதவர்கள் தானே தர்மம் பற்றி பேசுவார்கள். நாங்கள் நல்லவர்கள் என்று கோடிகள் தான் பேசுவார்கள். பணத்தின் வாசம் சாக்கடையையும் மணக்க வைத்து விடும் அல்லவா?

Sunday, February 26, 2017

நெடுவாசலையும் நெடுவாசல் மக்களையும் காப்பாற்றுங்கள்

நெடுவாசல் கிராமம் இந்தியாவின் தலைப்புச் செய்தியாக மாறும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. எனது ஊர் அது. நான் பிறந்த ஊர். எனது தந்தை மாணிக்கதேவர், அவரின் தகப்பனார் அருணாசலத்தேவர், அவரின் தகப்பனார் நாடதேவர் இப்படியாக வாழையடி வாழையாக வாழ்ந்த ஊர். எங்கள் குடும்பத்திற்கு நாடி வீடு என்றொரு பட்டப்பெயரும் உண்டு. எனது வீட்டுக்கு முன்னால் நெடுவாசல் கிராமத்தின் தெய்வமான நாடியம்மன் இருக்கிறார். நெடுவாசல் திருவிழா சுத்துப்பட்டு ஊரெங்கும் புகழ் பெற்றது. படத்தேர் திருவிழாவின் அசத்தல் நிகழ்ச்சி.

நெடுவாசலைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் கீழே இருக்கும் கூகுள் மேப் இணைப்பினைக் கிளிக் செய்து சுற்று வட்டாரங்களைப் பாருங்கள். எங்கெங்கும் பசுமை மண்டிய விவசாய பூமி எம் ஊர்.


என் சிறு வயதில் ஓ.என்.ஜி.சி வண்டிகள் அடிக்கடி வந்து செல்லும். வெடி வைப்பார்கள். வெடிக்கும் போது நடக்கக்கூடாது என்பார்கள். நாடங்குளத்தருகில் தான் மண்ணெண்ணெய் டெஸ்ட் செய்தார்கள். அப்போதெல்லாம் இந்தக் காலத்தில் இருப்பது போன்று டெக்னாலஜி வளர்ச்சி ஏதும் இல்லை. அரசாங்கம் மண்ணெண்ணெய் டெஸ்ட் செய்கிறது என்ற பெருமையில் மட்டுமே ஊர் மக்கள் இருந்தார்கள். நம்ம ஊரில் மண்ணெண்ணெய் இருக்கிறதாம் என்ற பெருமை மட்டுமே. ஆனால் அதனடியில் கொலைகார எண்ணம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவில்லை. அந்தளவுக்கு அப்பாவித்தன்மை கொண்டவர்கள் எம் மக்கள். நெல், உளுந்து, நிலக்கடலை, எள், சிறுதானியப் பயிர்கள், மா, பலா, வாழை, காய்கறிகள் என எங்களூரில் விளையாத உணவுப்பொருட்களே இல்லை எனலாம். தென்னந்தோப்புகள் அதிகம். தேங்காய்கள் அதிகம். உலகெங்கும் நாங்கள் விளைவிக்கும் விவசாயப்பொருட்கள் உண்ணப்படுகின்றன. புதுக்கோட்டை மாவட்டம் வறட்சி மாவட்டம் என்பார்கள். ஆனால் நெடுவாசல் காவிரி ஆற்றின் கடைமடைப் பகுதி. காவிரி ஆறு நெடுவாசலின் கிழக்கே செல்கிறது. ஊருக்கே உணவளிக்கும் உன்னத ஊர் நெடுவாசல்.


எனது சகோதரி ஜானகியும் சித்தி செவையாளும் போராட்டக்களத்தில்

எக்கானமிக்ஸ் டைமில் 2016ம் வருடம் ஒரு செய்தி வெளியானது. மத்திய அரசின் ஓ.என்.ஜி.சியால் கண்டறியப்பட்ட எண்ணெய் வளமிக்க பகுதிகளில் ஆயில் எக்ஸ்புளோரேஷனுக்காக வெளி நாட்டு நிறுவனங்களை ஏலத்தில் பங்கு கொள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர் மற்றும் துபாய் போன்ற நாடுகளில் ரோடு ஷோவை நடத்தி வந்திருக்கிறது. இத்தனை செலவு செய்து விட்டு சும்மா இருக்குமா அரசு?  அதன் பிறகு நடத்தப்பட்ட ஏலத்தில் தற்போது ஜெம் லேபரட்டரீஸ் பிரைவேட் நிறுவனத்திற்கு நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்றுச் சொல்லி மீத்தேன் வாயுவை எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான பகுதி என்று மத்திய அரசுக்குத் தெரியாதா? இல்லை பாரதப்பிரதமருக்குத்தான் தெரியாதா? எல்லாம் அனைவருக்கும் தெரியும். உலகிற்கே உணவளிக்கும் பகுதி இது என்று அனைத்து அரசியல்தலைவர்களுக்கும் நன்கு தெரியும். தெரிந்தும் செய்கின்றார்கள் என்றால் என்ன காரணம்?

போராட்டக்களத்தில் இருப்பவர்களை பிரிவினை வாதிகள் என்கிறார் பாஜகவின் ஹெச்.ராஜா. இல.கணேசன் ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமெனில் ஒரு மாவட்டம் தியாகம் செய்யணும் ஒரு மாவட்டம் நன்றாக இருக்க வேண்டுமெனில் ஒரு கிராமம் தியாகம் செய்ய வேண்டும் என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றார். பாஜகவின் மாநிலத் தலைவர் இதுவரை அமைதியாக இருந்து விட்டு இப்போது போராடுகின்றார்கள் என்கிறார். ஆக இவர்களின் பேட்டியை வைத்துப் பார்க்கும் போது நெடுவாசலை சுடுகாடாக்க முடிவே செய்து விட்டார்கள் என்றே தெரிகிறது. மத்திய அமைச்சர்கள் மக்களின் விருப்பமின்றி எந்தத் திட்டமும் செயல்படுத்த மாட்டோம் என்கிறார்கள். ஆனால் ஆளும் பிஜேபி அரசின் அங்கத்தினர்கள் மத்திய அமைச்சர்களின் பேச்சுக்கு எதிராகப் பேசுகின்றார்கள். போராடினால் தேசத்துரோகி என்கிறார்கள் பிஜேபியினர்.

ஒரு ஊரையே அழித்துத்தான் பிறரின் அடுப்பு எரிய வேண்டுமா? ஊர் மக்களைக் கொன்றொழித்துதான் இந்திய மக்கள் உணவு சமைக்க வேண்டுமா? இப்படியெல்லாம் பேச இல.கணேசன் அவர்களின் மனது என்ன கல்லா? ஏன் இத்தனை வன்மமாகப் பேசுகின்றார் என்றே தெரியவில்லை. உணவை விட இயற்கை எரிவாயு தான் அவசியமா? விவசாயத்தை விட அடுப்பு எரிக்கவும், கார்கள் ஓட்ட பெட்ரோல் தான் அவசியமா? இல.கணேசன் அவர்கள் உணவுக்குப் பதிலாக இயற்கை எரிவாயுவை உண்கின்றாரா? அவர் குடும்பத்தாரும் அப்படித்தான் இயற்கை எரிவாயுவை குடிக்கின்றார்களா? என்று தெரியவில்லை.

மத்திய அரசு மக்களை எப்படி ஏமாற்றுகிறது என்பதை புதிய தலைமுறையில் வெளிவந்திருக்கும் இந்தச் செய்தி அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகிறது.

செய்தி கீழே:


மத்திய அரசின் மக்கள் நயவஞ்சகத் திட்டம்

ஷேல் கேஸ் திட்டத்தை, புதுபுதுப் பெயர்களில் செயல்படுத்த, முயற்சி தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு குத்தாலம் உள்ளிட்ட மிகச்சில இடங்களில் ஷேல் கேஸ் எடுக்கப்போவதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது புதிய தலைமுறை. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட விழிப்புணர்வு மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பால், திட்டத்தை நிறுத்திவைத்தது ஒஎன்ஜிசி (ONGC). இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் என்ற பொதுப்பெயரில், கைவிடப்பட்ட அந்த ஷேல் கேஸ் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

ஷேல் கேஸ் எனப்படும் பாறை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு, காவிரிப் படுகையில் அமைந்திருக்கும் குத்தாலம், சிதம்பரம் அருகில் உள்ள புவனகிரி, அடியக்காமங்கலம், கமலாபுரம், கூத்தாநல்லூர், ராமநாதபுரம், பெரிய நரிமனம், சீர்காழி அருகே உள்ள காளி ஆகிய இடங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டவை ஆகும். இதில், காவிரி படுகையை மையப்படுத்தி, இரண்டு மண்டலங்கள், பெயரிடப்படாமல் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதில், முதல் மண்டலம், 948 சதுர கிலோமீட்டர் பகுதியை உள்ளடக்கியதாக உள்ளது. பெயரிடப்படாத இரண்டாவது மண்டலத்தின் எல்லை, ஆயிரத்து 542 சதுரகிலோ மீட்டர் பரப்பளவை கொண்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்தில் ஆரம்பிக்கும் இந்த புள்ளியானது, வடக்கு தெற்காக, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை தாண்டி முடிவடைகிறது.

ஹைட்ரோகார்பன் திட்டம் என்ற பெயரில் குறிக்கப்பட்டுள்ள, பெயரிடப்படாத, இரண்டாவது மண்டலத்தின் வரைபடத்தில், நரிமனம், திருவாரூர், கீழ்வேளூர், அடியக்காமங்கலம், பள்ளிவார்மங்கலம், விஜயாபுரம், கமலாபுரம், நன்னிலம், கூத்தாநல்லூர், பூண்டி, மாத்தூர், கோவில்களப்பால், திருக்காலூர், பெரியகுடி, துளசபட்டினம் ஆகியவையும், தஞ்சாவூர் காவிரி துணை படுகை பகுதிகள் என குறிப்பிடப்பட்டு, அதில், வடதெரு, நெடுவாசல் மற்றும் கிருஷ்ணாபுரமும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஷேல் கேஸ் எடுக்கப்போவதாக பட்டியலிப்பட்டுள்ள பகுதிகளின் மொத்தப் பரப்பளவு (ஆதார ஆவணங்களின்படி) 3 லட்சத்து 81 ஆயிரம் ஏக்கர். 40க்கு 40 என வைத்தால், சராசரியாக 150 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதிகளை தன்னகத்தே கொண்டது, முழுமையான பெயரிடப்படாத, இரண்டாவது மண்டலமாகும். இந்த இரண்டாவது பகுதியில், ஷேல் கேஸ் எடுக்க வழங்கப்பட்டிருக்கும் உரிமங்கள், வருகிற 2019ஆம் ஆண்டோடு காலவதியாகிவிடும். இதன் காரணமாக, ஹைட்ரோகார்பன் என்ற பொதுப்பெயரில், கச்சா எண்ணெய் எடுப்பதாக கூறி, ஷேல் கேஸ் எடுக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவே, புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ள ஆதாரங்கள் கூறுகின்றன.

இந்த இரண்டாவது மண்டலத்தைப் போன்றே, முதல் மண்டலத்திற்கான பெயர்களும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இரண்டாவது மண்டலத்தில் இடம்பெற்ற பகுதிகளை தவிர்த்து, பெயரிடப்படாத முதல் மண்டலத்தில், ஷேல் கேஸ் எடுக்க, கடலூர் மாவட்டத்தில் 14 இடங்களும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9 இடங்களும், அரியலூர் மாவட்டத்தில் 6 இடங்களும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 இடங்களும், திருவாரூர் மாவட்டம் ஒரு இடமும் இனங்காணப்பட்டு குறிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கான ஷேல் கேஸ் எடுக்கும் உரிமமும், புதிய தலைமுறைக்கு கிடைத்திற்கும் ஆவணத்தின்படி, வருகிற 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தோடு முடிவடைகிறது.

ஷேல் கேஸ் எடுக்க வெளிப்படையாக 8 இடங்களின் பெயர்கள் தெரியவரும் நிலையில், நெடுவாசல் உள்ளிட்ட 51 இடங்கள், பெயர் வெளியிடப்படாமலேயே, ஷேல் கேஸ் எடுப்பதற்காக, இனங்காணப்பட்டு குறிக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் 61 இடங்களில் ஷேல் கேஸ் எடுக்கப்பட இருப்பது, அதற்கான ஆய்வு பணிகள், அடுத்தடுத்த கட்டங்களில், விரைந்து அனுமதி வழங்கப்பட்டு தொடங்கப்படலாம் என்பதே, புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ள ஆதார ஆவணத்தின்படி தெரியவரும் பேரதிர்ச்சி தரும் உண்மையாகும்.

செய்தி இணைப்பு : http://tv.puthiyathalaimurai.com/detailpage/ImportantNews/special-news/35/81826/shell-gas-project-in-the-name-of-hydrocarbon-gas-stunning-truth

இந்தியமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். நெடுவாசல் போன்ற தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இயற்கை எரிவாயு எடுத்து மொத்தமாக தமிழக நெற்களஞ்சியத்தை சுடுகாடாக்கி பீஹார் போன்ற ஏழைகள் நிறைந்த மாநிலமாக மாற்றிட மத்தியில் ஆளும் அரசு கடும் பிரயத்தனங்களைச் செய்து வருகிறது.

அதிகாரத்தில் இருப்பதற்காக இந்தியாவின் நெற்களஞ்சியத்தை அழிக்க தனி நபர் சார்ந்த நிறுவனங்களின் துணை கொண்டு மத்திய அரசின் இத்தகைய ரகசிய செயல்பாடுகளை அதி தீவிரமாக எதிர்க்க வேண்டும். தமிழக நெற்களஞ்சியத்தில் வாழும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முதலாளி. சொந்தத் தொழில் செய்யும் முதலாளிகள். நெற்களஞ்சியத்தை அழித்து ஒழித்து விட்டால் மொத்தமாக வேலையிழந்து பஞ்சைப் பராரியாக ஊரு விட்டு ஊருக்கு பஞ்சம் பிழைக்கச் செல்வார்கள் என்பதாலும் அப்போது வெகு எளிதாக அரசியல் லாபம் பெறலாம் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது.

உணவா? அடுப்பெரிக்க வாயுவா? எது வேண்டும் உங்களுக்கு என்பதை முடிவெடுங்கள்.

மத்திய அரசின் கொடூரத்தின் முன்னே அதிகாரத்தின் முன்னே எழும் எங்கள் ஊரின் அவலக்குரலைக் கேளுங்கள். உண்ண உணவு, இருக்க இடம், உடுத்த உடை, அமைதியான வாழ்க்கை வாழ்ந்து பிறருக்கும் உணவளித்து வரும் எங்களை மத்திய அரசின் அரக்கப் பிடியில் இருந்து காப்பாற்ற வாருங்கள்.

வருவீர்கள் என்கிற நம்பிக்கையோடு உங்களின் ஆதரவுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.

இங்கனம் நெடுவாசல் மக்களின் ஒருவனாக !