Monday, March 1, 2021
நிலம் (77) - சென்னை செங்கல்பட்டு பத்திரப்பதிவு தடை செய்யப்பட்ட கிராமங்கள்
Monday, February 15, 2021
36வது ஆண்டு சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகளின் குருபூஜை விழா அழைப்பிதழ்
அன்பு நண்பர்களே,
நிகழும் சார்வரி வருடம், மாசி மாதம், 12ம் தேதி (24.02.2021) அன்று எம் குருவின் 36வது ஆண்டு குருபூஜை விழா சிறப்புற நடைபெற இருக்கிறது.
கீழே அழைப்பிதழ் இணைத்துள்ளேன்.
வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் கோவையில் அமைந்திருக்கும் எம் குருவின் ஜீவசமாதியில் நடைபெற இருக்கும் விழாவிற்கு தாங்களும், தங்கள் நண்பர்களும், குடும்பத்தாரும், உற்றாரும், உறவினரும், சுற்றாரும் வந்து குருவருள் பெற்று வளம் பல பெற்று மகிழ்ச்சியான வாழ்வு வாழ அன்புடன் அழைக்கிறேன்.
Monday, January 25, 2021
நிலம் (76) - கோவை மேற்கு மண்டல ரிங்க் சாலை நிலமெடுப்பு
கோவை மாவட்டத்தில் பேரூரிலிருந்து மேட்டுப்பாளையம் வரை மேற்கு ரிங்க் ரோடு அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
இந்த ரிங்க் ரோடு
செட்டிபாளையம், நஞ்சுண்டாபுரம், தீத்திபாளையம், சுண்டக்காமுத்தூர், நரசிம்மன் நாயக்கன்பாளையம்,
குருடாம்பாளையம் வடவள்ளி, சோமையாம்பாளையம், பன்னிமடை, கூடலூர், சிக்கதாசம்பாளையம் ஆகிய
கிராமங்களின் வழியே செல்கின்றது. மேற்படி கிராமங்களில் உள்ள சர்வே எண்களில் தான் நிலமெடுப்பு
மற்றும் அதற்கான இழப்பீடு தொகையினை பிரைவேட் நெகோஷியேசன் வழியில் செய்கிறார்கள்.
இந்தக் கிராமங்களில்
நிலம் வாங்க விரும்புவர்கள் மேற்கண்ட ரிங்க் ரோடு செல்லும் இடங்களைத் தவிர்த்து விட்டு
வாங்கவும். இந்த நோட்டிபிகேசன் இன்னும் ஒவ்வொரு துணை பதிவு அலுவலகங்களிலோ அல்லது பட்டாவிலோ
அப்டேட் செய்யவில்லை என்பதை மறந்து விட வேண்டாம்.
அதுமட்டுமின்றி
இந்த ரிங்க் ரோட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் அதாவது 300 அடி தொலைவில் நிலம் வாங்குவதாக
இருந்தால் வாங்கவும். 100 மீட்டருக்குள் வாங்க வேண்டாம்.
மேலும் இந்த ரிங்க்
ரோட்டின் அருகில் அமைந்திருக்கும் அரசு தொடர்பான எந்த நிலங்கள் இருப்பினும் 100 மீட்டர்
தொலைவில் இருப்பதாக பார்த்து வாங்கிக் கொள்ளவும்.
மேலும் மேற்கண்ட
பதினோறு கிராமங்களில் நில எடுப்பு சர்வே எண்கள் பற்றிய விபரங்கள் வேண்டுமெனில் உங்களுக்கு
எந்த சர்வே எண் பற்றிய சந்தேகமோ அதைப் பற்றி கேட்டால் பதில் தர இயலும்.
அரசு இழப்பீட்டு தொகையினை அரசாணையின் படி பெற்றுக் கொள்ள முயலுங்கள். இதில் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது. இந்த இழப்பீட்டு தொகையினைப் பெற அரசாணை வழிகாட்டி முறையினை வழங்கி இருக்கிறது. இந்த நிலமெடுப்பு அரசாணையின் கீழ் நில உரிமையாளர்கள் தனிப்பட்ட முறையில் கையொப்பம் செய்து கொடுத்து ஏமாற வேண்டாம். அரசாணையின் படி, அதில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி இழப்பீடு பெற முயலுங்கள். இது பற்றி உதவி தேவை எனில் அணுகவும். நிச்சயம் உதவி செய்கிறேன். போனில் கூப்பிட்டுக் கேட்டால் நிச்சயம் என்னால் முடியாது. தொடர்புடைய ஆவணங்களோடு என்னை நேரில் அணுக வேண்டும். போன் மூலம் நிவாரணம் கேட்டால் நிச்சயம் சொல்ல இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க வளமுடன்
Friday, January 22, 2021
திருத்தப்பட்ட விவசாய சட்டம் சொல்வது என்ன? உண்மை அறிக்கை
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகை இட்டு போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? ஏன் மற்ற மாநில விவசாயிகள் போராட்டமோ அல்லது பெரிய அளவில் கவன ஈர்ப்புக்கான போராட்டங்களை முன்னெடுக்கவில்லை என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சியினர்
தூண்டி விட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன. அடியேன் டிவி செய்திகளைப்
பார்ப்பது இல்லை. அது அதிகார வர்க்கத்தின் ஊதுகுழலாகிப் போனவை. பத்திரிக்கைகளோ இன்னும்
ஒரு படி மேல் சென்று அதிகாரத்தின் அடியில் படுத்தே விட்டன.
இந்தியா வாட்சிங்க்
என்று அனைவரையும் ஒழுக்கத்தின் உத்தமராக, நேர்மையின் சின்னமாக டைம்ஸ் நவ் டிவியில்
கத்திக் கொண்டிருந்த மன்னிக்க ஊளையிட்டுக் கொண்டிருந்த அர்னாப், பின்னர் டைம்ஸ் நவ்வுக்கு
100 கோடிக்கு தண்டம் கட்ட வைத்து விட்டு, ரிபப்ளிக் டிவியை ஆரம்பித்து, இன்றைக்கு பாகிஸ்தானின்
சதி, அரசியல் சதி என்று கதறிக் கொண்டிருக்கிறான். விதி விட்டு விடாது. நாம் ஆனானப்பட்ட
எத்தனையோ ஆட்களின் அழிவுகளைப் பார்த்திருக்கிறோம் படித்திருக்கிறோம். இந்திய ராணுவ
வீரர்களைப் பலி கொடுத்ததை அர்னாப் கொண்டாடுகிறான் என்றால் அதன் பின்னால் பலி கொடுத்த
திட்டம் நிச்சயம் இருந்திருக்கும். காலமும், கடவுளின் விதியும் ஒரு நாள் அதை வெளிப்படுத்தாமல்
போகாது.
பொய்கள் படாடோபமாக
இருக்கும். ஆனால் உண்மை உறங்கிக் கொண்டிருக்கும் என்பார்கள். அதைப் போல ஆங்காங்கே சோஷியல்
மீடியாக்களில் வரும் செய்திகளில் தான் ஓரளவு உண்மையைக் கண்டறிய முடியும். யுடியூப்
சானல்களோ பொய்களுடன் தான் செய்திகளாக்கப்படுகின்றன.
உண்மைச் செய்தியைக்
கண்டுபிடிக்க பெரும் முயற்சி தேவைப்படுகிறது. மோடி அரசாங்கம் வந்தபின் பொய் செய்திகள்
தான் தினசரிகளில் வெளி வருகின்றன. சரி விவசாய சட்டத்திற்கு வந்து விடலாம்.
மோடி அரசு மூன்று விவசாய சட்டங்களை நிறைவேற்றியது.
- விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்திரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் – 2020
- விவசாயிகளின் விளைபொருட்கள் வியாபாரம் வர்த்தகம் (மேம்படுத்துதல் மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் – 2020
- அத்தியாவசிய பண்டங்கள் திருத்தச் சட்டம் – 2020
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட(??)
மத்திய அரசு மக்களின் நன்மைக்காகவே சட்டங்களையும் மசோதாக்களையும் இயற்றும். அதனால்
மக்களுக்கும், நாட்டுக்கும் நன்மை உண்டாகும் என்பது பொதுவாக ஜனநாயகத்தில் நம்பப்படும்
நம்பிக்கை. இதுவரையிலான அரசுகள் அப்படித்தான் செய்து வந்தன.
மோடி அரசு எப்போது
ஆட்சிக்கு வந்ததோ அன்றிலிருந்து தமிழ் சினிமா இயக்குனர் சங்கரின் படத்தில் வரும் காட்சிகளை
செயல்படுத்த ஆரம்பித்து விட்டது. டிமாண்டிசேஷன் என ஆரம்பித்த அறிவிக்கை முதல் அனைத்து
மக்களை பாதிக்கும் ஒவ்வொரு அரசாணைக்கும். மோடி தன்னந்தனியாகவே அறிவிக்கை கொடுக்க ஆரம்பித்தார்.
ஊடகங்களை அவர் சந்திப்பதே இல்லை. மக்களுடன் நேரடியாக டிவியில், ரேடியோக்களில், ஆன்லைனில்
பேசுகிறார். மக்களின் மன நிலை என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி அறிந்து கொள்ள அவர்
இடம் கொடுப்பதே இல்லை. இணையதளம் மூலம் மக்கள் பிரதமரை அணுகலாம் என்றாலும் அவ்வளவு எளிதில்
அதுவும் நடக்காது.
இப்படியான சூழலில்
மூன்று விவசாயச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்றன.
14/09/2020ம் தேதியன்று
மூன்று சட்டங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
17/09/2020ம் தேதி
அதாவது அடுத்த மூன்றாவது நாளில் லோக்சபாவில் விவாதத்துக்கு அனுமதிக்கப்பட்டு சட்டம்
நிறைவேற்றப்படுகிறது.
அடுத்த மூன்றாவது
நாளில் அதாவது 20ம் தேதியில் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படுகிறது.
அடுத்த நான்காம்
நாள் 24ம் தேதியில் குடியரசு தலைவரிடம் கையெழுத்துப் பெறப்பட்டு இந்திய அரசு கெஜெட்டில்
வெளியிடப்படுகிறது.
பத்து நாட்களுக்குள்
50 சதவீத விவசாய இந்திய மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வரக்கூடிய மூன்று
சட்டங்களையும் மோடி அரசு சட்டமாக்குகிறது.
மக்களின் வாழ்வாதாரத்தில்
மாற்றங்களை உருவாக்கக் கூடிய மசோதாக்களோ சட்டங்களோ நாடாளுமன்றத்தில் சட்டமாக்க வைக்கப்படும்
போது அது நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி விவாதம் செய்யப்பட்டு, பிற இயக்கங்கள்,
அமைப்புகள் ஆகியோரிடம் கருத்துக்கள் பெற்று அதன் பிறகு தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு
சட்டமாக்கப்படும்.
ஆனால் இந்த மூன்று
சட்டங்கள் அப்படி செய்யப்படவில்லை என்பது ஏன் என்ற சந்தேகம் எல்லோருக்குள்ளும் எழும்புவது
இயற்கை. பத்து நாட்களுக்குள் அவசர அவசரமாக சட்டமாக்கியதன் நோக்கம் என்னவாக இருக்கும்?
கொரானா காலத்தில்
நாடாளுமன்றத்தினைக் கூட்டி விரிவாக விவாதிக்க இயலாத சூழலில் அவசர அவசரமாக இச்சட்டத்தினை
கொண்டு வரக் காரணம் என்ன என்று கேட்டால் மக்கள் நலன் என்கிறது மோடி அரசு.
மோடி அரசுக்கு
மட்டும் தான் மக்கள் நலன் மீது அக்கறை இருக்கிறதா? பிற கட்சிகளில் இருக்கும் தலைவர்கள்
எல்லோரும் மக்களை வெறுக்கின்றார்களா? இல்லை மக்களால் வெறுக்கப்படுகின்றார்களா என்று
அவர்தான் தெரிவிக்க வேண்டும்.
உலக பெரிய நாடுகளில்
மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியப் பிரதமர், ஜன நாயகத்தின் மூன்றாம் தூணான செய்தி
ஊடகங்களைச் சந்திக்கவே சந்திக்காத தன்மை கொண்ட நிலையில் அவர் மீதான நம்பிக்கையின்மை
வெளிப்படையாகத் தெரியும் பட்சத்தில் இச்சட்டம் மக்கள் நலனுக்கானது என்று மக்கள் எப்படி
நம்புவார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பு.
உலகை முடக்கிய
கொரானா காலத்தில் கூட வியாபாரம் ஆனது விவசாய விளைபொருட்கள் மட்டுமே. மற்ற எல்லா விதமான
வியாபாரங்களும் முடங்கின. விவசாயமும், தனியார் நிறுவனங்களுக்கு என்றைக்கும் அழியாத
சந்தை விவசாயச் சந்தை என தெரிய வந்தது. மோடி அரசு விவசாயச் சட்டத்தினை தனியார் முதலாளிகளுக்கு
லாபம் அளிக்கக் கூடிய வகையில் திருத்தம் செய்து வெளியிட்டனர் என்பது தான் உண்மை.
மாநில அரசின் அதிகாரத்தில்
வரக்கூடிய விவசாயத்துறைக்கு மோடி அரசு எப்படி பொதுவாக சட்டம் இயற்றலாம்? முடியாது.
ஆனாலும் இயற்றினார்கள்.
ஏன்? காரணம் தெள்ளத்தெளிவு.
இன்னும் கொஞ்சம்
பார்க்கலாம்.
மோடி அவர்கள் டீமாண்டிசேஷனின்
போது, அடுத்து பினாமி சொத்துக்களை அரசுடமையாக்கப்போவதாக பத்திரிக்கைகள் பெருமிதமாக
செய்தி வெளியிட்டன. அச்செய்தி இணையதளத்தில் காணக்கிடக்கின்றன. இதை மனதில் வைத்துக்
கொள்ளுங்கள்.
இந்த மூன்று சட்டங்களின்
வெகு முக்கியமானவற்றைப் பார்க்கலாம்.
நில உச்ச வரம்புச்
சட்டத்தின் படி ஒரு நிறுவனமானது எவ்வளவு நிலங்கள் வாங்கலாம் என்ற வரையறை உள்ளது. இச்சட்டத்தின்
படி ஒரு தனியார் நிறுவனம் விவசாயத்துக்கு எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம். இங்கு
நில உச்சவரம்புச் சட்டம் நிர்கதியாக்கப்படுகிறது.
இத்தகைய தனியார்
நிறுவனங்கள் தங்கள் உணவு தானியக் கிடங்குகளில் எவ்வளவு உணவுப் பொருளை வேண்டுமானாலும்
வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உணவு பதுக்கல் சட்டம் நிர்கதியாக்கப்படுகிறது.
கீழே இருக்கும்
படத்தில் தனியார் நிறுவனங்கள் எவ்வளவு கிடங்குகளை வைத்திருக்கின்றன என்ற விபரங்கள்
இருக்கின்றன. படித்துக் கொள்ளுங்கள்.
மோடி அரசாங்கம்
ஒவ்வொரு விவசாயியும் நேரடியாக யாருக்கு வேண்டுமானாலும் தங்கள் நிலத்தில் விளையும் விளை
பொருட்களை விற்கலாம். இடைத்தரகர்கள் இல்லாமல் போவார்கள். இடையில் நிற்கும் தரகு பணமும்
நேரடியாக விவசாயிக்கே கிடைக்கும் என்று பெருமை பேசுகின்றார்கள்.
ஒரு சாதாரண நான்கு
ஏக்கர் நிலம் வைத்திருக்கும் ஒருவர், எவ்வாறு ஒரு கார்ப்பொரேட் உடன் உடன்படிக்கை மேற்கொண்டு
விளை பொருளை விற்பார். சாத்தியமா? யோசித்துக் கொள்ளுங்கள்.
தரத்தினையும்,
டெலிவரி தேதியையும் குறிப்பிட்டு ஒப்பந்தமிட்டால், கால நிலை, பருவ நிலைக்கு ஏற்ப மாறுபடும்
சூழலுக்கு உகந்த விளை பொருட்கள்தான் விளைவிக்க முடியும். அவ்வாறு இருக்கும் போது, போல்டு
நட்டு தயாரிப்பது போல விவசாயியும் விளைபொருட்களை எங்ஞனம் விளை விக்க முடியும்? தனியார்
நிறுவனம் பொருள் சரியில்லை என நிராகரித்தால் அவர் யாரிடம் சென்று விற்பார்? உதாரணத்துக்கு
உருளைக் கிழங்கு இன்ன சைசில் தான் இருக்க வேண்டுமென்று ஒப்பந்தமிடுவார்கள். சின்ன சைஸ்
உருளையை வாங்க மாட்டார்கள். அதை விவசாயி யாரிடம் விற்பார்?
அக்ரிமெண்ட் போட்டு
அதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் விவசாயி கோர்ட்டுக்குப் போக முடியாதாம். கலெக்டரோடு
முடித்துக் கொள்ள வேண்டும். மத்திய அரசின் மீது வழக்கு கூட தொடுக்க முடியாதாம்.
REF: THE
FARMERS’ PRODUCE TRADE AND COMMERCE (PROMOTION AND FACILITATION) ACT, 2020 -
CHAPTER V – SECTION 12 TO 16
இப்படியான வகையில்
ஒவ்வொரு திருத்தமும் வெகு கவனமாக பெரும் நிறுவனங்களுக்கு விவசாயிகளை அடிமைச் சாசனம்
செய்ய வைக்கவும். இயலாத பட்சத்தில் நிலங்களை அவர்களிடமே கொடுத்து விடும்படியான சூழலை
உருவாக்கும் வகையிலும், வெகு துல்லியமாக, புத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்ட சட்டங்கள்
இது என்பதை அச்சட்டத்தினைப் படிக்கும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளலாம்.
எக்கனாமிக்ஸ் வீக்லியில்
இந்த மாதம் வெளிவந்த கட்டுரை உணவுப்பொருட்களின் எம்.எஸ்.பி விரிவாக கட்டுரை வெளியிட்டிருக்கிறது.
குறைந்த அளவு விலை உத்தரவாதத்தினை கூட அரசு செயல்படுத்தாது என்றுச் சொன்னால் பின்னர்
அரசு எதற்காக இருக்கிறது என்று தெரியவில்லை.
இங்கே இருக்கும்
அதிமுக ஆட்சி நடத்தும் திடீர் முதல்வர் ஆஹா ஓஹொ என்கிறார். என்ன சாதிக்கப் போகிறார்
என்று தெரியவில்லை. அத்தனையும் தன்னையும், தன்னைச் சுற்றி இருப்பவர்களின் சொத்து பத்துக்களையும்
காப்பாற்ற எடுத்த முடிவாகத்தான் மக்கள் கருதுவார்கள். கடவுள் ஒரு சிலருக்கு ஒரு முறைதான்
வாய்ப்புக் கொடுப்பார். அதை நல்ல முறையில் மக்களுக்கு பயன் உள்ள வகையில் செயல்படுத்தினால்
வரலாறு பாராட்டும். நான்கரை லட்சம் கோடி தமிழகத்தின் கடன் வைத்து விட்டுச் செல்வதும்,
விளம்பரங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவழிப்பதும் தான் மிகச் சிறந்த ஆட்சி என்று
எவரும் சொல்லப் போவதில்லை.
இந்த விவசாயச்
சட்டங்களின் திருத்த வடிவம் முற்றிலும் விவசாயிகளுக்கு விரோதமானது. அது கார்பொரேட்
நிறுவனங்களின் நலனை முன்னிட்டு உருவாக்கப்பட்டு அவசர அவசரமாக சட்டமாக்கப்பட்டவை.
குறிப்பு: தமிழகத்தில்
கரும்பின் ஆதார விலை 2500 ரூபாய் என அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் கரும்பு விவசாயிகளுக்கு
டன்னுக்கு கிடைப்பதோ 1800லிருந்து 2000 ரூபாய் வரை. மீதி ரூபாய் எங்கே போகிறது? கமிஷன்,
மில் மேனேஜர், மில்கள் ஆகியவைகள் கூட்டாக இணைந்து மிகத் துல்லியமான திட்டத்தில் விவசாயிகளிடமிருந்து
திருடுகிறார்கள். இதைச் சரி செய்ய எளிய மெக்கானிஷம் இருக்கிறது. ஆனால அரசாங்கங்கள்
கண்டு கொள்ளாது. ஏனென்றால் ஒவ்வொரு ஆலையிலும் அரசியல்வியாதிகளுக்கும் பங்குண்டு.
இன்னும் ஒரு குறிப்பு:
ஒரு பெரிய வெளி நாட்டு நிறுவனம் தமிழ் நாட்டில் கம்பெனி துவக்குவதாக இருப்பின், அந்த
ஊர் பஞ்சாய்த்து போர்டு, கட்சி ஆட்கள் அந்த நிறுவனத்துக்கு ஏதாவது ஒரு வகையில் சப்ளையராக
இருப்பர், இருக்க வேண்டுமென்பது நியதி. ஏனென்று உங்களுக்குப் புரிகிறதா?
இதுதான் அரசியல்!
இந்த அரசியலில் விளைந்ததுதான் விவசாய திருத்தச் சட்டங்களும்.
புரிந்தவர்களுக்கு
புரியும். புரியாதவர்களுக்கு ஒன்றும் சொல்வதிற்கில்லை.
Wednesday, January 13, 2021
திருவள்ளுவர் கண்ணகி சிலப்பதிகாரம் - 15 ரூபாய் நோட்டு
காமதேனு இதழில் வெளியாகி இருந்த ஒரு சிறிய கட்டுரையினை இணைப்பில் படித்துப் பாருங்கள்.
கலைஞரின் ஆளுமை மீதும், அவரின் தமிழின் மீதும் அடியேனுக்கு பெரும் பிரமிப்பு உண்டாகும் எப்போதும். அவரின் தமிழ் மொழி, அவரின் பேச்சு, அவரின் எழுத்துக்கள் இன்றைக்கும் என்னை வியப்பில் ஆழ்த்தும்.
பல அரசியல்வியாதிகள் கலைஞரைப் பற்றி விமர்சிப்பார்கள். எனக்குத் தெரிந்து கலைஞரை விமர்சிக்க இங்கு இருக்கும் ஒரு அரசியல்வியாதிக்கும் தகுதி இல்லை. அவரின் காலடியில் உருண்ட ஒரு தூசுக்கும் சமமில்லாத ஈனர்களே, கலைஞரைப் பற்றி விமர்சிப்பார்கள். அவர்கள் இழிபிறவிகள் என்று தான் எனக்குத் தோன்றும்.
வட இந்திய திணிப்பான பிள்ளையார், கிருஷ்ணன், ராமன் வகையறாக்கள் பற்றி திராவிட கழகத்தார் கழுவி கழுவி ஊற்றுவார்கள். திராவிட நாடு பத்திரிக்கைகள் படித்தால் மண்டையில் உக்குடுமி வைத்திருந்தவர்கள் தமிழர்கள் நாட்டினை எவ்விதம் மாற்றினார்கள் ஆங்கிலேயர்கள் துணை கொண்டு என்று அறியலாம்.
இன்றைக்கு கிட்டத்தட்ட ஆயிரமாயிரம் மருத்துவர்கள் படிப்பினை வட இந்தியர்களிடம் இழந்திருக்கிறோம் நீட் என்ற பாஜகவின் உக்குடுமி சட்டத்தினால். ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த நிலைமை நிச்சயம் வந்திருக்காது. ஆனால் இடப்பாடி செய்த தமிழக விரோத அயோக்கியத்தனத்தினை நம் தமிழர்கள் எவரும் மறந்து விடவே கூடாது.
இதோ ஒரு அருமையான கட்டுரை காமதேனுவில் வந்தது. படித்துப் பாருங்கள். கலைஞர் தமிழ் நாட்டுக்கு என்ன செய்தார் என்று புரிய வரும்.
நன்றி : காமதேனு.
நிலம் (75) - சூலூரில் பிரபல பில்டரின் மோசடி - லீகல் ஒப்பீனியன்
Saturday, January 9, 2021
ஆறு நாய்க்குட்டிகளும் நிவேதிதா ரித்திக்நந்தாவும்
தமிழில் எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை கருணை. வாக்கியங்களில் ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’. வள்ளலால் பெருமகனார் சொன்னது.
பயிர் அது வாடத்தான்
செய்யும். அதைக் கண்ட போது மனது வாடினேன் என்கிறார் பெருமான். அவரின் நெஞ்சமெல்லாம்
நிரம்பிய கருணையின் வெளிப்பாடு.
கருணை இல்லா உயிர்கள்
இவ்வுலகில் வாழவே அருகதை அற்றவை. பெற்றவளின் கருணையினால் உயிர் பிழைக்கும் கருவானது
உருவாகி பின்னர் தலைவராகி பிறரைக் கொல்கிறது. கொன்று தின்கிறது. கொல்லச் சொல்லி வேடிக்கை
பார்க்கிறது. நான் எவரையும் சொல்லவில்லை. பொதுவாகச் சொன்னேன்.
அம்மாவை வணங்குகிறார்கள்.
இன்னொரு அம்மாவின் குழந்தையை நடு வீதியில் மல்லாக்க கிடத்தி, கருவறையை அறுத்து குழந்தையை
எடுத்து அதைக் கத்தியால் குத்தி விளையாடும் மாபெரும் வீரர்களின் விளையாட்டை வேடிக்கை
பார்த்த மாபெரும் வீரப்பெருமகனார் வாழ்கின்ற தேசம் இது.
ஆனால் பாருங்கள்
அவரவருக்கு அவரவர் நியாயம் இருக்கிறது. எல்லா குற்றங்களுக்கும் செயல்களுக்கும் பின்னால்
அவரவர் நியாயங்கள் உண்டு. நியாயங்கள் வேறு உண்மை வேறு.
அவரவர் தர்மங்கள்
அவரவருக்கு கர்மங்களாகின்றன. கர்மத்தின் கணக்குகளை விதி டிரம்புக்கு தற்போது தீர்த்து
வைப்பது போல தீர்த்து வைக்கும். நம் இந்தியாவில் இருந்து கூட டிரம்புக்கு ஒருவர் பிரச்சாரம்
மேற்கொண்டார் அல்லவா? இருந்து டிரம்ப் தோற்றுப் போனார். அதுதான் கர்ம வினைகளின் கணக்குத்
தீர்க்கும் தொடக்கம்.
நான் தர்மத்தை
நம்புகிறவன். உண்மையை நம்புகிறவன். எல்லோருக்கும் தர்மத்தின் முன்னாலே, உண்மையின் முன்னாலே
தீர்ப்பு வழங்கப்படும் நாட்கள் இப்போதெல்லாம் உடனுக்குடன் வந்து விடுகிறதை நினைத்து
மகிழ்ச்சி உண்டாகிறது.
பிக்பாஸ் பார்க்கின்றீர்கள்
என நினைக்கிறேன். ஆரி அர்ஜுனனை அங்கிருந்த பதினேழு நபர்களும் எவ்விதம் நடத்துகிறார்கள்
என்று பாருங்கள். உலகத்தின் டிசைன் இது. உலகோடு ஒத்து வாழ், இல்லையெனில் நாங்கெல்லாம்
உன்னை ஒழிப்போம் என்கிறார்கள் அந்த பேதைகள். பேசாமலே இருந்து கொண்டு பாம்பினைப் போல
ஒரு பெண் (அவள் பெயரைச் சொல்லக்கூட கூசுகிறது எனக்கு) உள்ளே இருக்கின்றாளே என்ன ஒரு
கொடூரம். இவளுக்கும் கருவிலே பெண்ணைக்கொல்லும் தாய்க்கும் என்ன வித்தியாசம் இருக்க
இயலும். அப்படி ஒரு கொடூரமான மனதுடைய பெண்ணை இனிமேல் என்னால் பார்க்கவே கூடாது என நினைக்கிறேன்.
அவள் வருவதால் பிக்பாஸ் பார்ப்பதை நிறுத்தியே விட்டேன்.
கருணையற்ற கொடூரத்தின்
உச்சம் அவள்.
மாலை நேரம், ரித்திக்
வந்து தயங்கி நின்றான்.
“அப்பா, வீட்டுக்குப்
பின்னாலே நாய் குட்டிங்க கிடக்குது” என்றான்.
“அதுக்கென்ன? கிடக்கட்டுமே?”
“இல்லைப்பா, தூக்கி
வந்து பால் கொடுத்துட்டு, ஆஸ்ரமத்துக்கு அனுப்பி வைக்கலாமா” இது நிவேதிதா குரல்.
என் வீட்டு மகாராணியைப்
பார்த்தேன். கண்களில் நெருப்பு தகித்தது.
பிரச்சினை என்னவென்றால்
ஏற்கனவே ரூடோஸும், மணியும் இருக்கிறார்கள். ரூடோஸ் குட்டிகளைப் பார்த்து விட்டால்,
சாப்பிடாமல் பட்டினி கிடப்பாள். அவள் முகம் வாடினால் அடியேனுக்குத் தாங்காது. ஆகவே
மகாராணியின் கண்களில் அக்னி.
தயங்கினேன்.
“காலையில் பார்த்துக்கலாம்”
என்றேன்.
இன்றைக்கு காலையில்
நிவேதிதா மீண்டும் என்னிடம்.
“சரி, என்னவோ செய்யுங்கள்”
அட்டைப்பெட்டி
ஒன்றினை எடுத்து அதற்குள் துணி வைத்து மெத்தை போலச் செய்து வெளியில் சென்றார்கள் இருவரும்.
சிறிது நேரத்தில் ஆறு நாய்க்குட்டிகள். இன்னும் கண்கள் திறக்காதவை. பால் குடிக்ககூட
தெரியாதவை. யாரோ ஒருவர் அவற்றைக் கொண்டு வந்து வீட்டின் பின்னால் போட்டு விட்டுச் சென்ற
காலடித்தடம் இருந்தது என்றான் ரித்திக்.
ஊசி மூலம் பால்
எடுத்து ஆறு குட்டிகளுக்கு ஊட்டி விட்டனர் இருவரும். மாடியில் கொண்டு போய் வைத்து விட்டனர்.
இன்றைக்குப் பார்த்து ஆன்லைன் வகுப்பு இல்லை. காலை ஆறுமணிக்கு நிவேதிதாவைப் பார்த்தது.
குளிக்கவில்லை, சாப்பிடவில்லை. மதியம் போலத்தான் சாப்பிட வந்தார்.
யார் யாருக்கோ
போன் செய்து ஆறு குட்டிகளில் ஐந்து குட்டிகளை அவரவர் நண்பர்களுக்கு கொடுத்து விட்டனர்.
காரில் வந்தெல்லாம் நாய்க்குட்டியைக் கொண்டு போனார்கள். யாரோ ஒரு பையன் பக்கத்து வீட்டுப்
பையனுக்கு எனச் சொல்லி வாங்கிக் கொண்டு போனானாம். ஆனால் அவனே இரண்டு குட்டிகளையும்
வைத்துக் கொண்டு விட்டானாம். அது ஒரு பிரச்சினையாக வந்தது.
இன்னும் ஒரு குட்டி
மட்டும் அதுவும் பெண் குட்டி அட்டைப் பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறது. சிரிஞ்
மூலம் பால் ஊட்டினார் நிவேதிதா. குடித்து விட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது.
பிள்ளைகள் இருவர்
முகத்திலும் மலர்ச்சி தெரிந்தது. அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
வாடிய பயிரைக்
கண்ட போதெல்லாம் வாடினேன் வள்ளலார் பெருமகனார் என் பிள்ளைகளிடத்தில் கொஞ்சம் தெரிகிறார்.
எனக்குள் கொஞ்சம்
நம்பிக்கை.
பிள்ளைகளை நல்லபடியாக
வளர்த்திருக்கிறேன் போல. இனிமேலும் இக்குணம் மாறாமல் அவர்கள் இருவரும் வாழ்ந்தாலே அதுவே
எனது வாழ்வின் அர்த்தம் என நம்புகிறேன்.
கருணை உள்ளம் கடவுள்
இல்லம் அல்லவா?
அவர்களுக்கு உங்கள்
ஆசீர்வாதங்களையும், அன்பினையும் வழங்குங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்க பல்லாண்டு. வாழ்க வளமுடன்.
ஏமாளி தமிழர்களே - திருந்துங்கள் - உதயசந்திரா கதை
Thursday, December 24, 2020
மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் பற்றிய விபரங்கள்
மத்திய அரசின் நேரடி ஸ்காலர்ஷிப் உதவித் தொகை பற்றிய விபரங்கள் கீழே இருக்கின்றன. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது. தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
இனிமை இதோ இதோ இதோ
அரசியல்
அக்கப்போர்களையும், பொடிக்கும் உதவாத சினிமா பற்றியும் எழுதியும் படித்தும் என்ன கண்டோம்.
ஒன்றுமில்லை. பொழுதினைப் போக்கவா நாட்கள் பிறப்பெடுக்கின்றன. ஒவ்வொரு நாளுமினி மீண்டும்
வருமா? வராத நாட்களை இனி வரும் நாள்களில் அர்த்தமுள்ளதாக மாற்றுவது ஒன்றே இனிது.
விடிகாலையில்
மயில்கள் அகவ, மார்கழிக் குளிரில் சொற்களை உதிர்க்கும் பற்கள் குளிரில் தந்தியென மாற,
வாசலில் வெண்மையாக படரும் அழகிய கோலம் கண்டு உள்ளம் மலர இன்றைய நாளும் துவங்கியது அர்த்தத்துடன்.
கிழக்கே இளங்காலைச் சுடர் மெதுவாக வெளித்தெரிய சூரியன் தன் கடமையைச் செய்ய ஆரம்பித்து
விட்டான்.
இனிமை
என்றால் என்ன? அதனை நுகர்ந்திருக்கின்றோமா? அனுபவித்திருக்கின்றோமா என்று ஒரு நொடியேனும்
சிந்தித்து இருக்கின்றோமா நாம்?
திடீரென
எனக்குள் இந்த வார்த்தையின் அர்த்தம் தான் என்னவாக இருக்கும் எனத் தோன்றியது புலர் காலையில்.
இனிமை, இனிமை, இனிமை இதன் அர்த்தத்தை மனசு உணர்ந்திருக்கிறதா என்று பார்த்தால் இல்லை எனத் தோன்றிற்று.
இனிமை
என்றால் இனிப்பு என்று கூட அர்த்தம் கொள்ளலாம் என்றாலும், இனிப்பு சுவை உணர்வு கொண்டது.
இனிப்புச் சுவையும் இனிமையும் ஒன்றா? இருக்காது. இனிமை என்ற சொல்லின் அர்த்தத்தை மனசு
உணர்ந்திருக்கிறதா என்று எனக்குள் கேட்டுக் கொண்டேன். நிச்சயம் என்னால் அதை அறுதியிட்டுக்
கூற முடியவில்லை. தேடலும் துவங்கியது.
நறும்
பூ கோதை தொடுத்த நாள் சினை
குறும்
கால் காஞ்சி கொம்பர் ஏறி
நிலை
அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து
புலவு
கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல்
வள்
உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை
முள்
அரை தாமரை முகிழ் விரி நாள் போது
கொங்கு
கவர் நீல செம் கண் சேவல்
மதி
சேர் அரவின் மான தோன்றும்
மருதம்
சான்ற மருத தண் பணை – சிறுபாணாற்றுபடை பாடல்
178 – 186
இந்தப்
பாடலை எழுதியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் எனும் புலவர். ஓய்மா நாட்டு நல்லியக்கோடனின்
நாட்டில் வசித்து வந்த புலவர், நாட்டில் நீர் நிறைந்த வயல் வெளிகளைத் தன் பாடலிலே பாடி
இருக்கிறார்.
இந்தப் பாடலின் அர்த்தத்தைக் கீழே படியுங்கள்.
நறு மலர்களின் மாலை போல நாள் தோறும் பூக்கும் கிளைகளைக் கொண்ட
குட்டையான
அடி மரத்தை உடைய காஞ்சிமரத்தின் கொம்பில் ஏறி,
நிலையான
நீர் இல்லாத குளத்தைக் கூர்ந்து பார்த்து, நெடும் பொழுதிருந்து
புலால்
நாறும் கயலை எடுத்த பொன்னிற வாயுள்ள நீல நிற மீன்கொத்தியின்
பெரிய
நகம் கிழித்த வடு அழுந்தின பச்சை இலையுடன்
முள்
தண்டு உடைய தாமரையின் அரும்பு விரிந்த அன்றைய பூவின்
தேனை
நுகர்கின்ற நீல நிற, சிவந்த கண்ணுடைய வண்டுக்கூட்டம்
திங்களைச்
சேர்கின்ற கரும்பாம்பு போலத் தோன்றும்,
மருத
ஒழுக்கம் நிறைந்த மருதநிலத்தின் குளிர்ந்த வயல்வெளிகள்
இப்பாடல் மூலப் பாடலின் வரிக்கு வரி பெயர்த்தவை. பாடலையும் அப்பாடலின் வரியினையும் ஒப்பிட்டுப் படித்துப் பார்க்கவும்.
இப்பாடலின் எனக்குத் தெரிந்த விரிவாக்கம்
கீழே.
குட்டையான அடி
மரத்தினைக் கொண்ட காஞ்சி மரத்தின் பூக்கள் பூமாலை போல இருக்கும். தினமும் பூக்கும்
காஞ்சி மரத்தின் கிளையில், எப்போதும் நிறைந்தே இருக்காத நீரினைக் கொண்ட குளத்தினை கூர்ந்து
பார்த்துக் கொண்டே நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் ஒரு நீல நிற மீன் கொத்திப் பறவையானது,
மீனைக் கண்டதும் தண்ணீருக்குள் ஈட்டி போலப் பாய்ந்து மீனைக் கொத்திப் பிடிக்கிறது.
அப்போது நீருக்குள் பாய்ந்த மீன் கொத்திப் பறவையின் கால் நகங்கள் விரிந்த பச்சை இலையுடன்
விரிந்தும் விரியாமலிருக்கும் தாமரையின் இலைகளைக் கிழித்து விடுகின்றன. அப்போது அன்றலர்ந்த
தாமரையின் மீது தேனைக் குடிக்க அமர்ந்திருந்த நீல நிற, சிவந்த கண்களை உடைய தேனிக்கள், சூரிய கிரகணத்தின்
போது பூமி மீது படரும் சந்திரனின் பாம்பு போன்ற இருளைப் போல கூட்டமாய் பூவிலிருந்து
வெளி வருகின்றன என்று மருத நிலத்தின் வயலும் வயல் சார்ந்த பகுதிகளும் நீர் நிரம்பிக்
கிடக்கும் காட்சியினைப் பாடலாய் எழுதி இருக்கிறார் அப்புலவர்.
இப்போது சிறுபாணாற்றுப்படைப்
பாடலைப் படித்துப் பாருங்கள். அர்த்தம் அழகாக மனதுக்குள் விரியும்.
இனிமை என்றால்
என்ன என இப்போது தெரிந்திருக்கும். இனிமை என்ற சொல்லின அர்த்தம் இப்பாடலைப் படிக்கும்
போது நம் மனதுக்குள் கிளரச் செய்யும் உணர்வினை நீங்களும் உணர்ந்திருந்தால் அதுதான்
இனிமை.
தமிழைப் போல ஒரு
மொழியும் இவ்வுலகினில் உண்டோ?
தமிழைப் போல இனிமையும்
வேறு உண்டோ?
ஒரு மலர் மலர்ந்து
பின் உலர்வதினை கீழே படியுங்கள்.
அரும்பு என முகிழ்த்து,
நனையென துளிர்த்து, முகையென வளர்ந்து, மொக்குள்ளாகி, முகிழ் என முகிழ்ந்து, மொட்டு
என உருவாகி, போதுவென மலர்ந்து, மலர் என பூத்து, பூவாகி வீயாகியது அதுமட்டுமா பொதும்பராகி,
பின்பு பொம்மலாகி இப்போது செம்மலாகிப் போனது – வாழ்க்கை.
மலரின் ஒவ்வொரு
நிலைக்கும் தமிழ் வார்த்தைகளைப் படித்தீர்களா? இனிமை என்பது இதுதானே?
தமிழ் என்றால்
இனிமை….!
இனிமை இதோ இதோ
இதோ – தமிழ்