குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label பூக்கள். Show all posts
Showing posts with label பூக்கள். Show all posts

Thursday, December 24, 2020

இனிமை இதோ இதோ இதோ


காஞ்சி மரத்தின் காஞ்சிப் பூ


நீருக்குள் மீனுக்காகக் காத்திருந்து நீரினைக் கிழித்துக் கொண்டு பாயும் நீல நிற மீன் கொத்திப் பறவை

அரசியல் அக்கப்போர்களையும், பொடிக்கும் உதவாத சினிமா பற்றியும் எழுதியும் படித்தும் என்ன கண்டோம். ஒன்றுமில்லை. பொழுதினைப் போக்கவா நாட்கள் பிறப்பெடுக்கின்றன. ஒவ்வொரு நாளுமினி மீண்டும் வருமா? வராத நாட்களை இனி வரும் நாள்களில் அர்த்தமுள்ளதாக மாற்றுவது ஒன்றே இனிது.

விடிகாலையில் மயில்கள் அகவ, மார்கழிக் குளிரில் சொற்களை உதிர்க்கும் பற்கள் குளிரில் தந்தியென மாற, வாசலில் வெண்மையாக படரும் அழகிய கோலம் கண்டு உள்ளம் மலர இன்றைய நாளும் துவங்கியது அர்த்தத்துடன். கிழக்கே இளங்காலைச் சுடர் மெதுவாக வெளித்தெரிய சூரியன் தன் கடமையைச் செய்ய ஆரம்பித்து விட்டான்.

இனிமை என்றால் என்ன? அதனை நுகர்ந்திருக்கின்றோமா? அனுபவித்திருக்கின்றோமா என்று ஒரு நொடியேனும் சிந்தித்து இருக்கின்றோமா நாம்?

திடீரென எனக்குள் இந்த வார்த்தையின் அர்த்தம் தான் என்னவாக இருக்கும் எனத் தோன்றியது புலர் காலையில். இனிமை, இனிமை, இனிமை இதன் அர்த்தத்தை மனசு உணர்ந்திருக்கிறதா என்று பார்த்தால் இல்லை எனத் தோன்றிற்று.

இனிமை என்றால் இனிப்பு என்று கூட அர்த்தம் கொள்ளலாம் என்றாலும், இனிப்பு சுவை உணர்வு கொண்டது. இனிப்புச் சுவையும் இனிமையும் ஒன்றா? இருக்காது. இனிமை என்ற சொல்லின் அர்த்தத்தை மனசு உணர்ந்திருக்கிறதா என்று எனக்குள் கேட்டுக் கொண்டேன். நிச்சயம் என்னால் அதை அறுதியிட்டுக் கூற முடியவில்லை. தேடலும் துவங்கியது.


நறும் பூ கோதை தொடுத்த நாள் சினை

குறும் கால் காஞ்சி கொம்பர் ஏறி

நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து

புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல்

வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை

முள் அரை தாமரை முகிழ் விரி நாள் போது

கொங்கு கவர் நீல செம் கண் சேவல்

மதி சேர் அரவின் மான தோன்றும்

மருதம் சான்ற மருத தண் பணை –  சிறுபாணாற்றுபடை பாடல் 178 – 186

 

இந்தப் பாடலை எழுதியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் எனும் புலவர். ஓய்மா நாட்டு நல்லியக்கோடனின் நாட்டில் வசித்து வந்த புலவர், நாட்டில் நீர் நிறைந்த வயல் வெளிகளைத் தன் பாடலிலே பாடி இருக்கிறார்.

இந்தப் பாடலின் அர்த்தத்தைக் கீழே படியுங்கள்.


நறு மலர்களின் மாலை போல நாள் தோறும் பூக்கும் கிளைகளைக் கொண்ட

குட்டையான அடி மரத்தை உடைய காஞ்சிமரத்தின் கொம்பில் ஏறி,

நிலையான நீர் இல்லாத குளத்தைக் கூர்ந்து பார்த்து, நெடும் பொழுதிருந்து

புலால் நாறும் கயலை எடுத்த பொன்னிற வாயுள்ள நீல நிற மீன்கொத்தியின்

பெரிய நகம் கிழித்த வடு அழுந்தின பச்சை இலையுடன்

முள் தண்டு உடைய தாமரையின் அரும்பு விரிந்த அன்றைய பூவின்

தேனை நுகர்கின்ற நீல நிற, சிவந்த கண்ணுடைய வண்டுக்கூட்டம்

திங்களைச் சேர்கின்ற கரும்பாம்பு போலத் தோன்றும்,

மருத ஒழுக்கம் நிறைந்த மருதநிலத்தின் குளிர்ந்த வயல்வெளிகள்


இப்பாடல் மூலப் பாடலின் வரிக்கு வரி பெயர்த்தவை. பாடலையும் அப்பாடலின் வரியினையும் ஒப்பிட்டுப் படித்துப் பார்க்கவும்.

இப்பாடலின் எனக்குத் தெரிந்த விரிவாக்கம் கீழே.

குட்டையான அடி மரத்தினைக் கொண்ட காஞ்சி மரத்தின் பூக்கள் பூமாலை போல இருக்கும். தினமும் பூக்கும் காஞ்சி மரத்தின் கிளையில், எப்போதும் நிறைந்தே இருக்காத நீரினைக் கொண்ட குளத்தினை கூர்ந்து பார்த்துக் கொண்டே நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் ஒரு நீல நிற மீன் கொத்திப் பறவையானது, மீனைக் கண்டதும் தண்ணீருக்குள் ஈட்டி போலப் பாய்ந்து மீனைக் கொத்திப் பிடிக்கிறது. அப்போது நீருக்குள் பாய்ந்த மீன் கொத்திப் பறவையின் கால் நகங்கள் விரிந்த பச்சை இலையுடன் விரிந்தும் விரியாமலிருக்கும் தாமரையின் இலைகளைக் கிழித்து விடுகின்றன. அப்போது அன்றலர்ந்த தாமரையின் மீது தேனைக் குடிக்க அமர்ந்திருந்த நீல நிற, சிவந்த கண்களை உடைய தேனிக்கள், சூரிய கிரகணத்தின் போது பூமி மீது படரும் சந்திரனின் பாம்பு போன்ற இருளைப் போல கூட்டமாய் பூவிலிருந்து வெளி வருகின்றன என்று மருத நிலத்தின் வயலும் வயல் சார்ந்த பகுதிகளும் நீர் நிரம்பிக் கிடக்கும் காட்சியினைப் பாடலாய் எழுதி இருக்கிறார் அப்புலவர்.

இப்போது சிறுபாணாற்றுப்படைப் பாடலைப் படித்துப் பாருங்கள். அர்த்தம் அழகாக மனதுக்குள் விரியும்.

இனிமை என்றால் என்ன என இப்போது தெரிந்திருக்கும். இனிமை என்ற சொல்லின அர்த்தம் இப்பாடலைப் படிக்கும் போது நம் மனதுக்குள் கிளரச் செய்யும் உணர்வினை நீங்களும் உணர்ந்திருந்தால் அதுதான் இனிமை.

தமிழைப் போல ஒரு மொழியும் இவ்வுலகினில் உண்டோ?

தமிழைப் போல இனிமையும் வேறு உண்டோ?

ஒரு மலர் மலர்ந்து பின் உலர்வதினை கீழே படியுங்கள்.

அரும்பு என முகிழ்த்து, நனையென துளிர்த்து, முகையென வளர்ந்து, மொக்குள்ளாகி, முகிழ் என முகிழ்ந்து, மொட்டு என உருவாகி, போதுவென மலர்ந்து, மலர் என பூத்து, பூவாகி வீயாகியது அதுமட்டுமா பொதும்பராகி, பின்பு பொம்மலாகி இப்போது செம்மலாகிப் போனது – வாழ்க்கை.

மலரின் ஒவ்வொரு நிலைக்கும் தமிழ் வார்த்தைகளைப் படித்தீர்களா? இனிமை என்பது இதுதானே?

தமிழ் என்றால் இனிமை….!

இனிமை இதோ இதோ இதோ – தமிழ்