குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, June 27, 2013

கோவையில் கண்ணதாசன் விருது 2013- முத்துலிங்கம் அசோகமித்திரன்



கோவை கிக்கானி பள்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கண்ணதாசன் கழகம் மரபின் மைந்தர் முத்தையா மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்திய விருது விழா நடைபெற்றது. நிகழ்ச்சி ஆரம்பித்து சிறிது நேரமாகி விட்டிருந்தது. நானும் ரித்திக் நந்தாவும் சென்றிருந்தோம்.

அரங்கம் நிரம்பி வழிந்தது. வெகு அமைதியாக இருந்தது. அரங்கத்திலிருந்து ஒருவர் கூட வெளியில் செல்லவில்லை. சினிமா பிரபலங்களை காணத்தான் இவ்வளவு கூட்டம் கூடும். ஆனால் இந்த நிகழ்வு என்னை வெகுவாய் ஆச்சரியப்படுத்தியது. இலக்கியத்திற்காகவும் சிறு கூட்டம் இருக்கிறதே என்று சந்தோசம். சாரு நிவேதிதா, ஜெயமோகன், ராமகிருஷ்ணன் போன்றவர்கள் புத்தக வெளியீட்டு விழாவினை கோவையில் வைக்கலாம். நிச்சயம் வாசகர்கள் கூடுவார்கள். 

நண்பர் திரு பாரதி கிருஷ்ணகுமாரும், எங்களால் முதலாளி சார் என்றழைக்கப்படும் முதலாளியும் என்னை அழைத்திருந்த காரணத்தால் முதன் முதலாய் இப்படிப்பட்ட விழாவிற்குச் செல்ல எனக்கொரு சந்தர்ப்பம் கிடைத்தது. 

முதலாளி சார் எனக்கு கோவையின் பிரதான கிளப்பில் வைத்து திரு. பாரதி கிருஷ்ணகுமாரை அறிமுகப்படுத்திய போது அவருடனான உரையாடலில் ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் மனதை நெகிழச் செய்து கொண்டே வந்தார். சில நாட்கள் சென்ற பிறகு அவரிடமிருந்து “அப்பத்தா”, “அருந்தவப்பன்றி பாரதியார்” என்ற நூல்களும் அவர் இயக்கிய ஆவணப்படங்களும் வந்திருந்தன. அப்பத்தா சிறுகதைத் தொகுப்பில் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம். மனதை கீறிச் செல்லும் கதைகள் அவை. அருந்தவப்பன்றி பாரதியார் நூல் பாரதியார் வாழ்க்கையில் இதுவரை எவரும் சொல்லாத வரலாற்று சம்பவங்களை பதிவாகியிருக்கிறது. இதற்காக பெரும் உழைப்பினை அவர் கொடுத்திருக்கிறார். இந்த நூல் இனி பாரதியாரின் வரலாற்றில் ஒரு தனி இடம் பிடித்தே தீரும். 

வாச்சாத்தி தீர்ப்பு என்பது உலகளவில் மிகப் பெரிய வரலாற்று நிகழ்வு. அதிமுக ஆட்சியில் செங்கோட்டையன் அமைச்சராக இருந்த போது வாச்சாத்தி என்ற கிராமத்தில் நடைபெற்ற வனக்காவலர்கள், காவல்துறை அதிகாரிகளின் பாலியல் வன்கொடுமை பற்றிய கொடூரத்தை விளக்கிய  ஆவணப் படைப்பினை திரு பாரதி கிருஷ்ணகுமார் எடுத்திருக்கிறார். 

இவ்வழக்கினை சிபிஐ கையிலெடுத்து கிட்டத்தட்ட 269 அரசு அதிகாரிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த “உண்மை” வெற்றி பெற்ற சம்பவம் அது. அதை அவர் ஆவணப்படுத்தியிருந்த விதம் நெகிழச் செய்தது. இந்த தீர்ப்பினைக் எழுதிய நீதிபதி பிரபல கட்சியின் மாநில அமைப்பாளரும் எனது நெருங்கிய நண்பரின் உறவுக்காரர்.  நாங்கள் இருவரும் இத்தீர்ப்பினைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது “மனச்சாட்சி” மற்றும் “சட்டத்தின்” படி தீர்ப்பு வழங்கப்பட்டதாக அவர் சொன்னார். 

இந்த ஆவணப்படம் தமிழர்களின் வரலாற்றில் ஜனநாயக அரசுகளின் கொடுங்கோலாட்சி எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாய் இருந்தது. (சார், இன்னும் உங்களின் மூன்று படைப்புகளைப் பார்க்கவே இல்லை. மனது சரியாகட்டும் என்று காத்திருக்கிறேன்)

பாரதி கிருஷ்ணகுமாரின் இணையதளம் : www.bharathikrishnakumar.com

இனி விருதுக்கு வரலாம்.

அசோகமித்திரன் - படைப்பானது எப்போதும் இளமையாகவே இருப்பது போல அவரிடம் இளமை இருந்தது. அதிகம் பேச முடியவில்லை. ஆனால் அவரின் படைப்புகளை ஒரு வாசகியாக பாராட்டிய முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கண்களிலும் பேச்சிலும் அசோகமித்திரன் தெறித்தார். படுவீச்சு ! அசோகமித்திரனை நான் அதிகம் வாசித்திருக்கவில்லை. பாவாடை அகலமாயிருந்தால் பஸ்ஸில் ஏற வசதியாய் இருக்குமே என்று நினைக்கும் பெண்களின் உள்மனதைக் கூட படைப்புகளில் காட்டியிருக்கும் அசோகமித்திரன் பற்றி புகழ்ச்சி சூப்பர். இவர் கண்ணதாசனைப் பற்றிப் பேசுவார் என்று எதிர்பார்த்தேன். 

முத்துலிங்கம் - கிட்டத்தட்ட 70 வயதுக்கும் மேலான திரைக்கலையுலக படைப்பாளி. அவரின் பாடல்கள் பற்றி பேசினார். கண்ணதாசனைப் பற்றிப் பேசினார். கொடுத்திருந்த நேரத்தில் திருக்குறளைப் போலச் சுருக்கமாய் பேசினார். முதுகுவலி என்று முதுமைக்கே உரிய காரணமொன்றினைச் சொன்னார். 

இசைக்கவி ரமணன் அவர்கள் பேசினார்கள். சிலாகிக்கும் அம்சங்கள் ஒன்றுமில்லை. பாடினார் ஆனால் பாருங்கள்  எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. இந்தக் காலத்து சின்னப் பிள்ளைகள் கூட எவ்வளவு நன்றாகப் பாடுகிறார்கள். இவர் ஏன் அப்படிப்பாடினார் என்று புரியவில்லை. ஏதாவது காரணமிருக்கும். அது அவருக்கு நியாயமாய் இருக்கலாம். 

பேராசிரியர் ராமசந்திரன் - கண்ணதாசனைப் பற்றிப் பேச வந்து விட்டு, இந்தக் கால பட்டிமன்ற பேச்சினைப் பேசினார். பேராசிரியர் சார் என்னதான் சொல்லுங்கள் கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் பற்றிப் பேசினால் கேட்கின்றவர்கள் ஒருவர் கூட அவ்விடத்திலிருந்து எழுந்து கொள்ள முடியாது. கட்டிப் போடும் காந்தக்குரலோன் அவர். ஆனால் கடைசியாகப் பேச வந்த பேராசிரியர் வியர்த்துக் கொண்டே கிச் கிச் மூட்டிக் கொண்டிருந்தார். வேடிக்கையாக இருந்தது.

ஆனால் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. 
அழியாத வரலாறு படைத்த கண்ணதாசன் அழகாய் போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தார். ஆனால் எனக்குத்தான் இவ்விருது விழா முழுமையற்றதைப் போல தோன்றியது, பாதிவயதில் காலமுமாகிப் போன கண்ணதாசனைப் போல.

Thursday, June 20, 2013

நட்பிற்கு மரியாதை உண்மைச் சம்பவம்

நேற்று ஆஃபீசுக்கு வரும்  வழியில் சத்திரோடு அன்னபூர்ணா ஹோட்டலின் முன்புறம் டிவிஎஸ் ஒன்று அடிபட்டு கீழே கிடந்தது. பல்சர் பைக்கில் மோதியவன் நின்று கொண்டிருந்தான். விழுந்து கிடந்தவன் கைலி கட்டி இருந்தான். ஆள் பார்க்க கிராமத்தான் போலிருந்தான். அன்னபூர்ணா செக்யூரிட்டி பார்த்துக் கொண்டிருந்தார்.  சாலையில் சென்று கொண்டிருந்தோர் ஒருவர் கூட அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. இடித்தவன் அவன் பாட்டிற்கு நின்று கொண்டிருந்தான். அடிபட்டு விழுந்தவன் அவனாகவே தட்டுத்தடுமாறி எழுந்தான். கண்களில் கண்ணீர் வடிய வலியில் துடித்தபடி எழுந்தான். வண்டியை நிமிர்த்தினான். பரிதாபத்துக்குரிய அந்த இளைஞன் அழகாய் இல்லை. அவன் ஒரு பெண்ணாக இல்லை. அவனிடம் பளபளப்பான ட்ரஸ் இல்லை. அழுக்காய் இருந்தான். இச்சமூகத்தின் மன நிலையை இச்சம்பவம் எனக்கு பளீரென சுட்டிக்காட்டியது.

தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். என்னால் அவனுக்கு உதவ எனதுடல் ஒத்துழைக்காது. மனவலியுடன் அவன் மெதுவாக வண்டியை நிமிர்த்தி கண்ணீருடன் சென்றதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பல்சர் பரதேசி எப்போதே சென்று விட்டான்.

சக மனிதன் துன்பத்தைக் கூட கண்டு கொள்ளாத உலகில் வாழ்வதை நினைத்து வேதனைதான் மண்டியது. 

எனது நண்பரொருவர் கணபதியில் வசிக்கிறார். அவருக்கு ஒரு நண்பர், அவர் ஒரு கோவில் பூசாரி. தனிக்கட்டை. கல்யாணம் ஏதும் செய்துகொள்ளவில்லை. 

அன்றைக்கு விடிகாலையில் பூசாரிக்கு நெஞ்சு வலி வந்து விட்டது. வலியில் துடித்திருக்கிறார். நம் ஆயுள் முடியப்போகிறது என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அவருக்கு உதவி செய்தவர்கள் ”உங்கள் சொந்தக்காரர் யாராவது இருக்கின்றார்களா, சொல்லி அனுப்புகிறோம்” என்று கேட்க அவர், “எனது நண்பரிடம் சொல்லுங்கள், அவர் வந்தால் க் கொள்வார்” என்றுச் சொல்லி இருக்கிறார். எனது நண்பருக்குத் தகவல் வந்து பூசாரியார் இருக்குமிடம் செல்லுகையில் உயிர் போய் விட்டது. விடிகாலை 5.45க்கு உயிர் பிரிந்து விட்டது. வேறு எந்தச் சொந்தக்காரரிடம் சொல்லவில்லை. தன் நண்பரிடம் மட்டும் தகவல் சொல்லி விட்டு அவர் விண்ணுலகை அடைந்து விட்டார். 

எனது நண்பர் பூசாரி நண்பனை மரியாதையுடன் தகனம் செய்து அத்தனை செலவினையும் செய்து விட்டு வீடு திரும்பினார்.

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி 
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. - திருவள்ளுவர் 

(நட்பின் உன்னதம் என்னவென்றால் எப்போதெல்லாம் நண்பன் துன்பப்படுகின்றானோ அவனுக்கு தன்னால் இயன்ற நிலையில் நின்று அவனின் துன்பத்தை நீக்குவது தான்  உண்மையான நட்பு)

பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழனின் நட்பினைப் பற்றிய சில கேள்விகள் எனக்குள் எழுந்ததுண்டு. இப்படியெல்லாம் இருக்க முடியுமா என்று கூட நினைத்தேன். 

இக்காலத்தில் நட்பினால் தான் மிகப் பெரும் பகை வளரும். கூடாத நட்பின் விளைவாக சொத்து, சுகம் இழந்தவர்கள் எண்ணற்றோர். இப்படி இருக்கும் கலிகாலத்தில் மனதை சிலிர்க்கச் செய்யும் இச்சம்பவத்தில் நானொரு சாட்சியாக இருந்தேன். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பித்தான் இப்பதிவு.

Monday, June 10, 2013

வெள்ளிங்கிரி மலையிலிருந்து வரும் ஓடை



நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் ஜீவ சமாதிக்குச் செல்லும் போதெல்லாம் அகண்ட காவிரியில் சுழித்து ஓடும் தண்ணீர்ல் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் குளியல் போட்டு, துணிகளைத் துவைத்து காய வைத்து விட்டு, பகல் பனிரெண்டு மணிக்கு நடக்கும் பூஜையில் கலந்து கொண்டு அவரைத் தரிசித்து விட்டு வருவேன்.

கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஓடி விட்டன. 

நேற்று நானும் என் குழந்தைகள் இருவரும் முள்ளங்காட்டில் இருக்கும் வெள்ளிங்கிரி சித்தர் ஜீவ சமாதிக்குப் பின்புறம் வெள்ளிங்கிரி மலையில் இருந்து வரும் ஆற்றில் குளித்து விட்டு வந்தோம்.

குளிர் தண்ணீர், மலையில் இருந்து வருகிறது. உடம்புச் சூடெல்லாம் வடிய கண்கள் சிவக்க குளித்தேன். காவிரியில் குளித்த அன்று இருந்த சந்தோஷம் நேற்று எனக்கு கிடைத்தது.

ஜோதி சுவாமி மாங்காய் சாம்பாரும், அருமையான ரசமும், முட்டைக்கோசு பொறியலும், பொங்கலும் தந்து உபசரித்தார்.

நெஞ்சம் நிறைந்து வீடு திரும்பினேன். பூண்டி வெள்ளிங்கிரி கோவிலுக்குச் செல்பவர்கள் அந்த ஆற்றில் குளியல் போடுங்கள். மூலிகைத் தண்ணீர். உடலுக்கு நல்லது அல்லவா?



Thursday, May 30, 2013

மனிதன் எப்படி வாழ வேண்டும்?


பூமியில் பிறப்பெடுத்த மனிதனுக்கு அவனின் ஒவ்வொரு கால வயதிலும் பிறரின் உதவியில்லாமல் வாழவே முடியாது. ஆனால் விலங்குகளுக்கு அப்படி அல்ல. பால் கறப்பு முடிந்து அடுத்த கன்றுக்கு பசு தயாரானதும் பசு வேறு கன்று வேறு என்றாகி விடும். அதன் பிறகு கன்றின் வாழ்க்கை அதன் கையிலோ அல்லது அது எவரிடம் இருக்கிறதோ அவரின் கையிலோ மாறி விடும். இதே போலத்தான் ஒவ்வொரு விலங்கினங்களும் வாழ்கின்றன.

ஆனால் மனிதப் பிறவியை எடுத்துக் கொண்டால் குழந்தையாய் இருக்கும் பொழுதில் இருந்து அம்மாவின் உதவி தேவை. அம்மாவிற்கு அப்பாவின் உதவி தேவை. அப்பாவிற்கு பிறரின் உதவி தேவை என்று உதவி உதவி என்று பிறரிடமிருந்து பெறுவது வாழ் நாள் முழுதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

வளர்வதற்குப் பெற்றோர் உதவி தேவை

படிப்பதற்கு ஆசிரியர் உதவி தேவை

சந்ததிக்கு பெண்ணின் உதவி தேவை

இப்படி அவனின் ஒவ்வொரு நொடியிலும் பிறரிடமிருந்து அவன் பெற்றுக் கொள்வது அதிகம். ஆனால் தற்போதைய கலிகாலத்தில் பெற்றுக் கொள்பவன் பிறருக்கு கொடுக்க மறுக்கிறான். அதை பணம் என்ற அளவுகோலை கொண்டு நான் ஏன் கொடுக்க வேண்டும்? என்று விதண்டாவாதமாய் கேள்வி கேட்கின்றான். அப்படிக் கேள்வி கேட்போருக்கு ஒரு செய்தி இதோ.

எனது மாஸ்டர் என்னிடம் சொன்ன ஒரு உண்மைச் சம்பவம்.

மாஸ்டர் அவரின் நண்பரின் கடைக்குச் சென்றிருந்த போது அழகிய யுவதி ஒருவர் வந்து 500 ரூபாய்க்குப் பென்சில் பேனாக்கள் வாங்கிச் சென்றிருக்கிறார். 

நண்பர் மாஸ்டரிடம்”இப்பெண்ணைப் பார்த்தால் ஏதாவது வித்தியாசமாய் தெரிகிறதா?” என்று கேட்டிருக்கிறார்.

”ஒன்றும் தெரியவில்லையே” என்றார் மாஸ்டர்.

“இப்பெண் எப்போது சாகும் என்று தெரியாது. முற்றிய நிலையில் புற்றுநோயால் அவதிப்படுகிறார். ஆனால் அப்பெண்ணின் முகத்தில் அதற்கான ஏதாவதொரு அறிகுறி தெரிகிறதா? இந்தச் சூழலிலும் வெறும் 5000 ரூபாய்க்கு வேலை செய்து கொண்டிருக்கிறார். வாங்கும் சம்பளத்தில் 500 ரூபாயை தன்னைப் படிக்க வைத்து ஆளாக்கிய அனாதை விடுதிக்கு பென்சில், பேனாவாக வாங்கிக் கொடுத்து வருகிறார் “ என்றார் மாஸ்டரின் நண்பர்.

மேலே இருக்கும் சம்பவத்தைக் கேட்டதும் எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. 

மாஸ்டர் தொடர்ந்து, ”மனிதன் சமூகத்திடமிருந்து பெற்றுக் கொண்டதை திருப்பிக் கொடுத்தே ஆக வேண்டும். இங்கு நாம் பெற்றிருப்பது எதுவுமே நம்முடையது அல்ல. நமக்கு முன்னே வாழ்ந்தவர்கள் நமக்கு கொடுத்துச் சென்றது. மனிதன் அதை மறந்து வாழ்கிறான். அதனால் துன்பத்தில் உழல்கிறான்” என்றார்.

அப்பெண்ணின் நன்றி மறவாமையை நினைத்து எனக்கு ஒரு நிமிடம் சந்தோஷமாய் இருந்தது. அவரின் உடல் நிலையை நினைத்து மனம் கனக்கிறது.
-

Monday, May 27, 2013

குல்மொஹர் மரங்களில் பூக்கள் மலர்ந்திருக்கின்றன

விடிகாலைப் பொழுதில் தினம்தோறும் வீட்டின் அருகில் மயில்கள் அகவிக் கொண்டிருக்கும். அச்சத்தம் எனக்கொரு ஆர்வத்தைக் கொடுக்கும். கிட்டத்தட்ட இருபது மயில்களுக்கு மேல் இருக்குமென்று எண்ணுகிறேன். அதில் இரண்டு மயில்கள் எனது மருத்துவ நண்பரின் வீட்டின் மீது நின்று வெடுக் வெடுக்கென்று தலையை அங்குமிங்குமாய் திருப்பிக் கொண்டிருக்கும். மிக வேடிக்கையாக இருப்பினும் அவற்றின் அழகு என்னை குதூகலத்தில் கொண்டு போய் தள்ளி விடும். பூக்கள் விரிந்தாற் போல ஒரு மகிழ்ச்சி எனக்குள்ளே பரவும். பூக்களை நாமெப்போதும் ரசிப்பதில்லை. பூக்கள் என்றவுடன் பெண்கள் நினைவுக்கு வந்து விடுகிறார்கள். ஆகையால் உண்மையான பூக்களை நாம் ரசிப்பது இல்லை. எனினும் அது யாருக்காகவோ பூத்துக் கொண்டே இருக்கின்றன.

வாழ்க்கையும் அவ்வாறுதான். ஆனால் அதை வாழத்தான் எவருக்கும் நேரமில்லை. அல்லது தெரியவில்லை. எல்லோரும் அதை வெகு சிக்கல்களுக்குள்ளாக்கி பின் துயரத்தில் வீழ்கிறோம்.

வசியம் என்பதைப் படித்து விட்டு, என்னை அழைக்கும் நபர்கள் எவரும் தன் வாழ்வினைப் பற்றிய படிதல் இல்லாமலிருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஏன் பிறந்தோம், ஏன் வாழ்கிறோம் என்று தெரியவில்லை என்றால் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் தெரியுமா? 

பாதை ஒன்று தெரிகிறது. அதில் நடக்க ஆரம்பிக்கிறோம். தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறோம். ஏன் நடக்கிறோம், எதற்காக நடக்கிறோம் என்பதெல்லாம் தெரியாது. நமக்கு முன்னே இருப்பவர் நடக்கிறார். நானும்  நடக்கிறேன் என்பார்கள். இப்படித்தான் இருக்கும் அவர்களின் வாழ்க்கை.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரிகிறது அல்லவா? புரியாதவர்களுக்கு ஒன்றும் சொல்வதிற்கில்லை.

குல்மொஹர் மரங்களில் பூக்கள் அழகாய் பூத்திருக்கின்றன. ஒரு இலைகளைக் கூட காணமுடியவில்லை. வெறும் பூக்கள் தான் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. அவை அழகாய் உங்களுக்கு ஒன்றினைச் சொல்ல விரும்புகின்றன. 

அதைப் புரிந்து கொள்ள முயலுங்கள். வாழ்க்கை அழகானது. அதை அர்த்தமுடன் வாழ முயலுங்கள்.

அன்பைத் தவிர வேறெதுவும் வளர்வதில்லை. அது கொடுத்தால் கூடிக் கொண்டே செல்லும். இன்னும் பெருகி வழிந்து கொண்டே இருக்கும். எவரெல்லாம் அன்பில் நனைகிறார்களோ அவர்களுடன் இறைவன் இருப்பான் என்கிறார் எனது மாஸ்டர். அன்பினைக் கைக்கொள்ளுங்கள். இறைவன் உங்களின் சொற்களில் வந்து நிற்பான்.

வாழ்க வளமுடன்

Wednesday, May 15, 2013

நேர்மைக்கு முன்னால்


சமீபத்தில் சவுக்கு இணையதளத்தில் நேர்மையே உன் விலை என்ன?என்று ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அக்கட்டுரை இந்தியாவின் தற்போதைய நிலையை சரியாகச் சுட்டிக்காட்டி இருந்தது.

இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கும் இருக்கும் கார்ப்பொரேட் கம்பெனிகாரர்களின் மன அசைவுக்கு ஏற்பத்தான் அரசியலும், நாடும் அசையும். இதைத் தெரிந்து கொண்டவர்கள் பிசினஸ் புள்ளிகளாக மாறுகிறார்கள். தெரியாதவர்கள் நேர்மை பேசி விரக்தியில் விழுவார்கள். எல்லாவற்றிற்கும் ஒரு விலையுண்டு என்பவர்கள் ஜெயிக்கின்றார்கள். அதைத் தெரிந்து கொள்ளாதவர்கள் தோல்வியைத் தழுவுகின்றார்கள். இது கார்ப்பொரேட் தத்துவம். வாழ்வியல் தத்துவம் வேறு. எந்த ஒரு கார்ப்பொரேட்டும் ஒரு காலத்தில் வீழ்ச்சியைத் தான் சந்திக்கும். உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி கழுகாகி விட முடியாது அல்லவா? இது பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம். இப்போது விஷயத்திற்கு வரலாம்.

கலிகாலம் வந்து விட்டதே, உன் பொருள் என் பொருள், என் பொருள் உன் பொருள் என்று சண்டை சச்சரவுகள் இல்லாமால் வாழ்ந்து வரும் மனிதர்களிடையே எப்படிப் பிரச்சினையை உருவாக்குவது என்று கவலைப்பட்டார்களாம். பளபளவென மின்னும் தங்கக் கட்டிகளை தெருவில் இறைக்க அன்றிலிருந்து மனிதனுக்குள் தனக்கு என்ற ஆசை வேர்விட்டு பிரச்சினை துளிர் விட்டு இன்றைக்கு அடுத்தவன் எக்கேடு கெட்டால் என்ன என்று நினைக்கும் வரை வந்து விட்டது.

இப்படியான காலகட்டத்திலும் தர்ம தேவதையின் தவப்புதல்வர்கள் இப்பூமியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட ஒரு தர்ம தேவையின் தவப்புதல்வனின் கதை தான் இது.

திருச்சியில் மிகப் பெரிய கார்ப்பொரேட் கம்பெனி ஒன்று இருக்கிறது. அக்கம்பெனியின் முதலாளி பெரும் தனக்காரர். எவரையும் மதிப்பது கூட இல்லை. பணமிருந்தால் போதும் எவனையும் விலைக்கு வாங்கி விடலாம் என்ற எள்ளல் கொண்டவர் அவர். இப்படிப்பட்ட தடித்தனம் மிக்க அவர் திருச்சியின் பிரதான சாலையில் இடமொன்றினை வாங்கினார். வாங்கியவுடன் இரண்டடுக்கு மாடிக் கட்டிடம் கட்ட அனுமதி வாங்கி விட்டு, நான்கு மாடிகளைக் கட்டி விட்டார். 

கார்ப்பொரேஷன் அதிகாரி ஒருவர் இந்த சட்டமீறலைக் கண்டுபிடித்து நோட்டீஸ் கொடுக்கச் சென்ற போது, அவரை அலுவலகத்திற்குள் விடவே இல்லை. கேட்டிற்கு வெளியில் இருக்கும் செடியின் மீது உன் நோட்டீஸை ஒட்டி விட்டுப் போ என்று எகத்தாளமாய் எக்காளாமிட்டிருக்கிறார் முதலாளி. அதிகாரி நேர்மைக்கு பெயர் போனவர். தர்ம தேவதையின் வாரிசு. என்ன அவமானப்படுத்தினாலும் தன் கடமையைச் சரிவரச் செய்யும் தன்னம்பிக்கைக்காரர். அடுத்த சில நாட்களில் பொக்லினைக் கொண்டு வந்து அத்துமீறிக் கட்டப்பட்டிருந்த இரண்டு மாடிகளை இடித்து தள்ளி விட்டுச் சென்று விட்டார்.

பணமிருந்தும், புகழ் இருந்து, அதிகாரவர்க்கத்தினரின் துணை இருந்தும் கட்டிட இடிப்பினை அவரால் தடுக்க முடியவில்லை. அவரால் செய்ய முடிந்தது என்ன தெரியுமா? அந்த கார்ப்பொரேஷன் அதிகாரிக்கு மாற்றல் வாங்கிக் கொடுத்தது மட்டும் தான். இதை அவர் தனது வெற்றி என நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அதற்கும் சேர்ந்து மிகப் பெரிய ஆப்பினைச் சொருகினார் அந்த அதிகாரி.

மாற்றலாகிப் போன இடத்தில் அவருக்கு நெருக்கமான ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியைச் சந்தித்து இருக்கிறார். ஐயேயெஸுக்கு ஆச்சரியம். திருச்சியில் இருந்தவர் திடீரென இங்கு வந்து விட்டாரே என்ன காரணம் என்று கேள்வி கேட்க, அவர் விவரத்தைச் சொல்லி இருக்கிறார். அந்த ஐ ஏ எஸ் தன் நண்பரை மாற்றம் செய்த அந்த கார்ப்பொரேட் முதலாளிக்கு பாடம் கற்பிக்க விரும்பினார். 

அடுத்த ஒரு வாரத்தில் அந்த நிறுவனத்தில் இன்கம்டாக்ஸ் ரெய்டு நடந்து. அத்தனை அக்கவுண்டுகளும் லாக் செய்யப்பட்டது. அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. திக்பிரமை பிடித்தவர் போலாகி விட்டார். முதலாளிக்குத் திகில் பிடித்து விட்டது. கிலி பிடித்தாட்ட ஆள் பீதியில் உறைந்து போனார். கோடிக்கணக்கான ரூபாய்க்கு கணக்குக் காட்ட வேண்டுமே? என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார். தர்மம் நின்று கொல்லும் என்பதை அவர் நிச்சயம் உணர்ந்திருக்க வேண்டும்.

எந்த ஒரு போலியும் நேர்மைக்கு முன்னே தூசிக்குச் சமமானது என்பதை அனுபவத்தில் அந்த முதலாளி நிச்சயம் உணர்ந்திருப்பார் என்று நம்புவோம்.


Friday, May 3, 2013

என்ன செய்வீர்கள்?

நானும் இல்லத்தரசியும் மெடிக்கலுக்கு மருந்து வாங்கச் சென்றிருந்தோம். பையன் விளையாடும் போது தலையில் இடித்துகொண்டான். தலையில் புசுக்கென்று வீங்கிக் கொண்டது. சரியான டென்ஷன். இல்லத்தரசி மருந்தகத்தில் நின்று கொண்டிருந்தாள். நானோ தகிக்கும் வெயிலில் நின்றிருந்தேன்.

அப்போது என் வண்டிக்கருகில் ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது. 

“சார், வண்டிக்கு எங்கே வீல் போட்டீர்கள்?” என்று கேட்டார்.

வெயிலி இது என்னடா கொடுமை என்று நினைத்துக் கொண்டே, அவருக்கு விபரங்களைச் சொன்னேன்.

“யாருக்கு சார்? “ என்று கேட்டேன்.

”என் பெண்ணுக்கு சார் ! மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டாள். என்னென்னவோ செய்து பார்த்தோம். எங்கெல்லாமோ ட்ரீட்மெண்ட் பார்த்தோம். ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு காலை எடுக்க வேண்டியதாகி விட்டது” என்றுச் சொல்லி கண்கலங்கினார்.

அடுத்து அவர் சொன்னது, “பையனுக்கு மூளைக்காய்ச்சல் வந்து இடுப்புக்கும் கீழ் செயலிழந்து விட்டது”.

கேட்ட எனக்கு திகீர் என்றது. அவருக்கு எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் நினைத்தேன். அவரின் மனவலி எனக்குள் பரவியது. அவருக்கு கோடிகளில் பணம் கொட்டிக் கிடக்கிறது. இருப்பினும் என்ன செய்வது? 

ஏன் இப்படி ஆனது அவருக்கு என்று எனக்குப் புரியவில்லை.

எத்தனை கோடிகள் இருப்பினும், எத்தனை அதிகாரத்தில் இருப்பினும், நாட்டின் உயர்ந்த பட்ச பதவியில் இருப்பினும் பிள்ளைகளுக்கு என்று வந்து விட்டால் அந்தக் கோடிகளால் என்ன செய்ய முடியும்? அதிகாரத்தால் என்ன செய்ய முடியும்? கையைக் கட்டிக் கொண்டு அழுதுதான் புரள வேண்டும்.

பிரதமர் நண்பராக இருந்தாலும் அவரால் என்ன சாதிக்க முடியும்? சொல்லுங்கள் பார்ப்போம். இதுதான் வாழ்க்கை. இது தான் உண்மை. ஆனால் எவரும் அதைப் புரிந்து கொள்வதே இல்லை.

வழியில் செல்லும் போது எவனாவது காரில் இடித்து விட்டால் அவ்வளவுதான். குதி குதியென்று குதிப்பார்கள். இப்படிப்பட்ட மனிதர்களைத்தான் அடிமுட்டாள்கள் என்று கருத வேண்டும்.

ஒரு நிமிடம் யோசியுங்கள். ஒரு தத்துவம் புரியும். இதோ ஒரு சித்தரின் பாடல் உங்களுக்காக.

தேடிய செம்பொன்னும் செத்தபோ துன்னோடு
நாடி வருவதுண்டோ குதம்பாய் நாடி வருவதுண்டோ

போம்போது தேடும் பொருளில் அணுவேனும்
சாம்போது தான் வருமோ குதம்பாய் சாம்போது தான் வருமோ

காசினி முற்றாயுள் பைவசம் ஆயினும்
தூசேனும் பின்வருமோ குதம்பாய் தூசேனும் பின்வருமோ

உற்றார் உறவினர் ஊரார் பிறந்தவர்
பெற்றார் துணையாவரோ குதம்பாய் பெற்றார் துணையாவரோ

மெய்ப்பிணி கொள்ளாத மேதினி மாந்தர்க்குப்
பொய்ப்பிணி ஏதுக்கடி குதம்பாய் பொய்ப்பிணி ஏதுக்கடி

விண்ணாசை தன்னை விரும்பாத மக்கட்கு
மண்ணாசை ஏதுக்கடி குதம்பாய் மண்ணாசை ஏதுக்கடி

சேனைகள் பூந்தேர் திரண்ட மனுத்திரள்
யானையும் நில்லாதடி குதம்பாய் யானையும் நில்லாதடி

செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம்
தங்கா தழியுமடி குதம்பாய் தங்கா தழியுமடி

கூடங்கள் மாடங்கள் கோபுர மாபுரம்
கூடவே வராதடி குதம்பாய் கூடவே வராதடி

- குதம்பைச் சித்தர்




Thursday, March 7, 2013

நிலம் (1) - நிலத்தை திருட முடியுமா?


எல்லா டாக்குமென்டுகளும் சரியாக இருக்கின்றன. வரி கட்டுகிறோம். நிலத்தின் அனுபவ பாத்தியமும் நம்மிடம் இருக்கிறது. நாம் தான் நிலத்தின் உரிமையாளர் என்று நம்பிக்கையோடு இருப்போம். எல்லா அனுபவ உரிமையும் நம்மிடம் இருந்தாலும் நம் நிலத்தை வேறொருவர் விற்க முடியுமா? என்று கேட்டால் ஆம் என்று சொல்ல முடியும். எப்படி சாத்தியம் என்கின்றீர்களா? 

இதோ எங்களிடம் வந்த ஒரு வழக்கின் விபரம் உங்களுக்காக.

சமூகத்தில் பிரபலமான ஒருவரின் நிலம் அது. தற்போதைய விலையோ கோடானுகோடி. அப்பிரபலம் காலமாகி விட அவரின் குடும்பத்தாருக்கு நிலம் இருக்கும் இடம் தெரியும். அத்துடன் விட்டு விட்டார்கள்.இப்படியான ஒரு சூழலில் வில்லாதி வில்லன் ஒருவன் இந்த நிலத்தின் மீது கண் வைக்கிறான். காரியங்கள் விறுவிறுவென நடக்க ஆரம்பிக்கின்றன.

அந்த இறந்து போன பிரபலத்தின் தாத்தாவின் பெயரும், வில்லாதி வில்லனின் தாத்தாவின் பெயரும் ஒன்றாக இருக்கிறது. இனிஷியலும் ஒன்றே. வில்லாதி வில்லன் அந்த நிலத்தை தன் தந்தையின் நிலம் என்றுச் சொல்லி, கோர்ட்டில் அதன் உரிமையாளர் என்று ஆர்டரும் வாங்கி விடுகிறான். அதன் பிறகு அந்த நிலத்தை வேறொருவரிடம் விற்றும் விடுகின்றான். நிலத்தின் உண்மையான உரிமையாளர் அவ்விடத்தில் இல்லாத காரணத்தால் அந்த நிலத்தை விற்று, அதை பிளாட் போட்டு விற்று விடுகின்றார்கள்.

இந்தச் சூழலில் பிரபலத்தின் வாரிசுகள் நிலத்தைப் பார்வையிட வந்த போது, வில்லாதி வில்லன் செய்து வைத்திருக்கும் வில்லத்தனத்தை அறிகின்றார்கள். எங்குச் சென்றாலும் அத்தனை டாக்குமெண்டுகளும் முற்றிலுமாய் மாற்றப்பட்டு இருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. 

கோர்ட்டில் வழக்கு போட்டார்கள். (வழக்கு முடிய எத்தனை ஆண்டுகாலம் ஆகும் என்று நினைத்துப் பாருங்கள்) 

எப்படி இப்பிரச்சினையில் இருந்து வெளிவருவது? 

நிலம் அவர்களுக்குத் திரும்பக் கிடைக்குமா? 

இப்படியான ஒரு இக்கட்டான சூழலில் நம்மிடம் இந்தப் பிரச்சினை வருகிறது.

இந்தப் பிரச்சினையில் உண்மையான உரிமையாளரின் உரிமையை எப்படிக் கண்டுபிடித்து நிலை நாட்டுவது?

அதை சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து நிலத்தினை மீட்டெடுக்க உதவினோம். 

குறிப்பு : ரெவன்யூ சர்வே ரெக்கார்டு என்பது வெகு முக்கியமான நிலம் சம்பந்தப்பட்ட அரசு ஆவணமாகும். நிலத்தின் உரிமையாளர்களின் பெயர்கள் இந்த ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். தவறும் பட்சத்தில் இது போல பிரச்சினைகள் வரக்கூடும். எதிர்காலத்தில் நிலம் சம்பந்தப்பட்ட டாக்குமெண்ட் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்கின்றார்கள். ஆகவே நிலம் வைத்திருப்போர் அவசியம் கவனிக்க வேண்டியது இந்த ஆவணம்தான். வேறேதேனும் உதவிகள் தேவைப்பட்டால் என்னை அழைக்கவும். ஆலோசனைகள் நிச்சயம் தருவேன்.

Wednesday, March 6, 2013

புரியும் புதிர் ஒன்று


மனித வாழ்க்கையின் ரகசியம் 100 சதவீதம் என்றால் அதில் அரை சதவீதத்தைக் கூட அறிவியலாலும், பிற எந்த புற விஞ்ஞானத்தாலும் இது காறும் அறிந்து கொள்ள முடியவில்லை. இயற்கை என்பதே ஒரு மாயை. அந்த மாயைக்குள் தான் சக்தியே பிறக்கிறது. விலக்கல், ஈர்ப்பு சக்திகளிடையே பிறக்கிற மின்சாரம் மாயையிலிருந்து பிறக்கிறது. இந்த பிரபஞ்சத்தின் பொய் தோற்றங்களான ஏற்றம் இறக்கம், நன்மை தீமை, இன்பம் துன்பம், இரவு பகல் போன்ற மாயையிலிருந்து பிறப்பவை தான் மனித குல வாழ்வு. இந்த பொய் தோற்றங்கள் எப்போது ஒரு மனிதனை பாதிக்காது இருக்கின்றதோ அன்று அவன் படைப்பின் ரகசியத்தை அறிந்தவனாகின்றான். மனிதன் தன் வாழ்வு நிரந்தரமானது என்று நினைக்கிறான். ஆனால் அவனது வாழ்வு முடிதற்குரியது. அதை அவன் அறிந்திருந்தாலும் அவனைச் சுற்றி இருக்கும் மாயை அவனை அந்த உண்மையை அறியாவண்ணம் விலக்கி வைக்கின்றது.

வாழ்க்கை எனும் புதிரை விஞ்ஞானத்தால் விடுவிக்க முடியாது. இந்தச் செய்தி நம்பிக்கை இல்லாவிட்டால் உண்மையிலேயே பயங்கரமானதாகும். மனிதனின் எண்ணத்திற்கு முன்னால் இதுவரை வைக்கப்பட்ட நிலையான புதிர்களில் தலையானது வாழ்க்கை என்ற புதிரே - மார்கோனி

இந்திய ஆன்மீகப் பாரம்பரியத்தின் முக்கிய யோகியான பரமஹம்ச யோகானந்தரின் வாழ்க்கையில் நடந்த ஒரு கதை ஒன்று.

அவர் இந்தியாவில் வித்யாலயா நடத்திக் கொண்டிருந்த போது, ஒரு சிறிய மான் குட்டி ஒன்றினை அவர் வளர்த்து வந்தார். அது அவருடனே வசித்து வந்தது. இப்படியான ஒரு நாளில் விடிகாலையில் பணி நிமித்தமாய் வெளியில் செல்லவதற்கு கிளம்பிய யோகியார், மான் குட்டிக்கு காலையில் உணவினைக் கொடுத்து விட்டுச் சென்று விட்டார். வித்யாலத்தில் பயின்று வந்த மாணவன் ஒருவன் அந்த மான் குட்டிக்கு மீண்டும் உணவளித்து விடுகிறான். அதன் காரணமாய் மான்குட்டி நோய்வாய்ப்பட்டு, படுத்தே இருந்திருக்கிறது. மாலையில் வித்யாலயாவிற்கு வரும் சுவாமி மான் குட்டியின் உயிர் ஊசலாடுவதைக் கண்டு வேதனையுறுகிறார். இறைவனிடம் வேண்டுகிறார். 

இறை அன்பின் காரணமாய் இறையின் மீது பற்றுக் கொண்டவர்களின் வேண்டுதலுக்கு இறைவன் உடனே செவி சாய்ப்பான் என்பது ஞானிகளுக்குத் தெரியும். “இறைவா, இம்மான் குட்டியின் உயிரைக் காத்து அருளுக” என்று பிரார்த்தித்த யோகியாரின் அன்றிரவு கனவில் அவருக்கு திருப்பம் ஒன்று ஏற்பட்டது.

அவரின் கனவில் வந்த அந்த மான் குட்டி, “சுவாமி, நான் இந்த உடலை விட்டு நீங்க விரும்புகிறேன், உங்கள் பிரார்த்தனை எனது விருப்பத்திற்கு இடையூறாய் இருக்கிறது” என்றது. திடுக்கிட்டு விழித்தெழுந்த யோகியார் மாபெரும் உண்மையை புரிந்து கொள்கிறார்.

நீங்களும் புரிந்து கொண்டீர்கள் அல்லவா? புரியாதவர்கள்  மீண்டும் படியுங்கள்.

இன்னும் வரும் ..... 
கட்டுரை ஆக்கத்திற்கு உதவி : ஒரு யோகியின் கதை ( நன்றி )

சித்த வாழ்க்கை


மனித உயிர்கள் உருவான நாளில் இருந்து இந்த நாள் வரையிலும் கோடானு கோடிபேர் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள். மனித சமூகம் அத்தனை நபர்களையும் நினைவில் வைத்துக் கொண்டாடியதில்லை. பாரதம் மட்டுமல்ல உலகெங்கும் நன்னெறிகளைப் போதித்தவர்களையும், நல்லவைகளைச்  செய்தவர்களையும், கொடுங்கோலர்களையும் தான் உலகம் மறவாமல் தெரிந்து வைத்துக் கொண்டுள்ளது. ஏன் இப்படி? லோகாயதாய வாழ்க்கை நெறிகளில் பொருள் தேடும் வாழ்க்கையைத்தான் மாயை வாழ்க்கையின் அர்த்தமுள்ளதாக காட்டும். பணமில்லை என்றால் வாழ்க்கையில்லை என்கிறது லோகாயதாய வாழ்க்கை. இந்த வாழ்வின் பின்னால் செல்பவர்களை உலகம் மறந்து விடுகிறது.பொருள் பற்றிய எந்த வித பிரக்ஞையும் இன்றி வாழ்ந்தவர்கள் பின்னால் தான் பொருளைத் தேடி ஓடிக் கொண்டிருப்பவர்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள். நாட்டை ஆளும் அரசனின் அவையிலே காவி உடை உடுத்தியவருக்குத்தான் முதல் மரியாதை.. அங்கு செல்வத்திற்கு இடமில்லை. அருளுக்கு மட்டுமே இடமுண்டு.

”கையில் ஒரு பைசா பணமில்லை. அதனால் எனக்கு வருத்தமில்லை. ஒரு லட்ச ரூபாய் இருக்கிறது அதனால் எனக்கு மகிழ்ச்சியில்லை. நாளைக்கு எனக்கு பணம் தேவை. ஆனால் என்னிடத்திலோ பைசா இல்லை. அவன் எங்கிருந்தோ பணம் வாங்கிக் கொடுப்பான். அது கடனாகக் கூட இருக்கலாம். அக்கடனைக் அவன் தான் கட்ட வேண்டும். இல்லையென்றால் அந்த அவமானம் அவனுக்குத்தான். இதுதான் சித்த வாழ்க்கை” என்றார்  எனது நண்பர்.

கிட்டத்தட்ட 90 கோடிக்கும் மேல் சொத்து அவருக்கு இருந்தது. வக்கீல் தொழில் செய்து வந்தார். வக்கீல்களுக்கு எப்போதுமே உண்மை பேச முடியாது. உண்மைக்கு எதிராய் தான் இருக்க முடியும். ஏதாவதொரு சந்தர்ப்பத்திலே உண்மை பேசலாம். ஆனால் பெரும்பாலும் உண்மைக்கு எதிராய்த்தான் தொழில் செய்ய முடியும். இப்படியான ஒரு தருணத்தில் இந்த வக்கீலுக்கு “காதறுந்த ஊசியும் வராது கடைக்கே” என்ற வாக்கியம் பட்டினத்தாருக்கு ஞானத்தை விழித்தெழச்செய்தது போல அவருக்கும் உண்மைக்கு எதிரான தொழில் விழிப்பு நிலையைத் தர, வீடு விட்டு குடிசையில் வாழ ஆரம்பித்தார். அங்கும் அவரின் உறவுகள் செல்ல ஆரம்பிக்க, யாரிடமும் சொல்லாமல் எங்கோ சென்று விட்டார். நீண்ட நாட்கள் சென்றன. காசியிலிருந்து வக்கீலின் குடும்பத்தாருக்கு அழைப்பு வர, அங்குச் சென்று  பார்த்தால் ஒரு சாதாரண மனிதன் வாழ அருகதையற்ற ஒரு அறையில் வாழ்ந்து இறையடி சேர்ந்திருக்கிறார் அந்த வக்கீல். கோடி கோடியாய் சொத்து இருந்தும் ஏன் அவர் இப்படியான ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். மனித வாழ்வின் விடையே அவர்தான்.

மனிதனிடம் இருக்கும் எல்லாமும் அவனிடமிருந்து சென்று விடும். மனிதனுடன் என்றும் இருப்பது அவன் செய்த தர்மம் மட்டுமே.

இன்னும் வரும் .....