குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, November 5, 2008

ஊட்டி சென்று வந்த கதை - 3

போட் ஹவுசில் அன்றைய தினம் நிறைய மக்கள் குவிந்திருந்தார்கள். ஆளாளுக்கு மொபைல் போன், கேமராக்களுடன் தான் திரிகிறார்கள். மனிதர்களுக்கு தன் இருப்பை உலகுக்கு காட்ட வேண்டுமென்ற ஆவல்(ஆதிக்க மனப்பான்மையாக இருக்குமோ?). ஃபோட்டோக்களாக எடுத்துக் கொண்டிருந்தனர். சுற்றுலா வந்ததன் நோக்கத்தை முற்றிலுமாக மறந்து விட்ட மனிதப் பிறவிகள். இயற்கையை அதன் அமைதியோடு மனதுக்குள் உணர்ந்தால் தான் அதன் மகத்துவம் புரியும். ஆனால் இவர்கள் செய்த காரியங்கள் புற அழகிற்கும், நாக்குச் சுவைக்கும் அடிமையாய்ப் போன மனித அகதிகள் போன்றவர்கள் இவர்கள் என்பதனை உணர்த்தின.





சுற்றி வர கடைகள். எங்கு நோக்கினும் மக்கள் வெள்ளம். அமைதியான, அழகான அந்த இடத்தை வணிக அரங்கம் போல உருமாற்றியிருந்தார்கள். மக்கள் கடைகளில் குவிந்திருந்தார்கள். சோளம், ஐஸ் கிரீம் என்று தின்பண்டங்களின் விற்பனை சூடு பறந்தது. குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களில் நேற்றைய குழந்தைகளும் இன்றைய குழந்தைகளும் வீல் வீல் என்று சத்தமிட்டபடி விளையாடினார்கள். தம்பியின் வற்புறுத்தல் காரணமாக போட்டில் ஏறினேன். வீல் சேர் அனாதையாக நின்றது.

தூரத்தில் இருந்து வீல் சேரைப் பார்த்தேன். ”வீடு வரை உறவு. வீதி வரை மனைவி. காடு வரை மக்கள். கடைசி வரை யாரோ“ கண்ணதாசனின் பாடல் நினைவுக்கு வந்தது. சில இடங்களில் சில தேவையற்றுப் போகும். மனிதனும் தன் வயதான காலத்தில் மற்றவருக்கு பயனில்லாப் பொருளாய் ஆகிவிடுகிறான். உலகம் பொருள் சார்ந்த வாழ்க்கையின் பால் நடைபோடத் துவங்கி விட்ட காரணத்தால், மனித உணர்வும், உணர்ச்சியும் கவனிப்பாரற்று கிடக்கின்றன. அவை மனோ தத்துவ மருத்துவர்களால் மறு சீரமைப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. புறவுணர்வு வாழ்க்கையின் பால் மூழ்கிக் கிடக்கும் மனிதனுக்கு அகவுணர்வு வாழ்க்கையின் மகத்துவம் புரிதலில்லை. அதை சில ஆன்மீகவாதிகள் என்போர் காசாக்கி வருகின்றனர். அவ்விடத்திலும் கூட்டமுண்டு. அவ்விடமும் வணிக அரங்காக மாற்றமடைந்திருக்கும். ஏனென்றால் உலக மாந்தர்கள் நுகர்வோர் வாழ்வினை மட்டுமே நாகரீகத்தின் உச்சக்கட்டமாக நினைக்கின்றார்கள். இவர்களின் பொழுது போக்கு மல்டி பிளக்சுகளிலும், உயர்தர ஹோட்டல்களிலும் ஒளிந்து கிடக்கிறது. அங்குச் செல்லத் தேவையான பொருளாதாரத்திற்காக தன் வாழ்வையே பலியாக்கும் விட்டில் பூச்சிகளாய் இன்றைய மனிதர்கள் உலா வருகிறார்கள்.

அமைதியான தண்ணீர். பச்சை நிறத்தைப் பிரதிபலித்தது. சுற்றிலும் மரங்கள். தண்ணீரில் படகுகள் மிதந்தன. வாழ்க்கையில் மனிதர்கள் மிதப்பது போல. படகும் மக்களை சுமந்து கொண்டு தண்ணீரில் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. மக்கள் தன் மக்களை சுமப்பது போல.

தனி போட் எடுத்துக் கொண்டு நானும், தம்பியும், எனது மனைவியும், தம்பி மனைவியும், என் மகள் மற்று மகனுடன் போட்டில் பயணித்தோம்.

வலிந்து வலிந்து போட்டைத் தள்ளும் மனிதரைப் பார்த்தேன். உள்ளம் நிலை கொள்ள வில்லை. வலித்தது. ஒரு ஜாண் வயிற்றுக்காக கைகள் வலிக்க வலிக்க, மூச்சுத் திணற திணற கால்களை உதைத்துக்கொண்டு கண்கள் வெளிவரும் அளவுக்கு இரு கைகளாலும் துடுப்பினால தண்ணீரைத் தள்ளிக் கொண்டு வந்தார். மனதுக்குள் வலித்தது. மனித வாழ்க்கை இவ்வளவு குரூரமானதா ?

ஏன் ???????????????????????????????????????????????????????????

Monday, November 3, 2008

சந்தவை தயாரிப்பில் நான்

ஒரு மாலை நேரம்.கணிப்பொறியில் ஏதோ வேலை செய்துகொண்டிருந்தேன். கிரைண்டர் சத்தமிட்டது. ச்சே இவளுக்கு எப்ப பாரு இதே வேலை. எரிச்சலாக இருக்க, கதவை சாத்த முயற்சித்த போது, அம்மணி ( அதாங்க என் மனைவி)

"என்னங்க இங்க வாங்க " என்று அழைக்க,

ச்சே இவளுக்கு இதே வேலையாப் போச்சு எப்ப பாரு எதையாவது சொல்லி மூடை கெடுத்து விட்டு..ச்சே ச்சே. எதுக்குடா கல்யாணம் பன்னினோம் என்று ஒரே வெறுப்பா இருந்தது. வேறு வழி இல்லாததால் அழைப்புக்கு உடன்பட வேண்டியதாகி விட்டது.கோர்ட்டு சம்மன் எல்லாம் தூசு பண்ணிடலாம். ஆனா இந்த அம்மணிகள் உத்தரவு இருக்கே கேட்டவுடன் குலை நடுங்க செய்கின்றன..

" எதுக்கு வரச் சொன்னே " கோபத்துடன் நான்.
" இதை பிடிச்சு திருகுங்க " என்றாள். எனக்கு சரியான கோபம். வேலையைக் கெடுத்து விட்டாளே என்று.
" இதுக்கா கூப்பிட்டே , ஏன்டி உசுரே எடுக்கிறே "
" உஸ், பேசாம சொல்லுறதை செய்யுங்க " என்றாள். பார்வையா அது. அப்படி ஒரு கொடூரமய்யா அது..
அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும். ஹிட்லராம் ஹிட்லர். அவனெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை. இந்த அம்மணிகள் தானய்யா கொடுங்கோலர்கள். மனசாட்சியே இல்லாத இடி அமீன்கள்.

சமயலறையில் ஒரு வஸ்து இருந்தது. மாமியார் உபயமாம். மாமியார்கள் தானைய்யா எமன். ஏற்கனவே ஒன்று தலைமீது ஏறீ உட்கார்ந்து கொண்டு ஆட்டம் போடுது. இதுல இது வேற. பார்க்க ஸ்பீல்பெர்க் படத்தில் வருமே ஒரு இயந்திரம், பூமிக்குள் இருந்து வெளியே வந்து ஆட்கள் எல்லாம் பிடித்து முழுங்குமே, மூனு காலு கூட இருக்குமே, அது போல இருந்தது.

இடியாப்ப உரல் பாத்து இருக்கீங்களா ? அது போல தான் இருந்தது அந்த வஸ்து. ஆனா அதை மூன்று கால்களுக்கு இடையில் பொருத்தி மேலே திருகு போல இருந்தது அதை திருகினால் உரலுக்குள் சென்று அழுத்துகிறது. உரலுக்குள் மாவை வைத்தால் பிழிந்து கம்பி போல வெளியே தள்ளுகிறது.

அம்மணி இட்லி போல (எங்க வீட்டு இட்லி வைத்து தான் எல்&டி பெரிய பெரிய கட்டிடம் எல்லாம் கட்டுறாங்க) இருந்ததை எடுத்து உரலுக்குள் வைத்து

" ம், திருகுங்க " என்றாள்.

ராணுவ உயர் அதிகாரி கூட இப்படி எல்லாம் உத்தரவு போட மாட்டார்களய்யா. அங்கே வேலை பிடிக்கலைன்னா ராஜினாமா செய்து விடலாம். இங்கே முடியுமா ? விதி.. யாரோ நம்ம மன்றத்துல கல்யாணம் செய்யபோறதா எழுதி இருந்தாங்க . சமயம் பார்த்து அது நினைவுக்கு வர, அவரை நெனச்சு பாவமா இருக்க, நொந்தபடி அந்த கம்பியை பிடித்து திருகினால், அட நொக்காமக்கா, இட்லியா அது இல்லை வெள்ளை குண்டா. திருகவே முடியலை. கையெல்லாம் எரிச்சல் வர, ஆம்பளை இல்ல, முக்கி முக்கி ( சத்தம் வெளியே தெரியாமல் தானய்யா )ஒரு வழியா திருகி முடிக்க, வெள்ளை வெளேரென்று அது கீழே இருந்த தட்டில் சுருள் சுருளாக விழுந்தது. அதற்குள் எனக்கு வேத்து விருவிருத்து போயிருச்சு.

ஒரு வழியா இருந்த வெள்ளை குண்டுகளை எல்லாம் உரலுக்குள் திணித்து அம்மணி " ம்... " என்று உத்தரவு இட நான் விக்கி விதிர்த்து முக்கி முனகி கை எரிச்சல் பட பிழிந்து முடித்தேன்.

அருகில் அமர்ந்து இந்த சமையல் போரை பார்த்துக்கொண்டு இருந்த என் ஒன்றரை வயசு மகளுக்கு தட்டில் அந்த சந்தவையை போட்டு கொடுக்க, கீழே அமர்ந்து கொண்டு சிறிய கையால் எடுத்து வாயில் வைத்து ஒரு உறிஞ்சு உறிய, வாய்க்குள் வைத்து மென்றபடி என்னை பார்த்து சிரித்தது. கை எரிச்சல் எல்லாம் போயே போச்சு...

இது தான் வாழ்க்கையா ?

ஆமா சந்தவை எப்படி தயாரிப்பது என்று உங்களுக்கு சொல்லனும் இல்லையா...

தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - இரண்டு கப்
தேங்காய் - அரை மூடி
ஏலக்காய் - ஒன்று
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

அரிசியையை மூன்று மணி நேரம் ஊறவைத்து, கிரைண்டரில் போட்டு அதனுடன் துருவிய தேங்காயை சேர்த்து, ஏலக்காயை மறக்காமல் போட்டு நைசாக ( சந்தனம் போல ) அரைத்து எடுத்து, கடைசியில் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்து வைத்துகொண்டு, இட்லி பாத்திரத்தில் குழியில் ஊற்றி பத்து நிமிடம் வேகவைக்க வேண்டும். வெந்தவுடன் எடுத்து, சூடாக அந்த வஸ்துவுக்குள் வைத்து பிழிந்தால் சூடான மணமான சந்தவை தயார். இதனுடன் தேங்காய் பால் அல்லது சட்னி சேர்த்து சாப்பிட்டால் அருமை...

--------------------------------------------------------------
05-08-2007 அன்று தமிழ் மன்றத்தில் எழுதிய கட்டுரையின் மீள்பதிவு
--------------------------------------------------------------

Sunday, November 2, 2008

சங்கரா மீன் குழம்பு

உழவர் சந்தைக்கு சென்று காய்கறி வாங்கிய பிறகு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். கூடவே மனைவியும், மகளும். மீன்கடையில் அழகழகாக மீன்களை அடுக்கி வைத்திருந்தனர். சனிக்கிழமை கவுச்சி சாப்பிடாமல் இருங்கள் என்ற எனது அஸ்டாராலஜிஸ்ட் நண்பரின் கட்டளையினை இன்று ஒரு நாள் மீறித்தான் பார்ப்போமே என்று மனைவியிடம் மெதுவாக அம்மணி, இப்படி இப்படி என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்ய, முறைத்தாள்.

சரணாகதி தத்துவத்தை உதிர்த்தேன், வேறு வழியின்றி மீன் சமைத்துத் தர சம்மதித்தாள். சட்டத்தையும் சில சமயம் வளைத்து விடலாமல்லவா? எங்கள் வீட்டுச் சட்டம் வயிற்றுக்காக சற்றே வளைந்து கொடுத்தது. அதனால் கிடைக்கப்போவது மீன் குழம்பு.

சங்கரா மீன் வாங்கிக் கொண்டிருக்கும் போது அருகில் அடுக்கி வைத்திருந்த நண்டு சோகமாக என்னையே பார்ப்பது போல தோன்றியது. எனக்கு ஒரு வழக்கமிருக்கிறது. யாரேனும் சோகமாக முகத்தை வைத்திருந்தால் எனக்கு பார்க்க பொருக்காது.உடனடி நிவாரணம் செய்ய முற்படுவேன். அந்த வழக்கத்தின் காரணமாக நண்டின் சோகத்தை போக்க விரும்பினேன். அம்மணியை நோக்கி ஒரு ரொமாண்டிக் லுக் விட, அடுத்த நிமிடம் நண்டும் மெனுவில் சேர்ந்தது.

உள்ளுக்குள் ஒரே கும்மாளம். ஆகா இன்னிக்கு மீன் குழம்பும், நண்டு வறுவலும் கிடைக்கப்போவதை எண்ணி எண்ணி மனசு எக்காளமிட்டது.

மீன் குழம்பினை எப்படிச் செய்வதுன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க..

கொஞ்சம் தளர நல்லெண்ணெய் விட்டு வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை கிளறி விட்டு, அதனோடு சிறிய வெங்காயம் மற்றும் நடுவில் கீறிய இரண்டு பச்சை மிளகாயையும் போட்டு வெங்காய வாசம் போகும் வரை வதக்கி அத்துடன் தட்டி வைத்த பூண்டும், இரு நறுக்கிய தக்காளியுடன் துளியூண்டு உப்பும் சேர்த்து வதக்கிய பிறகு மல்லித்தூள், மிளகாய்தூள் சேர்த்து வாசம் போகும் வரை, அதாவது எண்ணெய் மசாலிவிலிருந்து பிரியும் வரை வதக்கிய பிறகு புளி சேர்த்து நன்கு கொதிக்க வைத்த சாற்றில் சங்கரா மீனைச் சேர்த்து இரு கொதி விட்டு இறக்கி வைத்து மேலே மல்லித்தழை தூவி, சிறிது நேரம் சென்ற பிறகு சுடு சோற்றில் குழம்பினை ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சொர்க்கம் அவ்விடத்தில் இருக்கும்.

இப்போ நண்டு வறுவல் எப்படிச் செய்வதுன்னு சொல்றேன்.

அரை மூடி தேங்காய், நான்கு பல் பூண்டு, இரண்டு வெங்காயம், அரை டீஸ்பூன் சோம்பு, நான்கு சிவப்பு மிளகாய் இவற்றை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொண்டு அத்துடன் கழுவிய நண்டினை சேர்த்து பிசைந்து தேவையான அளவு உப்புச் சேர்த்து வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் மசாலாவுடன் இருக்கும் நண்டினை சேர்த்து ஒரு கிளறு கிளறி மூடி வைத்து விடவேண்டும். சிறிது நேரத்தில் நண்டு வெந்து விடும். மசாலா நன்கு சிவக்கும் வரை பிரட்டி எடுத்தால் வாசம் ஊரையே தூக்கும்.
அந்த மசாலாவின் சுவையே தனி. எந்த நட்சத்திர ஹோட்டலிலும் கிடைக்காத அருமையான சுவை.

கிடைக்கப்போகும் மீன் குழம்பும், நண்டு வறுவலும் எண்ணங்களில் விரவ, வண்டியை விரட்டினேன்.

”ஏங்க, வெங்காயம், பூண்டு, தக்காளி நறுக்கி தருகின்றீர்களா” என்று மனைவி கேட்க, வேறு வழி. மீன் குழம்பு வேண்டுமே, நண்டு வறுவல் வேண்டுமே. மறுக்க முடியுமா? (நேரம் பார்த்து காரியத்தை நடத்திக் கொள்வது இப்படித்தான் போலும். தலையணை மந்திரமாக இருக்குமோ??)

சின்ன வெங்காயம் உரித்து இரண்டாக வெட்டினேன். பூண்டினை தோல் உரித்து வைத்தேன். தக்காளிகளை சிறிய சிறிய பீஸ்களாக நறுக்கி வைத்தேன். தேங்காயை திருகி எடுத்து வைத்தேன்.

முக்கால் மணி நேரத்தில் நண்டு மசாலாவின் வாசனையும், மீன் குழம்பு வாசனையும் என்னைச் சூழ்ந்தது. சாப்பாடு தயார் என்றார் மனைவி. இன்று ஒரு கட்டு கட்டி விட வேண்டுமென்று நினைத்தபடி அறையிலிருந்து வெளி வந்தேன்.

மூன்று தட்டுகளில் சூடாக சாதம் எடுத்து வைத்தார். மகனும், மகளும் ”அப்பா நண்டினை எடுத்துக் கொடு “ என்றார்கள். பிள்ளைகள் இருவரும் சாப்பிடட்டும் பின்னர் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றுச் சொல்லி விட்டு, நண்டு மசாலாவைச் சோற்றில் சேர்த்து பிசைந்து ஊட்டி விட்டேன். நண்டின் சதையினை எடுத்து ஊட்டி விட்டேன். ஆர்வமாக “ அப்பா நல்லா இருக்கு” என்று சொல்லியபடியே சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்ததும், நாங்கள் இருவரும் சாப்பிட அமர்ந்தோம். ரித்தியும், அம்முவும் நல்லா சாப்பிட்டாஙகல்ல என்று சொல்லியபடி மீன் குழம்பினை சோற்றில் ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டேன். அதிகம் சாப்பிட இயலவில்லை. மனைவியோ ஒரு கரண்டி சாதத்தைக் கூட சாப்பிடவில்லை. பிள்ளைகள் இருவரும் சாப்பிட்ட அழகும், அவர்களின் சந்தோஷமும் இருவருக்கும் சாப்பிட்ட நிறைவினைத் தர, நண்டும் மீன்குழம்பும் சட்டியில் இருந்தன, ஆனால் எங்களுக்குத்தான் சாப்பிடப் பிடிக்கவில்லை.

Friday, October 31, 2008

அன்னை இந்திராகாந்தி

இந்தியாவின் இரும்புத் தலைவி. ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது இந்திராகாந்தி அவர்கள் இறந்து விட்டார் என்று பள்ளியில் விடுமுறை விட்டார்கள். ஆனால் நாளை காலை அவசியம் அனைவரும் வந்து விட வேண்டுமென்று உத்தரவு.

மறு நாள் காலை ஆஜர். என் மூன்று சக்கர வண்டியில் இந்திராகாந்தி அவர்களின் புகைப்படத்தை முன்புறம் இணைத்து மாலைகள் போட்டு, வண்டி முழுவதும் பூக்களால் தோரணம் அமைத்தார்கள். வண்டிக்குள் நான். வண்டியைத் தள்ள இரு தோழர்கள். என் பின்னால் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் அணி வகுத்தார்கள். கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் தூரம். ஊர்வலம் சென்றது. வழியில் யார் யாரோ சாலையில் விழுந்து கும்பிட்டார்கள். ஊர்வலத்தை எங்கள் ஊர் கடைத்தெருவில் முடித்தோம். நான் வீடு வந்து சேர்ந்து விட்டேன். எனக்குப் பெருமையாக இருந்தது. பள்ளியே என் பின்னால் வந்தது அல்லவா. மாலையில் இந்திராக் காந்தி அவர்களுக்கு இறுதி ஊர்வலம் நடத்தி குளத்தில் குளித்து விட்டு வந்தது எங்கள் ஊர்.

வாழ்ந்தால் அவர் மாதிரி வாழனும். மக்கள் இந்திராக்காந்தி அவர்களின் மேல் காட்டிய அன்பினை நினைத்தால். எங்கோ ஒரு பட்டிக்காட்டு மக்கள் அவர் மீது காட்டிய வெறித்தனமான பாசம்.. மனிதர்கள் பாசத்தால் கட்டப்பட்டவர்கள்.
இப்பதிவை எழுத காரணமாயிருந்தவர் : திவ்யா. நன்றி திவ்யா.

Wednesday, October 29, 2008

சாருவுக்கு கடவுளின் மொழி கட்டுரைக்காக எழுதிய கடிதம்

என் வசத்திலேயே இல்லை

வாத்தியாரே....

நான் இன்று என் வசத்திலேயே இல்லை. நான்ஸி அஜ்ரமின் குரலோடு மிதந்து கொண்டிருக்கிறேன். மிதந்து கொண்டிருக்கிறேன். காற்றோடு காற்றாக.. காற்றின் ஊடே மிதந்து கொண்டிருக்கிறேன். மனசு லேசாகி விட்டது. கண்ணை மூடினால் இசைவெள்ளம் என்னைச் சூழ்கிறது. மிதக்கிறேன்.. மிதக்கிறேன்..

என் மனசுக்கு இதமாய் ஹிந்துஸ்தானி இசையும், புல்லாங்குழலும் அதன் தனி இசையும் எங்கோ ஒரு அத்துவானக் காட்டில் ஒற்றையாய் பறந்து கொண்டிருக்கும் என் மனதில் கேட்கும் இசையாய் சிலிர்ப்பினை உண்டாக்கும். பிறந்து பத்து நாளேயான வெது வெதுப்பான சூட்டில் இருக்கும் குழந்தையின் இதயத் துடிப்பின் இசை போன்ற அனுபவத்தையும், பரவசத்தையும் தருகிறார் நான்சி அஜ்ரம். என் தாயின் மடியில் தலை வைத்து உறங்கும் அந்த வேளையில் அவளின் விரல்கள் தலைமுடிக்குள் அலைந்து கொண்டிருக்கும் போது உயிரையே தடவும் உணர்ச்சி உருவாகும். அவ்வித உணர்ச்சியினை உண்டாக்குகிறது நான்ஸி அஜ்ரமின் குரல். என் அன்பு மகளின் இதயத்துடிப்பினையே இதுவரை இசைக்கெல்லாம் இசையாக நினைத்திருந்தேன்.என்னைத் தாலாட்ட என் மனைவியின் நெஞ்சின் துடிப்பு ஒன்றே போதுமானதாயிருந்தது. அந்த வரிசையில் நான்ஸி அஜ்ரமின் பாடல்கள் சேர்ந்து விட்டன. நான்ஸி அஜ்ரமை அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றிகள்.

காதல்... காதல்... காதல்...
காதல் போயின் சாதல்.......... என்றான் பாரதி.

அவன் சொல்ல வந்த அர்த்தம் புரியவில்லை. இன்று தான் புரிந்து கொண்டேன்.

காதலின் வேதனையை நான்ஸி அஜ்ரம் பாடும் தொனி சித்ரவதைகள் எல்லாவற்றிலும் முதலிடத்தைப் பிடிக்கும் என்று என்னுள் உணர நேர்கிறது. சமீபத்தில் ஹாஸ்டல் என்ற திரைப்படத்தை பார்க்க நேர்ந்தது. மனிதர்களைச் சித்ரவதைப் படுத்தும் படம். வேதனை... வேதனை... வேதனை... எழுத்தில் எழுத இயலா வேதனை... படமாக்கியிருக்கும் விதம் மனதில் ரத்தம் சொட்ட வைக்கும். சித்ரவதையின் உச்ச கட்டமாய் சிலிர்த்து நிற்கும் உடம்பு..... கூர்மையான ஊசியை வைத்து நறுக் நறுக்கென இதயத்தைக் குத்தி, இதயத்தில் இருந்து வழியும் சூடான ரத்தம் வழியும் போது உண்டாகும் வலியினை விட உச்சகட்டமானது நான்ஸி அஜ்ரமின் காதல் வேதனைக் குரல்.

காதல் கொண்டுள்ள மனிதன் தான் வேதனை உலகின் உச்சகட்ட வேதனையை அனுபவிக்கிறான்.... ரத்தமின்றி, ஆயுதமின்றி மனிதனை சித்ரவதை செய்யும் காதல் தான் அணு ஆயுதத்தை விட கொடுமையான ஆயுதம் என்பதில் வியப்பேதும் இல்லை.

அன்பன்,
தங்கவேல் மாணிக்கம், கோயமுத்தூர்.

Tuesday, October 28, 2008

நான்ஸி அஜ்ரமின் பாடல் எம்பி3 வடிவில்...

நான்ஸி அஜ்ரமின் பாடலைக் எம்பி3 வடிவில் கேட்க.... கேட்க......

கடவுளின் மொழி:நான்ஸி அஜ்ரம்:சாரு நிவேதிதா

என் இனிய நண்பர், எழுத்தாளர் சாரு நிவேதிதா இன்று காலையில் எனக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தார்.

”தங்கம், அடுத்து வரும் கட்டுரைக்கான பாடல் தொகுப்பு இவைகள். அதற்கான வேலைகளை ஆரம்பிக்கின்றீர்களா ?”

எண்ணிப் பார்த்தேன். கிட்டத்தட்ட இருபது பாடல்கள். அட நொக்காமக்கா, இன்னிக்கு பெண்டு நிமிரப் போகுது என்று நினைத்தபடி, பாடல்களை ஒவ்வொன்றாக கேட்கத் துவங்கினேன்.




நான்ஸி அஜ்ரமின் இந்தப் பாடலைக் கேட்டேன். மெய் மறந்தேன். செல் போன் ரிங்காகி விட்டது இந்தப் பாடல். அண்ணனைக் கூப்பிட்டு போனுக்கு ரிங்க் பன்னுங்கள் என்று சொன்னேன். நான்ஸி அஜ்ரம் பாடினாள். காற்றில் மிதந்தேன். மிதந்தேன்...

பசி மறந்தோடியது. குளிக்கும் அறைக்குள் நுழைந்தேன். என்னைச் சுற்றி சுற்றி நான்ஸி அஜ்ரமின் குரல்கள் ஆரவாரித்தன.

குளியலை அரைகுறையாக முடித்து விட்டு வெளி வந்தேன். மனைவி புரூட்டை எடுத்துக் கொண்டு வந்தாள்.

”எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது” என்று சொல்லிய படி கணிணி அறைக்குள் நுழைந்தேன்.

”ஏங்க, பைத்தியம் பிடிச்சிருச்சா உங்களுக்கு“ என்றாள்.

சிரித்தேன். நான்ஸி அஜ்ரமின் குரலைக் கேட்க கேட்க என்னை மறந்தேன். இதோ நான்ஸி அஜ்ரம் தன் காதலனுக்காக பாடிக் கொண்டிருக்கிறாள்.

பதிவை எழுதிக் கொண்டிருக்கிறேன். சாரு அவர்களுக்கு நன்றி...

Sunday, October 26, 2008

நேரமாகிக் கொண்டிருக்கிறது !!!!

எவ்வளவோ ஆசைகள்...
என்னென்னவோ விருப்பங்கள்...
இதனிலும்
படிக்க பல மணி நேரம்...
வேலைக்காக பல மணி நேரம்..
ஆன்மீகத்துக்காக பல மணி நேரம்..
மனைவிக்காக, மகனுக்காக, மகளுக்காக,
நண்பனுக்காக என்று பல மணி நேரம்...
இப்படி எத்தனையோ மணித்துளிகள்
பிறருக்காய்...
எனக்கான நேரம் வந்த போது,
என் வாசலில்
மரணம் வந்து நின்றது....

ஆகையால், எனக்கான நேரத்தில்
என்னை வாழவிடு விதியே....
நேரமாகிக் கொண்டிருக்கிறது.......

Thursday, October 23, 2008

Survival of fitness

எனது சில நண்பர்கள் சினிமா இயக்குனர்கள். அந்த இயக்குனர்களில் ஒருவர் ” தங்கம், புது படம் கமிட் ஆகியிருக்கிறேன். புது முகம் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆரம்பகால ரேவதி போல, புதுமுகம் தேவை, உனக்குத் தெரிந்தவர்களிடம் கேட்டுப்பாருங்களேன் “ என்றார். எனது நண்பர்கள் பல பேரிடமும் சொல்லி வைத்திருந்தேன். அதில் ஒரு நண்பர் எனது முன் அனுமதி இல்லாமல் இரண்டு பெண்களிடம் எனது தொலைபேசி எண்ணைக் கொடுத்து விட்டார்.

மாலை நேரம், புது எண்ணிடமிருந்து அழைப்பு வந்தது.

”சார் மதுமதி பேசறேன், தங்கம் சாரா?”
“எஸ் சொல்லுங்கள் “
“சார், போட்டோ கிடைத்ததா “
” ஓ... நீங்களா, கிடைத்து விட்டது. இயக்குனருக்கு அனுப்பி இருக்கிறேன்”
“ஏதாவது பதில் வந்ததா சார்”
“இல்லேம்மா, டைரக்டரைப் பிடிக்க முடியவில்லை. அவரே கூப்பிடுவார். அதன் பின்னர் தான் தெரியும்”
“சார், வேற ஏதாவது வேணுமா ”
“ வேற ஏதாவதுன்னா, என்னம்மா ?”
” உங்களை நேரில் வந்து பார்க்கலாமா “ என்றார்.

எனக்கு விர்ரென்று கோபம் தலைக்கேறியது. இந்தப் பெண் உமனைசர் என்று நினைத்து விட்டது போல தெரிகிறதே என்று நினைத்துக் கொண்டு,

“அதெல்லாம் வேண்டாம். உன்னை இயக்குனர் செலக்ட் செய்தால், நீயாச்சு, அந்த இயக்குனராச்சு. என்னை எதுக்குப் பார்க்கனும்?” என்று கர்ண கடூரமாக சொன்னேன்.

ஒரு நிமிடம் பேச்சே கேட்கவில்லை.

“சார், மன்னிச்சுக்கங்க “ என்று விம்மிய குரல் வந்தது.
“ பாரும்மா, எதுக்கு சினிமாவுக்கு வரனும்னு நினைக்கிறே” என்றேன்.
“ சர்வைவல் ஆஃப் பிட்னெஸ்” என்றார் அந்தப் பெண்.

இரண்டு வார்த்தைகளில் அவரின் சூழ்நிலையை விளக்கிய அந்தப் பெண்ணின் அறிவினை எண்ணி வியந்தேன்.

ஆம், சர்வைவல் ஆஃப் பிட்னெஸ். நினைத்துப் பார்த்தால் கொலை, கொள்ளை, போர், ஊழல், சர்வாதிகாரம் எதுவுமே தப்பே இல்லை என்று தான் தெரிகிறது.

வாழ வேண்டும். அதற்கு எது வேண்டுமானாலும் செய்யலாம்.

குறிப்பு : சர்வைவல் ஆஃப் பிட்னெஸ் என்று இரவில் புலம்பிக் கொண்டிருந்தீர்கள். அதற்கேற்ற கதையை எழுதவா ? என்று மனைவி இந்தப் பதிவை படித்த பின்னர் சொன்னார்.

Wednesday, October 22, 2008

ஊட்டி சென்று வந்த கதை - 2

எனக்கு மக்களைப் பற்றியும் அவர்களின் பார்வைகள் பற்றியும் கொஞ்சம் கூட கவலை இல்லை. காசே இல்லை என்றால் பிச்சை எடுக்கிறான் என்பார்கள். காசு பணம் வந்தால் கொள்ளை அடிக்கிறான் என்பார்கள். இவர்களின் பார்வை குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதை போல இருக்கும். இந்த மக்களால் நான் பட்ட வேதனை கொஞ்சம் நஞ்சம் அல்ல. பள்ளியில் படித்த போது முதல் மார்க் வாங்குவேன். எனக்கும் என் மச்சானுக்கும் தான் போட்டி. மாலையில் டியூசன் முடித்து மூன்று சக்கர வண்டியில் முக்கி முனகியபடி வருவேன். அந்த நேரம் பார்த்து கடையில் வெறும் வாய் மெல்ல வருபவர்கள், ”ஏண்டா, உன் மாமனை கடை கன்னி வச்சுத் தரச்சொல்லி சம்பாதிக்கலாம்ல. எதுக்குடா, எங்க பையனுவ படிப்பையும் சேர்த்துக் கெடுக்கிறே” என்பார்கள். இவர்கள் எல்லாம் என்மீது கோபம் கொண்டவர்கள். இவர்களின் பையன்கள் முதல் மார்க் வாங்க முடியவில்லை என்று தனக்குள் கருவிக் கொண்டு சொல்லால் குளவியாய் கொட்டும் உன்மத்தர்கள். மாமனும், மச்சானுமே முதல் மார்க்கும் இரண்டாம் மார்க்கும் எடுத்தா நம்ம பயலுக எப்படி முதல் மார்க்கு எடுக்கிறது என்ற ஏக்கம். இவர்களின் கிண்டல் பேச்சைக் கேட்டதும் எனக்குள் வன்மம் எழும். முறைத்து விட்டு இன்னும் வேகமாக சைக்கிளைச் சுற்றுவேன்.




கல்லூரியில் படித்த போது நடந்த நிகழ்ச்சி. எங்கள் ஊரிலிருந்து கல்லூரிக்குச் செல்ல மூன்று பஸ் மாற வேண்டும். பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் தஞ்சாவூர் செல்லும் பஸ், பஸ் ஸ்டாண்டின் ஆரம்பத்தில் நிற்கும். பஸ்ஸிலிருந்து இறங்கி எச்சிலும், கோழையும் துப்பி காய்ந்து கிடக்கும் தரையில் கைகளை ஊன்றிக் கொண்டு கால்களை இழுத்துக் கொண்டு வேர்த்து விறுவிறுத்து பஸ்ஸில் ஏறினேன். கண்டக்டர் என்னைப் பார்த்ததும், ”டேய் உனக்கு அறிவில்லை. இதே எழவா போச்சு. வேற பஸ்ஸைப் பாரு” என்றார். கண்டக்டரை கர்ண கடூரமாக முறைத்தேன். அதே சமயத்தில் ஒரு முக்காடு போட்ட முஸ்லிம் பெண்மணி ஒருவர் 25 பைசா காசை கையில் வைத்தார். அவர்களை என்னதான் செய்வது ? அவர்களைப் பொறுத்த வரை அது உதவி. ஆனால் அது எனக்கு என் தன்மானத்துக்கு விடப்படும் சவால். அந்த அம்மாவிடமே காசை திரும்பக் கொடுத்து வேண்டாம் என்று மறுத்தேன். அது என் முகத்தையே உற்று உற்றுப் பார்த்தபடி வந்தது. கண்டக்டர் அருகில் வந்து மன்னிக்கவும் என்றார். மன்னிப்பாம் மன்னிப்பு. என்னாங்கடா ஒருத்தனை கேலி பண்ணி அவனிதயத்தை குத்தி கிழித்து விட்டு மன்னிப்பாம். புண்ணாக்கு. இவனுகளை நிக்க வச்சு பழுக்க காய்ச்சிய கடப்பாரையை குண்டியில சொருகனும் போல வன்மம் வரும். ஒரு நிமிடம் நிதானித்திருந்தால் வித்தியாசம் தெரிந்திருக்கும். ஆனால் அதைச் செய்யக்கூட திராணியில்லாதவர்கள். கொலை செஞ்சா அந்த நிமிடத்தோடு வலியும் போகும் உயிரும் போகும். ஆனால் இதயத்தைக் கிழித்தால் சாகும் வரை அல்லவா அந்த வலி இருக்கும்.

இதையாவது ஒரு வழியா மன்னிக்கலாம். ஆனால் இரண்டு வருடத்திற்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்று இருக்கிறதே ரத்தம் கொதிக்கும். மிகப் பெரிய ஹோட்டலில் மூன்று நாள் வாசம். நானும் நண்பரும் ஒரு பெரிய பிசினஸ் சம்பந்தமாக வந்து பேச்சு வார்த்தையெல்லாம் முடித்து விட்டு ஊருக்கு கிளம்ப பஸ் ஸ்டாண்டில் பத்து லட்சரூபாய் காரில் வந்து இறங்கினோம். என்னை இறக்கி விட்டவர் மிகப் பெரிய கோடீஸ்வரர். பஸ்ஸில் ஏற இரண்டு ஸ்டெப் எடுத்து வைக்க வேண்டும். அதற்குள்ளாக காரில் வந்த ஒரு மகாத்மா ஒரு ரூபாய் காசை என் மீது விட்டெறிந்தார். எனக்கு அது சகஜமான நிகழ்ச்சி. என் நண்பருக்கோ கோபம். காசை கையில் எடுத்துக் கொண்டு ஸ்டாப் என்று கத்தினார். கார்காரர் என்னவோ ஏதோவென்று நிறுத்த அவரிடம் சென்ற என் நண்பர், “ஏன்யா அவர் உன்னிடம் காசா கேட்டார்” என்று சொல்லி முறைத்து விட்டு வந்தார். கார்காரர் ”சாரி” கேட்டார். என் நண்பருக்கு படபடப்பு அடங்க வெகு நேரமானது.

இப்படிப்பட்ட மனிதர்களால் சில நேரங்களில் தன்மானம் கிழித்தெறியப்படும் போது உள்ளுக்குள் சமூகத்தின் மீது வன்மம் பற்றி எரியும். அது தவறு என்று இப்போதைய மனநிலை சொல்கிறது. ஆனால் அந்த நேரத்தில் எழும் மனநிலை அதை உணருமா ? கொதிக்கும். இப்போது நான் எவரின் மீதும் வன்மம் கொள்வதில்லை. காரணம் வாழ்க்கை. எனக்குள் இருக்கும் வன்மம் இன்று ஆக்கபூர்வமாக செயல்படுகிறது. வாழ்க்கை என்பது கொடுத்துப் பெறுவது. மகிழ்ச்சியைக் கொடுத்தால் மகிழ்ச்சியைப் பெறலாம். துன்பத்தைக் கொடுத்தால் துன்பத்தைப் பெறலாம். இது தான் மனித வாழ்வின் அடி நாதம். ஆனால் யாரும் அதை உணருவதாய் இல்லை. அதைப் பற்றி எனக்கும் கவலையும் இல்லை.

கதை எங்கேயோ சென்று விட்டது. என்ன செய்வது சில நேரங்களில் இப்படியும் ஆகிவிடும். சாலை ரிப்பேர் செய்யப்படுகிறது மாற்று வழியில் செல்லுங்கள் என்ற போர்டினைப் பார்த்து மாற்று வழி மூலமாக சேருமிடம் போவோமில்லையா அதைப் போல இதை எடுத்துக் கொள்ளுங்கள்.

வெகு ஆழமான பகுதி. ஓரத்தில் மீன்கள் துள்ளிக் குதித்தன. பார்க்கும் போது பரவசமாய் இருந்தது. என் இதயமே துள்ளிக் குதித்ததாய் கற்பனை கரைபுரண்டோடியது. தம்பி “அண்ணே, மான் பாரு “ என்றான். பார்த்தேன். சிறையில் மான். வாழ்க்கைக்குள் மனிதன். இரண்டும் பொறுந்தி வருவதாய் தோன்றியது.




இயற்கையைச் சுற்றிப் பார்க்க வந்து விட்டு, புகைப்படமாய் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

தொடரும்..................