குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label புனைவுகள். Show all posts
Showing posts with label புனைவுகள். Show all posts

Monday, April 16, 2018

குருசாமிகவுண்டருக்காக கருப்பசாமியின் கண்ணீர்

கடந்த வாரம் கோவையில் வெயில் உயிரினங்களை வறுத்தெடுத்தது. சூடு தாங்க முடியவில்லை. உடலெல்லாம் புசுக் புசுக்கென கட்டிகள் தோன்றின. லிட்டர் லிட்டராய் தண்ணீரைக் குடிக்க வேண்டியதாகி விட்டது. முன்பெல்லாம் இப்படி கோவை இருந்தது கிடையாது. வெயில் அடிக்கும், ஆனால் சுடாது. வர வர கோவை கொதிக்கிறது. காவிரியாலா அல்லது வெப்பச்சூடாலா என்று இனம் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அவனுக்குத் தீர்க்கவே முடியாத இடியாப்பச் சிக்கல்களை உருவாக்குவது உறவினர்கள் தான். வாழ்ந்தாலும் ஏசுவார்கள், தாழ்ந்தாலும் ஏசுவார்கள். ஆக அவர்களுக்கு குறை சொல்லித்தான் வழக்கம். தங்கத்தட்டில் வைத்து சாப்பாடு பரிமாறினாலும் தட்டு நெளிந்திருக்கிறதே என்றும் குறை சொல்லும் அளவுக்கு உள்ளுக்குள் வெம்மையில் வெம்பிக் கிடப்பதால் வாயில் வரும் வார்த்தைகள் வன்மத்துடன் வெளிவரும். இப்படியானவர்களால் தான் பல குடும்பங்களுக்குள் குத்து வெட்டு என்று கூட நடக்கிறது. பைசாவுக்கும் பிரயோஜனமல்லாத பிரச்சினைகள் கோர்ட்டு வரை வந்து நின்று கொண்டிருக்கும். ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவரவர்களுக்கு மறந்து போன விஷயம் அவர்களின் மரணம். அது எப்போது வரும்? எப்படி வரும்? என்று தெரிந்து கொள்ளாமல் ஏதோ ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் வாழ்வது போல செம கெத்துக் காட்டிக் கொண்டிருப்பார்கள்.

விளாங்குறிச்சியில் எனக்குத் தெரிந்த, பழக்கமான ஒரு கவுண்டர் இருந்தார். அவர் ஒரு விவசாயி. எதார்த்தவாதி. தன் அப்பாவுடன் பிறந்த பெண்களுக்கு சொத்துக்களை பாகம் பிரித்துக் கொடுத்தவர். அந்தளவுக்கு தன்மையானவர். அதிர்ந்து பேசத் தெரியாதவர். சத்தம் போட்டுப் பேசிப் பார்த்ததில்லை. எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பார். பெரும்பாலும் தென்னைத் தோப்பில் களைகளுக்கு மருந்து அடித்துக் கொண்டும், தென்னை மட்டைகளை வெட்டிக் கொண்டும், தண்ணீர் பாய்ச்சிக் கொண்டும் இருப்பார். அவர் வீட்டுக்குச் சென்றால் வரவேற்று எளிமையாகப் பேசிக் கொண்டிருப்பார். அவர் மீது எனக்கு கொஞ்சம் பிரியம் சாஸ்தி. இறந்து போன எனது சித்தப்பா குருசாமி போலவே இருப்பார் அவர். அவரிடம் இதைச் சொல்லி இருக்கிறேன். எப்போது பார்த்தாலும் சிரித்து நலம் விசாரிப்பார்.

அவருக்கு ஆஞ்சியோ செய்திருப்பதாக செய்தி கிடைத்திட அவரைச் சந்திக்க வீட்டுக்குச் சென்றேன். என்னைப் பார்த்ததும் அருகில் நாற்காலியைத் தூக்கிப் போட்டு அமர்ந்து கொண்டு,”டாக்டர் இரண்டு மாசம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லி இருக்கிறார். அதுக்கப்புறம் வேலை செய்வேன்” என்றுச் சொல்லிச் சிரித்தார்.  அவரின் முகம் களையிழந்து கிடந்தது. மருத்துவமனையின் வாசமும், மருந்துகளின் தாக்கமும் அவரின் பொலிவைக் குறைந்திருந்தன. முகத்தில் அந்த வசீகரப் புன்னகை ஒளிந்து கொண்டது. அதற்குள் உறவினர்கள் வரிசைக் கட்டி நிற்க, அவரிடமிருந்து விடை பெற்றேன். நோயுடன் போராடுவது ஒரு பிரச்சினை என்றால், உறவினர்களுக்குப் பதில் சொல்வது மற்றொரு பிரச்சினை.

மூன்று நாட்களுக்கு முன்பு அவர் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டவுடன் மனது இருப்புக் கொள்ளாமல் வீட்டுக்குச் சென்றேன். உறவுகளின் கூட்டமும், அக்கம் பக்கத்தார், பழக்க வழக்கங்கள் உள்ளோர், நண்பர்கள், வேலைக்காரர்கள் என கூட்டம் வர ஆரம்பித்தன. உறவுகள் அழுது கொண்டிருந்தனர். ஒரு சிலர் கைகளில் மாலைகளோடு வந்தார்கள். அவரின் மீது போட்டு, கும்பிட்டு விட்டு வந்து அமைதியாக உட்கார்ந்து கொண்டார்கள். சொல்லி வைத்தாற்போல அங்கு வந்திருந்த அனைவரின் முகங்களும் வீங்கி இருப்பதைப் போல தெரிந்தது. எனக்குள் வருத்தம் மண்டிக் கிடந்தது. அயர்ச்சி அடைந்தது உள்ளம். அழுகுரல்களின் ஒலி அவ்வப்போது மனதைக் கனக்கச் செய்து கொண்டிருந்தன. 

இந்த பூமி எத்தனையோ உயிர்களைத் தாங்கி இருக்கிறது. இன்னும் தாங்கிக் கொண்டிருக்கிறது. ஐம்பூதங்களின் கூட்டுக் கலவையான உடல் காற்றுப் போனவுடன் அழுகி விட ஆரம்பிக்கிறது. உடல் நாற்றம் வீசுவதற்குள் பூமிக்குள்ளோ அல்லது நெருப்பிலோ எரிக்கப்படுகிறது. அத்தனை ஆசைகளும், கோப தாபங்களும் காற்றுப் போன அடுத்த நொடியில் காணாமல் போய் விடுகின்றன. 

ஒரு சிலரைப் பார்த்திருக்கிறேன். படுக்கையில் உயிரோடும் உடம்போடும் போராடிக் கொண்டிருப்பார்கள். எழுந்து நடமாட முடியாது. கடைசிக் கட்டத்தில் இருப்பார்கள். ஆனாலும் உயிரை இழுத்துக் கொண்டு கிடப்பார்கள். உயிரின் மகிமை அது. உடம்பின் சுகம் அது. அவ்வளவு எளிதில் உயிர் உடம்பை விட்டு விட்டுப் போகாது. ஒரு சிலருக்கு மரணம் என்பது நொடியில் வலியின்றி, என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள் வந்து விடும். இப்படியான மரணங்களை நல்ல சாவு என்பார்கள். கவுண்டருக்கும் நல்ல சாவுதான் வந்திருக்கிறது என்று பேசிக் கொண்டார்கள்.

அப்போது வயதான ஒருவர் வாயில் துண்டைப் பொத்தியபடி கண்களில் கண்ணீர் வழிய என்னருகில் வந்து நின்று கொண்டு குலுங்கிக் கொண்டிருந்தார். அவரின் கண்ணீர் என்னைப் படுத்தியது. அவரின் தோளைத்தொட்டு அருகில் அழைத்தேன். 

“என்னைத் தொடாதீர்கள்” என்றார் அவர்.

“ஏனய்யா?” என்றேன்.

”அரிஜன்!” என்றார்.

எனக்குள் எரிச்சல் மண்டியது. அவரின் வயது அவரின் எண்ண ஓட்டத்தைக் காட்டியது. அந்தக் காலத்து ஆட்கள் இப்படித்தான் இருப்பார்கள். அது அவரின் குற்றமல்ல, அவரின் பழக்கம். 

அவரை அருகில் அழைத்து, “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, ஏன் இப்படி அழுகின்றீர்கள்? கவுண்டரை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டேன்.

“பதினைந்து வயதிலிருந்து எனக்குத் தெரியும். அவர் வீட்டின் வேலைக்காரன் நான். வயதாகியதால் தான் என்னால் வர முடியவில்லை. அவர் எனக்குக் கொடுக்கும் மரியாதையும், அவரால் நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையையும் நினைத்தேன் அழாமல் இருக்க முடியவில்லை” என்றுச் சொல்லி மீண்டும் அழுதார்.

அவரை அருகில் அழைத்து தட்டிக் கொடுத்து, “இதோ என் வீடு இருக்கிறது. கவுண்டர் இல்லைன்னா என்னா? நீங்கள் என் வீட்டுக்கு வாருங்கள், உங்களுக்கு என்னால் முடிந்ததைச் செய்கிறேன்” என்றுச் சொல்லி ஆற்றுதல் படுத்தினேன். கொஞ்சம் சரியானார். 

இறந்து போன குருசாமிக் கவுண்டருக்காக அவரின் வேலைக்காரர் விட்ட அந்தக் கண்ணீர்த்துளிகளில் மறைந்து கிடக்கிறது அவர் வாழ்ந்து சென்ற வாழ்க்கை.

* * *
16/04/2018

Monday, April 9, 2018

காவிரி ஆறும் கலைந்து போன தமிழர்கள் வாழ்வும்

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எங்கள் வீட்டுக் கிணற்றில் பதினைந்தாவது அடியில் நீர் கிடக்கும். அக்கம் பக்கத்து வீட்டு ஆட்கள் குடிக்க கிணற்று நீருக்குத்தான் வருவார்கள். பூட்டைக்கயிறு அடிக்கடி அறுந்து போகும். ரப்பரில் வாங்கிப் போட்டோம். அது பூட்டையில் சிக்கிக் கொண்டு இழுக்க முடியாது. கயிறுதான் நீர் இறைக்க வசதியாக இருக்கும். மழைக்காலங்களில் கிணறு நிரம்பி வழியும். கிணற்று வாய்ப்புறமாக புற்கள் சேர்ந்த மண்ணை சேந்தி எடுத்து வரப்பிட்டு வைப்பார்கள்.

கோவை சிறுவாணி தண்ணீரெல்லாம் அந்தச் சுவைக்கு ஈடாகாது. ஒரே ஒரு கொதியில் சி.ஆர். அரிசி வெந்து சோற்று மணம் வீட்டை நிறைக்கும். ஆறுகளில் வற்றாது நீர் சென்று கொண்டிருக்கும். குளங்கள் நிரம்பி வழியும். இரண்டு போக சாகுபடி. குறுவையும், பெரும்போகமும் நடக்கும். எட்டு மாதங்கள் வேலை இருந்து கொண்டே இருக்கும். குருவை நெல் பெரும்போக சாகுபடி செலவுக்கு கை கொடுக்கும். மாடுகளுக்கு குருவை வைக்கோல் பஞ்சுபோல இருப்பதால் சீக்கிரமாக மென்று தின்று கொழுக்கும்.

இப்படியான நாட்களில் ஊரில் தண்ணீருக்காக அரசு ஆழ்துளைக்கிணறு தோண்டினார்கள். கிணறு வற்றிப்போனது. குடி தண்ணீருக்காக பைப்படிக்குச் செல்ல வேண்டிய சூழல். இது காலத்தின் கட்டாயம் என்றாலும் அந்தப் பைப்படி பல்வேறு சிக்கல்களை அக்கம் பக்கத்தாருடன் உருவாக்கியது. குடிக்க, குளிக்க, துவைக்க தண்ணீர் போதாமல் நல்ல உறவுகளாகத் தெரிந்தவர்களுடன் சண்டை சச்சரவுகள் உருவாகின. ஒரு குடம் அதிகம் பிடித்தால் எண்ணிக்கை பிரச்சினை வந்து விட உறவுகள் தண்ணீருக்காக சங்கடப்படத்தொடங்கின.

ஆழ்துளைக்கிணறுகளால் மரம், செடிகள் பட்டுப்போயின. மழை வளம் குறைய ஆரம்பித்தது. குருவைச் சாகுபடி தானாகவே நின்று போனது. ஆனால் பெரும் சாகுபடி ஒழுங்காக நடந்து கொண்டிருந்தது. காவிரியும் கை விரிக்கத் தொடங்கியது. பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒரு குடம் தண்ணீர் அதிகம் பிடித்தாலே சண்டைக்குச் சென்றோம். பக்கத்து மாநிலத்துக்காரர்கள் டி.எம்.சிக்கணக்கில் தண்ணீர் திறந்து விட மறுத்தார்கள். அவர்கள் என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா? சாதாரண மனிதர்கள் தானே? வானத்துத்  தேவர்களுக்குள் கூட சண்டையும் சச்சரவுகளும் உண்டு என்கின்றன மதங்கள்.

நாடெங்கும் தண்ணீருக்கான பிரச்சினைகள் துவங்கின. இது வரலாறு. கடந்து வந்த நிகழ்வுகளைச் எந்த வெட்கமும், சங்கடமும், வருத்தமும் இல்லாமல் வரலாறு சொல்லும். ஆனால் வரலாற்றினை உருவாக்கும் காரணகர்த்தாக்கள் வரலாற்றில் தென்படுவதில்லை. அவர்கள் தான் வரலாற்றினை உருவாக்குகின்றார்கள். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று அறியாது அறியாமையில் சிக்கிக் கிடக்கிறோம். இதோ அவர்களின் நயவஞ்சக சூழ்ச்சிகள்.

விவசாயம் பொய்த்தது, தேவைகள் அதிகரித்தன. அப்போது இஞ்சினியர் படிப்புகள் மக்களின் முன்னே வைக்கப்பட்டது. படித்தவர்களுக்கு பல லகரங்கள் சம்பளங்கள் என்று காட்சிகள் அரங்கேற்றப்பட்டன. சாதாரண விவசாயி பொய்த்துப் போன நிலத்தை வைத்து என்ன செய்வது? வாரிசுகள் படிக்கவாவது பயன்படட்டுமே என நிலத்தை விற்க ஆரம்பித்தான். படித்த இரண்டாம் தலைமுறை வாரிசுகள் இப்போது வேலையின்றி நிர்கதியாக நிற்கின்றனர். சொத்துக்களை விற்று படித்தவர்கள் வாங்கும் சம்பளத்தில் இரண்டு செண்ட் பூமியை வாங்க முடியவில்லை. ஏக்கர் கணக்கில் வைத்திருந்தவர்களுக்கு வீட்டு மனையாக இரண்டு செண்ட் கிடைக்காமல் மூன்றாவது மாடியிலோ நான்காவது மாடியிலோ தொங்கிக் கொண்டிருக்கும் ஆகாய வீடுகளை தவணை முறையில் வாங்கி புளகாங்கிதமடைகின்றார்கள். அதை நாகரீகம் என்றுச் சொல்லி மனதை ஆற்றுப்படுத்துகின்றார்கள். அதுதான் சிறந்த வாழ்க்கை என்று அறம் பேசும் பத்திரிக்காக்கள் கூவுகின்றன.

இது மட்டுமா? இன்னொன்றும் இருக்கிறது.

ஆங்கிலேயன் நாட்டை பிடித்துக் கொண்ட போது, விவரமாக ஆங்கிலம் கற்றுக் கொண்ட ஜாதியொன்று அட்டையாக அவர்களிடம் ஒட்டிக் கொண்டது. எங்கு பணம் இருக்கோ அங்கு சென்று ஈசிக் கொண்டு உறிஞ்சுவதை வாடிக்கையாகக் கொண்ட கூட்டம் அது. கோவில்களை பிடித்துக் கொண்டது.  இந்தியாவெங்கும் அதிகாரத்தில் நீக்கமற நிறைத்தன அக்கூட்டம். அதில் ஒரு சிலரை வைத்துப் பக்தியை பரப்பியது. கோவிலுக்குள் கூட்டத்தை வர வைத்து வசூலித்துக் கொண்டது. 

குலதெய்வ வழிபாட்டினை விட்டு விட்டு, காசு கொடுக்கும் தெய்வமென்ற கோவிலுக்கு படையெடுத்து இருக்கும் கொஞ்ச நஞ்ச பொருளையும் இழக்க ஆரம்பித்தார்கள். குல தெய்வங்கள் காணாமல் போயின. ஊரெங்கும் கோவில்கள் முளைக்கத்துவங்கின. வசூலிக்க ஆரம்பித்தன. இதற்கிடையில் வேற்று மதங்கள் வேறு நுழைய மக்களுக்கு எதைத்தின்றால் பித்தம் தெளியும் எனப் புரியாது எல்லாவற்றையும் தின்னத் தொடங்கினார்கள்.

இது மட்டும் போதாது என கூத்தாடிகள் வேறு கூத்தாடினார்கள். கூத்தாடிப் பெண்களின் தொடைகளிலும், குண்டிகளிலும், முலைகளிலும் கலைகளை வளர்த்து தலைவர்கள் உருவாகினர். பெண்களின் ஆடை அவிழ்ப்புகளை கலை என்றார்கள். மறை பொருள் வெளிவரும் திகைப்பில் தேணுண்ட நரியாய் மக்கள் மாறிப்போயினர். மக்கள் திரைகளின் முன்னே கை நீட்டி, முறுக்கி, வாய்கோணி, தொண்டை வறண்ட காட்டுக்கத்தல் வசனங்களில் மூழ்கிக் கிடந்தனர். அரசியல் காமத்தோடு இயைந்து மக்களை மனமயக்கி ஆட்சித்தலைமையில் உட்கார்ந்தார்கள் தலைவர்கள்.  தங்கள் கோவணத்தைக் கூட அறியாமல் பிடுங்கிக் கொண்டிருக்கும் தலைவர்களின் வசீகரத்தில் மூழ்கிக் கிடந்தனர்.

காசிருந்தால் போதும், கடைத்தேறி விடலாமென்ற ஆவலில் படித்தார்கள் கிராமத்தார்களின் வாரிசுகள். அங்கேயும் தங்கள் கைவரிசையைக் காட்டி அட்டை போல உட்கார்ந்தார்கள் அந்த உறிஞ்சு கூட்டம். இப்போது ஒரு கூத்தாடி கிறிஸ்துவர்களையும், முஸ்லிம்களையும் எங்கள் ஜாதி என்கிறது. கொஞ்சமே கொஞ்சமாய் விழித்துக் கொண்டார்கள் என்பதால் உடம்பு முழுவதும் அக்னியாய் எரியும் அந்தக் கூட்டத்தாருக்கு பித்தம் அதிகமானதால் பல்வேறு சூழ்ச்சிகளை அரங்கேற்றுகின்றார்கள். 

காலத்தின் கோலம் மட்டுமல்ல ஒரு சில மனித குல நாசக்காரர்களின் வஞ்சக எண்ணித்திலே காசு பண்ணும் ஆசையினாலே இந்தியா அழிபடத்தொடங்கியது. இமயம் முதல் குமரி வரை குளிர் நீராலே குளிர்ந்திருந்த இந்தியாவும், அதன் மக்களும் ஒரு சில உயர் ஜாதி நாசக்காரர்களின் பண ஆசையினாலே பிரிபடத் தொடங்கினார்கள். அரசியலில் அவர்கள் போய் உட்கார்ந்தார்கள். பணமிருந்தால் மட்டுமே அதிகாரம் என்ற நிலைக்கு அரசியலைக் கொண்டு வந்தார்கள். ஏழைகள் அதிகாரத்தினருக்குச் செருப்புத் தொடைத்துப் போடும் வேலையைச் செய்ய வைத்தார்கள். அரசாங்கத்தில் ஊழல் பெருத்துப் போக வைத்தார்கள். நீதித்துறையிலும் கூட ஊழலைப் புகுத்தினார்கள். நீதிபதிகளை கேள்வி கேட்கக் கூடாது என்றார்கள். எல்லையற்ற அதிகாரம் அழிவுகளைச் செய்ய ஆரம்பித்து விட்டதை, ‘சட்டப்படி தான் எல்லாமும் நடக்கும்’ என்று வாய்ச்சொல்லில் சட்டம் படித்தார்கள். எதிர்த்தால் ஆண்டி இந்தியன் என்றார்கள். போராட்டங்களை தேசத்துரோகங்கள் என்றார்கள். 

இளைஞர்களை உடல் வலிமை தரும் விளையாட்டுக்களில் இருந்து பிரித்து ஏமாற்றினார்கள். அதுதான் வீரம் என்றார்கள். அதுதான் விளையாட்டு என்றார்கள். உடல் வலி குறைந்து போய் வெம்பிப்போன பிஞ்சுகளாய் மாறினர் இளைஞர்கள். 

கையிலிருக்கும் காசைக்கூட செல்லாது என்றார்கள். வங்கியில் போட்டால்  கைது செய்ய மாட்டோம் என்றார்கள். வங்கியில் பணத்தைப் போட்டால் மொத்தமாக திருடும் கூட்டத்தை வைத்து திருட வைத்து வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றார்கள். வங்கிகள் மூழ்கிப் போகப்போகின்றன என்கிறார்கள். அதற்கு வரி, இதற்கு பிடித்தம் என்கிறார்கள். இனி என்ன ஆகுமோ தெரியாது எனக் கலங்கி நிற்கிறது பரிதாபகரமான இந்தியமக்கள் கூட்டம். இருக்கும் பணத்தை எல்லாமும், சொத்துக்களையும் பறிமுதல் செய். இந்தியனை ஏழையாக்கு, அதன் பின் அடிமையாக்கு என்கிற மந்திரம் ஜெயிக்க பல்வேறு சித்துக்களை செயல்படுத்துகிறது அந்தக் கூட்டம்.

இது ஒரு பக்கமிருந்தாலும் இன்னொரு கூட்டம் மொத்தமாகப் பறித்துக் கொண்டு விடுகிறது.

எல்லாவற்றுக்கும் ஆசைப்படு, ஆசைப்பட்டதை எல்லாம் என்னிடம் கொடுத்து விட்டு என்னுடன் அமர் என்கிறது ஒரு கூட்டம்.  அது யோகக்கலையினைக் கற்றுக் கொடுத்து உடல் வலிமை பெற வைக்கும் என்று கூறுகிறது. உடல் வலி இழந்து, நிர்கதியாய் நிற்போரை, மனமகிழ் கொள் என மொட்டை அடித்து புண்ணிய மாக்களாக ஆக்குகின்றார்கள். 

இதோ உங்களைக் காப்பாற்ற வந்து விட்டார் மகிமைமிக்கவர்கள் என்றார்கள். வங்கிக் கணக்குகளில் லட்சங்களை போடுவோம் என்றனர். நல்லாட்சி தருவோம் என்றார்கள். இதோ அவர்கள் தரும் நல்லாட்சிக்கு நற்சாட்சி கீழே

*We were taxed for earning money.*
*We are taxed for spending money.*
*We were taxed for hoarding money.*
*We are taxed for withdrawing money.*
*We are taxed for depositing money.*
*We are taxed for service money*
*We are taxed (cess)for education*
*We are taxed for Swatch Bharat*
*We are taxed for purchase*
*We are taxed for sales*
*We are taxed for manufacturing*
*We are taxed for public Utility*

_*Earning is a crime.*_

_*Saving is a crime.*_

_*Spending is a crime.*_

_*Donating to Political Parties is the only good act.*_


இதுதான் நல்லாட்சி. இருக்கும் பணத்தை எல்லாம் நாட்டுக்குக் கொடு என்கிறது அந்த நல்லாட்சி. நாடு நன்றாக இருக்க வேண்டுமானால் நீ நாசமாகப் போ என்கிறது அந்த ஆட்சி. நீ இருந்து என்ன புண்ணியம்? நாடு நன்றாக இருக்க வேண்டும் என்கிறது அந்த நல்லாட்சி. மக்கள் நன்றாக இருந்தால் நாடு நலம் பெறும் என்பதை தங்களுக்கு வசதியாக மாற்றிக் கொண்டு மூளைச்சலவை செய்தார்கள். புத்தி தெளிந்தோருக்கு பித்தனென்று பட்டமிட்டார்கள். அவர்களை தேசத்துரோகிகள் என்றார்கள்.

உடல் வலி இழந்து, உணவு விஷமாகிப் போனது. மருத்துவத்திற்குச் சென்றால் பணக்காரர்களுக்கு உடல் உறுப்புகளைத்தானம் கொடுக்க புதிதாக மூளைச்சாவு என்றுச் சொல்லி உறுப்பையும் அறுத்தெடுக்கும் அற்புதமான வைத்தியத்தை தர வைத்தார்கள்.

வடக்கே சாமி சிலைக்கே நாமே அர்ச்சிக்கலாம். தெற்கே என்றால் சம்பிரதாயம் குலைந்து போகும் என்று கூப்பாட்டுக் குரல் கேட்டு நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்குகின்றன. தீண்டாமை குற்றம் என்ற சட்டம் கோவிலுக்குள் செல்வது தீண்டாமை என்கிற போது கை பொத்தி மெய் மூடி நிற்கிற அதிசயத்தைப் பார்க்க வைத்தார்கள். கேள்வி கேட்போருக்கு மூளை இல்லை என்றார்கள். சாமி குத்தம் என்றார்கள். இந்த வரலாற்று சூழ்ச்சிக்காரர்களின் சூழ்ச்சிக்கு இரையாகியது மொத்த இந்தியாவும். அதில் முன்னணியில் இருப்போர் தமிழர்.

பொங்கிய புனல்கள் எல்லாம் வற்றிப் போயின. வற்றாத புனல்களை வற்ற வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பூமிக்குள் இருக்கும் தண்ணீரையும் உறிஞ்சி எடுத்து பாலைவனமாக்க பல்வேறு வசனங்களைப் பேசுகின்றார்கள். காவிரி ஆற்று நீரை அளவு குறைத்தார்கள். இருக்கும் நிலத்தடி நீருக்கும் நாட்டின் வளர்ச்சி என்கிற பெயரில் வேட்டு வைத்தார்கள். சுடுகாடாக்கி ஒரு சமூகத்தை அழித்துவிடும் அற்புத திட்டம் இதென்று காசுக்கு அடங்கும் கூட்டத்தாரை வைத்து நாட்டை வளமாக்கும் அற்புதங்கள் நிகழப்போகிறது எனக் கூப்பாடு போடுகின்றார்கள். பதவியில் இருப்போரின் பலவீனங்களால் பறிபோகிறது தமிழர் பூமி வளம். 

ஸ்ரீலங்காவில் மண்ணுக்குள் புதைந்து போன தமிழர்களின் கனவுகள் போல இற்றுப் போன பிணங்கள் நடமாடும் இடமாக மாறப்போகின்றன தமிழர்கள் வாழ்க்கை.

தமிழர்களும் தமிழும் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு புதைக்கப்பட்ட வரலாறாகப் போகும் நிகழ்வுகள் நடந்து கொண்டேஇருக்கின்றன. தமிழர்கள் நடிகர்கள் தடவும் நடிகைகளின் தொடைகளின் வனப்பில் கனவுகளைக் கண்டுகொண்டு கிடக்கின்றார்கள். இன்று கிடைக்கும் காசில் டாசுமாக்கில் போதையேற்றி நடுச்சாலையில் உரண்டு கொண்டிருக்கிறது தமிழர் சாதி. 

மாடு பிடிக்கப் பொங்கிய கூட்டம் இன்று தண்ணீர் வளம் பொங்க போராடாது சோம்பிக் கிடக்கிறது. இருக்கும் காலம் வரை குடிக்க ரம் உண்டு என்கிறது ஒரு கூட்டம். கை தட்டி மகிழ்ந்து, ஆடும் முலைகளோடு சேர்ந்தாட கிரிக்கெட் எனும் விளையாட்டு இருக்கிறது என்று இளிக்கிறது ஒரு கூட்டம். கூட்டம் கூட்டமாக பிரிந்து கிடக்கும் தமிழர் சாதி சேர்ந்து விடக்கூடாது என்று கொக்கரிக்கிறது மற்றொரு கூட்டம். 

திரிந்த மனம் தெளிந்து நீர் எது கானல் எது என்ற விபரம் தெரிவதற்குள் காணாமல் போய் விடும் தமிழர் சாதி தற்போது காணாமல் போய்க் கொண்டிருக்கும் காவிரி போல. 

Wednesday, April 4, 2018

இப்படியும் சில ஜென்மங்கள்

திருவான்மியூரில் இருக்கும் திருமதி.ஜோதி அவர்கள் தெரு நாய்களுக்காக 12 வருடங்களாக உணவு கொடுத்து வருகிறார் என்ற செய்தியை விகடனில் ஆன்லைனில் படித்தேன். மனதுக்கு இதமாக இருந்தது. அந்தப் பெண்மணி நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமென மனசு நெகிழ வேண்டிக் கொண்டேன். ஆனால் அதற்கு ஒரு ஆத்மா இப்படி ஒரு பின்னூட்டம் போட்டிருக்கிறது. 


( நன்றி : விகடன் )

நாய்களை விட மனிதர்கள் எவ்வளவோ அக்கிரமங்களைச் செய்கின்றார்கள். அவர்களை எல்லாம் உணவிடாமல் கொன்று விடலாமா என்று இந்த அக்கப்போர் சொல்லுமா? எனத் தெரியவில்லை. இது ஆணா பெண்ணா என்று கூடத் தெரியவில்லை. மனிதப்பண்பு அற்ற இந்த கமெண்டுகளை எப்படித்தான் எழுதுகின்றார்களோ தெரியவில்லை. இப்படியும் ஒரு சில ஜீவன்கள் இந்தப் பூமியில் வாழ்கின்றன. என்ன செய்வது? 

அடுத்த நொடியில் மனித வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நினைத்தே பார்க்க முடிவதில்லை. நம்ம முன்னாள் முதலமைச்சர் அதற்கொரு உதாரணம். இப்படி பல்வேறு சம்பங்களை நாம் கடந்து வந்திருக்கும் வாழ்க்கையில் கண்டிருப்போம். இப்படியான நிலையில் நிரந்தரமில்லா வாழ்க்கையில் எதுதான் சாசுவதம் என்று புரிந்து கொள்வதற்குள் ஆயுளே முடிந்து போகின்றது. எல்லாம் புரிந்த பிறகு செய்ய முடியாது போய் விடுகிறது.

கோவையில் எனக்குத் தெரிந்த ஒரு நபர், நல்ல மனிதர் அவர். விவசாயி. படிக்கவில்லை. ஏகப்பட்ட சொத்துக்கள். மாதம் தோறும் கொட்டும் வாடகைப் பணம். பிரஷர் இல்லை, சர்க்கரை இல்லை. தினமும் எட்டு மணி நேரம் உழைப்பு. இன்று கே.எம்.சி.ஹெச்சில் ஆஞ்சியோ செய்யப்பட்டுக் கிடக்கிறார். நேற்றுக்கு முதல் நாள் பேசிக் கொண்டிருந்தார். இன்றைக்கு மருத்துவமனையில் கிடக்கிறார்.

எனக்கு உடம்பில் சில நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன. இவ்வளவுக்கு அடியேன் சுத்த சைவம்.  முட்டை கூட எடுத்துக் கொள்வதில்லை. எண்ணைப் பலகாரங்கள், பால் பொருட்கள், கொழுப்பு சார்ந்த உணவுகளைத் தவிர்த்து விடுவேன். கால் வயிறுதான் உணவு எடுத்துக் கொள்வேன். இருப்பினும் அவ்வப்போது நோயின் பிடியில் சிக்கி விடுவேன். அடிக்கடி சளி பிடிக்கும். இந்த முறை மட்டும் தான் மருந்தே இல்லாமல் சரியானது. எளிமையான மருத்துவம் தான். ஆனால் இன்ஸ்டண்ட் உணவுகளை உண்ணும் இந்த உலகம் அதை ஏற்பதில்லை. இப்படியெல்லாம் வாழ்ந்து கடைசியில் உடம்பு என்ன இரும்பாகவா இருக்கப் போகின்றது? அழியத்தான் போகிறது. ஆனால் மருத்துவமனையில் சென்று படுக்கக் கூடாது என்று மனது ஆசைப்படுகிறது.

இதற்காக அக்குபிரஷரில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரு மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன். கொஞ்சம் உடல் பருமனைக் குறைக்க, உணவு பழக்கத்தை சீராக்கவும் தொடர்ந்து சென்று வருகிறேன். அங்கு ஐ.டியில் பணிபுரியும் பல்வேறு பெண்களைச் சந்திக்கிறேன். ஒவ்வொரு பெண்களும் காரில் வருகின்றனர். லட்சங்களில் சம்பளம். வரும் போதே போனும் கையுமாகத்தான் வருகின்றனர். அடிக்கடி வரும் அழைப்புகளில், ‘சரி ஹெட், காலையில் வந்து விடுகிறேன்’ என்ற வார்த்தைகள் கேட்கும். ஐடிக்கணவர்கள் போனுடன் வாழ்க்கை நடத்துகின்றார்கள். அவர்களின் உடைகள் பல ஆயிரங்கள் இருக்கும். செம மாடர்ன் பெண்கள். அவர்களின் பின்னே அப்பெண்களின் அம்மாக்கள் கையில் குழந்தைகளுடன் சில நேரங்களில் வருவர். ஒரு சில பெண்கள் தங்கள் குழந்தைகளை (எக்ஸ்ட்ரா லக்கேஜ்கள்) அம்மாக்களிடம் கொடுத்து விட்டு பால் கவுச்சி அடிக்காமல் இருக்க டியோடரண்டுகளை அடித்துக் கொண்டு பால் கொடுப்பது அழகுக்கு ஆபத்து என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

லட்சங்களில் கார், ஆயிரங்களில் உடைகள் ஆனால் இளமை முழுவதும் சாஃப்ட்வேர் கம்பெனிக்கு அர்ப்பணிக்கின்றார்கள். அவர்கள் கொடுக்கும் லட்சங்களை முன்னே பின்னே பார்த்தறியாதவர்களுக்கு எது வாழ்க்கை என்று புரிபடவே இல்லை. பெரும்பாலான ஐடியில் வேலை செய்யும் பெண்களின் குழந்தைகள் நோயுடனே பிறக்கின்றன. அவர்களின்  நோயுக்கான சிகிச்சையை அவர்கள் செய்கின்றார்கள். நோஞ்சான் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவர்களின் அம்மாக்கள் சிகிச்சைக்கு வருகின்றார்கள். இந்தக் கொடுமைகளை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. பிள்ளைகளின் அழுகுரல்கள் கேட்கும் போது அது எனக்கு நரகத்தை விடக் கொடுமையானவையாகத் தோன்றுகிறது.

பணத்தின் முன்னே சலாமிடும் உலக மாந்தர்கள் இருக்கும் வரை இப்படியான அழுகுரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கும் போல. இரக்கத்துடன் நாய்களுக்கு உணவிடுபவரைக் கூட கிண்டல் செய்து, அதில் ஒரு கெட்ட எண்ணத்தைப் பதிவிடும் மாந்தர்கள் இந்த உலகில் இருக்கும் வரை தீமைகள் இருக்கத்தான் செய்யும். அந்தப் பின்னூட்டம் என்ன ஒரு அரக்கத்தனமான எண்ணம் என்பதைக் கவனியுங்கள். இவர்களும் நம்முடன் தான் வாழ்கின்றார்கள்.

Monday, April 2, 2018

பெண்மையின் தத்துவம் தியாகம்

அத்தினி, சித்தினி பதிவு என் மனைவிக்கு விருப்பம் இல்லாத காரணத்தாலும், ஆண்கள் கெட்டுப்போய் விடக்கூடாது என்பதாலும், சில பெண்களின் வாழ்க்கையில் சில பல பிரச்சினைகள் எழும் என்பதாலும் எழுதப்படவில்லை என்பதை மிகுந்த பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே மன்னித்தருள்க. அவங்களுக்கு பிடிக்கவில்லை எனில் அடியேன் மூச்சு கூட விடுவதில்லை. உண்மையாகத் தான் சொல்கிறேன். மூச்சுக்கூட விடமாட்டேன்.

என்னிடம் சொத்து இருக்கிறதா? உறவினர்கள் உள்ளனரா? பணம் சம்பாதிப்பாரா? என்றெல்லாம் அவர் யோசிக்கவே இல்லை. வருகிறாயா? என்றேன் வந்து விட்டார். எதிர்கால வாழ்க்கையின் போக்கு எனக்குப் புரியாதகாலம் அப்பருவம். மனித மனங்களில் மண்டிக்கிடக்கும் இருட்பகுதிகளை உணர்ந்து கொள்ளும் பக்குவம் இல்லாத பருவத்தில் இருந்தேன். சினிமா தான் வாழ்க்கை போலும் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது எதார்த்தம் அல்ல என்று இருவரும் வாழ்க்கையில் இணைந்த பிறகு, என் முன்னே வந்து நின்றது என் வாழ்க்கையும் என் சூழலும்.

ஒரு உறவினர் வீட்டில் தங்கி இருந்த போது, ‘உங்கள் இருவருக்கும் சமைத்துப் போட காய்கறி இல்லை’ என்றார்கள். மறு நாள் அங்கிருந்து சென்று விட்டோம். மற்றொரு உறவினர் வீட்டில் இருந்த போது ’எப்போது நீங்கள் ஊருக்குப் போகப்போகின்றீர்கள்?’ என்று கேட்டார்கள். அழைத்துக் கொண்டு வந்து விட்டேன். இவ்வளவுக்கும் ஊரில் பெரும் சொத்துக்காரன் என்ற பெயர் எனக்குண்டு. அது என் அப்பன் வழி வந்த பெயர். அந்தச் சொத்துக்குச் சொந்தக்காரர் என் அப்பன்.

அவருக்கு நான் எந்த வித பிரதி பிரயோஜனும் செய்யவில்லை. என் சிறிய வயதில் மறைந்து போனார். அவர் என்னைப் பெற்றது முதல் ஒரு நாள் கூட ஒரு மிட்டாய் கூட வாங்கித் தரவில்லை. அதற்கு அவரும் நானும் காரணம் அல்ல. விதிதான் காரணம். இன்னுமொன்றைச் சொல்ல வேண்டும். நான் என் அப்பாவை, ‘அப்பா!” என்று அழைத்தது கூட இல்லை. எனக்கும் என் தகப்பனுக்குமான உறவு என்பது அவரின் இனிஷியல் என் பெயரின் முன்னால் இருக்கிறது என்பது மட்டும்தான். அவருக்கு பிள்ளையாகையால் கொள்ளி மட்டும் போட்டேன். முடி எடுத்து காரியங்கள் செய்தேன். ராமேஸ்வரம் சென்று பித்ரு கடன் செய்தும் வருகிறேன்.

எனக்கு எல்லாமுமாக இருந்தது என் அம்மாவும், அக்காக்களும், மாமாவும், தாத்தாவும் தான். எனக்கு அப்பன் நினைவு வரும்படி என்னை அவர்கள் வளர்க்கவே இல்லை. அம்மா, அக்காக்கள் இவர்களைத் தவிர வேறு எந்த உறவும் எனக்குத் தெரியாதபடி உள்ளங்கைக்குள் வைத்து வளர்த்தார்கள். என் அப்பன் இடத்தில் என் தாய் மாமா இருந்தார். என்னை அவர் மிகச்சரியானவனாக வளர்த்தார். எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கினை அவர் கற்றுக் கொடுத்தார். அதன் பிரதிபலன் நான் இப்போது செய்யும் செயல்களில் மிளிரும். எனது எந்தச் செயல்களானாலும் சரி என் சிந்தனையும், செயலும் அவரைப் போன்றே இருக்கும். 

அது மட்டுமல்ல அவர் எனக்கு கொடுத்தது அவரின் ஹை பிளட் பிரஷரையும் கூடத்தான். பத்து வருடங்களுக்கு முன்பு பி.எஸ்.ஜி ஹாஸ்பிட்டலில் பிரஷர் அதிகமாகி பெட்டில் இருந்த போது டாக்டர் என்னிடம், ”உங்கள் தாய்மாமாவுக்கு  பிரஷர் இருக்கிறதா?” என்று கேட்ட போதுதான் எனக்கு இது மாமன் வழியே  டி.என்.ஏ கொண்டு வரும் சீர் எனப் புரிந்தது.

என்னைப் பொறுத்தவரை என் வாழ்க்கை என்பது யாராலோ ஒழுங்குச் செய்யப்பட்டு நடத்தப்படுகிறதோ என்று எனக்கு அடிக்கடித் தோன்றும். அதற்கு பல காரணங்களும் உண்டு. 

கரூரில் ஒரு ஜோசியக்காரர் ”இன்னும் பத்தே நாளில் நீ யாரோ ஒரு பெண்ணுக்குத் தாலி கட்டியிருப்பாய்” என்றார். “போய்யா, நீயும் உன் ஜோசியமும்” என்றுச் சொல்லி விட்டு வந்தேன். பத்தாம் நாளில் நான் கணவனானேன். 

இப்படித்தான் கடந்த வாரம் சிங்காநல்லூர் காய்கறி மார்க்கெட்டுக்குச் சென்று திரும்பிய போது ”ஏன் இன்னும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரவில்லை என்று யாரோ காதில் சொன்னது போலத் தோன்றியது. அவங்களும் திடீரென பீளமேடு  கோவிலுக்குப் போய் வரலாமா?” என்று கேட்க திடுக்கிட்டது. 

கோவிலுக்குச் சென்று அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தேன். கூட்டமாக பீளமேடு ஆஞ்சநேயரைத் தரிசித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு அவரின் தலை மட்டுமே தெரிந்தது. முழுமையுமாக பார்க்கணுமே என நினைத்தேன். அங்கிருந்த அர்ச்சகர் மைக்கை எடுத்து, “பகவானின் காலடியில் அமர்ந்து பிரார்த்திப்பதுதான் ஆகச் சரி” எனச் சொல்ல அனைவரும் அமர, ஆஞ்சனேயர் முழு உருவமாக நின்று கொண்டிருந்தார். அசந்தே போனேன்.

இப்படியான வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை தந்தவர் எனது மனைவி. ஒன்றுமற்ற வாழ்வில் வாழ ஒரு காரணமானவராய் அவரிருக்கிறார்.  தேதி பார்க்கவில்லை, ஊரை அழைக்கவில்லை, உற்றாரும் இல்லை, உறவினரும் இல்லை. சடங்குகள் செய்யவில்லை, எந்தச் சம்பிரதாயமும் நடக்கவில்லை. திருமணம் செய்தோம். வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த வாழ்க்கைக்கு ஒரே ஒரு காரணம் அவரே!

இப்பதிவு எழுத வேறொரு காரணம் உண்டு.

எனது உறவினர்களில் ஒருவரின் வாழ்க்கைச் சம்பவம் இது. நல்ல தொழில், நாகரீகம் கலந்த டவுன் வாழ்க்கை. ஒரே பையன் அவர். வீடு, வாசல், செல்வம் அனைத்தும் உண்டு. அவர் உரக்கப் பேசி எவரும் பார்த்ததில்லை. நாசூக்கானவர். இவருக்கு என் உறவுப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர். அப்பெண் அக்மார்க் கிராமத்துப் பெண். சொத்து பத்துக்கள் நிறைய இருந்தாலும் அது பற்றிய திமிர்த்தனம் இல்லாதவர். இருவரின் வாழ்க்கையும் சுகமாகச் சென்றது. குழந்தைகள் இருவர். தாலாட்டி, சீராட்டி வளர்த்தனர். இதற்கிடையில் அவர் தன் ஃபாக்டரியில் வேலை செய்த ஒரு பெண்ணுடன் காதல் கொண்டார். அரசல் புரசலாக அனைவருக்கும் தெரிய வர, பெண்ணின் தகப்பனாரும், தாயாரும் பெண்ணை அழைத்துச் சென்று விடலாம் என எண்ணிக் கொண்டிருந்தனர். 

இந்த நேரத்தில் அந்தப் பெண் தன் கணவர் காதல் கொண்ட ஏழைப்பெண்ணுடன் தன் கணவரைத் திருமணம் செய்து வைத்து தன் வீட்டுக்கே அழைத்து வந்து விட்டார். அதிர்ந்தனர் உறவினர்கள். ஆனால் அந்தக் கிராமத்துப் பெண் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. ’அவர் விரும்பினார், கல்யாணம் கட்டி வைத்து விட்டேன்’ என்பதோடு சரி. இரண்டு பெண்களும் ஒரே வீட்டில் தான் வாழ்கின்றனர். இருவருக்கும் குழந்தைகள் இருக்கின்றனர். சண்டை, சச்சரவுகள் இல்லாத வாழ்க்கை. அக்கம்பக்கத்தார்கள் அசந்து போய் கிடக்கின்றனர்.

ஒரு சாதாரண படித்த பெண்ணால் இதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. உடனடி டைவோர்ஸ்தான். விவாகரத்துக்குப் பிறகு முடிவு என்ன? குழந்தைகளுடன் அப்பெண் தனியாளாக நிற்க வேண்டி வரும். அதுமட்டுமா? ஊரார் பேசும் இழிச்சொற்கள் வேறு. எப்படி இருந்தாலும் ஒரு நாள் குழந்தைகள் அப்பனைத் தேடிச் செல்லத்தான் செய்யும். கடைசி வரை தனியாக வாழ்ந்து சீரழிவதை விட சகித்துக் கொள்வதே சரி என்ற அப்பெண் எடுத்து முடிவு குறைந்த காலம் உள்ள வாழ்க்கைக்கு சரியானது.

எல்லாப் பெண்களுக்கும் தன் கணவன் உத்தமன் என்ற நினைப்பிலும், எல்லா ஆண்களுக்கு தன் மனைவி உத்தமி என்ற நினைப்பிலும் தான் இந்த வாழ்க்கையே சென்று கொண்டிருக்கிறது. தற்போதுதான் கிரஸ் என்று பெண்கள் தங்களின் காதல்களை வெளிப்படுத்துகின்றார்கள். ஒரு காலத்தில் பெண்கள் ஆதிக்கம் கொண்ட குடும்பமாக இருந்த வாழ்க்கை, ஆணாதிக்கம் நிறைந்த குடும்பமாக மாறி உள்ளது. காலம் மாற மாற இப்போது மீண்டும் பெண்களின் ஆதிக்கம் நிறைந்த குடும்பமாக மாறிக் கொண்டிருக்கிறது. அது எதிர்காலத்தில் என்னென்ன வெடிகுண்டுகளை வீச இருக்கின்றனவோ தெரியவில்லை.

பெண்மையின் தத்துவம் எப்போதும் தியாகம் கொண்டதாகவே இருக்கின்றது. அவர்கள் எப்போது தியாகத்தன்மையை விட ஆரம்பிக்கின்றார்களோ அப்போது சமூகமும், உலகமும் சீரழிய ஆரம்பித்து விடும்.

Thursday, March 22, 2018

புண்ணியம் நல்லதா? கெட்டதா?

அடியேன் ஓஷோவைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அவர் எதுவும் புதிதாகச் சொல்லவில்லை. இங்கிருப்பதை அவர் மொழியில் சொல்லி இருக்கிறார். அதையே அப்படியே தன்மை மாறாமல் வெள்ளிங்கிரி மலையைக் கபளீகரம் செய்து கொண்டிருக்கும் ஒருவரும் தன் பிளாக்கில் எழுதி வைத்திருக்கிறார் இப்படி.

பாவங்கள் செய்பவன் வேதனையை அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்று சொல்கிறார்கள். எது பாவம்? எது புண்ணியம்? 

அவரின் பதில்: பாவம் புண்ணியம், நல்லது கெட்டது என்பதெல்லாம் மற்றவர் உங்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தும் ஆயுதங்கள்.

யார் அந்த மற்றவர்கள் என்று விளக்கம் கொடுக்கவில்லை இவர். என்னுடன் மஹாசிவராத்திரி அன்று அமர்ந்திருந்தால் ஈஷனையே அடையலாம் என்றுச் சொன்னவர் அதற்கான சாட்சியைக் காட்டி இருக்க வேண்டும். 

சிவராத்திரி அன்று தான் என்னை அடையலாம் என்று என்றைக்கு ஈஷன் வந்து யாரிடம் சொன்னான் என்று எனக்குக் கொஞ்சம் சாட்சியாய் காட்டுங்களேன் என்று கேட்டால் ஆன்மீகத்தைப் பற்றிப் பேசுபவர்கள் எவரிடத்திலும் பதில் இருக்காது. அந்தப் பாடலில் சொல்லி இருக்கிறது, இந்த புத்தகத்தில் சொல்லி இருக்கிறது, வேத(னை)த்தில் சொல்லி இருக்கிறது என்றெல்லாம் குப்பைகளை அவிழ்த்து விடுவார்கள்.

பாவம், புண்ணியம், நல்லது, கெட்டது என்று எதுவும் இல்லை என்றால் உலகம் ஏன் இவ்வளவு துயரத்தில் ஆழ்ந்து கிடக்கிறது என்று அவர் சொல்வாரா? 

விருப்பத்துடனே உறவு வைத்துக் கொள்கிறேன் என்று நீதிமன்றத்தில் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்கிறார் ஒரு சாமியார். நான் பிரமச்சாரி என்று அடிக்கொரு தடவை முழங்கிக் கொண்டிருந்தவர் இப்போது உறவு கொள்கிறேன் என்கிறார். இவர்கள் தான் ஆன்மீகத்தை வளர்க்கின்றார்கள். இவர்களைப் பின்பற்றிச் செல்லும் உபதேசம் பெறுபவர்களின் புத்தி என்னவாக இருக்கும் என்று சிந்தித்தால் அவர்களின் முட்டாள் தனம் தான் வெளிப்படுகிறது.

எது சரியான வழி என்று கண்டுபிடிப்பதற்குள் மனிதனுக்கு ஆயுள் முடிந்து விடுகிறது. கடைசிக் காலத்தில் கண்டுபிடித்து என்ன ஆகப்போகிறது. காடு வா, வா என்று அழைத்துக் கொண்டிருக்கும். 

இந்த அக்கப்போரெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது விஷயத்துக்கு வருவோம்.

புண்ணியம் சேர்த்து வைத்து விட்டுச் செல்லுங்கள் என்று பெரியோர்கள் சொல்வார்கள். தர்மம் செய்தால் புண்ணியம் சேரும் என்பார்கள். தெருவுக்குத் தெரு, கோவிலுக்குக் கோவில் அன்னதானம், உதவி என்றெல்லாம் மக்கள் தர்மம் செய்து, அவரவர் கணக்கில் புண்ணியங்களை வரவு வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு சிலர் திருப்பதி வெங்கடாஜலபதி, பழனி முருகன் ஆகியோர்களுக்கு உண்டியல் போட்டு புண்ணியங்களை வரவு வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்னும் சிலர் ஐயப்பன் கோவிலுக்கு விரதமிருந்து (ஒரு நாள் விரதம்) ஐயப்பனை தினமும் நெய்யில் குளிக்க வைத்து அவரின் கொலெஸ்ட்ரால் லெவலை அதிகமாக்கி, தங்கள் புண்ணியக்கணக்கில் வரவுகளை வைத்துக் கொள்கிறார்கள்.

ஒரு சிலர் வானத்திலிருந்து இறங்கிக் கொண்டிருக்கிறார் வகையறாக்களுக்கு மாதம் தோறும் பணம் செலுத்தி பாவங்களைக் கரைத்து புண்ணியாத் மாக்களாகி வருகின்றார்கள்.

ஒரு சிலர் பிறரிடம் டொனேஷன் வாங்கி பிறரைப் படிக்க வைத்து தங்கள் கணக்கில் புண்ணியங்களை வரவு வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு சிலர் சாமியார்களாகி பல சிஷ்யைகளுடன் உறவு கொண்டு, சிஷ்யைகளின் புண்ணியக்கணக்கில் புண்ணியங்களை வரவு வைத்து சிஷ்யைகளுக்கு உதவுகின்றார்கள். 

ஒரு சிலர், ஒரு சிலருடன் கூட அமர்ந்து கொள்ள பணம் கொடுத்து அந்த கடவுளையே தரிசித்து பெரும் புண்ணியங்களைத் தங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி மதம், இனம், மொழி வேறுபாடில்லாமல் பணத்தின் மூலமாக பலரும், தங்கள் புண்ணியக்கணக்கில் வரவு வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆன்மீகம் புண்ணியம் செய்ய வேண்டுமென்றுதான் சொல்லிக் கொடுக்கிறது. புண்ணியம் சேர்க்க பொருள் கொடுக்கச் சொல்கிறது. அல்லது உழைப்பைக் கொடுக்கச் சொல்கிறது. எல்லாமும் கொடுத்தும், இருப்பதையும் கொடுத்தும், போதாமல் ஒரு சிலர் தன் பொண்டாட்டி மற்றும் மகள், மகன்களையும் கொடுத்தும் புண்ணியங்களை தங்கள் வரவில் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

உலகமே தங்களின் புண்ணியக்கணக்கின் வரவுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது.

நிற்க....!

நேற்று காலையில் நானும் என் குருவும் பேசிக் கொண்டிருந்தோம். ”பலனை எதிர்பார்த்துச் செய்யும் தர்மம் புண்ணியங்களைத் தராது” ஆண்டவனே என்றார்.

”சாமி கம்பரின் மகாபாரதத்தில் வருகின்றானே ஒருவன்” 

இடைமறித்து, “ஆண்டவனே கம்பனின் மகாபாரதமா? “ என்றார்.

ஒரு நிமிடம் திடுக்கிட்டு

“சாமி, சேக்கிழார் தோஷம் என்னையும் பிடித்துக் கொண்டது போல, தலை எப்படியோ அதுபோலத்தானே?”

“ஓ.... “ என்றார்.

”மகாபாரதத்தில் கர்ணனிடம் தர்மம் கேட்டு ஒருவர் வரும் போது, அவன் குளிப்பதற்கு எண்ணை தேய்த்துக் கொண்டிருப்பான், தர்மம் கேட்ட அடுத்த நொடியில் இடது கை அருகில் இருந்த தங்கக் கிண்ணத்தைத் தூக்கிக் கொடுத்தான் என்பார்கள். அதன் அர்த்தம் இப்போது புரிகிறது சாமி” என்றேன்.

உங்களுக்குப் புரிகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. புரிந்தாலும் புரியவில்லை என்றாலும் அது உங்களின் பாடு.


அடுத்து புண்ணியத்துக்கு வருவோமா?

கர்ணன் திரைப்படத்தினைப் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். கர்ணன் அர்ஜூனன் விட்ட அம்புகள் நெஞ்சில் ஊடுருவி இதயத்தைத் துளைக்க , குருதி கொப்பளித்து வழிந்தோட, உயிரை விட்டு விட இயலாமல் துன்புற்றுக் கொண்டிருப்பான். அப்போது நம்ம கிருஷ்ணர் வயதானவர் வேடம் போட்டு கர்ணனிடம் தானம் கேட்டு வருவார். உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கையில் அவனிடம் தர்மம் செய்ய ஒன்றுமே இருக்காது. ஆகவே கண்ணன் கர்ணனிடம் அவன் இதுவரை செய்த தான தர்மங்களின் புண்ணியங்களை (பலனை) தமக்குத் தானம் செய்து தரும்படி கேட்பார். அவனும் நெஞ்சில் பதிந்து கிடக்கும் ஒரு அம்பை உருவி, வழிந்தோடும் குருதியினை கையில் பிடித்து கண்ணனுக்கு தானம் செய்வான். தானம் பெற்ற கண்ணன், அர்ஜுனனிடம் செல்வான். வந்த வேலை முடிந்து விட்டது அல்லவா?

அர்ஜுனனைப் பார்த்து ”செத்த பாம்பு கர்ணன், விடு அம்பை, முடி அவன் கணக்கை” என்பார் கண்ணன்.

அர்ஜுனனும் விடுவான் அம்பை. கண்ணனும் விடுவான் உயிரை. 

இது படத்தில் வரும் வசனமும் காட்சியும்.

இனி என்ன எழுதப் போகிறேன் என்று புரியாதவர்கள் கீழே தொடருங்கள்...!

கர்ணனின் தர்மம் அவன் தலைகாத்து அவன் சாவின் பிடியில் கிடக்கும் போதும் உயிரை விட்டு விடாமல் பிடித்துக் கொண்டு அவனை வேதனைக்குள் தள்ளிக் கொண்டிருந்தது அல்லவா? புண்ணியம் நல்ல சாவை அல்லவா கொடுக்க வேண்டும்? ஏன் அவனைச் சாக விடாமல் நோகடித்துக் கொண்டிருந்தது?

ஆகவே புண்ணியங்கள் நல்லதா? கெட்டதா? என நீங்களே யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்...

Wednesday, February 21, 2018

அதிகாரம் அழிந்தே போகும்

நீர் நாய்கள் நிறைந்திருக்கும் சற்றே குளிர் பொறுந்திய பொய்கையில் தாமரைகள் மலர்ந்து தழைத்திருக்கின்றன. அந்தத் தாமரைகளின் நிழல் போல இருக்கும் அல்லிப் பூவின் இதழைபோல மாசு மறுவற்ற, மலர்ந்த குற்றமில்லாத உள்ளங்கைகளை உடையவன். சிவந்து கிடக்கும் இளம் பவளத்துண்டுகளை ஒட்டி வைத்தாற் போன்ற இதழ்களை உடையவன். இன்னும் பழகிக் கொள்ளாத நாவினாற் தத்திப் பேசும் கிளியினை ஒத்த, தேனினும் இனிய குரலால் கிள்ளை மொழியினைப் பேசுபவன், அவனைக் காண்பவர் எவரினும் அவன் மீது விருப்பமுற்று அன்பு பொழியும் கவர்ச்சியினை உடையவன், தன் நெஞ்சிலே பொற்கொடியை அணிந்தவன் ஆகிய நம் புதல்வன், சிறுதேர் ஓட்டி தெருவில் விளையாடிக் கொண்டு, தனியனாக நின்றிருந்தான். 

அப்போது அவ்வழியாக வந்த உடலெங்கும் பொன் அணிகளை அணிந்தவளும், கூர்மையான பற்களை உடையவளுமான உமது காதற் பரத்தை நம் மகனைப் பார்த்து, அவன் உம்மைப் போல உருவத்தில் ஒப்புமை கொண்டிருப்பதைக் கண்டு விதிர்த்து, தெருவில் எவரும் காண்பவர் இல்லையாதலால் துணிந்து அவனருகே சென்று,’என் உயிரே! என்னிடம் வருவாயா?” என்று கூறி, செல்லப் பூண்களை அணிந்த அவளின் இளைய மார்புகளிடையே அவனை அணைத்துக் கொண்டாள்.

அதனை நான் கண்டும், காணாதது போல திரும்பவில்லை. விரைந்து போய் அவளை என்னுடன் அணைத்துக் கொண்டேன்.

”மாசற்ற இளைய மகளே! ஏன் மயங்குகின்றாய்? நீயும் இவனுக்கு ஒரு தாய் தானே?” என்று அவளிடம் கூறினேன். 

தாம் செய்யும் களவினை கண்டுகொண்டவர்கள் முன்பாக களவு செய்தவர்கள் மனம் கலங்கி தலை கவிழ்ந்து நிற்பது போல அவளும் என் முன்பு முகம் கவிழ்ந்து நின்றாள். நிலத்தை தன் கால் பெருவிரலால் கீறி வெட்கியும் நின்றாள்.

வானத்தில் தெய்வமாக விளங்குகின்ற அருந்ததி எனும் கற்புக்கடவுளுக்கு நிகர்த்தவளான அவளும் நம் மகனுக்கு தாயாக இருப்பது சரியானதுதானே. அதைத்தான் நானும் அவளிடம் பகிர்ந்தேன் என்கிறாள் ஒரு தமிழச்சி தன் கணவன் பரத்தை வீட்டுக்குச் சென்று திரும்பியதை, அவன் அதை மறுத்த அந்த நிலையில். ( நன்றி சாகலாசனார் - களிற்றினையாணை நிரை)

இந்தப் பாடலுக்கு தெளிவுரை எழுதிய புலியூர் கேசிகன் பரத்தை வீட்டுக்குச் சென்று திரும்பிய தலைவனை இடித்துப் பழிப்பதாக எழுதி இருக்கிறார். இருக்கட்டும். அப்படியே இருக்கட்டும். எந்த மனையாளுக்கு கணவன் பரத்தை வைத்திருப்பது மகிழ்வைத் தரும்? 

பெண் என்பவள் தண்ணீரைப் போன்றவள். ஆண் என்பவன் பாறை போன்றவன். பாறை பார்ப்பதற்கு கடினமானதாக இருக்கலாம். ஆனால் தண்ணீருக்கே சக்தி அதிகம். தண்ணீரின் சக்தி பாறையை உடைத்து துகள் துகளாக்கி விடும். 

ஆண் அதிகாரம் மிக்கவன். பெண் சரணாகதி தத்துவம் கொண்டவள். ஆண்டாள் பெருமாளின் மீது கொண்ட சரணாகதி காதலில் அமிழ்ந்தே போனார் பெருமாள். அவள் சூடிக் கொடுத்த மாலையைத்தான் நானும் சூடுவேன் என்று தன் அதிகாரத்தை ஆண்டாளின் காதலில் அழித்துக் கொண்டவர். சரணாகதியில் அதிகாரம் அழிந்தே போகும். ( நன்றி : ஓஷோ )


தன் தலைவனின் பரத்தைக் காதலை தன் மாசு மறுவற்ற அன்பால் அந்தத் தலைவி மீட்க நினைக்கிறாள் அல்லவா? இப்பேர்பட்ட பெண்மைப் பண்புகளை இப்போது நினைத்துப் பார்க்க முடியுமா? எங்கே அந்தத் தலைவி என்று மனது தேட ஆரம்பிக்கிறது அல்லவா? தலைவியின் காதல் ஒரு பக்கம் இருக்கட்டும்.

கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள். ஆணொருவன் தன் மனைவியைப் பார்த்து உருகும் அந்தக் காதலைப் பாருங்கள். தன் உள் விழைவை பாடல் வரிகளில் தோய்த்து, குரலில் வழியவிடும் அன்பினை காதாலும் கண்ணாலும் பாருங்கள். உள்ளம் உருகி விடும்.



காதலில் ஜெயித்தவர் யாருமுண்டோ இவ்வுலகில்? எப்போதும் காதலே ஜெயிக்கிறது. காதலில் ஈடுபட்டவர்கள் கரைந்து போகின்றார்கள் காதலுக்குள்ளே.

குறிப்பு : ஏதோ அரசியல் பதிவாக இருக்கப்போகின்றது என்று நினைத்துப் படிக்க வந்தவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். பெண்கள் இல்லாமல் அரசியலே இல்லை. உலக அரசியலை விட இந்தப் பெண்களின் அரசியல் பெரியது. எவராலும் புரிந்து கொள்ளவே முடியாதது.

Wednesday, February 14, 2018

மஹாசிவராத்திரியும் கடவுளும்

கடந்த வருடம் மஹாசிவராத்திரி அன்றைக்கு மாண்புமிகு பாரதத்தின் பிரதமர் வந்ததால் எழுந்த அனர்த்தங்களைப் பதிவு செய்திருந்தேன்.

இணைப்பினைப் படித்துப் பாருங்கள்.


இந்த வருடமும் துணை ஜனாதிபதி வருகிறார்கள் என்றுப் பேசிக் கொண்டார்கள். ஆகவே எனது டூவிலரிலேயே முட்டம் சென்று வழக்கம் போல அபிஷேகத்துக்கு கரும்புச்சாறு கொடுத்து விட்டு அப்படியே குரு நாதரையும் தரிசித்து வரலாமென்று சென்றேன். வழி எங்கும் காவல்துறையினர் நின்றிருந்தனர். 

நமக்கெல்லாம் மஹாசிவராத்திரி என்பது ஒரு விழா. ஆனால் காவல்துறையினருக்கு அது தண்டனையாக மாறிப்போன வினோதம் ஈஷாவினால் நடந்து கொண்டிருக்கிறது வருடா வருடம்.  பத்து நிமிடம் வெயிலில் நின்றாலோ கொதித்து மண்டை காய்கிறது. அவர்கள் படும்பாட்டை நினைத்தாலே நமக்கு டென்ஷன் வருகிறது. அந்தச் சூட்டிலும் நின்று கத்திக் கொண்டிருந்தார்கள். வேறு வழி? எரிச்சல் வரும் போது கோபமும் தானாக வந்துவிடும். டிராபிக்கை மிகச் சாதுரியமாக சமாளித்தார்கள். ஜக்கி இருக்கும் வரை ஈஷா ஆட்டம் நடக்கும். நடக்கட்டும். அது அவர் பாடு. என்ன ஒன்று பூண்டி கோவிலுக்குச் செல்பவர்களை தடுக்கின்றார்கள். இவர்களை வழிபாடு நிகழ்ச்சி நடத்த வேண்டாமென்று எவரும் சொல்லவில்லை. ஆனால் பிறரின் உரிமையில் தலையிடுவது சரியில்லை. ஏதாவது வழி பிறக்கும். 

முட்டம் சிவன் கோவிலுக்குச் சென்றால் அங்கு ஒரு குருவியைக் கூட காணவில்லை. அர்ச்சகர் தான் உட்கார்ந்திருந்தார். சிவபெருமானும், முத்துவாளியம்மனும் ஒரு பூ அலங்காரம் கூட இல்லாமல் இருந்தனர். இந்து அறநிலையத்துறையினர் எப்போது போர்டு மாட்டினார்களோ அப்போதிலிருந்தே இந்தக் கதைதான்.  எப்போதும் பத்து ஆட்களாவது இருப்பார்கள். இப்போதோ ஒருவரையும் காணவில்லை. கட்டளைத்தார்களும், பக்தர்களும் கொடுக்கும் பணமெல்லாம் எங்கே போகின்றது என்று தெரியவில்லை. கொடுமையாக இருந்தது. அடியேன் வாங்கிச் சென்ற இரண்டு முழம் கதம்பத்தை முட்டம் நாகேஸ்வரருக்கும், ஒரு முழம் மல்லிகையை முத்துவாளியம்மனுக்குப் போட்டு விட்டு வணங்கி விட்டு முள்ளங்காடு கிளம்பினேன். 


(முத்துவாளியம்மனும், நாகேஸ்வரரும்)

செம்மேட்டில் சாலையை மறித்தார்கள். வழி எங்கும் காவல்துறையினர். நான் செல்லும் போது கார்கள் அதிகமில்லை. ஆஸ்ரமம் சென்று குரு நாதரின் ஜீவசமாதியில் அமைதியாக உட்கார்ந்திருந்து விட்டு வீட்டுக்குக் கிளம்பினேன்.

வரும் வழியில் ஒரு கிழவி பசியோடு செல்வதைப் பார்த்தேன். மனசு கேட்கவில்லை.  அருகில் சென்று,”ஏதாவது சாப்பிடுகிறாயா பாட்டி?” என்று விசாரித்தேன்.

”பசிக்குது, காசு கொடு, சாங்காலமா ஏதாவது வாங்கிச் சாப்பிட்டுகிறேன்” என்றது அது.

ஒரே ஒரு பையனாம். கணவர் இருபத்தாறு வருஷத்துக்கு முன்னே இறந்து போனாராம். பையனை பதினொன்னாம் வகுப்பு வரை படிக்க வச்சு வேலை வாங்கிக் கொடுத்துச்சாம். கல்யாணம் கட்டி வச்சதுக்கு அப்புறம் வீட்டுக்கு வந்த மகாலட்சுமி இந்த அம்மாவை விரட்டி விட்டுடுச்சாம்.  பேரன்கள் இரண்டு பேராம். தெருவில நின்னு பிச்சை எடுத்துதான் சாப்பிடுதாம். பையன் கண்டுக்கவே மாட்டேங்குறான் என்ற வரலாற்றைச் சொன்னது அது. 

கொஞ்சம் பிஸ்கட்டுகளும், கொஞ்சம் பணமும் கொடுத்து விட்டு, ”உம்பேரன்ன பாட்டி” என்றேன்.

“வள்ளியம்மா, வள்ளிப்பாட்டி” என்றது பெருமை பொங்க.

”அது அப்பா எவ்ளோ சந்தோஷமாக அந்தப் பாட்டிக்கு வள்ளின்னு பெயர் வைத்திருப்பார். அதுவோட அம்மா வள்ளி, வள்ளின்னு வாய் கொள்ளாம அழைச்சிக்கிட்டே இருந்திருப்பாங்க அல்லவா?” என்று மனைவியிடம் கேட்டுக் கொண்டே வந்தேன்.

”சும்மா தொனதொனன்னு பேசிக்கிட்டே வராதீங்க. ரோட்டைப் பாத்து வண்டி ஓட்டுங்க” என்றார் மனைவி.

என் வாய் மூடிக் கொண்டது. ஆனால் மனசு?????

இரவில் டிவியில் பார்த்தேன். ஈஷாவில் ஆண்களும் பெண்களும் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். நாளை இவர்களில் எத்தனை பேர்....??? என்னத்தைச் சொல்ல....! நல்லா இருக்கட்டும் எல்லோரும்.....!

குறிப்பு: 11 டிகிரி அட்ச ரேகையில் அமைந்திருக்கும் கோவில்கள் எல்லாம் மனிதப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தருமென்று தினமலரில் முதல் பக்கத்தில் ஜக்கி வாசுதேவ் சொன்னதாகச் செய்தி வந்திருந்தது. தினமலர் வகையறாக்கள் ஈஷா பக்கம் அதிகம் தென்படுவார்கள் போல. ஈஷாவில் அம்மணிகள் அதிகமாக இருக்கின்றார்கள். அதிலும் மாமிங்க ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு இருக்கின்றார்கள்.

Sunday, February 4, 2018

நன்றி மறந்தவர்களில் முதலிடம் பெண்களுக்கா?

பிளாக்கினைப் படிக்கும் பெண்களிடம் நான் முதலில் சரணடைந்து விடுகிறேன். பெண்களை பூமித்தாய் என்கிறோம் நாங்கள். எத்தனையோ மனிதர்கள் பூமியினை எத்தனையோ அல்லல்களுக்கும் துன்பங்களுக்கும் ஆட்படுத்தினாலும் அவர்களை வாழ அனுமதித்திருப்பது போல என்னையும். புரியவில்லை என்றால் மணல் மாஃபியா, மலை மாஃபியா, கடற்கரை மாஃபியாக்களை எல்லாம் வெகு சொகுசாக வாழ வைத்திருக்கும் பூமியைப் போல என்னையும் கொஞ்சம் மன்னித்து அருளி வாழ வாழ்த்தி விடுங்கள்.

இந்தியாவைப் பொறுத்து குடும்பத்தின் தலைவியிலிருந்து தேசம் வரை எல்லாமிடமும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் யாரென்று நான் சொல்லித்தான் உங்களுக்கும் தெரிய வேண்டுமென்ற அவசியமில்லை. 

கண்ணை மூடி இந்த உலகத்தின் இயக்கத்தையும், உலகில் மனிதப் பயன்பாடுகளுக்கு இருக்கும் பொருட்களையும் நினைத்துப் பாருங்கள். உலகில் இருக்கும் கண்ணாடிகள் எல்லாம் யாருக்காத் தயாரிக்கின்றார்கள் என்று யோசித்துப் பாருங்கள். அதுமட்டுமா?

பாரதி முதல் இன்றைய கால கவிஞனிலிருந்து, எழுத்தாளர்கள் வரை எழுதிக் குவித்துக் கொண்டிருப்பது எல்லாம் யாரை? தியாகராஜபாகவதர் காலத்திலிருந்து திரை இசையில் யாரைப் பற்றி பாடல்களை எழுதி இசையமைத்துக் கொண்டே இருக்கின்றார்கள். 

உலகத்தில் காணும் பொருளை எல்லாம் பெண்ணோடு தொடர்பு படுத்தி பேசுவதும், பாடுவதும், பாடிப்பாடியே செத்துப் போவதும் யார்?

கல்லறையிலும் கூட காதலிக்காகத் காத்துக் கொண்டிருக்கிறேன், என் விழிகளை மூடி புதைத்து விடாதீர்கள் என்று கவிஞன் ஒருவன் கண்ணீர் உகுத்தானே யாருக்காக?

இதோ கீழே இருக்கும் பாடலைப் படியுங்கள். எனக்குப் பெயர் தெரியாத கவிஞன் ஒருவனின் வரிகள் இவை.

நந்தா என் நிலா…
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ…வா
விழி…மீனாடும் விழி மொழி
தேனாடும் மொழிக் குழல்
பூவாடும் குழல் எழில் நீ நாடும் எழில்
மின்னி வரும் சிலையே மோஹன கலையே
வண்ண வண்ண ஒளியே வானவரமுதே
ஆசை நெஞ்சில் தெய்வம் நீயே
ஆடி நிற்கும் தீபம் நீயே
பேசுகின்ற வீணை நீயே
கனியிதழ் அமுதினை வழங்கிட
அருகினில் வா
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ…வா
ஆயிரம் மின்னல் ஓர் உருவாகி
ஆயிழையாக வந்தவள் நீயே
அகத்தியன் போற்றும் அருந்தமிழ் நீயே
அருந்ததி போலே பிறந்து வந்தாயே
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ…வா
ஆகமம் கண்ட சீதையும் இன்று
ராகவன் நானென்று திரும்பி வந்தாள்
மேகத்திலாடும் ஊர்வசி எந்தன்
போகத்திலாட இறங்கி வந்தாளோ
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ…வா
பாடலைப் படித்து விட்டீர்கள் தானே? இதற்கும் மேலே வேறு என்ன எழுத வேண்டும்? உங்களைப் பற்றி எழுத என்ன இருக்கிறது இனிமேல்?

ஆனால் எந்தப் பெண்ணாவது ஆண்களைப் பற்றி இப்படி எழுதி இருக்கின்றீர்களா? பாடி இருக்கின்றீர்களா? ஆண்களுக்கா ஒரு இலக்கியமாவது படைத்திருக்கின்றீர்களா?

இறைவனின் உடம்பில் கூட பாதியைப் பெற்றுக் கொண்டீர்கள். போதாது என்று நெஞ்சுக்குள்ளும் உட்கார்ந்து கொண்டீர்கள். இவ்வளவு செய்தும் ஆண்களைப் பற்றி கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை.

ஏன் ஆண்களின் மீது இப்படி கோபம் கொண்டிருக்கின்றீர்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை மனைவியை விட்டுப் பிரிந்த புத்தர் நினைவுக்கு வந்திருப்பாரோ? அந்த பட்டினத்தாரின் பாடல்களைப் படித்திருப்பீர்களோ? அவர்கள் எல்லாம் கோடானுகோடியில் புள்ளி சதவீதம் கூட இல்லை. சித்தர்கள் பாடிய பாடல்களைப் படித்திருப்பீர்களோ? அதெல்லாம் ஒன்றுமில்லை. அவர்கள் காட்டுக்குச் சென்றதால் ஏதோ சப்பக்கட்டு கட்டுவதற்காக பெண்களைப் பற்றி எழுதி வைத்திருக்கின்றார்கள்.

இதையெல்லாம் காரணம் வைத்துக் கொண்டு ஆண்களைப் புறக்கணித்து விடாதீர்கள். பிறந்ததிலிருந்து அம்மாவுக்காக வாழ்கிறான், பின்னர் மனைவிக்காக வாழ்கிறான். பின்னர் மகளுக்காக வாழ்கிறான். பிள்ளைகள் வளர்ந்து எங்கோ சென்று விடுகின்றார்கள். அவன் இறப்பதற்காக காத்துக் கொண்டிருப்பான். அவனுக்கு என்று அவன் வாழ்ந்ததே இல்லை. கொஞ்சமாவது யோசித்துப் பாருங்கள் பெண்களே.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் 
கொள்வர் பயன்தெரி வார்.

தினை தெரியும் அல்லவா? அத்தனை சிறிய உதவியைச் செய்தாலும் அதை பனைமரத்தளவு உயர்ந்த உதவியாக கருத வேண்டும் என்று திருவள்ளுவர் எழுதி இருக்கிறார்.  தினை அளவு கூட வேண்டாம். புல்லின் நுனி அளவாவது ஆண்களைப் பற்றி கவிதையாவது எழுதி இருக்கின்றீர்களா? உங்களைப் பற்றி லட்சோப லட்ச கவிதைகளை எழுதிக் குவித்திருக்கிறார்களே ஆண்கள் அவர்களுக்காவது ஒரே ஒரு கவிதையாவது எழுதி இருக்கின்றீர்களா?

இந்தப் பதிவும் வருங்கால உலகம் உங்களைப் பற்றி ஏதும் பேசி விடக்கூடாது என்பதற்காக எழுதுகிறேன். ஆகவே பெண்கள் உலகமே உங்களுக்காகவே வாழ்ந்து மறையும் ஆண்களைப் பற்றி இரண்டு வரிகளாவது எழுதி வையுங்கள். வைப்பீர்களா?

Friday, February 2, 2018

கலவரப்படுத்திய கடிதமும் பதிலும்

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு மெயில் வந்திருந்தது. கவனிக்க ஒரு மெயில் என்று தான் எழுதி இருக்கிறேன். பிறரைப் போல தினம் தோறும் லட்சக்கணக்கான மெயில் என்று எழுதவில்லை. முற்றிலும் ஆங்கிலம். எனக்கோ மெட்ராஸ்காரர்கள் தமிழ் பேசுவது போல ஆங்கிலத்தில் உரையாடுவேன். எழுதுவேன். அரை மணி நேரம் ஆனது. பலமுறை படித்து பார்த்து, மொழியாக்கம் செய்து ஒரு வழியாகப் புரிந்து கொண்டு பதில் எழுதினேன்.

அந்தக் கடிதத்தையும்,எனது பதிலையும் கீழே படியுங்கள். இதுவாவது பரவாயில்லை ஒருவர்  லட்ச ரூபாய் தருகிறேன், வசிய மருந்து தாருங்கள் என்று முகவரி ஏதும் இல்லாமல் மெயில் அனுப்பி இருந்தார். கருப்பு மை டப்பா ஒன்றினை அனுப்பி வைத்து லட்ச ரூபாய் வாங்கி விடு என்றது எனக்குள் இருக்கும் இன்னொரு ஆள். இதையெல்லாமா வெளியில் சொல்லப்போகின்றார்கள் என்று சப்பைக்கட்டு வேறு செய்தது. ஓங்கி ஒரே போடு. அடக்கி விட்டேன். அடங்கிப் போனான் அந்த இன்னொரு மனமயக்கிப் பயல். இதுவே வேற ஆளாக இருந்தால் ராகுல் ப்ரீத்தையே மடக்கி விடலாம், அமலாபால் கல்கண்டு பாலைக் கொண்டு வந்துதருவார் என்றெல்லாம் மெயில் அனுப்பி கறந்து விடுவார்கள். நமக்கு கறப்பதில் அனுபவமுமில்லை. அவசியமுமில்லை.

உங்களுக்குத் தெரியுமா? ஒரே ஒரு விஷயத்தைத் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்தால் அவர் எந்த அழகியானாலும் சரி, ஐஸ்வரியாக இருந்தாலும் சரி, எளிதில் தள்ளிக் கொண்டு வந்து விடலாம். அந்த விஷயத்தை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று எனக்குச் சொல்லிக் கொடுத்தவரிடம் சத்தியம் செய்திருக்கிறேன். ஆகவே... ! அது வேண்டாம்.

எனக்கு வந்த கடிதம் கீழே
========================

Hi,
I came across an item in your blog (Dec 18, 2017 dated entry) that intrigued me. I came across your blog randomly as I clicked on (Next blog) in blogger. You were describing about meeting a couple and about the wife who had not slept for the last 10 years. I just wanted to ask you, if I may, a number of questions that arose in my mind as I was reading: 
  1. Did this (not sleeping) happen all of a sudden from a young age, or did it happen, developing over a period of time? 
  2. Did it happen after she got married? 
  3. Is it continuous for 10 years or is it the total time of 10 years, perhaps accumulated over a period of over 15 or 20 years? 
  4. Was it intentional on the part of the individual or did it just happen that way unintentionally, without consciously willing it? 
  5. Is the individual aware of this phenomenon, or just happened to be noticed by the husband? 
  6. Is the individual in question lying down in bed fully awake unable to sleep, or was she engaged in some activities, rather than ‘not just lying down’? 
  7. Was there a change in the intake of food since this behaviour of ‘not sleeping’?

As you say, there are many things that we are not aware of and there is no point in trying to prove or disprove any particular point of view. Although I have not had a personal experience of meeting anyone who has intrigued me, this has blown me away and that is why I am asking you these questions. I do remember buying the book, “Autobiography of a Yogi” some 40 years back but never even bothered reading it and probably threw it away. 

Finally, I am writing this in English as I find it convenient and faster to write in English. Tamil is my mother tongue and I can speak, read (obviously) and write in Tamil but only with pen and paper. If you have time I would like to hear from you and your experiences with your guru.

- XXXXX

எனது பதில் கீழே
===================

வணக்கம்.

உங்களின் கடிதம் படித்தேன். உங்கள் கேள்விகள் அனைத்தையும் படித்தேன்.பதில் எழுத எனக்கும் ஆவல் தான்.ஆனால் உங்களைப் போல கேள்விகளை அவர்களிடம் கேட்டேன் என்றால் என் நிலைமை என்ன ஆகும் என்று நிமிடம் யோசித்துப் பாருங்கள். உங்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே ஒரு பதில் தான்.

அந்தப் பெண்மணி வெகு ஆரோக்கியமாக, நல்ல திடகாத்திரத்துடன், தெளிவான முகத்துடன் இருக்கின்றார்கள். 

இந்தப் பதில்களால் நீங்கள் என்ன பலனடையப்போகின்றீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. வரிசை கேள்விகள் என்னை கொஞ்சம் கலவரப் படுத்தி விட்டன. 

ஒரு யோகியின் சுயசரிதை புத்தகத்தைப் படிக்கவில்லை, வீசி விட்டேன் என்கிறீர்கள். பின்னர் எனது குருவைப் பற்றி கேட்கின்றீர்கள். எனக்கும் குருவிற்குமான உறவு என்பது வேறு வகையானது. ஒவ்வொருவருக்கும், அவரவர் அறிவுக்கு ஏற்ப அவர் உரையாடுவதும் ஆலோசனைகள் சொல்வதும், வழி காட்டுவதும் இருக்கும். ஆகவே என் அனுபவங்கள் எந்த வகையிலும் உங்களுக்குப் பயன் தராது. நான் கொஞ்சம் வித்தியாசமான சிந்தனை உள்ளவன். என் சிந்தனைகள் வேறு வகையானவை. இந்த நொடியில் வாழ் என்பது எனது வாழ்க்கை. நாளையைப் பற்றிய சிந்தனைகள் என்னிடம் இருப்பதில்லை. ஆனால் செய்யும் தொழிலானாலும் சரி, எந்த வேலையானாலும் சரி - எது சரியோ அதைச் செய்வேன். அதிலும் பிறருக்குப் பங்கம் ஏற்படாத வண்ணம் இருக்க வேண்டுமென்பது எனக்கு முக்கியமான ஒன்று.

இயற்கை தனக்குள் வைத்திருக்கும் ஒவ்வொரு மர்மத்தையும் அறிந்து கொள்ள மனிதனால் முடியாது என்பது எனது நம்பிக்கை.

உங்களது படிப்பறிவு, பட்டறிவுக்கு புலனாகாத விஷயங்களை கேள்வி கேட்பது என்பது சரிதான். ஆனால் அதைப் புரிந்துகொள்ளும்  திறமை கேள்வி கேட்பவர்களிடம் இருக்க வேண்டும். கேள்வி கேட்கும் விஷயங்களைப் பற்றி ஓரளவாவது புரிந்து கொள்ளும் பக்குவத்தில் தன்னை தயார் படுத்தி இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியம். கேள்விக்கான பதிலைப் புரிந்து கொள்ள இயலாமலிருந்தால் அதனால் பலனில்லை அல்லவா?

ஆகவே எல்லாவற்றையும் உள் வாங்கிக் கொள்ளுங்கள். உடனடி முடிவுக்கு வராதீர்கள். உங்கள் சூழலுக்கு ஏற்ப எது சரி எது தவறு என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

வாழ்க்கை சுவாரசியமானது. அன்பு ஒன்றே நிரந்தரமானது. எந்த எதிர்பார்ப்பும் இன்றி அள்ளிக் கொடுங்கள்.

காசு, பணம்,பொருள்,பதவி, புகழ் எதுவும் உண்மையில்லை. இது தான் மாயை.

முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு இல்லாத புகழா? பதவியா? இப்போதைய அவரின் நிலைமை ? ஆகவே காசு, பணம்,பொருள்,பதவி, புகழ் எதுவும் உண்மையில்லை. இது தான் மாயை.


அவரின் இன்னொரு பதில் கடிதம் கீழே
====================================

HI,

Thank you for such a quick response to my mail. I took more than a month, almost 5-6 weeks to compose and was debating all the time about writing to you.

I am personally very satisfied and have no immediate worries or concerns of any kind, except perhaps for one. I have had a very nagging question for several years now, and that is: why are we even born? All of us are born, live a few years and die. But the question I have is, why bother to be born, what greater purpose is being served by being born. I have no satisfactory answer that makes any sense. Perpetuating the race is not the answer, as many individuals, either by choice or design, do not produce any progeny. To provide some kind of a service to humanity is a circuitous response: A born to scratch B’s back, B to C’s back and C to A’s back and so on.

As I read your blog entry, I thought perhaps it would give me some kind of a lead to explore and that was the main reason to write to you in the first place. As you rightly say each individual has different and varying requirements and what suits one may not be of any use to the other. Well, any way, thank you for your quick reply and I wish you all the best in your endeavours. 

- XXXX


இந்தக் கடிதத்தை இன்னும் படித்துக் கொண்டே இருக்கிறேன். 

Wednesday, January 31, 2018

பின் நவீனத்துவத்தின் சினனிம் – கொஞ்சம் செக்ஸ் கலந்தது

அந்தக் கால வாழ்க்கை முறை சிறப்பானதா? அல்லது இந்தக் கால வாழ்க்கை முறை சிறப்பானதா? என்ற தர்க்கம் எழுந்தது எனக்கும் எனது சக தோழன் ஒருவனுக்கும். அவன் டிவி விவாதங்களைப் போல பேசினான். நான் மறுதலித்தேன். இந்தக் கால வாழ்க்கை முறையின் சிக்கல்களுக்கு முதன்மையானது பின் நவீனத்துவத்தின் (நவீன யுகம்) சிந்தனை போக்கு மேலெழுந்தவாரியாக மனிதர்களிடம் பிரதிபலிப்பது என்ற காரணத்தை முன் வைத்தேன். அவனுக்குப் புரியவில்லை. அதைப் புரிய வைக்கும் விதமாக இந்தப் பதிவு.

சிறுகதை ஒன்று. சுவாரசியமாகத்தான் இருக்கும். கதையில் செக்ஸ் பற்றி வருகிறது. ராம்கோபால்வர்மாவின் கடவுள், செக்ஸ், உண்மை எனும் படத்தின் இணையதளம் பார்வையாளர்களால் திணறியதாம். அந்தளவுக்கு இந்தியர்கள் மட்டுமல்ல உலகமெங்கும் உள்ள மனிதர்களிடையே செக்ஸ் என்ற வார்த்தைக்கு அர்த்தமும் அதிகமும், ஆர்வமும் அதிகம். தீரவே தீராத விளையாட்டு. முற்றிலும் மானுடத்தால் புரிந்து கொள்ள முடியாத ஒரு விளையாட்டும் கூட.

அந்த நகரத்தில் மணமாகாத பெரும் பணக்காரி ஒருத்தி வசித்து வந்தாள். அவள் எவரையும் நம்பமாட்டாள். அதனால் அவளை எவரும் ஏறெடுத்தும் பார்ப்பதும் இல்லை. அதுமட்டும் காரணமல்ல. அவள் அழகு குறைவானவள். அவளுக்கு எவரைப் பற்றியும் கவலையும் இல்லை. கோடீஸ்வரியானவளுக்கு பிறரைப் பற்றிய கவலை இருப்பதில் அர்த்தமும் இல்லை. திடீரென அவளுக்கு ஒரு மனப்பிரச்சினை எழுந்தது. இதுவரை என்னை ஏறெடுத்தும் பார்க்காத இந்த நகரை திரும்பிப் பார்க்க வைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டாள்.

ஒரு வக்கீலை அழைத்தாள். அவரிடம், ”நான் இறந்த பிறகு என் இறுதிச் சடங்கின் போது இந்த நகரமே எழுந்து நிற்க வேண்டும். அதற்காக விழா போன்று என் இறுதி யாத்திரை இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அதை நிறைவேற்றிட என்னிடமிருக்கும் ஒரு கோடி ரூபாயில் 75 லட்சம் ரூபாயை அதற்கு ஒதுக்கி வைக்கிறேன் என்று உயில் எழுத வேண்டும்” என்றாள்.

”ஆஹா…! தன் உடலைப் புதைப்பதற்கு இது நாள் வரை செலவு செய்துள்ளதில் இது தான் மிக அதிகம். உங்கள் விருப்பம் போல எழுதி விடலாம் என்கிறார்” அந்த வக்கீல். தொடர்ந்து “மிச்ச பணத்தை என்ன செய்வதாக எழுத வேண்டும்?” என்று கேட்டார்.

அப்பெண், “அதை நான் பார்த்துக் கொள்கிறேன், இதுவரைக்கும் நான் எந்த ஆணுடனும் உறவு வைத்துக் கொள்ளவில்லை. நான் இறப்பதற்கு முன்பு அதை அனுபவிக்க விரும்புகிறேன். இளமையும், அழகும் உள்ள, என்னை போதுமான அளவுக்கு திருப்திப்படுத்த திறமை உள்ளவனைக் கண்டுபிடித்து  அனுபவிக்க விரும்புகிறேன். அவனுக்காக மீதமுள்ள 25 லட்சத்தையும் செலவழிக்கப் போகின்றேன்” என்றுச் சொன்னாள்.

அன்றிரவு பேச்சுவாக்கில் வக்கீல் இதனை தன் மனைவியிடம் தெரிவித்தார். மனைவியும் அவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, ’அந்த 25 லட்சம் நமக்குக் கிடைத்தால் நன்றாக இருக்குமே?’ என்றார் மனைவி. இருவரும் மீண்டும் கலந்துரையாடினார்கள். பின்னர் மனைவி காரை ஓட்டிக் கொண்டு போய் அந்த மணமாகாத பெண்ணின் வீட்டின் முன்பு நிறுத்தி தன் வக்கீல் கணவரை இறக்கி விட்டாள்.

வக்கீலும், ’இரண்டு மணி நேரம் கழித்து வந்து அழைத்துச் செல்’ என்று சொல்லி வீட்டுக்குள் சென்று விட்டார்.

மிகச் சரியாக இரண்டு மணி நேரம் கழித்து வக்கீலின் மனைவி காரின் ஒலிப்பானை ஒலிக்க விட்டாள். அந்த வீட்டிலிருந்து ஒரு சத்தமும் கேட்கவில்லை. மீண்டும் நீள் சத்தத்தை ஒலித்தாள். சன்னலோரம் அந்தப் பெண் முகம் தோன்றியது. பின்னால் வக்கீல் தோன்றி இப்படிக் கத்திச் சொன்னார்.

“இந்தப் பெண், தான் இறந்த பிறகு முனிசிபல்காரர்களே புதைத்துக் கொள்ளட்டும் என்கிறாள். ஆகவே நீ நான்கு நாட்கள் கழித்து வா”

கதை புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

பின் நவீனத்துவத்தின் கோட்பாடு எல்லாவற்றையும் தனித்தனியாக ஆராய்வது. நவீன கால தொழில் நுட்பத்தின் வளர்ச்சியோடு இயைந்த பின் நவீனத்துவக் கோட்பாடு மனித வாழ்க்கையின் மீது தற்கால தனது அடையாளங்களைப் பதிப்பித்துக் கொண்டிருக்கிறது. அதன் அடையாளமாய் தமிழகத்தில் வெளியானது இயக்குனர் ராமின் ‘தரமணி’ திரைப்படம். தமிழர்களுக்கு திரைப்பட உதாரணம் தான் உடனடி காஃபி போல புரியும். ஆகவே இங்கு சினிமா வந்து விட்டது.

கற்பியல் கோட்பாடுகளைப் பொருளாதாரப் பின்னனியின் பாலும், தனி மனித பொருளாதார விடுதலையின் மீதும் கேள்வி கேட்கிறது பின் நவீனத்துவம். இயற்கை விதித்த வாழ்வியல் கோட்பாடுகளின் கட்டுப்பாடுகளை மீறிச் செல்லும் உலகினை உருவாக்கி வருகிறது. முற்றிலுமான பாதுகாப்பற்ற தன்மை மிக்க பொருளாதாரத்தின் பின்னனியில் மனித ஒழுக்க நெறிகளை கேள்வி கேட்கிறது. அதன் வசீகரத்தன்மை சுய ஒழுங்கற்ற மானுடவியலாளர்களுக்கும், பொருளாதார பெரும்புள்ளிகளுக்கும் பெரும் லாபங்களை ஈட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்கிறது. அந்த வசீகரத்தில் வீழ்ந்து விடுகிறது உணர்வுகளின் பால் கவர்ச்சியுற்ற மானுடர்களின் வாழ்க்கை. பொருளாதார வீழ்ச்சியின் போது நிறுவனங்களை மூடிவிடலாம். ஆனால் மனித உணர்வுகளை என்ன செய்வது என்பதற்கான தர்க்கங்களை அது வைத்திருக்கவில்லை என்பது நிதர்சனம்.

இன்றைய காலகட்டத்தின் நிலையை ஓஷோ ‘இன்று புதிதாய் பிறந்தோம்’ நூலில் சொல்லிய கதையின் வடிவம் தான் நீங்கள் மேலே வாசித்தது.

காசே தான் கடவுளடா (பின் நவீனத்துவத்தின் சினனிம்)

Tuesday, January 30, 2018

டிசைன் அப்படி

யாரோ ஒருவர் மூலம் அறிமுகமான நண்பர் ஒருவர் சினிமாவில் இருக்கிறார். பி.ஆர்.ஓவாக பணி. அதுமட்டும் வேலையல்ல. ஃபைனான்ஸ், வெளியீடு, கடன் வாங்கிக் கொடுத்தல் போன்ற பல்வேறு பணிகளைச் செய்வார். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் ஏதோ ஒரு தேவைக்காக நண்பரை அணுகினால் முடிந்தது காரியம் என்று நினைத்துக் கொள்ளும் அளவுக்கு அவரின் செயல்கள் இருக்கும்.

ஆனால் நண்பர் அவரை வைத்து அடுத்த ஒரு மாதத்திற்கு வசூலிக்க ஆரம்பித்து விடுவார். அது அவருக்குத் தெரியாது. தினமும் குறைந்தது 500 ரூபாய் அவரின் குறிக்கோள். அத்துடன் சாப்பாடு. சிக்கியிருப்பவரின் தகுதிக்கு ஏற்ப சில பல கதைகளை அவிழ்த்து விடுவார். சினிமா பிரபலங்களை கனெக்ட் செய்வார். போனில் பேச வைப்பார். பிரபலங்களிடம் பெரிய பைனான்சியர் என்றுச் சொல்லி வைப்பார். இது சிக்கி இருப்பவருக்குத் தெரியாது. இவ்வளவு பெரிய ஆளா என்று சிக்கி இருப்பவர் மலைத்தே போய் விடுவார். ஜொள்ளு விடுபவர் என்றுத் தெரிந்தால் பல்வேறு நடிகைகளை போனில் பேச வைத்து கிறுகிறுக்க வைத்து விடுவார். அவ்வளவு திறமைசாலி.

என்னிடம் பல முறை சிக்கிக் கொள்வார். ”அதெயெல்லாம் கேக்காதீங்கண்ணே” என்று நழுவி விடுவார். ”ஏதோ பிழைச்சுப் போறேன், விட்டுடுங்களேன்” என்பார். சென்னை சென்றால் பொழுது போக்க அவரை வரவழைத்து விடுவேன். செமையா ரீல்களை விடுவார். இயக்குனர்கள் எல்லாம் தோற்றுப் போய் விடுவார்கள். பிரியாணியும், கைச்செலவுக்கு 500 கொடுத்து விடுவதுண்டு.  சிக்கன் பிரியாணி என்றால் உயிர் அவருக்கு. இடையில் என்னைப் பார்க்க எவராவது வந்து விட்டால் அவர் பாடு திண்டாட்டம் தான். நம்ம நண்பர் தானே என்ற வகையில் என்னைப் பார்க்க வருபவரிடம் எப்படியெல்லாம் சொன்னால் ஆள் பயப்படுவாரோ அப்படிச் சொல்லி, சகஜமாக வந்தவரை அட்டென்சனில் நிற்க வைத்து விடுவார்.

“ஏம்பா, நீ இவ்ளோ பெரிய ஆளா? ஒன்னுமே சொல்ல மாட்டேன் என்கிறாயே?” என்று கோபித்துக் கொள்வார்கள். அந்தளவுக்கு என்னை உயரத்தில் ஏற்றி விடுவார். வாங்கிக் கொடுக்கும் பிரியாணிக்கும், 500 ரூபாய்க்கும் மேலே, அதுக்கும் மேலே காரியத்தை கன கச்சிதமாகச் செய்து விடுவார். அந்த நண்பரை இவர் எங்காவது பார்த்தார் என்றால், என் பிள்ளைக்கு காய்ச்சல் என்று கதை சொல்லி 500 ரூபாயை ஆட்டயப் போட்டு விடுவார்.

அவரிடம் சிக்கினார்கள் என்றால் மெதுவாக வறுபடும் கிரில் சிக்கனாகி விடுவார்கள். இவரைப் பற்றி ஒரு மாதத்திற்குள் தெரிந்து விடும். பெருமூச்சோடு கடந்து போய் விடுவர். ஒரு மாதம் மட்டுமே தாக்குப் பிடிக்கும் அளவுக்கு அவரின் ரீல்கள் பலம் வாய்ந்தவை.

இப்படியான ஆட்களை உங்கள் வாழ்க்கையில் சந்தித்திருப்பீர்கள். இன்றைக்கு என்ன கிடைக்கும் என நினைக்கும் ஆட்களே நம்மைச் சுற்றி அதிகமிருக்கின்றார்கள். அவர்களின் செயல்கள் இப்படித்தானிருக்கும்.

அப்படி இவரிடம் சிக்கிய ஒருவர் என்னிடம் பேசினார். மனசு வெறுத்துப் போய் பேசினார். ஒரு லட்சமாவது செலவழித்திருப்பார் என நினைத்தேன். புலம்பிக் கொண்டிருந்தார் அரை மணி நேரமாக. பொறுமையாகக் கேட்டு விட்டு அவரிடம் சொன்னேன் இப்படி.

”அது அவரின் டிசைன், அதாவது அவர் அப்படி டிசைன் செய்யப்பட்டிருக்கிறார். புரிகிறதா?” என்றேன். எதிர்முனையில் சத்தமே இல்லை.

ஐந்து லட்ச ரூபாய் காரின் டிசைனும், ஒரு கோடி ரூபாய் காரின் டிசைனும் வெவ்வேறு அல்லவா? டிசைனுக்குத் தகுந்தவாறு தான் கார்களின் செயல்பாடுகளும் இருக்கும். அதே தான் மனிதனுக்கும். உண்மையை மட்டும் பேசும் டிசைன், பொய் மட்டுமே பேசும் டிசைன், சுயநல டிசைன், தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் டிசைன், ஏதும் அறியாது எல்லாம் அறிந்த டிசைன் இப்படி ஒவ்வொரு மனிதனும் டிசைன் செய்யப்பட்டிருப்பான். தொழில்களில் இருப்போரின் டிசைன்கள் வேறு வகையானவை. அரசியல் டிசைனும் வேறு வகையானது.

யோசித்துப் பாருங்கள். உங்களைச் சுற்றி இருக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும்,அவர்களின் செயல்பாடுகளைப் பற்றியும் அலசுங்கள். ஒவ்வொருவரின் டிசைன் உங்களுக்குள் தெள்ளத் தெளிவாக விரியும். அவர்கள் பேசுவதை உற்றுக் கவனியுங்கள். அவர்களின் மொத்த டிசைனும் புரிந்து விடும். பின்னே என்ன? நமக்கேற்ற டிசைனை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

எந்த டிசைன் அருகில் இருக்க வேண்டும், எந்த டிசைன் தூரத்தில் இருக்க வேண்டும், எந்த டிசைனுக்கு எப்படி பேசினால் புரியும், எந்த டிசைனை நமக்கு ஏற்றவாறு மாற்ற முடியும் என்பதெல்லாம் பட்டவர்த்தமாக தெரிந்து விடும். கோபம் வராது. டென்சனாகாது. வாழ்க்கை சுவாரசியமிக்கதாக மாறி விடும்.

முயற்சித்துப் பாருங்கள். வெற்றி நிச்சயம்!



Thursday, January 18, 2018

அறத்தின் மீது அடி விழுகிறதா?

”மனிதன் எப்போதுமே மனிதன் தான். எத்தனை கடவுள்கள் வந்தாலும் மனிதனால் மாறவே முடியாது” என அறிந்தவர்களிடம் பேசிக் கொண்டிருப்பேன். ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தெரிந்த வகையில் பிறருக்குப் பிரச்சினை கொடுப்பவனாகவே இருக்கிறான். சூழ்நிலைக் கைதியான மனிதனிடம் மனிதம் அவ்வப்போது எட்டிப் பார்க்குமே ஒழிய எப்போதுமே தன் வயிற்றுப் பசிக்கும், இடுப்புப் பசிக்கும் தான் அவன் வேலை செய்வான்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பேட்டியைக் கண்டவுடன் இந்தியாவின் இறையான்மாவின் மீது அரசியல் தாக்குதல் நடத்தப்படுகிறது என்பது புரிந்தது. யார் எதை நம்புகின்றார்களோ அந்த நம்பிக்கைக்கும் மேலே உலகினை இயக்கி வரும் “அறம்” (தர்மம்) தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது என்று தெளிவாகப் புரிந்தது. 

இந்திய ஜனநாயகத்தில் வானளாவிய அதிகாரம் கொண்டவர்களாக நீதிபதிகள் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. நீதிபதிகளும் மனிதர்கள் என்கிற வகையில் எல்லை மீறிய அதிகாரம், எப்பேர்பட்ட மனிதனையும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்க வைத்து விடும். நல்ல நீதிபதியாகவே இருந்தாலும் எல்லையற்ற அதிகாரம் தவறு செய்யத் தூண்டி விட்டு விடும். குடும்பம் இருந்தாலே அவர்களும் ஒரு சில சூழலுக்குத் தள்ளப்படுவார்கள் என்பது நிதர்சனமானது.

இதற்கு யார் என்ன செய்ய முடியும்? என்பது தான் இந்திய மக்களின் மனதில் இப்போதைக்கு எழுந்திருக்கும் விடை தெரியா கேள்வி. அந்தக் கேள்விக்கு ஒரே பதிலாக என் முன்னே இருப்பது, இந்தியாவின் இறையான்மா மட்டுமே.

இந்த உலகம் எத்தனையோ சர்வாதிகாரிகளைப் பார்த்திருக்கிறது. எத்தனையோ ஆதிக்கஜாதிகளைப் பார்த்திருக்கிறது. அவர்கள் எல்லோரும் இப்போது எங்கே போனார்கள்? 

ஒரு காலத்தில் உலகிற்கே மறை சொன்ன தமிழ்சாதி(சாதிதான்) மக்களின் இன்றைய நிலைமை - அய்யோ பாவமாக இருக்கிறது அல்லவா? அதே போலத்தான். தமிழ்சாதி மக்களைச் சுற்றிச் சுற்றி அடி விழுகிறது. தமிழ்சாதி கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகிறது. போனவன் வந்தவன் எல்லாம் அடிக்கிறான். அடி வாங்கிக் கொண்டே இருக்கிறது. சினிமாவில் ஆடும் இடுப்பாட்டக்காரிகளின் தொடைகளில் அல்லவா தமிழ் சாதியின் உயிர் இருக்கிறது. ஆடும் அந்தச் சதைகளின் மீது அல்லவா தமிழ்சாதி தினமும் துயில் கொண்டு துயிலெழுகிறது. அந்தச் சதைகளைத் தடவி உசுப்பேத்தும் ஹீரோக்களை அல்லவா தலைவர்கள் என்று நம்புகிறது. தன்னைத் தானே அழித்துக் கொள்வதில் தமிழ்சாதிக்கு நிகரேது இந்த உலகில்.

காலையில் உதித்தெழுந்து மாலையில் மறையும் படி சூரியனைச் சுற்றி இயங்கி வரும் பூமியை எது அந்தரத்தில் நிற்க வைத்ததோ அது என்னைப் பொறுத்த வரை “அறம்” 

உலகில் இந்தியா மட்டுமே மனிதன் வாழக்கூடிய தர்ம பூமியாக இருக்கிறது. அதர்மம் ஓங்குகிற போதெல்லாம் தன்னைத் தானே சிலிர்த்து எழுந்து சுத்தப்படுத்திக் கொள்ளும் இந்த பூமியைப் பாதுகாக்கும் அந்த அறம் நீதி என்கிற பெயராலே அழைக்கப்படுகிறது. அந்த நீதி அரசியலின் பேரால் தாக்கப்படுகிறது என்பது பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தினார்கள் அந்த நீதிபதிகள். அந்தத் தாக்குதலுக்குக் காரணமான யாரானாலும் சரி. அதற்குரிய விலையைக் கொடுத்தே ஆக வேண்டும். கொடுப்பார்கள். அது கொடூரத்தை மிஞ்சிய கொடூரத்தின் தாக்குதலாகவே இருக்கும். ஆட்டம் போட்டவர்கள் எல்லாம் அடங்கிய கதைகள் வரலாற்றிலே நிறைந்திருக்கிறது. ஆடட்டும். அடக்கப்படுவார்கள் என்று கடந்த காலம் சொல்லிக் கொண்டே இருக்கிறது.

கீழே ஒரு சில நீதிபதிகளின் வரலாறு இருக்கிறது. படித்துப் பயனடையுங்கள்.



ஆண்டாள் பாவம். தன்னால் தமிழகத்தில் இப்படி ஒரு நிலைமை உண்டாகும் என நினைத்தே பார்த்திருக்க மாட்டார். மொத்தத்தில் இங்கு யாரும் அவரவர் வேலையைப் பார்ப்பது கிடையாது என்பது மட்டும் புரிகிறது. கட உள்ளே என்பதை கடவுள் என மாற்றி வியாபாரம் செய்யும் உலகமல்லவா இது.

Thursday, January 4, 2018

பெண்களை நம்பினால் நம்புங்கள்

பாரதியின் ”பீரங்கி சிப்பாய்” படித்ததும் எனக்குள் எழுந்திருந்த தேசிய கவியின் பிம்பம் ஆட்டம் காண ஆரம்பித்தது. முறுக்கிய மீசைக்குள்ளும் முண்டாசுக்குள்ளும் ஈரும் பேனும் இருந்திருக்குமோ என சந்தேகம் தோன்ற ஆரம்பித்தது. காலச்சுவடு பத்திரிக்கையில் பல பின் குறிப்புகளுடன் வெளியான அந்தக்கட்டுரை எனக்குத் தலைவலியை உண்டாக்கியது. சரியான எரிச்சல். இதோ கீழே இருக்கும் இணைப்பில் இருக்கும் அந்தக் கட்டுரையைப் படித்து விடுங்கள்.

http://tamil.thehindu.com/opinion/article19659327.ece

இதில் வாஸந்தி வேறு. ”தைரியம்னா என்னான்னா பயம் இல்லாம நடிக்கிறதுன்னு” ஏதோ ஒரு படத்தில் கேட்டேன். 

அம்மா இருக்கிறவரை வாயையும், பேனாவையும், சூ....யும் மூடிக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் அவர் இறந்ததும் வீறு கொண்டு அம்மா பற்றிய புத்தகங்களை வெளியிடுகின்றார்கள். அந்தப் புத்தகத்தின் தலைப்பு மறந்து விட்டது. அறிமுக உரையில் ”எங்கிருந்தோ வந்த ஒரு கூட்டம்” என்ற வரியோடு முடிந்திருக்கிறது. என்ன ஒரு வன்மம்? அம்மாவை விமர்சிக்கின்றேன் பேர்வழி என தன் வன்மத்தை வழித்து எழுதியிருக்கிறார் போல. அம்மா உயிரோடா இருக்கிறார்கள்? அதையெல்லாம் மறுக்க? பாவம். அவரால் எனக்கொன்றும் ஆகவில்லை. ஆனால் மனசுன்னு ஒன்னு இருக்கே? வாஸந்தியின் மீது எரிச்சல் தான் மண்டியது. எழுத எவ்வளவோ இருக்கிறது. வாழ்க்கையில் தனக்கென வாழாமல் வாழ்ந்து மறைந்த பெண்மையைப் பற்றி எழுத எப்படித்தான் மனசு வருகிறதோ தெரியவில்லை.

இந்த எரிச்சலில் யூடியூப்பை தோண்டிக் கொண்டிருந்தேன். ரஜினி அலப்பறை வீடியோக்கள் வரிசை கட்டி நின்றன. ஒரு எழவும் தெரியாமல் என்னத்துக்கு அரசியலுக்கு வருகிறேன் என்று அலப்பறை கொடுத்துக் கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. ஆளாளுக்கு வச்சு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். படையப்பாவில் ரம்யா கிருஷ்ணனை ஜெயித்தது மாதிரி ஜெயித்து விடலாம் என்று நினைத்திருப்பார் போல. குஷ்பூவோ அல்லது ஷ்ரேயாவோ நாளை தமிழகத்தின் துணை முதல்வராகி பின்னர் நயன்தாரா முதலமைச்சராகி விடுவார் என நம்புவோமாக. நம்புங்கள் நயன்தாரா முதலமைச்சர் கேண்டிடேட் என்றால் அடியேன் பிரச்சாரம் செய்வேன். என் கலாச்சாரம் அப்படி இருக்கிறது.

அரசியல் பெண்களின் உடலின் மீது கட்டமைக்கப்படுகிறது. ரஜினி தன் படங்களில் அழகிய ஹீரோயின்களை தடவி படம் பார்க்கும் தன் ரசிகர்களின் சா....... உசுப்பி விடுகிறார். ரஜினி மட்டும் நடித்தால் ஒரு தெரு (வேண்டாம் நாய் என்றால் நன்றி இருக்கும்) சினிமா பார்க்கப் போகாது. தேர்தல் பிரச்சாரத்துக்கு கூட்டம் சேர்க்க நடிகைகளை இறக்குவார் என நம்புவோம். நடிகைகளின் தொப்பூல்களைப் பார்த்து, அதே மூடில் போய் எச்சில் ஒழுக ஓட்டுப் போடுவோமாக. 

நாம் தடவினால் என்ன ரஜினி தடவினால் என்ன? எல்லாம் ஒன்று தானே என மனசு சமாதானம் சொல்லும். கிக்கு தடவலில் அல்லவா இருக்கிறது. சிவாஜியில் ஒரு பாடலில் ஷ்ரேயாவின் கவட்டியை விரித்துக் காண்பிப்பார் பாருங்கள் அந்த ஒரு காட்சிக்காக நூறு தடவை அந்தப் பாட்டைப் பார்த்திருப்பேன். எம்.ஜி.ஆர் ஹீரோயின்களைத் தடவி பிசைந்த போது பார்த்து ரசித்து ரசித்து ஓட்டாய் குத்துக்குத்துன்னு குத்திய வரலாறு நமக்கு இருக்கிறது அல்லவா? 

சரி! போகட்டும் சொந்தக் கதைகள். அதை எழுதினால் ரொம்பவும் செக்ஸியாகப் போய் விடும். சாருவாக இருந்தால் ஹமீது புக்குப் போடுவார். 1000 புக்குகள் விற்கும். அந்த லாபத்தில் நானும் 1000 ரூபாய் ஜெட்டி போடுவேன். அதுக்கெல்லாம் கொடுப்பினை வேண்டும். நமக்கெல்லாம் ஏது? இப்படி ஏதாவது எழுதி சொரிந்து கொண்டால்தான் உண்டு. 

அடச்சே, எங்கேயோ போய் விட்டேன்.

எனக்குப் பிடித்த ஒரு பாடலை அவ்வப்போது கேட்பதுண்டு. எரிச்சலோ கோபமோ வந்தால் சினிமா பாடல்களுக்குள் மூழ்கி விடுவேன். அப்படி என் மனதில் நீங்காத இடம் பிடித்த பாடல் இது. மோகனும் மஜா ராதாவும் நடித்திருப்பார்கள். மோகன் நூறு கோடி ரூபாய் சம்பளம் பெற்ற மாதிரி நடித்திருப்பார். மஜா ராதா ஆட்டு ஆட்டுன்னு ஆட்டி இருப்பார் இடுப்பை. 

இதோ அந்தப் பாடல் கீழே. முதலில் உள்ள பாடலைப் பார்த்து விட்டு கீழே இருக்கும் அடுத்தப் பாடலைப் பாருங்கள். 

மஜா ராதாவும் மோஹனும் நடித்த பாடல் இது.


உய்யலா ஜம்பாலா எனும் தெலுங்குப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியோடு மிக்சிங் ஆன பாடலில் நடித்தவர் அவிகா கவுர் மற்றும் ராஜ் தருன். இந்தப் பாடலையும் பார்த்து விடுங்கள். (இந்த அம்மணி இப்போது செம குண்டு கத்திரிக்காய் போல இருக்கிறார்)


இந்தப் படத்தில் பாலைக் குடித்தவர் நிலையினை நினைத்து எனக்குள் பச்சாதாபமே எழுந்து விட்டது. அந்தப் பையன் என்ன செய்தான்? பாவம் அல்லவா? 

ஆகவே பெண்களை நம்பினால் நம்புங்கள்! அது அவரவர் விருப்பம்.