குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, April 2, 2018

பெண்மையின் தத்துவம் தியாகம்

அத்தினி, சித்தினி பதிவு என் மனைவிக்கு விருப்பம் இல்லாத காரணத்தாலும், ஆண்கள் கெட்டுப்போய் விடக்கூடாது என்பதாலும், சில பெண்களின் வாழ்க்கையில் சில பல பிரச்சினைகள் எழும் என்பதாலும் எழுதப்படவில்லை என்பதை மிகுந்த பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே மன்னித்தருள்க. அவங்களுக்கு பிடிக்கவில்லை எனில் அடியேன் மூச்சு கூட விடுவதில்லை. உண்மையாகத் தான் சொல்கிறேன். மூச்சுக்கூட விடமாட்டேன்.

என்னிடம் சொத்து இருக்கிறதா? உறவினர்கள் உள்ளனரா? பணம் சம்பாதிப்பாரா? என்றெல்லாம் அவர் யோசிக்கவே இல்லை. வருகிறாயா? என்றேன் வந்து விட்டார். எதிர்கால வாழ்க்கையின் போக்கு எனக்குப் புரியாதகாலம் அப்பருவம். மனித மனங்களில் மண்டிக்கிடக்கும் இருட்பகுதிகளை உணர்ந்து கொள்ளும் பக்குவம் இல்லாத பருவத்தில் இருந்தேன். சினிமா தான் வாழ்க்கை போலும் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது எதார்த்தம் அல்ல என்று இருவரும் வாழ்க்கையில் இணைந்த பிறகு, என் முன்னே வந்து நின்றது என் வாழ்க்கையும் என் சூழலும்.

ஒரு உறவினர் வீட்டில் தங்கி இருந்த போது, ‘உங்கள் இருவருக்கும் சமைத்துப் போட காய்கறி இல்லை’ என்றார்கள். மறு நாள் அங்கிருந்து சென்று விட்டோம். மற்றொரு உறவினர் வீட்டில் இருந்த போது ’எப்போது நீங்கள் ஊருக்குப் போகப்போகின்றீர்கள்?’ என்று கேட்டார்கள். அழைத்துக் கொண்டு வந்து விட்டேன். இவ்வளவுக்கும் ஊரில் பெரும் சொத்துக்காரன் என்ற பெயர் எனக்குண்டு. அது என் அப்பன் வழி வந்த பெயர். அந்தச் சொத்துக்குச் சொந்தக்காரர் என் அப்பன்.

அவருக்கு நான் எந்த வித பிரதி பிரயோஜனும் செய்யவில்லை. என் சிறிய வயதில் மறைந்து போனார். அவர் என்னைப் பெற்றது முதல் ஒரு நாள் கூட ஒரு மிட்டாய் கூட வாங்கித் தரவில்லை. அதற்கு அவரும் நானும் காரணம் அல்ல. விதிதான் காரணம். இன்னுமொன்றைச் சொல்ல வேண்டும். நான் என் அப்பாவை, ‘அப்பா!” என்று அழைத்தது கூட இல்லை. எனக்கும் என் தகப்பனுக்குமான உறவு என்பது அவரின் இனிஷியல் என் பெயரின் முன்னால் இருக்கிறது என்பது மட்டும்தான். அவருக்கு பிள்ளையாகையால் கொள்ளி மட்டும் போட்டேன். முடி எடுத்து காரியங்கள் செய்தேன். ராமேஸ்வரம் சென்று பித்ரு கடன் செய்தும் வருகிறேன்.

எனக்கு எல்லாமுமாக இருந்தது என் அம்மாவும், அக்காக்களும், மாமாவும், தாத்தாவும் தான். எனக்கு அப்பன் நினைவு வரும்படி என்னை அவர்கள் வளர்க்கவே இல்லை. அம்மா, அக்காக்கள் இவர்களைத் தவிர வேறு எந்த உறவும் எனக்குத் தெரியாதபடி உள்ளங்கைக்குள் வைத்து வளர்த்தார்கள். என் அப்பன் இடத்தில் என் தாய் மாமா இருந்தார். என்னை அவர் மிகச்சரியானவனாக வளர்த்தார். எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கினை அவர் கற்றுக் கொடுத்தார். அதன் பிரதிபலன் நான் இப்போது செய்யும் செயல்களில் மிளிரும். எனது எந்தச் செயல்களானாலும் சரி என் சிந்தனையும், செயலும் அவரைப் போன்றே இருக்கும். 

அது மட்டுமல்ல அவர் எனக்கு கொடுத்தது அவரின் ஹை பிளட் பிரஷரையும் கூடத்தான். பத்து வருடங்களுக்கு முன்பு பி.எஸ்.ஜி ஹாஸ்பிட்டலில் பிரஷர் அதிகமாகி பெட்டில் இருந்த போது டாக்டர் என்னிடம், ”உங்கள் தாய்மாமாவுக்கு  பிரஷர் இருக்கிறதா?” என்று கேட்ட போதுதான் எனக்கு இது மாமன் வழியே  டி.என்.ஏ கொண்டு வரும் சீர் எனப் புரிந்தது.

என்னைப் பொறுத்தவரை என் வாழ்க்கை என்பது யாராலோ ஒழுங்குச் செய்யப்பட்டு நடத்தப்படுகிறதோ என்று எனக்கு அடிக்கடித் தோன்றும். அதற்கு பல காரணங்களும் உண்டு. 

கரூரில் ஒரு ஜோசியக்காரர் ”இன்னும் பத்தே நாளில் நீ யாரோ ஒரு பெண்ணுக்குத் தாலி கட்டியிருப்பாய்” என்றார். “போய்யா, நீயும் உன் ஜோசியமும்” என்றுச் சொல்லி விட்டு வந்தேன். பத்தாம் நாளில் நான் கணவனானேன். 

இப்படித்தான் கடந்த வாரம் சிங்காநல்லூர் காய்கறி மார்க்கெட்டுக்குச் சென்று திரும்பிய போது ”ஏன் இன்னும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரவில்லை என்று யாரோ காதில் சொன்னது போலத் தோன்றியது. அவங்களும் திடீரென பீளமேடு  கோவிலுக்குப் போய் வரலாமா?” என்று கேட்க திடுக்கிட்டது. 

கோவிலுக்குச் சென்று அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தேன். கூட்டமாக பீளமேடு ஆஞ்சநேயரைத் தரிசித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு அவரின் தலை மட்டுமே தெரிந்தது. முழுமையுமாக பார்க்கணுமே என நினைத்தேன். அங்கிருந்த அர்ச்சகர் மைக்கை எடுத்து, “பகவானின் காலடியில் அமர்ந்து பிரார்த்திப்பதுதான் ஆகச் சரி” எனச் சொல்ல அனைவரும் அமர, ஆஞ்சனேயர் முழு உருவமாக நின்று கொண்டிருந்தார். அசந்தே போனேன்.

இப்படியான வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை தந்தவர் எனது மனைவி. ஒன்றுமற்ற வாழ்வில் வாழ ஒரு காரணமானவராய் அவரிருக்கிறார்.  தேதி பார்க்கவில்லை, ஊரை அழைக்கவில்லை, உற்றாரும் இல்லை, உறவினரும் இல்லை. சடங்குகள் செய்யவில்லை, எந்தச் சம்பிரதாயமும் நடக்கவில்லை. திருமணம் செய்தோம். வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த வாழ்க்கைக்கு ஒரே ஒரு காரணம் அவரே!

இப்பதிவு எழுத வேறொரு காரணம் உண்டு.

எனது உறவினர்களில் ஒருவரின் வாழ்க்கைச் சம்பவம் இது. நல்ல தொழில், நாகரீகம் கலந்த டவுன் வாழ்க்கை. ஒரே பையன் அவர். வீடு, வாசல், செல்வம் அனைத்தும் உண்டு. அவர் உரக்கப் பேசி எவரும் பார்த்ததில்லை. நாசூக்கானவர். இவருக்கு என் உறவுப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர். அப்பெண் அக்மார்க் கிராமத்துப் பெண். சொத்து பத்துக்கள் நிறைய இருந்தாலும் அது பற்றிய திமிர்த்தனம் இல்லாதவர். இருவரின் வாழ்க்கையும் சுகமாகச் சென்றது. குழந்தைகள் இருவர். தாலாட்டி, சீராட்டி வளர்த்தனர். இதற்கிடையில் அவர் தன் ஃபாக்டரியில் வேலை செய்த ஒரு பெண்ணுடன் காதல் கொண்டார். அரசல் புரசலாக அனைவருக்கும் தெரிய வர, பெண்ணின் தகப்பனாரும், தாயாரும் பெண்ணை அழைத்துச் சென்று விடலாம் என எண்ணிக் கொண்டிருந்தனர். 

இந்த நேரத்தில் அந்தப் பெண் தன் கணவர் காதல் கொண்ட ஏழைப்பெண்ணுடன் தன் கணவரைத் திருமணம் செய்து வைத்து தன் வீட்டுக்கே அழைத்து வந்து விட்டார். அதிர்ந்தனர் உறவினர்கள். ஆனால் அந்தக் கிராமத்துப் பெண் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. ’அவர் விரும்பினார், கல்யாணம் கட்டி வைத்து விட்டேன்’ என்பதோடு சரி. இரண்டு பெண்களும் ஒரே வீட்டில் தான் வாழ்கின்றனர். இருவருக்கும் குழந்தைகள் இருக்கின்றனர். சண்டை, சச்சரவுகள் இல்லாத வாழ்க்கை. அக்கம்பக்கத்தார்கள் அசந்து போய் கிடக்கின்றனர்.

ஒரு சாதாரண படித்த பெண்ணால் இதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. உடனடி டைவோர்ஸ்தான். விவாகரத்துக்குப் பிறகு முடிவு என்ன? குழந்தைகளுடன் அப்பெண் தனியாளாக நிற்க வேண்டி வரும். அதுமட்டுமா? ஊரார் பேசும் இழிச்சொற்கள் வேறு. எப்படி இருந்தாலும் ஒரு நாள் குழந்தைகள் அப்பனைத் தேடிச் செல்லத்தான் செய்யும். கடைசி வரை தனியாக வாழ்ந்து சீரழிவதை விட சகித்துக் கொள்வதே சரி என்ற அப்பெண் எடுத்து முடிவு குறைந்த காலம் உள்ள வாழ்க்கைக்கு சரியானது.

எல்லாப் பெண்களுக்கும் தன் கணவன் உத்தமன் என்ற நினைப்பிலும், எல்லா ஆண்களுக்கு தன் மனைவி உத்தமி என்ற நினைப்பிலும் தான் இந்த வாழ்க்கையே சென்று கொண்டிருக்கிறது. தற்போதுதான் கிரஸ் என்று பெண்கள் தங்களின் காதல்களை வெளிப்படுத்துகின்றார்கள். ஒரு காலத்தில் பெண்கள் ஆதிக்கம் கொண்ட குடும்பமாக இருந்த வாழ்க்கை, ஆணாதிக்கம் நிறைந்த குடும்பமாக மாறி உள்ளது. காலம் மாற மாற இப்போது மீண்டும் பெண்களின் ஆதிக்கம் நிறைந்த குடும்பமாக மாறிக் கொண்டிருக்கிறது. அது எதிர்காலத்தில் என்னென்ன வெடிகுண்டுகளை வீச இருக்கின்றனவோ தெரியவில்லை.

பெண்மையின் தத்துவம் எப்போதும் தியாகம் கொண்டதாகவே இருக்கின்றது. அவர்கள் எப்போது தியாகத்தன்மையை விட ஆரம்பிக்கின்றார்களோ அப்போது சமூகமும், உலகமும் சீரழிய ஆரம்பித்து விடும்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.