குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, March 27, 2009

அறிஞர் அண்ணாவின் பேச்சு - ஒலி வடிவில்

அண்ணாவும், அவரின் பேச்சும் என்னை வசீகரித்த ஒன்று. ஏன் என்று இந்த பேச்சினைக் கேட்டு விட்டு முடிவு செய்யுங்கள். மக்கள்..மக்கள்... மக்கள்... என்ன ஒரு தெளிவான பேச்சு. அழகான தமிழில் அவரின் கோர்வையான பேச்சு கேட்கக் கேட்க இன்பம். நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

Thursday, March 26, 2009

பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல் நீ நடப்பது நாட்டியமே

என் மகள் நிவேதிதாவிற்காக இந்தப் பாடலும் படங்களும். பாடல் வரிகளும், படமும் கீழே. வாழ்க்கையின் அர்த்தம் குழந்தைகள். அந்தக் குழந்தைகளின் சுட்டிச் செயல்கள் வெப்பப் பாலையில் தகிக்கும் வெயிலில் கிடைக்கும் நிழல் போன்ற சுகத்தை தர வல்லவை. அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியக்கூடிய உண்மை. காதலுக்கும் மேலான ஒன்று என்றால் அது குழந்தைகள்.










பூப்போலே உன் புன்னைகையில்
பொன் உலகினைக் கண்டேனம்மா
பூப்போலே உன் புன்னைகையில்
பொன் உலகினைக் கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே

பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல்
நீ நடப்பது நாட்டியமே
மூங்கிலிலே வரும் சங்கீதம் போல
நீ சிரிப்பது காவியமே
அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு
முத்துகள் சூட்டி நான் காணுவேன்
வா மகளே என்னைப் பார் மகளே
என் உயிரின் ஒளி நீயே
பூப்போலே உன் புன்னைகையில்
பொன் உலகினைக் கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே

அம்மாவென்று வரும் கன்றுக்குட்டி
அது தாய்மையைக் கொண்டாடுது
குக்கூவென்று வரும் சின்னக்குயில்
தன் குழந்தைக்கு சோறூட்டுது
நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது
கண்ணோடு நேசம் ஆறாகுமே
நீயின்றி என்றும் நானில்லையே
என் உயிரின் ஒளி நீயே
பூப்போலே உன் புன்னைகையில்
பொன் உலகினைக் கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே



நன்றி : பாடலை எழுதியவர், இசையமைத்தவர், இயக்கியவர் மற்றும் தயாரிப்பாளர்

காயத்ரியின் மியூசிக் ஃபார் ரிலாக்‌சேஷன் - ஆன்லைனில்

காலை நேரங்களில் கேட்கக்கூடிய இசைத் தொகுப்பு. கேட்டு விட்டு பதிவிடுங்கள்.

காலை நேரத்து ரிலாக்சேசனுக்கு

நன்றி : ராகா

Monday, March 23, 2009

ஆசையே முன்னேற்றத்துக்கு அறிகுறி

ஆன்மீகம் சொல்கிறது “ஆசையே அழிவுக்கு காரணம்”. ஆசை இல்லையென்றால் வாழ்க்கையில் முன்னேற்றம் எப்படி ஏற்படும்.ஆசை இல்லாத மனிதன் பிணமல்லவா?

மீண்டும் ஆன்மீகம் சொல்கிறது "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து“. போதுமென்றால் வாழ்க்கையில் சுவாரசியமே இன்றிப் போகும் ஆபத்து இருக்கிறது அல்லவா?

”உன்னை விட தாழ்ந்தவர்களை எண்ணிப் பார். நீ இப்போது இருக்குமிடம் தெரியும்.ஆகையால் பேராசைப்படாதே” என்கிறது ஆன்மீகம்.

மேற்கண்ட ஆன்மீக மேற்கோள்கள் மனிதர்களையும், அவர்களின் வளர்ச்சியையும் தடை செய்ய ஒரு காரணமாயிருக்கின்றன என்பது என் எண்ணம். இன்றைய கால கட்டத்தில் இந்தப் பழம் குப்பைகள் உதவாது. தூக்கி தூர எறிந்து விட வேண்டும். நவீன காலம் இது.

ஆசையே வாழ்கைக்கு அச்சாணி. போதவே போதாது என்பது மனிதனுக்கு பொன் தரும் மருந்து. உன்னை விட உயர்ந்து இருப்போரைப் பார் அப்போது தான் நீ இருக்கும் தாழ்ந்த இடம் தெரியும் என்பன போன்ற வாக்கியங்கள் தான் மனிதனின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும்.

ஆயிரம் கோடி ரூபாயைக் குவித்து வைத்திருக்கும் தொழிலதிபரிடம் திருப்தி அடைந்து விட்டீர்களா என்று கேட்டால் கேட்பவரைப் பார்த்து சிரிப்பார்.

மனிதர்களின் மீது அன்புவைத்திருக்கும் தொழிலதிபர் என்ன சொல்லுவார் தெரியுமா ? என்னால் இன்னும் ஆயிரமாயிரம் குடும்பங்கள் வாழ வேண்டும். மீண்டும் அடுத்த இலக்கு. அடுத்த சாதனை என்றுச் சொல்லுவார்.

ஆகையால் நண்பர்களே, ஆசைப்பட வேண்டும். அத்தனைக்கும் ஆசைப்பட வேண்டும். உலகத்தையே கைக்குள் கொண்டு வர ஆசைப்பட வேண்டும். பண மழையில் குளிக்க வேண்டும். உன்னால் உலகம் உய்விக்க வேண்டும். உன் பெயரைச் சொல்லியே உலகம் விழிக்க வேண்டும். போதாது போதாது இன்னும் இன்னும் என்றே உன் இதயம் சத்தமிட வேண்டும். உன்னை விட பணத்திலும் செல்வாக்கிலும் உயர்ந்தோரின் மீது கண் பதிக்க வேண்டும். அதோ அவர்கள் உட்கார்ந்திருக்கும் சிம்மாசனத்திற்கிடையே உனக்கும் ஒரு சிம்மாசனமிருக்கிறது பார். உலகை வழி நடத்த உன் அறிவை வளர்த்துக் கொள். உனக்கான இடம் உன்னைத் தேடி வரும். வந்தே தீரும்.

விடாதே... இலைக்கை அடையும் வரை விடாதே...

Wednesday, March 18, 2009

எந்தக் காது கேக்காது !

மாலை நேரம். மனைவி கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தாள். அடியேன் கணிணியில் பிசியாக இருந்தேன். டோரா மற்றும் புஜ்ஜியின் பயணங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் அம்மு தனது அண்ணாவுடன்.

அம்மு எனது ரோஜாப்பூ மகள். அவள் நடந்தால் சாரல், சிரித்தால் தென்றல் என்று அவள் என்ன செய்தாலும் இன்பம் இன்பம் தான். குழந்தைகள் தான் வாழ்க்கையினை அர்த்தப் படுத்துகிறார்கள் என்பதினை அடிக்கடி அம்மு உணர்த்துவாள். அம்முவின் சில கேள்விகள் நினைக்க நினைக்க சந்தோஷம் தருபவை.

சென்னையிலிருந்து அம்முவின் சித்தி அழைத்திருந்தார்கள். அம்மு என்ன செய்கிறார் என்று கேட்டிருப்பார் போல. கிரைண்டரில் அரைத்துக் கொண்டிருந்த உளுந்த மாவினை சிறு கிண்ணியில் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிக்கிறார் என்று அம்முவின் அம்மா சொல்லி இருக்கிறார். மாவு சாப்பிட்டால் காது கேட்காதாம் என்று சித்தி சொல்கிறார் ஆகையால் சாப்பிடாதே என்று அம்முவிடம் சொல்லியிருக்கிறார் மனைவி.

அதற்கு அம்முவின் கேள்வி” எந்தக் காது கேக்காது. இந்தக் காதா அந்தக் காதா ?”. இதற்கு என்னவென்று பதில் சொல்வதென்று திகைத்து பின்னர் இரண்டு காதுகளும் கேட்காதாம் அம்மு என்று சொல்லி இருக்கிறார்.

Wednesday, March 11, 2009

வாழ்க்கை என்பது.... !

இதுவரை எத்தனையோ பிளாக்குகள் படித்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. அதையும் மீறி என் மனதுக்குள் புகுந்து கொண்ட பிளாக் இது. இந்த எழுத்தாளர் தொடர்ந்து எழுதாமை என்னை நெருப்புக்குள் தள்ளுவது போல இருக்கிறது. எனது வேண்டுகோளை ஏற்பாரா ?

பிளாக்கின் முகவரி : இரு கண்கள் போதாது !
http://raasaiya.wordpress.com

அவரின் பிளாக்கில் இருந்து சில கவிதைகள் கீழே.. அனுமதித்தே ஆக வேண்டும் திரு ராசய்யா அவர்களே... தவறிருந்தால் மன்னித்து அருளவும். நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் வெளிச்சம் காட்டுவதில் தவறேதும் இல்லையே ராசய்யா...
நன்றி : ராசய்யா.

என் அப்பாவிற்கு : எழுதியவர் திரு. ராசய்யா
--------------------------------------------------
கரிசலாய் இருக்கும் எனை
விதை நிலமென நினைத்து
விட்டுப்போன என் அப்பாவிற்கு,

ஆங்கிலப் பள்ளியில் சேர்த்து
ஆனந்தப்பட்டீர்கள்
ஒவ்வொரு காலையும்
என் காலனிகளை
பளபளப்பாக்கி
பரவசப்பட்டீர்கள்

பட்டம் வாங்கியபோது என்
பரம்பரையில் முதல்
பட்டதாரி என் மகனென
பார்த்தவரிடமெலாம்
சொல்லித்திரிந்தீர்கள்

வேலை தேடி
சென்னை சென்ற போது
சீமைக்கே அனுப்பியதாய்
சிலாகித்துக் கொண்டீர்கள்

வேலைக்கு சேர்ந்தும் என்
வீட்டுச் செலவிற்கு
பணம் அனுப்பினீர்கள்

இன்று,
நல்ல வேலை
நல்ல சம்பளம்
சொன்ன போதே
பிறவிப்பயனையடைந்தேன் என்றீர்கள்

நடக்கத்தானே கற்றுக்கொண்டேன்
வாழத் தெரிந்து கொண்டேன்
என நினைத்து விட்டுப்போனீர்களா?


மேலும் கவிதைகளையும் அவரது பிளாக்கினையும் படிக்க இவ்விடத்தில் சொடுக்கவும்

என்ன தேசமோ ?

தேர்தல் வந்து விட்டது. தொகுதிப் பங்கீட்டில் அடித்துக் கொள்கிறார்கள் அரசியல்வாதிகள். இலங்கைத் தமிழர்களின் கல்லறையின் மீது ஆட்சி அமைக்கத் துடிக்கின்றார்கள் அரசியல்வாதிகள். நீயா நானா என்று போட்டி போடுகிறார்கள். இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்படுகிறார்கள். தமிழக அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதத்தில் சிக்கி சின்னா பின்னப்படுகிறது இலங்கைத் தமிழச்சிகளின் கற்பு. பச்சிளம் குழந்தைகளையும் விடாமல் நெருப்பு மழை பொழிந்து கொன்று வருகிறது இலங்கை. வேடிக்கை பார்க்கிறது தமிழகம். தன் மான உணர்ச்சியுடையோர் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல், நெஞ்சுக்குள் ரத்தம் வடிய வடிய வேதனையோடு நாட்களைக் கடத்துகின்றார்கள் உண்மைத் தமிழர்கள்.

இந்தப் பாடலைக் கேட்டு வையுங்கள். மனம் சற்று ஆறுதல் பெறும்.

என்ன தேசமோ?
இது என்ன தேசமோ?
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ?
தர்மம் தூங்கிப் போகுமோ?
நீதி வெல்லுமோ?
இங்கு வேதமாகுமோ ?
என்ன தேசமோ? இது என்ன தேசமோ?

இன்பம் துன்பம் என்பது
இரவு பகலைப் போன்றது
காலம் நாளை மாறலாம்
காயம் எல்லாம் மாறலாம்
காலம் நாளை மாறலாம்
காயம் எல்லாம் மாறலாம்
சோகமென்ன தோழனே
சூழ்ச்சி வெல்வாய் வீரனே
எதிர்த்து நின்று போரிடு
இன்று ஓய்வெடு
நீ இன்று ஓய்வெடு
என்ன தேசமோ?
இது என்ன தேசமோ?

பிறக்கும் போதும் பேரில்லை
இறக்கும் போதும் பேரில்லை
இடையில் தானே குழப்பங்கள்
வாழ்க்கையோடு வழக்குகள்
இடையில் தானே குழப்பங்கள்
வாழ்க்கையோடு வழக்குகள்
ஜெயிக்கபோகும் மானிடா
மயக்கம் இங்கே ஏனடா
உறுதியோடு கேளடா
உண்மை நீயடா
ஓ... உண்மை நீயடா

என்ன தேசமோ?
இது என்ன தேசமோ?
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ?
தர்மம் தூங்கிப் போகுமோ?
நீதி வெல்லுமோ?
இங்கு வேதமாகுமோ ?
என்ன தேசமோ? இது என்ன தேசமோ?

Sunday, March 8, 2009

கோயம்பேட்டில் அனாதைச் சிறுவர்களுடன் - 1

லாரிக்குள் டிரைவருக்கு அருகில் அமர்ந்திருந்தேன். லாரி டிரைவர் குசும்பு பிடித்தவன். எதிரே வரும் கார்களை இடிப்பது போல லாரியைச் செலுத்தினான். “வேல்முருகா எதிரே வரும் காருக்கு நன்றாகத்தான் வழி விடேன்” என்ற போது, “சார், நாம பெரிய வண்டியில் இருக்கிறோம் அவன் தான் பயந்து ஒதுங்கிப் போகனும்” என்றான். ”அடப்பாவி பயலே, நீ செய்யுறது சரியில்லை“ என்று கோபமாகக் முறைக்க வேறு வழி இன்றி எதிரே கார்கள் வந்தால் நன்கு ஒதுங்கி வழி விட்டான்.

விடிகாலை நான்கு மணிக்கு கரூரிலிருந்து கிளம்பி சென்னைக் கோயம்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தது லாரி. பின்னால் மூடிய லாரிக்குள் பத்து அனாதைச் சிறுவர்களும், மூன்று சக்கர சைக்கிளும், பதினைந்து பேருக்கு இரண்டு மாதம் தாங்கும் அளவுக்கு சமையல் பொருட்களும் இருந்தன. காலைச் சாப்பாடு புளிச்சாதம், தயிர்சாதம். மதியம் ஹோட்டலில் சாப்பிட்டோம். வழியில் நுங்கு, டீ, வடை, பஜ்ஜி என்று சிறுவர்களுடன் சாப்பிட்டேன். பத்து சிறுவர்களும் மாறி மாறி லாரியின் முன்புறம் வந்து என்னுடன் ஒட்டிக் கொள்வார்கள். சென்னையைப் பார்ப்பது என்பது அவர்கள் வாழ்வில் நடக்கப் போகிற அற்புத சம்பவம். அதற்கு காரணமான கம்ப்யூட்டர் வாத்தியாராகிய என்மீது கொள்ளைப் பிரியம் கொண்டார்கள். அதன் பலன் என்னவென்றால் அவர்கள் சாப்பிடுகிறார்களோ என்னவோ, என்னை அவர்கள் கவனித்த விதம் பற்றி வார்த்தைகளில் வடிக்க இயலாது.

இவ்விடத்தில் சற்று நிற்க :

அனாதைச் சிறுவர்கள் என்று எழுதிய போது மனதுக்குள் வந்து சென்ற வரிகளும், கவிதையும் கீழே.

”என்னுடைய அம்மா ஒரு நாள் ராத்திரி என்னை கூப்பிட்டு சுவர்ல விளக்கோட நிழல் ஊர்ந்து போறதே அது சுவத்தில ஏன் படியுறதேயில்லைனு கேட்டா. எனக்கு அப்போ விபரம் புரியாத வயசு. பதில் சொல்ல தெரியலை. அவளாகவே நாமளும் அப்படிதான் என்று சொன்னாள். எனக்கு பயமா இருந்துச்சி. ” எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் நகுலனின் பத்துக் கவிதைகள் கட்டுரையில் இருந்து.

இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம் - நகுலனின் கவிதை




சரி விஷயத்துக்கு வருகிறேன். இனி...

சரியாக நான்கு மணிக்கு கோயம்பேட்டின் பின்புறமிருக்கும் ராமகிருஷ்ண தபோவனத்தை அடைந்தோம். பொறுப்புச் சாமி ஓடிவந்து வரவேற்றார். பிரதர் ஒருவரும் வந்து வரவேற்றார். சுற்றி வர முற்செடிகள். ஒத்தையடிப்பாதை. நீண்ட கூரைக் கொட்டகைகள் இரண்டு. அதில் ஒன்றில் தங்கும் அறைகள் மூன்று இருந்தன. மற்றொன்றில் பூஜை அறை, சமையல் கிடங்கு மற்றும் சமையல் அறையுடன் கூடிய சாப்பாட்டுக் கூடம். தண்ணீர் கிடையாது. சைக்கிளில் சென்று பிடித்து வரவேண்டும். கரண்ட் இல்லை. வேறொரு இடத்தில் ஆஸ்ரமத்தின் பள்ளி கட்டிட வேலைக்கு போட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் பிடித்து சமையல், பாத்ரூம் எல்லாவற்றுக்கும் பயன்படுத்த வேண்டும். பாம்பு, பூரான், திருடர்கள் மற்றும் இன்னபிற தொல்லைகள் அதிகம். கொசுக்கள் ஈக்கள் போல மொய்க்கும். இரவில் சுவர்க்கோழிகள் சத்தம் காதைக் பிளக்கும். இரவில் மண்ணெண்னெய் விளக்கு வெளிச்சம். இனிமேல் இரண்டு மாதங்கள் இங்கு இருக்க வேண்டிய முக்கியமான சூழ்நிலை.

பத்துக்கு பதினைந்து அடியில், அறையோடு கூடிய பாத்ரூம், ஏர்கூலர், பேன், விடிகாலையில் நெல்லிக்காய் ஜூஸ் அல்லது வில்வ இலை ஜூஸ்( எனக்கும் பெரிய சாமிக்கும் மட்டும்), காலையில் டீ அல்லது காஃபி, ஏழு மணிக்கு டிஃபன், சரியாக பனிரெண்டு மணிக்கு சாப்பாடு, மாலை நான்கு மணிக்கு காஃபியுடன் சிற்றுண்டி, இரவு ஏழு மணிக்கு டிஃபன், இரவில் பழ ஜூஸ் அல்லது சுண்டக் காய்ச்சிய பால், கல்லூரிக்கு சென்று வர காண்டசா கிளாசிக் கார் என்று வாழ்ந்தவன் மேற்படி சொன்ன இடத்தில் சென்று தங்க வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது?

Thursday, March 5, 2009

தேர்தல் வந்து விட்டது !



இனிமேல் செய்தி தாள்களில் தேர்தல் விதிமுறை மீறல் என்ற தலைப்பினை அடிக்கடிக் காணலாம். செய்தி தாள்களுக்கு விளம்பர வருமானம் அதிகமாகும். மீடியாக்கள் கேள்விகளாய் கேட்டுக் கொண்டிருப்பார்கள். எக்ஸ்குளூசிவ் பேட்டி என்று உடம்பு அதிரும் இசையில் விளம்பரங்கள் கொடி கட்டிப் பறக்கும்.

கட்சியின் கொள்கைகள், கூட்டணி தர்மம் என்ற வார்த்தகளில் காணாமல் போய் விடும். நேற்றைய எதிரிகள் இன்றைய நண்பர்கள் ஆவார்கள். நண்பர்கள் எதிரிகள் ஆவார்கள்.

விவாதங்கள் தூள் பறக்கும். இலங்கைப் பிரச்சினை தமிழ் நாட்டில் காணாமல் போய் விடும்.

நேற்று டைம்ஸ் நவ்வில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பேட்டியை ஒளிபரப்பினார்கள். பேட்டி எடுத்தவர் மிஸ்டர் சிதம்பரமென்றே அழைத்தார். ஆச்சர்யம்.

பாகிஸ்தானுக்கு எதிராக புஜ பல பராக்கிரமத்தை காட்டக்கூடாது. தீவிரவாதம் ஒரு மைண்ட் கேம். அதை மூளையால் தான் வெல்ல வேண்டுமென்றுச் சொன்னார் சிதம்பரம்.

இந்தியாவின் ராஜ தந்திரம் சரிதான். ப.சிதம்பரத்தின் குரல் ஆளுமைத்தன்மை வாய்ந்தது. வெகு அலட்டலான குரலில் நறுக்கு தெறித்த வார்த்தகளில் அவர் பேசியதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது. காந்தக் குரலோன்.

இந்தத் தேர்தலின் முடிவில் ஆட்சி அமைக்க, குதிரை பேரங்கள் நடக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம் தென்படுகிறது. பார்ப்போம்.

Wednesday, March 4, 2009

கவனமாய் இருங்கள்

எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.
பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”
-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

Sunday, March 1, 2009

கருத்துச் சுதந்திரம் எங்கே




நீண்ட நாட்களாக பதிவு ஏதும் எழுத இயலவில்லை. காரணம் அதிகமான வேலைப்பளு. இனிமேல் ஏதாவது எழுதலாமென்றிருந்த வேலையில் இணைய தளத்தின் சுதந்திரத்துக்கும் வேட்டு வைத்து விட்டார்கள். அது என்னவென்று சொல்லவே பயமாக இருக்கிறது. ஜூனியர் விகடனில் நீதிமன்றம், பிளாக் பற்றிய கட்டுரை ஒன்று வந்துள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்கிற போக்கு இந்திய ஜன நாயகத்துக்கு வேட்டு வைக்கும் செயல். கேள்வியே கேட்க்கக்கூடாது என்கின்றன சட்டத்தைப் பாதுக்காக்கும் அமைப்புகள். பொதுமக்கள் நீதியின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை குலைந்து வருகிறது.

இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் நீதி அமைப்புகளாலும், அரசியல்வாதிகளாலும், பெரும் பணக்காரர்களாலும் அழிக்கப்பட்டு வருகின்றன என்பது வேதனை தரும் உண்மை.

சற்று ஆசுவாசப்படுத்த இந்தப் பாட்டை பாருங்கள். இது போன்ற சூழ் நிலைகளில் தான் இவ்வகைப் பாடல்களும், இசையும் மனிதனுக்கு ஆறுதல் தரும் போல. தவறுதான். வேறு வழி இல்லை.

நீங்களும் ஒரு பார்வை பார்த்து வையுங்கள். பெண்கள் அழகானவர்கள். அற்புதமானவர்கள்.