குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, August 31, 2008

தஞ்சாவூரென்றாலே குளிர்ச்சி தான் போலும் !

அடியேன் தஞ்சாவூர்காரன். எப்போதும் பசுமையும், தண்ணீரும், திருவிழாக்களும், காதணி விழாக்களும், திருமண விருந்துகளும் களை கட்டும் எங்கள் தஞ்சையில். இசையும், கொண்டாட்டமும் எங்கள் ஊரின் முக்கிய அம்சங்கள். உழைப்பு... உழைப்பு.... உறவுகள்... விழாக்கள்... இது தான் தஞ்சை மாவட்டம்.

ஆனால் பாருங்க, இந்தப் பாட்டில் தஞ்சாவூர் பெயர் வர, என்னவென்று எட்டிப் பார்த்தால்... ஆகா.. ஆகா.. இளமை துள்ளி விளையாடுகிறது பாருங்கள் இங்கே.... பாடல் வரிகளும் எங்க ஊர்க்காரனுங்க பேச்சுலே அசத்தற மாதிரி வேற இருக்கு. பச்சைப் பசேல்னு இருக்கு பாருங்க...

பார்த்து ரசிங்க .......... முடிந்தால் தஞ்சாவூர் பக்கம் ஒரு தடவை வந்து பாருங்க....

Saturday, August 30, 2008

கேரளா, கஞ்சிக்கோட்டில் கோக், பெப்ஸிக்கெதிரான போராட்டத்தில் சாரு நிவேதிதாவுடன் !



( சாரு நிவேதிதாவுடன் என் மகன் ரித்திக் நந்தா )




மணி ஒன்பது முப்பது இருக்கும். சாருவிடம் இருந்து போன். நாளைக் காலையில் கேரளா செல்கிறேன் என்று சொல்லியிருந்தது நினைவுக்கு வர “சார் வந்துட்டீங்களா“ என்றேன்.

“இரயிலைத் தவற விட்டு விட்டேன் தங்கம். அதனால் காலையில் ஃபிளைட்டைப் பிடித்து அரை மணி நேரமாக வந்து நின்று கொண்டிருக்கிறேன் கார் வருகிறது என்று சொன்னார்கள். ஆனால் இன்னும் வரவில்லை “ என்று சொன்னார்.

“அப்படியா “ என்று கேட்டுக் கொண்டிருக்கும் போது மற்றொரு அழைப்பு வர, அந்த அழைப்பினைத் ஏற்று பேச சாருவின் வாசகர் ஒருவர் என்னைப் பார்க்க வருவதற்கு வீட்டுக்கு வழி கேட்டார். வழி சொல்லி முடித்தவுடன் சாருவிடமிருந்து மீண்டும் ஒரு அழைப்பு.

” தங்கம் கார் இன்னும் வரவில்லை” என்றார்.

“சார் ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டுமா “ என்றேன்.

“ தங்கம், நான் எங்கிருக்கிறேன் என்று நினைக்கிறீர்கள்” என்று கேட்க, ” கேரளாவில்தானே “ என்று நான் கேட்க, “இல்லை தங்கம்..கோவை ஏர்போர்ட்டில் நிற்கிறேன் தங்கம் “ என்று சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

நம்ம ஓட்டை வண்டியில சாருவை ஏற்றிக் கொண்டு வந்தால் சாரு மறு ஜென்மத்திலும் பைக் சவாரியை மறந்து விடுவாரே என்று எண்ணிக் கொண்டிருந்த போது சாருவின் வாசகரின் கார், வீட்டின் வாசல் முன்பு வந்து நின்றது. சாருவின் வாசகர் திரு சிவா வீட்டின் முன்பு காரை நிறுத்தி லேப்டாப் மற்றும் சில பொருட்களை துணைவியாரிடம் கொடுத்துக் கொண்டிருக்க அவரிடம்,

“சார், வாங்க போலாம், சாரு ஏர்போர்ட்டில் நிற்கிறார் “ என்று சொல்ல அவரும் “ஆகா , ஆகா... “ என்றபடி காரை உயிர்பித்தார். பறந்தது கோவை ஏர்போர்ட்டை நோக்கி கார்.

”சரியான பசி. அதனால் ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்து இங்கு சாப்பிட்டேன்” என்றார் சாரு. அப்போது மணி 10.50.

அவரை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். எனது துணைவியாரும் சிவாவும் கோழிக் கடைக்குச் சென்று நாட்டுக்கோழிக் கறியினை வாங்கிக் கொண்டு வந்தனர். அதற்கிடையில் லேப்டாப்புக்குத் தேவையான சாஃப்ட்வேர்களை இணைத்து இயக்கும் சில வழி முறைகளைச் சாருவுக்குச் சொல்லித் தந்தேன்.

இடையில் கேரளாவில் இருந்து போன் வந்தது. நண்பர்களுடன் சரியாக மூன்று மணிக்கு வந்து விடுகிறேன் என்று சொன்னார்.

சிவாவும் சாருவும் சாப்பிட்டனர். என் மகள் நிவேதிதா கத்திக் கொண்டிருந்தாள். காய்ச்சல் வேறு. அத்துடன் பக்கத்து வீட்டுப் பெண் குழந்தையுடன் சண்டை. வீட்டில் ஒரே அழுகையும் சத்தமும். அவளை மடியில் போட்டுத் தட்டித் தூங்க வைத்தபடி சாப்பிட்டு முடித்தேன்.

காரில் கிளம்பினோம். காரில் செல்லும்போது கேரள முதல்வருக்கு அவர் எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது. மேடை போட்டு இருப்பார்கள். மாலை எல்லாம் போடுவார்கள் போலும். கூட்டமாக மக்கள் வேறு கூடி இருப்பார்கள். எனது வாழ்வில் முதன் முதலாக எழுத்தாளர் ஒருவர் சமூகப் பிரச்சினைக்காக அதுவும் வேறு மாநிலத்த்தில் பேசப்போகிறார் என்றும் நம்ம சாரு பேசப்போகிறாரே என்றும் எனக்குள் எதிர்பார்ப்பு கூடியபடி இருந்தது.

கஞ்சிக்கோடு. தோளில் தொங்க விட்ட பையுடன் ஒருவர் வழி மறித்தார். இன்னும் ஒரு மணி நேரமாகும் ஊர்வலம் வர என்று சொல்ல, சாருவுடன் கட்டஞ்சாயா குடித்தேன் ஊர்வலம் வந்து சேரும் இடைப்பட்ட நேரத்தில்.

இரண்டு நாட்களாக ஊர்வலத்தில் மக்கள் நடந்து வருகிறார்களாம். ஊர்வலம் கஞ்சிக்கோட்டில் இருக்கும் கோகோ கோலாவின் ஃபாக்டரி முன்பு முடிவு பெற வேண்டும். அங்கு இவர் உரை ஆற்ற வேண்டும் என்றும் சொன்னார்.

சிறிது நேரத்தில் நானூறு பேர் இருக்கும் போல. வரிசையாக கோஷமிட்டபடி ஊர்வலமாக வந்தனர். நான் காரிலேயே உட்கார்ந்து கொண்டேன்.

சாருவும், சிவாவும் சென்று விட்டனர். ஊர்வலத்தின் முன்புறம் சாலையில் நின்ற படியே ஒருவர் மைக்கில் முழங்கினார். மேடையும் இல்லை. மாலையும் இல்லை. எனக்குள் தமிழ் நாட்டின் அரசியல் மேடைகளும், போராட்டங்களும் நிழலாடின. உண்மைப்போராட்டம் அது. உணர்ச்சிப் போராட்டம் அது. தண்ணீர் கொள்ளையைத் தடுக்க, தண்ணீரைக் காப்பதற்கு போராட்டம். நாளைய சந்ததிகள் தண்ணீர் இன்றி துன்பப் படக்கூடாது என்பதற்கான போராட்டம். அமெரிக்க பகாசுர கம்பெனியினை எதிர்த்து அன்றாடம் காய்ச்சிகள் செய்யும் போராட்டம். ஏசிக்குள் அமர்ந்து கொண்டு குளுகுளுவென செல்லும் பணக்காரனுக்கும், எது நடந்தாலும் கிஞ்சித்தும் கவலைப்படாத மிடில் கிளாஸ் மக்களின் நலனுக்காக உடுத்த உடையின்றியும், சரியான உணவின்றியும் இருக்கும் ஏழை மக்களின் உணர்ச்சி மிகு போராட்டம் அங்கு நடந்தது.


அங்கு சிங்கமென கர்ஜித்தார் சாரு. அமைதியான குரல். குத்தீட்டிகள் போல கேட்பவர்களின் காதுகளையும் , நெஞ்சங்களையும் துளைத்தன அவரின் பேச்சு. ஆனால் பிரச்சினை என்னவென்றால் அவரின் உரையினைக் கேட்கக் கேட்க எனக்கு அடி வயிற்றில் புளியைக் கரைத்தது.

அட ஆமாம். அவர் பாட்டுக்கு கேரள முதல்வர் அச்சுதானந்தனை விட்டுக் கிழி கிழியென்று கிழிக்கிறார். மாத்ருபூமியில் அவர் எழுதிய கட்டுரையின் கேள்விகளுக்கு நிருபர்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் என்று முதல்வர் அச்சுதானந்தன் அவர்களை கேட்டால் ஓடி ஒளிந்து கொள்கிறார் என்று அவர் பாட்டுக்கு பேசுகிறார். விடமாட்டேன். வருவேன்... வருவேன்.. மீண்டும் மீண்டும் கேள்வி கேட்பேன்.. பதில் சொல்... பதில் சொல் என்று கர்ஜிக்கிறார். அந்த இடத்தில் என் மனதில் வீர வசனம் பேசிய சினிமா ஹீரோவெல்லாம் தூசு தூசாகிவிட்டனர். தைரியமென்றால் அப்படி ஒரு தைரியம். எதிரில் ஆளும்கட்சியின் அடியாட்களாகிய போலீஸை வைத்துக் கொண்டு முதல்வரை வாங்கு வாங்குன்னு பேசுவதற்கெல்லாம் தைரியம் வேண்டும். தமிழ் நாட்டில் ஏதாவது போலீஸ் பிரச்சினை செய்தால் ஏதாவது செய்யலாம். ஆனால் இவரோ கேரளாவில் முதல்வருக்கு எதிராகப் பேசுகிறார். ரொம்ப தைரியம் தான் இவருக்கு. அவரின் தைரியம் எனக்கு அதைரியத்தை உருவாக்கியது. மனுஷன் விடாமல் பட்டயக் கிளப்புறாரு. அனில்ங்கிறாரு. அம்பானிங்கிறாரு.. அய்யோ சாமிகளா அதையெல்லாம் இங்கு எழுதினால் அப்புறம் நமக்கு ஆப்புத்தான்.

இப்படி அவர் பேசப் பேச எனக்கு அய்யய்யோ போலீஸ்காரங்க காரைப் பார்த்துட்டு போனாங்களே. இவரு பாட்டுக்கு சிம்மம் போல கர்ஜிக்கின்றாரே கடுப்பாகி கூட்டத்துக்குள் புகுந்து லத்தியால ஒரு போடு போட்டானா என்ன பண்றது. அவர் கூட வந்து காரில படுத்துக் கிடக்கிற இவனுக்கு ரெண்டு சேர்த்துப் போடனும்னு போட்டா செத்துல போய்விடுவோம் என்று பயந்து நடுங்கிக் கொண்டிருந்தேன்.

ஒரு வழியாக பேசி முடித்தார். மீண்டும் ஊர்வலம் ஆரம்பித்தது. மைக்கில் சாரு நிவேதிதா, சாரு நிவேதிதா என்று கதறிக் கொண்டிருந்தனர். நானும் சிவாவும் காரில் ஊர்வலத்தின் பின்பாக சென்று கொண்டிருந்தோம். ஊர்வலத்தின் இடையில் சாருவை அழைத்துக் கொண்டு பெப்சிக் கம்பெனி எங்கிருக்கிறது என்று விசாரித்துக் கொண்டு சென்று பார்த்தால் கம்பெனிக்கு முன்பாக ஒரு பஸ், ஜீப் நின்று கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஐம்பது போலீசார் இருப்பார்கள் என நினைக்கிறேன். 15 அடி தூரத்தில் காரை நிறுத்த காரின் முன்புற சீட்டில் அமர்ந்திருந்த என்னையே போலீஸ்காரர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

” தங்கம், போலீஸார் எல்லோரும் உங்களையே பார்த்துக்கிட்டு இருக்காங்க “ என்று வேறு சொல்லி பயமுறுத்தினார்.

எத்தனை நேரம்தான் தைரியமா இருக்கிற மாதிரி நடிக்கிறது. சரி இன்னிக்கு பொங்கல் தான் சட்னிதான் என்று நினைத்து சகதர்மினியிடம் போனில் ”இப்படி இப்படி என்ன செய்றது” என்று கேட்டேன். இங்கே பாருங்க சாரு நம்ம வீட்டு விருந்தாளி. அவரைக் கைது செய்தாங்கன்னா நீங்களும் அவரு கூடவே போய் ஜெயில்ல இருந்துட்டு வாங்க என்று சொல்லி எரியுற நெருப்பில என்னய (எண்ணெய்) வார்த்தா. அவளுக்கு என் மேல் என்ன கோபமோ தெரியவில்லை.

ஊர்வலம் அந்த இடத்தின் முன்பு வருவதற்குள் காரை வேறு இடத்தில் நிறுத்தி விட்டு, ” சூழ்நிலை சரியில்லை தங்கம். என் செல்போனை வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது நடந்தா பதட்டப் படாதீங்க. பத்திரிக்கைகளுக்கு கூப்பிட்டுச் சொல்லுங்க, நண்பர்களிடம் சொல்லுங்க” என்று சொல்லியபடி மீண்டும் ஊர்வலத்தின் முன்புறம் சென்று கூட்டத்தில் கலந்து விட்டார்.

வெகு சூடாக பேச்சுக்குரல்களும், தள்ளு முள்ளும் நடந்தது. ஒருவர் மைக்கில் கோகோ கோலாவின் தண்ணீர் கொள்ளையை எதிர்த்து முழங்கினார். அதைத் தொடர்ந்து சாரு பேசினார். “போலீஸார் நமக்கு எதிரியில்லை. எதிரி வேறு ஆள்” என்று சொல்லி காட்டமாக பேசினார். ஆனால் நிதானத்துடன் பேசினார். அந்த இடத்தில் தேவை நிதானம். உணர்ச்சி வசப்பட்டால் லத்தி அடி நிச்சயம் தொடர்ந்து கைதும் செய்யப்படும் என்ற சூழ்நிலையிலும் வெகு ஜாக்கிரதையாகப் பேசி ஊர்வலத்தை அமைதியாக முடிவு பெற வைத்தார். தொடர்ந்த முழக்கத்தினிடையே அந்த ஊர்வலம் அமைதியாக கலைந்தது.

இதே வேறு எவராக இருந்தாலும் கொந்தளிப்பாக பேசி, மக்களின் உணர்ச்சியினைக் கிளப்பி விட்டு தடி அடி நடத்த வைத்து, கலவரம் செய்து செய்தி தாளில் செய்தியாக்கி இருப்பார்கள். ஆனால் சாரு செய்தது....???

சாருவும், சிவாவும் வர, காரில் கோவைப் பயணம் தொடர்ந்தது.

காரில் வரும்போது, “தங்கம், கோழிக்கறி பஞ்சு பஞ்சா இருந்தது சாப்பிட, குக்கரில் வேக வைப்பாரா பூங்கோதை? ” என்று கேட்டார்.

”ஆமாம் சார். இஞ்சியுடன் குக்கரில் வேக வைத்துதான் பின்னர் மசாலா சேர்ப்பார் “ என்றேன்

“ சென்னையில் நாட்டுக்கோழி சாப்பிட்டால் கட்டி கட்டியாக இருக்கும்” என்றார்.

காரின் சீட்டில் சாய்வாக படுத்துக் கொண்டேன். ஒரு மேல் நாட்டு கம்பெனி குளிர் பானம் தயாரிக்கின்றேன் என்று சொல்லி பூமியின் ஆதாரமான தண்ணீரை ராட்சதப் போர்கள் மூலம் உறிஞ்சி எடுத்து பதினைந்து லிட்டர் தண்ணீரைச் சுத்திகரித்து ஒரு பாட்டில் குளிர் பானமாக்கி விற்கிறது. தண்ணீருக்காக மாநிலங்கள் ஒவ்வொன்றும் அடித்துக் கொண்டு இருக்கின்றன. நம் மாநிலத்தின் நீர் வளம் கொள்ளை போகிறதே என்று கவனிக்காமல் ஓட்டுப் பொறுக்கிகள் இப்படி மக்களுக்கு துரோகம் செய்கிறார்களே இவர்களை யார் தான் தட்டிக் கேட்பது. கேரளத்தில் ஆட்சி செய்யும் கம்யூனிஸ்ட் காம்ரேடுகள் கார்பொரேட் ஆட்களாகி விட்டனர் போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

அந்த ஊர்வலத்தில் நடந்து வந்த ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லோரும் ஏழைகள். இரண்டு நாட்களாக நடந்து வருபவர்களை சாலையில் செல்லும் எவரும் பாரட்டவும் இல்லை. கண்டு கொள்ளவும் இல்லை. கடைக்குள் இருப்போர் சற்றுக் கவனித்துப் பார்த்தார்கள். அவ்வளவுதான்.

இப்படிப்பட்ட மக்களுக்காக ஏழைகள் நடக்கிறார்கள். காவல் துறையினரின் லத்தி அடிகளை வாங்கவும் தயாராகி போராடுகிறார்கள். மிடில்கிளாஸ் எனும் சூடு சொரனையற்ற மக்களோ எவனோ எதுக்கோ போராடுகிறான் என்ற அளவில் இருக்கின்றார்கள். புழு கூட துன்புறுத்தினால் சிறிதாவது முண்டிப் பார்க்குமே என்றெல்லாம் எண்ணங்கள் என்னைச் சூழ்ந்தன. அதற்குள் வீடு வந்து விட,

டெக்கான் கிரானிக்கிள்ளுக்கு ஆர்ட்டிக்கிள் டைப் செய்து கொடுக்க, சாரு எடிட் செய்தார். அந்தக் கட்டுரையினை அனுப்பி வைத்துக் கொண்டிருக்கும்போது தோசையும், கறிக்குழம்பும் சாப்பிட்டு முடித்தார் சாரு. சிவா திருப்பூர் செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டார்.

கோவை ரயில் நிலையத்துக்குச் சென்றால் சென்னை செல்லும் இரயில் போத்தனூரில் தான் நிற்குமெனவும் இங்கு வராது எனவும் சொல்ல சிவா, சாருவை சடுதியில் போத்தனூர் சென்று சேர்த்தார்.

சாரு இரயில் ஏறிவிட்டார். போனில் அழைத்து இரவு வணக்கம் சொல்லி விட்டு, சிவாவிடம் திருப்பூர் சென்று சேர்ந்தவுடன் குறுஞ்செய்தி அனுப்பவும் என்று சொல்லியிருந்தேன். இரவு 11.00 மணிக்கு குறுஞ்செய்தி வந்து சேர அயர்ந்து தூங்க ஆரம்பித்தேன்.

Wednesday, August 27, 2008

அர்த்தமுள்ள இந்து மதம் பகுதி 5

அர்த்தமுள்ள இந்து மதம் பகுதி 4

அர்த்தமுள்ள இந்து மதம் பகுதி 3

அர்த்தமுள்ள இந்துமதம் பகுதி 2

வெகு அற்புதமான, கணீர் குரலில் கண்ணதாசன் பேசுகிறார். கேளுங்கள். கேட்டு மகிழுங்கள்.


Tuesday, August 26, 2008

நடிகை ரம்பாவுக்காக பிரார்த்தனை

அன்பு உள்ளமே.. உங்களுக்கு இறைவன் மகிழ்ச்சியான வாழ்வினையும், நீண்ட ஆயுளையும் வழங்கட்டும். பேரோடும் புகழோடும் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன்


Monday, August 25, 2008

அர்த்தமுள்ள இந்துமதம் 1 - கண்ணதாசனின் குரலில்

அர்த்தமுள்ள இந்துமதம் 1 - கண்ணதாசனின் குரலில்


காந்தக் குரலோன் கண்ணதாசன். குடியும் கூத்தும் கண்ணதாசனை கண்ணனின் தாசனாக்கியது போலும். என்ன ஒரு கணீர் குரலில் இந்து மதத்தையும் அதன் பெருமையினையும் சொல்கிறார். கேட்டு மகிழுங்கள்

Osho Speach - Strange consequence

Rajneesh - Called as Osho. My favorite philosopher.

See his speach about Strange consequence

சுவாமி விவேகானந்தரின் சிக்காகோ உரை

சுவாமி விவேகானந்தரின் முதல் சிக்காகோ உரையின் எழுத்து வடிவ தொகுப்பு. கிடைக்காத பொக்கிஷம்.

Saturday, August 23, 2008

தங்கத்தைக் காதலிக்கும் உலகம்

தங்கம்! உலகெங்கும் அனைவராலும் விரும்பப்படும் ஒரு உலோகம். அரசாங்கங்கள் தங்கத்தை சேகரித்து வைத்திருக்கின்றன. தங்க நகைக் கடைகளை காணும் போதெல்லாம் சொர்க்கலோகம் போல இருக்கும். உலகப் பெண்கள் பெரும்பாலோராலும் விரும்பப்படும் பொருள் தங்கம். ஆண்களும் விரும்புவார்கள்.

இந்தப் பாடலைக் பார்த்து வையுங்கள். எதுக்கும் இருக்கட்டும்.

பின்குறிப்பு : இந்தப் பாடலுக்கும் எனது பெயருக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. அப்படி யாராவது நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. பாடலைக் கேட்ட பின்னர் உங்களுக்கு தங்கத்தைப் பார்க்கும் போதெல்லாம் என் நினைவு வந்தால் நான் என்ன செய்ய.

Friday, August 22, 2008

நான் என்ன செய்ய பகுதி 2 இன் இறுதிப் பகுதி

டாக்டர் வந்தார். சோதித்து விட்டு

”யார் சார் தங்கம் “ என்றார்.

என் நண்பர் என்னைக் காட்டினார். ஒரு முறை முறைத்தார். எனக்கு வெலவெலத்துப் போய் விட்டது. அந்த மருத்துவமனையின் பொறுப்பு அதிகாரியாக இருந்த எனது தோழியின் நண்பர் அவர்.

முடிந்தது கதை என்று எண்ணி வியர்த்து விறுவிறுத்துப் போய் விட்டது. சட்டை வியர்வையில் நனைந்து விட்டது. லாரா என்னையே குறுகுறுவெனப் பார்த்தபடி இருந்தாள்.

என் நண்பர் நமுட்டுச் சிரிப்புடன் இருந்தார். லாராவின் அக்காவின் பார்வையில் எரிமலை வெடித்தது.

”இரண்டு நாட்கள் இருக்கணும். குளுகோஸ் ஏத்தனும் தொடர்ந்து. அடிக்கடி புலம்பறாங்க. தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்கள். அதனால் அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும். இரண்டு மாதமாக இவர் சாப்பிடவே இல்லை” என்றார்.

நான் லாராவைப் பார்த்தேன். தலையைக் குனிந்து கொண்டாள்.

மீண்டும் என்னை கொலைகாரனைப் பார்ப்பது போல பார்த்து விட்டுச் சென்றார். கதவருகே சென்றவர் என்னைப் பார்த்தார்.

”நீங்க இங்கேயே இருங்க” என்றார்.

தலையாட்டினேன்.

நர்ஸ் வந்தாள். ஏதோ மருந்தைச் குளுக்கோஸ் பாட்டிலில் ஏற்றினாள். கையில் குளுக்கோஸ் போடப்பட்டது.

லாரா என்னை பெட்டின் மீது அமரும்படி சொன்னாள். அமர்ந்தேன். லாரா தனது வலது கையால் என் வலது கையினைப் பிடித்துக் கொண்டாள். அவள் அருகில் அப்படியே அமர்ந்து இருந்தேன்.

என் நண்பர் விடை பெற்றார். லாராவின் அக்காவும் விடை பெற்றார். விடிய விடிய நான்கு குளுக்கோஸ் பாட்டில்கள் ஏற்றப்பட்டன. லாராவின் கை எனது கையை விடவில்லை. நல்ல தூக்கத்திலும் இறுகப் பிடித்தபடியே தூங்கினாள். கையை மெதுவாக விலக்கினால் முனக ஆரம்பித்தாள்.

நர்ஸ் வந்து நான் கையை எடுக்க முயற்சிப்பதைப் பார்த்துவிட்டு முறைத்தாள். இரவு முழுவதும் விழித்தபடி லாராவின் அருகிலேயே இருந்தேன்.

விடிகாலையில் கண் விழித்தாள் லாரா. என்னைப் பார்த்துச் சிரித்தாள். எழுந்து அறைக் கதவைச் சாத்தினாள். என் அருகில் வந்தாள். தோளில் சாய்ந்து கொண்டாள்.

” லாரா.. நர்ஸ் வரப்போகிறாள் பார். தப்பா நினைக்கப் போறாங்க ” என்றேன்.

“ நினைக்கட்டும். இதுக்குத்தானே இத்தனை நாள் காத்திருந்தேன் “ என்றாள்.

” என்ன லாரா. இரண்டு மாசமா சாப்பிடாமல் இருந்தாயாமே. ஏன் இப்படியெல்லாம் செய்கிறாய் ? “

” உங்களுக்காகத்தான் தங்கம் “ என்றாள்.

இரண்டு நாட்கள் அவளுடன் ஆஸ்பிட்டல் வாசம். அவளுடனே சாப்பிட்டு தூங்கி விழித்தேன்(!!!). என்னை விட்டு ஒரு நிமிடம் கூட விலக மாட்டேன் என்று அடம் பிடித்தாள்.

ஒரு வழியாக வீட்டில் கொண்டு சென்று சேர்த்து விட்டு இருப்பிடம் சேர்ந்தேன்.

இப்போது லாரா எங்கே ?

எங்கோ இருக்கிறாள் நலமாக. அவளைப் பார்த்து கிட்டத்தட்ட பத்து வருடம் ஆகிவிட்டது. இந்தக் கதை எழுத ஆரம்பித்த போது ஏதோ ஒரு வகையில் நான் அவள் மனதினைக் காயப்படுத்தி இருக்கிறேன் என்று தெரிந்தது. அதற்கு நான் என்ன செய்ய ?????

லாராவின் அக்கா என்னுடன் அவள் பேசுவதை தடை செய்ய, லாரா என்னை விட்டு நீங்கினாள். ஆனால் அவள் நினைவுகளோ எழுத்து வடிவத்தில் என்னுடனும் உங்களுடன் பயனிக்கிறது.

அப்படியே இந்தப் பாட்டையும் கேட்டு வையுங்கள். சுகமாக இருக்கும்.

Thursday, August 21, 2008

எனக்குப் பிடித்த பாடலின் வீடியோ - 4

அவள் உயிர் பெற்று வந்த பிரம்மனின் படைப்புகளின் உன்னதம். அவள் சிரித்தால் பார்ப்பவனுக்குள் பூகம்பம் உண்டாகும். சில்லென்று ஒரு குளிர்ச்சி உடல் முழுதும் பரவும். சடக்கென்று மனசு அமைதி பெறும். அழகு என்பது இவளா. இல்லை இவள் தான் அழகா. இரண்டுக்கும் வேறுபாடு சொல்ல இயலாது மனிதனால். அப்படி ஒரு தேவதை. அவளுக்கு ஒரு தங்கை.

ஆண்மகன் அவன். அழகு திருமகன். இவனுக்கு ஒரு அண்ணன். இருவரும் பெண்பார்க்கச் செல்வார்கள். அக்கா தம்பியை நோக்குவாள். தம்பியும் அப்படியே. அந்தப் பார்வையின் அர்த்தம் காதல். இதைத் தான் கம்பனும் கவி பாடியிருப்பானோ ? பார்வையில் காதலைப் பறிமாறும் அந்த உள்ளங்கள் தவித்துப் போகின்றன. ஏன்... அது தான் விதி என்பார்கள் மனிதர்கள். மனிதனால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகளின் பாதையில் அண்ணன் அக்காவையும், தம்பி தங்கையையும் மணக்க நேரிடுகிறது.

அண்ணன் இறந்து விடுகிறான். அக்கா விதவையாகிறாள். ஒரு குளிர்காலப் பொழுதில் மழை கொட்டுகிறது. இவனும் அவளும் தனிமையில் சந்திக்கும்படி நேர்கிறது. அவள் மனதில் விளையும் உணர்வுகளின் தொகுப்பு இது...

பாடலா இது... வாழ்க்கையின் கோரங்களைச் சொல்லும் பாடல் இது. விதவைப் பெண்ணின் தவிப்பை கொட்டி எழுதப்பட்ட பாடல். கேட்கும் என் மனதை உள்ளுக்குள் அழவைக்கும் இந்தப் பாடல். சோகத்திலும் சுகம் இருக்கத்தானே செய்கிறது.


எனக்குப் பிடித்த பாடலின் வீடியோ -3

சத்ரியன் படத்தில் பானுபிரியா நடித்த இந்தப் பாடலைக் கேட்கும் போது மனசு லேசாகி விடும். மிகவும் அருமையான பாடல் இது.

எனக்குப் பிடித்த பாடலின் வீடியோ - 2

இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் மனசு துள்ளி விளையாடும். என்றும் இனிமை தரும் பாடல்


எனக்குப் பிடித்த பாடலின் வீடியோ - 1

ஆகாய கங்கை - இளையராஜாவின் இன்னிசையில் எப்போது வேண்டுமானாலும் கேட்க தூண்டும் பாடல் இது.

Wednesday, August 20, 2008

நான் என்ன செய்ய பகுதி 2ல் முதற்பகுதி

இரவு நேரம். மணி பத்து இருக்கும். அப்போது ” சார் உங்களுக்கு போன் வந்திருக்கிறது “ என்றான் கார்த்தி. போனில் என் நண்பர்..

“சார். லாராவை ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்திருக்கிறேன். அவள் உங்களைப் பார்க்கனும்” என்று சொல்கிறாள்.

அடித்துப் பிடித்துக் கொண்டு ஹாஸ்பிட்டல் சென்றேன். அங்குள்ள நர்ஸ், டாக்டர்ஸ் எல்லாம் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். அவர்கள் ஏன் அப்படி பார்க்கிறார்கள் என்று எனக்கு விளங்கவில்லை.



என் நண்பர் வந்து லாரா இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். கொடி போல துவண்டு கிடந்தாள் லாரா. லாராவுக்கு குளுகோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. முனகிக் கொண்டிருந்தாள். அவள் அக்கா அருகில் நின்று அழுது கொண்டிருந்தாள். என்னை சோகத்துடன் பார்த்தாள். எனக்கு மயக்கம் வரும் போல இருந்தது. லாரா நன்றாகத்தானே இருந்தாள். ஏன் திடீரென்று இப்படி ஆனாள்.அருகில் நாற்காலியினை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தேன்.

நான் ஆபீஸ் வந்து வண்டியை நிறுத்தும் முன்பு அருகில் வருவாள்.
“சார் வாங்க..” என்று சொல்லிச் சிரிப்பாள்.

மாடர்ன் டிரஸ்ஸில் தேவதை போல வந்து நிற்பாள். பக்கத்துக் கடைக்காரன்கள் எல்லாரின் வயிற்றிலும் புகை வருவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். புத்தகங்களை எடுத்துக் கொண்டு கதவை திறந்து பிடித்த படி நிற்பாள்.

”லாரா.. சாப்பாடு ஆயிடுச்சா” என்று கேட்டபடி சேரில் அமர்வேன்.

“ம்.. நீங்க சாப்பிட்டீங்களா ? “ என்பாள். என் அம்மாவை அவள் ரூபத்தில் பார்ப்பேன். அப்படி ஒரு அன்பு என் மீது.

அப்படி சுறுசுறுப்பாய் இருந்தவளா இப்படி மயங்கிக் கிடக்கிறாள். என் நெஞ்சில் பாராங்கல்லை வைத்தது போல வலித்தது.

”தங்கம்..தங்கம்..தங்கம்....தங்கம்...” மந்திரம் போல ஜெபித்துக் கொண்டிருந்தாள். எனக்கு தலை கிறுகிறுத்தது.

என் நண்பர் அருகில் வந்து ” லாரா..லாரா.. இங்கே பாரு தங்கம் வந்திருக்கிறார் “ என்று இரு முறை சொன்னார். லேசாக கண் விழித்தாள். என்னைப் பார்த்தாள்.

நான் லாரா என்றேன் மெதுவாக. கண்ணில் கண்ணீர். என்னைப் பார்த்ததும் படக்கென்று எழ முற்பட்டாள். அவள் அக்கா வந்து எழ விடாமல் தடுத்தாள்.

”சார். எனக்கு ஒன்றுமில்லை. அழாதீங்க...” என்று சொல்லி சிரித்தாள். முகத்தில் களைப்பு தெரிந்தது.

அடுத்து அவள் செய்தது என்ன ??? ( தொடரும் )

Sunday, August 17, 2008

நான் என்ன செய்ய ? பகுதி 1

என் நண்பரின் ஆபீஸுக்குள் நுழைந்த போது கம்ப்யூட்டரில் ”எவனோ ஒருவன் வாசிக்கிறான்” என்ற பாடல் கேட்டுக் கொண்டிருந்தது. அலைபாயுதே படத்தில் வரும் அந்தப் பாடல். எனக்கு அந்தப் பாடல் பிடிக்காது.

கம்ப்யூட்டரின் முன்பு நண்பரின் ஆபீஸில் வேலை செய்யும் ஃப்ரான்சிஸ்கா அமர்ந்திருந்தாள்.

“என்ன ஃப்ரான்சிஸ்கா ? பாட்டெல்லாம் சோகமாக இருக்கிறதே ? என்ன விஷயம்” என்று கேட்டேன்.

”ஒன்றுமில்லை சார்..”

சிரித்தேன்.

”ஃப்ரான்சிஸ்கா என்னை என்ன மடையன் என்றா நினைக்கிறாய் ? “

“இல்லை சார். “ இல்லை என்று சொல்லும் போதே ஏதோ இருக்கிறது என்று எனக்குள் தோன்றியது. இதற்குமேல் கேட்க எனக்கு சங்கோஜமாக இருந்ததால் விட்டு விட்டேன்.

காலை நேரம். மதியம் சாப்பாடு பற்றி பேச்சு வந்தது.

“சார் மதியம் எங்கே சாப்பிடுவீங்க?”

“ஆஸ்ரமத்தில் சாம்பாரா சாப்பிட்டு நாக்குச் செத்துப் போச்சு ஃப்ரான்சிஸ்கா, அதனாலே இன்றைக்கு மட்டன் சாப்பிடனும் என்று ஆசை”

“சார்.. எங்க வீட்டில மட்டன் குழம்பும் வறுவலும் செய்கிறார்கள். எடுத்துட்டு வரட்டுமா ? சாப்பிடுவீர்களா ?“

மட்டன் குழம்பு, வறுவல் என்றவுடன் எனக்கு நாக்கில் ஜொள்ளு ஒழுகியது. அதை வெளிக்காட்டாமல்,

“உங்களுக்கு எதுக்கு சிரமம் “ என்றேன்.

“ சிரமம் என்றெல்லாம் இல்லை சார். சாப்பிடுகிறீர்கள் என்றால் சொல்லுங்கள். எடுத்து வருகிறேன்.”

“ சரி. கொஞ்சமா எடுத்துட்டு வாங்க. கொஞ்சம் ரசம் மறக்காமல் எடுத்து வாருங்கள்” என்றேன்.

ஃப்ரான்சிஸ்கா சாப்பாடு எடுத்து வர கிளம்பி விட்டாள். நான் கணிணியில் சீரியஸாகி விட்டேன். அதுவரை எனது நண்பர் வரவில்லை. செல்லுக்கு கூப்பிட்டால் தொடர்பில் இல்லை என்று வருகிறது.

ஒரு மணி இருக்கும். கையில் பெரிய பையுடன் வந்தாள்.

தட்டில் சோறு போட்டு மட்டன் குழம்பும் வறுவலுடன் ஆம்லெட்டையும் எடுத்து வைத்தாள். கண்ணில் நீர் வழிய சாப்பிட்டேன். அம்மா கையில் சாப்பிட்டது போல இருந்தது. எனக்குள் சொல்லொண்ணா இன்பம்.

சந்தோஷத்தில் “ ஃப்ரான்சிஸ்கா சாப்பாடு அருமை. உங்க கைக்கு ஒரு முத்தம் தரலாம் போல இருக்கு” என்றேன்.

“ம்.. ஆசையைப் பாருங்க” என்று பளிப்புக் காட்டினாள் ஃப்ரான்சிஸ்கா.

என் முகம் சுருங்கியதைப் பார்த்தவள், “சரி போகட்டும். இந்தாருங்கள்” என்று கை நீட்ட ஒரு முத்தத்தை பதித்தேன் அவள் கையில்.

சிரித்தாள். நானும் அசடாக சிரித்து வைத்தேன்.

”அவ்வளவுதானா? ரசம் எப்படி இருக்குன்னு சொல்லவில்லையே“ என்றாள்.

“உண்மையை சொல்லனுமா. பொய் சொல்லனுமா“ என்று கேட்க

“உண்மையைச் சொல்லுங்க” என்றாள்.

“சுமார் தான் ஃப்ரான்சிஸ்கா“

“நான் தான் வைத்தேன். எனக்கு ரசம் வைக்கத் தெரியாது. மட்டன் குழம்பு, வறுவல் என் அம்மா செய்தார்கள்“ என்றாள்.

எனக்கு சுறுக்கென்றது. ”சாரி ஃப்ரான்சிஸ்கா. ரசம் கூட பரவாயில்லை” என்று சொல்லி வைத்தேன். சிரித்தாள்.

சில நாட்கள் கடந்தன. ஃப்ரான்சிஸ்கா தனியாக இருக்கும் போது ”எவனோ ஒருவன் வாசிக்கிறான்” பாடலைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பதாக என் நண்பர் சொன்னார்.

ஃப்ரான்சிஸ்கா எவரையாவது காதலிக்கும் போல என்றும் சொன்னார். நானும் ஆமோதித்தேன்.

ஒரு ஞாயிற்று கிழமை நாளில் எனது நண்பரும் ஃப்ரான்சிஸ்காவும் மதுரைக்கு சென்று வந்தனர். நான் மாலையில் வந்தேன் என் நண்பரைப் பார்க்க. என்னுடன் தனியாகப் பேச வேண்டும் என்று சொன்னார். பாருக்கு சென்றோம்.

“சார். உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்” என்றார்.

“சொல்லுங்கள்” என்றேன்.

”“ஃப்ரான்சிஸ்கா உங்களைக் காதலிக்கிறாள்“ என்றாள்.

“என்ன ??? “ எனக்குள் அதிர்ச்சி.

“ஆமாம் சார். பஸ்ஸில் இருவரும் செல்லும் போது அடிக்கடி கண்ணைத் துடைத்துக் கொண்டே வந்தாள். என்ன ஃப்ரான்சிஸ்கா என்று கேட்ட போது அவள் உங்களைப் பற்றி தான் பேசினாள். சாப்பிட அழைத்தபோது மறுத்து விட்டாள். இன்று பாஸ்டிங் இருப்பதாக சொன்னாள். அவள் வாரத்தில் நான்கு நாட்கள் பாஸ்டிங் (பட்டினி) இருப்பாள். என்னிடம் முன்பே சொல்லி இருக்கிறாள். ஏன் என்று கேட்க வில்லை. இன்று தான் எனக்கு விடை கிடைத்தது சார். நீங்கள் நடக்க வேண்டுமென அவள் பாஸ்டிங் இருப்பதாக இன்று சொன்னாள் சார். எனக்கு கண்ணீரே வந்து விட்டது சார்.”

மனதுக்குள் பூகம்பம் அடித்தது. மனசு வேற பாரமாகிவிட்டது. என் நண்பர் சொல்லி விட்டு கண்களை துடைத்துக் கொண்டார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

”ஆனால் என்னால் அவளைக் காதலிக்க முடியவில்லையே சார். நான் என்ன செய்ய ?“

”சார் ப்ளீஸ் சார். பாவம் சார் ஃப்ரான்சிஸ்கா. உங்களையே வாழ்வாக எண்ணி இருக்கிறாள். என்று சொல்லி கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தார்.

ஃப்ரான்சிஸ்காவுக்கு மேல் படிப்புக்கு ஆர்டர் வர சென்று விட்டாள் வேலைக்கு வரவில்லை. நான் அவளுக்கு அளித்த பரிசில் எங்களது ஆத்மாவுக்கு என்று எழுதியிருந்தேன். அதைப் படித்து விட்டு அழுதாள்.

என்றோ ஒரு நாள் ஃப்ரான்சிஸ்காவின் நினைவு வர அந்தப் பாடலை கேட்டேன். இப்பொழுது நான் நான் மட்டும் அந்தப் பாடலைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன் தனியாக. பாடல் வரிகள் கீழே...


எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதை தவணை முறையில் நேசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதை தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை எவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதலுக்காகவோ அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை

எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

புல்லாங்குழலே பூங்குயிலே நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரிபாதி
கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்


உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள் மனதில் ஒரு மாறுதலா
உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள் மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில் இது எவனோ அனுப்பும் மாறுதலா
எந்தன் சோகம் தீர்வதற்கு இதுபோல மருந்து பிரிதில்லையே
அந்தக் குழலைப் போல அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்


நன்றி :
தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மணிரத்னம்,
பாடலாசிரியர் : வைரமுத்து.
__________________

Tuesday, August 12, 2008

சாகப்போகும் மனிதர்கள் மற்றவர்களைச் சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள்

மனிதா... ஓடுகிறாய்... ஓடுகிறாய்... ஓடிக்கொண்டே இருக்கிறாய். எங்கே ஓடுகிறாய் சாவதற்குள் உன் ஓட்டம் நின்று விடுமா மனிதா இல்லை ஓடிக்கொண்டிருப்பாயா ? பேங்கில் பணம் சேர்த்து வைத்து விட்டாயா ? சொத்து நிலம் வாங்கி குவித்து விட்டாயா ?
குவி குவி... நீயா அனுபவிக்க போகிறாய். நீ தேடித் தேடி சேர்த்து வைத்தது எல்லாம் நாளை எவனுக்கோ போகப்
போகிறது. போகட்டும். அதனால் என்ன ? ஆனாலும் நீ ஓடுவதை நிறுத்தி விடாதே.. வேண்டும் வேண்டும் இன்னும் வேண்டும்... மனிதா மனிதனுக்கு உள்ள அகந்தையினால் பார் ஆயிரக் கணக்கில் ஜார்ஜியாவில் செத்துக் கொண்டிருக்கிறார்கள். போர் ... போர்.. எதற்கு மனிதா... எதற்கு.... ? யார் வாழ இந்தப் போர் ?? எவன் இருக்கப்போகிறான் சாகாமல்... நடக்கட்டும் நடக்கட்டும்.. போர் நடக்கட்டும். ஆனாலும் நீ ஓடுவதை நிறுத்தி விடாதே. உனக்கு நேரம் இருந்தால் கீழே உள்ள பாடலை படித்துப் பார். படித்து விட்டு திரும்பவும் ஓடு... நிற்காதே. நின்றால் சாவு உன்னைப் பிடித்து விடும்.

படம் : நீங்கள் கேட்டவை
பாடியவர் : ஜேசுதாஸ்

கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக் கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்
துடுப்புக் கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்

பிறக்கின்ற போதே ...............
பிறக்கின்ற போதே இறக்கின்ற சேதி இருக்கின்றதென்பது மெய்தானே
ஆசைகள் என்ன ...............
ஆசைகள் என்ன ஆணவம் என்ன உறவுகள் என்பதும் பொய்தானே
உடம்பு என்பது ..........
உடம்பு என்பது உண்மையில் என்ன கனவுகள் வாங்கும் பை தானே

காலங்கள் மாறும்...........
காலஙக்ள் மாறும் கோலங்கள் மாறும் மானிடம் என்பது பொய்வேஷம்
தூக்கத்தில் பாதி
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி போனது போக எது மீதம்
பேதை மனிதனே
பேதை மனிதனே கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்.

கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக் கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்
துடுப்புக் கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்

Thursday, August 7, 2008

திரைப்பட விமர்சனங்கள்

இந்திய இறையாண்மைக்கு வேட்டு

”நாங்கள் விரைவில் புதிய நீர்க்கொள்கையை அறிவிக்கப் போகிறோம். இதன்படி எங்கள் மாநிலத்தில் பாயும் நதிகளில் இருந்து பிற மாநிலங்களுக்கு தண்ணீர் கொடுக்க, இனி எங்கள் சட்டமன்றத்தின் அனுமதி கட்டாயம் பெற்றாக வேண்டும்' என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார் கேரள மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் என்.கே.பிரேமச்சந்திரன் “

அண்டை மாநிலத்திலிருந்து இப்படி ஒரு அறிக்கை. இதுவரை தமிழகத்தில் இருந்து எந்தவித எதிர்ப்பும் இல்லை. முல்லைப் பெரியார் அணையில் உச்சநீதி மன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டு விட்டது கேரளா. கேட்க நாதியில்லை. இந்த அறிக்கையினை மற்ற மாநிலங்களும் பயன்படுத்தினால் விளைவு தமிழ் நாடு சுடுகாடாகும் நிலை.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள நீர் ஒப்பந்தம் இதுவரையில் நல்ல முறையில் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவுக்குள் இருக்கும் மாநிலங்கள் பக்கத்து மாநிலங்களின் உரிமையில் கை வைப்பது என்பது உள் நாட்டுக்குள் மாநிலப் பிரச்சினைகளை உருவாக்கும் என்பது இவர்களுக்கு தெரியாதா ? தெரிந்தும் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்பது தான் விளங்கவில்லை.

இப்படிப் பட்ட விஷயங்கள் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மத்திய அரசுக்கு தெரியாதா ? தெரிந்தும் ஏன் இதுவரை மெளனம் காக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. இந்திய யூனியன் என்று ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம் வருகிறது. மாநிலங்கள் அடித்துக் கொள்ளும் முன்பு நடவடிக்கை எடுப்பது நல்லது. தும்பை விட்டு வாலைப் பிடிக்காமல் இருந்தால் போதும். செய்வார்களா ?

Monday, August 4, 2008

மகாராஜாக்களின் பிம்பங்கள்

கடந்த காலத்தின் வரலாற்றை புரட்டினால் ராஜாக்களால் ஆளப்பட்ட ராஜ்ஜியங்களும், நடத்தப்பட்ட போர்களும் விரவிக் கிடக்கும். பொதுவாக ராஜாக்கள் என்றாலே மகுடம், உடல் முழுதும் நகைகள், உயர்ந்த ரகத்தில் துணி, ஒரு விதமான செருப்பு என்று தான் மனக்கண்ணில் வந்து செல்வார்கள்.

யாருக்கு என்ன கோபமோ, வெறியோ தெரியவில்லை. யாரால் இப்படிப் பட்ட வழக்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டதோ தெரியவில்லை. இன்றைய நாளில் அந்த மகாராஜாக்களின் பிம்பங்கள் மிகப் பெரிய ஸ்டார் ஹோட்டல்களின் வாயில் கதவினை திறந்து விட்டு சல்யூட் அடிக்க நின்று கொண்டிருப்பதைப் பார்த்தால், யானை கட்டி போரடித்த, சாலைதோறும் மரங்களை நட்டு வைத்த அந்தக் கால ராஜாக்களை நினைத்து சிரிப்புத்தான் வருகிறது. வரலாற்றுக்கும் இன்றைய நிதர்சனத்துக்கும் இடையேயான இடைவெளியில் நடக்கும் மாற்றங்களில் ராஜாக்களின் பிம்பங்களின் நிலை கூட மாற்றம் கண்டு விடுவதை எண்ணினால் வாழ்வின் நிச்சயமற்ற தன்மை உறைக்கிறது அல்லவா.

மிகச் சமீபத்தில் சாரு நிவேதிதா அவர்களின் வாசகர் சந்திப்பு நடந்த ஹோட்டலில் வாயிற் கதவினை திறந்து விடுபவரைக் கண்டபோது மனதில் தோன்றியவை. என்ன ஒரு விசித்திரமான உலகம் பாருங்கள்....