குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label விலைவாசி. Show all posts
Showing posts with label விலைவாசி. Show all posts

Saturday, March 26, 2022

புதிய கல்விக் கொள்கை - தமிழர் விரோத பத்திரிக்கையாக மாறுகிறதா தினமணி?

 எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய் நன்றி கொன்ற மகற்கு - திருக்குறள்.

வேறு எந்த உதவியையும் மனிதன் மறக்கலாம் ஆனால் செய் நன்றியை மறந்த ஒருவனுக்கு வாழ்வில் உயர்வென்பதே இல்லை என்கிறார் தமிழ் புலவர் திருவள்ளுவர்.

இன்றைய 26.03.2022 தினமணி தலையங்கத்திலே ’அஸர் 2021’ அறிக்கை பற்றிய கவலையைத் தெரிவித்து ஆசிரியர்களும் பெற்றோர்களும் கூட்டாக பங்கு பெற்று மாணாக்கர்களின் கல்வியை உயர்த்திட வேண்டுமென்று அக்கறையுடன் முடித்திருக்கிறது.

தலையங்கத்தின் இறுதியில் ஒரு பத்தி இப்படி இருக்கிறது.”கரோனா இல்லாத சமயத்திலேயே எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி (ஆல் பாஸ்) என்பதால் 5ம் வகுப்பு மாணவர்களால் கூட 2ம் வகுப்பு பாடங்களைக் கூட சரியாகப் படிக்க முடியவில்லை என பல ஆய்வுகள் சுட்டிக் காட்டி உள்ளன. மாணவர்களால் புரிந்து கொள்ள இயலாத நிலையில், அவர்களுக்குப் பாடம் நடத்துவது பெரும் சிரமமாக இருப்பதாக 64.5 சதவீத ஆசிரியர்கள் தெரிவித்துள்ளதை ’அஸர் 2021’ அறிக்கை சுட்டிக் காட்டுகிறது” 

தினமணி ஆசிரியரே....!

மாணவன் சரியாகப் படிக்கவில்லை என்பதற்கான முக்கியமான காரணம் முதலில் ஆசிரியர் தான். அடுத்து அவனது சூழல் அல்லது அவனது உறவினர்களாக இருக்கும். எந்த மாணவன் எப்படி படிப்பான் என்பதை ஆசிரியர் கண்டுணர்ந்து கல்வி புகட்ட வேண்டியது அவர் பணி. அனைவரும் பாஸ் என்றால் மாணவர்கள் படிக்க மாட்டேன் என்கிறார்கள் என்று ஆசிரியர்கள் சப்பைக் கட்டு கட்டுவார்கள். முற்றிலும் இது சால்சாப்பு. எந்தப் பெற்றோரும் தன் மகன் படிக்க கூடாது என்று விரும்ப மாட்டார்கள். 

ஆல் பாஸ் என்றால் கல்வி இடை நிற்றல் குறையும் என்றும், மாணவனுக்கு திடீரென்று நன்கு படிக்க வேண்டுமென்ற ஆர்வம் வந்து விட்டால் போதும் என்பதற்காகத்தான் அரசு அனைவரும் பாஸ் என்றுச் சொல்கிறது. ஆரம்ப காலங்களில் சரியாகப் படிக்காத பல மாணாக்கர்கள் ஒரு சில வருடங்களில் நன்கு படிப்பார்கள் என்பதை ஆறேழு வருடம் ஆசிரியப் பணி செய்து வந்த எனக்கு நன்கு தெரியும். புதிய கல்விக் கொள்கை தேர்வு வைக்கச் சொல்கிறது. 

தேர்வில் தோல்வி அடைந்தால் இன்றைய பாஜக ஆட்சியில் முற்றிலுமாக அழிக்கப்பட்ட இந்தியாவில் அடுத்த வேளை சோற்றுக்கு வேலை செய்யச் சென்று விடுவார்கள். 30 சதவீதம் விலைவாசி உயர்ந்து விட்டது. நல் உணவு என்பது எட்டாகனியாகப் போனது ஏழைகளுக்கு. விலை வாசி உயர்வால் ஜி.எஸ்.டி வரிவசூல் அதிகரிக்கிறது. ஆறேழு வருடங்களுக்கு முன்பு இரண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட மளிகைப் பொருட்கள் இன்றைக்கு நான்காயிரம் ஆகிறது. அதே வருமானம், ஆனால் செலவினம் கூடுகிறது. இந்த நிலையில் மீண்டும் தேர்வில் தோல்வி அடைந்த ஒரு மாணாக்கன் மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிப்பான் என எதிர்ப்பார்ப்பது அறிவீனம். பெற்றோர்களும் சடைந்து போவார்கள். மேற்படிப்புக்கு எவனும் வரக்கூடாது என்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் மறைமுக திட்டம் என்பதைக் கல்வியாளார்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

ஒவ்வொரு அரசுப் பள்ளி ஆசிரியர்களும் மிக நன்றாக பாடம் நடத்தக் கூடிய அனுபவம் பெற்றவர்கள். தனியார் பள்ளி வரும் முன்பே அரசால் நடத்தப்பட்டப் பள்ளிகளில் படித்தவர்கள் தான் இன்றைக்கும் உலகை ஆள்கிறார்கள். அவர்களால் தான் உலகம் வளர்ச்சி அடைந்திருக்கிறது.

அதை விடுத்து 5ம் வகுப்பு மாணவர்களால் 2ம் வகுப்பு பாடங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று எழுதுவது கயமைத்தனம்.

ஆளும் பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள புதியக் கல்விக் கொள்கையை தமிழகம் எதிர்க்கிறது. அதற்காக மக்களிடம் பொய்யை விதைக்க தங்களின் அறிவை கயமைத்தனமாகப் பயன்படுத்துவது கொடூரம்.

5ம் வகுப்பில் தேர்வு, 8ம் வகுப்பில் தேர்வு, 10ம் வகுப்பில் தேர்வு, 12ம் வகுப்பில் தேர்வு, கல்லூரிகளில் படிக்க நுழைவுத் தேர்வு என ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு தயாரிப்பு நிறுவனத்திலே தரத்தினை சோதிக்கும் படி மனிதர்களைச் சோதிப்பது என்பது மனித குல வரலாற்றில் இல்லாத கொடூரம்.

பாஜகவின் பிரதமர் மோடி எந்தக் கல்வித் தகுதியை வைத்துக் கொண்டு நாட்டை ஆளுகிறார்? ஆசிரியர் அவர்களே?

நீங்கள் என்ன கல்வித் தகுதியில் தினமணிக்கு ஆசிரியராக இருக்கின்றீர்கள்?

கல்வி என்பது அறிவு தேடலுக்கானது. அது மனிதனின் தரம் அல்ல.

உங்களின் பத்திரிக்கையில் வெளியிடப்படும் ஒவ்வொரு கட்டுரையும், தலையங்கமும் தமிழருக்கு விரோதமாக இருக்கிறது. 

கடவுள் என்பது கற்பிதம் என்ற பெரியாரின் சொற்களால் விளைந்தவை தான் பகுத்தறிவு. 

தமிழர்கள் பகுத்தறிவு மிக்கவர்கள். வீரம் மிக்கவர்கள், அறம் வாழ்வு வாழ்பவர்கள். அவர்களால் உணவு உண்ணும் நீங்களும் உங்கள் பத்திரிக்கையும் தொடர்ந்து தமிழர் விரோத செய்திகளை பொய்யாகப் புனைந்து மக்களை மாக்களாக மாற்றி விடலாம் என மனப்பால் குடிக்காதீர்கள்.

உங்களுடைய நோக்கம் புதிய கல்விக் கொள்கை மிக மிக நல்லது. அதை திமுக அரசு எதிர்க்கிறது என்று மக்களிடம் பொய்யைப் பரப்புவது மட்டுமே.

சமீபத்திய சட்டசபை நிகழ்வில் தமிழகத்தின் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் அவர்கள் தமிழகம் வளர்ந்த மாநிலம் என்றும் உத்திரப் பிரதேசம் பீகாருடன் ஒப்பிடக்கூடாது என்று மட்டும் தான் சொன்னார். 

தமிழகத்தில் பெரும்பாலும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்கள் என்றார். அதற்கு உடனே சங்கி மீடியாக்களும், சங்கி போலிகளும் செல்போன் வைத்திருப்பதால் தமிழகம் பணக்கார மா நிலம் என்றுச் சொல்வதாக திரித்து சங்கி தளம் பேஸ்புக்கிலும், யூடியூப்பிலும் போலிச் செய்தியை புரட்டுச் செய்தியைப் பரப்பி வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அத்தகையை போலிச் செய்திகளை அடையாளம் கண்டு, எழுதுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அமைப்பு ஒன்றினை உருவாக்கி இருக்கிறது.

தமிழர்கள் சீரழிய வேண்டுமென்ற உயரிய சிந்தனையில் நடத்தப்படும் பத்திரிக்கைகள் காலப் போக்கில் என்னவாகும் என்பதை அறம் வழி வாழ்வியல் கொண்ட தமிழகம் உங்களுக்கு புகட்டும்.

வாழ்க வளமுடன்...!


Friday, January 7, 2011

கோயமுத்தூரில் கீரைக்கட்டு பத்து ரூபாய்


நம்பவே முடியவில்லை. சரியாக 30 நாட்களுக்கு முன்பு வரை, கோவையிலிருக்கும் சிங்கா நல்லூர் உழவர் சந்தையில் ஒரு கட்டு கீரை ரூபாய் 4.00 என்று விற்பனை ஆனது. இன்று காலையில் ஒரு கட்டு ரூபாய் 10 என்று விற்றார்கள். யார் இந்த விற்பனையாளர்கள் என்று பார்த்தால், ஒருவர் கூட விவசாயிகள் கிடையாது. விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்ட 'உழவர் சந்தை' இன்றைக்கு வியாபாரிகள் சந்தையாக மாறிப் போய் விட்டது. நேரடியாக விவசாயிகளிடம் மிகக் குறைந்த விலைக்கு மொத்தமாக கீரைக்கட்டுகளை வாங்கி அடுத்த அரைமணி நேரத்தில் மிக அதிக விலைக்கு விற்கின்றார்கள் இந்த வியாபாரிகள். இவர்களுக்கு அன்றாடம் கிடைக்கக் கூடிய லாபம் ஒன்று மட்டுமே குறிக்கோள். இவ்வகை வியாபாரிகளை ‘கோயமுத்துர் சிங்கா நல்லூர் உழவர் சந்தை'யின் அதிகாரிகள் உள்ளே நடமாட விட்டு, அவர்களுக்குத் தேவையானவற்றைப் பெற்று விடுகின்றார்கள். 

ஒரு முறை, நான் நேரில் கண்டது உண்மைச் சம்பவத்தை இவ்விடத்தில் சொல்ல விரும்புகிறேன்.ஒரு அதிகாரி, வெங்காய வியாபாரியிடம் ‘காளான்' இருக்கிறதா என்று கேட்டார். அனைத்துக் காளான்களும் விற்று விட்ட நிலையில், அந்த வியாபாரி அந்த அதிகாரியிடம் சொன்னது “சார் ஐந்து நிமிடத்தில் தருவித்து தருகிறேன்” என்றார். சொன்னபடியே இரண்டு பாக்கெட் காளானை இலவசமாய் வழங்கினார் அந்த வியாபாரி. அதிகாரியும் கெத்துக் குறையாமல் வாங்கிச் சென்றார். 

இதே போன்று, போர்டில் இருக்கும் விலை ஒன்றாகவும், விற்கும் விலை ஒன்றாகவும் சிலர் விற்பனையாளர்கள் விற்பதை கம்ப்ளெயிண்ட் செய்தால் அப்போதைக்கு காமாச் சோமாவென்று சொல்லி சரி செய்கிறார்கள். ஆனால் அதே வியாபாரி தொடர்ந்து கடை போட்டுக் கொண்டிருப்பதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், விலைவாசியைக் கட்டுப்படுத்த தவறினால் ஆளும் அரசுக்கு மக்களிடம் மிகப் பெரும் வெறுப்பு உண்டாகி விடும். அரசு கொண்டு வரும் திட்டங்களை சரியாக அமல்படுத்தாமல், அலட்சியப் போக்கில் செயல்பட்டு வரும் இவ்வகை அதிகாரிகளை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. மக்களால் அரசு அலுவலர்களின் மீது நடவடிக்கை எடுக்க இயலாமல், தமிழக அரசு அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருவதை நாம் பல சம்பவங்கள் மூலம் தெரிந்து கொண்டிருக்கிறோம். அரசு அலுவலர்கள் மட்டுமல்ல சமூகம் என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.

சமீபத்தில் கோவையில் 'அல்பேனியா' பள்ளியில் கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டதால், பெற்றோர்கள் கோபமடைந்து சாலை மறியல் செய்தார்கள். இவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ததாக ‘சன் செய்திகள்' வெளியானது. குற்றம் செய்தவனை விட, குற்றம் செய்யத்தூண்டியவர்கள் மீது நடவடிக்கை ஒன்றினையும் எடுக்காத காவல்துறையினரின் 'சட்டம் ஒழுங்கு' பற்றி என்ன சொல்லமுடியும்? பள்ளியின் நிர்வாகியை அல்லவா கைது செய்திருக்க வேண்டும் காவல்துறை. காவல்துறையினரின் சில செயல்பாடுகள் மக்கள் விரோதமாய் சென்று விடுகின்றன. மக்கள் இல்லையென்றால் நாம் இல்லை என்பதை காவல்துறையினர் உணர வேண்டும்.

கீரைக்கட்டு 10 ரூபாய் என்றால் வருங்காலத்தை நினைக்கையில் நிலைமை என்னாகுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

தமிழக அரசு உழவர் சந்தைகளில் நடக்கும் 'கோல்மால்களை' சரி செய்ய, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்களைச் சரிவரச் செயல்படுத்தாத அதிகாரிகளின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் தயங்கக்கூடாது என்பது பெரும்பாலான மக்களின் எண்ணம்.