குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, April 7, 2020

புற்றீசல் எண்ணங்களை தடுப்பது எப்படி?

வெற்றியடைய சூட்சுமம் என்னவென்ற ரகசியத்தின் ஒரு துளியை எழுதி இருந்தேன். வெற்றி என்பது வாழ்க்கையின் முறையில் உள்ளது. அது பொருளாக இல்லை, உறவுகளாக இல்லை. வெற்றி மனத்தின் தன்மையில் இருக்கிறது.

புற்றீசலாய் மனதுக்குள்ளிருந்து வந்து கொண்டே இருக்கும் எண்ணங்களை வேடிக்கை பார்க்க வேண்டுமென எழுதி இருந்தேன். 

இது பற்றிய எனது ஓஷோ சொல்லியதை இங்கு பதிவிடுகிறேன். படித்துப் புரிந்து கொள்ளுங்கள். நன்றி ஓஷோ...


எண்ணங்களின் ஓட்டத்தை நிறுத்துவது எப்படி?

எண்ணங்களை நிறுத்த முடியாது!

அது நிற்காது என்பதல்ல,ஆனால் அதை நிறுத்த முடியாது!

அது தானாகவே நிற்கின்ற ஒன்றாகும்.

இந்த வித்தியாசமானது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.இல்லையெனில் உனது மனதைத் துரத்திக்கொண்டு சென்று நீ பைத்தியமாகிவிட முடியும்.

எண்ண ஓட்டத்தை நிறுத்துவதால் மனம் அற்ற நிலை எழுவதில்லை.

எண்ணவோட்டம் இல்லாத போது,மனமற்ற நிலை இருக்கிறது.

அதை நிறுத்துவதற்கான அந்த முயற்சியே அதிக கவலையை உருவாக்கிவிடும்.

அது அதிக சச்சரவை உருவாக்கிவிடும்.அது உன்னை இரண்டாக பிளவு பட்டவனாக ஆக்கிவிடும்.

நீ உனக்குள் இடைவிடாத குழப்பத்தில் இருப்பாய்,இது உனக்கு உதவப்போவதில்லை.

மேலும் வலுக்கட்டாயமாக ஒருசில நொடிகள் அதை நிறுத்துவதில் நீ வெற்றி பெற்றாலும்கூட,அது ஒரு சாதனையே அல்ல.ஏனெனில் அந்த ஒரு சில நொடிகள் கிட்டத்தட்ட உயிரற்றவையாகவே இருக்கும்.

அவை உயிர்த்துடிப்புடன் இருக்காது.ஒருவித அசையாத தன்மையை நீ உணரலாம்.ஆனால் அமைதியை உணர முடியாது.ஏனெனில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட அசையாத தன்மையானது அமைதி அல்ல.

அதற்கு அடியில் தன்னுணர்வு இழந்த நிலையில் ஆழத்தில் அடக்கி வைக்கப்பட்ட மனமானது வேலை செய்து கொண்டே இருக்கிறது.

ஆகவே,மனதை நிறுத்துவதற்கு எந்த ஒரு வழியும் கிடையாது.ஆனால் மனம் என்பது நிற்கிறது.அது நிச்சியம்.அது தானாகவே நிற்கிறது.

மனதை ஆழ்ந்த மரியாதையோடு பார்.சண்டை போடுபவனாக இருக்காதே.

நன்றாக கவனி.

மனதின் மிகச்சிறிய வேறுபாடுகளை,அதன் திடீர் திருப்பங்களை,அதன் அழகான திருப்பங்களை,திடீரென்று அது தாவிக் குதிப்பதை கவனி.

மனமானது விளையாடுகின்ற விளையாட்டுகளை,அது நெசவு செய்கின்ற கனவுகளை,கற்பனைகளை,நினைவுகளைக் கவனி.

அது உருவாக்குகின்ற ஆயிரத்தொரு திரையிடல்களைக் கவனி...கவனி.

அங்கு நின்று கொண்டு,தனியாக தூரவிலகி,அதில் ஈடுபடாமல் மனதைக் கவனி.

அப்போது நீ மெல்ல மெல்ல அதை உணர ஆரம்பிப்பாய்.

உனது முழுக்கவனம் எந்த அளவுக்கு ஆழமானதாக ஆகிறதோ அந்த அளவுக்கு உனது விழிப்புணர்வு ஆழமானதாக ஆகிறது.

மேலும் அதில் இடைவெளிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.ஒரு எண்ணம் போகிறது.ஆனால் அடுத்த எண்ணம் இன்னும் வரவில்லை.அப்போது அங்கு ஒரு இடைவெளி இருக்கிறது.

ஒரு மேகம் கடந்து சென்றுவிட்டது.அடுத்த மேகம் வந்து கொண்டிருந்தது.அப்போது அங்கு ஒரு இடைவெளி இருக்கிறது.

அந்த இடைவெளியில் மனம் அற்ற நிலையின் சிறு காட்சியை நீ முதன்முறையாக காண்பாய்.

மனம் அற்ற நிலையின் ருசியை நீ தெரிந்து கொள்வாய்.

ஆரம்பத்தில் இவை வெறுமனே அபூர்வமான தருணங்களாக இருக்கும்.

இடைவெளிகள் சிலவாகவும் ஒன்றிற்கும் மற்றொன்றிற்கும் இடையே அதிக காலம் எடுத்துக் கொள்வதாகவும் இருக்கும்.

ஆனால் சமாதி நிலை என்றால் என்ன என்கிற ஒரு சிறிய காட்சியை உனக்கு கொடுக்கும்.

சிறிய குளம் போன்ற அமைதி வரும்,அதன் பின்னர் அது மறைந்து விடும்.

ஆனால் இப்போது நீ சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறாய் என்பதை நீ தெரிந்து கொள்வாய்.

எனவே மீண்டும் கவனிக்க ஆரம்பி.

--ஓஷோ--


குறிப்பொன்று நினைவுக்காக:

நேற்று ஃபேஸ்புக்கில் ஒரு பதிவினைப் படிக்கும் போது பாரதியாரையும், ஓஷோவையும் ஒப்பிட்டு எழுதி இருந்தார்கள். பாரதியார் ஜாதி மதம் இல்லையென்று பாடியவர் என்கிறார். பாரதியாரின் கவிதை புத்தகத்தை படித்த போது அவர் எந்தளவுக்கு ஜாதிப் பிடிப்பில் சிக்கி இருந்து வெளி வந்தார் என்று அறிய நேர்ந்தது.

யாரோ ஒரு மஹானுபாவன் ஓஷோவை மிகக்கடுமையாக தாக்கி எழுதி இருந்தார். தனக்கென கூட்டம் கூட்டினார் என்றும், கடைசி வரை பணக்காரராகவே வாழ்ந்தான் என்றும் சாடி இருந்தார். பாரதி ஏழையாகவே இருந்தார், ஏழையாகவே வாழ்ந்தார் என்று பச்சாதாபம் காட்டி எழுதி அவருக்காக அந்த பிரகஸ்பதி புலம்பி இருந்தார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவர் தேவை என இயற்கை மனிதர்களை வெளிப்படுத்தும். அந்த வகையில் உலகையே பீடித்திருக்கும் மன நோயான மதத்தையும், அதன் கட்டமைப்பையும், அதன் ஆச்சார அனுஷ்டாங்களையும் தோலுறித்து தொங்கவிட்டவர் ஓஷோ. தாலியம் என்ற விஷம் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்ட இந்த மாபெரும் மனித மிருகங்கள் உலாவும் கூட்டத்திடம் உண்மை மட்டுமே பேசியவர். இந்த கொலைக்கு அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் காரணமாய் இருந்தார் என்று எழுதப்பட்டிருக்கிறது.

“ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்ற கவிதைக்காக போற்றப்பட்ட பாரதியை விட, ஓஷோ எவருடன் ஒப்பிடவே முடியாத மனிதர். பாரதி ஓஷோவின் ஒரு கருத்துக்குச் சமமானவர்.

ஒப்பீடுகள் பற்றிப் பேசுபவர்களின் அறிவு என்னவென்று காட்டி விடுகிறது.




0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.