குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, December 22, 2011

போலிகள் நடமாடும் புனைவுலகம்

இன்றைய செய்தித்தாள் ஒன்றில் எழுதும் எவையும் உண்மை என்று நினைக்காதீர்கள் என்ற அர்த்தத்தில் ஒரு பத்தி வெளியாகி இருக்கிறது. எது உண்மை, எது பொய் என்று எப்படிக் கண்டுபிடிப்பது என்பதை அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்தால் பரவாயில்லை.

நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் ஆராய்ச்சிகள் புகுந்தால், கிடைக்கும் பலன்களைப் பற்றி பிரஸ்தாபிக்க ஒன்றுமில்லை. அது நம்பிக்கையின் பால் கட்டப்பட்டிருக்கும் இரும்புக் கோட்டையின் கதவுகளைத் திறக்கும் அளவுக்கு பலமான ஆராய்ச்சியாக இருந்தாலும் கூட.

சாகித்ய அகாதமி பெற்ற “காவல் கோட்டம்”  பிரபல எழுத்தாளர் ராமகிருஷ்ணனால் எதிர்க்கப்பட்டது என்கிறது ஒரு செய்தி. ஜெயமோகன் அந்த நாவலை ஆதரித்தார் என்கிறது மேலும் ஒரு செய்தி. இது பற்றிய விமர்சனங்கள் இனி இணைய பக்கங்களில் அள்ளிக் கொட்டப்படும். இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இது வரையில் தார்மீக ரீதியிலான, தர்க்க ரீதியிலான, மனிதாபிமான வகையிலான, நீதி சார்பான, சுயச்சார்பற்ற எழுத்துக்கள் எவையேனும் எழுத்துலக பிரம்மாக்கள் நாங்கள் என்றுச் சொல்லக்கூடிய அல்லது நடிக்கக் கூடியவர்களால் எழுதப்பட்டிருக்கிறதா என்று ஒரு நிமிடம் மனச் சுத்தியுடன் யோசித்துப் பாருங்கள். நிச்சயம் இல்லை.

ஏன் இல்லை என்று கேட்டால் “கொன்று போடுவார்கள்” என்பார்கள். கொல்வதற்காக சித்தாங்களும், வேதாந்தங்களும், உண்மைகளையும் மறைப்பேன் என்கிற புனைவுலகத்தாருக்கு என்ன பெயர் வைக்கலாம்?

புனைவுலகில் நடமாடும் போலிகள் முற்றிலும் சுயச்சார்பு உடையவர்களாய், சுய சிந்தனையை வருமானம் பெறக்கூடிய வகையில் மாற்றி, மக்களை தாங்கள் எழுதுவது “உண்மை” என்று நம்பும்படிச் செய்வதில் வல்லவர்கள். எழுத்து ஒரு தவம் என்பார்கள். ஆனால் இன்றைய பத்திரிக்கைகளைப் படித்துப் பாருங்கள். அது எங்காவாது, எவராலாவது எழுதப்பட்ட அல்லது சொல்லப்பட்ட கருத்துக்களின் வாந்திகள் என்பது புரியவரும்.

ஒரு சமூகம் தன்னை மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள, அதன் மக்களால் அதன் மொழியால் உருவாக்கப்படும் படைப்புகள், சேகரிப்புகள், ஒழுங்குகள், நடைமுறைகள், விழாக்கள் போன்றவை உதவும். இவ்வகைப் புதுப்பித்தலில் புனைவுலகத்தாரின் பங்களிப்பு பெரும் முக்கியத்துவம் பெரும். இன்றைய தமிழ் உலக மக்கள் முகவரி அற்று, கண்டதே காட்சி கொண்டதே கோலம், எல்லாமே இன்பமயம் என்கிறதாய் மாறி நிற்க புனைவுலகப் போலிகள் தான் மிகவும் முக்கிய காரணிகளாய் நிற்கின்றார்கள்.

சூதும், வாதும், பொய்யும், புரட்டும், களவும், திருட்டும் கொண்டலையும் போலிகளிடமிருந்து தமிழர்கள் மட்டுமல்ல உலக மக்கள் தங்களை மீட்டெடுத்துக் கொள்ள பெரும் தன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எப்படி நடக்கும், எங்கு நடக்கும், யார் முன்னெடுத்துச் செல்வார் என்பதெல்லாம் காலம் தான் சொல்ல வேண்டும்.

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்

Tuesday, December 20, 2011

விடைகள் தவறாகவே வரும் கணக்குகள்



அரசியல் இன்றி இவ்வுலகம் அணு அளவு கூட இயங்காது. ஆனால் அரசியலில் ஒரு பிரச்சினை இருக்கிறது. அது என்னவென்றால் அரசியல் கணக்குகள் எதுவும் மிகச் சரியான விளைவுகளை அல்லது விடைகளைத் தருவதே இல்லை. இவ்வகைக் கணக்குளின் விடைகள் முற்றிலும் தவறானதாகவே முடிந்து போய் விடும்.

நேருவின் காஷ்மீர் கணக்கு, இந்திரா காந்தியின் ப்ளூ ஸ்டார் கணக்கு, ராஜீவ் காந்தியின் அமைதிப்படைக் கணக்கு, சஞ்சய் காந்தியின் அரசியல் கணக்கு, 2ஜியில் திமுகவின் கணக்கு, சினிமாவில் சன் குழுமத்தாரின் கணக்கு என்று நமக்குத் தெரிந்த பல கணக்குகளின் விடைகள் அனைத்தும் கணக்குப் போட்டவர்களுக்கு எதிராய் திரும்பியது வரலாறு.

அரசியல் என்பது ஆற்று வெள்ளம் மாதிரி. பதவிகள் என்பது அதில் மிதக்கும் துரும்பு மாதிரி. ஆனால் பதவி என்ற அந்தஸ்து வரும் போது கூடவே மூளை நோயும் வந்து விடும். யோசிக்க மறக்க வைக்கும் நோயை பதவி கூடவே கொண்டு வந்து விடும்.

2ஜியில் எளிதாய் தப்பி இருக்கலாம். அதாவது எந்த ஒரு ஊழலையும் சத்தமே இல்லாமல், யாருக்கும் தெரியாமல் செய்யலாம். ஆனால் பதவியில் இருப்பவர்களுக்கு அந்தளவுக்கு யோசிக்கவே முடியாது. வழக்குகளில் இருந்து  வெகு எளிதாய் வெளியேறலாம் அது கொலைக் குற்றமாய் இருந்தாலும் கூட. அதற்குத் தேவை ஒன்றே ஒன்று தான் புத்திசாலித்தனம். அந்தப் புத்திசாலித்தனம் பதவியில் இருப்போரிடத்தில் இருக்கவே இருக்காது. அல்லக்கைகளிடம் கூட காண முடியாது. 

மக்கள் போடும் கணக்கு எப்படித் தவறாகிறது என்பதை இப்போது பார்த்து விட்டு இப்பதிவை முடிக்கலாம்.

தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? அவன் மக்களோடு மக்களாய் வாழ்ந்தவனாய் இருக்க வேண்டியது முதல் படி. அடுத்து அவன் மனிதாபிமானம் மிக்கவனாய் இருத்தல் வேண்டும். அடுத்து எதையும் பகுத்தறிவு செய்து பார்ப்பவனாய் இருத்தல் வேண்டும். மக்களின் நன்மையை உத்தேசிப்பவனாய் இருத்தல் வேண்டும். ஆனால் இன்றைய எந்த ஒரு அரசியல்வாதியும் அப்படி இருக்கின்றார்களா? என்று ஒரு நிமிடம் கண் மூடி யோசித்துப் பாருங்கள் உங்களுக்குத் தெரியும் அரசியல். 

நல்லது செய்வார் என்றெண்ணி யாருக்கு ஓட்டுப் போடுகின்றார்களோ அவர்களின் தகுதி என்னவென்று தெரியாமல் இருப்பதால் மக்களின் நல்லது கணக்கு முடிவில் தவறான விடை தருகிறது. அதன் காரணமாய் அடுத்தவர் தேர்வாகின்றார்கள். போடக்கூடிய கணக்கில் தவறு இருக்கும் போது விடை என்ன சரியாகவா வந்து விடும் ?

அரசியல் என்பது மாயக்கயிறு. அதில் தலைவர்களெல்லோரும் ஊசலாடும் பொம்மைகள். மக்கள் பொம்மைகளின் ஆட்டங்களை வேடிக்கை பார்க்கும் ரசிகர்கள். தங்கள் உரிமை பரிபோவதைப் பற்றிய கவலை கிஞ்சித்தும் இல்லாமல் மயங்கிக் கிடக்கும் மடமைகள்.

அரசியல் பற்றிப் பேசி வீணாய் பொழுதினைப் போக்க வேண்டாம் என்பதற்குத்தான் இப்பதிவு. இனி இன்னும் பலப் பல செய்திகளை உங்களுடன் பகிர்வேன். அதுவரை தொடர்ந்திருங்கள். 

- அன்புடன் கோவை எம் தங்கவேல்

Thursday, December 8, 2011

மையலும் காதலும்

உதயணனன் - வாசவதத்தை கதை தெரியுமா உங்களுக்கு?  ஐங்குறு காப்பியத்தில் ஒன்றான பெரும்கதையின் கதாமகன் தான் உதயணன். இசைக்கு மயங்காதோர் யாதுமில்லை இவ்வுலகிலே என்பதற்கு உதாரணமாய் தன் ”கோடபதி” என்னும் யாழ் இசையால் வெறி கொண்ட யானையைக் கூட மயக்கும் திறமை கொண்டவன் இந்த உதயணன். இந்த உதயணனுக்கு மனைவிகள் ஏராளம். ஆனால் அவனின் முதல் மனைவியும், காதலியுமானவள் “வாசவதத்தை” என்பாள். பொதுமையை அவன் மணமுடிக்க காரணமே அவள் வாசவதத்தையைப் போன்று இருந்தாள் என்பதற்காகத்தான் என்று  நா.பார்த்தசாரதி “வெற்றி முழக்கம்” என்ற நூலில் எழுதியிருக்கிறார். காதல் என்பது வேறு. மையல் என்பது வேறு. மையலைக் காதலாய் கருதுவதால் கொலைகள் நடக்கின்றன. விவாகரத்துக்கள் நடக்கின்றன.

சினிமாக்களில் இன்றைய காதலை “பார்த்தவுடனே உள்ளுக்குள் பொங்கி வரணும்” என்ற முறையில் வரையறுக்கின்றார்கள். பார்த்தவுடனே பொங்கி வருவது காதல் அன்று அதன் பெயர் மையல்.  மையலைத் தான் இன்றைய உலகம் “காதல்” என்கிறது. மையல் கொண்டால் அதன் முடிவு எரிச்சல் தரும். ஒரே மனது ஒன்பதாய் மாறுவதும் மையலின் முடிவில்தான்.

மையல் வந்ததும் பற்றி எரிய வைப்பதும், மையல் தீர்ந்ததும் இல்லாதவைகளை எல்லாம் முன்னே கொண்டு வந்து நிறுத்துவதும் மனதுதான். அனிச்சை செயலாய் காற்றுக்கு ஒதுங்கும் துணியை இழுத்து விடும் பெண்ணின் கையும், மையலும் ஒன்றே !

மையல் கொண்ட காதல் எப்படி இருக்கும் என்பதற்கு உங்களுக்கு ஒரு நீண்ட கவிதையை படிக்க அளிக்கிறேன். இக்கவிஞனின் கவியோட்டத்தின் ஊடே நீங்கள் நுகரப் போகும் அந்தத் தன்மைதான் “மையல்”.
இதோ அந்தக் கவிதை வரிகளின் இணைப்பு -> சலனம் - ஜேவியர் தாசையன்

காதல் என்பது என்ன தெரியுமா? 

பிரதிபலன், குற்றம், குறை பாராமல் அப்படியே ஏற்றல். எங்கே உங்கள் மனதினை ஒரு முறைத் தொட்டுச் சொல்லுங்கள் பார்ப்போம். உங்களிடம் இருப்பது என்னவென்று?


- இனிய வணக்கங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Tuesday, November 29, 2011

பள்ளியறையின் மிச்சமே வாழ்க்கையின் தத்துவம்

அறுவடைக் காலமது. வயலில் வடகாட்டிலிருந்து வந்த வேலையாட்கள் கதிரறுத்து, நெல் தூற்றி மூட்டைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஜோசப் வாத்தியாரிடம் டியூசனுக்குச் சென்ற நானும், என் தங்கையும் ஆறரை மணிக்கெல்லாம் திரும்பி விடுவோம். அன்றைக்கு எட்டு மணி வரையிலும் வராது கண்டு, வீட்டிற்கு நெல்மூட்டை கொண்டு வந்த வேலையாட்களுடன், உறவினர்கள் சேர்ந்து தேட ஆரம்பித்து விட்டனர்.

நாங்கள் இருவரும் நாட்டியக் குதிரை ஸ்பெஷல் கேள்விப்பட்டிருப்பீர்களே, குதிரைக்கார வி எஸ் எம் ராவுத்தர் வீட்டில் “பாசமலர்” திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தோம். வீட்டில் நடந்த களேபரம் எதுவும் தெரியவில்லை. வெளி நாட்டிலிருந்து வந்த வீடியோ பிளேயரில் படம் போட்டிருந்தார்கள். அப்போதெல்லாம் டிவி என்பது பெரிய அதிசயம்.

இந்திராகாந்தி இறந்த போதும், எம் ஜி ஆர் இறந்த போதும் என் நண்பனின் வீட்டில் இருக்கும் டிவியில் நேரடி ஒளிபரப்பினைப் பார்த்தோம். கிட்டத்தட்ட 500 பேருக்கும் மேல் இருப்பார்கள். எம் ஜி ஆருக்கு கூட்டம் அதிகம் என்றுப் பேசிக் கொண்டது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.

எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து மாமாவிடம் பூவரசன் கம்பால் நான்கு அடிகள் வாங்கிக் கொண்டோம். வேலைக்கு வந்தவர்கள் மாமாவின் கோபத்தைச் சரி செய்தார்கள்.தங்கைக்குத்தான் தடித்துப் போய் விட்டது. அடுத்த ஒரு வாரத்தில் மாமா ஆபீசில் லோன் போட்டு பெரிய டயனோரா டிவி ஒன்றினைக் கொண்டு வந்து விட்டார். கருப்பு கலரில் இரண்டு பக்கமும் திறக்கும்படியான பிளாக் அண்ட் வொயிட் டிவி அது. படத்தினைக் கீழே பார்த்துக் கொள்ளுங்கள்.



எனக்கு சிலோனின் ரூபவாகினிதான் பிடிக்கும். ஊர் கடற்கரையோரம் இருந்ததால், சிலோன் ரேடியோவும், எப்போவாவது ரூபவாஹினி டிவியும் கிடைக்கும். அவ்வப்போது தமிழ் நாடகங்கள் கூட போடுவார்கள். படம் பிரிண்ட் செய்தாற்போல இருக்கும்.

டிவி ஆபரேட்டராய் மாறிய பின்பு வெள்ளிக்கிழமை ஞாயிற்றுக் கிழமைகளில் படம் பார்க்க கூட்டம் கூடும். மளிகைக் கடை செட்டியாருக்கு கிரிக்கெட் என்றால் பைத்தியம். கடையை யாராவது பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு, கிரிக்கெட் நாட்களில் வீட்டுக்கு வந்து டிவி போடச் செய்து என்னை எரிச்சல் படுத்துவார். ஆனாலும் அவர் கொண்டு வந்து தரும் மேரி பிஸ்கட், பட்டாணி, பேரீச்சைக்கு ஆசைப்பட்டு நானும் கிரிக்கெட் பார்ப்பதுண்டு. செட்டியார் மாமாவின் நண்பர் வேறு என்பதால் மறுக்கவெல்லாம் முடியாது. இந்த அன்பினால் அவரின் கல்லாப்பெட்டிக்கு காவலனாய் கோடை விடுமுறையில் அவரிடம் வேலைக்குச் சென்றதுண்டு. மாதம் 50 ரூபாய் கொடுத்தார். அத்துடன் தினமும் இலவச இணைப்பாய் ரொட்டிகளும், பேரீச்சையும் ஒரு பள்ளிக்கூடப் பையும் கொடுத்தார்.

இப்படியான நாட்களில் எங்கள் வீட்டுக்கு இடது பக்கமாய் மரக்காட்டுக்குள் இருந்த ஒரு வீட்டின் பெண்மணி அடிக்கடி டிவி பார்க்க வருவார். எம் ஜி ஆர் பாடல் என்றால் அவருக்கு உயிர். விபரம் தெரியாத வயதில் அவர் சொல்லியது எனக்கு இப்போதும் நினைவில் இருக்கிறது. “வீட்டுக்காரனுடன் படுத்துக் கொண்டிருக்கும் போது, நான் எம் ஜி ஆரைத்தான் நினைச்சுக்குவேன்” என்றார் அந்தப் பெண்.


சாகித்ய அகாடமி பரிசு பெற்ற திரு நீல பத்ம நாபன் அவர்களின் பள்ளிகொண்டபுரம் நாவலைப் படிக்க நேர்ந்த போது, நாவலின் பிரதான கதாபாத்திரமான அனந்தன் நாயரின் வாழ்க்கையை எழுத்தின் மூலம் உணர்ந்தேன்.


கதை ஒன்றும் முக்கியமில்லை. கதாபாத்திரப் படைப்பின் மூலம் உலக வாழ்வியலை அலசுதல் என்பதுதான் முக்கியமானது. இந்த நாவலின் ஹீரோவான அனந்தன் நாயரின் மனைவி கார்த்தியாயனி வேறொருவருடன் ஓடிப் போய் விடுவாள். அனந்தன் நாயரின் வீழ்ச்சி இங்கு ஆரம்பமாகிறது. ஒரு நாள் வாழ்க்கையோடு அவரின் கதை நினைவுகளின் சொச்சமாய் எழுத்தாய் வரும் போது வெளிப்படும் நிதர்சன உண்மைகள் பலவும், சிந்தித்துப் பார்க்கையில் மனிதன் தனக்குள்ளே போட்டுக் கொண்ட அவிழ்க்க முடியா முடிச்சுக்கள் ஒவ்வொன்றிற்கும் அவனே காரணமாய் இருப்பதினை நீல பத்ம நாபன் வெகு அழகாய் வெளிப்படுத்தி இருப்பார். மனிதனின் வீழ்ச்சிக்கும், உயர்வுக்கு அவனே காரணம் என்பதை இந்தப் பள்ளிகொண்டபுரம் நாவல் வெளிப்படுத்தி இருக்கிறது. 

இளம் வயது வாலிபன் ஒருவன் வரப்போகும் முதுமை காலத்தினை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால், பொருள் சார்ந்த ஆடம்பர வாழ்க்கையின் மிச்சத்தை அவனால் நிச்சயம் உணர முடியும். மனிதனாகப் பிறந்த எவருக்கும் முதுமை வந்தே தீரும் என்கிற போது, இன்றைக்கே வாழ் என்கிற உணர்ச்சி ததும்பும் இன்பம் தரும் வாழ்க்கை என்பது போலியானது என்பதை அறிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி ஆணுக்கு வாழ்க்கை என்பது திருமணப் பந்தத்தின் மிச்சமாய் கண் முன்னே நடமாடும் வாரிசுகளை வைத்துத் தான் தொடரும். உடலிச்சை மீதான ஆர்வம் பின்னர் மயங்கிக் கிடக்கும் பாச வலைக்குள் வாரிசுகளிடம் சிக்கிய பின்புதான் முழுமையடைகிறது. 

பள்ளிகொண்டபுரம் நாவலைப் படித்த போது மேலே நான் சொன்ன பெண்மணியின் கூற்றும், நம் வாழ்க்கையின் தத்துவமே பள்ளியறையின் மிச்சமாய் இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டேன்.  நேரமிருந்தால் ஒரு முறை வாசித்துப் பார்க்க வேண்டிய முக்கியமான நாவல்தான் “பள்ளிகொண்டபுரம்”.

இந்த நாவல் பற்றி திரு ஜெயமோகன் எழுதியிருக்கும் பத்தியினை நீங்கள் அவசியம் படித்துப் பார்க்க வேண்டும். 


- கோவை எம் தங்கவேல்

* * * * *

Monday, November 28, 2011

அக்கினிப் பிஞ்சுகள் வளர்கின்றன

பெரியாரின் வாசகம் ஒன்றினை எனக்கு முன்பு சென்று கொண்டிருந்த ஒரு கால் டாக்ஸியில் படித்தேன். “தானாக உருவாக முடியாத மனிதன், தனக்காக வாழ்வதில் என்ன நியாயம் இருக்கிறது”. திராவிட நாடான தமிழகத்தில் பெரியாரின் சிந்தனைகளை இக்கால இளைஞர்கள் படித்து அறிய யாரோ ஒரு இயக்கத்தார் கோர்ட்டில் பெரும் போராட்டங்களை நடத்த வேண்டி இருந்தது. கால் டாக்ஸியில் ஒரு மாபெரும் தமிழகப் புரட்சியாளனின் சிந்தனையைப் படிக்கும் அவலம் என்னைத் தொடர்ந்து வரும் சந்ததியினருக்கு கிட்டாமல் போக வேண்டுமென்று பெரியார் மறுத்த அந்த கடவுளிடம் விண்ணபிக்கிறேன்.

இவ்வாறான அரசியல் வித்தைகள் நிரம்பிய இந்தியாவில், சமீப காலத்தில் செய்திச் சானல்கள்  அமைச்சர் ஒருவருக்கு சீக்கிய சகோதரன் ஒருவர் கன்னத்தில்  விட்ட அறையினை அடிக்கடி ஒளிபரப்பின. விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அந்த இளைஞன் ஜெயிலில் கிடக்கிறார். இந்த இளைஞரை அடிக்க அமைச்சரின் கட்சிக் கூட்டத்தார் முண்டியடித்ததையும் சானல்கள் காட்டின. தனி மனிதன் செய்தால் குற்றம், அதே கட்சிக் காரன் செய்தால் போராட்டம் என்கிறது இந்திய அரசியலைப்புச் சட்டம். இப்படி ஒரு நகைப்புக்கிடமான சட்டங்கள் இந்தியாவை ஆள்வது கண்டு எரிச்சல் தான் ஏற்படுகிறது.

இந்திய அரசியல்வாதிகள் எவரும் மக்களின் மீது அபிமானம் கொண்டவர்களாய் இல்லை. எவருக்கும் இங்கே அக்கறை இல்லை. அதன் பிரதிபலன் தான் அரசியல்வாதிகள் மீதான அடி உதைகள். இனி வரும் காலங்களில் அரசியல்வாதிகளுக்கு மாபெரும் ஆபத்தினை மக்கள் உருவாக்கப் போகின்றார்கள் என்பதை ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கு பெற்ற மக்கள் சொல்லாமல் சொல்கின்றார்கள். காவல்துறையினர் இன்றி எந்த ஒரு அரசியல்வாதியும் தெருவில் நடமாட முடியாத நிலையில் தங்களின் பொதுவாழ்க்கையினைச் சகதிக்குள் திணித்துக் கொள்கிறார்கள். 

ஒரு எம் எல் ஏ (இவர் லண்டனில் “வணக்கம் லண்டன்” என்ற நிகழ்ச்சியை நடத்தியதை சானல் ஒன்று வெளியிட்டது ) தொகுதிப் பக்கமே வரவில்லை என்று எஸ் எம் எஸ் தட்டி அது அவரின் கவனத்திற்கு வந்து, அடித்துப் பிடித்துக் கொண்டு தொகுதிக்குள் செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது. மக்களுக்கு சேவை என்றால் அது மக்களின் பணத்தினைக் கொள்ளை அடிப்பது என்ற புதுவகையான சித்தாந்தத்தை அரசியல்வாதிகள் உருவாக்கியதன் விளைவுகளை அவர்கள் அனுபவித்தாக வேண்டிய தருணத்தில் நிற்கின்றார்கள்.

அரசியல்வாதிகள் பஞ்சுப் பொதிகளை போன்றவர்கள். அடி விழாமல் தப்பித்துக் கொள்ள தற்போதைக்கு வேண்டுமானால் முயலலாம். ஆனால் இளைஞர் கூட்டத்தில் ஒரே ஒருவன் பொங்கி எழுந்தான் என்றால் அவன் சின்னஞ் சிறு அக்கினிப் பிஞ்சாய் மாறி நிற்பான். அதுமட்டுமல்ல அவனைக் கொண்டே பல அக்கினிகள் உருவாகும். பஞ்சுப் பொதிகள் மீது அக்கினிப் பிஞ்சுகள் பட்டால் என்ன ஆகும் என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். 

கடைசியில் போகின்ற வழிக்கு கூட கோடி கோடியாய் கொட்டி வைத்து இருக்கும் தங்க கட்டிகள் கூட வராது. அக்கினிப் பிஞ்சுகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பஞ்சுப் பொதிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கால கட்டம் இது.

- அன்புடன் கோவை எம் தங்கவேல்


* * * * *

Thursday, November 24, 2011

சாகித்ய அகாதமி பரிசு நூல் - கார்மேகம்


படிப்பதென்பது அலாதியான இன்பம் தரும் தனிப்பட்ட ஒரு உலகம். அவ்வுலகில் நீண்ட நாளாக வாசம் செய்ய நேரம் கிடைக்கவில்லை. தற்போதைய பவர் கட் கிட்டத்தட்ட 5 மணி நேரம். காலையில் இரண்டு மணி நேரம், மாலையில் இரண்டு மணி நேரம், இரவில் ஒரு மணி நேரம் என்று மின்சாரம் போய் வருகிறது. மின்சார ஊழியர்கள் எந்த வேலையைச் செய்கிறார்களோ இல்லையோ, பவர் கட் செய்வதை மிக மிகவும் சரியாய் செய்கின்றார்கள். வாங்கும் காசுக்கு ஏற்ற வேலை.

தேர்தல் காலங்களில் மட்டும் காணாமல் போகும் ‘பவர் கட்’ தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் வருவது எப்படி என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும். இதெல்லாம் புரிந்து கொள்ள முடியாத அரசியல் மர்மம். அது எதற்கு நமக்கு. இந்த பவர் கட்டையும் ஏதாவது பிரயோசனமாய் மாற்ற வேண்டுமே என்ற கவலைக்கு தீர்வாய் வந்தது வீட்டுக்கு அருகில் இதுகாறும் மறைந்து இருந்த ஒரு அரசு நூலகம். உறுப்பினர் அட்டையும் பெற்றுக் கொண்டேன். 925 ராசியான நம்பரா என்று நியூமராலஜி நண்பரிடம் விசாரிக்க வேண்டும்.

இந்த சாகித்ய அகாதமி என்கிறார்களே, அது ஏதோ அவார்டு கொடுக்கின்றதாமே என்றெல்லாம் “இலக்கியவாதிகள்” எழுதி இருப்பதைப் படித்த தினத்திலிருந்து எனக்குள் ஒரு ஆசை கிளர்ந்திருந்தது. அவ்வப்போது தோன்றி மறையும் அந்த ஆசை நூலகத்தில் உறுப்பினர் ஆனவுடன் பூதமாய் எழுந்தது பிற நூல்களைப் பார்க்கும் ஆசையைத் தடுத்தது. சாகித்ய அகாதமியின் செலக்‌ஷனைப் பற்றிப் புரிந்து கொள்ள முயற்சித்தேன்.

கையில் சிக்கியது “சாகித்ய அகாதமி பரிசு பெற்ற ஜி.விவேகானந்தன் என்ற கேரளாக்காரரின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் கார்மேகம்”.

நான்கு மணி நேர பவர் கட்டினை சாகித்ய அகாதமியின் தேர்வின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள செலவழித்தேன். மொழிபெயர்ப்புச் சரியில்லை என்றால் நாவலின் லட்சணம் வீட்டிற்கு ஒன்பது வாசல் வைத்தது போலாகி விடும் என்பதை இந்த நூலின் மூலமாய் தெரிந்து கொண்டேன். அந்தளவுக்கு தட்டையான மொழி பெயர்ப்பு. மூலம் நன்றாக இருந்திருக்கலாம். அதை இந்த ஜென்மத்தில் படிக்க முடியாது. ஒரு மொழியை தெரிந்து வைத்துக் கொண்டே தமிழர்களின் நூல்களைப் படிக்க முடியவில்லை. மலையாளம் வேறு கற்றுக் கொண்டால் என்ன ஆவது?

இனி கதை : பிரபாகரனுக்கு தன் மனைவியின் மூலம் குழந்தை பிறக்கவில்லை என்ற கவலை. அதைப் புரிந்து கொண்ட மனைவி மாலதி, தன் உதவியால் படிக்கும் தன் தங்கை சாந்தாவை தன் கணவனுக்கு கட்டி வைக்கின்றார். இதற்கு சாந்தாவின் அம்மாவும் உடந்தை. ஒரு வழியாக பிரபாகரனுடன் சாந்தாவிற்கு முதலிரவும் நடக்கிறது. அதன்பிறகு உண்டான ஈகோவினால் மாலதி தன் அம்மா வீட்டுக்குச் செல்ல, சாந்தாவை கவனிக்க மறக்கிறார் பிரபாகர். காரணம் வயது வித்தியாசம். கோபம் கொண்ட சாந்தா அம்மா வீட்டுக்கு வந்து விட, மாலதி மீண்டும் கணவனுடன் வந்து தங்க, மாலதி கர்ப்பவதியாகின்றாள். சாந்தாவின் அம்மா, அதாவது மாலதியின் அம்மா சாந்தா இனி என்ன செய்வது என்று கேட்க, என் மீது பாசமிருக்கா என்றெல்லாம் ஆலாபனை செய்து தன் கணவனைக் கட்டிக் கொள்ள வைத்த தங்கையை, அதை அவளே முடிவு செய்யட்டும் என்கிறாள் மாலதி. வெறுத்துப் போன சாந்தா இரண்டு மாதங்களாய் தாய் வீட்டில் இருந்தும் கவனிக்காத பிரபாகரன், தங்கையைக் கண்டுகொள்ளாத மாலதி இவர்களுக்கிடையே மனத்துன்பம் அடையும் சாந்தா, தற்கொலை செய்து கொள்கிறாள். இது தான் கதை.

மாலதி தன் தங்கையை தனக்காக தியாகம் செய்யச் சொல்கிறாள். இந்தக் கதையின் மூலம் நாம் முக்கியமான படிப்பினை அறிந்து கொள்ள வேண்டும். பாத்திரமறிந்து பிச்சையிடு என்பார்களே அதைத்தான் நான் சொல்ல வருகிறேன். தியாகம் யாருக்காசச் செய்கிறமோ அவர்களுக்கு அதைப் பெற தகுதியும் வேண்டும், யாருக்காக தியாகம் செய்கிறோம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் தியாகம் என்ற பெயரால் ஏமாற்றப்பட நேரிடும். உலகில் “ஏமாளிகள்” அதிகம். ஏனென்றால் அவர்களைத் தியாகிகள் என்கிறார்கள். தியாகிகளின் இன்றைய நிலை பென்சன் என்பதுதான் முடிவு.

சாகித்ய அகாதமி விருதுக்கு இக்கதை தேர்ந்தெடுக்கப்பட்ட காரணம் தான் இன்னும் எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை எனக்குப் புரியாத இக்கதை தேர்வாளர்களுக்குப் புரிந்திருக்குமோ? தெரியவில்லை. உலகில் தெரிந்து கொள்ள முடியவே முடியாத விஷயங்கள் தானே அதிகம். சாகித்ய அகாதமியின் பரிசு பெற்ற இன்னும் பல நூல்களைப் படித்துப் பார்த்து எழுத முயற்சிக்கிறேன். தற்போதைக்கு சாகித்ய அகாதமி ஏதோ எரிச்சல் தான் இருக்கிறது. தகுதி உடையவர்களை சமூகம் அங்கீகரிக்க வேறு விதிகள் வைத்திருக்கும் போல.

- கோவை எம் தங்கவேல்
24/11/2011 - 11 .26 ஏஎம்.

* * * * *

பணம் என்றால் என்ன?



பணம் என்கிற பொருள் மனிதர்களின் வாழ்க்கையை நிர்மாணிக்கும் ஒரு சக்தி. பெரும்பகுதி மக்கள் பணத்தேடலில் தான் வாழ்க்கையே அடங்கி இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு அரசு ஊழியரை எடுத்துக் கொள்ளுங்கள். 58 வயது வரையிலும் உழைத்துக் கொண்டிருப்பார். ரிட்டயர்ட்மெண்ட் ஆனதும் கிடைக்கும் பென்ஷனில் நிம்மதியாய் வாழ்கிறோம் என்று நினைக்கும் தருவாயில் அவர் அடையும் மனக்குழப்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அரசு அலுவலில் இருந்து ரிட்டயர்ட் ஆன பல நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது “ மிக மோசமான வாழ்க்கை” என்ற வாக்கியத்தை அவர்களிடமிருந்து கேட்டிருக்கிறேன்.

அரசு வேலை, நிரந்தர வருமானம், நிம்மதியான வாழ்க்கை என்று மூளைச்சலவை செய்யப்பட்டிருந்தோம் என்பார்கள் அவர்கள். வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் ஏகப்பட்ட நிராசைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களைப் போன்றோர்களுக்கு சொல்வெதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவர்கள் அடைந்திருக்கும் மனக்குழப்பத்திற்குக் காரணம் சமூகத்தின் பிரதிபலிப்பு. மனித சமூகம் மனிதர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை மட்டுமே முன்னிலைப்படுத்துவதால் வந்த பிரச்சினை இது. இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். அதெல்லாம் மனதைச் சுடும் உண்மைகள். நேரமிருக்கும் போது எழுதுகிறேன்.

கோவை ஆவாரம்பாளையம் சென்றிருந்தேன். போன வேலை முடிந்து பேக்கரி ஒன்றில் “லெமன் டீ” ஆர்டர் செய்து விட்டு பேசிக் கொண்டிருந்தேன். அப்போது ஸ்கோடா கார் ஒன்று அருகில் வந்து நின்றது. நண்பரின் நண்பர் அவர். சாதாரண ரிஸ்ட் வாட்ச், வெகு சாதாரண பேண்ட், சர்ட்டில் இருந்தார். அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் நண்பர். அவருக்கு என்னை மிகவும் பிடித்து விட, “தங்கம், என்னுடன் வருகின்றீர்களா, ஒரு இடத்திற்குச் சென்று வரலாம், நீங்கள் பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார்.

கோவையின் மிகப் பிரதான இடத்தில் புதிதாய் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் நான்கு மாடி குடியிருப்புப் பகுதி ஒன்றிற்கு அழைத்து சென்றார். வேலை செய்து கொண்டிருந்தோர் இவரைப் பார்த்ததும் ஒரு வித அட்டென்ஷன் நிலைக்கு வர, இவர்தான் ஓனர் என்று முடிவு கட்டினேன். கிட்டத்தட்ட 100 கோடிக்கும் மேல் இன்வெஸ்ட்மெண்ட். ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. வெகு சாதாரணமாய் இருப்போரிடம் இப்படி ஒரு திறமை. குடியிருப்பினை பார்வையிட்டு விட்டு, மீண்டும் அந்த ‘லெமன் டீ’ கடைக்கு வந்து சேர்ந்தோம். மார்க்கெட்டிங் செய்வது பற்றி பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பினேன்.

25 லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் இன்று ஆயிரம் கோடிக்கும் மேல் முதலீடு பெருக்கி இருக்கிறது. எப்படி என்ற காரணத்தை அவர் சொல்லக் கேட்டேன். அவர் எதுவும் புதிதாய்ச் சொல்லி விடவில்லை. அவர் சொன்னது எல்லாம் பல புத்தகங்களில் சொல்லப்பட்டிருப்பதுதான்.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் இருக்கிறார். அவரிடம் 50 கோடிக்கும் மேல் சொத்து இருக்கிறது. எவராவது சொந்தக்காரர் வந்தால் 1000 ரூபாய் கொடுக்க அவரால் முடியாது. ஏனென்றால் அத்தனை காசு இருந்தும், அந்தக் காசு அவருக்கு உபயோகப்படவில்லை. அதை வைத்து, அவரால் தொடர்ந்து சம்பாதிக்க முடியவில்லை.  உண்மைக் காரணம் அவருக்கு புத்திசாலித்தனம் இல்லை.

புத்திசாலித்தனம் என்றால் என்ன என்பதற்கு ஒரு கதை.

நிலத்துடன் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் என் நண்பரொருவர் 20 அறைகள் கொண்ட காம்பளக்ஸைக் கட்டினார். அதை பெரிய நிறுவனம் ஒன்று வாடகைக்கு எடுத்தது. மாதம் ஒன்றரை லட்ச ரூபாய் வாடகை. இரண்டு தேதிக்குள் வங்கியில் சேர்ந்து விடும். இவ்வளவு வாடகை கொடுக்கும் அந்த நிறுவனத்திற்கு, இந்த வாடகைச் செலவால் மாதம் ஐந்து லட்ச ரூபாய் செலவு மிச்சமாகி லாபமாகி விட்டது. எப்படி என்கின்றீர்களா? அந்த நிறுவனம் வெளி நாட்டில் இருந்து வரும் கிளையண்டுகளுக்கு தங்குமிடம், உணவு என்ற வகையில் தினம் தோறும் 25,000 ரூபாய் செலவு செய்து வந்தது. இப்போது யார் வந்தாலும் தங்குமிடம் ஸ்டார் ஹோட்டலுக்கும் நிகராய் இருக்கிறது. மாத வாடகை ஒன்றரை லட்சத்துடன், அரை லட்சத்தில் உணவுச் செலவும் ஆகிவிடுகிறது. இருவருக்கு லாபம். எவர் கொடுப்பார் ஒரு கோடிக்கு ஒன்றரை லட்சம் வருமானம்? அதுவும் வெள்ளையில். ஒரு கோடி போட்டு, அதன் மூலம் வருமானம் பெற்ற நண்பரும் புத்திசாலி, ஒன்றரை லட்ச ரூபாய் வாடகைக்கு எடுத்த கம்பெனியும் புத்திசாலி. தினம் 5000 ரூபாய் செலவுக்கு நண்பருக்கு பணம் வந்து விடுகிறது. நண்பர் இப்போது அடுத்த புராஜெக்ட்டிற்கு நிலம் வேண்டுமென என்னை நச்சரித்துக் கொண்டிருக்கிறார்.

எவர் வேண்டுமானாலும் பணம் வைத்திருக்கலாம். அப்பணம் மேலும் பணத்தினைச் சம்பாதித்துத் தர வேண்டும். இல்லையென்றால் அந்தப் பணம் இருந்து யாருக்கு என்ன பிரயோசனம்? அது மண்ணுக்குச் சமானம் அல்லவா?

பணம் என்பது என்னவென்றால் அது மீண்டும் மீண்டும் பல்கிப் பெருகி வழிய வேண்டும். அப்படிப் பெருகவில்லை என்றால் அப்பணமிருந்தும் இல்லை என்பதே உண்மை.

அன்புடன்
கோவை எம் தங்கவேல்

Wednesday, November 16, 2011

ஏமாற்றும் மருத்துவமனைகள்



எனது நண்பரின் நண்பரொருவருக்கு கண்ணில் பிரச்சினை இருப்பது போலத் தோன்றியிருக்கிறது. இந்தியாவில் பிரபலமான ஐ ஹேர் ஹாஸ்பிட்டலுக்குச் சென்றிருக்கிறார். கண்ணில் புரை ஏற்பட்டிருக்கிறது. 25 ஆயிரம் ரூபாய் செலவாகும், உடனே அட்மிட் ஆகுங்கள் இல்லையென்றால் கண் பார்வை போய் விடும் என்றுச் சொல்லி இருக்கிறார். இவருக்கோ பணப்பிரச்சினை வேறு, கண் பார்வை போய்விடுமே என்ற கவலையில் ஆளே ஒரு மாதிரியாகி விட்டார். என்ன செய்வதென்று புரியாமல் மன வேதனையோடு எவரிடமும் சொல்லாமல் திரிந்திருக்கிறார்.

இப்படியான ஒரு நாளில், சரி குலதெய்வத்தின் கோவிலுக்குச் சென்று வருவோம் என்று நினைத்து, கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கி விட்டு வந்திருக்கிறார். காலையில் கண்ணில் இருந்த உறுத்தல் குறைந்தது போல இருந்திருக்கிறது. அடுத்த யோசனையாக வேறு கண் மருத்துவமனைக்குச் சென்று செக்கிங்க் செய்து விட்டு வருவோம் என்று நினைத்துச் சென்றவருக்கு, அம்மருத்துவமனையின் பதில் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. கண் புரை இல்லை என்று அறுதியிட்டுச் சொல்லி இருந்திருக்கிறார்கள். இதற்கிடையில் ஐ கேர் மருத்துவமனையில் இருந்து “எப்போது வருகின்றீர்கள்” என்று டாக்டரே போனில் அழைத்திருக்கிறார். இவரும் ஏதோ சொல்லிச் சமாளித்திருக்கிறார்.

அத்துடன் விடாமல் மேலும் ஒரு மருத்துவமனைக்குச் சென்று செக்கிங் செய்தால், அங்கும் இவருக்கு கண் புரை நோய் இல்லை என்றேச் சொல்லி இருக்கிறார்கள்.

25 ஆயிரம் ரூபாயை பிடுங்க முயற்சித்திருக்கும் இம்மருத்துவமனை அடிக்கடி டிவியில் விளம்பரங்களையும், பெரிய பெரிய இடங்களில் மருத்துவமனையும் கட்டி வருகிறது.

இந்திய சுகாதாரத்துறை இம்மாதிரியான மருத்துவமனைகளின் திருட்டுத்தனத்தை கட்டுப்படுத்த ஏதுவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஒன்றும் கோடிக்கணக்கில் செலவழிக்கும் நடவடிக்கை இல்லை. சரியான திட்டமிடல் செய்தால் இந்தியாவெங்கும் நடக்கும் ஆஃபரேஷன்களைக் கூட கண்காணிக்கலாம். டெக்னாலஜி அந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது. இந்திய அரசு இப்படியான மோசடி மருத்துவமனைகள் நடத்துவோரைக் கண்டறிந்து உடனடியாக ஹாஸ்பிட்டலை மூட வேண்டும். 

கிட்னி திருட்டில் ஈடுபட்ட தமிழக மருத்துவமனைகள் பலவும் தற்போதும் கிட்னி திருடி கல்லாக்கட்டி வருகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. தினசரிகளில் வெளியான கிட்னி திருடிய ஹாஸ்பிட்டல்களின் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதும் புரியவில்லை. இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தன் செயல்பாட்டினை துரிதப்படுத்தவில்லை எனில் நாளடைவில் மோசடி மருத்துவமனைகள் புற்றீசலாய் பெருகிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

உயிரோசையில் வெளிவந்திருக்கும் ஒரு கட்டுரையினை நீங்கள் அனைவரும் படித்தே ஆக வேண்டும். இதோ அதன் இணைப்பு.


அன்புடன்
கோவை எம் தங்கவேல்

Tuesday, November 15, 2011

புற்றுநோயை உருவாக்கும் ரீஃபைண்ட் ஆயில்

கீரீம்,  எடிபிள் கம் ஆகியவற்றை எடுத்த பிறகு உருவாகும் எண்ணெய் தான் ரீஃபைண்டு ஆயில். முற்றிலும் தண்ணீர் போன்ற ஒரு திரவம் தான் ரீஃபைண்ட் ஆயில். சமையலில் உணவு பொறிக்கப்படும் போது, அதிகச் சூட்டினால் இந்த எண்ணெய் போன்ற திரவம் முற்றிலுமாய் சிதைந்து விடுகின்றதாம். இந்த எண்ணெய்யை உட்கொள்வதால் தான், ஆஸ்துமா, தைராய்டு, புற்று நோய் ஏற்படுகிறதாம். கூவிக் கூவி மீடியாக்களில் பல்வேறு கலர் கலரான விளம்பரங்கள் மூலம் இன்று சமையல் எண்ணெய் மார்க்கெட் படு சூடு பிடித்திருக்கின்றது. இந்த எண்ணெய் தான் பல்வேறு நோய்களுக்கும் காரணம் என்று விஜயபாரதத்தில் வெளியான கட்டுரையை தினமணிக் கதிர் வெளியிட்டு இருக்கிறது. கீழே இருப்பது அதன் கட்டிங். படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.


நேற்றைய பதிவான “வெள்ளை மரணம் - பரோட்டா” பற்றிய பதிவிற்கு ஒரு சகோதரர் அச்செய்தியை அனுப்பும்படி கோரியிருந்தார். அவருக்காக கீழே அந்தச் செய்தியின் பட இணைப்பை வெளியிட்டு இருக்கிறேன்.

  
குறிப்பு : முடிந்த வரையில் எனது பிளாக்கில் எனது அனுபவங்களையும், நண்பர்களின் அனுபவங்களையும் எழுதி வருகிறேன். படிக்கும் ந்ண்பர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவியாக இருக்க வேண்டும் என்ற ஆவல்தான் காரணம். பின்னூட்டத்தை நிறுத்தி விட்டேன். என்னை மெயில் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ளவும். அல்லது போனில் அழைக்கவும்.

விரைவில் ஹாஸ்பிட்டல்களில் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள உங்களை அறிவுறுத்தும் ஒரு பதிவினை எழுத இருக்கிறேன். இது உங்களுக்கு நிச்சயம் உதவிகரமாய் இருக்கும் என நம்புகிறேன்.

இதைத் தொடர்ந்து லே அவுட்களில் சொத்துக்கள் வாங்குவது பாதுகாப்பானதா என்பதைப் பற்றியும் எழுத உள்ளேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.

-அன்புடன் கோவை எம் தங்கவேல்

* * * * *

Monday, November 14, 2011

வெள்ளை மரணம் - பரோட்டா

 
 
 
 
 
நேற்றுக் காலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸை படித்துக் கொண்டிருந்த போது, பரோட்டா பற்றிய பத்தியை படித்தேன். ஆச்சரியமும், வெறுப்பும் ஒருசேர உண்டாகியது.

நன்கு அரைக்கப்பட்ட கோதுமையுடன் பென்சாயில் பெராக்ஸைட் சேர்த்த பின்னர்  உருவாவதுதான் “மைதா”. இந்த மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் எதுவும் உடலுக்கு நன்மை செய்வதை விட தீங்குகளைத் தான் தருமாம். இந்த மைதா மாவை ஐரோப்பியன் யூனியன் தடை செய்திருக்கிறதாம்.

மைதா உணவுகள் கிட்னி ஸ்டோன் உருவாக காரணமாக இருக்கின்றனவாம். அதுமட்டுமல்ல இதய சம்பந்தமான நோய்களையும் உருவாக்கும் என்று கோழிக்கோடு மெடிக்கல் கல்லூரியில் அசிஸ்டண்ட் புரபசராக வேலை செய்யும்டாக்டர் மாயா சொல்லி இருக்கிறார் என்கிறது அப்பத்தி.

தமிழகம் மட்டுமல்ல கேரளாவில் மைதா உணவுகள் அதிக அளவு உண்ணப்படுகின்றன. உடலுக்குத் தீங்கு செய்யும் இவ்வகையான மைதா உணவுகளைத் தவிர்த்தே ஆக வேண்டும். இல்லையென்றால் உடலுக்கு நாமே தீங்கினை கொடுத்தது போலாகி விடும். இது பற்றிய முழு கட்டுரையும் நேற்றைய (13.11.2011) சண்டே எக்ஸ்பிரஸ்ஸில் “ WHITE DEATH ON YOUR PLATE - MAIDA, THE COMMONLY USED WHITE FLOUR, COMES WITH A LONG LIST OF ILL -EFFECTS - BY RAGHURAM.R) இருக்கிறது. எனது டிரைவர் நண்பருக்கு கிட்னி ஸ்டோன் வந்து விட்டது. இத்தனைக்கும் அவர் சுத்த சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்தவர். காரணம் என்னவென்று நேற்றுத்தான் புரிந்தது.
 
இந்திய அரசாங்கம் மக்களின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால் உலகிலேயே அதிக சர்க்கரை வியாதி உள்ள நாடு என்ற அடைமொழி பெற்ற இந்தியா, உலகிலேயே அதிக நோயுள்ளவர்களின் நாடு என்ற அடைமொழியைப் பெற்று விடும் தூரம் அதிகமில்லை. ஆரோக்கியத்திற்கு கேடான எவற்றையும் விற்க அனுமதி மறுக்கப்பட்டாலே போதும். இந்திய அரசு செய்யுமா என்பதெல்லாம் கடவுளுக்கு வெளிச்சம். அரசாங்கம் செய்வதற்கு முன்பு நாம் எந்த உணவுகள் உடலுக்குத் தீங்கு தரும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். பரோட்டா உணவு ஆரோக்கியமற்ற உணவு என்பதை. அதையாவது நாம் செய்யலாம்.

ஆரோக்கியத்திற்கு உகந்த எண்ணெய் என்று இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த ஒரு வகை எண்ணெய் பற்றி நாளை எழுதுகிறேன். படித்தவுடன் உங்களுக்கு நிச்சயம் திகில் தான் கிளம்பும். கோவை மட்டுமல்ல தமிழகமெங்கும் கடை விரித்திருக்கும் ஒரு மெடிக்கல் செண்டரில் என் நண்பருக்கு நடைபெற்ற திகில் அனுபவத்தையும் எழுதுகிறேன். அதுவரை பொறுத்திருங்கள் !
 
- அன்புடன் கோவை எம் தங்கவேல்

* * * * *