குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சமயம். Show all posts
Showing posts with label சமயம். Show all posts

Saturday, December 16, 2017

மக்களை முட்டாளாக்கும் பத்திரிக்கைகளும் மீடியாக்களும்

பல்வேறு செய்திகளையும், நாட்டு நடப்புகளையும் நம் வீட்டுக்கே கொண்டு வருபவை செய்திதாள்களும், டிவி மற்றும் இணையதளங்கள். ஆனால் இவைகளில் வெளிவரும் செய்திகளின் உண்மைத் தன்மை என்ன? என்பது பற்றி எவரும் சிந்திப்பதே இல்லை. ஒவ்வொரு மீடியாவும் தங்களுக்கு ஏற்றவாறு செய்திகளை திரித்து வெளியிடுகின்றன என்று பேசுவோம். ஆனால் அதை மறந்து விட்டு, அந்தச் செய்திகள் உண்மை என நினைத்து விடுகிறோம். இந்த இடத்தில் தான் நாம் நம்பிக்கை என்று மன ஏற்பால் ஏமாற்றப்படுகிறோம்.

ஆடு தன் முன்னாள் செல்லும் ஆட்டின் வாலைப் பார்த்துக் கொண்டே செல்லும் என்பார்கள். அதே போல தினசரிகளில் வரும் செய்திகள் ஒவ்வொன்றும் உண்மை என்று நம்பிக்கொண்டு இன்றைக்கும் டீக்கடைகளிலும், பலர் ஃபேஸ்புக்கிலும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு விவாதித்துக் கொண்டு, கமெண்ட், லைக்குகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முன்பு டீக்கடை, இப்போது ஃபேஸ்புக், டிவிட்டர். ஆனால் ஏமாறுவது நாம் என்று அறியாமலே ஏமாந்து கொண்டிருக்கிறோம். பத்திரிக்கைகள் என்றைக்கு கட்சி சார்பானதாக மாறியதோ அன்றைக்கே மீடியா தன் தர்மத்தை இழந்து விட்டது. பேனாவின் நிப் உடைந்து போய் அரசியல் சாக்கடையில் விழுந்து விட்டது. பத்திரிக்கைகளில் பேனா நிப்பினைப் போட்டு நான்காவது தூண் என்றெல்லாம் எழுதுவார்கள். அதை உண்மை என்று நம்பி பத்திரிக்கைத் துறைக்குள் நுழைந்தவர்கள் எதார்த்தம் என்னவென்று தெரிந்து கொண்டு, பிழைக்கும் வழிக்கு மாறி விட்டார்கள். பிழைக்கும் வழி - “உண்மையை சார்ந்திருப்பதுக்கு ஏற்ப பேசுவது இல்லை மறைப்பது” 

உங்களுக்கு சாட்சிகள் இல்லையென்றால் நம்பமாட்டீர்களென்பதால் சாட்சியுடன் வந்திருக்கிறேன். இனி பேப்பர் படித்து அந்தச் செய்தி உண்மை என்று நம்புவதை விட்டு விடுவீர்கள் என்று நினைக்கிறேன். 

தினமலரில் இன்றைக்கும் 16/12/2017 அன்று வந்த செய்தியின் படம் கீழே
.

செய்தியைப் படித்து விட்டீர்களா? இனி தினகரனில் வெளிவந்த செய்தி கீழே. உடனே அது பிஜேபி பத்திரிக்கை, இது திமுக பத்திரிக்கை என்று ஆரம்பித்து விடாதீர்கள். செய்தி ஒன்று. ஆனால் அதன் அர்த்தம் என்ன என்பதை மாத்திரம் புரிந்து கொள்ள முயலுங்கள். மீடியாக்காரர்களை நாம் என்னவென்று அழைக்கலாமென்று நீங்களே முடிவு கட்டிக் கொள்ளுங்கள்.



அதுமட்டுமின்றி தினத்தந்தியின் செய்தியின் இணைப்பு கீழே இருக்கிறது. அதையும் படித்து விடுங்கள்.

சொல்ல வந்தது அவ்வளவுதான். 

மார்கழி பிறந்து விட்டது. கோவையில் குளிர் அதிகம் வாட்டுகிறது. விடிகாலை கோலம், சாணி, கோவில் குளங்களுக்குச் சென்று வருவது எல்லாம் கிராமப் புறங்களில் நடக்கின்றனவா எனத் தெரியவில்லை. ஆன்மீகம் நல் வழிப்படுத்தும் பாதை. ஆனால் கடவுள் தான் இன்றைக்கும் இந்த பூமிபந்தின் மிக உயர்ந்த வியாபாரப் பொருளாக மாறிப் போனார் என்பது வருத்தம் அளிக்கிறது.


Saturday, November 11, 2017

கடவுளின் கவலை

கமல்ஹாசனுக்குத் திடீரென வீரம் வர, சினிமா ஹீரோ போலவே அரசியலும் இருக்குமென நினைப்பில் அல்லுப்படுத்திக் கொண்டிருக்கிறார். கமல் வந்தாலே எனக்கு பூநூலும் நினைவுக்கு வந்து விடுகிறது. சிறிய வயதுப் பழக்கம். வாழ்ந்தாலும் செத்தாலும் அய்யர் சொல் கேளாமல் ஆகாது எங்களூர் பக்கம். அய்யர் வந்து சொன்னால் தான் எல்லாமுமாக இருந்து வந்த ஊர் எமது பிறந்த ஊர். இன்றைக்கும் என்னால் விடவே முடியவில்லை. குலதெய்வத்திலிருந்து எல்லா தெய்வங்களையும் தரிசிப்பது என்பது இரத்தத்தோடு ஊறிய ஒன்றாகிப் போனது. அய்யர் வந்து சொன்னால் தான் நல்ல நாள் தெரியும். வீடுகட்ட, கலப்பை ஏர் உழ, விதை விதைக்க இப்படி எல்லாவற்றுக்கும் அவர்கள் தான் நாள் குறிப்பார்கள். நாள் குறித்தால் தவறாது வேலை. கோவில் குளங்களுக்குச் செல்வதென்றாலும் அவர்கள் சொன்னால் தான் உண்டு. இந்தப் பழக்கம் இன்றைக்கும் என்னிடமிருந்து விலகி விடமாட்டேன் என்கிறது. பூநூல் போட்டவர் என்றால் சாமி என்ற சொல்லைத்தவிர வேறு சொல் வருவதில்லை.

அதுபோல கோவில் பக்கம் சென்றால் கைகள் தானாகவே உயர்ந்து கொள்கின்றன. நவீன யுகத்து யுவனாகையால், சினிமா ஹீரோயினிக்கள் போல உதடுகளில் கையால் தட்டிக் கொள்ளும் வழக்கமும் உண்டு.

இந்த நாத்திகர்கள் இருக்கின்றார்களே அவர்களுக்கு என்ன தான் பிரச்சினை என்றே புரியவில்லை. கடவுள் இருக்கிறார் என்றால் இருந்து விட்டுப் போகட்டுமே என்று எவரும் வாளா இருப்பதில்லை. எதையாவது எழுதி வைத்துப் போய் விடுகின்றார்கள். அப்படியும் இருக்குமோ இப்படியும் இருக்குமோ என மனசைக் கிளறி விட்டு விடுகின்றார்கள். அண்ணாதுரையின் கடவுளின் கவலை பற்றிய கட்டுரையைப் படித்து விட்டு குழம்பித்தான் போய் விட்டேன். அதுமட்டுமல்ல எனது குருநாதரின் “அது உங்களின் அறியாமை” என்ற வார்த்தைகளும் என்னைச் சூழ்ந்து கொண்டு கும்மி அடிக்கின்றன. குழம்பினால் தான் தெளிவாகும். நான் குழம்பி விட்டேன். நீங்கள்?????

இதோ அந்தக் கட்டுரை கீழே....!



நன்றி : அறிஞர் அண்ணாத்துரை மற்றும் இதைப் பதிப்பித்தவர்களுக்கும். இந்த நூல் நாட்டுடைமை யாக்கப்பட்டிருப்பதால் இங்கு வெளியிடப்படுகிறது. ஆகவே எவருக்கும் உரிமை உண்டு இந்த நூல் மீது. அது மட்டுமின்றி அடியேன் பக்கா ஆத்தீகன். எத்தனை அண்ணாத்துரை வந்தாலும் எனக்கு நெற்றியில் திருநீறு வைக்காமல் பொழுது விடிவதில்லை. அவ்வப்போது தர்ஹாவின் பாங்கு அழைப்பும் கேட்க வேண்டும் எனக்கு.

திருவையாற்றங்கரை நினைவலைகள்

கடந்த வாரம் என நினைவு. இரு கரை தொட்டு பொங்கிப் புரண்டோடும் திருவையாரில் செல்லும் காவிரியின் போட்டோவை தினமலரில் பார்த்தேன்.  நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. அதற்கு முன்பு தினமலரைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும்.

இப்போதெல்லாம் ராமசுப்பு என்கிற அந்துமணி அடிக்கடி தினமலரில் தென்படுகிறார். தலையில் வெளிர் நீல நிற தொப்பி அணிந்து திமுக மேடையில் அமர்ந்திருந்தார். பிரதமர் தமிழக விசிட்டின் போது பார்வையாளர்களில் பகுதியில் அமர்ந்திருக்கிறார். தினமலர் வாரமலரில் அந்து மணி என்ற கேரக்டர் இவர்தான் என பத்து வருடங்களுக்கு முன்புதான் தெரிய வந்தது. இப்போது அவர் தன்னை வெளிக்காட்டிக் கொள்கிறார். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. 

தொடர்ந்து தினமலரை வாசித்து வருவதால் அதன் செய்தி வடிவம் நெகடிவ் தன்மையாக மாறி வருவதை என்னால் அறிய முடிகிறது. அதுமட்டுமின்றி அரசியல் சார்பும் தெளிவாகத் தெரியும்படி தினமலர் நடந்து கொள்கிறது. பையன் பள்ளியில் நியூஸ் வாசிக்க செய்திகளைக் குறித்துத் தரும்படி கேட்பான். அப்போது எந்தச் செய்தியை எடுத்தாலும் நெகட்டிவ் தலைப்பு வருகிறது. 

குறிப்பாக மன்னார்குடியினரைப் பற்றியும், அதிமுகவினரைப் பற்றியும் சமீபத்திய செய்திகள் தான் முழு பக்கத்தையும் நிரப்புகின்றன. மன்னார்குடிக்கும் தினமலருக்கும் என்ன பிரச்சினையோ தெரியவில்லை. அது அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை. இந்த ஒரு பிரச்சினை பற்றிப் படிக்க செய்தி தாள் வாங்கவில்லை என்று தினமலர் உணர வேண்டும். இந்தச் செய்தியைத் தலைப்புச் செய்தியாக்குவது தினமலருக்கு வேண்டுமெனில் நன்மையாக இருக்கலாம். ஆனால் படிக்கும் வாசகர்களுக்கு எரிச்சல் தான் வரும். தினமலர் என்ற மாபெரும் நிறுவனம் தனி மனித செய்திக்காக இல்லை என்றே நினைக்கிறேன்.

தினமலரின் தலைப்புச் செய்திகள் உட்பட உள் செய்திகளின் தலைப்புகள் நெகட்டிவ் செய்திகளாகவே வருவது தலைமை மாறியதால் வந்த பிரச்சினையா என்று தெரியவில்லை. தினமலர் தலைமைப் பொறுப்பாளர்கள் அரசியல் தலைவர்களைச் சந்திப்பதும் அதை புகைப்படத்தில் வெளியிட்டு மகிழ்வதும் தினமலரின் தகுதிக்கு குறைவான செயல் என்றே படுகிறது. தலைவர்கள் வரலாம் போகலாம். ஆனால் தினமலர் என்ற மாபெரும் அமைப்பு இருந்து கொண்டே தான் இருக்கும். ஆகவே அந்துமணி அவர்கள் எனது இந்த பதிவை சற்றே கவனிக்க வேண்டுமென நினைக்கிறேன். 

எனக்கு பனிரெண்டு வயதாகிய போது தந்தை நாடி மாணிக்க தேவர் காலமானார். அறியாத வயது. கருமாதிக்காக தாய் மாமக்களுடன் திருவையாறு சென்றிருந்தேன். அப்போதெல்லாம் பஸ் தான் ஒரே வழி. ஊரிலிருந்து பட்டுக்கோட்டை, பின்னர் தஞ்சாவூர், பிறகு திருவையாறு. இரவில் சென்று ஒரு மடத்தில் தங்கிக் கொண்டோம். சரியான குளிர். எனக்கு மேலே போர்வை போர்த்தவில்லை என்றால் தூக்கமே வராது. பாயில் இரவு முழுவதும் தூக்கம் வராமல் குளிரில் நடுங்கிக் கொண்டே புரண்டு கொண்டிருந்தேன். விடிகாலையில் எழும்பியதும் சலூனுக்குச் சென்று முடி மழித்து அய்யருடன் சென்றோம்.

கரை புரண்டோடும் காவிரியாற்றினைக் கண்டு மலைத்துப் போனேன். பனி படர்ந்து குளிர்ந்த அந்த விடிகாலைப் பொழுதில் தண்ணீருக்குள் குளித்து வர வேண்டுமென்று நினைத்தாலே நடுங்கியது. வேறு வழி இன்று படிகளில் இறங்கி குளித்தால் காவிரித்தாய் தன் வெது வெதுப்பான நீரில் உடலைத் தழுவினாள். குளிர் உடம்பை விட்டு ஓடியே போனது. அய்யர் ஏதோதோ செய்யச் சொன்னார். எல்லாம் முடித்து மீண்டும் குளியல் போட்டு பஸ்ஸில் வரும் போது நீண்ட அந்தப் பாலத்தின் வழியாக காவிரியைப் பார்த்தேன். இரு கரை தொட்டு கடல் போல விரிந்து சென்றாள் அவள். கரைகளோரம் வாழைகள் செழிப்பாக வளர்ந்து இருந்தன. எங்கு நோக்கினும் பச்சைப்பசேல் செடிகொடிகள். விவசாயம் என செழித்திருந்தன.

ஆறேழு வருடங்களுக்கு முன்பு, ஒரு சினிமா ஷூட்டிங்கிற்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அப்பாவின் நினைவு நாள் மறு நாள் வந்தது. அப்போது திருவையாறு சென்றிருந்தேன். அகன்று விரிந்த காவிரியின் நடு மத்தியில் சள்ளைப் பிள்ளை போல ஆங்காங்கே தண்ணீர் தேங்கிக் கிடந்தது. மனசே ஆறவில்லை. 

சின்ன விஷயம் தான். மனிதனிடம் இருந்த மனிதம் இறந்து போனது. காவிரியில் தண்ணீர் வரவில்லை. விவசாயிகள் செத்தார்கள். தண்ணீரை எவரும் கண்டு பிடிக்கவும் இல்லை, அதற்கு உரிமையாளர்களும் இல்லை. ஏன் இந்தப் பூமியில் மனிதன் வந்து செல்லத்தான் இயற்கை அனுமதித்திருக்கிறதே ஒழிய உரிமை கொண்டாட அல்ல. ஆனால் மனிதன் என்ன செய்கிறான்?

எத்தனை தெய்வங்கள் வந்தாலும், எத்தனை நன் நூல்கள் இருந்தாலும், எத்தனை மதங்கள் மனிதனை நல் வழிப்படுத்தினாலும் அவன் இதுவரையிலும் சரியானதே இல்லை. சக மனிதனை மனிதனாகக் கூட நினைக்க மாட்டேன் என்கிறான். அவனின் மிருக உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக மிருகமாகவே மாற்றி விட்டிருக்கின்றன.

தன் பிள்ளை பசியாக இருப்பதை அறிந்த உடன் தன் தட்டில் இருக்கும் உணவைக் கொடுத்து பசியாறச் செய்யும் ஒருவன், அதே பக்கத்து வீட்டுக்காரன் என்றால் கொடுக்க மாட்டேன் என்கிறான். 

இது ஒரு பக்கம் இருக்கட்டும். 

பூண்டியில் கணிணிப் பட்டயப்படிப்பு படித்துக் கொண்டிருந்த போது, கல்லூரி விழாவில் திருவையாறு கல்லூரியிலிருந்து வந்த ஒரு பெண் காயத்ரி என நினைவு, ஆசை அதிகம் வச்சு என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். அன்றிலிருந்து பூண்டி கல்லூரியே காயத்ரியின் மீது மயக்கம் கொண்டது. ஒரு சிலர் திருவையாறுக்கே சென்று அவளைக் கல்லூரியில் தேடினார்கள் என்றுச் சொல்லக் கேட்டேன். பாத்ரூம்களில் காயத்திரியின் படங்கள் வரையப்பட்டிருந்தன. அதுவும் கொஞ்ச நாள் தான். கல்லூரி காயத்ரியை மறந்து போனது.

ஆனால் என் நினைவுகளில் காவிரி ஆறு இன்னும் இருந்து கொண்டிருக்கின்றது.

Friday, October 27, 2017

பிள்ளைகளின் அன்பு பொய்யானதா?

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அற்புதமான அனுபவத்தைத் தருபவை. விடிகாலையில் எழும் போது இன்றைக்கு நடக்க இருப்பவைகளைப் பற்றியும், புதிதாகச் சந்திக்க இருப்பவர்களைப் பற்றியும் ஆர்வமிருந்தால் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். 

ஓஷோ சொல்வார் வாழ்க்கை மீது ஆர்வம் வேண்டும் என. 

ஆர்வம் இல்லாதவர்கள் ’வெந்த சோற்றைத் தின்று விதி வந்த அன்று செத்துப் போவார்கள்’. வாழ்க்கையில் ஆர்வமின்றி இருப்பவர்களால் இந்த உலகிற்கு மட்டுமல்ல அவர்களைச் சுற்றிலும் இருப்பவர்களுக்கும் துன்பமேயன்றி வேறொன்றுமில்லை. தற்கால மனிதன் இழந்தது இந்த ஆர்வம் என்ற குணத்தை என்பார் ஓஷோ. வாழ்வதற்காக வேலை என்பவர்கள் தான் புலம்பிக் கொண்டிருப்பார்கள். வேலையை ஆர்வமுடன் நேசிக்கும் ஒருவன் உயர உயர உயர்ந்து கொண்டே இருப்பான்.

விஜய் டிவியின் சந்திர நந்தினி (செம அழகு இந்தப் பெண்) தொடரை அடிக்கடிப் பார்ப்பதுண்டு. சந்திரகுப்தர் மவுரியருக்கு ஒரு பெண்ணை காதலிக்கத் தெரியவில்லை என்பதுதான் இந்தத் தொடரின் கதை முடிச்சு. இயக்குனர் சுற்றும் பூ உடல் முழுதும் பரவினாலும் அழகுப் பெண்களைப் பார்க்கும் போது சூரிய ஒளியில் மலரும் காந்திப் (எதார்த்தமாக வந்து விட்டது) பூ போல உள்ளம் மலர்ச்சி அடைகிறது. அவர்கள் நலமுடனும் நன்றாகவும் இருக்கட்டும். (அது ஏன் சூரிய காந்தி எனப் பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. காந்திக்கும் மலர்ச்சிக்கும் என்ன தொடர்பு?)

இந்தத் தொடரைப் பார்த்துக் கொண்டிருந்த போது, மகள் சூடான சாதத்தில் பருப்பு விட்டு பிசைந்து கொண்டு சாப்பிடுவதற்காக ஷோபாவில் அமர்ந்தார். என்னைப் பார்த்ததும், “அப்பா, நல்ல மணமாக இருக்கிறதப்பா, ஊட்டி விடுகிறேன், சாப்பிடுகின்றாயா?” என்று கேட்க, மறுக்க முடியுமா?

சாதத்தைப் பிசைந்து கவளமாக எடுத்து என் உதட்டில் படாமல் வாய்க்குள் வைத்து ஊட்டி விட்டார். மணோன்மணியே அருகில் இருந்து ஊட்டிக் கொண்டிருந்ததைப் போல இருந்தது. மகள் கையில் தகப்பன் சாப்பிடுவது என்பது எவ்வளவு மகிழ்வு தரும் நிகழ்வு? ஆனால் உள்ளுக்குள் ஒரு சிறு குறுகுறுப்பு ஏற்பட்டது. சாப்பிட்டு முடித்ததும் அந்தக் குறுகுறுப்புக்கு விடை தேடி மனசு அலை பாய்ந்தது. விடை கிடைக்குமா?

மனைவி உணவு ஊட்டுகையில் வாய்க்குள் வைத்து உணவை ஊட்டுவார். அம்மாவும் அப்படித்தான். ஆனால் மகளோ தன் விரல் கூட உதட்டில் படாமல் உணவை ஊட்டி விட்டதனால் எனக்குள் ஏற்பட்ட அந்த குறுகுறுப்புக்கு விடை காணாமல் தடுமாறிக் கொண்டிருந்தேன். காரணமின்றி காரியம் இல்லை. ஏதோ ஒரு மறைபொருள் இருக்க வேண்டுமென்ற சிந்தனையில் தூங்கிப் போனேன்.

விடிகாலை எழுந்து காலைக்கடன்களை முடித்து மனையாளுக்கு காய்கறிகள் நறுக்கிக் கொடுத்து விட்டு ஓஷோவின் மனிதனின் புத்தகம் புத்தகத்தைப் பிரித்து படிக்க ஆரம்பித்தேன். நான்காம் பாகத்தில் மகன் என்றொரு தலைப்பில் விவரிக்க ஆரம்பித்தார்.

ஒரு தாய் தன் பிள்ளை மீது அன்பு கொண்டிருப்பது இமயமலையில் இருந்து வழிந்தோடும் கங்கை நீரைப்போல. தாய்க்கு தன் பிள்ளை மீது அன்பு கொள்வது இயற்கை நியதி. பிள்ளைக்கு தாயின் அரவணைப்பும் அன்பும் தேவை. அதற்கான நான் உன் மீது அன்பாயிருக்கிறேன், ஆகவே நீயும் என் மீது அன்பாயிருக்க வேண்டுமென்று குழந்தையைக் கேட்பது மடத்தனம். அந்தக் குழந்தைக்கு தன் குழந்தையின் மீது தான் அன்பு இருக்குமே ஒழிய தன் தாயின் மீது இருக்காது என்று போட்டுடைத்தார் ஓஷோ.

ஓ...! இதுதான் காரணமா? என்று நினைத்துக் கொண்டு வழக்கம் போல ஜோதி சாமியை அழைத்துப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ”இது என்ன ஆண்டவனே பிரமாதம், இன்னொன்றும் சொல்கிறேன்” என்றார்.

”சொல்லுங்க சாமி” என்றேன். 

ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.

திரு மூலரின் ”யாக்கை நிலையாமையில் வரும் பாடலொன்று” இது.

ஆவி நீங்கிய உடல் ஊர்முனி பண்டமாகும். ஆவி நீங்கியதும் அவ்வுடம்பினைச் சூழ்ந்திருந்து உறவோடு ஊரெலாம் ஒன்று கூடி யழுவர். முறைப்பெயர் சிறப்புப்பெயர் முதலிய பெயர்களை ஒழித்துப் பிணமென்று பெயரிடுவர். பெயரிட்டு முட்செடியாகிய சூரையடர்ந்த சுடுகாட்டிற்குக் 'காலைக் கரையிழையாற் கட்டித்தாங்கை யார்த்து, மாலை தலைக் கணிந்து மையெழுதி - மேலோர், பருக்கோடி மூடிப் பலரழ' எடுத்துச் செல்வர். சென்று அவ்வுடம்பினை ஈமத்தேற்றி வாய்க் கரிசியிட்டுக் குடமுடைத்துக் கொள்ளி வைத்து எரிகொள்ளி இட்டுச்சுடுவர். சுட்டபின் நீரின் மூழ்கி இறந்தவரைப்பற்றியேனும் இனி இறக்கப் போகும் தம்மைப் பற்றியேனும், இதற்கு வாயில்களாகவுள்ள நிலையாமை, மாயை, வினை, மலங்களைப் பற்றியேனும் ஒரு சிறிதும் நாடாது நினைப் பொழிந்திருப்பர். (பொழிப்புரை  ப.ராமநாதப் பிள்ளை)

”ஆண்டவனே, ஒவ்வொரு மனிதனும் எப்போதும் தனியாள் தான். மேலே சொல்லி இருக்கிற பாடலையும் அதன் அர்த்தத்தையும் புரிந்து கொண்டீர்களா?” என்று கேட்டார். 

“ நச்சுன்னு மண்டைக்குள் ஏறிவிட்டது சாமி” என்றேன்.

ஆகவே நண்பர்களே, யாக்கை நிலையாமையும், அன்பின் தத்துவத்தையும் பற்றி நன்கு அறிந்து கொள்ள முயலுங்கள். வாழ்க்கையை ஆர்வமுள்ளதாக மாற்றுவோம். 

Thursday, October 26, 2017

உள்ளம் சிவமானால் உடம்பு கோவிலாகும்

தீபாவளி அன்று இரண்டு மணிக்கு எழுப்பி விட்டார் மனையாள். தூக்கக் கலக்கத்தோடு சென்றால் ஒரு கூடை சின்ன வெங்காயம், இஞ்சி, மிளகாய், வெல்லம், சுக்கு, ஏலக்காய் என்னைப் பார்த்துச் சிரித்தன.

”இன்னும் இரண்டு மணி நேரம் தான் இருக்கிறது, அதற்குள் வடை, சுழியம், பாலப்பம் செய்ய வேண்டும், படபடவென வெங்காயத்தை உரித்து நறுக்கி, மிளகாயை மெல்லிதாக நறுக்கி, இஞ்சியை வெகு சிறிதாக கட் செய்து விட்டு, அப்படியே சுக்குவை தனியாகவும், ஏலக்காயைத் தனியாகவும் பொடித்து தனித்தனியே வைத்து விடுங்கள். வெல்லத்தை பொடிப்பொடியாக தூள் செய்து வையுங்கள், அப்படியே அந்த ஆறு மூடி தேங்காயைத் துருவி வைத்து விடுங்கள்” என்றுச் சொன்னார். மலைத்துப் போய் விட்டேன். முடியாது என்றெல்லாம் சொல்ல முடியாது. செய்து தான் ஆக வேண்டும். நானே விரும்பி காதலித்து திருமணம் செய்து பதினேழு வருடங்கள் கடந்து விட்டன. இருந்தாலும் சின்னதா ஒரு பிட்டைப் போடுவோமென நினைத்து, ”உடம்பு வலிக்கிறா மாதிரி இருக்கே”ன்னு சொல்வதற்குள் ”சுக்கு மல்லிக்காப்பி அதோ இருக்கிறது, குடித்து விட்டு, லூசுத்தனமா பேசாம வேலையைச் செய்யுங்கள்” என்றார்.

கண்கள் எண்ணைத் தேய்த்துக் குளிக்காமல் குளிக்க சிறிய வெங்காயத்தை உரித்து நறுக்கி, பச்சைமிளகாயை வெகு மெல்லிதாக நறுக்கி, இஞ்சியை தோல் உறித்து நறுக்கிக் கொடுத்தேன். கொஞ்ச நேரத்தில் வடையின் வாசனை வந்தது. அடுத்து கத்தியால் வெல்லத்தைச் சீவி(புதிய டெக்னிக், காப்பிரைட் என்னிடம் உள்ளது) பருப்புடன் சேர்த்து அதனுடன் சுக்கு  கொஞ்சமும், ஏலக்காய் கொஞ்சமும் சேர்த்து வறுத்த தேங்காய்த் துருவலைச் சேர்த்து கொடுத்தேன். சுழியம் அடுத்த அடுப்பில் வெந்தது. பாலப்பத்திற்கு தேவையானவைகளைச் சேர்த்து அம்மணியே பலகாரத்தைச் செய்தார்கள். 

ஒரு வழியாக சமைத்து முடிக்க பசங்க இருவரும் எழுந்து வந்து விசாரித்துக் கொண்டிருந்தனர். நல்ல நேரம் பார்த்து நால்வரும் எண்ணெய் தேய்த்துக் குளித்து புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்து பலகாரங்கள் சாப்பிட்டு குருவினைத் தரிசிக்க கிளம்பினோம்.

இந்த வருடம் வெடிச்சத்தங்கள் அதிகம் இல்லை. சாலையெங்கும் பரவிக்கிடக்கும் பட்டாசுக் காகிதங்கள் சுத்தமாக இல்லை. ஆங்காங்கே ஊசிப்பட்டாசு வைத்துக் கொண்டு கையில் புகையும் ஊதிபத்தியுடன் சிறுவர்கள் திரிந்தார்கள். எவரின் முகத்திலும் மலர்ச்சி இல்லை. 

வரி என்கிற பெயரில் ஏகப்பட்ட பணத்தை மக்களிடமிருந்து பறிக்கிறது அரசு. வருமான வரி போக, ஒவ்வொரு பொருளுக்கும் வரி கொடுக்க வேண்டியதாகி உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் இருக்கும் பணத்தை கஜானாவுக்குள் கொண்டு சேர்க்கிறது மத்திய மாநில அரசுகள். லூசில் விற்கப்படும் பருப்புகளுக்கு வரி இல்லையாம். பாக்கெட் போட்டால் வரியாம். இந்தக் காலத்தில் எந்தக் கடை லூசில் பருப்பு விற்றுக் கொண்டிருக்கிறது எனத் தெரியவில்லை. வரி வாங்குங்கள் தப்பே இல்லை. ஆனால் ஊழல் இல்லாமல் செய்ய முடியவில்லையே? கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாக கொடுக்க மாட்டேன் என்கிறதே அரசு. மிக நல்ல சிகிச்சைக் கிடைக்க வேண்டுமெனில் தனியாரிடம் அல்லவா செல்ல வேண்டி இருக்கிறது. 

முன்பெல்லாம் பில் இல்லாமல் பொருள் வாங்கினோம். அண்ணாச்சிகள் பெரும் பணக்காரனானார்கள். இப்போது பில் போடாத பெட்டிக்கடை அண்ணாச்சிகள் கல்லாவைக் கட்ட ஆரம்பித்து விட்டார்கள். இவர்களை மத்திய அரசு என்ன செய்து விட முடியும்? வாட்சப்பில் ஒரு மெசேஜ் கிடைத்தது.

2000 ரூபாயை வங்கியில் வைப்பு நிதியாக வைத்திருந்தால் 8 சதவீதம் வட்டி ரூ.200 கிடைக்கும். அதே இரண்டாயிரம் ரூபாயை வங்கியிலிருந்து கடனாகப் பெற்று நாம் வட்டி கட்டினால் 13 சதவீதம் ரூ.260 கட்ட வேண்டும். ஆனால் அதே இரண்டாயிரம் ரூபாய்க்கு ஹோட்டலில் சாப்பிடச் சென்றால் ரூ.300 வரியாகக் கட்ட வேண்டும். இதைத்தான் பகல் கொள்ளை என்கிறார்கள்.

ஏற்கனவே வருமானத்துக்கு வரி பிடித்துக் கொள்கின்றார்கள். மிச்சம் இருக்கும் பணத்துக்கும் ஒவ்வொரு பொருளிலும் வரி வாங்குகின்றார்கள். இப்படியே தொட்டதுக்கெல்லாம் வரி வாங்கினால் மக்களிடம் பணம் எப்படி மிச்சமாகும்? பணம் இல்லையென்றால் பொருட்களை வாங்க முடியாது. வேறு வழியே இன்றி பொருட்கள் விலை குறையும் சூழல் உருவாகும். இது மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கச் செய்யும் அல்லவா?

இந்த அக்கப்போரு என்றைக்கும் முடியப்போவதில்லை. அரசு எனும் பூனைக்கு மக்கள் எனும் எலிகள் என்றைக்கும் மணி கட்டபோவதில்லை. அது முடியவும் முடியாது.

அரசியல் களம் என்பது துரோகமும், அக்கிரமமும், அயோக்கியத்தனமும், திருட்டுத்தனமும், பொய்யும், சூதும், வாதும் நிரம்பியவை. அக்களம் அப்படித்தான் இருக்கும். உண்மையானதாக மாறவே முடியாது. அரசியல் என்பது அதுதான். ஊழலும், அதிகாரத் துஷ்பிரயோகமும் அரசியலின் இரு கண்கள். சுய நலம் என்பது அரசியலின் அடி நாதம். அதில் அயோக்கியத்தனம் என்பது தூண்கள். ஆகவே அரசியல் அக்கப்போரு பேசி ஒன்றும் ஆவப்போவதில்லை. பட்டுத்தான் தீர வேண்டும். நாம் நல்லவர்களாக இருந்தால் அல்லவா அரசியல்வாதி நல்லவராக இருப்பார்.

நடிகனுக்கு நாட்டைத் தூக்கிக் கொடுக்கும் நமக்கெல்லாம் மானம், ரோசம், நல்லவை, கெட்டவை எதுவும் இருப்பதில்லை என்கிற போது அரசியல் பற்றிப் பேச தகுதியே இல்லை. முட்டாளாக இருப்பதே சுகம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களிடம் புத்திசாலித்தனத்தைப் பற்றிப் பேசுவதால் என்ன பிரயோஜனம்?

ஒரு வழியாக வெள்ளிங்கிரி ஸ்வாமியின் ஜீவ சமாதிக்குச் சென்று சேர்ந்தோம். அங்கு இரண்டு பேர் காத்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு தீபாவளி அன்றைக்கும் வீட்டிலிருந்து செல்லும் பலகாரங்களைச் சாப்பிடுவதற்காக வருடம் தோறும் வந்து விடுவார்களாம். ஏன் தாமதம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். மதியம் போல நானும் ஜோதி சாமியும் பேசிக் கொண்டிருந்தோம்.

அடியேன் ஓஷோவின் புத்தகங்களை வாசிப்பவன். அடிக்கடி அவரின் பல கேள்விகள் என்னைக் குடைந்து கொண்டிருக்கும். கடவுள் இல்லவே இல்லை என்கிறார் அவர். ”அது சரிதானா? சாமி” என்றுக் கேட்டேன்.

“ஆமாம், கடவுளே!” என்றார் சாமி.

அதிர்ச்சியாக இருந்தது.

”பின்னே நான் ஒவ்வொரு கோவிலாகச் சென்று வழிபாடு செய்வது என்பதெல்லாம் என்ன?” என்றொரு கேள்வியைக் கேட்க, அவரோ ”அது உங்களின் அறியாமை” என்றார்.

கேட்ட எனக்கு குழப்பமே மிஞ்சியது.

“கோவில்கள் மட்டும் இல்லையென்றால் மனிதர்கள் மிருகமாகி விடுவார்கள் ஆண்டவனே!” என்றார் தொடர்ந்து.

“ஒன்றுமே புரியவில்லை சாமி” என்றேன்.

அதற்கு அவர், “உள்ளம் சிவமானால் உடலே கோவிலாகும்” என்றார்.

எனக்கு ஏதோ கொஞ்சம் புரிந்தது. உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?


Wednesday, September 27, 2017

16347 கோடி முதலீட்டிற்காகக் கொட்டிக் கொடுக்கப்போகும் இந்தியர்கள்

கிரிக்கெட் இந்தியாவின் மர்ம விளையாட்டு. ஐபில் கிரிக்கெட்டைப் பற்றி அடியேன் எழுதிய கட்டுரை பரபரப்புச் செய்தி பத்திரிக்கையில் வெளியானது. அதன் இணைப்பையும் அக்கட்டுரையினையும் கீழே இருக்கும் இணைப்பினை சொடுக்கிப் படித்துக் கொள்ளவும்.


கடந்த செம்டம்பர் மாதம் 6ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் ஒரு செய்தி வெளிவந்தது. செய்தி கீழே,

Star Sports under the Star India umbrella shelled out an exorbitant Rs 16,347.5 crore or $2.55 billion for IPL media rights over the next five years till 2022. This is nearly triple of what Sony, the previous TV rights holders, had paid for ten years in 2009. In all it converts to Rs 55 crore from every IPL match or Rs 23.3 lakhs for every legal delivery bowled. It leaves the IPL sandwiched between the English Premier League (Rs 84 crore per match) and the NBA (Rs 18 crore per match) in terms of highest grossing sporting leagues in the world, with the NFL the clear leader earning Rs 150 crore per match. But beyond the sheer astronomical numbers, the query for the fans, other broadcasters and the DTH providers revolves around how to compete with their sheer might.


படித்து விட்டீர்களா? இப்போது விஷயத்துக்கு வருவோம்.

சாதாரண டிவிதானே, நாம் பொழுதைப் போக்குகிறோம் அதை வைத்து இவ்வளவு பணம் சம்பாதிக்க முடியுமா? என்று திகைக்கின்றீர்கள். ஆமாம் உங்களின் பொழுதுபோக்கையும் காசாக்கிட முடியும் என்பது தான்  முக்கியமான சாரம்.

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் விளையாட்டினை ஐந்து வருடம் ஒளிபரப்புச் செய்ய ஸ்டார் குழுமம் 16347 கோடி ரூபாய் கொடுக்கிறது என்றால் ஒளிபரப்புச் செலவு, அலுவலகச் செலவு, அட்மின் செலவுகள் இதையெல்லாம் சேர்த்து 20000 கோடி என்று வைத்துக் கொண்டாலும் இந்தளவு முதலீடு செய்வது நஷ்டமடையவா செய்வார்கள்? இல்லை அல்லவா? 20000 கோடி முதலீடு 100000 லட்சம் கோடி வருவாய் கிடைக்கத்தான் இவ்வளவு முதலீடு போடுவார்கள். இத்தனையும் எங்கிருந்து அவர்களுக்கு கிடைக்கிறது? விளம்பரதாரர்களிடமிருந்து அவர்களுக்கு கொட்டக்கூடிய பணமும் எங்கிருந்து கிடைக்கிறது? டிவி பார்க்கும் மக்களிடமிருந்து விளம்பரதாரர்கள் வசூலித்து அதில் பத்து பர்செண்டேஜ் அளவு பணத்தினை மீடியாக்களிடம் கொடுக்கின்றார்கள். கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். மலைத்து விட வேண்டாம். 

ஒரு சோப்பின் உண்மையான அடக்கவிலை 5 ரூபாய் இருக்கலாம். ஆனால் விற்கும் விலை 40 லிருந்து 60 ரூபாய் வரை. இந்தக் காசுதான் மீடியாக்களுக்கும் செல்கிறது. அரசியல்வாதிகளுக்கும் செல்கிறது. கிரிக்கெட் வீரர்களுக்கும் செல்கிறது. ஆக மக்களிடமிருந்து பறிக்கப்படும் பணம் தான் இத்தனை கோடி. 5 ரூபாய் சோப்புக்கு நாம் கொடுக்கும் அதிகபட்ச விலை தான் இப்படியாகச் செல்கிறது. நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் விளம்பரங்களைப் பார்த்து தானே வாங்குகிறோம். தேவைக்கு ஏற்ப என்று எவராவது சிந்திக்கின்றீர்களா? பிராண்டட் தான் போடுவேன் என்பவர்களிடமிருந்து எப்படி காசைப் பறிக்கின்றார்கள் என்று நினைத்துப் பாருங்கள். 

காலம் நேரம் தெரியாமல் டிவி முன்னாள் உட்கார்ந்து கொண்டிருக்கின்றீர்களே அதற்கு நீங்கள் கொடுக்கும் விலையில் ஒரு சதவீதம் தான் மேலே எழுதி இருப்பவை.

டிவியின் முன்பு உட்காரும் போது இந்தக் கணக்கை நினைவில் கொள்ளுங்கள். வீட்டிற்குள் இருக்கும் வில்லன் யார் என்று தெரிய வரும்.  

ஒழுக்கம் என்றால் என்ன விலை என்று கேட்கும் நடிகன் முதல்வராக ஆசைப்படுவதையும் தடுக்கலாம். ஒழுக்கம் கெட்டவர்கள் தலைவர்கள் ஆனால் தமிழகத்தின் நிலை என்ன ஆகும் என்று ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்.

அடியேன் டிவி பார்ப்பதை முற்றிலுமாக நிறுத்தியே விட்டேன். எப்போதாவது டிராவல்ஸ் அன்ட் லிவிங், டிஸ்கவரி சானல், ஹிஸ்டரி சானல் பார்ப்பதோடு சரி. முக்கியமாக செய்தி சானல்களைப் பார்ப்பதே இல்லை. விவாத நிகழ்ச்சிகளை எட்டிக் கூடப் பார்க்கமாட்டேன். காலையில் செய்திதாள்கள் படிப்பேன். அவ்வளவுதான். வேலை இல்லையென்றால் புத்தகங்கள் படிப்பதோடு என் நேரம் கழிந்து விடுகின்றது. ஃபேஸ்புக், டிவிட்டர் பக்கம் எட்டிக்கூடப் பார்ப்பது இல்லை. மாதம் ஒரு தடவை சும்மாவாச்சும் லாக்கின் செய்வேன். 

நீங்களும் ஒரே ஒரு நாள் அவ்வாறு இருந்து பாருங்கள்.செம ஜாலியாக இருக்கும்.


Monday, August 28, 2017

நிலம் (41) - இந்து ஒருவரின் முஸ்லிம் மகனுக்கு சொத்துரிமை உண்டா?

நண்பரே எனக்கும் ஒரு விஷயத்தை விளக்கிச் சொல்லுங்கள்,

ஒருவர் இந்துவாக இருந்து முஸ்லிமாக மதம் மாறினால் அவருக்கு சொத்து உரிமை உள்ளதா?  அவரின் தந்தை 1991ம் ஆண்டும், தாய் 2002ம் ஆண்டும் இந்துவாகவே இறந்தனர். அவர் முஸ்லிமாக மாறிய ஆண்டு 2008. முஸ்லிமாக மாறிய பிறகுதான் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். அவருக்கு ஒரு அண்ணன், இரண்டு சகோதரிகள். அனைவரும் இந்துவாகவே உள்ளனர். அவர்களின் தந்தை பெயரில் தற்போது 10 சென்ட் நிலம் உள்ளது. அவரால் அந்த சொத்தில் பங்கு கேட்க உரிமை உள்ளதா? இதற்கு ஒரு வழி சொல்லுங்கள். 

நன்றி,  தஸ்.கார்த்தி.


இப்படி ஒரு மெயில் தஸ் கார்த்தி என்பவர் அனுப்பி இருக்கிறார். அவர் யார்? எங்கிருக்கிறார் என்று எதுவுமே தெரியாது. ஒரு சட்ட விளக்கம் கேட்கிறார். வக்கீலிடம் சென்றால் செலவு செய்தாக வேண்டும். இலவச சட்ட விளக்கம் கேட்கின்றோமே நம்மைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டாவது கேள்வியைக் கேட்கலாம் என்று நினைக்கவில்லை. மொட்டையாக ஒரு மெயில் அனுப்பி வைக்கிறார்கள். ஒரு சிறிய அறிமுகத்துக்கு கூட சிரமப்படுகின்றார்கள். அது அவர்களின் பிரச்சினை. என்னிடம் உதவி கேட்டால் செய்ய முடியாது என்றா சொல்ல முடியும்?

கார்த்தி உங்களின் மெயிலைப் படித்தேன். தாங்கள் கேட்டிருக்கும் கேள்வியின் சாராம்சம் என்னவென்றால், இந்து ஒருவரின் மகன் முஸ்லிமாக மதம் மாறினால் அவருக்கு தன் தந்தையின் இறப்புக்குப் பிறகு தந்தையின் சொத்தில் பாகம் கிடைக்குமா? என்பதுதான். சரியா?

இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956, இந்து வாரிசுரிமைச் (தமிழ் நாடு திருத்தம்) சட்டம் 1989, இந்து வாரிசுரிமைச்(திருத்தம்) சட்டம் 2005 ஆகியவைகளின் படி பிரிவு 26ல் மதம் மாறியவர்களின் சொத்துரிமையை இந்தப் பிரிவு தடை செய்யவில்லை. ஆனால் முஸ்லிமாக மாறியவரின் வாரிசுகள் அந்தச் சொத்தில் பாகம் கோர முடியாது என்கிறது அப்பிரிவு. இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக 1850 ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட கேஸ்ட் டிஸெபிளிட்டி ரிமூவல் சட்டத்தின் (Caste Diablities Removal Act 1850) படி மதம் மாறியவர்களுக்கான மத வேறுபாடு உரிமை நீக்கம் மாற்றியமைக்கப்பட்டது.

ஆகவே அந்த 10 செண்ட் நிலத்தில் முஸ்லிம் மதத்திற்கு மாறிய வாரிசுக்குப் பங்கு உண்டு. அந்த வாரிசு உயிருடன் இல்லை என்றால் அவரின் வாரிசுகளுக்கு அந்தப் 10 செண்ட் நிலத்தில் உரிமை இல்லை.

ஒரு உபகுறிப்பு:

இந்தியாவில் முஸ்லிம் மதத்தைப் பொறுத்தவரை ஹனபி, ஷபீ, இத்னா ஆஷாரி மற்றும் இஸ்லாமி என நான்கு சட்டங்கள் இருக்கின்றன. இஸ்லாமி சட்டத்தில் நிஸாரி மற்றும் முஸ்தாலி ஆகிய உட்பிரிவுகளும் இருக்கின்றன. இருப்பினும் மாலிகி மற்றும் வஹாபி ஆகிய சட்டங்களும் இந்தியாவில் அனுசரிக்கப்படுகின்றன. இத்தனை சட்டங்கள் இருந்தாலும் இந்திய நீதிமன்றங்கள் பல வழக்குகளை இந்தியாவின் மற்ற குடிமக்களுக்கு உள்ள பொதுவான சட்டங்களின் படியே தீர்க்கின்றன. முஸ்லிம் சட்டத்தில் சொத்துக்களின் வாரிசுரிமை, விற்பனை ஆகியவற்றில் பல பிரிவுகள் உள்ளன. சொத்துக்களை வாங்கும் போது வெகு கவனமாக வாங்க வேண்டும். தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிய சூழலைத் தவிர்த்து விடலாம்.

மேலும் ஒரு உபகுறிப்பு:

உங்களின் கேள்வி பொதுப்படையானது என்பதாலும் எனது நிலம் (40) இந்துவானவர் முஸ்லிமானால் வாரிசுரிமை எப்படி இருக்கும் தொடருக்குத் தொடர்பு உடையதாக இருப்பதாலும், அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்பதிவினை எழுதி இருக்கிறேன். ஒரு உதவி கேட்கும் போது முறையாக கேள்வி கேட்டல் அவசியமென்று கருதுகிறென். ஆகவே இனிமேல் வேறு எவரிடமும் உதவி கேட்க விரும்பினால் முறைப்படி தங்களை அறிமுகம் செய்து கொண்டு அதன் பிறகு கேள்வி கேளுங்கள் என்று விரும்புகிறேன். அது உதவி செய்பவருக்கு மகிழ்வைத் தரும் என நினைக்கிறேன். அதைச் செய்வது செய்யாததும் உங்கள் விருப்பம். 

தொடர்ந்து இணைந்திருங்கள். சுவாரசியமான பல வழக்குகளை அலசலாம்.

Sunday, August 27, 2017

நன் மனைவி கிடைப்பதரிது

கடந்த வாரம் என்று நினைவு. விஜய் டிவியின் நீயா நானாவில் திருமணத்திற்கு பெண் தேடும் ஆண்களின் பிரச்சினைகள் பற்றி  கோபி நாத் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆண்களுக்கு பெண்கள் போடும் மிக முக்கியமான கண்டிஷன்கள் தனி வீடு இருக்க வேண்டும், நல்ல வேலையில் இருக்க வேண்டும், அக்கா தங்கைகள் இருக்கக் கூடாது, கடன் இருக்கக் கூடாது, கடன் வாங்கிக் கட்டுபவராகவும் இருக்கக் கூடாது என்பவை. ஒரு சிலர் அமெரிக்காவில் செட்டில் ஆவது வரவேற்கப்படுகிறது. இதெல்லாம் இருந்தால் தான் செலக்‌ஷன் செய்வார்கள். அதன் பிறகு இன்னபிற கண்டிஷன்கள் போடப்படலாம். அது அந்தந்தக் குடும்பத்தைப் பொறுத்தது. 

அந்த விவாதத்தில் பேசிய பெண்களில் ஒருவர் கூட நல்லியல்பு கொண்ட குடும்பத்திலிருந்து ஆண்மகன் இருந்தால் என் மகளைக் கட்டிக் கொடுப்பேன் என்று சொல்லவே இல்லை. கண் இமை முடியை மழித்துக் கொள்வது போல நல்லியல்புகளை மழித்துக் கொண்டு விட்டார்கள் போலும். பணம், பொருள் இருந்தால் தான் ஆண்மகன் என்கிறார்கள். அவனுக்குத்தான் பெண் கொடுப்போம் என்கிறார்கள் பெண்களைப் பெற்றவர்கள்.

சொல்லாமை நோக்கிக் குறிப்பறியும் பண்பிற்றம்
இல்லாளே வந்த விருந்தோம்பிச் - செல்வத்
திடரின்றி ஏமாந் திருந்தாரே நாளும்
கடலுள் துலாம்பண்ணி னார். ( பழமொழி நானூறு - 321 )

கணவனின் முகக் குறிப்பறிந்து  கணவன் நினைத்த காரியத்தை அறிந்து கொள்ளும் மனையாளும், வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்று உபசரித்து அனுப்பும் மனையாளும், செல்வத்துடன் வாழும் மனையாளைக் கொண்டவனே என்றைக்கும் நீங்காத இன்பமுடையவர்கள். இனி வருங்காலத்தில் இப்படி ஒரு நன் மனைவியை எவராலும் அடையவே முடியாது போலும் என்று நினைக்க வைத்தது அன்றைய நீயா நானாவில் பேசிய பெண்களும், பெண்களின் தாயார்களும், தந்தைகளும் பேசிய பேச்சுக்கள்.

பெண் என்பவளுக்கு எது முக்கியம் என்பதை ஒரு பழம் பாடல் விளக்குகிறது.

நாணின்றி ஆகாது பெண்மை நயமிகு
ஊணின்றி ஆகா துயிர்வாழ்க்கை - பேணுங்கால்
கைத்தின்றி ஆகா கருமங்கள் காரிகையாய்
வித்தின்றிச் சம்பிரதம் இல்.  (பழமொழி நானூறு - 327)

இந்தப் பாடலின் விளக்கம்: அறுசுவை உணவின்றி உடலுக்கு உயிர் இல்லை. பணமின்றி காரியங்களைச் செய்ய முடியாது. வித்து இன்றி விளைச்சலும் இருக்க முடியாது. அது போல பெண்களுக்கு நாணம் என்பது முக்கியம். இப்போதையப் பெண்களுக்கு நாணம் என்பது என்னவென்று தெரியுமா என்று தெரியவில்லை.

இத்தகைய நறுங்குணங்கள் கொண்ட பெண்மையைப் பார்ப்பது இனிமேல் அரிதிலும் அரிதாகி விடும் போல. 

அதுவாவது பரவாயில்லை. அந்தக் காலத்தில் சாதாரணமாக ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது நான்கு குழந்தைகளாவது பெற்றுக் கொள்வார்கள். ஆனால் இன்றைக்கோ ஒரு குழந்தைக்கே படாதபாடு பட வேண்டி இருக்கிறது. குழந்தைபெற ஹாஸ்பிட்டல் இருந்தாலே போதும், தாம்பத்யம் வேண்டியதில்லை என்கிறது ஒரு விளம்பரம். ஆண் இல்லாமல் குழந்தைகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள். 


ஏரோப்ளேன் ஓட்ட ஆரம்பித்த பெண்கள் இனி ஆண்கள் இல்லாமல் குழந்தைகளையும் பெற்றுக் கொள்வார்கள். ஆண்களின் பாடு இனி திண்டாட்டம் தான் போலும். பெண்கள் ஆண் குழந்தைகளே வேண்டாமென்று முடிவெடுத்தால் மேலும் சிக்கலாகி விடும் போல. என்னவோ நடக்கின்றது. அது நல்லதாக இல்லை என்பது மட்டும் புரிகிறது.

Monday, August 21, 2017

கமல்ஹாசன் தமிழகத்தின் முதலமைச்சராகலாம்

எனக்கொரு பிரச்சினை இருக்கிறது. சொல் பொறுக்க மாட்டேன். மனதளவில் யாரைப் பார்த்தும் பொறாமையோ அல்லது எரிச்சலோ, கெடு எண்ணமோ எந்தக் காலத்திலும் நினைத்ததும் இல்லை, நினைக்கப்போவதும் இல்லை. இது எனது இயல்பு. இந்த இயல்பின் காரணமாக பல பேரின் அக்கிரமங்களைக் காணும் போது எரிச்சலும், ஆற்றாமையும் ஏற்பட்டு மனது வெம்பி விடும் எனக்கு. கமல்ஹாசனின் மஹாநதி படம் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். விமர்சனம் படித்தேன். அன்றைக்கு மனதுக்குள் வலித்த வலியில் அப்படத்தை நான் இதுவரை பார்க்கவே இல்லை. அதே போல விக்ரம் நடித்த காசி படத்தைப் பார்க்கச் சென்று பாதியில் எழுந்து வந்து விட்டேன். அந்தளவுக்கு துரோகமும், அக்கிரமங்களும் நிகழும் பட்சத்தில் அதைக் காட்சியாக்க் கூட காண என் மனது விரும்பாது. மன உளைச்சல் அதிகமாகி விடும். சமீபத்தில் அதை நான் பிக்பாஸ் பார்த்த போது அனுபவித்தேன். 

எவிக்சனில் குறைவான ஓட்டுப் பெற்றவரை ஒப்புக்குச் சப்பாணிக் காரணத்தைச் சொல்லிக் காப்பாற்றினார்கள். அன்றைக்கு நடத்தப்பட்ட இந்த அறம் மீறிய செயலால் எனக்கு மனது ஒரு மாதிரியாகப் போய் விட்டது. அதை கமல் நியாயப்படுத்தினார் வெகு சாதுரியமாக. கமல்ஹாசனின் பிக்பாஸ் அறம் அவர் மீதான அவ நம்பிக்கையின்மையை உருவாக்கியது. நான் அவர் மீது அவ நம்பிக்கை அடைவதால் அவருக்கு ஒன்றும் இழப்பு இல்லை. நான் யாரென்றே அவருக்குத் தெரியாது. தெரிந்து கொள்வதால் எனக்கோ இல்லை அவருக்கோ ஒரு பயனும் இல்லை என்பது வேறு விஷயம். எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று வெற்று ஜம்பமாகப் பேசிக் கொள்வதில் இருக்கும் அபத்தத்தை உணர்ந்திருக்கிறேன். பொருளை முன் வைத்து உலகம் இயங்க ஆரம்பித்ததிலிருந்து யாரும் யாருக்கும் எதையும் இலவசமாகவோ அல்லது தானமாகவோ செய்து விட மாட்டார்கள். பிரதி பிரயோஜனம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. கொடுத்தால் தான் உறவு என்பார்கள். ஒரு சில விதிவிலக்குகளை உடனே முன்னிறுத்தி விடக்கூடாது. 

நேற்றைய நிகழ்ச்சியில் கமல் காயத்ரியிடம், நீங்களும் நானும் ஒரே ஜாதி என்பதால் உங்களிடம் கனிவுடன் நடந்து கொள்கிறேன் நான் என்றுச் சொல்கிறார்கள் என்றார். எனது பிளாக்கில் “அவா” எனக் குறிப்பிட்டிருந்தேன். அதை ஸ்ரீபிரியா அவர்களுக்கு டிவீட்டிருந்தேன். அது உண்மையில்லை என்பதற்கு உரிய காரணங்களை அவர் தான் சொல்ல வேண்டும். பிக்பாஸ் போட்டியாளர்களைப் போல உண்மையை மறைத்து நழுவி விடமுடியாது. 

ஜூலி என்கிற பெண் என்ன பாவம் செய்தாள்? அவளுக்கு மட்டும் படம் போட்டு சுருக்கென்று ஊசி தைப்பது போல கேள்வி கேட்டாரே? காயத்ரிக்கு மட்டும் படமும் போடாமல், தானும் கேள்வி கேட்காமல் நிகழ்ச்சியில் உட்கார்ந்திருந்தவர்களைக் கேள்வி கேட்க வைத்து ஏன் நழுவினார்?மோதிரைக் கை அவர்கள் என்று கை காட்டி கழுவுற தண்ணியில நழுவும் மீன் போல் நழுவினார். இந்தச் சாமர்த்தியமும், சாணக்கியத்தனமும் ’அவா’ விற்குத்தான் வருமே ஒழிய பிறருக்கு வரவே வராது. 

ஜூலிக்கு படம் போட்டு விளக்கம் கேட்ட கமல்,  காயத்திரிக்குப் படம் போட்டுக் காட்டவில்லை என்பதற்கான ஒரு மிகச் சரியான காரணத்தை சொல்ல முடியுமா? இந்தக் கனிவு ஏன் இதர போட்டியாளர்களிடம் காட்டவில்லை என்று சொல்வாரா? 

தமிழன் என்றொரு வார்த்தையை அவர் நிகழ்ச்சியின் முடிவில் சொன்னார். உலக நாயகன் என்றொரு அடைமொழியைக் கொடுத்தார்களே அப்போது நான் உலக நாயகத் தமிழன் என்று சொல்ல மறந்து விட்டாரா? திடீர் தமிழ்ப்பாசமும் பற்றும் கமல்ஹாசனின் அடுத்த கட்ட நகர்வினைக் காட்டுகிறதா?

பிக்பாஸில் இருப்போர்களிடம் கேள்விகள் கேட்டார்கள். ஒருவர் கூட உண்மையைப் பேசவே இல்லை. வையாபுரி மட்டும் ஆமாம் நான் பாட்டுப் பாடினேன், தவறுதான் என்று சுஜாவிடம் மன்னிப்புக் கேட்டார். கூட்டாகச் சேர்ந்து கொண்டு ஒருவரை ஏமாற்றுவது, ஃபன்னிக்காகத்தான் செய்தோம், அது மனதை ஹர்ட் செய்து விட்டால் மன்னித்து விடுங்கள் என்று கொலை செய்து விட்டு செத்துப் போனவரிடம் மன்னிப்புக் கேட்பது போல பிந்து மாதவி சுஜாவிடம் கேட்டார். 

டிவி பார்ப்பவர்கள் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றுக்கு ஒருவரும் உண்மையானப் பதிலைச் சொல்லவே இல்லை. காயத்ரி உண்மையைப் பேசவே இல்லை. ஹாட்ஸ்டாரில் அந்தப் பகுதி உள்ளது. மீண்டும் பாருங்கள். போலியாக நடித்தே பழக்கமானவர்களுக்கு உண்மை பேசுவது என்றால் மறந்து போய் விட்டது என்றே நினைக்கிறேன். அந்த விஷயத்தைக் கூட அவர் கேட்கவில்லை. ஏனென்றால் அவர்கள் எல்லோரும் சினிமாக்காரர்கள் அல்லவா?

சினிமா ஹீரோக்களை உண்மையான ஹீரோக்கள் என்று நம்பி நம்பியே தன் சுய கவுரவம், இனம், மொழி, செல்வம், கலை, கலாச்சாரம் அனைத்தையும் இழந்து நிற்கும் எம் தமிழர்களை ஆள்வதற்கு அத்தனை தகுதியும் கமலிடம் இருக்கிறது என்று உள்ளம் சொல்கிறது. இந்தச் சாமர்த்தியமும், பிறரை தான் சொல்வது சரிதான் என்று நம்ப வைக்கும் சாணக்கியத்தனமும் கமல்ஹாசனுக்கு உள்ளது. ஆகவே அவர் தமிழகத்தினை ஆள சரியான ஆள் என்றே நினைக்கிறேன். ஏமாறுவது என்பது தமிழர்களின் இரத்தத்தில் ஊறிய விஷயம். தமிழர்களின் மரபணுவில் சினிமாக்காரர்கள் தான் நம்மை ஆள வேண்டும் என்று பதிவாகி விட்டது. மரபணுவை இனி மாற்றவெல்லாம் முடியாது. ஆகவே கமல்ஹாசன் தமிழகத்தின் சி.எம் ஆக வரலாம். மறக்காமல் காயத்ரியை உள்ளாட்சித்துறை அமைச்சராக்கி விடுங்கள். அது ரொம்பவும் முக்கியம்.

Wednesday, July 26, 2017

சிவன் ருத்ரன் விஷ்ணு பிரம்மா - குழப்பிய திருமூலர்

திருமூலரின் திருமந்திரம் எனக்கு மிகவும் பிடித்த நூல். அதன் பாடல்களின் அர்த்தம் தெரிந்து கொள்வதற்காக மூவாயிரம் பாடல்களின் தெளிவுரை புத்தகம் ஒன்றினை சமீபத்தில் வாங்கினேன். படிக்க ஆரம்பித்தேன். மண்டை காய வைத்தார் திருமூலர். பாயிரத்தில் கடவுள் வாழ்த்துப் பாடலில் ஆறாவது பாடலைப் படித்ததும் திகில் தான் ஏற்பட்டது. ஏதோ ஒரு உணர்ச்சியால் பீடிக்கப்பட்டேன். அறியாமையா, போதாத அறிவா, தெளிவடையாத புத்தியா என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.

இதுகாறும் நான் பிரம்மன், விஷ்ணு, சிவன் என்ற மூன்று தெய்வங்கள் தான் படைத்தல், காத்தல், அழித்தல் செய்கின்றார்கள் என்று நினைத்திருந்தேன். நீங்களும் என்னைப் போலத்தான் நினைத்திருப்பீர்கள். வழி வழியாக நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட ஆன்மீகம் இதுதான். ஆனால் திருமூலர் இந்த மூவருக்கும் மூத்தவன் ஒருவர் உளார். அவரின் பெயர் சிவன் என்று பாடி இருக்கிறார். கிறுகிறுவென ஆகியது எனக்கு.

அதுமட்டுமின்றி அந்தச் சிவன் எப்படி இருப்பார்? அவருக்கு உருவ வழிபாடு இருக்கிறதா? அப்படி இருந்தால் எந்த இடத்தில் இருக்கிறார். இதுவரை சிவன் என்றால் சிவபெருமான், சிவலிங்கம் என இரண்டு உருவ வழிபாடு தானே செய்து வந்தோம். சிவன் வேறு, ருத்ரன் வேறு என்றால் ருத்ரன் எப்படி இருப்பார்? அவரின் உருவம் எப்படி இருக்கும்? இப்படி பல்வேறு கேள்விகள் ஊற்றுக்குள் இருந்து கொப்பளிக்கும் தண்ணீரைப் போல மனதுக்குள் எழும்ப ஆரம்பித்தது. ஜோதி ஸ்வாமியிடம் கேட்டேன் அவர் விளக்கங்கள் சொன்னார்.

ஆனாலும் பழைய வாசனை என்னை விட்டு அகலவே மாட்டேன் என்கிறது. குழப்பமான குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறேன். என் அறிவுக்கு எட்டியவாறு எனக்கு இருக்கும் புத்தியில் பதியும் படி திருமூலர் தான் அதற்கொரு விடையைச் சொல்ல வேண்டும். நான் மட்டும் குழம்பினால் போதாது என்று உங்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டேன். விடை தெரிந்தால் மெயில் அனுப்பி வையுங்களேன். புண்ணியமாகப் போகும்.


இதோ திருமூலர் என்னை திக்குமுக்காடச் செய்த அந்தப் பாடல்.

முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னை அப்பா எனில் அப்பனும் ஆய் உளன்
பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத் தானே.

இதன் உரையை கீழே படியுங்கள்.

ஒவ்வொரு தொழிலே உடைய அயன் அரி அரன் என்னும் மூவரும் அவ்வத் தொழில் ஒன்றேபற்றி தம்முள் ஒப்பாவர். அம் மூவர்க்கும் முழுமுதலாய்ச் சிறந்தோனாய் என்றும் காணப்படுபவன் சிவன். மூப்பு - சிறப்பு. அச் சிவன் தன்னை யொப்பாக ஒரு பொருளுமில்லாத தனிமுதல்வன். அவனை விட்டு நீங்காது ஒட்டியுறைவோன் என்னுங் கருத்தால் அப்பன் என்று அன்பாய்ச் கூறின், அப்பனுமாவன். அவன் ஆருயிர்களின் நெஞ்சத் தாமரையின் உன்னிடத்தான். அந்நெஞ்சத்தாமரையின்கண் பொன்னொத்துத் திகழ்கின்றனன். பொன் : பொதுப்பெயர்; அஃது இரும்பு, பொன் என்னும் இரண்டினையும் குறிக்கும் ஆருயிரின், நெஞ்சம் ஆணவச் சார்பால் இரும்பொக்கும்; அருட்சார்பால் பொன்னொக்கும்.

இணைப்பு : http://www.ssivf.com/ssivf_cms.php?page=262


Friday, July 7, 2017

இறைவனின் கண்ணீர்

மனிதனுக்கு பகுத்து அறியும் அறிவு இருப்பதினாலே அவன் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அனுபவத்தின் அறிவு கிடைக்கும் போது எல்லாமும் முடிந்து சமூகத்தில் இருந்து ஒதுங்கி விடுகிறான். பிறகு புலம்புகிறான். இறந்து போகின்றான்.

தற்சமயம் தமிழ் நாட்டில் (எவன் சொன்னான்னு தெரியவில்லை?) பிரபலமாக இருப்பது “பிக் பாஸ்” என்ற நிகழ்ச்சி என்கிறார்கள். யூடியூப்பில் பிக் பாஸும் சீமானும் டிரண்டில் இருக்கின்றார்கள். சீமானின் நாம் தமிழர் கட்சி படு வேகமாக வளர்கிறது என்றும் சொல்லிக் கொள்கின்றார்கள். பிக் பாஸில் ஜூலியான டிரண்ட் என்கிறார்கள். 

பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒரு சில தடவைப் பார்த்திருக்கிறேன். காயத்ரி என்றொரு பெண்(?????). அந்தப் பெண்ணின் மூளைக்குள் இருப்பது ஒன்றே ஒன்றுதான் - ஈகோ. உடம்பு, மனசு முழுவதும் ஈகோ. இதனால் அவருக்குக் கிடைப்பது என்ன என்று பார்த்தால் ஒன்றுமில்லை. அந்த ஈகோவிற்காக அவர் வாழ்கிறார். அவரின் முழு மனித தன்மை அவரிடமிருந்து விலகி ஓடி விட்டது. அவர் எந்த நொடியும் எந்தப் பொழுதும் தனக்காக என்றொரு வாழ்க்கையை வாழவே இல்லை. 

கஞ்சா கருப்பு - கஞ்சா இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு போதைப் பொருள். அதை தன் பெயரோடு இணைத்துக் கொண்டவரிடம் மனிதத் தன்மை இருக்குமா என்று எதிர்பார்ப்பது வீண்.

சக்தி - இயக்குனர் வாசுவின் மகனாக இல்லை என்றால் ஒரு தெரு நாய் கூட இவரைத் திரும்பிப் பார்க்காது. அது ஒன்று தான் இவருக்கான தகுதி. ஆனாலும் மனசு முழுக்க அகங்காரம். தன் நிலை மறந்து வாழும் ஒரு ஜீவாத்மா.

ஓவியா, ரைசா, ஜூலி, பரணி, வையாபுரி, நமீதா, அனுயா, ஆர்த்தி, ஸ்ரீ, கணேஷ், சினேகன் (டயனமிக் திருமணப் புகழ்), ஆரார் - இவர்களைப் பற்றி நீங்களே நான் எப்படி அவதானித்துள்ளேன் என அவர்களையும் அவதானித்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் யோசியுங்கள். உங்களை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு நொடியும் நம்மிடமிருந்து போவது நம் வாழ் நாளும் இளமையும். ஆனால் அடைவது அனுபவம். குழந்தைப் பருவத்திலிருந்து இது நாள் வரையிலும் நம்மை வாழவே விடாமல் பலரின் சிந்தனைகளுக்காக, வழிகாட்டுதலுக்காக, பிறரின் மூளையை நம் மூளைக்குள் திணித்துக் கொண்டு அந்த வழியாகவே வாழ்ந்து கொண்டு வந்து கொண்டிருக்கின்றோம். உண்மையாக நமக்காக வாழ்ந்து வந்திருந்தால் கோபம், தாபம், எரிச்சல், பொறாமை இன்னும் என்னென்னவோ பிரச்சினைகள் எதுவும் இன்றி வாழ்ந்து வந்திருக்கலாம். ஆனால் சமூகத்தின் கட்டுப்பாடு என்ற பெயரில் தனி மனிதன் தன் இயல்பு மறைந்து, தன் நிலை மறந்து வேறு எவருக்காகவோ வாழ்ந்து வருகின்றான். யோசித்துப் பாருங்கள்.

திரு மூலர் அன்றே எழுதி வைத்துச் சென்றார். நீயே கடவுள் என்று. எவரும் நம்புவதும் இல்லை. அதைப்பற்றிச் சிந்திப்பதும் இல்லை. இங்கே இந்த வீடியோவைப் பாருங்கள். கடவுளின் கண்ணீர் என்ற ஒன்று உங்களுக்குத் தெரிய வரும். இந்த மனது உங்களிடம் இருக்கிறதா? அவ்வாறு இருந்தால் நீங்களும் கடவுளே!


Saturday, May 13, 2017

பாகுபலி 2 - 360ல் ஓர் அலசல்

பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் திரைப்படத்தினை விமர்சனம் செய்பவர்களை பல்வேறு கொடூர வார்த்தைகளால் யாரால் புகழப்படுகின்றார்களோ அவர்களை நன்றி கெட்டு வைது கொண்டு இருக்கின்றார்கள். திரைவிமர்சனம் செய்பவர்களின் எதிர்மறையான விமர்சனங்களைப் படித்து விட்டு பலரும் படம் பார்க்க வர மாட்டார்கள் என்று அவர்கள் நினைப்பதால் திட்டுகின்றார்கள். ஏன் எதிர்மறையான விமர்சனங்கள் வருகின்றன? என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. காக்காய்க்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதால் அவர்கள் இப்படி நிலைகுலைந்து விடுகிறார்கள். இருந்தாலும் உண்மை என்று ஒன்று உண்டல்லவா?

ஹோட்டலில் சாப்பிடப் போகின்றவர்கள் உணவு எப்படி இருக்கிறது, ருசி எப்படி இருக்கிறது, தரம் எப்படி இருக்கிறது என்று பலரிடமும் பகிர்ந்து கொள்வார்கள். உணவு நன்றாக இருந்தால் நன்றாக இருக்கிறது என்பார்கள். நன்றாக இல்லையென்றால் நன்றாக இல்லை என்பார்கள். ஆனால் அதற்காக ஹோட்டல்காரர்கள் உணவு நன்றாக இல்லை என்பவர்களை நீயென்ன சமையல் படித்திருக்கின்றாயா? எந்த ஹோட்டலில் வேலை செய்தாய் என்றா கேட்கின்றார்கள்? இல்லையே! ஒரு உணவின் ருசியை சாப்பிட்டுப் பார்த்தால் சொல்லி விடலாம். அதற்காக சமையல் கலைஞனாக இருக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? விமர்சனங்களை மூன்று நாட்கள் கழித்து எழுதுங்கள் என்கிறார்கள் சினிமாக்காரர்கள். ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். ஒரு ஹோட்டலில் சாப்பிடச் செல்கிறான் ஒருவன். அவனுக்கு வாந்தி பேதி எடுத்து மருத்துவமனையில் கிடக்கின்றான். அவன் அந்த ஹோட்டலில் சாப்பிட்டதால் தான் வாந்தி பேதி வந்தது என்று சொன்னால் என்ன தப்பு? அவ்வாறு பிறரிடம் சொன்னால் தானே பலரும் தப்பித்துக் கொள்வார்கள். அவ்வாறு உடனே சொல்லாமல் மூன்று நாட்கள் கழித்துச் சொல்லலாமா? இது தவறில்லையா? 

திரைப்படத்தைப் பார்த்ததும் நன்றாக இருக்கிறதா? இல்லையா? என்று படிக்காதவன் கூட சொல்லி விடுவான். ஒரு நாவல் படிக்கிறோம் என்றால் அதை எழுதத் தெரிந்தவனோ அல்லது முன்பே எழுத்தாளனாக இருப்பவனோ தான் விமர்சிக்க வேண்டுமென்றால் அதெல்லாம் நடக்கக் கூடிய ஒன்றா? சினிமாக்காரர்கள் பொதுவில் பேசும் போது நான்கும் சிந்தித்துப் பார்த்து பேச வேண்டும்.

சிந்திக்கும் அளவுக்கு சினிமாக்காரர்கள் ஒன்றும் பெரிய புத்திசாலிகள் இல்லை எனலாம். அவர்களில் மிகச் சிறந்த ஆளுமைகளும் இல்லை. தங்களின் புகழ் மாயையில் ஒரு விஷயத்தை மறந்து விடுகின்றார்கள். நாங்கள் தான் தமிழ் நாட்டை ஆள்கிறோம் என்பதாக அவர்களுக்கு எப்போதும் ஒரு மமதை உண்டு. இதை விட முட்டாள் தனமான சிந்தனை வேறு எதுவும் இருக்க முடியாது. ஏன் அப்படிச் சொல்கிறேன் என்பதற்கு காரணம் உண்டு.

எம்.ஜி.ஆரை வைத்து, கலைஞரை வைத்து, ஜெவை வைத்து, விஜயகாந்தை வைத்து சம்பாதிக்க நினைப்பவர்களின்  மேற்கண்டவர்களை உசுப்பேத்தியே அரசியலுக்கு வர வைத்து அரசியலுக்குள் நுழைத்து விடுகின்றார்கள். மேற்கண்ட தலைவர்களால் பிரயோஜனம் இல்லையென்றால் அடுத்த கட்சிக்குத் தாவி விடுவார்கள். அவர்களுக்குத் தேவை அரசியல், அதிகாரம், பணம். அதற்குத் தேவை சினிமாக்காரர்களின் புகழ். தலைவர்கள் தான் அனைத்துப் பழிச்சுமைகளையும் ஏற்பார்கள். அவர்களை அரசியலுக்குள் இழுத்தவர்கள் எதிரிகளாகி விடுவார்கள். சினிமாக்காரர்கள் தன் புகழால் விளையும் எதிர்காலப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். ரஜினியால் பணமும் புகழும் அதிகாரமும் கிடைக்க வேண்டும் என விரும்புவர்களுக்குத்தான் ரஜினி தேவை என்பதை அவர் புரிந்து வைத்திருக்கின்றாரா என்று தெரியவில்லை.

ஒரு சினிமாக்காரர் விமர்சனம் செய்பவர்கள் எந்த இன்ஸ்டிடியூட்டில் படித்தார்கள்? சினிமா என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் எல்லாம் விமர்சனம் செய்கின்றார்கள் என்றெல்லாம் திட்டிக் கொண்டிருந்தார்.  பொது வெளியில் திரைப்படத்தினை மக்கள் பார்ப்பதற்காக வெளியிடுகிறார்கள். படம் எப்படி இருக்கிறது என்றுச் சொல்லக் கூடாது என்கிறார்கள். இது என்ன சட்டமோ? அவர்களுக்கான நியாயமோ? தெரியவில்லை.

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமா என்னைப் பொறுத்தவரை ஒரு சில தனியார் கூட்டத்தால் நிர்வகிக்கப்படும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை மதிக்காக அமைப்பு. அவர்களுக்கு எந்த வித சட்டமும், விதியும் இல்லை. ஆட்சிக்கு வரும் எந்த அரசும் கண்டு கொள்வதில்லை என்பதும் அதற்குப் பல்வேறு காரணிகள் காரணமாய் இருக்கின்றன என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சினிமாவின் புகழ் மற்றும் இதர இன்பங்களையும் முன்னிட்டு அரசு தொடர்புடையவர்கள் சினிமாவைக் கண்டு கொள்வதே இல்லை என்பதுதான் உண்மையாக இருக்கக் கூடும். 

அடுத்து ஒரு முக்கியமான உளவியல் பிரச்சினை பற்றிப் பார்த்து விட்டு பாகுபலிக்குள் செல்லலாம்.

ஒரு காரில் பார்த்தேன், ”மை டாட் ஈஸ் மை ஹீரோ” - என் தந்தை என் ஹீரோ என்று ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது. உலகெங்கும் இருக்கும் பிரச்சினையே இதுதான். அடிமைத்தனத்தினை இப்படித்தான் சொல்வார்கள். என் தந்தை என் ஹீரோ என்பது அடிமைத்தனம். ஒவ்வொருவரும் தனிப்பட்டவர்கள், தனிப்பட்ட பண்பு நலன்கள் கொண்டவர்கள். ஆனால் அதை எவரும் புரிந்து கொள்வதில்லை. எப்போது என் தந்தை என் ஹீரோ என்று ஒரு சமூகம் சொல்ல ஆரம்பித்ததோ அன்று ஆரம்பித்தது இந்த ஹீரோயிசம் பிரச்சினை. தலைவரிலிருந்து சினிமா ஹீரோ வரை எல்லாவற்றிலும் ஹீரோயிசத்தில் மாட்டிக் கொள்கின்றார்கள். ஹீரோயிசத்தின் முடிவு என் தலைவர் என்ற அடிமை மனப்பான்மை. ஹீரோ இல்லாமல் எதுவுமே இல்லை என்ற ஒரு மாயையைக் கட்டமைத்து விட்டார்கள். தலைமை, தலைவர், மேலதிகாரி, தந்தை, தாய் என்று எல்லாவற்றிலும் ஹீரோயிசத்தினைக் கொண்டு வந்து திணித்து விட்டார்கள். நாவல் எழுதினால் கூட ஹீரோ, ஹீரோயின் வேண்டும்.

இங்கு யாரும் யாருக்கும் தலைவரும் இல்லை, எவரும் எவருக்கும் தொண்டனும் இல்லை என்பதை மனது புரிந்து கொள்ள மறுக்கிறது. ஆதர்ஷ ஹீரோ அது எதுவானாலும் சரி இங்கிருப்பவர்களுக்கு வேண்டும். அவர் வழி தான் இவர் நடப்பார். அடிமைத்தனத்தில் சுகம் கண்டவர்களுக்கு அதன் அபாயகரமான வழிகாட்டுதலின் அர்த்தம் புரிவதில்லை. அன்புக்கு அடிமையாக இருப்பதும், கடமைக்கு கட்டுப்பட்டு நடப்பதும் வேறு. இது வேறு. இந்த ஆதர்ச ஹீரோயிசம் தான் மனிதனைப் படுகுழிக்குள் தள்ளி புதைத்து விடுகிறது.

இங்கு ஹீரோ, ஹீரோயின் என்று எவரும் இல்லை. இயற்கைதான் ஹீரோ. வாழ்க்கை தான் ஹீரோயின். இயற்கையோடு இயைந்து வாழ்வதுதான் வாழ்க்கை. நம் முன்னே இருப்பது நம் வாழ்க்கை மட்டும் தான். பிறப்பு எப்படி நம் கையில் இல்லையோ அது போல இறப்பும் நம் கையில் இல்லை. ஆனால் வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கையில் பெரும்பாலும் நாம் வாழ்வதே இல்லை. ஆப்பிள் நிறுவன ஸ்டீவ் ஹாக்கின் இறுதிப் பேச்சு என்றொரு மெசேஜ் வாட்சப்பில் வந்து கொண்டிருக்கிறது. படித்துப் பார்த்தீர்கள் என்றால் கொஞ்சமேனும் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் என்னவென்று புரியும்.

அடுத்து மற்றொரு கேனத்தனமான விஷயத்தைப் பற்றியும் பார்த்து விட வேண்டும். விசுவாசம் என்பது அடிமைத்தனத்தின் உச்சகட்டம். சுத்தப் பைத்தியக்காரத்தினத்தின் மற்றொரு வார்த்தை என்னவென்றால் அதன் பெயர் விசுவாசம். ஒருவன் தவறே செய்தால் கூட அதைச் சுட்டிக்காட்டக் கூட அனுமதி மறுக்கும் விசுவாசம் என்கிற வார்த்தை சுத்தப் வேறொரு முட்டாள்தனத்தின் வேறு வார்த்தை..

கதைக்கு வந்து விடுவோம்.

பாகுபலி முதல் பாகத்தின் கதை - கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பதாக முடிந்து விட்டது.

உலகே இந்தக் கேள்விக்கான பதிலை எதிர்பார்த்துதான் காத்துக்கிடக்கிறது என்றார் திவ்யதர்ஷினி. சிலம்பாயி பேத்திக்கு பேசக் கத்துக் கொடுக்கணுமா? டிடியின் சின்னப்பத்தாவோ பெரியப்பத்தாவோ எனக்குச் சரியாக நினைவில் இல்லை. அது ஜாக்கெட் போடாது. சிறு வயதில் அழுது அடம் பிடித்து பால்குடிக்க சண்டை போட்டேன் என்பதால் என்னைப் பார்த்தாலே அதற்கு கொஞ்சம் திகில் ஆகி விடும். அது பெயர் தான் சிலம்பாயி. சிலம்பாயி பேச்சு ஆவணத்தில் பிரபலம். டிடி அச்சு அசல் சிலம்பாயி. மரபணு தோற்காது அல்லவா? டிடியின் அப்பா நீலகண்டன் இறப்பதற்கு முன்பு வீட்டுக்கு வந்திருந்த போது டிடியைப் பற்றிச் சிலாகித்து பேசிக் கொண்டிருந்தார். அருமை பெருமைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தக் கதை ஒரு பக்கம் இருக்கட்டும்.

டிடி எல்லோரையும் கட்டிக் கட்டிப் பிடித்து கமல் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார். பேசாமல் டிடிக்கு டாக்டர் பட்டம் கொடுத்து விடலாம். விஜய் டிவி அதற்கான வேலையைச் செய்ய வேண்டும். எது எதுக்கோ எவன் எவனுக்கோ விழா எடுக்கிறது விஜய் டிவி. டிடியினால் பிழைத்துக் கொண்டிருக்கும் விஜய் டிவி தன் தொகுப்பாளினிக்கு டாக்டர் பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்து அதை விழாவாக எடுக்கும் என நம்பலாம்.

இரண்டாம் பாகம் பாகுபலியை கோவை மணீஷ் தியேட்டரில் அம்மு, ரித்திக்கின் தொல்லை தாங்காமல் பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. இத்தனைக்கும் நெட்டில் இருக்கிறது, தேடிப் பிடித்து டவுன் லோடு செய்து பாருங்களேன் என்றால் ’போப்பா’ என்று ஒரு வார்த்தையில் மறுத்து விட்டார்கள்.

சாண்டில்யன், கல்கி ஆகியோரின் வரலாற்றுப் புதினங்களைப் படித்ததினால் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்று ஓரளவு யூகித்து இருந்தேன். அந்தளவுக்கு ராஜமெளலி மீது கவனம் இருந்தது. இரண்டாம் பாகத்தின் கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். எழுத வேண்டியதில்லை.

பாகுபலியின் அறிமுகம் ஹீரோயிசத்தின் வெளிப்பாடு. பல நூறு பேர் சேர்ந்து இழுக்கும் தேரை ஒற்றை ஆளாக இழுத்து வந்து யானை மீது மோத விடுகிறார். மதம் பிடித்த யானை அடங்கிப் போகிறது. என்ன ஒரு ஹீரோயிசம்? ரஜினி 100 பேரை அடிக்கிறார் அதை விடவா என்று நீங்கள் சிரிப்பது புரிகிறது. அதுமட்டுமல்ல ஹீரோவிடம் இருக்கும் கருணை வேறு எவருக்கும் இல்லாத ஒன்றாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. குச்சிக் கால்கள் கொண்ட மன்னன். கருப்புச் சுவடு படிந்த உதடுகள். நடிக்கவே தெரியாத வெற்று வரட்டு முகம். இவர் தான் ஹீரோ. தியேட்டரில் விசிலடிச்சான் குஞ்சுகள் வாயில் விரலை வைத்து விசிலடிக்கின்றார்கள். இதன் காரணம் நம் சமூகம் கட்டமைத்திருக்கும் ஹீரோயிசம்.

தமிழர்கள் எடுத்த அந்தக் கால மன்னர் படங்களை இயக்குனர் பார்த்திருந்தால் இவரை ஹீரோவாக போட்டிருக்க மாட்டார். ஹீரோவுக்கு 25 கோடி என்றும் இயக்குனருக்கு 100 கோடியும் சம்பளமாகக் கொடுத்திருக்கின்றார்கள் என்று இண்டஸ்ட்ரீயில் பேசிக் கொள்கின்றார்கள். உத்தமர்கள் அலுவலகம் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சுமார் 35 கோடி வரியாக இந்தியாவுக்கு கிடைக்குமே?

எம்.ஜி.ஆர் என்ற ஹீரோயிசத்தின் காரணமாக நாம் தமிழ் நாட்டையே ஆளக் கொடுத்திருக்கிறோம். இது தான் ஹீரோயிசத்தினை நம்பியதன் விளைவு. ஹீரோ நன்றாக இருக்க வேண்டும். அதற்கு காமெடியன்களும், இதர அல்லைக்கை நடிகர்களும் ஹீரோவுக்கு உதவ வேண்டும். இதைத்தான் காலம் காலமாக சினிமா சொல்லிக் கொடுத்துக் கொண்டே வருகிறது. மற்றவர்கள் எல்லாம் வாழவே வேண்டாம். ஹீரோ மட்டும் வாழ்ந்தால் போதும். அவர் நூறு அல்ல லட்சம் பேரை வாழ வைப்பார் என ஒவ்வொரு படத்திலும் ஹீரோயிசத்துக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எம்.ஜி.ஆர் தமிழகத்தில் தனியார் கல்வி நிலையங்களுக்கு அனுமதி கொடுத்து விட்டு எத்தனை பேரை பிச்சைக்காரனாக்கி இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
\
பாகுபலி கதையில் ராஜிய பரிபாலனத்திற்கு பட்டாபிஷேகம் செய்யும் முன்பு ராஜிய யாத்திரை சென்று விட்டு வா என்கிறார் சகிக்கவே முடியாத முகமும், பாவனையும் கொண்ட ராஜமாதா ரம்யா கிருஷ்ணன். அரியணையில் குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டு ”இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்” என்று கிரைண்டர் குரலில் கத்துகிறார். முதல் பாகத்தில் காலகேயனை வென்றவர் தான் மகிழ்மதியின் மன்னன் என்பதால் பாகுபலி காலகேயனை அடித்து துவைத்துக் கொண்டிருக்கும் போது முதுகிற்குப் பின்னால் இருந்து கொல்கிறான் பல்வாள்தேவன். அதையெல்லாம் விட்டு விட்டார்கள். மன்னனின் கடமை தம் குடிமக்களைக் காப்பது என்பதால், போரின் போது குடிமக்களைக் காப்பாற்றி எதிரியை துவம்சம் செய்த பாகுபலியே மன்னன் என்று அறிவித்து விட்டார் ராஜாமாதா. தொடர்ந்து ”இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்” என்கிறார்.

ராஜமாதா தன் மகனுக்கு வாக்கு கொடுத்தாராம். அதுவும் எப்படி? ஓவியத்தில் ஒரு பெண்ணைப் பார்ப்பார், அப்பெண்ணை தன் மகன் விரும்புகிறாராம், அவரையே மணமுடித்து வைப்பதாக வாக்குக் கொடுப்பாராம். அந்தப் பெண் சபையில் நான் பாகுபலியைத்தான் விரும்புகிறேன் என்கிறாள். ஆனால் நான் கொடுத்த வாக்கு என்னாவது? ராஜமாதா உடனே உனக்கு பெண் வேண்டுமா? இல்லை ராஜ்ஜியம் வேண்டுமா? என பாகுபலியிடம் கேட்கிறார். பாகுபலி நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன் என்று ராஜ்ஜியத்தை மறுக்கிறார். பல்வாள் தேவனை மன்னனாக்கி, பாகுபலியை படைத்தளபதி ஆக்குகிறார். தொடர்ந்து ”இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்” என்கிறார் ராஜமாதா. இதற்கு முன்புச் சொன்ன சாசனம் என்ன ஆச்சு என்று அவருக்குத் தெரியுமா? இல்லை கதை எழுதிய ராஜமெளலியின் அப்பாவுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. சுத்த நான்சென்ஸ்.

இதுவாவது பரவாயில்லை. மன்னனைக் கொல்ல வந்தார்களாம், இதற்குக் காரணம் பாகுபலி என்கிறார்களாம். உடனே மொட்டையன் சத்தியாராஜை அழைத்துப் பாகுபலியைக் கொல்லச் சொல்கிறார் ராஜாமாதா. ராஜமாதா விசாரிக்க மாட்டார், பிறர் சொல்வதை மட்டுமே கேட்பார் என்று கேனத்தனமான கதை. புல்லரிச்சு புல்லரிச்சு சொரிய ஆரம்பித்து விட்டேன். ராமமெளலியின் கதையை எந்த வார்த்தையால் சொல்லிப் பாராட்டுவது என்றே புரியவில்லை. தன் மகன் பல்வாள் தேவனின் சூழ்ச்சி தெரிந்ததும் தேவசேனாவின் பிள்ளையை மன்னாக்குகிறார். ஆற்றில் விழுந்து ஒற்றைக் கையில் பிள்ளையை தண்ணீருக்கு மேலே பிடித்தபடி இறந்தும் போகிறார். தன் மகன் விட்ட அம்பு முதுகில் தைக்க உயிர் போகிறது ராஜமாதாவுக்கு. பிள்ளை பெரிய ஆளாகி மகிழ்மதியை மீட்கிறார். சிறை வைத்திருந்த அன்னையின் சபதத்தை நிறைவேற்றுகிறார்.

பாகுபலியும், தேவசேனாவும் ஒரே கையில் மூன்று அம்புகளை வில்லில் வைத்து விடுவார்கள் அல்லவா அது ஒரு கார்ட்டூன் புகைப்படத்தில் வந்தது. அதை அப்படியே சுட்டு விட்டார் இயக்குனர்.

பாகுபலியும், பல்வாளும் பூணூல் போட்டிருக்கிறார்கள். கழற்றி வைத்து சண்டையிடுகின்றார்கள். பூணூல் எந்தளவுக்கு முக்கியமாக இருக்கிறது என்பதையும், பூணூலின் மகத்துவத்தையும் அறிந்தவராக இயக்குனர் இருந்திருக்கிறார் என்பது இந்தப் படத்தின் ராஜதந்திரம்.

1000 கோடி கலெக்ஷன் என்கிறார்கள். அந்த ஆயிரம் கோடி எப்படி எவ்வாறு வந்தது என்று கணக்குக் கேட்டுப் பாருங்கள்? ஒருவர் பதில் சொல்ல மாட்டார். 1000 கோடி வரவு என்றால் என்ன அர்த்தமென்பது சினிமா தயாரிப்பாளர்களுக்கு நன்கு தெரியும், இவர்களுக்கு நன்கு தெரியும் என்பது இந்தியாவின் உத்தமர்கள் அலுவலகமும் அறியும்.

கோவை மணீஷ் தியேட்டரின் டிக்கெட்டில் சீரியல் நம்பர் மட்டுமே இருந்தது. மற்றபடி டிக்கெட்டின் விலை இல்லை, தேதி இல்லை. வேறு எதுவுமே இல்லை. மோடி அவர்கள் கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்றார். வெறும் டோக்கனைக் கொடுத்து லட்சக்கணக்கில் காசு வசூலிக்கும் தியேட்டர்களை கண்டு கொள்ளவே இல்லை. அரசியல், சினிமா இரண்டும் கூட்டுக்களவாணித்தனத்தின் குறியீடு. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினைக் கேலிக்கூத்தாக்கும் சினிமா அமைப்பினை கண்டு கொள்ளாமல் களவாணித்தனத்தினை அரசு செய்து வருகிறது.

இரண்டரை லட்சத்துக்கு மேல் வருமானம் வந்தால் சாமானியனிடம் வரி கட்டச் சொல்லி கட்டாயப்படுத்தும் உத்தமர்கள் அலுவலகம் பைசாவுக்கு பெயராத சிறு பேப்பரைக் கொடுத்து வசூல் செய்யும் சினிமாக்காரர்களை ஏன் கண்டுகொள்வதில்லை என்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? ரொக்கமாக கையில் காசு வைத்திருந்தால் அபராதம் போடுவோம் என்றார்களே அந்த உத்தரவுகள் எல்லாம் சினிமா தியேட்டர்களுக்குக் கிடையாதா?

சுத்த கொங்குத் தமிழனான சத்தியராஜை கட்டப்பாவின் கேரக்டரை வைத்து நன்றாக செய்திருக்கிறார் இயக்குனர். போதாத குறைக்கு மன்னிப்பும் கேட்டிருக்கிறார் சத்தியராஜ். திரைப்படத்தில் நீ நாய் தான் என்று அடிக்கடிச் சொல்கிறார்கள். கட்டப்பா அதற்கொரு பஞ்ச் டயலாக் அடிக்கிறார். நான் நாய் தான், மோப்பம் பிடித்தேன் என்று. விசுவாசத்தின் பெயர் அடிமை. அடிமைத்தனத்தின் பெயர் அயோக்கியத்தனம். தர்மத்தினை விசுவாசத்தின் பெயரால் அழிப்பது அயோக்கியத்தனம்.

இந்திய அரசியல் தலைவர்களிடம் இல்லாத அரிய விஷயம் விசுவாசம். விசுவாசம் இருந்தால் சாகும் வரை தொண்டன்வாகவே மட்டுமே இருக்க முடியும். எப்போதும் தலைவராக இருக்க முடியாது. பன்னீர் செல்வம் அவர்கள் விசுவாமாக இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

ஹீரோயின் செலக்சனில் முற்றிலுமாகத் தோற்று இருக்கிறார் ராஜமெளலி. முதல் பாகத்தில் ஹீரோயினாக இருக்க கொஞ்சம் கூட தகுதி இல்லாத  உடல் மட்டும் சிவந்த கலரில் இருக்கும் தமன்னாவை என்ன சிந்தனையில் தேர்ந்தெடுத்தாரோ தெரியவில்லை. இரண்டாம் பாகத்தில் தேவசேனாவாக வரும் அனுஷ்காவிடம் இளவரசித்தன்மைக்கான எந்த உடல் மொழியும் இல்லை. இளவரசியின் உடல் தகுதி என்று ஒன்று உண்டு. உங்களுக்குப் புரிய வேண்டுமெனில் இதே சினிமாவில் ருத்ரம்மா தேவி என்றொரு படம் வந்தது, அப்படத்தில் ராணாவும் அனுஷ்காவும் ஒரு பாடலில் வருவார்கள். அந்தப் பாடலில் ஒரு சிற்பம் வருமல்லவா அதன் உடல் மொழியைப் பாருங்கள். அதற்குப் பெயர் பெண். சிவப்புத் தோல் எல்லாம் ஹீரோயின் என்றால். இயக்குனருக்கு தமன்னாவும், அனுஷ்காவும் போதும் போல. இயக்குனர் இன்னும் காம்ப்ளானில் இருக்கிறார். இவர் எப்போது காஃபி குடிப்பாரோ தெரியவில்லை. இன்னும் வளரணும் சாரே!

சினிமா கிராபிக்ஸ் சுத்த மட்டம். இதை விட அருமையான கிராபிக்ஸ் எல்லாம் பார்த்திருக்கிறோம். பனைமரத்தினை வளைத்து உயர எம்பி அரண்மனைக்குள் நுழைந்து சண்டை இடுகின்றார்களாம். ஒரு ராஜாவை அவ்வளவு எளிதில் அண்டக்கூட முடியாது. அந்தளவுக்கு அரண் வைத்திருப்பார்கள். ஆனால் இப்படத்திலோ போர் என்கிற போர்வையில் காமெடி செய்து கொண்டிருக்கின்றார்கள். கதையில் காமெடி, வசனத்தில் காமெடி, படமாக்கியதில் சொதப்பல் என்று அத்தனையும் சொதப்பி வியாபாரத்தில் மட்டும் வெற்றி அடைந்த ராஜமெளலிக்குப் பெயர் சினிமா வியாபாரி.

அவர் இயக்குனர் அல்ல. கலைஞனும் அல்ல. சட்டத்திற்கும் புறம்பான வழியில் பணம் சம்பாதிக்கு ஒத்துழைக்கும் எவரும் என்னைப் பொறுத்தவரை ..... எழுத விரும்பவில்லை. இதோ புகைப்படத்தில் சாட்சி இருக்கிறது. சாமானியனைக் கட்டுப்படுத்தும் அரசாங்கம் சினிமா என்கிற ஒரு சிறு கூட்டத்தினைக் கட்டுப்படுத்தவில்லை என்பதற்கான சாட்சி  இது.



பாகுபலி திரைப்படத்தினைக் கொண்டாடி மகிழும் பல்வேறு உள்ளங்களுக்கு இந்தப் பதிவு வித்தியாசமானதாக இருக்கலாம். இது தான் உண்மை என்பது உங்கள் உள்ளங்களுக்குத் தெரிந்திருக்கும். உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்துப் பாருங்கள். நம்மைச் சுற்றி நடக்கும் நாடகங்களை. அதனால் நாம் என்னென்ன இழந்திருக்கிறோம் என்பதை. நம் வாழ்க்கையை நாம் வாழ இந்தச் சமூகம் விடுவதே இல்லை. ஒவ்வொரு விஷயத்திற்கு முன்னுதாரணங்களைக் காட்டி பிறர் வழி நடக்க வைக்கும் கொடூரமான சிந்தனையில் சிக்கி இருக்கிறோம் என்பதை ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள். பாதைகள் பல இருக்கலாம். அவைகள் தூரத்தைக் கடந்துச் செல்லத்தானே உதவ வேண்டுமே ஒழிய அதே பாதை தான் வாழ்க்கையாக இருக்கக் கூடாது. பாலம் என்பதும் பாதை என்பதும் கடக்கத்தானே ஒழிய வசிப்பதற்கு இல்லை. நாம் இன்னும் சாலையில் தான் வாழ்கிறோம். அந்தச் சாலையிலிருந்து நாம் வெளியில் வர வேண்டும்.

பாகுபலி போன்ற படங்கள் நம்மிடம் இருக்கும் பணத்தைப் பறித்துக் கொள்கின்றன. நம்மையும் கீழ்மைச் சிந்தனைகளில் சிக்க வைத்து விடுகின்றன. புரியும் தன்மை கொண்டவர்களுக்கு எளிதில் புரிந்து விடும். ஆனால் வெள்ளை மனம் கொண்டவர்களின் கதையை என்னவென்றுச் சொல்வது. பாகுபலி ஆந்திராவின் முதலமைச்சரானால் இதன் அர்த்தம் உங்களுக்குப் புரியலாம். அல்லது புரியாமல் கூடப் போகலாம். நாம் நாமாக இருக்க இது போன்ற மூளை மழுங்கச் செய்யும் படைப்புகளை நிராகரிக்க வேண்டுமென்பது எனது ஆவல்.

நான் இந்தப் பதிவில் எழுதி இருக்கும் விஷயங்கள் பல குழப்பங்களைத் தரலாம். உங்களுக்குள் பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கலாம். அனைத்துக்குமான பதிலை நீங்களே உங்களுக்குள் தேடிக்கொள்ளுங்கள்.

Monday, May 1, 2017

செப்டம்பர் 31

நேற்றுக் காலையில் ஏழு மணிக்கே வேலை விடயமாக வெளியில் சென்று பத்து மணி வாக்கில் வீடு வந்து சேர்ந்தேன். நல்ல வெயில். சூடு தான் பிரச்சினை. கொதிக்கிறது அனல். முக்கியமான வீதிகளில் கம்பங்கூழ் பானைகள் துண்டுகள் கட்டி அமர்ந்திருக்கின்றன. ஒரு முறை திருப்பூர் கோர்ட்டுக்குச் சென்று விட்டு வரும் வழியில் கம்பங்கூழ் குடித்தேன். புளிப்பு உடலெங்கும் புல்லெரிக்க வைத்தது. ஆனால் நண்பரோ அசராமல் அனைத்தையும் குடித்தார். அப்படியே திரும்பக் கொடுத்து விட்டேன். அந்த அனுபவத்தினால் கம்பங்கூழ் என்றால் காத தூரம் ஓடிப் போ என்கிறது மனசு.

நுங்குகள் ஐந்து ரூபாயாம். வெட்டித்தருகின்றார்கள். பதனீ குடித்துப் பார்க்கலாம் என்று கொஞ்சம் வாங்கி வாயில் வைத்தால் சாக்கரீன் சுவை மிளிர துப்பி விட்டேன். ஒரு முடை நாற்றம் வேறு வந்தது. அதில் நுங்கைச் சீவிப் போட்டு மட்டை மட்டையாகக் குடிக்கின்றார்கள். ஆனால் எனக்குத்தான் ஆகவில்லை. நுங்கை வைத்து இப்படி ஒரு பிசினஸ் செய்யலாம் என்பதே ஆச்சரியம் தான். ஆனால் பாருங்கள் வருடம் முழுமைக்கும் நுங்கு கிடைக்கிறது. அதில் தான் ஏதோ ஒரு உள்குத்து இருக்கிறது. அது என்னவென்று புரியமாட்டேன் என்கிறது.  ஒரு தடவை வீட்டுக்கு வந்த உறவினர் விழா நாட்களில் கோவையில் சாணி விற்றே கோடீஸ்வரனாகலாம் போலவே என்று சொல்லிக் கொண்டிருந்தார். வீட்டு வாசலில் தெளிக்க சாணி வாங்க மனையாள் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தாள்.
(திருமணத்திற்கு முன் இப்படி இருந்த நான்)

வீட்டுக்கு வந்து அயர்ந்து போய் படுத்து விட்டேன். வெயிலில் கருவாடு போலக் காய்வது என்பது சாதாரணமா? பசங்க டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். மதியம் மூன்று மணி போல நீயா? நானாவில் மறதி கணவர்கள் மனைவிகள் என்றொரு தலைப்பில் கணவர்கள் மீது குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார்கள் பெண்கள். இதெல்லாம் சகஜம் தானே? அதைப் பார்த்து மனையாள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள். 

தன் குடும்ப விஷயத்தை, அதுவும் தன் கணவனின் ரகசியத்தை வெளியில் கசிய விடலாமா என்றெல்லாம் தெரியாமல் பிளந்து கட்டிக் கொண்டிருந்தனர். மறதி என்பது மனிதனுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்பதில் யாருக்கேனும் எள்ளளவாவது சந்தேகம் இருக்கிறதா? அப்படி இருந்தால் அதை உடனடியாக மறந்து விடுங்கள். சந்தேகம் இருக்கவே கூடாது. நல்லது நடந்தால் நினைக்கும் மனது கெடுதல் நினைந்தால் மறக்கத்தான் நினைக்கும் அல்லவா? அதைத் தவறு என்கிறார்கள் இல்லத்தரசிகள். இருக்கட்டும். 

பெண்கள் எப்போதுமே குறை பேசி பழக்கமானவர்கள். நிறையை மட்டும் பார்க்காமல் குறையை மட்டுமே குத்திக் காட்டிக் கொண்டிருப்பார்கள். குறை சொன்னால் தான் நிவர்த்திச் செய்து கொள்ளலாம். ஆகையால் அதுவும் தவறில்லை. சரி கணவனிடம் தானே பேசுகின்றார்கள். தங்கள் தகப்பன், தாய், அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகளை விட்டு விட்டு வந்திருக்கின்றார்கள். பேசினால் தப்பில்லை. அடித்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். குடும்பத்தின் ஆணி வேர் அல்லவா பெண்கள்? இப்படிச் சரண்டர் ஆகி விட்டாயே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. எவன் எவனுக்கோ அடிபணிந்து வேலை செய்யும் போது மனைவியிடம் சரண்டர் ஆவது ஒன்றும் தப்பில்லை என்கிறேன். சரிதானே சரண்டரானவர்களே? அடக்கம் தான் அமைதிக்கு வழி! (தத்துவங்களில் சொல்லப்பட்டிருக்கிறது)

காதலின் மோக லாகிரியில் சிக்கி காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறும் பெண், காதலின் உச்சத்தை நுகர்ந்து விட வாழ்க்கையெனும் மோக வளைக்குள் நுழைகின்றாள். வாழ்க்கையின் வாசலில் வசந்தம் தன் அழகான வரவேற்பைத்தரும். அந்த வரவேற்பில் மகிழ்ந்து வாழ்க்கை எனும் வீட்டுக்குள் நுழைந்த பெண், நாளடைவில் காதலின் மோக லாகிரியிலிருந்து விலகி, இயற்கையின் மகத்துவமான தாய்மை எனும் அவதாரமெடுக்கின்றாள். 

கண்ணதாசன் கூட சொல்வார்,”இறைவன் ஒருவனின் ஆத்மாவுக்கு மட்டுமே பொறுப்பேற்றுக் கொள்கிறான். ஆனால் தாயோ ஒருவனின் ஆத்மாவுக்கும், உடலுக்கும் பொறுப்பேற்றுக் கொள்கின்றாள்”. இதை விட ஒரு பெண்ணின் மகத்துவத்தை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது.

தாய்மையின் உயர்வைக் காட்டும் ஒரு கதையைக் கூட அர்த்தமுள்ள இந்து மதத்தில் எழுதி இருப்பார். கதையைப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆகவே மனையாளிடம் மதி மயங்கிக் கிடப்பது (இதைத்தான் மறதி என்கிறார்கள்) ஒன்றும் தவறில்லை. 

மனையாளுடன் சேர்ந்து நானும் நீயா நானாவைப் பார்க்க ஆரம்பித்தேன். அதிலொரு பெண்மணி தன் கணவன் தங்கள் கல்யாண நாளைக் கூட நினைவில் வைத்திருப்பதில்லை எனவும், நான் முதன் முதலாக இந்த வீட்டுக்கு வந்தது அந்தத் தேதியில்லையா? அதைக் கூட அவர் மறந்து ஒரு வாழ்த்துக்கூட சொல்வதில்லை என்று வேதனையாகச் சொன்னார். எனக்கு அந்தப் பிரச்சினையெல்லாம் இல்லை. மறக்கவா முடியும் அந்தத் தேதியை?அருகில் அமர்ந்திருந்த மகள், ”அப்பா! உங்கள் கல்யாண தேதி என்னப்பா?” என்று கேட்க, நானும் உடனே வெகு சந்தோஷமாக, ”செப்டம்பர் 31” என்றேன்.

(திருமணத்திற்குப் பிறகு இப்படி ஆகி விட்டேன். கவனிக்க மீசை காணாமல் போய் விட்டது)

மகள் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் மனைவியோ டிவி பார்த்துக் கொண்டிருந்தவள் எழுந்து கடு கடுவென அடுப்பங்கரைக்குள் சென்றாள். ”இந்தக் கோபிநாத்துக்கு ஏன் தான் இந்த வேலையோ தெரியவில்லை? நாசமாப் போறவன் ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமாக, எரிச்சலைக் கிளப்பி விடுகின்றான்” என்று அவரை ஒருமையில் திட்டிக் கொண்டிருந்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இவளுக்கு என்ன ஆனது என்று இதுவரைக்கும் தெரியவில்லை.

நான் தேதி மட்டும் தான் சொன்னேன். அதுக்கு எதுக்கு இவ்வளவு கோபம் கொள்கிறாள் இவள்? ஆமாம் செப்டம்பர் 31 தேதி இருக்கிறது தானே நண்பர்களே? 

Thursday, April 27, 2017

கொளுத்தும் வெயில் குளிரும் நினைவுகள்

கோவையில் இப்படி வெயில் அடிக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அரை மணி நேரம் வண்டியில் சென்ற மனையாளின் தோல் சிவந்து வெந்தது போல ஆகி விட்டது. கோவையில் கோடையில் வெயிலாக இருந்தாலும் சுடாது. ஆனால் இப்போது சுட்டெரிக்கிறது. நாளொன்றுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் ஆகாரம் குடிக்க வேண்டியதாகி விட்டது. சர்பத் கடைகளைக் கண்டால் மனசு அங்கே இழுத்துச் சென்று விடுகிறது. கவுண்டம்பாளையத்தில் திவ்யா சர்பத் என்றொரு கடை இருக்கிறது. நாற்பது வருடமாக சர்பத் விற்பனை செய்கிறாராம் அந்தக் கடைக்காரர். பதமாக வெயிலுக்கு இதமாக அதிகக் குளிர்ச்சியும் இல்லாமல் சர்பத் போட்டுத் தருகிறார். அந்தப் பக்கம் சென்றால் அவரைடம் எலுமிச்சை சர்பத் குடிக்காமால் நகர்வதில்லை. வெயில் என்றால் இதுதான் வெயில் என்பது போல அனத்து அனத்து என்று அனத்துகிறது.

வீட்டின் முன்னே இருக்கும் வேப்பமரம் கூட ஏனோ ஊடல் கொண்ட காதலி போல உஷ்ணக்காற்றினைத் தள்ளுகிறது. போதாதற்கு வேப்பம்பூவைக் கொட்டுகிறது. தமிழக அரசியலில் நொடிக்கொரு திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. செய்தி டிவிக்களுக்குத் தீனி. நான் சுத்தமாக செய்திச் சானல்களை பார்ப்பதை நிறுத்தி விட்டேன். விவாதம் நடந்தால் அந்தப் பக்கம் எட்டிக் கூட பார்ப்பதில்லை. செய்தித் தாளில் அரசியல் செய்திகள் என்றால் நகர்ந்து விடுவேன். துரோகிகளும், சுய நலக் கொடூரர்களும் நிரம்பிய அரசியல் செய்திகளைப் படிப்பதினால் என்ன பிரயோஜனம்? அதுமட்டுமில்லை சினிமா செய்திகளை மொத்தமாக படிப்பதை நிறுத்தி விட்டேன். எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து இதுவரை சினிமாச் செய்திகளைப் படித்ததினால் என்ன பலன் என்று யோசித்தேன். நிறுத்தி விட்டேன். காசும் நேரமும் கரியானது மட்டுமே பலன்.









(சிறு வயதில் நான் குளித்து மகிழ்ந்த ஊருக்கே உயிர் கொடுத்து வரும் ஆவணம் கிராமத்தில் இருக்கும் குளங்களும் அதன் பெயர்களும்)

கோடையில் பிச்ச நரிக்குளம் மட்டும் சற்றே தண்ணீர் சுண்டி விடும். ஆவணம் மாரியம்மன் கோவிலின் வாசல் வழியாகத் தெற்கே சென்றால் நான்கு புறமும் கொல்லைகள் சூழந்த, தென்மேற்குப் பகுதியில் காடுகள் நிரம்பிய குளம் தான் அது. குளத்துத் தண்ணீர் சற்றே சந்தனக்கலரில் மாறி இருக்கும். இருந்தாலும் அந்தக் குளத்தில் குளிப்பது சுகம். நடு மத்தியான நேரத்தில் செல்வதுண்டு. தண்ணீரின் மேல் பகுதியில் சூடாக இருக்கும். ஆனால் உள்ளே சிலீரென்று இருக்கும். இரண்டு மணி நேரம் தண்ணீருக்குள் ஆட்டம் போட்டு, நீச்சல் அடித்து கண்கள் ரத்தக் குழம்பாக சிவந்த உடன் தான் வெளியில் வருவதுண்டு.

நானும், வேலைக்காரன் போசும் ஆவணத்தான் குளத்துக்கு கிழக்கே இருக்கும் வயலில் கோடைப்பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச மோட்டாருடன் செல்வோம். அது மண்ணெண்ணெய் மோட்டார். ஆரம்பத்தில் கொஞ்சம் பெட்ரோல் ஊற்றி ஸ்டார்ட் செய்து பிறகு மெதுவாக மண்ணெண்ணெய்க்கு மாற்ற வேண்டும். ஹோசில் தண்ணீர் ஊற்றி நிரப்பிய பிறகு ஸ்டார்ட் செய்தால் குளத்திலிருந்து தண்ணீரைப் பம்ப் செய்து மடையில் கொட்டும். அந்த மடைக்குள் உட்கார்ந்து கொண்டு தலையைப் பம்ப் தண்ணீரில் காட்டி குளிப்பேன். ஜாலியாக இருக்கும். மசங்கும் நேரத்தில் தான் குளத்துக்குச் செல்வதுண்டு. கொக்குகள் ஒற்றைக்காலில் தவமிருந்து கொண்டிருக்கும். மீன்கள் மாட்டினால் கொத்திக் கொண்டு மரங்கள் அடர்ந்து நிரம்பிய ஆறும் குளமும் இணைந்த கரைகளில் இருக்கும் மரங்களில் சென்று அமர்ந்து மீனை ருசித்துக் கொண்டிருக்கும்.

தண்ணீர் இறைக்க குளத்துக்குச் செல்வதென்றால் இளம் தேங்காய் ஒன்றும், வெல்லக்கட்டி, பொட்டுக்கடலை கொஞ்சமும் எடுத்துக் கொண்டு சென்று விடுவோம். தேங்காயைப் பொத்து அதற்குள் பொட்டுக்கடலை மற்றும் வெல்லக்கட்டி இரண்டையும் சேர்த்து, தேங்காய் தண்ணீரோடு சேர்த்து மூடி வைத்துக் கொள்வோம். குளத்தங்கரையில் கிடக்கும் காய்ந்து போன விறகுளைக் கொண்டு வந்து போட்டு எரியூட்டி அதில் இந்தத் தேங்காயைச் சுட்டு எடுத்து ஆற வைத்து ஓட்டினை எடுத்து விட்டு சாப்பிட்டால் அள்ளும். அதன் சுவையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

மாலை மசங்கும் வேளையில் நன்றாக குளித்து விட்டு, இலேசாகக் குளத்து நீர் குளிர ஆரம்பிக்கும் சமயத்தில் சுட்ட தேங்காயைச் மாட்டு வண்டியின் நுகத்தடியில் அமர்ந்து கொண்டு சிதறும் தண்ணீரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு ருசிப்பது என்பது இப்போது நினைத்தால் கூட நடக்கும் காரியமா? அவனவன் லட்சங்களைக் கொட்டி கடற்கரை, இயற்கை கொஞ்சும் இடங்களுக்குச் சென்று வெறுமையாகத் திரும்புகின்றனர். வாழ்க்கையோடு இயைந்து இருக்கும் இது போன்ற மகிழ்ச்சி தரும் உணர்வுகளைக் காசால் பெற்று விட முடியுமா? 

உண்மையில் வயலுக்கு வேலை செய்யத்தான் செல்கிறோம். ஆனால் அந்த வேலையிலும் மகிழ்ச்சி கிடைக்கிறது அல்லவா? அது போல எந்த வேலையில் கிடைக்கிறது சொல்லுங்கள்? கணிணியில் உட்கார்ந்தால் உடலும் மனசும் அலுத்துப் போகும். இப்போதைய உடல் உழைப்புகள் எதுவும் விவசாய வேலை தரும் மகிழ்ச்சியைப் போல மகிழ்ச்சியைத் தந்து விட முடியுமா? தோட்ட வேலைக்குச் சென்று திரும்பும் போது கையில் தேங்காய், மாங்காய், கத்தரிக்காய்களைக் கொண்டு வந்து சமைத்து உண்ணும் வேலைக்காரியின் உணவுக்கு முன்னால் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் உணவின் சுவை நிற்க முடியுமா?



கிர்லோஸ்கர் தண்ணீர் இறைக்கும் பம்பு செட்

கோடையில் வெயிலுக்கு இதமாக வடக்கித் தெரு சுப்பையாத் தேவரின் கொல்லையில் அருவி போலக் கொட்டிக் கொண்டிருக்கும் பம்பு செட்டிற்கு குளிக்கச் செல்வதுண்டு. அப்போது வழியில் என் நண்பன் பனை மரத்துக் கள் விற்றுக் கொண்டிருப்பான். அவனிடத்தில் சென்று ஒரு லிட்டர் கள்ளைக் குடித்து விட்டு, பம்பு செட்டில் ஆட்டம் போட்டு விட்டு வீடு வந்து சேர்ந்தால் சூடான சோற்றுடன் கொதிக்கும் மீன் குழம்பினை ஊற்றிக் கொண்டு கவளம் கவளமாக சாப்பிட்ட நாட்கள் இனி வரத்தான் கூடுமா? நிச்சயம் வராது. 

நான்கு சுவற்றுக்குள் கதவைச் சாத்திக் கொண்டு தலையில் மோண்டு ஊத்தும் தண்ணீர் உடலைத் தழுவும் போது ஆற்றுக்குள் குளிக்கும் போது இருந்த சுகம் இல்லை என மனசு முழுக்க ஏக்கம் பரவுகிறது. காவிரி ஆறும், மழையும் வறண்டு போய் வெம்மையானாலும் அந்த இளம் பிராயத்து நினைவுகள் மட்டும் மனதூடே ஊடுறுவும் போது கொஞ்சூண்டு சிலிர்ப்பாக இருக்கத்தான் செய்கிறது.

Wednesday, April 19, 2017

ரூடோஸ்ஸின் வருகை

எனக்கு நாயென்றால் அப்படி ஒன்றும் பிடிக்காத விஷயமல்ல. அதுவும் ஒரு உயிர் தானே என்றளவில் கொஞ்சம் பிரியம் இருக்கின்றது. எனக்கொரு தோழி நெட்டில் அறிமுகமானவர் பிலிப்பைன்ஸில் இருக்கிறார். நான் சிரமப்பட்ட காலத்தில் உடனுக்குடன் எனக்கு பணம் அனுப்பி வைத்தார். பள்ளி, கல்லூரி, ஹாஸ்டல், கடைகள் என நல்ல வசதியான பெண்மணி. அங்கிருந்து வருடம் ஒரு தடவையாவது பரிசுகள் வரும். நான் எதுவும் அனுப்புவதில்லை. போன் கூட அவர் தான் செய்வார். இணையத்தில் பேசிக் கொள்வதுண்டு. அவர் ஊரில் நாய்க்கறி பேஃமசாம். அவரிடம் கேட்டேன். அருமையாக இருக்கும் என்றார். அன்றிலிருந்து அவரிடம் பேசுகின்ற போதெல்லாம் செத்துப் போன நாய்கள் அவரின் பின்னே அவரைத் துரத்துவது போல நினைவலைகள் வந்து விடும். விவசாயமெல்லாம் அழிந்து போன பிறகு நாய்க்கறியைத் தின்னாமல் மனுசனையா தின்ன முடியும். எனக்கென்னவோ இந்தியாவில் இன்னும் கொஞ்ச நாளில் நாய்க்கறி பிரபலமாகி விடும்  போல. நம்ம நாடு போகிற போக்கினைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. 

பிலிப்பைன்ஸுக்கு வா என்று பத்து ஆண்டுகளாக அழைத்துக் கொண்டிருக்கிறார். குடும்பத்தோடு செல்ல வேண்டும். இப்ப ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும்.

நேற்றைக்கு முதல் நாள். நானும் பையனும் ஒரு கடையில் நின்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண், அங்கிள் இங்கே மருத்துவமனை ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார். சரவணம்பட்டி காளப்பட்டி சாலையில் ஒரு மருத்துவமனையைப் பார்த்த நினைவில் இந்தப் பக்கம் என்று கைகாட்டி விட்டேன். கடையிலிருந்து வீட்டுக்குத் திரும்பினால் அந்தப் பெண்கள் தெரிந்தார்கள். அதிலொரு பெண் நடக்கவே முடியாமல் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தார். சாலையைக் கடந்து வந்தார்கள். மருத்துவமனையில் டாக்டர் இல்லை. சோர்ந்து போய் விட்டார்கள். அந்தப் பெண்ணைத் தொட்டுப் பார்க்க உடல் கொதித்துக் கொண்டிருந்தது. சரியான காய்ச்சல். வெயில் வேறு அனத்திக் கொண்டிருந்தது. பையனை இன்னொரு பெண்ணுடன் இறக்கி விட்டு விட்டு அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு இரண்டொரு மருத்துவமனைக்குச் சென்றால் ஒருவரும் இல்லை. ஒரு வழியாக மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைக் கண்டுபிடித்து அங்கு கொண்டு போய் விட்டேன். மருத்துவர் இருந்தார். மீண்டும் என் பையனும் இன்னொரு பெண்ணும் இருக்கும் இடத்திற்கு வந்து அந்தப் பெண்ணை வண்டியில் ஏற்றிக் கொண்டு திருப்பினேன். அப்போது அந்தப் பெண், ”ரித்திக், வெயிலில் நிற்காதே, நிழலில் நில்” என்று இரண்டு மூன்று தடவை சொன்னது. எனக்குச் சரியான எரிச்சல். நான் வெயிலில் இவள் தோழியை அழைத்துக் கொண்டு நாயாய் அலைந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இந்தப் பெண்ணுக்கு யார் மீது அக்கரை என்று பார் என்று கடுப்பானது. காலம் மாறுகிறது என்பது பளிச் சென்று புரிந்தது. அப்பெண்ணை மருத்துவமனையில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தேன். நன்றி சார் என்றது அப்பெண். நல்லா இருங்கம்மா என்றுச் சொல்லி விட்டு பையனை அழைத்துக் கொண்டு வீடு வந்தேன். நீ பாட்டுக்கு இப்படி உதவி செய்யக் கிளம்பி விடாதே ரித்திக் என்று அவனிடம் சொல்லி வைத்தேன். எதுக்கும் இருக்கட்டும். சரி அடுத்த கதைக்கு வந்து விடுகிறேன்.

சிறுவயதில் செவலை நாயொன்றும், கருப்பு நாயொன்றும் வீட்டில் இருந்தது. செவலை நாய் நல்ல நாய். வீட்டை விட்டு எங்கும் செல்லாது. ஆனால் கருப்பு நாயோ எமகாதக நாய். ஊர் சுற்றி. கையில் இருந்தாலும் கடித்து தின்று விடும். அதை நான் அடித்து துரத்தி விடுவேன். அப்போதெல்லாம் நாய்க்குப் பெயர் வைப்பதெல்லாம் இல்லை. நாயை நாயென்றுதான் அழைப்போம். ஆனால் இப்போதோ வேறு நிலை.  நாய்க்கு வைக்கும் பெயரைக் கேட்கும் போதெல்லாம் அது நாயா இல்லை ஆளா என்றொரு குழப்பம் வந்து விடும் எனக்கு. 

இன்றைக்கு எனக்கு ஒரு மெயில் வந்தது. ரிப்ளை செய்யும் போது அது ஆணா பெண்ணா என்று  குழப்பம் ஏற்பட எதுக்கு வம்பு பேசாமல் டியர் என்று போட்டு விடுவோம் என்று நினைத்து டியர் <அந்த பெயர் போட்டு> மெயில் அனுப்பி விட்டேன். அது ஒரு பெண்ணாக இருந்து நான் ஆணல்ல என்று ஆரம்பித்து அதுவே தொடர்கதையாகி, ஏற்கனவே திருமணமானவன். அதுவும் நாற்பதுகளில் இருப்பதால் நாய் குணம் வேறு வந்து விடும் என்பார்கள். எக்குத்தப்பாக ஆகிவிட்டால் நன்றாகவா இருக்கும்? சரி விஷயத்துக்கு வந்து விடலாம்.

அந்தச் செவலை நாய் ஒரு நாள் வாய் கிழிந்து வந்தது. இடது பக்கம் தோல் கிழிந்து தொங்கியது. எதித்த வீட்டுப் பெண்மணி வெங்காய வெடியை கருவாட்டுக்குள் வைத்துச் சுருட்டிப் போட்டு விட்டார். அதை எடுத்துக் கடித்திருக்கிறது. வெங்காய வெடி வெடித்து இடது பக்கம் தோல் கிழிந்து தொங்கி விட்டது. இடது பக்க பற்கள் எல்லாம் வெளியில் தெரிந்தது. எனக்குப் பயமாகவும், பாவமாகவும் இருந்தது. சாப்பாடு வைத்தேன். சாப்பிட்டது ஆனால் சோறு இடது பக்கமாக வெளியில் வந்து விட்டது. கொஞ்ச நாளில் அது வாசலில் படுத்திருந்தது. பட்டினியாகவே கிடந்து இறந்து போனது. வீட்டின் பின்புறம் குழி வெட்டி புதைத்து விட்டோம். 

கருப்பு நாயை பஞ்சாயத்திலிருந்து நாய் பிடிக்க வந்தவன் பிடித்துக் கொண்டு போய் விட்டான் போலும். நீண்ட நாட்கள் அதைக் காணவில்லை. ஊர் சுற்றிக் கொண்டிருந்தால் சும்மாவா? வீட்டுக்கே ஆகாது என்பார்கள். நாயைச் சொல்லவா வேண்டும்? அதுகளுக்கு அப்போது பீட்ச்சா அடச்சே பீட்டா, ப்ளூகிராஸ் மாதிரியெல்லாம் ஆட்கள் இல்லை. இப்போதல்லவா இருக்கின்றார்கள். அவனவன் ஆட்களை ஆடுகள் கழுத்தறுப்பது போல அறுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதைக் கேட்க ஆட்கள் இல்லை. நாயை அடித்தாலோ அல்லது மாட்டை அடித்தாலோ கேஸ் போடுகின்றார்கள். சிறு வயதில் மாட்டு வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போது சண்டித்தனம் செய்யும் மாட்டினை சாட்டையால் விளாசி இருக்கிறேன். அப்போது இந்த பீட்டாக்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்? மாட்டுக்குப் பதிலாக இவர்கள் நுகத்தடியில் கழுத்தை கொண்டு வந்து நீட்டி வண்டியை இழுப்பார்களா? என்று தெரியவில்லை. என்ன நியாயமோ என்ன சட்டமோ? ஒன்னும் சரியில்லை.

கிரடிட் கார்டுகள், பண அட்டைகள் வந்தாலும் வந்தன. மனிதன் இப்போது பைத்தியம் பிடிக்காத குறையாகத்தான் திரிகின்றான். ஏசியில் ஐந்து நிமிடம் நின்று ஏடிஎம்மில் பணம் எடுப்பது அப்போதெல்லாம் கவுரவம் நிரம்பியது. ஆனால் இப்போதோ ஏடிஎம் என்றாலே அலறல் தான் கேட்கிறது. டெக்னாலஜி வந்தாலும் வந்தது பிடித்தது சனியன். கருப்புப் பணத்தை இனி கண்ணால் கூட பார்க்க முடியாது போலும். ஆனால் அரசியல்வாதிகள் காட்டிலோ மழையோ மழைதான். ஒரு கார் வாங்கலாம் என்றால் நாய்க்கு நாக்குத் தள்ளிய மாதிரி நமக்கு நாக்குத் தொங்கி விடுகிறது. கவுன்சிலர் ஆனவுடனே ஸ்கார்ப்பியோவில் வருகின்றார்கள். என்ன தான் தில்லுமுல்லு செய்வார்களோ தெரியவில்லை. அடுத்தவன் பணத்தில் வாழ்வதுக்கும் ஒரு மச்சம் வேண்டும். மச்சம் மட்டும் இருந்து என்ன ஆகப் போகிறது? புத்திசாலித்தனமும் வேண்டும். மோடி சரியான அரசியல்வாதியாக இருக்கிறார். கருப்புப் பணத்தை மீட்கிறேன் என்றார். நாமெல்லாம் நினைத்தோம். அரசியல்வாதிகள், பெரும் பணக்காரர்கள் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்டு வந்து விடுவார் என. ஆனால் பாருங்கள் என்ன நடந்தது என்று. இது தான் பிரதமர் மோடி. வெகு புத்திசாலியானவர். திறமையானவர். யாரை எங்கே எப்படி என்ன என்பதெல்லாம் அவரிடம் பாடம் படித்துக் கொள்ள வேண்டும். இது வரை இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் ஆகச் சிறந்தவர் மோடி அவர்கள் தான் என்கிறேன். இப்படி ஒரு ட்விஸ்டை நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்களா? நிச்சயமாக இப்படியெல்லாம் நடக்குமா என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டீர்கள். அதுதான் பிளான். அதுதான் திட்டம்.

சரி திரும்பவும் எங்கேயோ போய் விட்டேன். இந்த மூளை இருக்கிறதே அது படுத்தும் பாடு இருக்கிறதே? பெரிய ரோதனை இதோடு. உங்களுக்கும் போர் அடித்திருக்கும் அல்லவா?

இரண்டு நாட்களுக்கு முன்பு ரித்திக் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் வரும் போது. அவன் கூடவே குட்டியாக, செவலை நாய்க்குட்டி ஒன்று அவனுடன் வந்து விட்டது. ரித்திக்குக்கு நாய், பூனை என்றால் பிரியம். ஆனால் மனையாளுக்கோ ஆகவே ஆகாது. அப்பா இந்த நாயை வளர்க்கலாமா? என்று கேட்க இரண்டு மாதம் வீட்டில் சும்மாதானே இருக்கின்றார்கள், பொழுது போக்காக இருக்கட்டும் என்றுச் சொல்லி சரி என்றுச் சொல்லி விட்டேன்.

போன மாதம் கருகருவென நாய்க்குட்டி ஒன்றினை வளர்க்கலாம் என்று நினைத்து கவுண்டரிடம் சொல்லி வைத்திருந்தேன். அவரும் திரிந்தலைந்து 22 நகங்களுடன் கருப்பு நாய்க்குட்டி ஒன்றினைப் பிடித்து வைத்திருந்தார். எனது நண்பர் நாயை ஓசியில் வாங்கக் கூடாது. யாருக்கும் கொடுக்கவும் கூடாது என்றுச் சொல்லி விட கவுண்டரிடம் வேண்டாம் என்றுச் சொல்லி விட்டேன். அத்தோடு நாய் வளர்க்கும் ஆசை போய் விட்டது. ஆனால் அதுவே வீடு தேடி வருகிறது.

ரூடோஸ் தற்போது

ரூடோஸ் எதிர்காலத்தில்

லேப்ராடர் வகை நாய்க்குட்டி அது. எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை? யார் வளர்த்ததோ தெரியவில்லை? அதற்குச் சாப்பாடு போட்டு, குளிப்பாட்டி, கழுத்திலொரு பட்டியைக் கட்டி, அத்துடன் கயிற்றைக் கட்டி விட்டான் பையன். காலையில் ஷாம்பூ போட்டு குளிப்பாட்டி, நாய்க்கடைக்குச் சென்று கழுத்துப் பட்டி, கயிறு வாங்கி வந்து மாட்டி காலையிலும் மாலையில் ஜாக்கிங்க் சென்று கொண்டிருக்கின்றார்கள் ரித்தியும், அம்முவும். இப்போது அது நன்றாக இருக்கிறது. இன்றைக்கு காலையில் பேப்பரைக் கடித்துக் குதறி விட்டது. ஒரு அதட்டுப் போட்டேன். அவ்வளவுதான் அருகிலேயே வரமாட்டேன் என்றது. ஒரு வழியாக சமாதானம் செய்து அதன் பயத்தைப் போக்க வேண்டியதாகி விட்டது.

இதற்கொரு பெயர் வையுங்கள் சாமி என்று கேட்டேன். 

”ரூடோஸ்” என்றார்.  எங்கிருந்தோ வந்தது ரூடோஸ். இப்போது என்னுடன் இருக்கிறது. காலையில் எழுந்ததும் அதனுடன் கொஞ்ச நேரம் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மாலையில் அதனுடன் விளையாடுவதும் சந்தோஷம் தருகிறது. ஒரு குழந்தையைப் போல அதனுடன் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

பக்கத்து வீட்டில் சைபீரியன் ஹஸ்கி என்ற பெய்லி (பெயர்) வளர்கிறது. மாலையில் வாக்கிங் செல்லும் போது பெய்லியைப் பார்த்து கர்ண கடூரமாகக் குலைக்கிறது ரூடோஸ். சரியான காமெடி. பயமில்லாமல் குலைத்து விட்டு ஓடோடி வந்து அருகில் அமர்ந்து கொள்கிறது.

பசங்க இருவரும் டிவி பார்ப்பதை கொஞ்சம் நிறுத்தி இருக்கிறார்கள்.

குறிப்பு: எல்லா பத்திகளிலும் நாய் வந்திருப்பதைக் கவனிக்கவும். உன் வீட்டில் நாய்க்குட்டி வளர்க்கிறாய் என்பதற்காக ஊர் கதையெல்லாமா அளப்பது என்று நீங்கள் கேட்டீர்கள் என்றால் அதற்குத்தான் இந்தக் குறிப்பு.