குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label கிரையம். Show all posts
Showing posts with label கிரையம். Show all posts

Wednesday, August 5, 2015

நிலம்(16) - தொல்லியல்துறை நிலங்களை கிரையம் பெற்றால் என்ன ஆகும்?

அமெரிக்க சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரின் தந்தையார் என்னைச் சந்திக்க வேண்டுமென போனில் கேட்டார். 

வீட்டிற்கு வரச்சொல்லி அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். கை நிறைய டாக்குமெண்ட்களை எடுத்து என்னிடம் கொடுத்தார். 

”சார், என் பையன் அமெரிக்காவில் இருக்கின்றான். அவன் உழைப்பில் கிடைக்கும் காசில் கொஞ்சம் நிலம் வாங்கி வைத்தால் அவன் எதிர்காலத்துக்கு பயன்படுமே என நினைத்துக் கொண்டிருந்த போது, எனது நண்பர் மூலமாக இந்த பத்து ஏக்கர் நிலம் விலைக்கு வந்திருக்கிறது. பத்து இலட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துதான் இந்த பேப்பர்களை வாங்கி இருக்கிறேன். என் பையன் உங்களின் பிளாக்கைப் படிப்பானாம். அதனால் உங்களிடம் லீகல் ஒப்பீனியன் கேட்டு வாங்கிய பிறகு கிரையம் செய்யலாம் என்றுச் சொன்னான், அதனால் தான் உங்களைப் பார்க்க வந்தேன்” என்றார்.

”நாளை மாலை என்னை வந்து பாருங்கள்” என்றுச் சொல்லி அனுப்பி வைத்தேன்.

அவர் கொண்டு வந்த ஆவணங்களில் வக்கீல் ஒருவரின் கருத்துரையும் இருந்தது. முதலில் அதனை ஆராய்ந்தேன். அனைத்தும் சரியாக இருந்தன. வில்லங்கச்சான்றிதழ், மூலப்பத்திரங்கள் அனைத்தும் சரியாக இருந்தன. அடுத்து எனது மேல் கட்ட ஆவண ஆய்வினைத் தொடர்ந்தேன்.

மேற்படி நிலத்தின் மொத்த மார்க்கெட் மதிப்பு கிட்டத்தட்ட 2 கோடி இருக்கும். கிரையச் செலவு அது இதென்று கிட்டத்தட்ட இரண்டு கோடியே இருபது இலட்சம் செலவாகும்.

எனது ஆய்வில் மேற்படி நிலம் தொல்லியல் துறையினால் தடைசெய்யப்பட்ட  நிலம் என அறிந்து கொண்டேன். தொல்லியல் துறையினால் எடுக்கப்பட்டு, அதில் எந்த வித கட்டிடங்களோ அல்லது வேறு எந்த வித நடவடிக்கையுமே எடுக்க முடியாத நிலம் அது. அதுமட்டுமல்ல அந்த நிலத்தின் அருகிலிருந்து 300 அடியிலிருந்து 900 அடி வரை எந்த வித கட்டிடங்களோ வேறு எந்த மாற்றமும் செய்ய நினைத்தால் தொல்லியல் துறையிடமிருந்து அனுமதி பெற வேண்டும். இதே போல நிலம் சென்னையில் இருக்கிறது. இந்த நிலத்தினைக் கிரையம் பெற்ற பல சென்னைவாசிகள் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அது மட்டுமல்ல தமிழகமெங்கும் இது போன்ற நிலங்கள் இருக்கிறது. கோவையில் ஒரு முக்கியமான ஊரில் இந்த நிலங்கள் இருக்கின்றன. நிலத்தின் உரிமையாளர் பெயர், பட்டா போன்றவைகளில் எந்த வித மாற்றத்தினையும் தொல்லியல் துறையினர் ஏற்படுத்தவில்லை என்பதையும் அறிந்து கொண்டேன்.

ஆகவே அந்த நிலம், நிலமாகத்தான் இருக்குமே ஒழிய வேறு ஒன்றினையும் செய்ய முடியாது. அப்படி செய்ய  முனைந்தால் அபராதம் மட்டுமின்றி சிறை வாசமும் உண்டு என்கிறது தொல்லியல்துறை.

மறு நாள் மாலை பெரியவர் வந்தார். காஃபி கொடுத்து உபசரித்து விட்டு அதன் பிறகு மேற்படி விஷயத்தை சொன்னேன். அதற்குரிய ஆவணங்களை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அவருக்குப் படபடவென்று வியர்க்க ஆரம்பித்து விட்டது. கொடுத்த அட்வான்ஸ் தொகையை எப்படி வாங்குவது என்று இப்போதே பயப்பட ஆரம்பித்துவிட்டார்.

இப்படி பல்வேறு சிக்கல்களை தன்னகத்தே கொண்டிருக்கும் நிலத்தினை வாங்கும்போது சரியான லீகல் ஒப்பீனியன் தருபவரிடம் லீகல் பெறவில்லை எனில் சம்பாதித்த பணம் வீணாய்ப் போய் விடும்.

அமெரிக்காவிலிருந்து சாஃப்ட்வேர் இன்ஞ்சினியர் போனில் அழைத்து பல முறை நன்றி நன்றி எனச் சொல்லிக் கொண்டிருந்தார்.

Thursday, June 12, 2014

நிலம் (7) - பிரிபடாத பாகச் சொத்து

எனக்குத் தெரிந்த நண்பரொருவருக்கு அவசரத் தேவை. அதனால் அவரின் நிலத்தினை விற்பனை செய்ய முடிவெடுத்து என்னிடம் வந்தார்.

இடத்தைப் பார்த்து விட்டு வந்த பிறகு டாக்குமெண்ட்களை கேட்டேன். கொண்டு வந்து கொடுத்தார். படித்த பிறகுதான் தெரிந்தது அது பிரிபடாத பாகச் சொத்து என்பது. அந்தச் சொத்தை எவருக்கும் விற்க முடியாது. வாங்கவும் மாட்டார்கள். நண்பருக்குப் பிரச்சினையோ தலைக்கும் மேல் இருக்கிறது. என்ன தான் வழி? இதற்கும் ஒரு வழி இருக்கிறது.

முதலில் அது என்ன பிரிபடாத பாக சொத்து என்பதைப் பார்க்கலாம்.

ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இதில் இருபது செண்ட் நிலம் விற்கபடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த இருபது செண்ட் பூமிக்கு செக்குபந்தி குறிப்பிடாமல் பொதுவில் இருபது செண்ட் என்று எழுதிக் கொடுப்பார்கள். ஒரு ஏக்கரில் பொதுவில் இருபது செண்ட் என்றால் எந்தப்பக்கம் என்று நாம் கண்டுபிடிப்பது? இதைத்தான் பிரிபடாத பாக சொத்து என்றுச் சொல்வார்கள். 

ஒரு ஏக்கர் நிலத்தில் இந்த இருபது செண்ட் நிலம் எந்தப் பகுதியில் உள்ளது என்று பத்திரத்தில் குறிப்பிடப்படவில்லை என்றால் இந்த நிலத்தை எவரும் வாங்க மாட்டார்கள்.

இப்போது புரிகிறதா என்ன பிரச்சினை என்று. 

இதை எப்படி விற்பது? இதுதான் உங்கள் பகுதிச் சொத்து என்று எப்படி பிரிப்பது? இதற்கென்று சில நடவடிக்கைகள் எடுத்து பாகச் சொத்தில் இது தான் எனது பங்கு என்று டாக்குமெண்ட் உருவாக்கிய பின்னர் தான் விற்க முடியும்.

ஆகவே சொத்து வாங்கும் போது செக்குபந்தியில் அதிக கவனம் தேவை என்று இப்போது உங்களுக்குப் புரிந்து இருக்கும்.

செக்குபந்தி மட்டும் சரியாக இருந்தால் போதுமா? நிச்சயம் போதாது. பிற விஷயங்களும் இருக்கின்றன. அது என்ன என்பதை வரக்கூடிய பகுதிகளில் பார்க்கலாம்.

குறிப்பு: மெயில் மூலமும், போன் மூலமும் ஆலோசனை கேட்போருக்கு இதுதான் சரியான தீர்வு என்று சொல்ல முடியாது. தங்களிடம் இருக்கும் டாக்குமெண்ட்களை தீர ஆய்வு செய்து படித்த பிறகுதான் மிகத் துல்லியமான தீர்வை வழங்க முடியும். ஆகவே டாக்குமெண்ட்களை எனக்கு கொரியரில் அனுப்பி வைக்கவும்.

மிக மிகத் துல்லியமான பத்திரங்கள் எழுதவும், லீகலுக்கும் அணுகலாம்.

முகவரி : 
கோவை எம் தங்கவேல்
ஸ்ரீ சாய் ரத்னம் பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட்,
33, பாரதி நகர் 2வது தெரு, கணபதி,
கோயமுத்தூர் - 641006,
போன் : 9600577755

Friday, December 13, 2013

நிலம்(3) - பவர் அல்லது பொது அதிகார ஆவணம்

நிலம் ஒரு மனிதன் பூமிக்கு வந்து சென்றதன் அடையாளம். அவன் பெயரைப் பூமியின் வரலாற்றில் ஏதோ ஒரு பக்கத்தில் பதிய வைக்கும் மகத்துவம் பெற்றது.

அப்படிப்பட்ட நிலத்தில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் பல. அதைப் பிரச்சினைகள் என்றுச் சொல்வதை விட அறிந்து கொள்ளாமல் இருப்பது என்றுதான் சொல்ல வேண்டும்.

எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க முடியாது.

கோவையில் ஒரு இடத்தினை விற்க என்னை ஒருவர் அணுகினார். அவரிடமிருந்த டாக்குமெண்ட்கள் அனைத்தையும் படித்த பிறகு அவர் சொத்து வாங்கிய சர்வே எண்ணில் கிட்டத்தட்ட 300 கிரையம் ஆகி இருந்தது. அதில் பெரும்பான்மையானவை நேரடி கிரையம் பெற்றவை. அதில் ஒரு டாக்குமெண்ட்டினை எடுத்துப் படித்ததில் கிரையம் கொடுத்தவர் பவர் ஹோல்டர். அந்த சர்வே எண்ணில் இருக்கும் வீட்டு மனைகளை அவர் பவரின் மூலம் விற்றிருப்பது தெரிய வந்தது.

அவரின் பொது அதிகார ஆவணத்தை நகல் எடுத்துப் படித்த போது அந்த சர்வே எண்ணில் மொத்தம் இருந்த 15 ஏக்கர் பூமியில் 2 ஏக்கர் பூமிக்கு மட்டும் அதிகாரம் பெற்று இருந்தார். ஆனால் அவர் அந்த சர்வே எண்ணில் இருந்த 15 ஏக்கர் பூமியையும் இந்தப் பவர் மூலமாக விற்றிருப்பது தெரிய வந்தது. இது மிகப் பெரும் மோசடி.

அதுமட்டுமல்ல, அடுத்த பிரச்சினை, பவர் கொடுத்தவர் இந்த பவரை பவர் கொடுத்த மூன்றாவது நாளில் ரத்துச் செய்திருக்கிறார். மிகவும் புத்திசாலியாக அன் அப்ரூவ்ட் சைட்டுகளை மேற்படி பவர் ஹோல்டர் விற்றிருப்பது தெரிய வந்தது.

நபர் கொண்டு வந்த கொடுத்த ஆவணம் சட்டப்படி சரியான ஆவணம் இல்லை. ஆகவே அந்த பூமியை அவர் விற்கவே முடியாது. அவரின் முதலீடு இனி என்ன செய்தாலும் கிடைக்கப்போவதில்லை என்பது தான் உண்மை. கிரிமினல் கேஸ் போடலாம். கோர்ட்டுகளில் சிவில் கேஸ் நடத்தி ஜெயிப்பது என்பது இப்போது நடக்குமா? அதுமட்டுமல்ல பூமியின் உண்மையான உரிமையாளர் நில ஆக்கிரமிப்பு புகாரளித்தால் நிலம் வாங்கியவரும் மாட்டிக்கொள்வார். இப்படிப்பட்ட இடியாப்பச் சிக்கலில் அந்த நபர் சிக்கி இருந்தார்.

பொது அதிகார முகவர் மூலம் பூமி கிரையம் பெறும் போது அனேக விஷயங்களைக் கவனித்தல் அவசியம். இல்லையென்றால் இப்படிப்பட்ட மோசடியில் சிக்கிக் கொள்வீர்கள்.

நிலம் தொடரைப் படித்து விட்டு பலரும் ஆலோசனைகள் கேட்கின்றார்கள். ஆலோசனை கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். இருப்பினும் நிலம் சம்பந்தமான ஆவணங்களைப் படித்து ஆலோசனை சொன்னால் அது சரியாக இருக்கும். ஒரு சில சின்ன பாயிண்டுகள் கூட மிகப் பெரிய பிரச்சினையைத் தரலாம். இல்லையெனில் அதிர்ஷ்டத்தையும் தரலாம் என்பதினை ஆலோசனைகள் கேட்போர் நினைவில் வைத்துக் கொள்ளவும்.

வேறேதேனும் நிலம் சம்பந்தமான கேள்விகளுக்கு அழையுங்கள் : 96005 77755 (காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மட்டுமே ஆலோசனை தர இயலும்)

தேவைப்படுவோருக்கு கட்டண சேவைகளும் உண்டு.