குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, January 26, 2009

சங்கு வண்டி

காமராஜர் காரில் சென்று கொண்டிருக்கும் போது காரின் முன்பாக போலீஸ் ஜீப் ஒன்று சைரன் ஒலி எழுப்பிய படி சென்று கொண்டிருக்கும். அது என்ன சத்தம் என்று உதவியாளரிடம் கேட்பார். சைரன் சத்தமென்று சொல்ல காரை உடனடியாக நிறுத்தச் சொல்லி இறங்கி நானென்ன செத்தா போய்விட்டேன். காருக்கு முன்னாடி சங்கு ஊதிகிட்டு போறீங்க என்று சொல்லி வீணா செலவு பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க என்ற படியே காரில் ஏறிச் செல்வார். இந்தக் காட்சி காமராஜர் படத்தில் வருகிறது.

இன்றைய அரசியல்வியாதிகளும், அடிப்பொடிகளும், அரசு அலுவலர்களும் செத்த பொணம் வருது செத்த பொணம் வருது விலகுங்க என்று சொல்லும்படியாக சைரன் வைத்த காரில் பயணம் செய்வது இவர்களுக்கு மனசாட்சி செத்துப் போய் வெறும் மனிதப் பிம்பங்களாய் உலா வருவதைக் காட்டுவது போல இருக்கிறது. நல்ல அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் பற்றி இங்கு விமரிசிக்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்க.

கட்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் பிரமுகரின் கட்டி முடிக்கப்படாத தியேட்டருக்கு லைசென்ஸ் வழங்க மறுக்கும் கலெக்டரிடம் சட்டப்படி தான் நடக்கணும். அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படக்கூடாது என்றும் சொல்வார். ஆனால் இன்று நடப்பதென்ன ?

சாதாரண தொண்டனாக இருக்கும் கறை வேட்டிக்காரரின் அலட்டலும் மிரட்டலையும் வார்த்தைகளில் சொல்ல இயலுமா ? காவல்துறை அலுவலங்களில் பார்த்தால் தெரியும் இவர்கள் செய்யும் சேட்டைகளை.

ரத்தமும் துரோகமும் நிரம்பி வழியும் வரலாற்றுப் பக்கங்களில் காமராஜரைப் போன்றோரின் பக்கங்கள் பாலைவனத்துச் சோலைகளாய் இருப்பது சற்று ஆறுதல் தருகிறது.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.