குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, September 11, 2016

நிலம் (28) - அன் அப்ரூவ்ட் சைட் வீடுகள் கிரையம் செய்ய முடியாது

சென்னை யானை ராஜேந்திரன் என்பவர் கோர்ட்டில் பொது நல வழக்கொன்றினைத் தொடுத்திருந்தார். இதன் விசாரணை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் மகாதேவன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. அந்த விசாரணையின் போது செப்டம்பர் 10ம் தேதி முக்கியமான இடைக்காலத் தீர்ப்பினை வழங்கி உள்ளார்கள்.

மனைப்பிரிவு செய்து அனுமதியளிக்கப்படாத மனைகளை, அம்மனைகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளை பத்திரப்பதிவுத் துறை இனிமேல் பதிவு செய்யக்கூடாது என்பதுதான் அது.


(  நீதிபதி எஸ்.கே.கவுல் )

ஒரு பத்திரப்பதிவாளரின் கடமையாக சொல்லப்படுவது என்னவென்றால் தகுந்த மூலப்பத்திரங்களுடன் இருந்தால் ஆவணப்பதிவினை செய்து தர வேண்டும் என்பதுதான். அவர் அரசுக்கு வருமானம் வருவதைத்தான் உறுதி செய்வார். லீகல் பார்ப்பது, பத்திரங்கள் சரியாக எழுதப்பட்டிக்கிறதா என்று பார்ப்பது எல்லாம் அவரின் வேலை அல்ல என்பதை சொத்துக்கள் வாங்குபவர்கள் கவனத்தில் கொள்க.

சமீபத்தில் என்னிடம் ஒருவர் ரெஜிஸ்டரே பதிவு செய்து விட்டார் அதில் என்ன தவறு இருக்க முடியும்? என்று கேட்டார். விபரம் தெரியாத காரணத்தால் இப்படிப்பட்ட கேள்விகளைப் பலரும் கேட்கின்றார்கள். இது அவர்களின் அறியாமை.

இனிமேல் அன் அப்ரூவ்ட் வீட்டு மனைகள் விற்பனை செய்ய முடியாது. அன் அப்ரூவ்ட் மனைகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளையும் விற்பனை செய்ய முடியாது. பஞ்சாயத்து போர்டு அப்ரூவ்ட் என்று சொல்வதெல்லாம் சுத்த ஹம்பக். பஞ்சாயத்து போர்டு 2000 சதுரடிக்குள் கட்டப்படும் வீட்டு பிளானை அப்ரூவல் செய்யலாம் என்று இருந்தது. அது தனக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்ட அனுமதி பெறுவது. ஆனால் அது அப்ரூவ்ட் செய்யப்பட்ட வீட்டுமனை ஆகாது என்பதையும் நினைவில் கொள்க.

ஆகவே நண்பர்களே, அன் அப்ரூவ்ட் வீட்டு மனைகளை இனி நீங்கள் விரும்பினாலும் வாங்க முடியாது. கோர்ட் அதற்கு செக் வைத்து விட்டது. இது போன்ற வீட்டு மனைகளை விற்போர் இனி மக்களை ஏமாற்ற முடியாது. இதற்கு முன்பு மாதத் தவணையில் பணம் கட்டி இருப்போர் உடனடியாக தாங்கள் கட்டிய பணத்தினைத் திரும்பப் பெற்றுக் கொள்ளவும். 

பணம் கிடைக்காது என்றால் இதற்கு இன்னொரு வழியும் உண்டு. அது பற்றி பிறிதொரு நாளில் எழுதுகிறேன். இப்போதைக்கு சொல்ல வந்த விஷயம் அவ்வளவுதான்.

செய்தி  ஆதாரம்:

தி ஹிந்து பத்திரிக்கை

The Madras High Court on Friday issued an order banning registration of plots and houses in unapproved housing layouts as well as conversion of agricultural land for non-agricultural use in an unplanned manner in Tamil Nadu.
“We direct that no registering authority in the State shall register any sale deed in respect of any plot in unauthorised layout or any flat/ building constructed on such plots,” said the First Bench of Chief Justice S.K. Kaul and Justice R. Mahadevan.
The Bench said the order was necessary to save the ecology and prevent flooding while simultaneously giving time to the State government to come up with legislative changes.
It then directed the Inspector General of Registration to circulate the order to all registering authorities (Sub-Registrars) in the State.
The interim directions were passed on a public interest litigation petition filed by advocate ‘Elephant’ G. Rajendran seeking a direction to the government to forebear the local administration from giving approval or permission to convert agricultural lands into housing layouts and forebear the Registration Department from registering such property.
The Bench expressed its concern over the absence of any provision for regulating conversion of agricultural lands that were uncultivated for more than three years.

Saturday, September 10, 2016

காவிரிக்கு குட்பை சொல்லி விடலாம்

தஞ்சாவூர் கடைமடைப் பாசனத்தில் எனக்கும் கொஞ்சம் வயல்கள் உண்டு. அந்த வயலில் இருந்து வரும் அரிசியில் தான் உண்கிறேன். குருவை, சம்பா சாகுபடிகள் இன்னும் நினைவில் இருக்கின்றது. விவரம் தெரிந்த நாளில் இருந்து குருவைச் சாகுபடி செய்வதில்லை. ஒரே ஒரு சாகுபடி தான். குருவையில் சீக்கிரமே விளையும் நெல் விதைப்பு நடக்கும். இரண்டு வருமானங்கள் கிடைக்கும். இப்போதெல்லாம் ஒரே ஒரு சாகுபடி. சாப்பாட்டுக்குப் போக உபரியை விற்று வரும் பணத்தில் தான் பிள்ளைகள் படிப்பு, மருத்துவம், உடை, உறவுச் செலவுகள், விவசாயச் செலவுகள் அத்தனையும் அந்த வருமானத்தில் தான் சமாளிக்க வேண்டும். முடியுமா?

புட் சட்னி இணையதளத்தில் ராஜ்மோகன் அவர்களின் வீடியோவைப் பார்த்தேன். பிரமாதம். மணல் மாஃபியா தான் காவிரியில் தண்ணீர் வருவதை தடுக்கிறது என்று பேசி இருக்கிறார். பொய் பேச வேண்டுமென்று அவருக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. ஆகவே அவர் மணல் மாஃபியா பற்றிப் பேசியது எந்த ஆதாரத்தை வைத்து என்று கூட ஆயுத எழுத்தில் கேட்க மாட்டேன் என்கிறார் ஹரிஹரன். பத்திரிக்கை சுதந்திரத்தை எப்படிப் பாதுகாக்கிறார் ஹரிஹரன் என்று நினைக்கையில். யாரோ ஒருவர் தான் பிழைப்பதற்காக தமிழகத்தின் ஆதாரத்தையே அசைக்கிறார் என்றால்? என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

இதோ அந்த வீடியோ இணைப்பு, நீங்களும் பாருங்கள்.


ராஜ்மோகனுக்கு நன்றி தான் சொல்ல வேண்டும். மிகப் பெரிய தூண்டுதலை அவர் உருவாக்கி இருக்கிறார். ஆனால் யாரும் எதுவும் செய்யப்போவதும் இல்லை, செய்ய விடவும் மாட்டார்கள்.

ஆனால் ராஜ்மோகன் உங்களுக்கு ஒன்றினை சொல்லித்தான் ஆக வேண்டி இருக்கிறது. பெரும்பாலான தமிழர்களின் பிள்ளைகள், அவர்களின் உறவினர்கள் என்று பலரும் கர்நாடகாவில் வேலை செய்கிறார்கள். லட்சக்கணக்கில் பணம் வருகிறது. ஆகவே காவிரியாவது ஒன்றாவது என்று தான் பேசுவார்கள். எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை.

காவிரி ஆறு கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படப்போகிறது ராஜ்மோகன். அதை அனைவரும் வேடிக்கைதான் பார்ப்பார்கள். யாரும் எதுவும் செய்யப்போவதில்லை, செய்யவும் விட மாட்டார்கள். ஆகவே  நாம் விரைவில் காவிரிக்கு குட்பை சொல்லி விடுவோம். தமிழர்களின் வாழ்வாதாரம் அழிய அழிய அவன் அகதியாய் வெவ்வேறு நாடுகளில் தஞ்சமடையத்தான் போகின்றான். இது நடக்கத்தான் போகிறது.

விரைவில் நாமும் வேறு ஏதாவதொரு நாட்டினை தேர்வு செய்து வேலை விசாக்களுக்கு தயார் செய்து கொள்ள வேண்டியதுதான்.

வாய்ச் சொல்லில் வீரர்கள் நாம். அடிக்க அடிக்க ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு இனம் இந்த உலகில் உண்டென்றால் அது நாம் தான். சினிமாக்காரர்களுக்கு ஆட்சியையே தூக்கிக் கொடுத்தவர்கள் நாம். கர்நாடகாவிற்கு காவிரியை தாரை வார்த்து விடுவோம். விடவும் வைப்பார்கள். முல்லைப் பெரியார் அணையில் நீரைத் தேக்கி வைக்கக் கூட முடியவில்லை. அதற்கும் எதிர்ப்பு வருகிறது. தண்ணீர் இல்லா மாநிலமாக மாற்றி விட்டால் தமிழகமும் தமிழர்களும் வேறு வழி இன்றி அகதிகளாக மாறி விடுவார்கள்.

நாமெல்லாம் அகதிகளாக மாறி விடுவோம் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டியதில்லை. பிழைத்துக் கிடந்தால் எங்காவது ஒரு நாட்டில் நம் சந்திதிகள் சந்திப்பார்கள்.

இதுவரை நமக்கு உணவிட்டு வந்த காவிரிக்கு அனைவரும் சேர்ந்து குட்பை சொல்லி விடுவோம்.

காவிரியே உனக்கு குட்பை !

Thursday, September 8, 2016

ஜியோ சலுகை கொள்ளையா?

ரிலையன்ஸ் எனக்கு பெரிய பாடத்தை முன்பு புகட்டிய அனுபவம் இருக்கிறது. முன்பு 150 ரூபாய்க்கு போன் கொடுத்தார்களே நினைவிலிருக்கிறதா அந்தச் சம்பவம்? அப்போதெல்லாம் அவுட்கோயிங் காலுக்கு பெரும் தொகை செலவாகும். செங்கல் சைசில் நோக்கியா போன் இருந்தது. முதலில் பேஜர் வந்தது, அதன் பிறகு செல்லுலர் வந்தது. அந்தக் காலத்தில் தான் ரிலையன்ஸ் செல் போன் விற்பனையில் பத்தாயிரமோ ஒரு லட்சமோ சரியாக நினைவில் இல்லை வாங்கிக் கொண்டு ஏஜென்சிகளை உருவாக்கி செல்போன் விற்றுக் கொண்டிருந்தார்கள். அந்த ஏஜென்சி எடுத்தவர் எனது நண்பர். பல லட்சம் இழந்தார். அடியேனும் சப் ஏஜென்சியில் பெரும் தொகையினை இழந்தேன்.

ஆகவே ரிலையன்ஸ் என்றாலே எனக்குள் அலாரம் அடிக்கும். முகேஷ் அம்பானியின் ஜியோ பற்றி எனக்கு அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே ஏற்படவில்லை. ரிலையன்ஸ் என்றாலே பாலியஸ்டர் பிரின்ஸ் என்ற இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட புத்தகம் நினைவில் வந்து விடும். பெரும் முதலாளிகள், அரசே சலாம் போடும் போது நாமெல்லாம் என்ன சுண்டைக்காய்.

இவர்களால் அன்லிமிடெட் வாய்ஸ் காலினை எப்படி இலவசமாகக் கொடுக்க முடியும்? என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. வேலைப்பளுவால் அதைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்க முடியவில்லை.

நேற்றைய தினமலர் இது உங்கள் இடம் பகுதியில் தினமலர் வாசகர் சென்னை வினோத் அவர்களின் கடிதம் படிக்க கிடைத்தது. 

இதோ அந்தக் கடிதம்.

ஆர்.வினோத், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இன்று, நாடு முழுவதும் இளைஞர்கள் அதிகமாக உச்சரிப்பது, 'ஜியோ' என்ற சொல்லை தான். முகேஷ் அம்பானியின், 'ஜியோ' தொலைத் தொடர்பு நிறுவனம், பல அதிரடி சலுகைகளை அறிவித்து உள்ளது.அதில், 'கால்கள், எஸ்.எம்.எஸ்., முற்றிலும் இலவசம்; பயன்படுத்தும் இன்டர்நெட் டேட்டாவுக்கு மட்டும் கட்டணம். அதிலும், '149 ரூபாய் திட்டத்தில், 300 'எம்பி' முதல், 4,999 ரூபாய் வரை, பல பிளான்கள்' என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நமக்கு எப்படி லாபம், கம்பெனியால் எப்படி தர முடிகிறது என, ஆராய்ந்தால் அதில் பெரிய சூட்சமமே அடங்கியுள்ளது. தொலைத்தொடர்பில், '2ஜி, 3ஜி'க்கு அடுத்தபடியான ஆற்றல் கொண்டது, '4ஜி' தொழில்நுட்பம்.

இதை விட மேம்பட்ட, '4ஜி வோல்டி' தொழில்நுட்பத்தில், 'ஜியோ' சேவை வழங்குகிறது. இதில், அழைப்பு அல்லது, எஸ்.எம்.எஸ்., செய்யும்போது, டேட்டா கணக்கில் கழியும். 'அவுட் கோயிங்' காலுக்கோ அல்லது, 'இன்கம்மிங்' காலுக்கோ, டேட்டா கணக்கில், ஒரு நிமிடத்திற்கு, 0.75-1 'எம்பி' டேட்டா செலவாகும்.தினமும் ஒரு மணி நேரம், 'அவுட் கோயிங்' கால் பேசினாலும், 30 நிமிடங்களுக்கு 'இன்காம்மிங்' கால்கள் வந்தாலும், 8,0-90, 'எம்பி' வரை டேட்டா கணக்கில் குறையும்! இன்டர்நெட் பயன்படுத்தினால் கூட, இரண்டு நாட்களுக்குக் கூட தேறாது.

அதுவே, 499 ரூபாய் பிளானில் ஓரளவிற்கு பயன்பாடு உள்ளது. 499 மற்றும் அதற்கு மேல் செலவு செய்பவர்களுக்கு லாபம்; மற்றவர்களுக்கு இருக்காது.

'ஜியோ'வுக்கு மாதம் ஒருவர், 499 ரூபாய் செலவு செய்வார். அது, கம்பெனிக்கு மிகப்பெரிய லாபம் தானே! அது மட்டுமின்றி, டிசம்பர் வரை இலவசம் என, அறிவித்து உள்ளனர். இதை பயன்படுத்துவோரை போக பொருளாக ஆக்க பழக்கி, அதற்கு அடிமையான பின், கட்டணம் வசூலிப்பது ராஜதந்திரம்!

இணைப்பு :

தாய் மொழி என்று அழைக்காதீர்கள்

ஆதார் அட்டையில் முகவரி மாற்றத்திற்காக ஆன்லைனில் செய்தால் ரிஜெக்டட் என்றே வருகிறது. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு பிரச்சினை. ஆகையால் கோவை பழைய பாஸ்போர்ட் அலுவலகத்தின் வளாகத்தில் இருக்கும் ஏஜென்சியை அணுகினேன். ஐம்பது ரூபாய் கட்டணம் பெறுகின்றார்கள். பெட்ரோல் செலவு வேறு. மதியம் உணவுச் செலவு வேறு. எப்படியும் இருநூறைத்தாண்டி விடுகிறது. இதுவே தின வேலைக்குச் செல்பவராக இருந்தால் ஒரு நாள் சம்பளம் போய் விடும். 

தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற இங்குள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் தான் அப்ளை செய்ய வேண்டுமாம். சித்ராவில் இருக்கும் பாஸ்போர்ட் அலுவலகம் நார்மலாக பாஸ்போர்ட் அப்ளை செய்பவர்களுக்கானதாம். இரண்டு அலைச்சல்.

எனக்கு பாஸ்போர்ட் ரினிவல் செய்யும் போது ஆன்லைனில் புக்கிங்க் செய்தேன். அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்ததும் நேரில் சென்றேன். கைரேகை, போட்டோ எடுத்தார்கள். கட்டணத்தை அங்கேயே செலுத்தி விட்டேன். பதினைந்து நாட்களுக்குள் பாஸ்போர்ட் வீடு வந்து சேர்ந்து விட்டது. 

இந்த வளாகத்தில் இருந்த ஒரு ஏஜென்சியில் ஆன் லைன் அப்ளை செய்வதற்கும், இன்ன பிற வேலைகளுக்கும் 2500 ரூபாய் ஆகும் எனச் சொல்லிக் கொண்டிருந்தார் ஒருவர். அப்படியா என வாயில் ஈ போவது கூட தெரியாமல் கேட்டுக் கொண்டிருந்தார் கசங்காத சட்டை போட்டு விரைப்பாக நின்றவர். 

அப்போது ஒரு காரிலிருந்து காச் மூச்சென்று சத்தம் கேட்டது. என்னவென்று திரும்பிப் பார்த்தால் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண்மணி ஆகியோர் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்மணி என்னைப் பார்ப்பதும் பின்னர் ஆங்கிலத்தில் அந்தக் குழந்தைகளை திட்டுவதுமாக இருந்தார். அவர் ஆங்கிலத்தில் உரையாடுகின்றாராம். நான் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கின்றேனாம். இது தெரியாத அந்தக் குழந்தைகள் இருவரும் தமிழில் அம்மா, அம்மா எனப் பேச ஆரம்பிக்க அதற்கும் திட்டு விழுகிறது. என்ன சொல்லித் திட்டுகிறார் தெரியுமா? ”லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து படிக்க வைக்கின்றேன், தமிழிலா பேசுகின்றீர்கள்?”.

அதன் பிறகு அந்தக் குழந்தைகள் இருவரும் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தனர். அந்தப் பெண்மணியின் புருஷன் என்னிடம் வந்து பேசினார். ”நீங்கள் தமிழரா?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ”நான் பச்சைத் தமிழன்” என்று பெருமையாகச் சொன்னார். 

நதிகளுக்கு பெண்கள் பெயர்களை வைத்திருக்கிறோம், நாட்டையே தாய் நாடு என்கிறோம். மொழியை தாய் மொழி என்கிறோம். அம்மா என்றால் பெரும்பான்மையான பெண்களுக்கு கசக்கிறது. மம்மி என்று தான் அழைக்க வேண்டும் என விரும்புகின்றார்கள். கிராமத்திலிருக்கும் பெண்களை விடுங்கள். நகரத்தில் இருக்கும் பெண்கள் என்ன செய்கின்றார்கள் என்று யாருக்கும் எதுவும் சொல்ல வேண்டியதில்லை.

தமிழில் பேசினால் என்ன? ஏன் அதைக் கூடச் செய்ய தயங்குகின்றார்கள் இந்தப் பெண்கள்? வெற்று ஈகோவினால் என்ன கிடைக்கப்போகின்றது? இந்த தற்பெருமையினால் கிடைக்கப்போகும் பயன் தான் என்ன? ஒன்றுமில்லை. வெற்றுப்பெருமை.

தாய் மொழி என்று இனிச் சொல்லவே கூடாது என நினைத்தேன். இந்த எரிச்சலில் இருந்த போது குஜராத் சிங் ஒருவர் வெகு அழகாக போனில் யாரோ ஒருவருடன் தமிழில் பேசிக் கொண்டே நடந்து சென்றார். சில்லென்று இருந்தது.

தமிழை யாரும் வளர்க்க வேண்டாம். தமிழால் தான் பலரும் பிழைக்கின்றார்கள் என்ற சிந்தனை மேலோட வீட்டுக்குத் திரும்பினேன்.

தமிழ்ப் பெண்களே, வீட்டிலிருக்கும் போது உங்கள் குழந்தைகளைத் தமிழில் பேச வையுங்கள். தமிழ் பேப்பரை வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள். ஆங்கிலம் என்பது வயிற்றுப் பிழைப்புக்கு என தெளிவாகச் சொல்லிக் கொடுங்கள். இரண்டு வருடங்களுக்கு ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள உதவுங்கள். ஆனால் நீங்கள் உங்கள் அம்மாவை அம்மா என்று தான் அழைத்தீர்கள் என்பதினை மறந்து விடாதீர்கள். எங்கெங்கும் ஆங்கிலத்தில் பேசுவது அடிமைத்தனம். வேலையின் போது, படிக்கும் போது ஆங்கிலத்தில் பேசினால் போதுமே. 

கணபதி, பாரதி நகரில் இருக்கும் கிராமத்துக்கடையில் ராகிக்களியும், காரப்புளிக்குழம்பும், மிளகாய் வற்றலும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினேன்.  ”சார், கருவாட்டுக்குழம்பு இருக்கிறது, அதையும் பார்சல் செய்து தரவா?” என கேட்டார்கள். 35 வயது வரை சாப்பிட்ட கருவாட்டுக்குழம்பின் வாசம் திடீரெனெ நினைவுக்கு வர பெருமூச்சு தான் வெளிப்பட்டது. சென்று வா கருவாட்டுக்குழம்பே என மனம் அதற்கு விடை கொடுத்து நீண்ட நாட்களாகி இருந்தன.

ஆதார் கார்டில் முகவரி மாற்ற செய்ததில் மீண்டும் ஒரு தவறு நேர்ந்திருக்கிறது. இன்றைக்கும் மறுபடியும் செல்ல வேண்டும்.

Monday, September 5, 2016

ஏர் கலப்பை நினைவிருக்கிறதா உங்களுக்கு?

எங்க ஊர் பக்கம் இப்படித்தான் சொல்வார்கள். உழுவும் ஏர் இதற்கு இன்னொரு பெயர் கலப்பை. கொழு என்றொரு வஸ்து இருக்கும். அது கலப்பை மரத்தின் நுனியில் இரண்டு போல்டு போட்டு இணைத்திருப்பார்கள். மொத்தமாக நான்கு மரத்துண்டுகள் தான். நுகத்தடி தணி. 


இதோ இப்படித்தான் இருக்கும் ஏர் கலப்பை. நுகத்தடியில் மாடுகளைக் கட்டி கைப்பிடியை அழுத்திட மாடுகள் முன்னே செல்ல, கொழு மண்ணைக் கீறி இரண்டு பக்கமும் மண்ணைத் தள்ளும். வடம் பிடித்தல் என்றுச் சொல்வார்கள். அதாவது மாடு திருப்புவதற்கு வசதியாக நீண்ட அகலமான செவ்வக வடிவத்தில் முதலில் ஏரோட்டி பின்னர் நான்கு ஐந்து வரிசைகள் உழுத பிறகு அடுத்த இணைச் செவ்வகத்தினை உருவாக்கி உழுவார்கள். வெற்று வயலில் உழுவது இப்படித்தான். சேறடிக்கும் போது வேறு மாதிரி உழுவார்கள்.

குறுவைச் சாகுபடி வருவதற்கு முன்பே போஸ் ஆசாரியைக் கூட்டி வருவான். அப்போதெல்லாம் வீட்டுக்கு வீடு குடி ஆசாரிகள் என தனியாக இருப்பார்கள். ஒவ்வொரு பொங்கலின் போது அவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் புத்தம் புதிய அகப்பையைத் தான் பயன்படுத்துவோம். எங்கள் குடும்பத்திற்கு நெடுவாசல் கருப்பன் ஆசாரி தான் வருவார். புதுக் கொழு வாங்கி வந்து இணைப்பார்கள். இரண்டு ஏர் கலப்பை இருக்கும். ஏதாவது உடைந்து விட்டால் அடுத்த ஏர் கலப்பையை எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?


பெரிய வண்டிமாடு ஜோடி ஒன்று, கட்டை மாடுகள் ஜோடி ஒன்று என இரண்டு ஜோடிகள் இருக்கும். மாட்டு வண்டியில் சக்கரத்தில் பழைய ஆயிலுடன் காட்டன் துணியை ஊற வைத்து சக்கரத்துக்குள் நுழைத்து, வண்டிச் சக்கரங்கள் எளிதாக சுழல ஏற்பாடு செய்வான் போஸ். 

இப்படித்தான் ஏற்பாடுகள் நடக்கும். உழவு செய்வதற்கு முன்பு வீட்டில் சேரும் குப்பையை வண்டியில் கொண்டு போய் வயலில் கொட்டி நிரவி விட வேண்டும். அதன் பிறகு உழவு செய்ய வேண்டும். இரண்டு முறை உழவு செய்வார்கள். பின்னர் சேற்று உழவு செய்வார்கள். 

நாற்றங்கால் உழவுக்கு கிட்டப்பிடித்து உழ வேண்டும். ஊற வைத்து முளை கட்டின நெல்மணிகளை நாற்றங்காலில் பாவ வேண்டும். அது முளைத்து பயிராகி நிற்கும் போது, அதைப் பிடுங்கி வயல்களில் நடவு செய்ய வேண்டும். பிறகு களை எடுக்க வேண்டும். உரமிட வேண்டும். பூச்சிகள் வராதவாறு மருந்து அடிக்க வேண்டும். வயலில் தண்ணீர் காயக்காய தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கதிர் விளைந்து நிற்கும் போது அறுவடை செய்து நெல்மணிகளை நீக்கி சுத்தம் செய்து கோணியில் இட்டு வீடு வந்து சேர்க்க வேண்டும். தக தகவென தங்கமென மின்னும் நெல்மணிகளை பத்தாயத்துக்குள் சேகரிக்க வேண்டும்.

இவ்வாறு சேகரித்த நெல்மணிகள் அடுத்த விவசாயம் செய்வதற்கு முன்பு வியாபாரிகளிடம் விலை பேசி விற்போம். கிட்டத்தட்ட முன்னூறு மூட்டைகள் விற்பனை செய்வோம். அது தவிர சாப்பாட்டுக்கு தனியாக இருக்கும். வீட்டில் இருந்த இரண்டு பத்தாயங்கள் (பாக்ஸ் வடிவ மரப்பட்டி - நூறு மூட்டைகள் நெல் மணிகள் சேகரிக்கலாம்).

சமீபத்தில் வீட்டுக்குச் சென்றிருந்தேன். கலப்பை இற்றுப் போய் கிடந்தது. கொழுவில் மாட்டி இருந்த போல்டுகள் துருப்பிடித்திருந்தன. பத்தாயங்கள் காணவில்லை. மரம் உழுத்துப் போய் விட்டதாம். நெல் அவிக்கும் வெங்கல அண்டா மட்டும் இருந்தது. அதைத் தூக்கவே நான்கு ஆட்கள் வேண்டும். அவ்வளவு கனமான அண்டா அது.

ஏர் கலப்பையோடு நடந்து நடந்து உடம்பு உரமாகி இருந்த உழவர்கள் எல்லாம் இப்போது சர்க்கரை வியாதியில் சிக்குண்டு இருக்கின்றார்கள். விடிகாலை நான்கு மணிக்கு உழ ஆரம்பித்து மதியம்  ஒரு மணிக்குள் உழவை முடித்து ஆற்றில் குளித்து வீடு வரும் உழவனை இனிக் கண்ணால் காண முடியுமா? காவிரி வறண்டு போனது. உழவு செய்ய தண்ணீரைத் தர மாட்டேன் என்கிறார்கள். மாறிப்போன மனிதர்களும் மாறவே மாறாத அரசியலும் இருக்கையில் என்ன ஆகப்போகின்றது?

அடுத்த தலைமுறைக்காக இந்தப் பதிவு எழுதுகிறேன் மன வலியுடன்.

Wednesday, August 31, 2016

நான் தாத்தாவாகப் போகின்றேன்

அண்ணன் முத்துகிருஷ்ணனின் மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. ஒரு பெண் வேமங்குடியில் வாழ்க்கைப்பட்டிருக்கிறது. ஆவணம் அருணாசலம் மாமா வீட்டுக்குப் பின்னால் தான் இரண்டாவது பெண் வாக்கப்பட்டிருக்கிறது. இருவரும் எனக்கு மகள்கள் அல்லவா? நான் சித்தப்பா அல்லவா?

அம்மு பள்ளியில் இருந்து வந்ததும் அண்ணன்,”அம்மு உன்னை ஒருத்தர் சித்தின்னு அழைக்கப்போகிறார்! ரித்திக் நீ மாமாவாகப் போகின்றாய்!” என்றார்.

அம்மு. ‘என்ன? என்ன?’ என்று கேட்டு விழித்தது. ரித்திக் சிரித்தான்.

”ஆமா அம்மு, உன் அக்காவிற்கு குழந்தை பிறக்கப் போகிறது, ஆகையால் நீ சித்தி தானே?” என்றார்.

ஒரே சிரிப்பு அம்முவுக்கு.

என்னைப் பார்த்தார். எனக்குத் திக்கென்றது. பக்கத்தில் கோதை உட்கார்ந்திருந்தார்.

’நீ தாத்தாவாகப் போகிறாய் தங்கம்’ என்றார் அண்ணன்.

கோதை என்னைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தார். எனக்கு ஒரு மாதிரியாகப் போய் விட்டது.

”நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது, எனக்கு அண்ணணும் இல்லை, தம்பியும் இல்லை” என்றேன் படக்கென்று.

சிரி சிரியென சிரித்து விட்டு எங்கள் குடும்ப வரலாற்றினைச் சொல்ல ஆரம்பித்தார். அது தனி பதிவில் (குடும்ப வரலாறு பகுதி 1)

இனி என்ன ஆகப்போகின்றது? நான் தாத்தாவாகப் போகின்றேன். வேறு வழியே இல்லை. நான் தாத்தா தான்.

குடும்ப வரலாறு பகுதி 1

தாத்தாவின் தாத்தா பெயர் என்ன? என்று கேட்டால் கிட்டத்தட்ட அனைவரும் விழி பிதுங்கி விடுவார்கள். அந்தக் காலத்து ராஜாக்கள் பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்கும் நாம், நமது குடும்ப முன்னாள்களை பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொள்வதில்லை. வயதாகி விட்டாலே போதும், ஓரமாய் ஒதுக்கி விடுவோம். இறந்து போனால் நினைவில் வைத்துக் கொள்ளவா போகிறோம்?

அண்ணன் முத்துகிருஷ்ணன் களத்தூரிலிருந்து வந்திருந்தார். முள்ளங்கி சாம்பார், சுண்டல்காய் புளிக்குழம்பு, தக்காளி ரசம், வாழைக்காய் வறுவல், பாகற்காய் இனிப்பு பொறியல், ஆதண்டங்காய் வற்றல், எலுமிச்சை  ஊறுகாய், தயிர் என அவருக்கு உணவு அளித்தோம். திருப்தியாக உண்டு விட்டு அரை மயக்கத் தூக்கத்திலிருந்தார். மூன்று மணி வாக்கில் எழுந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். ஊர்க்கதை தான். அப்போது தான் எங்கள் குடும்பம் பற்றி பேச்சு வந்தது. ’அண்ணே, நீ எப்படி எனக்குச் சொந்தம்?’ என்று ஆரம்பித்தேன். 

புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்கு எல்லை, தஞ்சாவூர் மாவட்டத்தின் மேற்கு எல்லை இவற்றில் இருப்பது ஆவணம் கிராமமும், நெடுவாசல் கிராமமும். நெடுவாசல் எனது ஊர். ஆவணம் அண்ணன் ஊர். இனி எங்க குடும்ப உறுப்பினர்கள் விவரம்.

ஆப்புநாததேவர், ஏயி என்கிற ஏகாத்தாள், அலமேலு, ஆவா நால்வரும் சகோதர சகோதரிகள். ஆவணத்தில் பிறந்தவர்கள். இவர்களின் அப்பா அம்மா பெயர் தெரியவில்லை. விசாரிக்க வேண்டும்.

ஆப்புநாததேவருக்கு இரண்டு பையன்கள் அவர்கள் பெயர் சம்மள மாணிக்கதேவர் மற்றும் சுப்பையா தேவர் என இரு பையன்கள்.

ஏயி என்கிற ஏகாத்தாளை கட்டிக் கொடுத்தது நெடுவாசல் கிராமத்தில் இவரின் கணவர் பெயர் அருணாசலதேவர். இவர்களுக்கு நாடி மாணிக்கதேவர், ராமசாமி தேவர், ராமாயி, சின்னப்பிள்ளை மற்றும் வள்ளி என ஐந்து குழந்தைகள். ராமசாமி தேவர் சிறு வயதில் காலரா வந்து இறந்து போய் விட்டார். ராமாயியை நெடுவாசல் தெற்குத் தெருவில் கட்டிக் கொடுத்தார்கள். புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் ஏதோ சண்டை வந்து காஞ்சிராத்தி இலையை அரைச்சுக் குடிச்சிட்டு செத்துப் போச்சாம்.

அலமேலுவை ஆவணத்தில் கட்டிக் கொடுத்தார்கள். புருஷன் பேரு முத்துக்கருப்பண்ணதேவர். இவர்களுக்கு ஆவுடைத்தேவர் மற்றும் சிவந்தி மாணிக்கதேவர் என்று இரு பையன்கள். 

ஆவாவை வேமங்குடியில் கட்டிக் கொடுத்தார்கள். புருஷன் பேர் என்னன்னு தெரியவில்லை, விசாரிக்கணும். இவருக்கு ராமதேவர், விசாலாட்சி மற்றும் மன்னார்குடியில் செட்டிலான ஒரு டாக்டர் (இவரின் பெயரும் தெரியவில்லை) ஆக மூன்று குழந்தைகள்.

ஆப்புநாததேவர் பையன் சம்மள மாணிக்கத்தேவருக்கு நெடுவாசல் ஏகத்தாளுக்குப் பிறந்த சின்னப்பிள்ளையை திருமணம் செய்து வைத்தார்கள். இவர்களுக்கு குழந்தைவேலு, குட்டியம்மாள், அருணாசலம் மற்றும் ருக்குமணி என நான்கு குழந்தைகள்.

ஆப்பு நாததேவர் அடுத்த பையன் சுப்பையாதேவருக்கு வேமங்குடியில் கட்டிக் கொடுத்த ஆவாவின் மகள் விசாலாட்சியை திருமணம் செய்தார்கள். இவர்களுக்கு ஒரே ஒரு பையன் அவர் பெயர் சிங்காரவேல்.

நெடுவாசலில் கட்டிக் கொடுத்த ஏயி என்கிற ஏகாத்தாளின் மகன் நாடி வீட்டு மாணிக்கதேவருக்கு ஆவணம் சம்மள மாணிக்கதேவருக்கும் சின்னப்பிள்ளைக்கும் பிறந்த குட்டியம்மாளை இரண்டாவது திருமணம் செய்து கொடுத்தார்கள். சொத்து ஆள வாரிசு இல்லையென்பதால் தனது தங்கை மகளான குட்டியம்மாளை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஞானேஸ்வரி, ஜானகி, தங்கவேல், டிம்பிள்கபாடியா என நான்கு வாரிசுகள். நாடி மாணிக்கதேவரின் முதல் சம்சாரத்துக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்த பெண்ணை ஆவணம் சம்மள மாணிக்கதேவரின் மூத்த பையன் குழந்தைவேலுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். குழந்தைகள் ஏதுமின்றி இறந்து போனார். இரண்டாவது மகள் காளியம்மாளை நெடுவாசலில் இருந்தவருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். இவர்களுக்கு பழனிவேலு, அலமேலு இரண்டு வாரிசுகள்.

அடுத்து ஏகாத்தாளின் மகள் வள்ளியம்மையை வீரியன்கோட்டையில் கட்டிக் கொடுத்தார்கள். இவரின் வீட்டுக்காரர் பெயர் தெரியவில்லை. விசாரிக்க வேண்டும். இவர்களுக்கு வீராயி, செவையாள், வீரப்பன், குட்டியப்பன், பாப்பாத்தி, அபூர்வம் மற்றும் நாகம்மாள் என்று ஏழு வாரிசுகள்.

ஆவணத்தில் கட்டிக் கொடுத்த அலமேலு மகன் ஆவுடைத்தேவருக்கு முத்துலட்சுமி (நெடுவாசல்), ராஜேஸ்வரி (பைங்கால்), முத்துகிருஷ்ணன் (ஆவணம்), செல்வராணி (பூக்கொல்லை), மஞ்சுளா (துறையூர்), இந்துமதி (ஆண்டாகோட்டை) ஆகிய ஆறு வாரிசுகள்.

ஆவணத்தில் கட்டிக் கொடுத்த அலமேலுவின் இரண்டாவது மகன் சிவந்தி மாணிக்கதேவருக்கு செண்பகவல்லி(சென்னை), ராஜ்குமார் (மலேசியா மிலிட்டரியில் வேலை திருமணமில்லை), காந்திமதி (சென்னை), குணசுந்தரி (மலேசியா), ஜெயபாரதி (மலேசியா), சரவணன் (மலேசியா) என ஆறு வாரிசுகள் இருக்கின்றனர். இதில் சமீபத்தில் தான் செண்பகவல்லி சென்னையில் காலமானார்.

ஆவணம் ஆப்பு நாததேவரின் மகன்களில் சுப்பையாதேவரின் மகன் சிங்காரவேலுவிற்கு வேமங்குடியிலிருந்து பெண் எடுத்தார்கள். மனைவி பெயர் பானு. இறந்து விட்டார். இவர்களுக்கு ஜெயம் என்கிற ஃபேமஸ் ஸ்டார்னி, சின்னப்பொன்னு என்கிற செஸ்மின் வாணி, ஃப்ரான்சிஸ்காசன் மற்றும் சிஸ்பான் விசாலம் என்கிற நான்கு வாரிசுகள். தலையைச் சுற்றுகிறதா? மாமா குசும்பு பிடித்தவர். பிள்ளைகளின் பெயர்களைப் பார்த்தீர்களா? 

இது முதல் வாரிசு குடும்ப விவரம் அடுத்த தலைமுறை வாரிசுகளை எல்லாம் விசாரித்து அடுத்த பதிவில் எழுதுவேன். எங்கள் குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் எங்கிருந்தாலும் தொடர்பு கொள்ளவும்.

Thursday, August 25, 2016

அழகன்

பனிரெண்டாம் வகுப்பு முடிந்தது. அடுத்துப் படிக்க வேண்டும். எல்லோரும் டி.பார்ம் படித்து விட்டு மெடிக்கல் வைத்துக் கொள்ளலாம் என்றார்கள். அக்கா தஞ்சை அதிமுக மாவட்ட பிரதிநிதி. சேவல் சின்னத்தில் போட்டியிட்ட குழ.செல்லையா மாமாவுக்கு நெருக்கம். ரெகமெண்டேசன் கடிதம் பெற்று தஞ்சாவூர் மெடிக்கல் கல்லூரியில் டி.பார்ம் சேர முயற்சித்தேன் கிடைக்கவில்லை. 

வீட்டுக்கு பின்னால் ரங்கசாமி அண்ணன் இருந்தார். அவரைச் சந்திக்கச் செல்வதுண்டு. அப்போதே வேதாந்தமாகப் பேசுவார். அவர் என்னிடம் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற புத்தகத்தையும், பகவத் கீதையையும் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.

அதுவரை மாலைமதி, ராணிமுத்து, ராஜேஷ்குமார், சுபா (எனக்குப் பிடித்த நாவல் தங்கக் கொலுசு மற்றும் தூண்டில் முள்), குமுதம் வகையறாக்களே எனக்குத் தெரியும். ஒரு புது உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்திய ரங்கசாமி அண்ணனுக்கு நன்றி.


உள்ளே இழுத்துக் கொண்டார் கண்ணதாசன். கண்ணனைப் பற்றிய அவரது புலம்பல் கண்ணன் மீது மாறாப்பற்றுக் கொள்ள வைத்தது. கண்ணனைத் தேடினேன். அப்போதெல்லாம் இணையம் ஏது?  காணும் புத்தகத்திலெல்லாம் கண்ணன் படம் கிடைத்தால் கட் செய்து வைத்துக் கொள்வேன். தூண்டிக்காரன் பத்ரகாளி, வீரபத்திரர் என்று தேவர் இனத்தின் அடையாளங்களை விட்டு விட்டு என் மனம் கண்ணனைத் தேடியது. ஜெயதேவரின் அஷ்டபதியில் ராதே கண்ணன் பற்றி கண்ணதாசனின் எழுத்துக்கள் மோகப்படுத்தியது. விடாது தேடினேன் கண்ணனை.

ஒரு வழியாக கரூர் ராமகிருஷ்ண மடத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்த பொழுது கண்ணன் பற்றிய அத்தனைப் புத்தகங்களையும், பாடல்களையும் விடாது கேட்க ஆரம்பித்தேன். சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் கெளதமானந்தரையும் விடவில்லை. எனக்கு ராமகிருஷ்ண கோவிலில் மந்திர தீட்சை கொடுத்த பேலூர் மத்தின் தலைவர் எனது குரு காலம் சென்ற ரங்கநாதனந்தரையும் விடவில்லை. ஆஸ்ரம தலைவர் ஆத்மானந்தா அவர்கள், ’ஏனப்பா கண்ணன் மீது இவ்வளவு பற்று?’ என்று கேட்டு விட்டு அவனைப் பற்றிய புத்தகங்கள், பாடல்கள் எங்கு கிடைத்தாலும் கொண்டு வந்து கொடுப்பார்.

கண்ணனில் மூழ்கி கிடந்தேன். இப்போதெல்லாம் எனக்கு கடவுள் பற்றிய ஒரு தெளிவான முடிவிற்கு வந்து விட்டேன். ஆனால் இந்தக் கண்ணன் மீதான ஈர்ப்பு மட்டும் இன்றைக்கும் என்னை விடாது துரத்திக் கொண்டே இருக்கிறது. இன்றைக்கு அவனைப் பற்றி எழுத வேண்டுமென நினைத்தேன். கண்ணனின் வாழ்க்கை சொல்வது வேறு ஏதோ. அது என்னவென்று உணர வேண்டும் . ஓஷோவின் பகவத் கீதை ஒரு தரிசனம் மற்றும் அஷ்டவக்ர மகா கீதை புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும் என நினைத்திருக்கிறேன். காலம் வரட்டும்.

இன்றைக்கு கிருஷ்ண ஜெயந்தி விழா நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. உங்களுக்காக இரண்டு பாடல்களை இங்கு இணைப்புக் கொடுக்கிறேன். கேட்டுப்பாருங்கள். மனதை அள்ளி விடுவான் கிருஷ்ணன்.





ராகுல், சிந்துஜா மற்றும் மிருளாளினியின் குரல்களின் வழியே கண்ணனின் அன்புக் கரங்களின் தழுவலில் மனது ஒடுங்கி நிற்கும் அற்புதத்தை அவசியம் அனைவரும் உணருங்கள். இசை வழியே உள்ளத்துக்குள் ஊடுறுவும் அற்புத தரிசனத்தை ஒரு நொடி உணருங்கள். மாயவன் அழகனாய் மனக்கண்ணுக்குள் வெளிப்படும் ஆனந்த தரிசனத்தை உணருங்கள்.

- கோவை எம் தங்கவேல்.



Monday, August 22, 2016

சட்டசபை சொல்லும் கதை

தேர்தல் முடிந்து 2016ம் ஆண்டின் முதல் சட்டசபைக்கூட்டம் நடந்து வருகிறது. சபையில் பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. விவாதங்களும், செய்திகளும் என மீடியாக்கள் வெகு பரபரப்பு. ஒவ்வொருவருக்கும் தகுந்தவாறு கணிப்புகள், வேதனைகள், கண்டிப்புகள், போராட்டங்கள் என்று தர்க்க நியாயங்களை அடுக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இப்போது ஒரு கதை சொல்லப்போகின்றேன்.

ஒரு ஜென் குரு தன் மடாலயத்தில் இருக்கும் சீடர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். 

தினமும் பள்ளிக்கு வருவார். சீடர்கள் பெஞ்சுகளில் அமர்ந்திருப்பர். அனைவரையும் பார்ப்பார். ’அனைவரும் புத்தகங்களை எடுத்து வைத்துப் படியுங்கள். யாரும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளக்கூடாது’ என்பார். சீடர்கள் அனைவரும் புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு படிப்பர். 

ஜென் குரு மேஜை மீது தலையை வைத்துக் கொண்டு தூங்கி விடுவார். குருவிடமிருந்து மெலிதான குறட்டைச்சத்தம் வந்ததும் சீடர்கள் அனைவரும் சத்தமின்றி தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள். சத்தம் அதிகமானதும் ஜென் குருவின் கைகள் அருகிலிருக்கும் பிரம்பை எடுத்து டேபிளில் ஒரு அடி அடிப்பார். சீடர்கள் அமைதியாக இருப்பார்கள். மீண்டும் மெலிதான குறட்டைச் சத்தம் வரும். சத்தம் அதிகமாகும். மீண்டும் பிரம்படி. 

சீடர்களுக்கு இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று புரியவில்லை. ஜென்னை அல்லவா கற்றுக் கொள்ள வந்தோம். ஆனால் இங்கு நடப்பதோ வேறாக அல்லவா இருக்கிறது என்று நினைத்தார்கள். அதை குருவிடமும் கேட்டார்கள்.

’நீங்கள் ஜென்னைத் தான் கற்றுக் கொண்டிருக்கின்றீர்கள்’ என்றார் குரு.

சீடர்களுக்குப் புரியவில்லை.

‘மனம் பலவாறாகச் சிதறிக் கொண்டிருக்கும். அதைத் தட்டித் தட்டி ஒழுங்குப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதைத்தான் நான் செய்து வருகிறேன்’ என்றார்.

இந்தக் கதை சொல்லும் பாடம் என்னவென்று புரியவில்லை என்றால் தொடருங்கள்.

அரசியல்வாதிகளை மக்கள் மறக்காமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்சியும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள, மக்கள் மனதில் தங்களை இருப்பு வைத்துக் கொண்டே இருப்பதற்காக சம்பவங்களை உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். 

ஒரே மாதிரியான அரசியல் நிகழ்வுகள் நடந்தால் மக்கள் நாட்டுப்பிரச்சினைகளை பற்றிப் பேச ஆரம்பித்து விடுவார்கள். அது மக்கள் எழுச்சியாக வந்து விடும் ஆபத்து இருக்கிறது. அதையெல்லாம் மக்கள் யோசித்து விடவே கூடாது. டீக்கடையிலும், தினசரிகளிலும், டிவிக்களிலும் ஒவ்வொரு நாளும் இது போன்ற பிரச்சினைகள் பேசிக் கொண்டிருக்க வேண்டும். எழுதப்பட வேண்டும். 

அரசு நலத்திட்டங்கள் எல்லாம் செய்கிறதே என்று கேட்கத் தோன்றும். அமைச்சர் வீட்டிற்கு வரும் சாலைகள் போடப்படும் போது அருகிலிருக்கும் சாலைகளும் செப்பனிடப்படுவது தான் நலத்திட்டங்கள்.

அரசியல் என்பது சாதரண விஷயமில்லை. அதற்கென அரிச்சுவடிகள் தனியானவை. அவை புத்திசாலிகளுக்கு மட்டுமே புரிந்தவை. அந்தப் புத்திசாலிகள் தலைவராகின்றார்கள். கொஞ்சம் புத்திசாலிகள் அமைச்சராகின்றார்கள். பிறர் தொண்டராகவே இருக்கின்றார்கள்.

ஒரு ஜென் குரு தட்டுவதால் சீடருக்கு ஜென்னை போதிப்பது போலவே அரசியல்வாதிகள் கிளப்பும் பிரச்சினைகளால் அரசியல் செய்கின்றார்கள். புரிந்து கொள்ள முயலுங்கள்.


2016 கோவை புத்தக திருவிழாவில் ஒரு நாள்

பொழுது புலரும் முன்பு எழுந்து கொள்வேன். ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீர். கொழுப்பைக் குறைக்கும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இருக்கும் என நண்பர் சொல்லி இருந்தார். டீ, காபி, சுக்கு மல்லிக்காஃபி எல்லாம் போயிடுச்சு. வழக்கம் போல உழவர் சந்தைக்குச் செல்லாமல் புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். மனையாள் சந்தைக்குச் சென்று விட்டார்.

வீட்டில் சுத்த சைவம். இலை தழைகள் தான். உறவினரும், நண்பர்களும் வீட்டுப்பக்கம் எட்டிக்கூட பார்ப்பது இல்லை. அப்படி வந்தாலும் ஒரு நாள் அதிகபட்சம் இரண்டு நாட்கள். விட்டால் போதும் என ஓட்டம் பிடிப்பார்கள். காரம், புளி இல்லாமல் அரை உப்புச் சாப்பாடு என்றால் எவர் தான் இருப்பார்கள்?



தினமலரில் கோவை கொடீசியா வளாகத்தில் புத்தக திருவிழா என்று போட்டிருந்தார்கள். பசங்க ஞாயிறுகளில் பதினோரு மணிவாக்கில் டிவியில் உட்கார்ந்து விடுவார்கள். ஒரு பிரயோஜனமும் இல்லாத பொழுது போக்கு டிவி. கொடீசியா கிளம்பினேன். 

வீல் சேர் கொண்டு வந்து கொடுத்தார்கள். முன்புறம் பெரிய பந்தல் போட்டு பெரிய பெரிய புத்தக கம்பெனிகள் ஸ்டால் போட்டிருந்தார்கள். கூட்டமும் அதிகம் தான். எனக்குத் தேவையான ஓஷோ புத்தகங்களை கவிதா பப்ளிகேசனில் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றால் ராம்ப் இல்லை. படிக்கட்டுகள் எதிரே இளித்தன. இரண்டு பக்கமும் இருந்த ராம்பை அடைத்து வைத்திருந்தார்கள். புத்திசாலிகள்.

ஒரு வழியாக இறங்கி பின் வீல் சேரினை தூக்கி வைத்து உள்ளே சென்றேன். பையன் வீல் சேரினைத் தள்ளிக் கொண்டு சென்றான். நிவேதிதா ஒவ்வொரு ஸ்டாலாக சென்று உள்ளே இருக்கும் புத்தகங்கள் ஒவ்வொன்றினையும் எடுத்து எடுத்துப் பார்ப்பதும் பின்னர் விலையைப் பார்ப்பதுமாய் இருந்தது. பையனும் இருக்கும் ஆங்கில சிறுவர் இதழ்களை எல்லாம் அலசி ஆராய்ந்து புத்தகங்களைத் தேர்வு செய்தான். நானும் மனையாளும் ஸ்டாலின் வாசலில் உட்கார்ந்திருந்தோம். மூன்று மணி ஆயிற்று. இன்னும் அவர்களுக்கு புத்தகங்கள் வாங்கி முடியவில்லை.

பசி கிள்ளல் போட்டது. கேண்டீன் சென்றோம். பசங்க வெஜ் பிரியாணியும், நானும் மனையாளும் இரண்டு சப்பாத்திகளும் சாப்பிட்டோம். அங்கு டேபிள் துடைத்துக் கொண்டிருந்த பெண்மணி மிகவும் களைத்துப் போயிருந்தார். சாப்பிட்டாயாம்மா எனக் கேட்டேன். இன்னும் சாப்பிடவில்லை சார் என்றது அது. மனையாள் கொஞ்சம் காசு கொடுத்துப் போய் சாப்பிடும்மா என்றார்.

மீண்டும் புத்தகத்தேடல் ஆரம்பித்தது. ஆயிற்று ஐந்து மணி. ஒரு வழியாக எல்லா ஸ்டால்களையும் பார்த்து புத்தகங்களைப் புரட்டி தேவைக்கு ஏற்ப புத்தகங்களை வாங்கி வீடு வந்து சேர்ந்தோம்.

வந்ததும் பசங்க இருவரும் பேனாவை எடுத்து ஒவ்வொரு புத்தகங்களிலும் பெயரும் தேதியும் எழுதினார்கள். மனையாளுக்கு அடியேன் சலுகை விலை பொன்னியின் செல்வன் பதிப்பினை வாங்கிக் கொடுத்திருந்தேன். இருக்கும் வேலைப்பளுவில் அவர் ஐந்து பாகங்களையும் படிப்பதற்கு ஐந்து வருடம் ஆகும் என நினைக்கிறேன்.

உயிர்மையில் கூட்டம் இல்லை. அதே போல கிழக்குப் பதிப்பகத்திலும் அதிகம் இல்லை. காலச்சுவடு சொல்லவே வேண்டாம். புத்தகத்தை எடுத்தாலே திகீர் என்கிறது. ஒவ்வொன்றும் 200, 300, 500, 1000 என்று இருக்கிறது. 

குழந்தைகள் அதிகம் வந்திருந்தார்கள். குழந்தைகள்  புத்தகங்கள் அதிகம் விற்பனையாகின்றன. லயன் காமிக்ஸ் ஸ்டாலில் கூட்டம் அதிகம். ஆனால் அவர்களும் அதிக விலை வைத்து விற்கின்றார்கள். 50 ரூபாய்க்கும் 100 ரூபாய்க்கும் ஆங்கில நாவல்கள் கலர் கலரான புத்தகங்கள் விற்பனை செய்தார்கள். பையன் அங்கு சென்று கொஞ்சம் புத்தகங்களை கொண்டு வந்து என்னிடம் காட்டினான். ஒரு புத்தகத்தினை பிரித்தேன். கண்ணில் பட்ட வார்த்தை அய்யோ என கதறவிட்டது. அவனுக்கு இன்னும் கொஞ்சம் வயது வரட்டும் என்று நினைத்து மறுத்து விட்டேன். 

மனையாள் வெளிநாட்டு இலக்கிய புத்தகங்களைக் கொண்டு வந்து கொடுத்தார். ’உள்நாட்டு இலக்கியத்தைப் படிக்கவே முடியவில்லை. இதில் அயல் நாடு வேறா தூக்கித்தூரப்போடு’ என்றேன். பின்னே எரிச்சலாக இருக்காதா? கதாபாத்திரங்களின் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ளவே முடியாது. அந்தக் கலாச்சாரத்தைப் படித்து என்ன கிழிக்கப்போகின்றோம்? நமக்கெல்லாம் ஜானகிராமன் வகையறாக்கள் தான் சரிப்படும். பிகேபி, சுபா, ராஜேஷ்குமார் எல்லாம் படித்து ஏமாந்ததுதான் மிச்சம். பொட்டுப் பிரயோஜனம் இல்லை. இந்த நாசமாப்போகும் சினிமா, டிவிக்கு இந்தப் புத்தகங்கள் எவ்வளவோ பரவாயில்லை. 

கொட்டகையில் இருந்த புத்தக ஸ்டால்களில் கூட்டம் புத்தகங்களை அள்ளியது. வியாபாரம் சூப்பர் சார் என்றார் பில் போடுபவர். ஸ்டாலுக்கு பத்து நாளைக்கு 36000 ரூபாய் கட்டணமாம். ‘பின்னர் ஆள் கூலி, சாப்பாடு, ஹோட்டல் பில், போக்குவரத்துச் செலவு என்று அதற்குப் பிறகுதான் லாபம்’ என்றார். ’அதெல்லாம் தாண்டியாச்சு சார்’ என்றார் அவர் தொடர்ந்து. வளரும் பதிப்பாளர்கள் என்றொரு பகுதியில் ஒரு டேபிளில் கொஞ்சம் புத்தகங்களை வைத்திருந்தார்கள். ஒரு பெரிய புக் ஸ்டாலில் வாசலில் ஒரு பையன் நின்று கொண்டு உள்ளே வாருங்கள் என்று அழைத்துக் கொண்டிருந்தார். இதில் அயர்னி என்னவென்றால் கிண்டில் வேறு விற்றுக் கொண்டிருந்தார்கள். புத்தகத்துக்கும் கிண்டிலுக்கும் சரிப்பட்டு வருமா?

பசங்க இருவரும் புத்தகங்களை எடுத்துப் பிரித்து வைத்துக் கொண்டு சீரியசாகப் படித்துக் கொண்டிருந்தார்கள். அடியேனும் தான். மனையாள் சமையல் செய்யச் சென்று விட்டார். அந்தப் பொன்னியின் செல்வன் புத்தகங்கள் கிச்சனையே பார்த்துக் கொண்டிருந்தன.