குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, December 9, 2008

ரகசிய வன்முறை : உயிரோசை

உயிர்மையின் இணைய இதழ் உயிரோசையில் வெளிவந்திருக்கும் ரகசிய வன்முறை கட்டுரையினைப் படிக்க இங்கே சொடுக்கவும்

உயிரோசையில் ரகசிய வன்முறை : தங்கவேல்


நன்றி : உயிர்மை மற்றும் உயிரோசை


* * *

Monday, December 8, 2008

தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் 3

அந்த ஊர் முக்கியஸ்தரின் மகன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஊரின் இன்னொரு முக்கியஸ்தரின் மகளோடு காதல். கவிதை மழை பொழிவான் காதலன். உலக அறிவின்றி இருக்கும் காதலியோ அவனெழுதும் கவிதைக்கு அர்த்தம் புரியாமல் என்ன இப்படியெல்லாம் எழுதுகிறாய் என்று கடிந்து கொள்வாள். முக்கியமான விஷயம் என்னவென்றால் அவனது கவிதையில் இதயமென்ற வார்த்தை தான் அதிகம் பயன்படுத்தப் பட்டிருக்கும்.

தினமும் சந்திப்பு நடக்கும். பார்வையோடு சரி. சாப்பாடு ஆச்சா? அம்மா எப்படி இருக்கிறார், அப்பா எப்படி இருக்கிறார்? இப்படித்தான் பேசிக் கொள்வார்கள். காதலன் படிப்பினை முடித்து விட்டு வீட்டில் இருந்தான். இவர்களின் காதல் ஊர் பெண்டுகளுக்குத் தெரிய கண் காது மூக்கு சேர்த்து பேச ஆரம்பித்தார்கள். காதலனின் அம்மாவிடமே அது பற்றி விசாரிக்க, காதலனின் வீடே பற்றி எரிந்தது. காதலிக்கு அவள் அப்பாவால் கும்மாங்குத்துகள் பரிசாகக் கிடைத்தன. காதலியைப் பார்க்க முடியாமல் தவித்த காதலன் ஊரை விட்டு வெளியேறினான்.

காலங்கள் கடந்தன. ஊருக்குத் திரும்பினான். காதலியைச் சந்தித்தான். திருமணம் பற்றிப் பேசினான்.காதலி மழுப்பினாள்.கடமை அழைக்க பிறிதொரு நாளில் சந்திக்கலாமென்று வேலைக்கு திரும்பவும் சென்றான். காலங்கள் கடந்தன. மீண்டும் ஊருக்குத் திரும்பினான் காதலியைப் பார்ப்பதற்கு.

காதலியைப் பார்க்க முடியவில்லை. காரணம் அவளுக்குத் திருமணமாகி இருந்தது. காதலி அவனிதயத்தில் குத்தி விட்டுச் சென்றாள். வலிக்கும் இதயத்தோடு மீண்டும் வேலைக்குத் திரும்பினான்.

காலங்கள் உருண்டோடின.

காதலன் ஏதோ விஷயமாக ஊருக்குத் திரும்பினான். காதலனின் நண்பன் காதலியைப் பற்றிச் சொன்னான். காதலிக்குப் பிறந்த மகனின் இதயத்தில் ஓட்டையாம்.

தர்மம் சூட்சுமமானது தானே ??????

மொபைல் போனை கம்ப்யூட்டராக பயன்படுத்தலாமா ?



டெக்ஸ்டாப் மாடல் கம்ப்யூட்டர் இன்று லேப்டாப்பாக மாறி விட்டது. இன்னும் சிறிது காலத்தில் ”மொபைல்டாப்” கம்ப்யூட்டராக மாறவும் வாய்ப்பிருக்கிறது. மொபைல் டெக்னாலஜியின் வளர்ச்சி அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கும் இக்காலத்தில் எதிர்கால மொபைல்டாப் எப்படி உருவாக்கலாம் என்ற யோசனைதான் இந்தப் பதிவு.

தற்போது இருக்கும் மொபைல் போனில் சிறு மாறுபாடுகளைச் செய்தால் போதும், மொபைல் போனை முழுக் கணிணியாகப் பயன்படுத்தலாம். இதற்கு தேவையான வசதிகள் : இன்பில்ட் இண்டகிரேட்டட் புரஜெக்டர் (INBUILD INTEGRATED PROJECTOR), கீபோர்ட் (KEY BOARD), மெளஸ்(MOUSE), மொபைல் போனுக்கான ஆபரேட்டிங்க் சிஸ்டம் (OPERATING SYSTEM). இந்த வசதிகளை மொபைல் போனில் கொண்டு வந்தால் போதும். அட்டகாசமான கம்ப்யூட்டர் தயார். தற்பொழுது ரேடியோ, டிவி, இணையம் மூன்றினையும் மொபைலில் பயன்படுத்துகிறோம். மொபைலை மொபைடாப் ஆக மாற்றி விட்டால் உள்ளங்கைக்குள் உலகம். அகன்ற திரையில் டிவி பார்க்கலாம். சாட்டிங்க் செய்யலாம். இன்னும் என்னென்னவோ செய்து தூள் கிளப்பலாம். ஆளுக்கொரு கணிணி. ஹெட்போனைக் காதில் மாட்டிக் கொண்டால் போதும். ஆளாளுக்கு தனி உலகம். திரை தேவையில்லை. ஸ்கிரீன் தேவையில்லை. செல்போனிலிருந்து சுவரிலோ அல்லது தரையிலோ செல்போனின் உள்ளிணைந்த இண்டகிரேட்டட் புரஜெக்டர் மூலமாக ஸ்கீரினைக் கொண்டு வரலாம். மொபைல் போனுடன் (தேவையென்றால் இணைத்துக் கொள்ளும் வசதி) இணைந்த கீபோர்ட், மெளஸ் மூலம் கணிணியில் செய்யக்கூடிய வேலைகளை எளிதில் செய்யலாம். பேப்பர் வடிவில் சுருட்டி வைத்துக் கொள்ளும் அளவுக்கு கீபோர்டுகள் வந்து விட்டன. மெளஸ்ஸும் சிறிய சைஸ்சில் கிடைக்கின்றன. இணைய இணைப்புக்கு 3ஜி டெக்னாலஜி பயன்படுத்தலாம். இதற்கு என்று பெரிய அளவில் செலவு ஏதும் பிடிக்காது. பிரச்சினை என்னவாக இருக்குமென்றால் ஸ்டோரேஜ். இதற்கும் வழி இருக்கிறது. அதிவேக பிராசஸர், மற்றும் ரேம் மெமரியுடன், எஸ்டி கார்ட் மூலம் இப்பிரச்சினையையும் எளிதில் தீர்த்து விடலாம். 3ஜி வந்து விட்டால் இணைய வேகமும் உயரும். ஆக, மொபைல் நிறுவனங்கள் எதிர்காலத்தில் இவ்வகைக் மொபைல் கம்ய்யூட்டரை உருவாக்கியே தீர வேண்டும். இதற்கான விலையினைக் கிட்டத்தட்ட 7000 ரூபாய்க்குள் அடக்கி விடலாம். பவர் பிரச்சினை இருக்காது. யூபிஸ் தேவையில்லை. இப்படி எவ்வளவோ வசதிகள் தரப்போகும் மொபைல்டாப் எப்போது வரும் ??????

தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் - 2

அந்த கிராமத்தில் அண்ணன் தம்பி இருவர். சமமாக சொத்து பங்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. அண்ணனுக்கு நான்கு பிள்ளைகள். தம்பிக்கு ஒன்று. தம்பி மனைவிக்கும், தம்பிக்கும் அண்ணனைப் பார்த்து பொறாமை. பக்கத்து பக்கத்து வீடாகையால் அடிக்கடி ஏதாவது பிரச்சினை செய்வார் தம்பி. அண்ணன் ஒதுங்கிச் செல்வார். அண்ணன் மீதும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் துவேஷம் கொள்ளக் காரணம் அரசாங்கத்திடமிருந்து மாதா மாதம் விடுதலைப் போராட்ட வீரருக்கான பணம் வருவது. இது இப்படி இருக்க, அண்ணன் குடும்பத்தார் அனைவரும் விவசாய வேலையில் இறங்கியதால் குடும்பம் முன்னேறிக்கொண்டிருந்தது. தம்பிக்கு ஒரே ஒரு பிள்ளை ஆகையால் கூட மாட வேலை செய்ய ஆள் இல்லை. அதனால் அவரின் வளர்ச்சி தடைப் பட்டது. அண்ணன் குடும்பம் முன்னேறுவது கண்டு வெம்மையில் வாடிய தம்பி குடும்பம், பட்டுநூல்கார மந்திரவாதியை அணுகினர். எப்படியாவது அண்ணன் குடும்பத்திலிருப்போரை ஒழித்துக் கட்டி விட வேண்டுமெனச் சொல்லி காசையும் கொடுத்தனர். கொடுத்த காசுக்கு துரோகம் செய்யாமல் பட்டு நூல்காரனும் பில்லி வைத்தான். அண்ணன் குடும்பத்தாருக்குச் சொந்தமான மாட்டு மந்தையில் இருந்த மாடுகள் செத்து வீழ்ந்தன. பாரம் இழுக்கும் வண்டி மாடுகள் வாயில் ரத்தம் தள்ளி இறந்தன. ஆட்டு மந்தையில் ஆடுகளும் இறந்தன. என்ன காரணமென்று தெரியாமல் கலங்கினர் அண்ணன் குடும்பத்தார். தம்பி குடும்பமோ குதூகலத்தில் கொக்கரித்தது. அண்ணன் மனைவி கால் கடுப்பிலேயே செத்தாள். குடும்பத்தின் குலவிளக்கு அணைந்தது. ஒழிந்தது அண்ணன் குடும்பம் என்று சந்தோஷத்தில் மிதந்தது தம்பி குடும்பம். தம்பி மகனுக்கு வந்த மனைவியும் பட்டு நூல்காரனை விடாமல் பிடித்துக் கொண்டாள். விளைவு மேலும் மேலும் அண்ணன் குடும்பத்தில் இழப்புகள். பிரச்சினைகள். அண்ணன் குடும்பம் தவித்தது.

அண்ணன் வீட்டிற்கு ஒரு பாதிரியார் வந்தார். வீட்டின் சனி மூலையிலும், சனி மூலைக்கு நேரெதிர் மூலையிலும் புதைக்கப்பட்டிருந்த பில்லியினை எடுத்து சுடுகாட்டில் வைத்து எரித்தார். பிரச்சினை முடிவுக்கு வந்தது. என்ன காரணமென்று தெரிந்து கொண்டார்கள் அண்ணன் குடும்பத்தார். தம்பி குடும்பத்தார் செய்யும் எந்த மந்திரவாத தொல்லைகளும் தங்களைப் பாதிக்காதவாறு தற்காத்துக் கொண்டார்கள். தம்பி குடும்பத்தார் சோர்ந்து போனார்கள். அண்ணன் குடும்பத்தில் வளர்ச்சி வேகமெடுத்தது.

காலங்கள் உருண்டோடின. பிள்ளைகள் பெரியவர்களானார்கள். அண்ணனுக்கும் தம்பிக்கும் பேரன் பேத்திகள் வந்தார்கள். தம்பி திடீரென நோயில் விழுந்தார். தம்பி மகன், தகப்பனை வீட்டின் வெளியில் இருந்த மரத்தடியில் போட்டான். மலம், நீர் எல்லாம் படுக்கையிலேயே சென்றன. உடம்பில் புண் வைத்து புழு நெளிந்தது. சாப்பாடும் கிடைக்காது. கத்தி கத்தி தொண்டையும் வறண்டு போனது. மருமகளும், மகனும் உதாசீனப் படுத்தினர். மழையிலும், வெயிலிலும் கிடந்து வாடினான் தம்பி. தம்பியின் துயரம் பொறுக்க முடியாமல் தம்பி மகனுக்கும், மனைவிக்கும் தெரியாமல் அண்ணன் சாப்பாடு வாங்கி வந்து போட்டார். தம்பி அழுதான். தம்பியை தன் பராமரிப்பில் விட ஆள் வைத்து தூது விட்டான் அண்ணன். தம்பி மகன் மறுத்து விட்டான். மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும் ஒரு குடையின் கீழ் மரத்தடியில் கிடந்தான் தம்பி. ஊரே பார்த்தது. யாரும் எதுவும் கேட்கவில்லை. இரவுகளில் அழுது புலம்புவான் தம்பி. தம்பி மனைவியை வீட்டை விட்டு அடித்து விரட்டினாள் மருமகள். தம்பியைச் சுற்றிச் சுற்றி வருவான் அண்ணன். ஒரு நாள் உடம்பில் புழுக்கள் அதிகமாக, குடிக்க கஞ்சியின்றி மழையிலும் வெயிலிலும் கிடந்து செத்தான் தம்பி. ஊரே ஒன்று கூடி மலர் படுக்கையில் கிடத்தி சுடுகாட்டில் வைத்து எரித்தார்கள். பலகாரங்கள் சாப்பிட்டார்கள். கறி சமைத்து ஊரே சாப்பிட்டது. தம்பியின் மனைவி ஊரை விட்டு ஒதுங்கி இருந்த ஒரு வீட்டில் கொண்டு போய் கிடத்தப்பட்டாள். நான்கு நாட்களுக்கு ஒருமுறை சாப்பாடு கிடைத்து அவளுக்கு. அவளும் இருட்டறையில் கிடந்து பசியோடு செத்தாள். அவளுக்கும் காரியத்தைச் செய்து முடித்தார்கள். தம்பியின் இழப்புத் தாங்காமல், தம்பி செத்துப் போன ஒரு வருடத்திற்குள் அண்ணனும் செத்துப் போனான்.

தர்மத்தின் தீர்ப்பைப் பார்த்தீர்களா? தர்மம் சூட்சுமமானது தானே? எப்படி சூரியனும் பூமியும் ஒரு வித கணக்கோடு இயங்குகிறதோ அது போல மனிதனின் வாழ்க்கையும் மாயமான கணக்கின் ஒழுங்கோடு இயக்கப்படுகிறது என்பது உண்மையாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா?

குறிப்பு : தர்மம் சூட்சுமமானது எந்த தலைப்பில் வெளிவந்த முதல் பதிவுக்குப் பின் வரும் பதிவுகள் கதைகளாய் எழுதப்பட்டு, இன்றிலிருந்து தலைப்பும் தர்மத்தின் தீர்ப்புக் கதைகளாய் மாறிவிட்டது. படிக்க படிக்க கடவுளின் மீது பற்று ஏற்படுவதாய் கருதினால் அதற்கு நான் பொறுப்பாளி ஆக முடியாது. நடந்ததைச் சொல்கிறேன். இக்கதைகளில் வரும் மாந்தர்கள் அனைவரும் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள். அவர்களின் மூலம் கேட்ட சம்பவங்கள் தான் கதைகளாய் எழுதப்படுகிறது. சம்பவங்களின் உண்மைத் தரத்துக்கு நான் உத்திரவாதம் தர இயலாது. ஒரு வேளை இக்கதைகளின் மாந்தர்கள் சொல்லிய கதைகள் கற்பனையாகக் கூட இருக்கலாம்.

Sunday, December 7, 2008

மேஜிக் செய்வது எப்படி ? மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்

சமீப காலமாக சன் டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவிக்களில் மேஜிக் ஷோக்கள் களைகட்டுகிறது. பார்க்க படு சுவாரஸியமாக இருக்கிறது. இன் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது என் மாமாவும், என் முதுகும் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை. ஏன் அப்படி என்றால், என் சிறு வயதில் என் அப்பா வைத்திருந்த மகேந்திர ஜாலம் புத்தகத்தில் ஒரு மேஜிக் சமாச்சாரம் பற்றி படித்தேன். அதாவது நாயுருவி இலையினை நன்றாக மென்று குதப்பி துப்பிய பின்பு மண்ணை வாயில் போட்டு மெல்லலாம் எனவும், கண்ணாடியைக் கூட கடிக்கலாம் என்று எழுதி இருந்தார்கள். பரீட்சித்துப் பார்க்கலாம் என்று செயலில் இறங்கிய போது அதை எப்படியோ மோப்பம் பிடித்த மாமா என் முதுகில் விளையாடி விட்டார். முதுகில் அடிவாங்கிய பின்பும் தொடர்ந்து பரீட்சையில் இறங்கினால் விளைவுகள் படு மோசமாய் இருக்குமென்பதால் அத்தோடு மறந்து விட்டேன். மேஜிக் நிகழ்ச்சியினைப் பார்க்கும் போதெல்லாம் மாமாவும், என் முதுகும் நினைவுக்கு வருவதை இன்றைக்கும் என்னால் மறக்கமுடியவில்லை.

அந்தப் புத்தகத்தில் இன்னொரு சமாச்சாரம் படித்தேன். வேரில்லாக் கொத்தான் செடி என்று ஒன்று இருக்கிறதாம். அது கள்ளிச் செடிகளின் மேல் கொடி போல படர்ந்து இருக்குமாம். வேர் இருக்காதாம். பின்னே எப்படி பச்சையாக இருக்கிறது என்று கேட்கத் தோன்றும். நடு இரவில் அந்த கொடி பூமியில் புதைந்து கிடக்கும் அதன் வேரான கிழங்கினை நோக்கி திரும்பும் எனவும், அதிலிருந்து தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும் என்று எழுதி இருந்தார்கள். உண்மையா பொய்யா என்பது தெரியவில்லை. இந்த வேரில்லாக் கொத்தானை ஏதாவது எதிர்கள் வீட்டில் சொருகி வைத்து விட்டால் அவ்வீடு குட்டிச்சுவராய் ஆகிவிடும் என்று எழுதி இருந்தனர்.

நிலம்புரண்டி வேர் என்று ஒன்று உண்டாம் இந்தச் செடியின் விசேஷம் என்னவென்றால், புதையலைக் கண்டு பிடிக்க உதவுமாம். காடுகளில் கிடைக்கும் இந்தச் செடி மனித வாடை பட்டதும் பூமிக்குள் மறைந்து விடுமாம். இதைக் கண்டு பிடிக்க தேத்தா மரத்தின் கொட்டைகளை கையில் எடுத்துக் கொண்டு சென்றால், இந்தச் செடி இருக்கும் இடத்தில் தேத்தா மரத்துக் கொட்டைகள் வெடிக்குமாம். இப்படியெல்லாம் ஏதேதோ எழுதி இருந்தது. புலிப்பாணி ஜாலமென்று இன்னுமொரு புத்தகம் கிடைத்தது. படித்தால் தலை கிறு கிறுத்து விடும். அந்த அளவுக்கு படு பயங்கரமாக இருக்கும். தமிழில் இப்படியெல்லாம் புத்தகங்கள் இருக்கிறது என்பது எனக்கு புதிய தகவலாய் இருந்தது.

அந்த வயதில் சுபாவின் நரேந்திரன், வைஜெயந்தி நாவலில் மூழ்கி இருந்த எனக்கு இப்படிப் பட்ட புத்தகங்கள் வேறொரு உலகினை எனக்கு அறிமுகப்படுத்தியது. இப்பதிவின் மூலமாக அந்த உலகத்தையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

புலிப்பாணி ஜாலமென்ற புத்தகத்தில் இருந்து ஒரு பாடலையும், காசு, கார்டு வைத்து எப்படி மேஜிக் செய்வது என்ற வீடியோவினையும் உங்களுக்கு வழங்குகிறேன். படித்தும், பார்த்தும் ரசித்து விட்டு இதைப் போன்றதொரு சம்பவங்கள் உங்கள் வாழ்வில் நடந்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பூசித்தான் வெற்றிலையிற் பொட்டைப் பார்த்தாற்
புவனத்திலுள்ளதெலா முனக்கே தோன்றும்
நேசித்த சேடன்முடி காண்பாய் வைத்த
நிதியான புதையலெலா முன்ன தாமே
பூசித்தே சக்தியின்மா பீஜம் நாட்டிப்
புணர்ப்பான வாயிரத் தெட்டுருவே செய்ய
நேசித்துக் கருணையுடன் வருவளானா
னிதியோடு சூனியந்தர னெடுத்திடாயே


இது அஞ்சன மை தயாரிக்கும் முறை பற்றிய பாடல். அஞ்சன மை என்பது பரவை அஞ்சனம், பாதாள் அஞ்சனம் என்று இரு வகைப்படும். பரவை அஞ்சனமை பூமியிலுள்ள பொருட்களை எல்லாம் காட்டுமாம். பாதாளமென்பது பூமிக்குள் இருக்கும் பொருட்களை எல்லாம் காட்டுமாம்.

வாழ்க்கை படு மர்மமாக இருக்கிறது அல்லவா... ???????

சரி, மேஜிக் ட்ரிக் எப்படி செய்கிறார் என்று பார்த்து முயற்சிக்கவும்.


Saturday, December 6, 2008

தர்மம் சூட்சுமமானது உண்மை நிகழ்ச்சி - 1

எங்கள் ஊரில் மிகப் பெரிய பாடகர் ஒருவர் இருந்தார். ஊரில் நடக்கும் அத்தனை விழாக்களிலும் அவரின் பாடல்கள் நிச்சயம் ஒலிக்கும். சினிமா பாடல்களில் அவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. அவரை வெளி நாட்டு பாடகர்கள் கூட ஒப்பிடுவார்கள். அந்த அளவுக்கு பிரபலமானவர். இவர்கள் பரம்பரையே பாடல் பாடி புகழடைந்தவர்கள். பாடகரின் அப்பாவும் பாடகராக புகழ் பெற்றவர். இவர் கூடப் பிறந்தவர்கள் அனைவரும் பாடுவதில் கில்லாடிகள். தற்போது டிவிக்களில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் கூட பாடகரின் தகப்பனார் கலந்து கொள்வது உண்டு.

இப்படி புகழ் பெற்ற பாடகரிடம் இருக்கும் கெட்ட குணம் - பெண்கள். இவர் பெண்களை வேட்டையாடியது போல வேறு எவரும் செய்திருக்க முடியாது. ஒவ்வொரு மேடைக் கச்சேரியிலும் பாட்டுப் பாடிய பின்னர் அன்றைக்கே கச்சேரி கேட்க வந்த ஏதாவது ஒரு பெண்ணை ஒதுக்கி விடுவார். முதலில் கல்யாணமென்று தான் பேச்செடுப்பாராம். அவர் குரலுக்கு மயங்கிய அந்தப் பெண்ணும் விரைவில் அவரிடம் மயங்கி கிடப்பாள். அவளைத் தன் கைக்குள்ளேயே வைத்திருந்து காரியம் பார்ப்பதற்காக அடுத்த மேடைக் கச்சேரியில் நீதான் என்னுடன் பாட இருக்கிறாய் என்று சத்தியம் செய்வாராம். காரியம் முடிந்ததும் மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு புறப்பட்டு விடுவாராம். மஞ்சள் கலர் என்றால் பாடகருக்கு ரொம்பவும் இஸ்டமாம். மஞ்சள் கலரில் எந்தப் பெண்ணையாவது பார்த்தால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை முடிந்தது. உறிஞ்சி விடுவாராம். பாட்டுச் சொல்லிக் கொடுக்கிறேன் பேர்வழி என்று பாடகிகளை பெட்ரூமில் பெண்டு நிமிர்த்தி விடுவாராம். சரியாக அந்த சமாச்சாரத்திற்கு ஒத்துழைக்காத பாடகிகளை சுருதி சரியில்லை தாளம் சரியில்லை என்று ஒத்திகையின் போதே மானத்தை கப்பலேற்றி விடுவாராம். வேறு வழியின்றி பாடகிகளும் அந்தச் சமாச்சாரத்துக்கு சம்மதம் தெரிவிப்பார்களாம். இப்படி இவரால் குத்திக் குதறப்பட்ட பாடகிகள் எத்தனையோ பேராம்.

ஏமாற்றி விட்டாய், அது இதுவென்று அழுது புரண்டு அழிச்சாட்டியம் செய்தால் அந்தப் பெண்ணின் மீது அபாண்டமாகக் குற்றச்சாட்டு சொல்லியும், ஊரில் அவருக்கு இருக்கும் செல்வாக்கினால் அந்தப் பெண்ணைப் பற்றிய பொய்யான புரளியை பரவ விட்டும் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு செய்து விடுவாராம். வேறு எங்குமே கச்சேரி கிடைக்க விடாமல் வேறு செய்து விடுவாராம். இப்படி அவரால் ஏமாற்றப்பட்ட பெண்களின் எண்ணிக்கை பற்றி கணக்கெடுத்து சொல்ல முடியாதாம்.

இவரின் இந்த அழிச்சாட்டியம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கசிய கசிய, அவரின் மீதான க்ரேஸ் குறைந்து அவரை மேடைகளில் பாட அழைப்பது குறைந்தது. பார்த்தார். இனி இப்படியே போனால் பிழைக்க முடியாது என்று விவசாயத்தில் இறங்கினார். விவசாயத்தில் அவருக்கு ஓரளவுக்கு லாபம் கிடைத்ததாக சொன்னார்கள். இந்த நிலையில் அவருக்கு முன்பே கலியாணமும் ஆகியிருந்தது. மூன்று பிள்ளைகள் வேறு. முதல் பிள்ளை பிறந்தவுடன் தான் அவருக்கு அதிர்ஷடம் அடித்ததாகச் அவரே சொல்வாராம். அந்தப் பிள்ளைக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்திருக்கிறது. எங்கெங்கோ சிகிச்சைகள் எடுத்தார்கள். பாடகர் தன் முதன் மகன் மீது அளவற்ற பாசம் கொண்டவராம். இந்த மஞ்சள் காமாலையினை எவராலும் சரி செய்ய இயலாதாம். அதனால் பாடகரின் மகன் அற்ப ஆயுளில் உயிரை விட்டிருக்கிறார். ஆள் பித்துப் பிடித்தது போல ஆகிவிட்டாராம். நான் என்ன செய்தேன்? எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகிறது என்று அழுது புலம்புகிறாராம்.

பெண்களின் பாவம் பொல்லாதது என்பார்கள். அதுவும் மஞ்சள் கலர் பெண்கள் என்றால் பாடகருக்கு கொள்ளை ஆசையாம். இவரின் பையனுக்கு வந்த்தோ மஞ்சள் காமாலை நோய். விதியின் விளையாட்டைப் பார்த்தீர்களா?

தர்மம் சூட்சுமமானது தானே ?????

குறிப்பு : இந்தக் கதை முற்றிலும் கற்பனையானது என்பதால் படிக்க சுவாரசியமாய் இருக்கும் பொருட்டு “உண்மை” என்ற பதம் தலைப்பில் சேர்க்கப்பட்டது.

Friday, December 5, 2008

சின்னப்பயலே சின்னப்பயலே

எம்ஜியாருக்காக பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பாடல். எனது ஊருக்கு அருகில் இருக்கிறது இந்தப் பட்டுக்கோட்டை. கல்யாண சுந்தரத்துக்கு சாலையின் முக்கில் ஒரு சிலையுமுண்டு. என் மகன் என்னிடம் கேட்டான் ” யாரப்பா அவரு” பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம் என்றேன். அவரின் பாடல் நினைவுக்கு வந்தது.

கம்யூனிச தத்துவம் இப்பாடலில் அங்குமிங்கும் வெளிப்படுகிறது. இன்றையக் கால கட்டத்தில் கம்யூனிச தத்துவமெல்லாம் எடுபடுமா என்ன ???

ஒரு பக்கம் உல்லாசத்தின் உச்சகட்டத்தை அனுபவிக்கும் மனிதர்கள்
மறு பக்கம் ஒரு வேளை சோற்றுக்கும் வழியில்லா தவிக்கும் மனிதர்கள்.



ஒருவன் மனதில் ஒன்பதடா...

மனிதனின் மனம் இருக்கிறதே, அதனால் செய்ய இயலாத காரியம் என்று ஒன்று இருக்கிறதா என்ன? அந்த அளவுக்கு வலிமை வாய்ந்த மனம் பற்றிய பாடல் இது என்பதால் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

ஒவ்வொரு மனிதனின் மனதில் மறைந்து கிடக்கும் மர்மங்கள் எவ்வளவோ ???????

Friday, November 28, 2008

ராதையின் காதல் வலி

ஒரு நாள் காதலியைக் காணவில்லை. வருவாள் வருவாள் என்று காத்திருந்தேன். காணவில்லை. அவளின் தங்கையையும் காணவில்லை. எனக்குள் ஏதோ ஒன்று உடைந்தது போல உணர்ந்தேன். கலீல் ஜிப்ரானின் கவிதைகளை படித்து மனதினை தேற்றிக் கொள்வேன். இருந்தாலும் மனசு கேட்காது. எப்போது தான் வருவாளோ என்று பிரவச வலியால் துடிக்கும் பெண்ணைப் போல மனசு துடித்துக் கொண்டிருந்தது. என் நண்பன், நான் படும் வேதனையைக் காணச் சகிக்காமல் அழுதான். ஏனடா, இப்படி உன்னையே சாகடித்துக் கொள்கிறாய் என்று கண்ணீர் சிந்தினான்.

” இறந்த பிறகும் என் கண்கள் திறந்தே இருக்கும்
ஏனென்றால் இன்னும் உனக்காக காத்திருக்கிறேன் “

என்ற கலீல் ஜிப்ரானின் கவிதை வரிகளை அவனிடம் சொன்னேன். ஜெயதேவர் கண்ணனின் காதலி ராதை கண்ணனைப் பார்க்க இயலாமல் காதல் பிரிவில் படும் வேதனையை பாடலாக எழுதி இருப்பார். கண்ணதாசனின் வரிகளில் வழிந்தோடும் ராதையின் காதல் பிரிவின் வலிகள் நான் படும் துயரத்தின் வலியை விட சுமாராகத்தான் இருந்தது.

காதலிக்காக காதலன் பாடும் பாடல் என்று இந்தப் பாடலை எடுத்துக் கொள்ளுங்களேன்.


காதலிக்கும் போது கேட்ட பாடல்

நான் ஒரு காலத்தில் எனது வகுப்புத் தோழியுடன் காதல் வயப்பட்டிருந்தேன். எனக்கும் அவளுக்கும் காதல் தூது தோழியின் தங்கை. தோழி சுமாராகத்தான் இருப்பாள். ஆனால் இவள் தங்கையோ அழகு என்றால் அப்படி ஒரு அழகு. தேவதை போலவே இருப்பாள். உடல்வாகும், நடையும், முகமும் அவ்வளவு லடசணமாக இருக்கும்.

என் மீது கொள்ளைப் பிரியம் வைத்திருந்தாள். ஆனால் நான் தான் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டேன். எனக்கு மகன் பிறந்த பின்னர் எனது உறவினர் வீட்டுக்கு மகனுடன் சென்றேன். என் மனைவி மகனுக்குச் சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த போது தோழியின் தங்கை என் மனைவியிடம் சொன்னது “ இவன் என் வயிற்றில் இருந்து பிறக்க வேண்டியவன், எங்கோ பிறந்திருக்கிறான்”. என் மனைவி என்னிடம் வந்து சொன்னாள். அப்படியா சொன்னாள் என்று சொல்லிச் சிரித்து வைத்தேன்.

தோழியுடன் காதல் வயப்பட்டிருந்த போது அவளின் சிரிப்புக்காக நாள் முழுதும் தவமிருப்பேன். அந்த நேரங்களில் இந்தப் பாடலைத்தான் அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பேன். நீங்களும் கேட்டுப் பாருங்களேன்.