குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, December 6, 2008

தர்மம் சூட்சுமமானது உண்மை நிகழ்ச்சி - 1

எங்கள் ஊரில் மிகப் பெரிய பாடகர் ஒருவர் இருந்தார். ஊரில் நடக்கும் அத்தனை விழாக்களிலும் அவரின் பாடல்கள் நிச்சயம் ஒலிக்கும். சினிமா பாடல்களில் அவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. அவரை வெளி நாட்டு பாடகர்கள் கூட ஒப்பிடுவார்கள். அந்த அளவுக்கு பிரபலமானவர். இவர்கள் பரம்பரையே பாடல் பாடி புகழடைந்தவர்கள். பாடகரின் அப்பாவும் பாடகராக புகழ் பெற்றவர். இவர் கூடப் பிறந்தவர்கள் அனைவரும் பாடுவதில் கில்லாடிகள். தற்போது டிவிக்களில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் கூட பாடகரின் தகப்பனார் கலந்து கொள்வது உண்டு.

இப்படி புகழ் பெற்ற பாடகரிடம் இருக்கும் கெட்ட குணம் - பெண்கள். இவர் பெண்களை வேட்டையாடியது போல வேறு எவரும் செய்திருக்க முடியாது. ஒவ்வொரு மேடைக் கச்சேரியிலும் பாட்டுப் பாடிய பின்னர் அன்றைக்கே கச்சேரி கேட்க வந்த ஏதாவது ஒரு பெண்ணை ஒதுக்கி விடுவார். முதலில் கல்யாணமென்று தான் பேச்செடுப்பாராம். அவர் குரலுக்கு மயங்கிய அந்தப் பெண்ணும் விரைவில் அவரிடம் மயங்கி கிடப்பாள். அவளைத் தன் கைக்குள்ளேயே வைத்திருந்து காரியம் பார்ப்பதற்காக அடுத்த மேடைக் கச்சேரியில் நீதான் என்னுடன் பாட இருக்கிறாய் என்று சத்தியம் செய்வாராம். காரியம் முடிந்ததும் மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு புறப்பட்டு விடுவாராம். மஞ்சள் கலர் என்றால் பாடகருக்கு ரொம்பவும் இஸ்டமாம். மஞ்சள் கலரில் எந்தப் பெண்ணையாவது பார்த்தால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை முடிந்தது. உறிஞ்சி விடுவாராம். பாட்டுச் சொல்லிக் கொடுக்கிறேன் பேர்வழி என்று பாடகிகளை பெட்ரூமில் பெண்டு நிமிர்த்தி விடுவாராம். சரியாக அந்த சமாச்சாரத்திற்கு ஒத்துழைக்காத பாடகிகளை சுருதி சரியில்லை தாளம் சரியில்லை என்று ஒத்திகையின் போதே மானத்தை கப்பலேற்றி விடுவாராம். வேறு வழியின்றி பாடகிகளும் அந்தச் சமாச்சாரத்துக்கு சம்மதம் தெரிவிப்பார்களாம். இப்படி இவரால் குத்திக் குதறப்பட்ட பாடகிகள் எத்தனையோ பேராம்.

ஏமாற்றி விட்டாய், அது இதுவென்று அழுது புரண்டு அழிச்சாட்டியம் செய்தால் அந்தப் பெண்ணின் மீது அபாண்டமாகக் குற்றச்சாட்டு சொல்லியும், ஊரில் அவருக்கு இருக்கும் செல்வாக்கினால் அந்தப் பெண்ணைப் பற்றிய பொய்யான புரளியை பரவ விட்டும் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு செய்து விடுவாராம். வேறு எங்குமே கச்சேரி கிடைக்க விடாமல் வேறு செய்து விடுவாராம். இப்படி அவரால் ஏமாற்றப்பட்ட பெண்களின் எண்ணிக்கை பற்றி கணக்கெடுத்து சொல்ல முடியாதாம்.

இவரின் இந்த அழிச்சாட்டியம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கசிய கசிய, அவரின் மீதான க்ரேஸ் குறைந்து அவரை மேடைகளில் பாட அழைப்பது குறைந்தது. பார்த்தார். இனி இப்படியே போனால் பிழைக்க முடியாது என்று விவசாயத்தில் இறங்கினார். விவசாயத்தில் அவருக்கு ஓரளவுக்கு லாபம் கிடைத்ததாக சொன்னார்கள். இந்த நிலையில் அவருக்கு முன்பே கலியாணமும் ஆகியிருந்தது. மூன்று பிள்ளைகள் வேறு. முதல் பிள்ளை பிறந்தவுடன் தான் அவருக்கு அதிர்ஷடம் அடித்ததாகச் அவரே சொல்வாராம். அந்தப் பிள்ளைக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்திருக்கிறது. எங்கெங்கோ சிகிச்சைகள் எடுத்தார்கள். பாடகர் தன் முதன் மகன் மீது அளவற்ற பாசம் கொண்டவராம். இந்த மஞ்சள் காமாலையினை எவராலும் சரி செய்ய இயலாதாம். அதனால் பாடகரின் மகன் அற்ப ஆயுளில் உயிரை விட்டிருக்கிறார். ஆள் பித்துப் பிடித்தது போல ஆகிவிட்டாராம். நான் என்ன செய்தேன்? எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகிறது என்று அழுது புலம்புகிறாராம்.

பெண்களின் பாவம் பொல்லாதது என்பார்கள். அதுவும் மஞ்சள் கலர் பெண்கள் என்றால் பாடகருக்கு கொள்ளை ஆசையாம். இவரின் பையனுக்கு வந்த்தோ மஞ்சள் காமாலை நோய். விதியின் விளையாட்டைப் பார்த்தீர்களா?

தர்மம் சூட்சுமமானது தானே ?????

குறிப்பு : இந்தக் கதை முற்றிலும் கற்பனையானது என்பதால் படிக்க சுவாரசியமாய் இருக்கும் பொருட்டு “உண்மை” என்ற பதம் தலைப்பில் சேர்க்கப்பட்டது.

Friday, December 5, 2008

சின்னப்பயலே சின்னப்பயலே

எம்ஜியாருக்காக பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பாடல். எனது ஊருக்கு அருகில் இருக்கிறது இந்தப் பட்டுக்கோட்டை. கல்யாண சுந்தரத்துக்கு சாலையின் முக்கில் ஒரு சிலையுமுண்டு. என் மகன் என்னிடம் கேட்டான் ” யாரப்பா அவரு” பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம் என்றேன். அவரின் பாடல் நினைவுக்கு வந்தது.

கம்யூனிச தத்துவம் இப்பாடலில் அங்குமிங்கும் வெளிப்படுகிறது. இன்றையக் கால கட்டத்தில் கம்யூனிச தத்துவமெல்லாம் எடுபடுமா என்ன ???

ஒரு பக்கம் உல்லாசத்தின் உச்சகட்டத்தை அனுபவிக்கும் மனிதர்கள்
மறு பக்கம் ஒரு வேளை சோற்றுக்கும் வழியில்லா தவிக்கும் மனிதர்கள்.



ஒருவன் மனதில் ஒன்பதடா...

மனிதனின் மனம் இருக்கிறதே, அதனால் செய்ய இயலாத காரியம் என்று ஒன்று இருக்கிறதா என்ன? அந்த அளவுக்கு வலிமை வாய்ந்த மனம் பற்றிய பாடல் இது என்பதால் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

ஒவ்வொரு மனிதனின் மனதில் மறைந்து கிடக்கும் மர்மங்கள் எவ்வளவோ ???????

Friday, November 28, 2008

ராதையின் காதல் வலி

ஒரு நாள் காதலியைக் காணவில்லை. வருவாள் வருவாள் என்று காத்திருந்தேன். காணவில்லை. அவளின் தங்கையையும் காணவில்லை. எனக்குள் ஏதோ ஒன்று உடைந்தது போல உணர்ந்தேன். கலீல் ஜிப்ரானின் கவிதைகளை படித்து மனதினை தேற்றிக் கொள்வேன். இருந்தாலும் மனசு கேட்காது. எப்போது தான் வருவாளோ என்று பிரவச வலியால் துடிக்கும் பெண்ணைப் போல மனசு துடித்துக் கொண்டிருந்தது. என் நண்பன், நான் படும் வேதனையைக் காணச் சகிக்காமல் அழுதான். ஏனடா, இப்படி உன்னையே சாகடித்துக் கொள்கிறாய் என்று கண்ணீர் சிந்தினான்.

” இறந்த பிறகும் என் கண்கள் திறந்தே இருக்கும்
ஏனென்றால் இன்னும் உனக்காக காத்திருக்கிறேன் “

என்ற கலீல் ஜிப்ரானின் கவிதை வரிகளை அவனிடம் சொன்னேன். ஜெயதேவர் கண்ணனின் காதலி ராதை கண்ணனைப் பார்க்க இயலாமல் காதல் பிரிவில் படும் வேதனையை பாடலாக எழுதி இருப்பார். கண்ணதாசனின் வரிகளில் வழிந்தோடும் ராதையின் காதல் பிரிவின் வலிகள் நான் படும் துயரத்தின் வலியை விட சுமாராகத்தான் இருந்தது.

காதலிக்காக காதலன் பாடும் பாடல் என்று இந்தப் பாடலை எடுத்துக் கொள்ளுங்களேன்.


காதலிக்கும் போது கேட்ட பாடல்

நான் ஒரு காலத்தில் எனது வகுப்புத் தோழியுடன் காதல் வயப்பட்டிருந்தேன். எனக்கும் அவளுக்கும் காதல் தூது தோழியின் தங்கை. தோழி சுமாராகத்தான் இருப்பாள். ஆனால் இவள் தங்கையோ அழகு என்றால் அப்படி ஒரு அழகு. தேவதை போலவே இருப்பாள். உடல்வாகும், நடையும், முகமும் அவ்வளவு லடசணமாக இருக்கும்.

என் மீது கொள்ளைப் பிரியம் வைத்திருந்தாள். ஆனால் நான் தான் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டேன். எனக்கு மகன் பிறந்த பின்னர் எனது உறவினர் வீட்டுக்கு மகனுடன் சென்றேன். என் மனைவி மகனுக்குச் சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த போது தோழியின் தங்கை என் மனைவியிடம் சொன்னது “ இவன் என் வயிற்றில் இருந்து பிறக்க வேண்டியவன், எங்கோ பிறந்திருக்கிறான்”. என் மனைவி என்னிடம் வந்து சொன்னாள். அப்படியா சொன்னாள் என்று சொல்லிச் சிரித்து வைத்தேன்.

தோழியுடன் காதல் வயப்பட்டிருந்த போது அவளின் சிரிப்புக்காக நாள் முழுதும் தவமிருப்பேன். அந்த நேரங்களில் இந்தப் பாடலைத்தான் அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பேன். நீங்களும் கேட்டுப் பாருங்களேன்.

Monday, November 24, 2008

சாட்டிலைட் இன்டர்நெட்

நிமிடத்தில் கண்டம் விட்டு கண்டம் தகவல்கள் பரிமாறவும், இருந்த இடத்திலிருந்தே விரும்பக்கூடிய தகவல்களைப் பெறவும், மற்ற இன்னபிற வசதிகளையும் இன்டர்நெட் மூலம் இன்றைய உலக மாந்தர்கள் அனுபவித்து வருகிறார்கள். வளர்ந்த நகரங்களில் எளிதாக பிராட்பேண்ட் அகலக்கற்றை, டயலப் மூலம் இண்டர் நெட்டினைப் பயன்படுத்தலாம். ஆனால் டெலிபோனோ அல்லது செல்போனோ வயர்களோ செல்லாத ரூரல் ஏரியாக்களில் எப்படி இணையத்தை பயன்படுத்துவது ? காட்டுக்குள் செல்ல வேண்டுமென்ற சூழ் நிலையில் அங்கிருந்து எப்படி இணைய உலகில் தொடர்பு பெற முடியும் ? அதற்கும் வழி இருக்கிறது. சாட்டிலைட் மூலம் இணைய இணைப்பைப் பெறுவதன் பெயர் தான் சாட்டிலைட் இன்டர்நெட். ஹாலிவுட் சினிமாக்களில் பார்த்திருப்பீர்கள். லேப்டாப்பை வைத்துக் கொண்டு என்னென்னவோ செய்து கொண்டிருப்பார்கள். எங்கோ ஒரு அத்துவானக் காட்டிலிருந்து கொண்டு இமெயில் அனுப்பிக் கொண்டிருப்பார்கள். அதெல்லாம் எப்படிச் சாத்தியமென்று என்றாவது யோசித்துப் பார்த்திருக்கின்றீர்களா ? எப்படி செயல்படுகிறது என்பதனை இப்பதிவில் படித்துப் பாருங்கள்.

இணைப்புக்கு தேவையானவை : இரண்டு அல்லது மூன்றடி அகலமுள்ள டிஷ் ஆண்டனா, சிக்னல் ரிசீவர், மோடம் மற்றும் கோயாக்சில் கேபிள். இவை தான் சாட்டிலைட் மூலம் இணைய வசதி பெறத் தேவையானவை.

கருவிகளைப் பொறுத்துவது எப்படி : டிஷ் ஆண்டனாவை (சரியான திசையில் பொறுத்த வேண்டும்) சர்வீஸ் புரவைடரின் சாட்டிலைட்டின் சிக்னல் பெறும் வகையில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். கோயாக்ஸில் கேபிள் மூலம் சர்வீஸ் புரவைடர் தரும் மோடத்தை டிஸ் ஆண்டனாவில் பொருத்தப்பட்ட ரிசீவருடன் இணைக்க வேண்டும். மோடத்திலிருந்து ஈதர்னெட் மூலம் கணிப்பொறியில் இணைக்க வேண்டும். கணிப்பொறியில் டிசிபிஐபி வசதி இருக்க வேண்டும். விண்டோஸ் ஆபரேட்டிங்க் சிஸ்டம் இருந்தால் போதும்.

எப்படிச் செயல்படுகிறது : கணிப்பொறியிலிருந்து வரும் சிக்னல் ஆண்டனாவிலிருந்து நேரடியாக சாட்டிலைட்டுக்கு அனுப்பப்படும். சாட்டிலைட் சர்வீஸ் புரவைடரின் ஹப் செண்டருடன் தொடர்பில் இருக்கும். இந்த ஹப் செண்டர் இண்டர்னெட்டுடன் தொடர்பில் இருப்பதால் பயன்படுத்துவோரிடமிருந்து வரும் வேண்டுகோளுக்கேற்ப தேவைப்படும் தகவல்களை பெற்று சாட்டிலைட்டுக்கு அனுப்பி வைக்கும். சாட்டிலைட்டிலிருந்து கணிப்பொறிக்கு தகவல்கள் அளிக்கப்படும். இங்கு சாட்டிலைட், ஹப் செண்டர்கள் கேட்வேயாகச் செயல்படும்.

அமெரிக்காவில் இந்த சர்வீசைத் தருவதற்கு கம்பெனிகள் இருக்கின்றன. மாதமொன்றுக்கு நான்காயிரம் ரூபாயும், மேற்படி பொருட்களை நிறுவவும் வருடத்திற்குமாக மொத்தம் கிட்டத்தட்ட 15,000 ரூபாயும் செலவாகும். தற்பொழுது ஒரு எம்பி அளவுக்கு டவுன்லோட் ஸ்பீட் வசதியும், 126 கேபி அளவுக்கு அப்லோடு வசதியும் தருகிறார்கள். இந்தியாவில் இருக்கிறதா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் படிக்கும் வாசகர்கள் தகவல்கள் தரலாம்.

Sunday, November 23, 2008

இறைவனும் ரித்திக்நந்தாவும்

காதல் திருமணம். வீட்டை விட்டு என்னுடன் வந்து விட்டார் மனைவி. தாலி கட்டிய பின்னர் காவல்துறையில் தஞ்சம் அடைந்து, சுற்றத்தாரின் புறக்கணிப்பெல்லாம் சமாளித்து இரு மாதங்களுக்குப் பிறகு எனது உறவினர் வீட்டில் விட்டு விட்டு தொழிலை கவனிப்பதற்காக சென்று விட்டேன்.

மனைவி வயிற்றில் என் வாரிசு ரித்திக் நந்தா. மனைவிக்கு தங்கிய இடம் புதுசு. புது உறவுகள். மூன்று மாடி வீட்டில் செல்லக் குழந்தையாய், துள்ளித் திரியும் மானாய் வளர்ந்தவள். உயர்தர பொன்னி அரிசி சாப்பிட்டு, பஞ்சு மெத்தையில், மின் விசிறி கீழே உறங்கியவள். எனக்காக எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு வந்தாள். அவள் பிறந்த நாளுக்கு வாங்கிக் கொடுத்த ஒரு சுடிதார். காதில் ஒரு இரண்டு கிராமில் தோடு ஒன்று.
என் உறவினர் வீட்டில் ஒரு மாதம் தங்கியிருந்தாள். நித்தம் வாந்தி. சாப்பாடு பிடிக்கவில்லை. கொட்டை அரிசி சாப்பாடு. எல்லாம் புதுசு. பெரும்பாலும் பட்டினிதான் கிடப்பாள். விடிகாலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு பசி எடுக்குமாம். என்னவளுக்கும் பசி. ஆனால் உறவினர் வீட்டிலோ ஒன்பது மணிக்கு தான் சாப்பாடு கிடைக்கும். வெளியில் சொல்லவும் பயம். மார்கழி மாதம் அது. என் மனைவி தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் ஒரு சிவன் கோவில். அங்கு மார்கழி மாதம் வந்தால் தினமும் விடிகாலையில் பஜனை செய்வார்கள். தேவாரம், திருவாசகம், வள்ளலார் பாடல்கள் பாடுவார்கள். பஜனை முடிந்ததும் குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் சுண்டல் தருவார்கள். நான் சிறு வயதில் பள்ளியில் படிக்கும் காலத்தில் அந்தக் கோவில் சிவபெருமானை தினமும் சந்தித்து சிறிது நேரம் ஏதாவது பேசி விட்டு, கும்பிட்டு வருவேன்.





விடிகாலையில் என் மனைவிக்கு பசி வந்து விடும். பசியால் சுருண்டு விடுவாள். அவள் தங்கியிருந்த எனது உறவினரின் பையன் தினமும் கோவிலுக்கு சென்று விட்டு, வரும் போது பொங்கலை வாங்கி வந்து தருவான். அவன் வரும் வரை பசியோடு பாட்டு எப்போ முடியும் என்று பாட்டை கேட்டபடியே காத்து இருப்பாள். அந்த பொங்கலை சாப்பிட்டு என் மனைவி பசி ஆறுவாள்.

இதை நேரில் சந்தித்தபோது என்னிடம் சோகமாக சொல்லுவாள். மகன் பிறந்து என் சொந்த ஊருக்குச் செல்லும் வழியில் சிவபெருமான் கோவிலைப் பார்த்தால் என் தகப்பனின் நினைவு தான் வரும். வயிற்றில் இருந்த என் மகனுக்காக சாப்பாட்டை அனுப்பி வைத்த சிவபெருமானின் அருளை நினைத்து நினைத்து பெருமிதம் கொள்வேன். எனக்கு கடவுள் ஆசி உண்டு அல்லவா.

திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்பார்கள். என் விசயத்தில் அதுதான் நடந்தது. கர்ப்ப காலத்தில் என் மனைவிக்கு சாப்பாடு கொடுத்தது தெய்வம். பசி அறிந்து உதவி செய்தது தெய்வம்.

ஆகவே நண்பர்களே தெய்வத்திடம் வேண்டுங்கள். நமக்கு வேண்டியதை தரும் கற்பக விருட்சம் அது. எப்படியாவது யார்மூலமாவது உதவி செய்ய அனுப்பிவிடும். தொலைபேசி இல்லா காவல்காரர் அவர். சேவைக்கு கட்டணம் வசூலிக்காதவர் அவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவர் அவர். எண்ணற்ற பேண்டு வித் கற்றையை உடையவர். எத்தனை கோடி பேர் வேண்டுமென்றாலும் ஒரே நேரத்தில் ஆக்சஸ் செய்யலாம் அவரின் உள்ளத்தை. அவரின் உள்ளத்தில் உமது அழைப்பை பதிவு செய்தால், ஓடோடி வருவார் உதவி செய்ய. அதற்கு தேவை உமது உள்ளத்தை அவரின் உள்ளத்தோடு இணைக்க வைக்கவேண்டியது மட்டும் தான். இதற்கு மாத வாடகை தேவையில்லை. இலவசம் அவனை அழைப்பதற்கு. அவுட்கோயிங்கும் இலவசம். இன்கமிங்கும் இலவசம். முக்கியமாக ஹேன்ட் செட் அது கலராகவோ அல்லது பிளாக்காவோ இருக்க தேவையே இல்லை.

அவர் நமக்கு ஒரு உகந்த ஒரு தோழன். அவரிடம் ரகசியத்தை சொன்னால் அது தான் ரகசியம். சாவி இல்லாத பெட்டகம் வைத்து இருக்கின்றார். நம்மை தவிர வேறு எவரும் அந்த ரகசிய பெட்டகத்தை திறக்க முடியாது. அழையுங்கள் ஓடோடி வருவார். நாம் எப்போது அழைப்போம் என்று காத்து இருக்கிறார் அவர்...

Wednesday, November 19, 2008

சொர்க்கமே என்றாலும்....

இப்பாடலை எனது மனம் கவர்ந்த பதிவர் ஒருவருக்காக இங்கு பதிவிடுகிறேன்.




அனானிமஸின் கமெண்ட்ஸ்சுக்காக பழைய போட்டோவை இணைத்துள்ளேன். இந்த போட்டோவில் ஒரு விஷயமிருக்கிறது. என் மனைவியால் மூன்று வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் இது. எனது புகைப்படங்களிலேயே இது தான் அழகாய் இருப்பதாக அவளிடம் சொல்வேன். அதற்கு அவளின் பதில் : கணவர் எந்த போஸில் அழகாய் இருப்பார் என்று மனைவிக்குத் தான் தெரியும்.

Tuesday, November 18, 2008

நடமாடும் தெய்வங்கள்

இன்று காலையில் வீட்டுக்கு வெளியே ஜீப் சத்தம் கேட்டது.

” என்னம்மா சத்தம் ? “
“ மூன்று மாத பிள்ளையை கொன்று போட்டிருக்கிறார்களாம்” என்றார் மனைவி.
“ என்ன ? “
“ ஆமாங்க.. யாருன்னு தெரியலை. போலீஸ் வந்திருக்காங்க” என்றார் மனைவி

பொக்கை வாய்ச் சிரிப்பும், பிஞ்சு விரல்களும், பால் வழியும் வாயோடு சிரிக்கும் குழந்தையையா கொன்று இருக்கிறார்கள்.
பிஞ்சுப் பாதங்களால் நெஞ்சில் உதைத்தால் பிறவிப்பயன் நிறைவேறுமே. நடமாடும் இயற்கையின் அற்புதமல்லவா குழந்தை. இறைவனின் படைப்பில் உயிரோடு மானிடருக்கு கிடைக்கும் சொர்க்கமல்லவா குழந்தை. வீட்டுக்கு வரும் நடமாடும் கடவுள்தானே குழந்தைகள்.....

நெஞ்சம் கனத்து, கண்ணீரில் நனைந்தது கண்கள்.

பிள்ளை இல்லா அன்னை ஒருத்தியின் குரலில் வெளிப்படும் வேதனையினைக் கவனியுங்கள்.

பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று
காய்க்காத மரத்தடியில் தேனாறு பாயுதடா
கனிந்த விட்ட சின்ன மரம் கண்ணீரில் வாடுதடா
கண்ணீரில் வாடுதடா....

பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று

பெற்றெடுக்க மனமிருந்தும் பிள்ளைக்கனி இல்லை
பெற்றெடுத்த மரக்கிளைக்கு மற்ற சுகம் இல்லை
சுற்றமென்னும் பறவையெல்லாம் குடியிருக்கும் வீட்டில்
தொட்டில் கட்டி தாலாட்டும் பேரு மட்டும் இல்லை
பேரு மட்டும் இல்லை

பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று

வேண்டுமென்று கேட்பவருக்கு இல்லை இல்லை என்பார்
வெறுப்பவருக்கும் மறுப்பவருக்கும் அள்ளி அள்ளித் தருவார்
ஆண்டவனார் திருவுள்ளத்தை யாரறிந்தார் கண்ணே
யார் வயிற்றில் யார் பிறப்பார் யார் அறிவார் கண்ணே
யார் அறிவார் கண்ணே

பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று

* * * * *

எப்படியடா உங்களுக்கு இப்படியெல்லாம் செய்ய முடிகிறது. பாவிகளா... பாவிகளா....

துள்ளுமிசைப் பாடல் : நான்ஸி அஜ்ரமின் காந்தக் குரலில்



ஹாட்சாட், லெபனான் பாப் பாடகி நான்ஸி அஜ்ரமின் குரல் - பாடலைக் கேட்டால் மனசு ஆற்றிலிருந்து வெளியே குதித்த மீனாய் துள்ளித் துள்ளி குதிக்கும்.

உடம்பிலொரு மின்சார உணர்ச்சி கிளம்பி தலை முதல் கால்வரை கிறுகிறுக்க வைத்து விடும்.

டயல் அப் வாசகர்களுக்காக எம்பிதிரி வடிவில் கேட்டு மகிழுங்கள்.