குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, August 21, 2008

எனக்குப் பிடித்த பாடலின் வீடியோ - 4

அவள் உயிர் பெற்று வந்த பிரம்மனின் படைப்புகளின் உன்னதம். அவள் சிரித்தால் பார்ப்பவனுக்குள் பூகம்பம் உண்டாகும். சில்லென்று ஒரு குளிர்ச்சி உடல் முழுதும் பரவும். சடக்கென்று மனசு அமைதி பெறும். அழகு என்பது இவளா. இல்லை இவள் தான் அழகா. இரண்டுக்கும் வேறுபாடு சொல்ல இயலாது மனிதனால். அப்படி ஒரு தேவதை. அவளுக்கு ஒரு தங்கை.

ஆண்மகன் அவன். அழகு திருமகன். இவனுக்கு ஒரு அண்ணன். இருவரும் பெண்பார்க்கச் செல்வார்கள். அக்கா தம்பியை நோக்குவாள். தம்பியும் அப்படியே. அந்தப் பார்வையின் அர்த்தம் காதல். இதைத் தான் கம்பனும் கவி பாடியிருப்பானோ ? பார்வையில் காதலைப் பறிமாறும் அந்த உள்ளங்கள் தவித்துப் போகின்றன. ஏன்... அது தான் விதி என்பார்கள் மனிதர்கள். மனிதனால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகளின் பாதையில் அண்ணன் அக்காவையும், தம்பி தங்கையையும் மணக்க நேரிடுகிறது.

அண்ணன் இறந்து விடுகிறான். அக்கா விதவையாகிறாள். ஒரு குளிர்காலப் பொழுதில் மழை கொட்டுகிறது. இவனும் அவளும் தனிமையில் சந்திக்கும்படி நேர்கிறது. அவள் மனதில் விளையும் உணர்வுகளின் தொகுப்பு இது...

பாடலா இது... வாழ்க்கையின் கோரங்களைச் சொல்லும் பாடல் இது. விதவைப் பெண்ணின் தவிப்பை கொட்டி எழுதப்பட்ட பாடல். கேட்கும் என் மனதை உள்ளுக்குள் அழவைக்கும் இந்தப் பாடல். சோகத்திலும் சுகம் இருக்கத்தானே செய்கிறது.


எனக்குப் பிடித்த பாடலின் வீடியோ -3

சத்ரியன் படத்தில் பானுபிரியா நடித்த இந்தப் பாடலைக் கேட்கும் போது மனசு லேசாகி விடும். மிகவும் அருமையான பாடல் இது.

எனக்குப் பிடித்த பாடலின் வீடியோ - 2

இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் மனசு துள்ளி விளையாடும். என்றும் இனிமை தரும் பாடல்


எனக்குப் பிடித்த பாடலின் வீடியோ - 1

ஆகாய கங்கை - இளையராஜாவின் இன்னிசையில் எப்போது வேண்டுமானாலும் கேட்க தூண்டும் பாடல் இது.

Wednesday, August 20, 2008

நான் என்ன செய்ய பகுதி 2ல் முதற்பகுதி

இரவு நேரம். மணி பத்து இருக்கும். அப்போது ” சார் உங்களுக்கு போன் வந்திருக்கிறது “ என்றான் கார்த்தி. போனில் என் நண்பர்..

“சார். லாராவை ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்திருக்கிறேன். அவள் உங்களைப் பார்க்கனும்” என்று சொல்கிறாள்.

அடித்துப் பிடித்துக் கொண்டு ஹாஸ்பிட்டல் சென்றேன். அங்குள்ள நர்ஸ், டாக்டர்ஸ் எல்லாம் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். அவர்கள் ஏன் அப்படி பார்க்கிறார்கள் என்று எனக்கு விளங்கவில்லை.



என் நண்பர் வந்து லாரா இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். கொடி போல துவண்டு கிடந்தாள் லாரா. லாராவுக்கு குளுகோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. முனகிக் கொண்டிருந்தாள். அவள் அக்கா அருகில் நின்று அழுது கொண்டிருந்தாள். என்னை சோகத்துடன் பார்த்தாள். எனக்கு மயக்கம் வரும் போல இருந்தது. லாரா நன்றாகத்தானே இருந்தாள். ஏன் திடீரென்று இப்படி ஆனாள்.அருகில் நாற்காலியினை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தேன்.

நான் ஆபீஸ் வந்து வண்டியை நிறுத்தும் முன்பு அருகில் வருவாள்.
“சார் வாங்க..” என்று சொல்லிச் சிரிப்பாள்.

மாடர்ன் டிரஸ்ஸில் தேவதை போல வந்து நிற்பாள். பக்கத்துக் கடைக்காரன்கள் எல்லாரின் வயிற்றிலும் புகை வருவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். புத்தகங்களை எடுத்துக் கொண்டு கதவை திறந்து பிடித்த படி நிற்பாள்.

”லாரா.. சாப்பாடு ஆயிடுச்சா” என்று கேட்டபடி சேரில் அமர்வேன்.

“ம்.. நீங்க சாப்பிட்டீங்களா ? “ என்பாள். என் அம்மாவை அவள் ரூபத்தில் பார்ப்பேன். அப்படி ஒரு அன்பு என் மீது.

அப்படி சுறுசுறுப்பாய் இருந்தவளா இப்படி மயங்கிக் கிடக்கிறாள். என் நெஞ்சில் பாராங்கல்லை வைத்தது போல வலித்தது.

”தங்கம்..தங்கம்..தங்கம்....தங்கம்...” மந்திரம் போல ஜெபித்துக் கொண்டிருந்தாள். எனக்கு தலை கிறுகிறுத்தது.

என் நண்பர் அருகில் வந்து ” லாரா..லாரா.. இங்கே பாரு தங்கம் வந்திருக்கிறார் “ என்று இரு முறை சொன்னார். லேசாக கண் விழித்தாள். என்னைப் பார்த்தாள்.

நான் லாரா என்றேன் மெதுவாக. கண்ணில் கண்ணீர். என்னைப் பார்த்ததும் படக்கென்று எழ முற்பட்டாள். அவள் அக்கா வந்து எழ விடாமல் தடுத்தாள்.

”சார். எனக்கு ஒன்றுமில்லை. அழாதீங்க...” என்று சொல்லி சிரித்தாள். முகத்தில் களைப்பு தெரிந்தது.

அடுத்து அவள் செய்தது என்ன ??? ( தொடரும் )

Sunday, August 17, 2008

நான் என்ன செய்ய ? பகுதி 1

என் நண்பரின் ஆபீஸுக்குள் நுழைந்த போது கம்ப்யூட்டரில் ”எவனோ ஒருவன் வாசிக்கிறான்” என்ற பாடல் கேட்டுக் கொண்டிருந்தது. அலைபாயுதே படத்தில் வரும் அந்தப் பாடல். எனக்கு அந்தப் பாடல் பிடிக்காது.

கம்ப்யூட்டரின் முன்பு நண்பரின் ஆபீஸில் வேலை செய்யும் ஃப்ரான்சிஸ்கா அமர்ந்திருந்தாள்.

“என்ன ஃப்ரான்சிஸ்கா ? பாட்டெல்லாம் சோகமாக இருக்கிறதே ? என்ன விஷயம்” என்று கேட்டேன்.

”ஒன்றுமில்லை சார்..”

சிரித்தேன்.

”ஃப்ரான்சிஸ்கா என்னை என்ன மடையன் என்றா நினைக்கிறாய் ? “

“இல்லை சார். “ இல்லை என்று சொல்லும் போதே ஏதோ இருக்கிறது என்று எனக்குள் தோன்றியது. இதற்குமேல் கேட்க எனக்கு சங்கோஜமாக இருந்ததால் விட்டு விட்டேன்.

காலை நேரம். மதியம் சாப்பாடு பற்றி பேச்சு வந்தது.

“சார் மதியம் எங்கே சாப்பிடுவீங்க?”

“ஆஸ்ரமத்தில் சாம்பாரா சாப்பிட்டு நாக்குச் செத்துப் போச்சு ஃப்ரான்சிஸ்கா, அதனாலே இன்றைக்கு மட்டன் சாப்பிடனும் என்று ஆசை”

“சார்.. எங்க வீட்டில மட்டன் குழம்பும் வறுவலும் செய்கிறார்கள். எடுத்துட்டு வரட்டுமா ? சாப்பிடுவீர்களா ?“

மட்டன் குழம்பு, வறுவல் என்றவுடன் எனக்கு நாக்கில் ஜொள்ளு ஒழுகியது. அதை வெளிக்காட்டாமல்,

“உங்களுக்கு எதுக்கு சிரமம் “ என்றேன்.

“ சிரமம் என்றெல்லாம் இல்லை சார். சாப்பிடுகிறீர்கள் என்றால் சொல்லுங்கள். எடுத்து வருகிறேன்.”

“ சரி. கொஞ்சமா எடுத்துட்டு வாங்க. கொஞ்சம் ரசம் மறக்காமல் எடுத்து வாருங்கள்” என்றேன்.

ஃப்ரான்சிஸ்கா சாப்பாடு எடுத்து வர கிளம்பி விட்டாள். நான் கணிணியில் சீரியஸாகி விட்டேன். அதுவரை எனது நண்பர் வரவில்லை. செல்லுக்கு கூப்பிட்டால் தொடர்பில் இல்லை என்று வருகிறது.

ஒரு மணி இருக்கும். கையில் பெரிய பையுடன் வந்தாள்.

தட்டில் சோறு போட்டு மட்டன் குழம்பும் வறுவலுடன் ஆம்லெட்டையும் எடுத்து வைத்தாள். கண்ணில் நீர் வழிய சாப்பிட்டேன். அம்மா கையில் சாப்பிட்டது போல இருந்தது. எனக்குள் சொல்லொண்ணா இன்பம்.

சந்தோஷத்தில் “ ஃப்ரான்சிஸ்கா சாப்பாடு அருமை. உங்க கைக்கு ஒரு முத்தம் தரலாம் போல இருக்கு” என்றேன்.

“ம்.. ஆசையைப் பாருங்க” என்று பளிப்புக் காட்டினாள் ஃப்ரான்சிஸ்கா.

என் முகம் சுருங்கியதைப் பார்த்தவள், “சரி போகட்டும். இந்தாருங்கள்” என்று கை நீட்ட ஒரு முத்தத்தை பதித்தேன் அவள் கையில்.

சிரித்தாள். நானும் அசடாக சிரித்து வைத்தேன்.

”அவ்வளவுதானா? ரசம் எப்படி இருக்குன்னு சொல்லவில்லையே“ என்றாள்.

“உண்மையை சொல்லனுமா. பொய் சொல்லனுமா“ என்று கேட்க

“உண்மையைச் சொல்லுங்க” என்றாள்.

“சுமார் தான் ஃப்ரான்சிஸ்கா“

“நான் தான் வைத்தேன். எனக்கு ரசம் வைக்கத் தெரியாது. மட்டன் குழம்பு, வறுவல் என் அம்மா செய்தார்கள்“ என்றாள்.

எனக்கு சுறுக்கென்றது. ”சாரி ஃப்ரான்சிஸ்கா. ரசம் கூட பரவாயில்லை” என்று சொல்லி வைத்தேன். சிரித்தாள்.

சில நாட்கள் கடந்தன. ஃப்ரான்சிஸ்கா தனியாக இருக்கும் போது ”எவனோ ஒருவன் வாசிக்கிறான்” பாடலைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பதாக என் நண்பர் சொன்னார்.

ஃப்ரான்சிஸ்கா எவரையாவது காதலிக்கும் போல என்றும் சொன்னார். நானும் ஆமோதித்தேன்.

ஒரு ஞாயிற்று கிழமை நாளில் எனது நண்பரும் ஃப்ரான்சிஸ்காவும் மதுரைக்கு சென்று வந்தனர். நான் மாலையில் வந்தேன் என் நண்பரைப் பார்க்க. என்னுடன் தனியாகப் பேச வேண்டும் என்று சொன்னார். பாருக்கு சென்றோம்.

“சார். உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்” என்றார்.

“சொல்லுங்கள்” என்றேன்.

”“ஃப்ரான்சிஸ்கா உங்களைக் காதலிக்கிறாள்“ என்றாள்.

“என்ன ??? “ எனக்குள் அதிர்ச்சி.

“ஆமாம் சார். பஸ்ஸில் இருவரும் செல்லும் போது அடிக்கடி கண்ணைத் துடைத்துக் கொண்டே வந்தாள். என்ன ஃப்ரான்சிஸ்கா என்று கேட்ட போது அவள் உங்களைப் பற்றி தான் பேசினாள். சாப்பிட அழைத்தபோது மறுத்து விட்டாள். இன்று பாஸ்டிங் இருப்பதாக சொன்னாள். அவள் வாரத்தில் நான்கு நாட்கள் பாஸ்டிங் (பட்டினி) இருப்பாள். என்னிடம் முன்பே சொல்லி இருக்கிறாள். ஏன் என்று கேட்க வில்லை. இன்று தான் எனக்கு விடை கிடைத்தது சார். நீங்கள் நடக்க வேண்டுமென அவள் பாஸ்டிங் இருப்பதாக இன்று சொன்னாள் சார். எனக்கு கண்ணீரே வந்து விட்டது சார்.”

மனதுக்குள் பூகம்பம் அடித்தது. மனசு வேற பாரமாகிவிட்டது. என் நண்பர் சொல்லி விட்டு கண்களை துடைத்துக் கொண்டார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

”ஆனால் என்னால் அவளைக் காதலிக்க முடியவில்லையே சார். நான் என்ன செய்ய ?“

”சார் ப்ளீஸ் சார். பாவம் சார் ஃப்ரான்சிஸ்கா. உங்களையே வாழ்வாக எண்ணி இருக்கிறாள். என்று சொல்லி கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தார்.

ஃப்ரான்சிஸ்காவுக்கு மேல் படிப்புக்கு ஆர்டர் வர சென்று விட்டாள் வேலைக்கு வரவில்லை. நான் அவளுக்கு அளித்த பரிசில் எங்களது ஆத்மாவுக்கு என்று எழுதியிருந்தேன். அதைப் படித்து விட்டு அழுதாள்.

என்றோ ஒரு நாள் ஃப்ரான்சிஸ்காவின் நினைவு வர அந்தப் பாடலை கேட்டேன். இப்பொழுது நான் நான் மட்டும் அந்தப் பாடலைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன் தனியாக. பாடல் வரிகள் கீழே...


எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதை தவணை முறையில் நேசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதை தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை எவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதலுக்காகவோ அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை

எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

புல்லாங்குழலே பூங்குயிலே நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரிபாதி
கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்


உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள் மனதில் ஒரு மாறுதலா
உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள் மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில் இது எவனோ அனுப்பும் மாறுதலா
எந்தன் சோகம் தீர்வதற்கு இதுபோல மருந்து பிரிதில்லையே
அந்தக் குழலைப் போல அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்


நன்றி :
தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மணிரத்னம்,
பாடலாசிரியர் : வைரமுத்து.
__________________

Tuesday, August 12, 2008

சாகப்போகும் மனிதர்கள் மற்றவர்களைச் சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள்

மனிதா... ஓடுகிறாய்... ஓடுகிறாய்... ஓடிக்கொண்டே இருக்கிறாய். எங்கே ஓடுகிறாய் சாவதற்குள் உன் ஓட்டம் நின்று விடுமா மனிதா இல்லை ஓடிக்கொண்டிருப்பாயா ? பேங்கில் பணம் சேர்த்து வைத்து விட்டாயா ? சொத்து நிலம் வாங்கி குவித்து விட்டாயா ?
குவி குவி... நீயா அனுபவிக்க போகிறாய். நீ தேடித் தேடி சேர்த்து வைத்தது எல்லாம் நாளை எவனுக்கோ போகப்
போகிறது. போகட்டும். அதனால் என்ன ? ஆனாலும் நீ ஓடுவதை நிறுத்தி விடாதே.. வேண்டும் வேண்டும் இன்னும் வேண்டும்... மனிதா மனிதனுக்கு உள்ள அகந்தையினால் பார் ஆயிரக் கணக்கில் ஜார்ஜியாவில் செத்துக் கொண்டிருக்கிறார்கள். போர் ... போர்.. எதற்கு மனிதா... எதற்கு.... ? யார் வாழ இந்தப் போர் ?? எவன் இருக்கப்போகிறான் சாகாமல்... நடக்கட்டும் நடக்கட்டும்.. போர் நடக்கட்டும். ஆனாலும் நீ ஓடுவதை நிறுத்தி விடாதே. உனக்கு நேரம் இருந்தால் கீழே உள்ள பாடலை படித்துப் பார். படித்து விட்டு திரும்பவும் ஓடு... நிற்காதே. நின்றால் சாவு உன்னைப் பிடித்து விடும்.

படம் : நீங்கள் கேட்டவை
பாடியவர் : ஜேசுதாஸ்

கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக் கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்
துடுப்புக் கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்

பிறக்கின்ற போதே ...............
பிறக்கின்ற போதே இறக்கின்ற சேதி இருக்கின்றதென்பது மெய்தானே
ஆசைகள் என்ன ...............
ஆசைகள் என்ன ஆணவம் என்ன உறவுகள் என்பதும் பொய்தானே
உடம்பு என்பது ..........
உடம்பு என்பது உண்மையில் என்ன கனவுகள் வாங்கும் பை தானே

காலங்கள் மாறும்...........
காலஙக்ள் மாறும் கோலங்கள் மாறும் மானிடம் என்பது பொய்வேஷம்
தூக்கத்தில் பாதி
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி போனது போக எது மீதம்
பேதை மனிதனே
பேதை மனிதனே கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்.

கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக் கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்
துடுப்புக் கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்

Thursday, August 7, 2008

திரைப்பட விமர்சனங்கள்

இந்திய இறையாண்மைக்கு வேட்டு

”நாங்கள் விரைவில் புதிய நீர்க்கொள்கையை அறிவிக்கப் போகிறோம். இதன்படி எங்கள் மாநிலத்தில் பாயும் நதிகளில் இருந்து பிற மாநிலங்களுக்கு தண்ணீர் கொடுக்க, இனி எங்கள் சட்டமன்றத்தின் அனுமதி கட்டாயம் பெற்றாக வேண்டும்' என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார் கேரள மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் என்.கே.பிரேமச்சந்திரன் “

அண்டை மாநிலத்திலிருந்து இப்படி ஒரு அறிக்கை. இதுவரை தமிழகத்தில் இருந்து எந்தவித எதிர்ப்பும் இல்லை. முல்லைப் பெரியார் அணையில் உச்சநீதி மன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டு விட்டது கேரளா. கேட்க நாதியில்லை. இந்த அறிக்கையினை மற்ற மாநிலங்களும் பயன்படுத்தினால் விளைவு தமிழ் நாடு சுடுகாடாகும் நிலை.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள நீர் ஒப்பந்தம் இதுவரையில் நல்ல முறையில் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவுக்குள் இருக்கும் மாநிலங்கள் பக்கத்து மாநிலங்களின் உரிமையில் கை வைப்பது என்பது உள் நாட்டுக்குள் மாநிலப் பிரச்சினைகளை உருவாக்கும் என்பது இவர்களுக்கு தெரியாதா ? தெரிந்தும் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்பது தான் விளங்கவில்லை.

இப்படிப் பட்ட விஷயங்கள் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மத்திய அரசுக்கு தெரியாதா ? தெரிந்தும் ஏன் இதுவரை மெளனம் காக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. இந்திய யூனியன் என்று ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம் வருகிறது. மாநிலங்கள் அடித்துக் கொள்ளும் முன்பு நடவடிக்கை எடுப்பது நல்லது. தும்பை விட்டு வாலைப் பிடிக்காமல் இருந்தால் போதும். செய்வார்களா ?

Monday, August 4, 2008

மகாராஜாக்களின் பிம்பங்கள்

கடந்த காலத்தின் வரலாற்றை புரட்டினால் ராஜாக்களால் ஆளப்பட்ட ராஜ்ஜியங்களும், நடத்தப்பட்ட போர்களும் விரவிக் கிடக்கும். பொதுவாக ராஜாக்கள் என்றாலே மகுடம், உடல் முழுதும் நகைகள், உயர்ந்த ரகத்தில் துணி, ஒரு விதமான செருப்பு என்று தான் மனக்கண்ணில் வந்து செல்வார்கள்.

யாருக்கு என்ன கோபமோ, வெறியோ தெரியவில்லை. யாரால் இப்படிப் பட்ட வழக்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டதோ தெரியவில்லை. இன்றைய நாளில் அந்த மகாராஜாக்களின் பிம்பங்கள் மிகப் பெரிய ஸ்டார் ஹோட்டல்களின் வாயில் கதவினை திறந்து விட்டு சல்யூட் அடிக்க நின்று கொண்டிருப்பதைப் பார்த்தால், யானை கட்டி போரடித்த, சாலைதோறும் மரங்களை நட்டு வைத்த அந்தக் கால ராஜாக்களை நினைத்து சிரிப்புத்தான் வருகிறது. வரலாற்றுக்கும் இன்றைய நிதர்சனத்துக்கும் இடையேயான இடைவெளியில் நடக்கும் மாற்றங்களில் ராஜாக்களின் பிம்பங்களின் நிலை கூட மாற்றம் கண்டு விடுவதை எண்ணினால் வாழ்வின் நிச்சயமற்ற தன்மை உறைக்கிறது அல்லவா.

மிகச் சமீபத்தில் சாரு நிவேதிதா அவர்களின் வாசகர் சந்திப்பு நடந்த ஹோட்டலில் வாயிற் கதவினை திறந்து விடுபவரைக் கண்டபோது மனதில் தோன்றியவை. என்ன ஒரு விசித்திரமான உலகம் பாருங்கள்....