குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Thursday, October 13, 2016

சிவகார்த்திகேயனின் அழுகை

அண்ணா, சிவகார்த்திகேயன் மேடையில் அழுது விட்டார் பார்த்தீர்களா? என்று போனில் ஒரு சினிமா நண்பர் அழைத்து ஆதங்கப்பட்டார். கிட்டத்தட்ட 32 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார் அவர். மிக நல்ல கதை சொல்லி. ஏகப்பட்ட கதைகள் அவரிடம் கொட்டிக் கிடக்கின்றன. அவர் 12 மணி நேரம் கதை சொல்வார். அந்தளவுக்குத் திறமைசாலி. ஆனால் இதுவரை ஒரு படம் கூட அவரால் இயக்கமுடியவில்லை. காரணம் அவருக்கு அந்த வித்தை தெரியவில்லை. போன் போட்டு சிவகார்த்திகேயனுக்காக பேசுகிறார். இதனால் அவருக்கு என்ன பிரயோஜனம் என்று அவர் யோசித்திருந்தால் போன் செய்திருக்கமாட்டார்.

சிவகார்த்திகேயன் ஏன் அழுகிறார்? எங்கே நாம் அடுத்து அடுத்து கோடிகளில் சம்பாதிக்க முடியாதோ என்ற ஆதங்கத்தில் அழுகிறார் விஷயம் அவ்வளவுதான். புரிந்துகொள்ள முயலுங்கள் என்று அவரிடம் சொன்னேன். ஒன்றும் பேசாமல் போனை வைத்து விட்டார். கமல்ஹாசன் கூட கண்ணீர் சிந்தினார். ஏனென்றால் அவரின் பிசினஸுக்குப் பிரச்சினை. அதனால் அழுதார். இதில் நமக்கு என்ன பிரச்சினை என்று எவரும் சிந்திப்பதில்லை.

இங்கு யாருக்குத்தான் பிரச்சினையில்லை? சிறிய தொழில் செய்பவன் கூட தன் சக தொழில் போட்டியாளரிடம் தோற்றுப் போகின்றானே அவன் என்ன அழுது கொண்டா இருக்கின்றான்? இல்லை பத்திரிக்கையில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றானா? இல்லையே? தொழில் போட்டியில் பல இடைஞ்சல்கள் வரத்தான் செய்யும். அதைச் சமாளித்துதான் வெற்றி பெற வேண்டும். உடனே மீடியாவில் அழுக ஆரம்பித்தால் தினம் தோறும் நொடிக்கு நொடி அழுகாட்சிகளையே மீடியாக்கள் காட்டிக் கொண்டிருக்க நேரிடும். இதெல்லாம் எதற்கு? 

இதெல்லாம் புரியும் அளவுக்கு தமிழகத்தில் பெரும்பான்மை இல்லையென்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதே அரசியலைத்தான் எழுத்தாளர்களும் செய்கின்றார்கள். எழுத்தாளர்களில் கூட சினிமாத்தனம் இருக்கிறது. ஜெயமோகன் சாரு நிவேதிதா என்று எழுதுகின்றார்கள். 

இந்த அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் இந்த அரசியல் என்று தெளிந்து கொள்ள வேண்டும். தனிமனிதப் பெருமை பேசும் சினிமாக்காரர்களையும் அரசியல்வாதிகளையும், இலக்கியவாதிகளைப் பற்றி யும் தெளிவறப் புரிந்து கொள்ள வேண்டும். 

அவர்களின் அரசியல் நம் இரக்க குணத்தையும் உழைப்பையும் பயன்படுத்தி நம்மிடமிருந்து பணம் பிடுங்க செய்யும் மாயாஜால வித்தை. அரசியல்வாதி அதிகாரத்தை அடைந்து பணம் சம்பாதிக்கத்தான் அரசியலுக்கு வருகின்றான். எந்த அரசியல்வாதியும் தன் சொத்தை விற்று மக்களுக்கு சேவை செய்ய வருவதில்லை. கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கும் மக்கள் வரிப்பணத்தில் சொகுசாக வாழவும், அதிகாரத்தை அனுபவிக்கவும், அதைப் பயன்படுத்தி மேலும் மேலும் சொத்து சேர்க்கவும் தான் அரசியலுக்கு வருகிறான். செலவு செய்கிறான்.

எழுத்தாளர்கள் பணமும் புகழும் சம்பாதிக்கத்தான் எழுதுகின்றார்கள். சமூகப் பிரக்ஞை, வரலாறு என்று பேசி மாய்மாலம் செய்வார்கள். 

சினிமாக்காரர்கள் பணம் சம்பாதிக்கத்தான் சினிமாவுக்குள் வருகின்றார்கள். ஹீரோயின் இல்லையென்றால் ஹீரோக்கள் சினிமாவுக்கே வரமாட்டார்கள். 

பத்திரிக்கையும், சினிமாவும், அரசியலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. அவை மக்களுக்கு எந்த வித நன்மையும் செய்வதில்லை. மக்கள் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டையப் போட உருவாக்கப்பட்ட மாயவலைகள். சினிமா ஒரு பக்கம் நம்மிடமிருந்து உறிஞ்சிக் கொள்கிறது. அரசியல் வரிப்பணமாக உறிஞ்சிக் கொள்கிறது. இவர்கள் இரண்டு பேரையும் இணைத்து பத்திரிக்கைகள் தர்ம நியாயம் பேசியே கண்ணுக்குத் தெரியாமல் உறிஞ்சிக் கொள்கின்றார்கள்.

விஷயம் அவ்வளவுதான். ஒரு புள்ளி மட்டுமே இது. 

ஒரு விஷயத்தை சொல்லித்தான் ஆக வேண்டி இருக்கிறது. அரசியலில் தூய சேவை செய்கின்றவர்கள் இன்றைக்கும் இருக்கின்றார்கள். எழுத்தாளர்களில் பலர் உலகமக்களுக்காக உண்மையாக எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். பத்திரிக்கையாளர்களில் பலர் உண்மையின் சொரூபமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் எவரையும் நமக்குத் தெரியாது. தெரியவும் விட மாட்டார்கள். ஏனென்றால் இங்கு தான் அரசியல் நடக்கின்றதே?

ஆனால் சினிமா அதுவும் அல்ல இதுவும் அல்ல. சினிமாவில் உறிஞ்சப்படுதல் மட்டுமே நடக்கின்றது. அந்த சினிமா அரசியலையும் உருவாக்குகிறது. அடிமைத்தனத்தில் சினிமா ஒரு விதம். நான் அவரின் ரசிகன் என்றுச் சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை சொல்பவனுக்கு இருக்கிறது என்று எவரும் யோசிப்பதில்லை. இந்தப் பூமிப்பந்தில் சினிமாவைப் பற்றியும், சினிமாக்காரர்களைப் பற்றியும் தெரியாதவர்கள் ஐந்து பர்செண்டேஜ் இருக்கலாம். மீதமுள்ளவர்களின் பாக்கெட்டில் இருக்கும் பணம் சினிமாவில் சென்று சேர்கிறது. 

ஒரு சாதாரண போர்ன் நடிகை 100 கோடிக்கு நகை வைத்திருக்கிறார். அவளின் படத்தைப் பார்ப்பவர்களிடம் என்ன இருக்கிறது?

இன்றைக்கு பதினைந்து கோடி சம்பளம் பெறுகிறார் என்று மீடியாவில் பேசப்படும் சிவகார்த்திகேயன் படத்தைப் பார்க்கச் செல்லும் ரசிகனின் பாக்கெட்டில் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு பணம் இருக்காது. ஆனால் சிவகார்த்திகேயன் அழுகிறார். 

யாருக்காக அழுகிறார்?

ரசிகனுக்காக எவரும் அழுவதில்லை. ரசிகன் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக அழுகின்றார்கள். 

Wednesday, July 20, 2016

சித்ரவதைக்குள்ளாகும் மாற்றுத்திறனாளிகளும் முதியவர்களும்

கோவை வடக்கு வட்டம் தாசில்தார் அலுவலகத்துக்கு குடும்ப அட்டைக்கான முகவரி மாற்றத்துக்காக மனையாளுடன் சென்றிருந்தேன். 

வாசலின் அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்து விண்ணப்ப மனுக்களை எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். 30 ரூபாய் கொடுத்தால் விண்ணப்பம் எழுதித் தருகின்றார்கள்.

விண்ணப்பத்தில் கையெழுத்து இட்டு கொடுத்தேன். இரண்டாவது தளத்தில் இருக்கும் குடிமைப் பொருள் அலுவலகத்திற்கு மனையாள் சென்று விட்டார். நான் அங்கிருக்கும் வேம்பு மரத்தின் நிழலில் வண்டியில் அமர்ந்திருந்தேன்.

அப்போது ஒரு ஆட்டோ வந்தது. அதிலிருந்து ஒரு வயதான பெண்மணியும் அவருடன் குச்சி போன்ற உடலுடன் ஒரு பெண்ணும் இறங்கினார்கள். இருவராலும் இறங்கவே முடியவில்லை. கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் ஆகின. ஆட்டோ டிரைவர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு ஆட்டோவிலேயே அமர்ந்திருந்தார். அவர்கள் இருவரும் அங்கிருந்த வாசலில் உட்கார்ந்தனர். அந்த வயதான பெண்மணி யாரையோ எதிர்பார்த்து வாசலில் நின்று கொண்டிருந்தார். அந்தப் பெண்ணுக்கோ உட்காரக்கூட முடியவில்லை. அவர்கள் இருவருக்கும் யாரும் உதவி கூட செய்யவில்லை. ஏதாவது இயற்கை உபாதை ஏற்பட்டால் அந்த இருவரின் நிலை? யோசிக்கவே முடியவில்லை.

அடுத்து இன்னொரு டாக்சி வந்தது. அதிலிருந்து ஒரு பெரியவர் இறக்கப்பட்டார். இரண்டு கைகளாலும்  தூக்கி  வைத்து நடக்கும் கையூன்றியுடன் அவர் மெதுவாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அந்தப் படிகளைக் கடந்து செல்ல முயன்று கொண்டிருந்தார். இரண்டு படிகளைக் கடக்க அவருக்கு பத்து நிமிடங்கள் ஆகின. 

கைகால்கள் அடிபட்டு உடைந்து போன நிலையில் இருந்த மூன்று பெரியவர்கள் அங்கு அமர்ந்திருந்தனர். ஆதார் எடுக்க ஒரு கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. ஆதார் கார்டு எடுக்க முடியவில்லை கணிணியில் ஏதோ பிரச்சினை என்றுச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இயலாமையுடன் அங்கிருந்து செல்ல ஆரம்பித்தனர். அவர்களுக்கும் குடும்பம் என்ற ஒன்று இருந்திருக்கும். அவர்களுக்கும் வாரிசுகள் இருப்பார்கள். அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ தெரியவில்லை. திரும்பவும் வர அவர்களிடம் பணமிருக்குமோ இருக்காதோ தெரியவில்லை. அவர்களால் சம்பாதிக்க கூட முடியாது. மீண்டும் வர அவர்கள் யாரிடம் பணம் பெறுவார்களோ தெரியவில்லை.

முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதி அவர்கள் சக்கர நாற்காலியைப் பயன்படுத்த துவங்கியவுடன் தான் ஊனமுற்றோர் என்ற சொல் மாற்றுத்திறனாளி என்று மாற்றப்பட்டது. தனக்கு என்று வந்தால் தான் மாற்றங்கள் என்றால் ஒவ்வொரு தலைவரும் சக்கர நாற்காலியில் தான் வர வேண்டும்? இதெல்லாம் நடக்கக் கூடிய காரியமா?

பேரூந்துகள், ரயில் வண்டிகளில் மாற்றுத்திறனாளிகளும், வயதானவர்களும் பயணம் செய்வது என்பது பியர் கிரில் காட்டில் விடப்பட்டு தப்பித்து வருவதை விட கொடிய நிகழ்வாக இருக்கிறது. இத்தனைக்கு சுற்றிலும் மனிதர்கள் இருக்கின்றார்கள். ஆனால் எவரும் யாருக்கும் உதவுவதே இல்லை. கோவிலுக்குச் சென்றால் கூட ஒதுங்கி வழி விட மாட்டார்கள் எதிர்கால வயோதிக மனிதர்கள்.

இந்த வாழ்க்கை ஒவ்வொரு நொடியும் மாறக்கூடியது என்பதை எவரும் அறிவார் இல்லை. 

தாலுக்கா அலுவலகத்தில் அந்தப் பெண்ணும், பெரியவரும் பட்ட துன்பம் தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன. இது அத்தனையும் அனைவருக்கும் தெரியும். தெரிந்து என்ன நடக்கிறது? கண்டும் காணாமலே செல்கிறது ஆறறரிவு பெற்ற மனித உள்ளங்கள்.

எனது நண்பரொருவர் வெளிநாட்டில் வசிக்கிறார். ஊனமுற்றோருக்கு வெளி நாட்டில் செய்துதரக்கூடிய உதவிகளைப் பட்டியலிட்டார். அங்கிருப்பவர்கள் மனிதர்கள். 

உலகத்திற்கே முன்னுதாரணமான தமிழ் சமூகம் மாற்றுத்திறனாளிகளையும், வயோதிகர்களையும் நடத்தி வரும் போக்கும் சித்தவதைக்களமாக இருக்கிறது. 

ஊனமுற்றோருக்கு என்றொரு வாரியம், சமூக அமைச்சர், அலுவலர்கள், மருத்துவர்கள் என்று அரசு பெரும் செலவுகளைச் செய்கிறது. இயங்கவே முடியாத வயதான பெரியவர்களுக்கும், ஊனமுற்றோர்களுக்கும், கண்பார்வை அற்றோர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று அரசு வழங்கும் நலத்திட்டங்களை வழங்கினால் என்ன? 

அவர்கள் தங்கள் உயிர் மீது கொண்ட ஆசையினால் படும் துன்பத்தைக் காணச் சகிக்க முடியவில்லை. மனம் வேதனைதான் கொள்கிறது. வசதியும், வாய்ப்பும் இருப்பவர்களால் சமாளித்து விட முடியும். இல்லாதவர்கள் நிலை என்ன?

இந்திய அரசும், நீதித்துறையும் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என ஆவலாய் இருக்கிறது. 

Monday, July 18, 2016

தீவிரவாதம் ஏன் நடக்கிறது? உண்மை என்ன?

உலகெங்கும் பெரும் அச்சுறுத்தலாக சாதாரண மக்களை பெரும் துயருக்குள் தள்ளிக் கொண்டிருப்பது தீவிரவாதம். அது மதத் தொடர்பானதாக இருந்தாலும் சரி, விடுதலை தொடர்பானதாக இருந்தாலும் சரி. ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் அது தீவிரவாதம் என்றே அழைக்கப்படுகிறது.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு மூன்றாம் உலகப் போர் நடக்குமா என்றெல்லாம் விவாதங்கள் செய்கின்றார்கள். அதற்கு நிச்சயமாக சாத்தியக்கூறுகள் இல்லவே இல்லை என்றே கருதுகிறேன். இனிமேல் மூன்றாவது உலகப்போர் என்பது நடத்தப்பட்டால் பூமி என்ற உலகமே இருக்காது. வெடித்து சிதறி விடும்.

அறிவியல் மனிதனுக்கு ஆக்கப்பூர்வமான உதவிகளைச் செய்ததை விட அழிவுக்கான பாதையைத்தான் காட்டி இருக்கிறது. ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பும் மனிதனை தன் நிலை இழக்கச் செய்து கொண்டே இருக்கின்றன. அவன் மிருகமாகிக் கொண்டே போகின்றான். ஒரு ட்ரக் 85 பேரைக் கொல்ல உதவுகிறது. துப்பாக்கியால பலரைக்க் கொல்லலாம். ஒரு அணுகுண்டு ஒரு ஊரையே சுடுகாடாக்கி விடுகிறது. ஒரு வைரஸ் கிருமி உலகையே கொன்றொழிக்கிறது. சகமனிதனைக்கூட அருகில் செல்ல விடுவதில்லை.

நாடெங்கும் ஆயுதத்தாக்குதல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. என்றைக்கு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டனவோ அன்றிலிருந்து அவை மனிதனின் உயிரைப் பறித்துக் கொண்டே இருக்கின்றன. 

இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் தீவிரவாதங்களுக்கு அச்சாணியாய், முழுக் காரணமாய் இருப்பது ஒன்றே ஒன்றுதான். அது வியாபாரம். அறிவியல் வியாபாரம். ஆமாம் அறிவியலின் உச்சமாக ஒவ்வொரு நாளும் புதுப்புதுக் கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.

ஒரு செல்போனை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளைத் தாங்கிக் கொண்டு செல்போன்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆப்பிள் 5 போனா வைத்திருக்கிறாய்? நான் 6எஸ் அல்லவா வைத்திருக்கிறேன் என்று வெற்று ஈகோ. இந்த வெற்று ஈகோவை வளர்க்கும் சினிமாக்கள், மீடியாக்கள். 

இந்த வெற்று ஈகோவினால் ஆப்பிள் கம்பெனிக்கு லாபம். விளம்பரங்களால் மீடியாவிற்கு லாபம். ஆனால் அந்த ஆப்பிள் போனை வாங்குபவனுக்கு? மாதம் ஒரு புதிய அப்டேட்டை வாங்குவதால் என்ன பயன்?  எவரும் யோசிப்பதில்லை. என்ன தேவையோ அதற்குத்தான் பொருள் வேண்டும். காசைக் கரியாக்கும் ஈகோவினால் பொருள் இழப்புதான் ஏற்படும். இதை எவரும் உணர்ந்து கொள்வதில்லை. அதனால் உழைப்பை இழந்து கொண்டே இருக்கின்றார்கள்.

இந்த உலகில் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழித்து விட முடியுமா? என்றால் ஆம் நிச்சயம் முடியும். அதற்கு வழி உண்டு. ஆனால் அது நடக்காது.

ஒவ்வொரு நாடும் தன் ஆயுதத்தயாரிப்பினை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். புதுப்புது ஆயுதங்கள் தயாரிக்க மிகப் பெரிய அளவில் பழைய ஆயுதங்கள் மீந்து விடுகின்றன. அந்த ஆயுதங்களைக் காசாக்குகின்றார்கள். அவை கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன. பழைய ஆயுதங்கள் விற்கப்பட வேண்டுமெனில் சண்டைகள் நடக்க வேண்டும். அப்போதுதான் அந்த ஆயுதங்களை விற்க முடியும். அந்தச் சண்டைகளை ஆயுத வியாபாரிகள் புத்திசாலித்தனமான விஷயங்களால் உருவாக்குகின்றார்கள். விஷயம் அவ்வளவுதான். கோடிட்ட இடங்களை நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள். நான் கோடிட்டுக் காட்டுகிறேன். முழுவதையும் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எங்கு பிரச்சினையின் ஆரம்பம் இருக்கிறதோ அதைச் சரிசெய்யாத வரைக்கும் இந்த தீவிரவாதம் நிற்கப்போவதில்லை. மக்கள் தங்கள் இன்னுயிரை இழப்பது தொடர்கதையாகத்தான் நடந்து கொண்டிருக்கும். யாரோ ஒருவரின் பேராசைக்கு உலக மக்கள் தங்கள் வாழ்வை இழக்கின்றார்கள். அலறுகின்றார்கள். அல்லல்படுகின்றார்கள். துயரத்தில் வீழ்கின்றார்கள். துன்பத்தில் வீழ்கின்றார்கள். 


Monday, December 29, 2014

ஊடகங்கள் செய்யும் மக்கள் துரோகம் - தொடர்ச்சி

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கோவை டைம்ஸ் பகுதியில் ரஜினி காந்த் அவர்களின் சொத்து ஏலம் பற்றி ஒரு பத்தி வெளிவந்திருக்கிறது. எந்த ஒரு செய்திக்கும் விரிவான அலசலை அளிக்கும் பத்திரிக்கை ரஜினி என்கிற கோபுரத்தின் கதையைப் பற்றி விரிவாக அலசி இருக்க வேண்டிய தருணத்தை வேண்டுமென்றே தவிர்த்து இருக்கிறது.

கோடம்பாக்கத்தின் தெருக்களிலும், ஒவ்வொரு சினிமா அலுவலகத்திலும் இளைமையையும், எதிர்காலத்தையும், குடும்பத்தையும் தொலைத்து விட்டு கட்டுக்கட்டாகப் பணமும், புகழும் கிடைக்க வேண்டுமென்பதற்காக எல்லாவற்றையும் இழந்து நிற்கும் எண்ணற்ற இளைஞர்களின் மனதுக்குள் ஒரு கேள்வியை எழுப்பி இருக்க வேண்டிய அலசலை டைம்ஸ் ஆஃப் இந்தியா தவற விட்டு தன் ஊடக தர்மத்தை வசதியாக மறந்து விட்டது. சினிமா என்ற மாயா உலகத்தின் மறுபக்கம் தான் ரஜினியின் சொத்து ஏலத்திற்கு வந்தது. இதே போல அமிதாப்பச்சனின் சொத்தும் ஏலத்திற்கு வந்தது நினைவிலிருக்கலாம். சினிமா மோகத்தின் மீதான மாயையை அலசி ஆராய்ந்து கட்டுரையை வெளியிட வேண்டிய தர்மத்தை டைம்ஸ் ஆஃப் இந்தியா மறந்து விட்டது.

என்னைப் போன்று எத்தனை எத்தனையோ லட்சோப லட்சம் வாசகர்கள் கொடுக்கும் சிறு பணத்தில் வளர்ந்து நிற்கும் இந்தப் பத்திரிக்கை மக்களுக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டிய தார்மீகக் கடமைக்கு ஆட்பட்டது. ஆனால் ரஜினி போன்ற மாயா உருவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தன் தர்மத்தைக் காக்கத் தவறி நிற்கிறது.

என்றைக்கு ஒரு தராசு ஒரு பக்கமாக சாய்ந்து நிற்கிறதோ அன்றிலிருந்து தன் முடிவுக்கான ஆரம்பப் படியை அது எடுத்து வைத்து விட்டது எனலாம். நூற்றாண்டு கால டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இன்றைய நிலைக்கு இன்னுமொரு உதாரணம்,

இன்றைய சினிமா விமர்சனத்தில் கயல் திரைப்பட விமர்சனம் என்பதற்குப் பதிலாக வெள்ளைக்காரத்துரை திரைப்படத்தை தவறுதலாக வெளியிட்டு இருக்கிறது.

காலம் சொல்லும் பதிலுக்கு கேள்வியை இவர்களே தயார் செய்திருக்கிறார்கள். பதில் வெகு கடுமையாக இருக்கக் கூடாது என்று அதன் வாசகன் என்ற நிலையில் விரும்புகிறேன்.


Saturday, September 14, 2013

22 நாடுகள் சேர்ந்து விரட்டப்படவரின் நிகழ்காலத்தில் கதை

ஒவ்வொருவருக்கும் அவரவருக்கு தகுந்தவாறு பிரச்சினைகள் இருக்கின்றன. தீதும் நன்றும் பிறர் தர வாரா. ஒவ்வொரு நன்மைக்கும், தீமைக்கும்  நாமே காரணமாய் இருப்பதை நாம் அறிந்து கொள்வதில்லை. அறிந்து செய்யும் செயலோ அல்லது அறியாமல் செய்யும் செயலோ, என்ன செய்தோமோ அதற்குரிய பலன் அது நன்மையோ அல்லது தீமையோ அனுபவித்து தான் ஆக வேண்டும். ஒரு துன்பம் வருகிறது என்றால் ஏன் வந்தது என்பதை அறிந்து கொண்டு விட்டால் பிரச்சினையின் மூலம் தெரிந்து விடும். பின்னர் எது வரினும் கவலை ஏன் வரப்போகிறது.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் எப்போதாவது நிழல்காலத்தில் வாழ்வதை உணர்ந்திருக்கிறோமா என்று கேட்டால் பெரும்பாலானோர் “ நிகழ்காலமா?, அப்படியென்றால்” என்று கேட்பார்கள். இது ஒன்றுமில்லை. எது செய்யினும் அத்துடன் ஒன்றியிருத்தல் என்பதுதான்.

கார் ஓட்டிக் கொண்டிருக்கும் போது வீட்டு நினைவோ அல்லது சினிமா நினைவோ அல்லது காதலிகள் நினைவோ வந்தால் என்ன ஆகும்? எங்காவது ஓரிடத்தில் காரை முட்டி விடுவோம். செய்யும் வேலையில் முழுக்கவனமும் இல்லையென்றால் “கெட்டது காரியம்”.  நிகழ்காலத்தில் வாழ்ந்து பாருங்கள்.வெற்றிப்படிக்கட்டு கண்ணில் தெரியும். இதுதான் வெற்றியின் சாவி. பூட்டைத் திறக்க சாவி கிடைத்து விட்டது. இனி என்ன? பூட்டைத் திறந்து வெற்றிப்படிக்கட்டில் ஏற வேண்டியதுதான் பாக்கி.

ஒரு ஜோக் உங்களுக்காக,

சிலர் எப்போதுமே ஒரே மனநிலையில் வாழ்வர். மனிதர்களுக்கு எதையுமே எஸ்ட்ரீமாக செய்வதுதான் வழக்கம். அப்படி ஒரு மனிதரைப் பற்றித்தான் ஓஷோ சொல்லி இருக்கிறார்.

ஒரு புகழ் பெற்ற அறுவைசிகிச்சை நிபுணர் ஆப்பிரிக்காவிற்க்கு கானக பயணம் சென்றார். அவர் திரும்பி வந்தவுடன் அவரது தோழர்கள் பயணம் எப்படி இருந்தது எனக் கேட்டனர். அதற்கு அவர் அது மிகவும் ஏமாற்றமளிப்பதாக இருந்தது. நான் ஒரு மிருகத்தைக் கூட கொல்லவில்லை. அதற்கு பதிலாக நான் இங்கேயே ஆஸ்பத்திரியில் இருந்திருக்கலாம். என்றார்.

நீ எங்கிருந்தாலும், எங்குசென்றாலும் நீ நீயாகவே, உனது மனமாகவே, உனது குறிக்கோளாகவே இருக்கிறாய். இங்கு இப்பொழுது என்பதே உனக்கு இல்லை.

இக்கதையில் இருக்கும் பிரச்சினை என்னவென்று உங்களுக்குப் புரிந்து விட்டால் இனி “வானம் கூட வசப்படலாம்”

Thursday, January 26, 2012

ஒரு குவளை நீருக்குள் காந்தி - ஆத்மா பற்றிய அறிவியல் விளக்கம்


நேற்றைக்கு முதல் நாள் இரவு ஒன்பது மணி போல நேஷனல் ஜியாகரபி சேனலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இவ்வுலகம் அணுக்களால் ஆனது என்றார்கள். குடிக்கும் தண்ணீருக்குள் கோடிக்கணக்கான அணுக்கள் இருக்கின்றன என்றார்கள். எந்த அணுவும் அழிவதில்லை என்றார்கள். அது உருவம் மட்டுமே மாறிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். நாம் குடிக்கும் தண்ணீருக்குள் மஹாத்மா காந்தியை உருவாக்கிய அணுக்கள் இருக்கலாம். அதாவது சுருக்கமாய்ச் சொன்னால் நாம் காந்தியைக் கூட குடித்திருக்கலாம்.

இந்து மார்க்கத்தில் ஜீவாத்மாவிற்கு அழிவே இல்லை என்றும், உடல் மட்டுமே அழிகிறது என்றும் ஆனால் ஆத்மா அழிவதே இல்லை என்றும் விரிவாக எழுதி இருக்கின்றார்கள்.

ஆன்மீகத்தினைப் புரிந்து கொள்ள எளிதில் முடியாது என்று எனது நண்பர் ஒருவர் சொல்வார். ஆன்மீகத் தத்துவங்கள் பல அறிவியலுக்கும் அப்பாற்பட்டது. எனது வாழ்வில் நான் பல உண்மை ஆன்மீகவாதிகள், போலி ஆன்மீகவாதிகளுடன் பழகி இருக்கிறேன். அப்போதெல்லாம் ஜீவாத்மாவிற்கு(மனிதனின் ஆத்மா) அழிவில்லை என்றுச் சொல்லக் கேட்டிருக்கிறேன். இவ்வாக்கியம் எனக்கு குழப்பத்தையே இதுகாறும் தந்து கொண்டிருந்தது. ஆனால் அதை ஜியாகிரபிக் சேனல் நிவர்த்தி செய்து விட்டது.

ஆமாம் நண்பர்களே, ஜீவாத்மாவிற்கு அழிவே இல்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான மேலதிக விபரத்திற்கு நீங்கள் நேஷனல் ஜியாகிரபிக் சேனலைத் துருவிப் பார்க்கவும்.

அணுக்களால் உருவம் மாற்றமடையுமே தவிர அந்த அணு அழிவதில்லை என்பதுதான் ஆத்மா அழிவதில்லை என்பதாகும். அதாவது அணுக்கள் ஒன்று சேர்ந்து மனிதனாய், விலங்காய், செடியாய், கொடியாய், புல்லாய், பூண்டாய், மரமாய், தண்ணீராய் மாறும். அதே அணுக்கள் பிறகு வேறொரு மாற்றம் பெரும். இதைத்தான் இன்று அறிவியல் கண்டுபிடித்திருக்கிறது. இதைப் பற்றி முன்னே சொல்லி வைக்கப்பட்டிருக்கிறது. அணுவை ஆத்மா என்றார்கள். அவ்வளவுதான். அதைத்தான் நாம் குடிக்கும் நீருக்குள் காந்தியை உருவாக்கிய அணுவோ அல்லது அன்னை தெரெஸாவை உருவாக்கிய அணுவோ இருக்கலாம். இதை வைத்துப் பார்க்கும் போது, முன் ஜென்மம் என்பதெல்லாம் இருக்க 100% சதவீத வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது.

இன்று கண்டுபிடிக்கப்பட்ட இந்த அறிவியல் உண்மை, நம் ஆன்மீகத்தில் என்றோ கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை நினைக்கும் போது, ஆன்மீகத்தின் வழி சென்றால் அறிவியலில் என்னென்னவோ கண்டுபிடிப்புகளை நிகழ்த்தலாம் என்று நம்பிக்கை வருகிறது.

இந்துக் கலாச்சாரத்தின் மேன்மைக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது அல்லவா?

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்