எனது சில நண்பர்கள் சினிமா இயக்குனர்கள். அந்த இயக்குனர்களில் ஒருவர் ” தங்கம், புது படம் கமிட் ஆகியிருக்கிறேன். புது முகம் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆரம்பகால ரேவதி போல, புதுமுகம் தேவை, உனக்குத் தெரிந்தவர்களிடம் கேட்டுப்பாருங்களேன் “ என்றார். எனது நண்பர்கள் பல பேரிடமும் சொல்லி வைத்திருந்தேன். அதில் ஒரு நண்பர் எனது முன் அனுமதி இல்லாமல் இரண்டு பெண்களிடம் எனது தொலைபேசி எண்ணைக் கொடுத்து விட்டார்.
மாலை நேரம், புது எண்ணிடமிருந்து அழைப்பு வந்தது.
”சார் மதுமதி பேசறேன், தங்கம் சாரா?”
“எஸ் சொல்லுங்கள் “
“சார், போட்டோ கிடைத்ததா “
” ஓ... நீங்களா, கிடைத்து விட்டது. இயக்குனருக்கு அனுப்பி இருக்கிறேன்”
“ஏதாவது பதில் வந்ததா சார்”
“இல்லேம்மா, டைரக்டரைப் பிடிக்க முடியவில்லை. அவரே கூப்பிடுவார். அதன் பின்னர் தான் தெரியும்”
“சார், வேற ஏதாவது வேணுமா ”
“ வேற ஏதாவதுன்னா, என்னம்மா ?”
” உங்களை நேரில் வந்து பார்க்கலாமா “ என்றார்.
எனக்கு விர்ரென்று கோபம் தலைக்கேறியது. இந்தப் பெண் உமனைசர் என்று நினைத்து விட்டது போல தெரிகிறதே என்று நினைத்துக் கொண்டு,
“அதெல்லாம் வேண்டாம். உன்னை இயக்குனர் செலக்ட் செய்தால், நீயாச்சு, அந்த இயக்குனராச்சு. என்னை எதுக்குப் பார்க்கனும்?” என்று கர்ண கடூரமாக சொன்னேன்.
ஒரு நிமிடம் பேச்சே கேட்கவில்லை.
“சார், மன்னிச்சுக்கங்க “ என்று விம்மிய குரல் வந்தது.
“ பாரும்மா, எதுக்கு சினிமாவுக்கு வரனும்னு நினைக்கிறே” என்றேன்.
“ சர்வைவல் ஆஃப் பிட்னெஸ்” என்றார் அந்தப் பெண்.
இரண்டு வார்த்தைகளில் அவரின் சூழ்நிலையை விளக்கிய அந்தப் பெண்ணின் அறிவினை எண்ணி வியந்தேன்.
ஆம், சர்வைவல் ஆஃப் பிட்னெஸ். நினைத்துப் பார்த்தால் கொலை, கொள்ளை, போர், ஊழல், சர்வாதிகாரம் எதுவுமே தப்பே இல்லை என்று தான் தெரிகிறது.
வாழ வேண்டும். அதற்கு எது வேண்டுமானாலும் செய்யலாம்.
குறிப்பு : சர்வைவல் ஆஃப் பிட்னெஸ் என்று இரவில் புலம்பிக் கொண்டிருந்தீர்கள். அதற்கேற்ற கதையை எழுதவா ? என்று மனைவி இந்தப் பதிவை படித்த பின்னர் சொன்னார்.