குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label குளிர்பானம். Show all posts
Showing posts with label குளிர்பானம். Show all posts

Sunday, February 12, 2017

மஞ்சள் குளிர்பானம் அதீத ஆபத்து

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் பாகப் பிரிவினை நடைபெறுகிறது. நிலத்தில் பாகத்தைச் சரியாகப் பிரித்துக் கொடுக்கும் பணியில் பிசியாக இருந்தேன். மிகச் சரியாக பாகத்தைப் பிரித்துக் கொடுக்கவில்லை என்றால் நீயும் பாகமும் என்று கிண்டலடித்து விடுவார்கள். ஆகவே தனித்தனியாக ஒவ்வொருவரிடமும் அமர்ந்து பேசி அவரவர் கோரிக்கைகளைக் குறித்துக் கொண்டு மிகக் கவனமாக நிலப்பாகத்தினை அளந்து உறுதி செய்து கொண்டேன். பின்னர் நிலத்தில் அளக்கும் போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது.

அவரவர் வீடு இருக்கும் பகுதியில் நிலமும் வர வேண்டும். மரங்களும் சரியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நிலத்திற்கும் பாதை இருக்க வேண்டும். அந்தப் பாதைகளின் மொத்த அளவு அதிகமாக இருக்கக்கூடாது அதுமட்டுமல்ல இன்னும் இது போன்ற பல்வேறு சிக்கல்களுடன் நில அளவை நடந்து கொண்டிருந்தது.

இதுவெல்லாம் பிரச்சினையே இல்லை. நான் சுவாசிப்பதே நிலத்தைப் பற்றித்தான். நிலம் மட்டும் இல்லையென்றால் மனிதனே இல்லை. பூமித்தாய் ஒவ்வொரு மனிதனையும் தன் இரத்தத்தால் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அதை நேசிப்பதில் அதனுடன் உறவாடுவதில் அதனுடன் இயைந்து இருப்பதில் எனக்கு எல்லையில்லா ஆனந்தம். இந்தப் பூமியில் கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் மனிதனுக்காகத்தான் பயன்படுகிறது. காற்றிலிருந்து, வெளிச்சத்திலிருந்து பூமி தான் மனிதனுக்கு அள்ளி அள்ளி வழங்குகிறது. கண்ணை மூடி ஒரு நிமிடம் பூமி நமக்கு தருவன பற்றி நினைத்துப் பாருங்கள். பூமியின் மீது நடப்பதற்கே கூச்சமாக இருக்கும். 

எனக்குப் பிரச்சினை ஆரம்பித்தது மனிதர்களாலே. ஒவ்வொரு வீட்டிலும் காஃபி, டிஃபன், குடிநீர் சாப்பிட வற்புறுத்த ஆரம்பித்து விட்டார்கள். முதன் முதலில் வந்திருக்கின்றீர்கள், ஒரு வாய் டீ என்று ஆரம்பித்து தொல்லைகள் வர ஆரம்பித்தன. அப்போதுதான் ஹார்லிக்ஸ் குடித்திருப்பேன். ஐந்து நிமிடம் கூட இருக்காது. இள நீரைக் கொண்டு வந்து நீட்டுவார்கள். பஜ்ஜி சுடச்சுட கொண்டு வந்து தருவார்கள். என்னை வேலை செய்யவே விடவில்லை. 

மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் நேரம் காலம் தெரியாமல் அவர்கள் செய்த உபசரிப்பின் காரணமாக எரிச்சலின் உச்சத்திற்கே சென்று கொண்டிருந்தேன்.

மாலையில் அவசரமாக வேறு வேலை நிமித்தமாக கிளம்பிய போது மஞ்சள் கலர் குளிர்பானத்தைக் கொண்டு வந்து நீட்டினார்கள். வெயிலில் காய்ந்ததால் இதமாக இருக்கட்டுமே என்று இரண்டு மிடக்கு மஞ்சள் குளிர்பானத்தை விழுங்கினேன். ஒரு மணி நேரம் வேறு பணியை முடித்து விட்டு வீடு வரும் முன்பு மற்றொரு நண்பர் இடையில் பிடித்துக் கொண்டார். ஏதாவது சாப்பிடுங்கள் என்று வற்புறுத்த ஆரம்பித்தார். சுடுதண்ணீர் கொண்டு வந்து தாருங்கள் என்றுக் கேட்டு அருந்தினேன். அடுத்த இரண்டு நொடிகளுக்குள் நெஞ்சுக்குள் வலி சுருக் சுருக் என ஆரம்பித்தது. பதட்டமானேன்.  நண்பரோ விடாமல் பேசிக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் நெஞ்சுக்குள் வலி எடுக்கிறது என்றுச் சொல்லி விடைபெற்றேன். 

வண்டியில் வரும் போது ஏப்பமாக வந்து கொண்டே இருந்தது. இடது நெஞ்சில் வலி பின்னிப் பெடலெடுத்தது. ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்து பாயில் படுத்தேன். என்னால் படுக்கவே முடியவில்லை. பிரஷர், ஹார்ட் பீட் எல்லாம் சோதனை செய்த போது அனைத்தும் நார்மல். ஆனால் வலி மட்டும் குறையவில்லை. மூச்சை உள்ளே இழுத்தால் சுருக்கென்றது. உணவில் ஏதோ பிரச்சினை என்று அறிந்து கொண்டேன். மருத்துவ நண்பரை அழைத்து விபரம் சொன்னேன். ஒரே ஒரு மாத்திரையைப் பரிந்துரைத்தார். வெறும் கஞ்சி கொண்டு வரச் சொல்லிக் குடித்து விட்டு மாத்திரையைப் போட்டுக்கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக வலி குறைந்தது. அரை மணி நேரத்தில் சுருக் வலி நின்று போனது. ஆனால் ஏப்பம் மட்டும் வந்து கொண்டே இருந்தது. காலையில் கூட வெறும் ஏப்பம் தான் வந்து கொண்டே இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் நான் அந்தப் பிரச்சினையிலிருந்து வெளிவர. வேண்டாம் என்றாலும் விடாமல் படுத்தி எடுக்கின்றார்கள். கிராமத்து ஆட்கள் வெள்ளந்தியானவர்கள். ஒருவர் வாழைக்காய் சிப்ஸைக் கொண்டு வந்து கொடுத்து தோட்டத்தில் இருந்து பறித்து உங்களுக்காக மனைவியைச் செய்யச் சொல்லி கொண்டு வந்திருக்கிறேன் என்று படுத்திக் கொண்டிருந்தார். 

அடியேனோ எண்ணைப் பலகாரங்கள், பால், டீ, காஃபி, மட்டன், சிக்கன், மீன், நண்டு, இறால், முட்டை என எதையும் சாப்பிடுவதே இல்லை. நாக்குக்கு அடிமைப்பட்டு நெஞ்சைக் கிழித்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடே இல்லை. சாதம் என்றால் பத்து வாய் அத்துடன் கொஞ்சம் காய்கறிகள். மாலையில் பழங்கள், காய்கறிகள் என்பதோடு நிறுத்திக் கொள்வதுண்டு. வேறு வழியே இல்லையென்றால் ஹார்லிக்ஸ் என்பதோடு நிறுத்திக் கொள்வேன். அதுவும் எனக்கு உடன்பாடு இல்லை. எவ்வளவு கவனமாக இருந்த போதும் ஏதோ ஒரு நினைவில் குளிர்பானம் என்கிற கெமிக்கல்ஸ் நிறைந்த குடிபானத்தினால் எனக்கு ஏற்பட்ட ஒவ்வாமை கொடுமையானது.

நான் குடித்த மஞ்சள் கலர் குளிர்பானத்தின் மகிமை என்று மருத்துவர் சொன்னார். பத்து மிலி கூட குடித்திருக்க மாட்டேன். அது செய்த பிரச்சினை இன்னும் முற்றிலுமாகத் தீரவில்லை. எனது அனுபவம் இது. ஆகவே நண்பர்களே, மஞ்சள் கலர் குளிர்பானம் என்றால் ஜாக்கிரதையாக இருங்கள்.