குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label உண்மைச் சம்பவம். Show all posts
Showing posts with label உண்மைச் சம்பவம். Show all posts

Friday, May 6, 2016

குருநாதரின் பேரருள் - உண்மைச் சம்பவம்

எனது குரு நாதர் ஜோதி ஸ்வாமி குழந்தைகள் இருவரையும் வெள்ளிங்கிரி ஆண்டவர் அருள் பாலிக்கும் ஏழாம் மலைக்கு அழைத்துச் சென்று வரக் கோரியிருந்தேன். சுவாமியும் அதற்கொரு தகுந்த நாளினைச் சொல்வதாகச் சொல்லி இருந்தார். கடந்த செவ்வாய்கிழமையன்று ரித்திக் நந்தாவும், நிவேதிதாவும் வெள்ளிங்கிரி ஆண்டவரின் அருள் பெறுவதற்காக மலையேறுவதற்கு ஆசிரமம் அழைத்துச் சென்றேன். 


எனக்கு எப்போதுமே தண்ணீரும், பசுஞ்சோலைகள் நிறைந்த இடமும் நிரம்பவும் பிடிக்கும். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை கேரளா சென்று வருவதுண்டு. சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஸ்வாமிகளின் ஆசிரமத்தின் பின்புறம் வளைந்தோடும் நொய்யல் ஆற்றில் சுவாமியுடன் உதவியோடு அவ்வப்போது குளிப்பது உண்டு. செவ்வாய் அன்றைக்கு நானும், குழந்தைகள் இருவரும், சாமியுடன் ஆற்றில் உடம்பு சூடு குறைய குளியலை முடித்து விட்டு ஆசிரமம் சென்றோம்.

சுவாமியைத் தரிசித்து விட்டு, உணவு அருந்த அமர்ந்திருந்த போது ஒரு வாளிப்பான வாலிபர் ஒருவர் முகமெல்லாம் சிரிப்போடு அனைவருக்கும் கேட்டுக் கேட்டு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். ஓடியாடி ஆசிரம பணிகளைச் செய்து கொண்டும், சுவாமியைத் தரிசிக்க வந்தவர்களுக்கு உணவு பரிமாறியும் துருதுருவென திரிந்து கொண்டிருந்தார்.

ஆசிரமத்திலிருந்து பசுமடத்திற்கு வரும் வழியில் சாமியிடம் அவர் பற்றி விசாரித்தேன். 

“ஆண்டவனே, அவருக்கு நுரையீரலில் பிரச்சினை, கிட்னி பெயிலியர் என்று இன்னும் ஒரு சில மாதங்களே உனக்கு இருக்கிறது என்றுச் சொல்லி மருத்துவர் அனுப்பி விட்டார். அவருக்கு எந்த வித கெட்டபழக்கமும் கிடையாது. திருமணத்திற்கும், அதற்குபிறகு பிறக்கும் குழந்தைக்கும் kuuta பொருள் சேர்த்து வைத்திருக்கிறார். இடையில் உடல் நிலை சரியில்லாத போது மருத்துவரிடம் காட்டி இருக்கிறார்.  ஏகப்பட்ட ஸ்கேன் அது இதுவென்று எடுத்துப் பார்த்து நுரையீரல் பாதிப்பு, கிட்னியில் ஒன்று போச்சு என்றுச் சொல்லி இருக்கிறார்கள் மருத்துவர்கள். அந்த நிலையில் யார் மூலமாகவோ ஆசிரமத்திற்கு வந்தார்.

யாருக்கு எத்தனை நாள் என்பதை அந்த ஆண்டவர் தான் முடிவு செய்யனும், குரு நாதரிடம் பிரார்த்தனை செய்து விட்டுச் செல்லுங்கள். ஒன்றும் ஆகாது. பதினைந்து நாட்கள் சென்று எல்லா டெஸ்டும் செய்து விட்டு ஆசிரமத்திற்கு மீண்டும் வாருங்கள் என்று சொன்னேன். வருத்தத்தோடு சென்றார். எல்லா டெஸ்டுகளையும் மீண்டும் எடுத்துப் பார்த்தால் அனைத்து சரியாக இருக்கின்றன என்று மருத்துவர்கள் சொன்னார்களாம். உடனே இங்கு வந்து விட்டார். அதுதான் அவருக்கு அவ்வளவு சந்தோஷம்” என்றார்.

”சரிங்க சாமி, ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது உடம்பு தேய்ப்பதற்கு மண்ணை எடுத்தேன். நீங்கள் வேண்டாமென்று தடுத்தீர்கள். அடுத்த நொடியில் எனது கையில் புத்தம் புதிய பீர்க்கின் குடல் கிடைத்தது. அதை வைத்து தேய்த்துக் குளித்தேன். மீண்டும் அதைக் காணவில்லை. அப்போது அது எப்படி வந்தது என்றும் எப்படிப் போனது என்றும் எனக்குத் தோன்றவில்லை. இப்போது கேட்கிறேன், அது எங்கிருந்து வந்தது?  எங்கே போனது எனச் சொல்லுங்கள்”

“அதுவா ஆண்டவனே, சொல்கிறேன்” என்றார்.