இந்தியப் பிரஜையாக இருக்கும் உண்மையான பெற்றோர்களின் கனவே தன் குழந்தைகளை என்ன விலை கொடுத்தாவது படிக்க வைத்து விட வேண்டுமென்பது.
ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை கல்வி சாதி போலத் தரம் பிரிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா சுதந்திர நாடாகி 75 ஆண்டுகளாகி விட்டன இது வரை இந்தியாவில் இறைவனைப் பூஜிக்க அனைத்து சாதியினருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. கோட்டுக்கு வெளியே நிற்கும் அவலம் இந்தியாவில் மட்டுமே நடக்கிறது. இந்தியாவில் சட்டத்தின் ஆட்சியா நடக்கிறது?
இதற்கு முழுக்காரணமும் 75 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து வரும் அரசுகள் மட்டுமே. இதைப் பற்றி யாருமே கேள்வி கேட்பதுமில்லை.
பணம் இருப்பவருக்கு மிக உயர்வான கல்வியையும், எல்லா தேர்வுகளிலும் எளிதில் வெற்றி அடையும் வாய்ப்புகளையும் தனியார் கல்வி நிறுவனங்கள் உருவாக்கிக் கொடுக்கின்றன.
இந்தியாவின் ஏழைக் குடிமகன் தன் உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்துப் பொருள் வாங்கும்போது, அதன் மூலமாக வரிகளைப் பெறும் அரசாங்கம், அந்த கடைசி ஏழைக் குடிமகனின் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுப்பதற்கான எந்த சாத்தியத்தையும் உருவாக்குவதே இல்லை.
நகரங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வியின் தரத்தையும், கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியின் தரத்திலும் மலை அளவு வித்தியாசம் இருக்கிறது. இந்திய ஒன்றிய அரசு இந்த மாணவர்களுக்கு ஒரே விதமான போட்டித் தேர்வை வைத்து அவர்களின் கனவுகளை அழிப்பதே வேலையாக வைத்துக் கொண்டிருக்கிறது.
ஏழைகளுக்கு கல்வி கற்று விடக்கூடாது என்பதில் அத்தனை சாத்தியங்களையும் ஒன்றிய அரசு நடை முறைப்படுத்தி வருகிறது.
ஆனால் தமிழ்நாட்டில் திரு.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராகப் வந்த பிறகு, உயர் கல்வி படிக்கும் ஏழை மாணவனுக்கும் மாதம் 1000 ரூபாய் தொகையும், அந்த மாணவனின் தாய்க்கு மாதம் 1000 ரூபாய் தொகையும் வழங்கிக் கொண்டிருக்கிறார். இதற்குப் பெயர் உதவித்தொகை இல்லை, அது அரசின் கடமை.
அரசுப் பள்ளிக்கூடங்களுக்கு இளம் மாணவர்கள் காலையில் பசியுடன் வரக்கூடாது என்பதற்காகக் காலை உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். உலகத்திலேயே முதன்முதலாக இப்படி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தவர் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்தான்.
இதோ, என்டிடிவியில் ஒரு காணொளி வந்து கொண்டிருக்கிறது, இதைப் பாருங்கள்.
https://youtu.be/CrEmEqY3R4c?si=c5nfSxjdOtHnMaDx
ஒரு தாய் தன் மகளின் கல்விக்காக, அதாவது வெறும் 3000 ரூபாய்க்காக மராத்தானில் ஓடி ஜெயித்தாராம். இதைப் பார்க்கும்போது மனமெல்லாம் வலிக்கிறது.
நம்மைச் சுற்றி இருக்கும் இந்த உலகம் என்ன மாதிரியானது என்பதைப் பற்றிச் சிந்திக்கவே முடியவில்லை. ஆட்சி செய்பவர்கள் என்ன மாதிரியான மனிதர்கள் என்றே தெரியவில்லை.
அரசாங்கத்தை நிர்வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், தங்களது குடிமக்களுக்குக் கல்வியைக் கொடுப்பதற்கு ஏன் இவ்வளவு கட்டுப்பாடுகளையும் விதிகளையும் ஏற்படுத்தி மாணவர்களைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரியவே இல்லை.
இது இனிமேலும் தொடர்ந்து கொண்டே இருக்குமா?
இதற்குத்தான் யார் முடிவு கட்டுவது?
ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கொள்கைகள் இளைஞர்களின் கனவுகளைச் சிதைப்பதாக இருக்கும் பட்சத்தில், அந்தத் தலைவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் மாணாக்கர்களுக்கு உண்டு.
ஆனால், சமீபகாலமாக அரசியலில் இளம் சிறார்களால் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் மாணாக்கர்களின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைத்து விட்டிருக்கின்றன. மாணக்கர்கள் படிப்பறிவின்றி இருந்தால் தான் தனிப்பட்ட ஒவ்வொரு நரிகளும் தங்கள் நய வஞ்சகத்தால் இன்பத்தை நுகரலாம் என சதி செய்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் பல ஊடகவியலாளர்கள்.
இந்தியாவில் இருக்கும் இளைஞர்களின் வாழ்க்கை முறை மிக மிகக் கொடுமையாக, மிக மிக ஆபத்தான பாதையில் சமூக வலைதளங்களால் (சோசியல் மீடியா) கொண்டு செல்லப்படுகிறது. யாருக்கும் எவரைப் பற்றியும் கவலை இல்லை.