நான் யார் என்று அறிதலே ஆன்மீகம் என்பார்கள். பல சுவாமிஜிக்கள் அதைத்தான் பக்தர்களிடம் சொற்பொழிவு ஆத்திக் கொண்டிருப்பார்கள். பக்தர்களும் புளகாங்கிதம் அடைந்து, தீவிரமாக நான் யார் என்று அறிவதிலே ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருப்பார்கள்.
Thursday, August 27, 2026
இறைவன் சிரிக்கும் நேரம்
நான் யார் என்று அறிதலே ஆன்மீகம் என்பார்கள். பல சுவாமிஜிக்கள் அதைத்தான் பக்தர்களிடம் சொற்பொழிவு ஆத்திக் கொண்டிருப்பார்கள். பக்தர்களும் புளகாங்கிதம் அடைந்து, தீவிரமாக நான் யார் என்று அறிவதிலே ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருப்பார்கள்.
சிறப்பு பொருளாதார மண்டலங்களின் ரகசியம்
வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட இந்திய சந்தையில், வெளிநாட்டுப் பெருநிறுவனங்கள் முதலீடு செய்யும் பில்லியன் கணக்கான டாலர்கள் எப்போதும் முதன்மைச் செய்தியாகவும், பொருளாதார வெற்றியின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றன.
ஆனால், இந்த பிரம்மாண்ட முதலீடுகளுக்குப் பின்னால், உள்ளூர் பொருளாதாரத்தில் அவை உருவாக்கும் கண்ணுக்குத் தெரியாத 'பொருளாதார வலைப்பின்னல்' (Economic Network) மற்றும் அதன் உண்மையான தாக்கம் குறித்து பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் தொடர் விவாதங்கள் எழுந்து வருகின்றன.
அரசாங்கங்கள் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்காக, 'சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்' (SEZs) மூலம் பல்வேறு சலுகைகளை அள்ளி வழங்குகின்றன.
மானிய விலையில் மின்சாரம், பரந்த நிலப்பரப்பு, வரி விலக்குகள், தளர்த்தப்பட்ட சட்ட விதிமுறைகள் மற்றும் நேரடி நிதிச் சலுகைகள் என சிவப்புக் கம்பளம் விரிக்கப்படுகிறது.
வணிக ரீதியாகப் பார்த்தால், பெருநிறுவனங்கள் முதலீட்டின் மீதான வருவாயை (ROI) நோக்கியே செயல்படுகின்றன. இந்த அரசுச் சலுகைகள் அவர்களின் லாப இலக்கை மிக எளிதாக எட்ட உதவுகின்றன.
இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது, அவை உள்ளூர் பொருளாதாரத்தில் ஒரு சங்கிலித் தொடர் விளைவை ஏற்படுத்துகின்றன.
இந்தியாவில் துவங்கப்படும் நிறுவனங்களுக்கு கிடைக்காத சலுகைகள், இவர்களுக்கு உடனடியாக கிடைத்து விடுகின்றன. இந்தியர்களின் நிறுவனங்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நிறுவனங்களுடன் போட்டியிட இயலாது.
ஏனென்றால், அரசின் சலுகைகளால் குறைந்த வரிகள், சலுகைகள் ஆகியவற்றால் முதலீட்டாளர்களின் லாபம் ஆரம்பத்திலேயே உறுதி செய்யப்படுகிறது.
SEZ அமைந்திருக்கும் பகுதிகளைச் சுற்றியுள்ள உள்ளூர் நில உரிமையாளர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்கிறது.
உள்ளூர் சப்ளையர்கள், உதிரிபாக உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் வர்த்தகம் கணிசமான வளர்ச்சியை எட்டுகிறது.
அதிக அளவிலான பணப் பரிவர்த்தனைகள் நடப்பதால் வங்கி மற்றும் நிதித்துறை பலமடைகிறது.
நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, உள்ளூர் மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கிறது.
நீண்ட கால அடிப்படையில் அரசாங்கத்திற்கு நிலையான வரி வருவாய் கிடைப்பதற்கான கட்டமைப்பு உருவாகிறது.
காகித அளவில் பார்க்கும்போது, இது பிராந்திய பொருளாதாரச் சுழற்சியையும் மேம்பாட்டையும் ஊக்குவிக்கும் ஒரு மிகச்சிறந்த 'வின்-வின்' (Win-Win) மாதிரியாகத் திகழ்கிறது.
இருப்பினும், இத்தகைய கட்டமைக்கப்பட்ட பொருளாதார அமைப்புகளில் சில சிக்கலான முரண்பாடுகளும் ஒளிந்திருப்பதாக சமூக ஆர்வலர்களும் பொருளாதார ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த வெளிநாட்டு மூலதனப் பாய்ச்சலில் நாம் உற்று நோக்க வேண்டிய முக்கியமானவைகளைப் பார்க்கலாம்.
இந்த ஒட்டுமொத்தப் முதலீட்டு நிறுவனங்கள் அடையும் லாபத்தில், பெரும் பகுதி லாபத்தை அள்ளிக்கொண்டு போவது யார்?
இந்த உழைப்புச் சங்கிலியின் அடிமட்டத்தில் இருக்கும் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் பங்கு எவ்வளவு?
நில இழப்பு, இயற்கை வளச் சுரண்டல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற மறைமுகமான விலையைக் கொடுப்பது யார்?
இதற்கான பதிலைக் கண்டறிந்தால், உண்மை சுடும்.
என்ன ஒன்று - அந்தக் காலத்தில் ஆங்கிலேய அரசு ஒவ்வொரு நாட்டினையும் போரில் வென்று, அந்த நாட்டில் இருக்கும் பொருளாதார வளங்களை தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்றது. ஆனால் இந்த நவீன கால, உலகப் பொருளாதாரத்தில், வலிமையான நாடுகள் முதலீடுகள் என்கிற போர்வையில் மறைமுகமாக ஒவ்வொரு நாட்டின் வளத்தை தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்கின்றன.
ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வது லாபம் பெறத்தானே? இல்லையென்று மறுக்க முடியுமா?
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZ) என்பது அனைத்துத் தரப்பினருக்குமான கூட்டு வெற்றியைத் தரும் ஒரு திட்டமா, அல்லது ஒரு சிலரின் லாப வேட்டைக்காகப் பின்னப்பட்ட சாதுரியமான பொருளாதார வலையா என்ற கேள்வி இன்னும் விடைபெறாமலேயே தொடர்கிறது.
சமநிலையான பொருளாதார வளர்ச்சிக்கு, சலுகைகளைப் பெறும் நிறுவனங்கள் உள்ளூர் சமூகத்தின் வாழ்வாதாரத்தையும், இயற்கை வளங்களையும் பாதுகாப்பதை அரசு உறுதி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
அரசு நிச்சயம் செய்யும் என நம்புகிறேன்.
வளமுடன் வாழ்க.