குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, August 27, 2026

இறைவன் சிரிக்கும் நேரம்


நான் யார் என்று அறிதலே ஆன்மீகம் என்பார்கள். பல சுவாமிஜிக்கள் அதைத்தான் பக்தர்களிடம் சொற்பொழிவு ஆத்திக் கொண்டிருப்பார்கள். பக்தர்களும் புளகாங்கிதம் அடைந்து, தீவிரமாக நான் யார் என்று அறிவதிலே ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருப்பார்கள். 

பக்தர்களில் பல வகை முயற்சிகள் செய்து நான் யார் என்று தெரிந்துகொள்ள முயல்வார்கள். அவர்களால் முடியவே முடியாது. ஏனென்றால் அப்படி ஒன்று இருப்பதாகச் சொல்வார்கள். ஆனால் கண்டவர் விண்டிலர். 

வேதங்களிலும் உபநிடதங்களிலும் "நான் யார்?" என்ற கேள்விக்கு, நாம் வெளிப்புறமாக நம்மைப் பார்த்துக்கொள்ளும் உடல், மனம் அல்லது பெயர் ஆகியவை "நான்" அல்ல, எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கும் 'ஆத்மா' தான் உண்மையான "நான்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது

உபநிடதங்களில் உள்ள மகா வாக்கியங்கள் என்ன சொல்கிறது என்றால், அஹம் பிரம்மாஸ்மி (நான் பிரம்மமாக இருக்கிறேன்) அதாவது, பிரபஞ்சம் முழுவதிலும் நிறைந்திருக்கும் பேரறிவு அல்லது இறைத்தன்மையின் ஒரு பகுதியே நீ என்றும்,

தத் வம் அஸி (அதுவாக நீ இருக்கிறாய்) நீ தேடிக்கொண்டிருக்கும் பரம்பொருள் வேறு எங்கோ இல்லை, அது நீயேதான் என்றும்,

அயம் ஆத்மா பிரம்மா (இந்த ஆத்மாவே பிரம்மம்) என்றும்,

பிரஞ்ஞானம் பிரம்மா (தூய அறிவே பிரம்மம்) என்றும் சொல்லப்பட்டிருக்கின்றன.

வேதங்களின்படி "நான்" என்பது அழிவில்லாதது என்றும், உடல் பிறக்கும், வளரும், அழியும். ஆனால் "நான்" எனப்படும் ஆத்மாவிற்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை எனவும் எழுதப்பட்டிருக்கிறது.

சச்சிதானந்தம் என்றால் உண்மையான "நான்" என்பது சத் (நிலையான உண்மை), சித் (தூய அறிவு), ஆனந்தம் (எல்லையற்ற பேரின்பம்) வடிவமானது என்கிறது.

வேதங்களின்படி நீங்கள் வெறும் ரத்தமும் சதையுமாலான உடலோ அல்லது எண்ணங்களின் தொகுப்பான மனதோ அல்ல; நீங்கள் எல்லையற்ற, அழிவில்லாத, பேரறிவு மயமான பிரம்மம் அதாவது ஆத்மா ஆவீர்கள்.

படித்து விட்டீர்களா? பின்னே ஏன் இன்னொரு பிரம்மத்திடம் சென்று சரணடைகின்றீர்கள்? என்று உங்களுக்குள்ளே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

வெள்ளிங்கிரி சுவாமிகள் ஜீவசமாதிக்கு சென்றிருந்த போது, ஜீவசமாதிக்கு வெளியில் அழுகிய தோல் உடைய ஒரு நாய்க்கு வேப்ப எண்ணெய் தடவிக் கொண்டிருந்தார். சரியான நாற்றம். குமட்டிக் கொண்டு வந்தது.

கைகழுவி விட்டு என்னிடம் வந்தார். தொற்று நோய் உண்டாகி விடும் சுவாமி என்றேன்.

என்னைப் பார்த்து சிரித்து விட்டு, அங்கிருப்பதுதானே இங்கேயும் இருக்கிறது எனச் சொன்னார்.

அதாவது அதுவும் ஒரு உயிர், நீங்களும் ஒரு உயிர் என்றார். 

அதாவது நீயே நான், நானே நீ.

அஹம் பிரம்மாஸ்மி !

இந்தச் சம்பவம் சொல்லும் கருத்து புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

கடந்த மாதம் ஹைதராபாத் சென்றிருந்தேன். 

நகரமெல்லாம் காங்க்ரீட் மரங்கள் முளைத்திருந்தன. பெரும் பொருளாதார வளர்ச்சியைப் பார்த்தேன். வானுயர்ந்த கட்டிடங்கள் அழகாய் வாமன கடவுள் உயர்ந்தது போல உயரமாய் நின்று கொண்டிருந்தன.

வாமன கடவுள் - கேராளா மாவலி ஓணம் பண்டிகை உண்மை கதை உங்களுக்குத் தெரியும் தானே? தெரியாது என்றால் கீழே இருக்கும் படத்தைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள்.


நன்றி விடுதலை பத்திரிக்கை.

மக்கள் பரபரப்பாய் இருந்தார்கள். 

ஐடிசி ஹோட்டலில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தேன். 

ஹைதராபத்தின் பாரம்பரிய வட்டவடிவ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் அருகில் இருந்த ஒரு நடைபாதை சிக்னலில் கார் நின்றது.

இடது புறம் பார்த்த போது அந்த நடைபாதையில் ஆண் ஒருவர், அவரின் மனைவியுடன் ஒரு குழந்தையும் சேர்ந்து ரோஜாக்களை ஒரு வண்ண காகிதத்தில் மலர்ச் செண்டு போல கட்டிக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பெண் குழந்தையின் உடை கிழிந்து இருந்தது. தலைமுடிகள் எண்ணை இல்லாமல் வறண்டு கிடந்தன. அவளின் முகம் அழுக்கடைந்து இருந்தது. அவளின் பெற்றோர்களின் உடைகள் துவைக்கப்படவில்லை. அவர்களின் தோற்றமே அழுக்கடைந்து இருந்தன. ஆயிரக்கணக்கான வாகனங்களின் புகையில் பொலிவிழந்து கிடந்தார்கள். அவர்களின் நுரையீரல்களின் நிலை?

அந்த மலர்ச் செண்டை - சிக்னலில் காத்திருக்கும் கார்களில் செல்வோரிடம் விற்பனை செய்து, அதில் வரும் வருமானத்தில் அவர்கள் உணவு உண்டு பிழைத்திருக்க வேண்டும். அந்த மலர்ச் செண்டில் கட்டப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பேப்பருக்கு ஜி.எஸ்.டி வரி கொடுத்துதான் வாங்கி இருப்பார்கள். அந்த வரி இந்திய ஒன்றிய அரசுக்குச் சென்றிருக்கும்.

அந்த வரியில் தான் மக்களவை உறுப்பினர்களும், மாநிலங்களவை உறுப்பினர்களும், ஜனாதிபதியும் ஊதியம் பெறுவார்கள்.

ஒன்றிய அரசுக்கு இந்தக் குடும்பத்தின் வாயிலாக வரி கிடைத்திருக்கும். ஆனால் அரசுக்கு இவர்கள் யாரோ? 

இந்தியனாகப் பிறந்தால் அரசுக்கு வரி கட்டியே ஆக வேண்டும். வரி கட்டாமல் பிச்சைக்காரன் கூட இங்கு வாழ முடியாது. அந்தளவுக்கு மக்களிடம் வரி வாங்கும் வலைப்பின்னலை இந்திய அரசு உருவாக்கி வைத்திருக்கிறது.

வரி கொடுக்கும் மக்களின் நல்வாழ்வுக்கு இந்திய அரசு என்ன செய்கிறது? யோசித்துக் கொள்ளுங்கள்.

ஒன்பதாயிரம் கோடிக்கு வரிப்பணத்தில் விமானமும், இருநூறு கோடிக்கு ஒருவர் வசிக்கும் வீட்டையும் கட்டும் ஒன்றிய அரசு - வரி கொடுக்கும் மக்களுக்கும் என்ன செய்து கொண்டிருக்கிறது? என யோசித்துப் பாருங்கள். 

இந்த ஏழைக்குடும்பத்துக்கு தெரியுமா வாக்குரிமை பதிவு பற்றி?

இந்த ஏழைகளுக்குத் தெரியுமா மக்கள் தொகை பதிவு பற்றி?

அன்றாடப் பசி தீர்க்கப்போராடும் இந்தக் குடும்பத்திற்கு, இதெல்லாம் என்னவென்று தெரியுமா?

அவர்களைப் பார்த்த போது, எனக்குள் உண்டாகிய கேள்விகள் இவையெல்லாம்.

அந்தச் சிறுமியை அழைத்தேன். சிரித்துக் கொண்டே ஓடி வந்தது. அவளிடம் ஐநூறு ரூபாயை நீட்டினேன். அவள் வாங்கவில்லை.

திரும்பி அவளின் பெற்றோர்களிடம் ஓடினாள். ஒருவேளை அனுமதி கேட்பாளோ என்று நினைத்தேன்.

ஒரு அழுக்குத் துணிக்குள் இருந்த, உடலில் உடையில்லாத ஒரு சிறு பெண் குழந்தையை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு ஓடி வந்தாள் என்னிடம்.

ஒரு நிமிடம் நெஞ்சு பதைபதைத்தது. 

அந்தப் பெண் குழந்தை இடது கையை நீட்டி பணத்தை வாங்கியது. நடைபாதையில் ஏறினார்கள் இருவரும்.

இருவரும் திரும்பி நின்றார்கள். அந்தச் சிறுமியின் இடுப்பில் இருந்த குழந்தை என்னைப் பார்த்து அப்படி ஒரு சிரிப்பு சிரித்தது. சிரித்துக் கொண்டே கையாட்டிக் கொன்டே இருந்தார்கள் இருவரும்.

அருகில் இருந்த நண்பர் என்ன சார் இப்படிச் சிரிக்கிறார்கள் என்று கேட்டார்.

அந்த இரு குழந்தைகளின் முகம் மட்டும் சிரிக்கவில்லை. கண்கள் ஒளி வீசி சிரித்தன.

அந்தக் கண்களின் ஒளியில் இறைவனைக் கண்டேன்.

கிரீன் சிக்னல் விழுந்தது. கார் நகர்ந்தது. அவர்கள் காரை நோக்கிச் சிரித்துகொண்டே இருந்தார்கள்.

வளமுடன் வாழ்க.

குறிப்பு: மேலே இருக்கும் புகைப்படத்தின் ஒரிஜினல் என்னிடம் இருக்கிறது. அதை இங்குப் பதிவிடவில்லை. ஏ.ஐ புகைப்படத்தைப் பதிவேற்றி இருக்கிறேன்.

* * * 

இப்போது சொல்லுங்கள், நீங்கள் யார், நான் யார் என்று உங்களுக்குப் புரிந்து விட்டதா?

அவர் யார்? இவர் யார்? அது யார்? இது யார்? இப்படியெல்லாம் சிந்தித்துப் பாருங்கள். 

உங்கள் அறிவு உங்களுக்கு காட்டுவது எதுவோ அதுவே நான் யார்?




சிறப்பு பொருளாதார மண்டலங்களின் ரகசியம்


வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட இந்திய சந்தையில், வெளிநாட்டுப் பெருநிறுவனங்கள் முதலீடு செய்யும் பில்லியன் கணக்கான டாலர்கள் எப்போதும் முதன்மைச் செய்தியாகவும், பொருளாதார வெற்றியின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றன. 

ஆனால், இந்த பிரம்மாண்ட முதலீடுகளுக்குப் பின்னால், உள்ளூர் பொருளாதாரத்தில் அவை உருவாக்கும் கண்ணுக்குத் தெரியாத 'பொருளாதார வலைப்பின்னல்' (Economic Network) மற்றும் அதன் உண்மையான தாக்கம் குறித்து பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் தொடர் விவாதங்கள் எழுந்து வருகின்றன.

அரசாங்கங்கள் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்காக, 'சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்' (SEZs) மூலம் பல்வேறு சலுகைகளை அள்ளி வழங்குகின்றன. 

மானிய விலையில் மின்சாரம், பரந்த நிலப்பரப்பு, வரி விலக்குகள், தளர்த்தப்பட்ட சட்ட விதிமுறைகள் மற்றும் நேரடி நிதிச் சலுகைகள் என சிவப்புக் கம்பளம் விரிக்கப்படுகிறது. 

வணிக ரீதியாகப் பார்த்தால், பெருநிறுவனங்கள் முதலீட்டின் மீதான வருவாயை (ROI) நோக்கியே செயல்படுகின்றன. இந்த அரசுச் சலுகைகள் அவர்களின் லாப இலக்கை மிக எளிதாக எட்ட உதவுகின்றன.

இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது, அவை உள்ளூர் பொருளாதாரத்தில் ஒரு சங்கிலித் தொடர் விளைவை ஏற்படுத்துகின்றன.

இந்தியாவில் துவங்கப்படும் நிறுவனங்களுக்கு கிடைக்காத சலுகைகள், இவர்களுக்கு உடனடியாக கிடைத்து விடுகின்றன. இந்தியர்களின் நிறுவனங்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நிறுவனங்களுடன் போட்டியிட இயலாது.

ஏனென்றால், அரசின் சலுகைகளால் குறைந்த வரிகள், சலுகைகள் ஆகியவற்றால் முதலீட்டாளர்களின் லாபம் ஆரம்பத்திலேயே உறுதி செய்யப்படுகிறது.

SEZ அமைந்திருக்கும் பகுதிகளைச் சுற்றியுள்ள உள்ளூர் நில உரிமையாளர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்கிறது.

உள்ளூர் சப்ளையர்கள், உதிரிபாக உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் வர்த்தகம் கணிசமான வளர்ச்சியை எட்டுகிறது.

அதிக அளவிலான பணப் பரிவர்த்தனைகள் நடப்பதால் வங்கி மற்றும் நிதித்துறை பலமடைகிறது.

நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, உள்ளூர் மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கிறது.

நீண்ட கால அடிப்படையில் அரசாங்கத்திற்கு நிலையான வரி வருவாய் கிடைப்பதற்கான கட்டமைப்பு உருவாகிறது.

காகித அளவில் பார்க்கும்போது, இது பிராந்திய பொருளாதாரச் சுழற்சியையும் மேம்பாட்டையும் ஊக்குவிக்கும் ஒரு மிகச்சிறந்த 'வின்-வின்' (Win-Win) மாதிரியாகத் திகழ்கிறது.

இருப்பினும், இத்தகைய கட்டமைக்கப்பட்ட பொருளாதார அமைப்புகளில் சில சிக்கலான முரண்பாடுகளும் ஒளிந்திருப்பதாக சமூக ஆர்வலர்களும் பொருளாதார ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த வெளிநாட்டு மூலதனப் பாய்ச்சலில் நாம் உற்று நோக்க வேண்டிய முக்கியமானவைகளைப் பார்க்கலாம்.

இந்த ஒட்டுமொத்தப் முதலீட்டு நிறுவனங்கள் அடையும் லாபத்தில், பெரும் பகுதி லாபத்தை அள்ளிக்கொண்டு போவது யார்?

இந்த உழைப்புச் சங்கிலியின் அடிமட்டத்தில் இருக்கும் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் பங்கு எவ்வளவு?

நில இழப்பு, இயற்கை வளச் சுரண்டல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற மறைமுகமான விலையைக் கொடுப்பது யார்?

இதற்கான பதிலைக் கண்டறிந்தால், உண்மை சுடும்.

என்ன ஒன்று - அந்தக் காலத்தில் ஆங்கிலேய அரசு ஒவ்வொரு நாட்டினையும் போரில் வென்று, அந்த நாட்டில் இருக்கும் பொருளாதார வளங்களை தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்றது. ஆனால் இந்த நவீன கால, உலகப் பொருளாதாரத்தில், வலிமையான நாடுகள் முதலீடுகள் என்கிற போர்வையில் மறைமுகமாக ஒவ்வொரு நாட்டின் வளத்தை தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்கின்றன.

ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வது லாபம் பெறத்தானே? இல்லையென்று மறுக்க முடியுமா?

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZ) என்பது அனைத்துத் தரப்பினருக்குமான கூட்டு வெற்றியைத் தரும் ஒரு திட்டமா, அல்லது ஒரு சிலரின் லாப வேட்டைக்காகப் பின்னப்பட்ட சாதுரியமான பொருளாதார வலையா என்ற கேள்வி இன்னும் விடைபெறாமலேயே தொடர்கிறது. 

சமநிலையான பொருளாதார வளர்ச்சிக்கு, சலுகைகளைப் பெறும் நிறுவனங்கள் உள்ளூர் சமூகத்தின் வாழ்வாதாரத்தையும், இயற்கை வளங்களையும் பாதுகாப்பதை அரசு உறுதி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அரசு நிச்சயம் செய்யும் என நம்புகிறேன்.

வளமுடன் வாழ்க.