குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, February 7, 2020

இறகா? சிறகா?

கோவை, சிவானந்தா மில் சாலையில் வாகனங்களின் பெருக்கம் அதிகமாகி விட்டது. ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் இருந்த கீரைத் தோட்டம் காணாமல் போய், பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. எப்போதும் குளிர்ச்சியாக இருந்த இடங்கள் வெப்பத்தால் சுடுகிறது. 

மூன்றாவது தெருவின் மூலையில் அழுக்கேறி கிடக்கும் குப்பைத்தொட்டியில் கிடைக்கும் உணவை உண்டு, அவ்விடத்திலேயே தங்கி ஒரு நாய் சில குட்டிகளை ஈன்று வளர்த்து வருகிறது. தாய் நாயின் உடம்பெல்லாம் வங்கு பிடித்தது போல இருக்கும். ஆனால் குட்டிகள் ஒவ்வொன்றும் அழகோ அழகு. வீட்டில் ஏற்கனவே இரண்டு லேப்ராடர்கள் இருப்பதால் இவைகளுக்கு இடம் கொடுக்க முடியாது. நினைத்தாலும் நடக்காது. அம்மணி ஓகே சொல்லனும்.

தினமும் அக்குட்டிகளை பார்ப்பது வாடிக்கை. 

காலை ஒன்பதரை இருக்கும். அத்தெருவினைக் கடக்கும் போது சிறு செவலைக் குட்டி, வாலை ஆட்டியபடி ஒருவரின் காலைச் சுற்றிச் சுற்றி வந்தது. அவர் மேரி பிஸ்கட் கட்டு ஒன்றினைப் பிரித்து, கால்களால் புற்களைச் சமப்படுத்தி, அதன் மேல் வைத்தார். 

“இந்தா, சாப்பிடு” என்றார்.

அச்சிறு குட்டி, வாலை ஆட்டிக் கொண்டு, அவசர அவசரமாக பிஸ்கட்டுகளை விழுங்கியது. அவர் குட்டையாக இருந்தார். நெற்றியில் விபூதி பூசி இருந்தார். கண்களில் கருணை. அக்குட்டி பிஸ்கட் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் அங்கிருந்து நகர்ந்தேன். மனதுக்கு இதமாய் இருந்தது. 

ஜீவகாருண்யம். உலகத்தை உயிர்ப்போடு வைத்திருக்கும் உணர்ச்சி.

சக உயிர்களின் மீதான கருணை எல்லோருக்குள்ளும் உண்டு. ஆனால் அவர்கள் வெளிக்காட்டுவதில்லை. வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் தெய்வமாய் வணங்கப்படுகிறார். எத்தனை எத்தனையோ கோடானு கோடி மனிதர்கள் துயரப்படுபவர்களுக்கு பொருளாகவும், பணமாகவும் கொடுக்கிறார்கள். பிறரின் துயரம் கண்டு உள்ளம் துடிப்பவர்கள் மனிதர்கள். கண்டும் காணாது செல்பவர்கள் மிருகங்கள்.

ஆந்திராவில் ஒரு ஏழைப் பாட்டி ரூ.2.50க்கு தோசை கொடுக்கிறது. கோவையில் சாந்தி கேண்டீன் 10 ரூபாய்க்கு அறுசுவை உணவு கொடுக்கிறது. அவர் பணத்தைப் பார்த்து விட்டார். புகழையும் அடைந்து விட்டார். இவை எதுவும் அவருக்கு எதையும் தரப்போவதில்லை. பணக்காரர்களிடம் பெயரும், புகழும் பெற்றதனால் கிடைக்கப்போவது ஒன்றும் இல்லை. சாந்தி கேண்டீன் சண்முகம் அவர்களுக்குள் பொங்கி வழிந்து கொண்டிருப்பது ஜீவகாருண்யம்.

கலெக்டரிடம் பல ஹோட்டல்காரர்கள் புகார் கொடுத்தனராம். ”விலை குறைத்து தான் கொடுப்பேன், விலை இல்லாமலும் கொடுப்பேன் , அது என் விருப்பம்” எனச் சண்முகம் சொன்னதாகச் செவிவழிச் செய்தி. ஜீவகாருண்யத்தையும் அரசாங்கம் தடுக்கும் என்பது நிதர்சன உண்மை.

மீண்டும் ஒரு ஹோலோஹாஸ்ட்டை (ஜெர்மனியில் ஹிட்லர் உருவாக்கிய வதைக்கூடம்) உருவாக்க நினைப்பவர்கள் இருக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம். அரசியல் மக்களுக்கானது அல்ல என்பதை காலம் மீண்டும் நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. கலிபுருஷன் அழிவு நடனம் ஆடுகிறான்.

(இன்று உலகையே வேவு பார்க்கும் தொழில் நுட்பத்தை உருவாக்கியவர்களின் மூதாதையர்களான ஜூவிஸ்கள் இவர்கள். இவர்களைப் படுகொலை செய்த மாபெரும் தலைவர் ஹிட்லர்)

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது, அனைத்து உலக நாடுகளும் வேடிக்கை தான் பார்த்தன. இலங்கையில் குருடூ ஆயில் இருந்திருந்தால் அமெரிக்கா தலையிட்டு இருக்கும். நேச நாடுகள் போர்ப்படைகளை அனுப்பி இருக்கும். ஐ.நா. பொருளாதார தடை விதித்திருக்கும். ஜனநாயகத்தைப் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் உலக நாடுகளும், பத்திரிக்கையாளர்களும், அமைப்புகளும் கதறி இருப்பார்கள். அழிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதால் உலகமே வாளாயிருந்தது. வேடிக்கை பார்த்தன. தமிழும், தமிழர்களும் உலகில் வாழவே முடியாத, கூடாத உயிரினமாக மாறிக் கொண்டிருக்கிற அவலம் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.



(இலங்கை தமிழர்களின் இனப்படுகொலைகள்)

சமையற்கட்டில் இன்று அடியேனுக்கு காய்கறிகள் நறுக்கும் வேலை இல்லை. காலையில் காலச்சுவடில் வெளிவந்திருந்த ’ரேமண்ட் கார்வரின்-இறகுகள்’ சிறுகதையைப் படிக்க ஆரம்பித்தேன்.  இட்லியும் எனக்குப் பிடிக்கவே பிடிக்காத தக்காளிச் சட்னியும் சாப்பிட்டு விட்டு (எவன் இந்தத் தக்காளியைக் கண்டுபிடித்தானோ தெரியவில்லை. எதை எடுத்தாலும் தக்காளி, தக்காளி. இது இல்லாத உணவு இல்லையென்று ஆகிவிட்டது) படுக்கையில் படுத்துக்கொண்டே கதையை  படிக்க  ஆரம்பித்தேன்.

உள்ளூர் சரக்கே விற்பனை ஆகவில்லை, இதில் வெளி நாட்டுச் சரக்கை எங்கே விற்பது என்பார்கள். அடியேனுக்கு வெளி நாட்டு நாவல்கள், சிறுகதைகள் மீது ஈர்ப்பே இருந்ததில்லை.

தமிழக எழுத்தாளர்கள் பெண்களின் கவட்டிக்குள்ளிருந்தும்,  ஜாதிய புனைவுகளிலுருந்தும், ஏழைப் புனைவுகளில் இருந்தும் வெளிவராத நிலையில், வெளி நாட்டுக்காரர்கள் புதிதாக என்ன எழுதி இருக்கப்போகின்றார்கள் என்ற நினைப்பு.

ஏனோ தெரியவில்லை இன்றைக்கு வெளி நாட்டு எழுத்தாளரின், அக்கதையைப் படித்தேன். என்ன காரணம் என்று தெரியவில்லை. படித்து முடித்ததும் இனம் புரியாத ஒரு உணர்வு என்னைப் பீடித்தது. இதற்குள் மனைவி, “என்னங்க, என்ன யோசிக்கிறீங்க? என்ன ஆச்சு?” எனக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

பொன்னிறக்கூந்தல் ஃபிரானும், அவள் கணவன் ஜேக்கும், தன்னுடன் வேலை செய்யும் பட்டின் வீட்டிற்கு விருந்துக்குச் செல்கிறார்கள். பட்டின் மனைவி ஓலா. ஃபிரானுக்கும் ஜேக்கிற்கும் குழந்தை இல்லை. பட் வீட்டில், பட்டின் அவலட்சனமான குழந்தை ஹெரால்டை இருவரும் பார்க்கிறார்கள். வீடு திரும்பிய பிறகு ஃபிரானும் ஜேக்கும் கலவி கொள்கிறார்கள். குழந்தையோடு வாழ்கிறார்கள். அதன் பிறகு ஜேக் பட்டின் வீட்டிற்குச் செல்லவில்லை. ஜேக்கும், பட்டும் அலுவலகத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

அக்கதையில் வரும் ஒரு சிறு பகுதியைப் படியுங்கள்.

”பட்டை இப்போதும் தொழிற்சாலையில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். இருவரும் ஒன்றாக வேலை செய்கிறோம், ஒன்றாக உட்கார்ந்து மதிய உணவுப் பொட்டலங்களைப் பிரிக்கிறோம். நான் விசாரித்தால் அவனும் ஓலா, ஹெரால்டைப் பற்றிச் சொல்கிறான். ஜோயி இப்போது இல்லையாம். ஒருநாள் இரவு தூங்குவதற்கு மரத்துக்குப் பறந்து சென்ற அது, அப்புறம் காணவேயில்லை, திரும்பி வரவேயில்லை. அதற்கும் வயதாகிவிட்டிருந்தது. ஆந்தைகள் அதன் கதையை முடித்துவிட்டிருக்கும். பட் தோளைக் குலுக்கிக் கொள்கிறான். சாண்ட்விச்சைக் கடித்துக்கொண்டே, “நீ இப்போது ஹெரால்டைப் பார்க்கவேண்டுமே. ஒருநாள் அவன் அமெரிக்கன் புட்பாலில் லைன்பேக்கராக விளையாடத்தான் போகிறான், பார்த்துக்கொண்டேயிரு,” என்கிறான். நான் ஒப்புதலாகத் தலையை அசைத்துக்கொள்கிறேன். நாங்கள் இன்னமும் நண்பர்கள்தாம். அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் அவனிடம் எதைப்பற்றிப் பேசுவதென்பதில் கவனமாக இருக்கிறேன். அது அவனுக்கும் தெரிகிறது. இப்படி இருக்கவேண்டாமே என்றுதான் அவனும் நினைக்கிறான். நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.”

(நன்றி:காலச்சுவடு, ரேமண்ட் கார்வர், ஜி.குப்புசாமி)

இக்கதையில் வரும் ஜோயி என்கிற மயில் ஹெரால்டோடு விளையாடும். கருப்பு கலரில், கைப்பெருசில், அவலட்சமான குயிலுக்கு இனியகுரலைக் கொடுத்த இறைவன், அழகிய நீண்ட தோகைகளை விரித்தாடும் போது, காண்பவரின் உள்ளத்தைக்கொள்ளை கொள்ளும் அழகின் உருவமான மயிலுக்கு கர்ண கடூரமான குரலைக் கொடுத்திருக்கிறான். ஏன் இந்த வேறுபாடு? இயற்கைப் படைப்பின் ரகசியம் அது.

அவலட்சனமான குழந்தையின் தகப்பனான பட்டிடம் ஜேக், ஹெரால்டைப் பற்றி விசாரிப்பதைத் தவிர்க்க நினைக்கிறான். பட்டிற்கு ஹெரால்ட் மகன். அவலட்சணமானவன். இருப்பின் அவன் மகன்.

அவர்களுக்குள்ளான தயக்கங்கள் அழகு பற்றிய உளவியல் பிரச்சினையாக இருக்கிறது. ஜேக்கின் மன நிலையும், பட்டின் மன நிலையையும் என்னுள் உணர முடிந்தது. அதை நிகழ்த்தியது இறகுகள் கதை. வெறும் வார்த்தைகள் தான். ரேமண்ட் படிப்பவரின் மனதுக்குள் கதை மாந்தர்களின் உள்ளத்தை உணர வைத்திருக்கிறார். நீண்ட நேரமாக நானும் பட்டைப் போலவும், ஜேக்கைப் போலவும் உணர்ந்தேன்.

திடீரென இறகுகள், சிறகுகள் என்ற வார்த்தைகளின் அர்த்தம் என்ன என எனக்குள்  ஒரு கேள்வி எழுந்தது.

ஆமாம், பறவைகளுக்கு இருப்பது இறகா? சிறகா? எந்த வார்த்தைச் சரி?

உங்களுக்குத் தெரியுமா?

* * *

விடை : சிறகு - இறகுகளின் தொகுதி


1 comments:

நிகழ்காலத்தில்... said...

மூன்று விதமான நிகழ்வுகள். ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்பு. பொருள் சார்ந்து ஓடும்போது இளைப்பாறுதலுக்கானவை இவை மட்டுமே.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.