குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, August 20, 2015

எம். எல். ஏ - தொடர் 3

”சுதந்திரம் என்னய்யா ஒரே குஷியாய் இருக்கிறாய்?”

“அண்ணே, நம்ம தமிழர் ஒருவர் கூகுள் கம்பெனிக்கு தலைவராயிட்டாராம், எல்லோரும் இதைப்பத்திதான் பேசிக்கிறாங்க, அவருக்கு நம்ம தலைவர்களெல்லாம் பாராட்டுறாங்க, நமக்கும் எவ்வளவு பெருமை?” என்று சொல்லி எம்.எல்.ஏவைப் பெருமையாகப் பார்த்தார்.

“ஏய்யா, சுதந்திரம் கூகுள் கம்பெனியில அந்த ஆளு வேலைதானே பார்க்கிறாரு?”

“ஆமாண்ணே?”

“என்னவோ அந்த ஆளு அந்தக் கம்பெனிக்கே முதலாளி ஆனமாதிரி ஏன்யா பேசுறே. அமெரிக்ககாரன் கம்பெனியில பெரிய வேலை கிடைச்சா அது பெருமையாய்யா? உங்களுக்கு வெட்கமா இல்லை? நீங்களெல்லாம் திருந்தவே மாட்டீங்களாய்யா?”

சுதந்திரத்துக்கு ஏண்டா சொன்னோம் என்று ஆகி விட்டது.


குருவிற்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம்? பகுதி 2

துன்பங்களை நாம் தான் உருவாக்கிக் கொள்கிறோம் என்பதை எவரும் அறிவார் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயம். அதுதான் சரி என்று உடும்பாய் இருப்பர். அதனால் விளையும் செயல்களால் உருவாகும் துன்பங்களை அவர்கள் அறிவதுமில்லை. அதைப் பற்றிய சிறிய அலசல் கூட செய்ய மாட்டார்கள்.

சர்க்கரை வியாதி வந்து விட்டது என்பார்கள். என்ன மருந்து சாப்பிட்டாலும் குறைய மாட்டேன் என்பார்கள். ஆனால் வாயைக் கட்ட மாட்டார்கள். நாக்கைக் கட்டுப்படுத்தி விட்டால், பின் நடப்பவை எல்லாமே நன்மைதான். நாற்பது வயது வந்து விட்டதா? உடனே அசைவ உணவுக்கு டாட்டா சொல்லி விட வேண்டும். ஆனால் யார்தான் செய்கிறார்கள்? உழைத்து உழைத்து ஓய்ந்து போகும் உடல்பாகங்களுக்கு மென்மையான வேலைகளை அல்லவா கொடுக்க வேண்டும். சிக்கன் 65 பார்த்தால் நாக்கில் எச்சில் ஊற்று எடுக்கிறது. மசாலா வாசனையை நுகர்ந்தால் வயிறு கபகபவென பசிக்கிறது. நாக்கில் உமிழ் நீர் அருவியாய் கொட்ட ஆரம்பித்து விடுகிறது. பிறகென்ன பாதி மென்றும், மெல்லாமலும் வயிற்றுக்குள் அவை சேகரமாகி விடுகின்றன. அதன் பலனை தொடர்ந்து அனுபவித்துதானே ஆக வேண்டும்?

நம் உடல் என்ன வேலை செய்கிறது அதற்கு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். உடம்பினைச் சீராக வைத்துக் கொண்டால் உடம்புத் துன்பம் அற்றுப் போய் விடும். அதையும் மீறி உடல் துன்பம் வருகிறது என்றால் அது கர்ம வினை என்று உணரத் தெரிய வேண்டும்.

ஜோசியக்காரர்களிடம் சென்றால் பல நல்ல விஷயங்கள் உங்களின் எதிர்கால வாழ்வில் நடக்கப்போகிறது என்பார்கள். ஆனால் எதுவும் நடக்காது. ஏன் என்று கேள்வியைக் கேட்டால் உங்கள் கர்மபலன், உங்களுக்கு நடக்க வேண்டிய நல்ல விஷயங்களைத் தடுக்கிறது என்பார்கள். ஒரு சிலர் பரிகாரம் செய்தால் சரியாகி விடும் என்பார்கள். அதற்கு தனிக் கட்டணம் என்பார்கள். 

ஆறறிவுக்கு எட்டாத கர்மபலனை நினைத்து நாம் ஒரு சில சமயம் வருத்தப்படுவதுண்டு. இந்தக் கர்மபலனைத் தீர்க்கவே முடியாதா? என்று ஏங்கும் நிலைமையும் ஒரு சிலருக்கு வரும். 

விதி கர்மபலனை அனுபவித்துதான் தீர வேண்டும் என்றுச் சொல்கிறது. கீதையும் அதைத்தான் சொல்கிறது. மனுதர்மமும் அதைத்தான் சொல்கிறது. வேதமும் அதைத்தான் சொல்கிறது.

நாம் அறியாமல் செய்யும் அற்பச் செயலின் பலனைக்கூட நாம் அனுபவித்துதான் ஆக வேண்டும் என்கிறது அனைத்தும். சுவற்றில் மீது வீசப்பட்ட பந்து திரும்பவும் வரத்தானே செய்யும்?

இதற்கு என்னதான் வழி ? என்று யோசிக்கின்றீர்கள்? அப்படித்தான் நானும் ஒரு நாள் யோசித்தேன். விடாது தொரத்திய கர்மபலனை விட்டொழித்து விட்டு அமைதியான வாழ்க்கை வாழ வேண்டுமென யோசித்தேன். 

அதன் விடை அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்... !

Tuesday, August 18, 2015

குருவிற்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம் - பகுதி 1

ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு பிரச்சினைகள். தினமும் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நல்லதும் கெட்டதும் வந்து கொண்டே இருக்கின்றன. 

விடிகாலைப் பொழுதில் துயிலெழ ஆரம்பிப்பதிலிருந்து உறங்கச் செல்லும் வரை எத்தனை எத்தனையோ சம்பவங்கள், நிகழ்வுகள், திடீர் திருப்பங்கள், ஒன்றுமே இல்லாத செக்கு மாட்டு வாழ்க்கை நிகழ்ச்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய அனுபவங்கள். துன்பம் அழுத்த முனையும் பொழுது கடவுளின் கோவில்களைத் தேடி ஓடுவோம். துன்பத்திற்கு விடிவு கிடைக்காதா என்று மனதுக்குள் அழுது புலம்புவர். கடவுளிடம் சண்டைகள் போடுவர். 

ஒரு சிலர் மாய மந்திரவாதிகளை தேடுவர். ஒரு சிலர் டெம்ப்ளேட் ஜோசியக்காரர்களைத் தேடி ஓடுவர். ஒரு சிலர் கோவில்களை நோக்கிச் செல்வர். ஒரு சிலர் கோவில்களில் பரிகாரங்கள் செய்வர். இப்படி இன்னும் எத்தனையோ விதங்களில் துன்பங்களிலிருந்து விடுதலை பெற துடிப்பர். 

நாமெல்லாம் மைக்ரான் குடும்பங்களாகி விட்டோம். கணவன், மனைவி, குழந்தை என்றாகி விட்டதால் நம் பெரியோர்களைப் பற்றி நாம் சிறிதும் கவலைப்படுவதில்லை. வயிற்று உப்புசமாக இருந்தால் இப்போதெல்லாம் நாம் ஜெலுசில் குடிப்போம் அல்லவா? ஒரு தம்ளர் நீரில் எலுமிச்சையைப் பிழிந்து கொஞ்சம் உப்பு போட்டுக் குடித்தால் ஓடிப்போகும் வயிற்று உப்புசம். எத்தனை பேருக்குத் தெரியும் இந்த விஷயம்? எனக்கு இந்த விஷயமே என் வீட்டுக்கு வந்த ஒரு விருந்தினர் சொல்லக் கேட்டது.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வாய் ஒரு வழி முறை உள்ளது. அந்த வழி முறைகள் குடும்பம் குடும்பமாய் பாதுகாக்கப்பட்டு அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு சொல்லப்பட்டு வந்தன. சுய நலமும், பொருட்கள் மீதான ஆசையும், நுகர்வின் மீதான மோகம் கொண்ட பெண்களாலும் வாழ்க்கை முறை மாறி விட்டது. எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் வீட்டில் நடந்த உண்மைச் சம்பவம் இது.

நண்பரின் வீட்டில் திருமணம் நடைபெற்றது.  நண்பரின் பையன் நன்றாகச் சம்பாதித்தான். வரப்போகும் மனைவிக்கு லட்ச ரூபாய்க்கு பட்டுப்புடவை எடுத்தான். நண்பரின் மனைவியோ 500 லிருந்து 750 ரூபாய்க்கு மேல் புடவையே எடுக்கமாட்டார். மனைவி மகனிடம் கடிந்து கொண்டார். அதற்கு பையன் நான் சம்பாதிக்கிறேன்.செலவு செய்கிறேன் என்றான். 

அறுபதாயிரம் ரூபாய்க்கு மனைவிக்குச் செல்போன் வாங்கிக் கொடுத்தான். இரண்டு இலட்ச ரூபாய்க்கு டிவி மற்றும் பிற. இனிதாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் அவனுக்கு வேலை பறிபோனது. கையில் காசும் இல்லாமல் போனது. செலவுக்கே திண்டாட்டம். பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்தது லட்ச ரூபாய் பட்டுப்புடவை. ஹாலில் உட்கார்ந்திருந்தது இரண்டு இலட்சரூபாய் டிவி. அதனால் என்ன பலன்?

கையிலிருந்த புதிய போனை விற்க முனைந்தான், வெறும் பத்தாயிரத்திற்கு கேட்டார்கள். வாங்கி ஒரு மாதம் இல்லை. அதற்குள் ஐம்பதாயிரம் போச்சு. இன்னும் இரண்டு மாதம் போனால் இரண்டாயிரம் ரூபாய்க்குக் கேட்பார்கள். செல்போன் கடை முதலாளி கையில் வெறும் ஐந்தாயிரம் ரூபாய் போனைப் பார்த்தான். அவரின் கடை ஷோரூமிலோ கோடிக்கணக்கான ரூபாய்க்கு மொபைல்கள் விற்பனைக்கு இருந்தன. அவனுக்கு அப்போதுதான் வாழ்க்கையின் எதார்த்தம் புரிந்தது.

தனி வீட்டில் மனைவியோடு சந்தோஷமாக வாழச் சென்றவன் வீட்டைக் காலி செய்து கொண்டு பெற்றோரின் வீட்டுக்கே வந்து சேர்ந்தான். மீண்டும் வேலை கிடைத்தது. மீண்டும் சம்பாதிக்க ஆரம்பித்தான். சம்பளம் முழுவதையும் அம்மாவிடம் கொண்டு வந்து கொடுத்தான். குடும்பத்தின் தலைவியின் கையில் நிதியின் நிர்வாகம் வந்தது. 

அவன் மனைவி இப்போது மசக்கையாக இருக்கிறார். அவன் அம்மாவிடம் இப்போது லட்சக்கணக்கில் பணம் இருக்கிறது. வரப்போகும் பேரனுக்கு சொத்துக்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார் நண்பர்.

அதே போல துன்பங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் விடுபட ஒரு வழி உள்ளது. அது என்ன??? அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.... !

Wednesday, August 5, 2015

நிலம்(16) - தொல்லியல்துறை நிலங்களை கிரையம் பெற்றால் என்ன ஆகும்?

அமெரிக்க சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரின் தந்தையார் என்னைச் சந்திக்க வேண்டுமென போனில் கேட்டார். 

வீட்டிற்கு வரச்சொல்லி அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். கை நிறைய டாக்குமெண்ட்களை எடுத்து என்னிடம் கொடுத்தார். 

”சார், என் பையன் அமெரிக்காவில் இருக்கின்றான். அவன் உழைப்பில் கிடைக்கும் காசில் கொஞ்சம் நிலம் வாங்கி வைத்தால் அவன் எதிர்காலத்துக்கு பயன்படுமே என நினைத்துக் கொண்டிருந்த போது, எனது நண்பர் மூலமாக இந்த பத்து ஏக்கர் நிலம் விலைக்கு வந்திருக்கிறது. பத்து இலட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துதான் இந்த பேப்பர்களை வாங்கி இருக்கிறேன். என் பையன் உங்களின் பிளாக்கைப் படிப்பானாம். அதனால் உங்களிடம் லீகல் ஒப்பீனியன் கேட்டு வாங்கிய பிறகு கிரையம் செய்யலாம் என்றுச் சொன்னான், அதனால் தான் உங்களைப் பார்க்க வந்தேன்” என்றார்.

”நாளை மாலை என்னை வந்து பாருங்கள்” என்றுச் சொல்லி அனுப்பி வைத்தேன்.

அவர் கொண்டு வந்த ஆவணங்களில் வக்கீல் ஒருவரின் கருத்துரையும் இருந்தது. முதலில் அதனை ஆராய்ந்தேன். அனைத்தும் சரியாக இருந்தன. வில்லங்கச்சான்றிதழ், மூலப்பத்திரங்கள் அனைத்தும் சரியாக இருந்தன. அடுத்து எனது மேல் கட்ட ஆவண ஆய்வினைத் தொடர்ந்தேன்.

மேற்படி நிலத்தின் மொத்த மார்க்கெட் மதிப்பு கிட்டத்தட்ட 2 கோடி இருக்கும். கிரையச் செலவு அது இதென்று கிட்டத்தட்ட இரண்டு கோடியே இருபது இலட்சம் செலவாகும்.

எனது ஆய்வில் மேற்படி நிலம் தொல்லியல் துறையினால் தடைசெய்யப்பட்ட  நிலம் என அறிந்து கொண்டேன். தொல்லியல் துறையினால் எடுக்கப்பட்டு, அதில் எந்த வித கட்டிடங்களோ அல்லது வேறு எந்த வித நடவடிக்கையுமே எடுக்க முடியாத நிலம் அது. அதுமட்டுமல்ல அந்த நிலத்தின் அருகிலிருந்து 300 அடியிலிருந்து 900 அடி வரை எந்த வித கட்டிடங்களோ வேறு எந்த மாற்றமும் செய்ய நினைத்தால் தொல்லியல் துறையிடமிருந்து அனுமதி பெற வேண்டும். இதே போல நிலம் சென்னையில் இருக்கிறது. இந்த நிலத்தினைக் கிரையம் பெற்ற பல சென்னைவாசிகள் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அது மட்டுமல்ல தமிழகமெங்கும் இது போன்ற நிலங்கள் இருக்கிறது. கோவையில் ஒரு முக்கியமான ஊரில் இந்த நிலங்கள் இருக்கின்றன. நிலத்தின் உரிமையாளர் பெயர், பட்டா போன்றவைகளில் எந்த வித மாற்றத்தினையும் தொல்லியல் துறையினர் ஏற்படுத்தவில்லை என்பதையும் அறிந்து கொண்டேன்.

ஆகவே அந்த நிலம், நிலமாகத்தான் இருக்குமே ஒழிய வேறு ஒன்றினையும் செய்ய முடியாது. அப்படி செய்ய  முனைந்தால் அபராதம் மட்டுமின்றி சிறை வாசமும் உண்டு என்கிறது தொல்லியல்துறை.

மறு நாள் மாலை பெரியவர் வந்தார். காஃபி கொடுத்து உபசரித்து விட்டு அதன் பிறகு மேற்படி விஷயத்தை சொன்னேன். அதற்குரிய ஆவணங்களை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அவருக்குப் படபடவென்று வியர்க்க ஆரம்பித்து விட்டது. கொடுத்த அட்வான்ஸ் தொகையை எப்படி வாங்குவது என்று இப்போதே பயப்பட ஆரம்பித்துவிட்டார்.

இப்படி பல்வேறு சிக்கல்களை தன்னகத்தே கொண்டிருக்கும் நிலத்தினை வாங்கும்போது சரியான லீகல் ஒப்பீனியன் தருபவரிடம் லீகல் பெறவில்லை எனில் சம்பாதித்த பணம் வீணாய்ப் போய் விடும்.

அமெரிக்காவிலிருந்து சாஃப்ட்வேர் இன்ஞ்சினியர் போனில் அழைத்து பல முறை நன்றி நன்றி எனச் சொல்லிக் கொண்டிருந்தார்.