குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label எங்க வீட்டு மாப்பிள்ளை. Show all posts
Showing posts with label எங்க வீட்டு மாப்பிள்ளை. Show all posts

Wednesday, February 28, 2018

ஒரு ஆண் பதினாறு பெண்கள்

”ஏண்டி, நீ மட்டும் அவனைத் தான் கல்யாணம் கட்டிக்குவேன்னு சொல்லி, அதுவும் உங்கப்பனும், ஆத்தாளும் உன்னைக் கூட்டி விட்டு, டிவியில போய் அவனுக்கிட்டே வழிஞ்சியே அதைப் பத்தியெல்லாம் நான் கேட்டேனா? பலபேரு பார்ப்பாங்கன்னு தெரிஞ்சும் சினிமாக்காரனைத் தான் கட்டிக்கனும்னு ஒத்தக்கால்ல நின்னு பார்த்தாய். அவன் அழகா கழட்டி விட்டுட்டான். அவன் உன்னை சும்மா விட்டிருப்பான்னு நான் நம்பணுமா? நான் அப்படித்தாண்டி எவ கூட வேணுன்னாலும் சுத்துவேன், அதையெல்லாம் நீ கேக்கக் கூடாது. நான் உன்னைக் கேக்கலைல்ல, உனக்கு அந்த அருகதையெல்லாம் கிடையாதுடி நாயே!”

இப்படி ஒரு பேச்சினை வரும் காலத்தில் ஆர்யாவிடம் ஈசிக் கொண்டும், இழைந்து கொண்டும், காமம் கொப்பளிக்கப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த பதினாறு பெண்களில் யாராவது ஒருவரோ அல்லது பலரோ அவர்களது எதிர்காலக் கணவர்களிடமிருந்து கேட்க நேரிடலாம்.

அதுமட்டுமல்ல, ஆர்யா திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணைத்தவிர மீதமுள்ள பெண்கள் வேறு யாரோ ஒரு ஆணைத் திருமணம் செய்து கொள்ளக்கூடிய சாத்தியங்கள் உண்டு என்கிற போது, அவர்களுக்குப் பிறக்கக் கூடிய பிள்ளைகள் எதிர்காலத்தில் தன் தாயைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று அந்தப் பெண்களைப் பெற்றவர்களுக்கு தெரிந்திருக்காதா? இது எவ்வளவு பெரிய அவமானத்தையும், அனர்த்தங்களையும் உருவாக்கும்?

அந்தப் பதினாறு பெண்களும் இளம் பருவத்தில் இருக்கின்றார்கள். சொல்லிக் கேட்க கூடிய நிலையில் அவர்கள் நிச்சயம் இருக்கமாட்டார்கள். ஆனால் அனுபவசாலிகள் இருப்பார்களே அவர்களாவது சொல்லிப் புரிய வைத்திருக்கக் கூடாதா? 

இந்த நிகழ்ச்சிக்கு காம்பியர் செய்யும் சங்கீதா, தன் மகளை இப்படி அனுப்பி வைப்பாரா? இல்லை ஆர்யா தன் தங்கையையோ அல்லது அக்காவையோ, சினிமாக்காரனைக் கட்டிக்க டெஸ்ட்டில் கலந்து கொள்ள அனுப்பி வைப்பாரா? என்று அவர்கள் தான் சமூகத்திற்குச் சொல்ல வேண்டும்.

இருமணம் இணையும் நிகழ்ச்சி திருமணம். தாரம் என்பவள் தாய்க்கு நிகரனாவள். அவள் ஆலமரம். அவள் அச்சாணி. அவளின்றி உலகம் இயங்காது. அப்பேர்ப்பட்ட பெண்ணை ஆர்யா அவமானப்படுத்துகிறார். பெண்களைக் கேவலப்படுத்துகிறார். ஏழாயிரம் பேரில் பதினாறு பெண்களைத் தேர்ந்தெடுத்தார்களாம். என்ன ஒரு அவமானமான நிகழ்ச்சி இது.  பெண்களை வரிசையாக நிறுத்தி அவர்களிடம் பேசிப்பழகி அதன் பிறகு அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்வாராம் ஆர்யா. இதே போல யாரோ ஒரு பெண் செய்தால் ஏற்றுக்கொள்ளுமா இந்தச் சமூகம்?

இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் பிரகாஷ் இது கலாச்சார மீறலான நிகழ்ச்சி இல்லை என விகடனில் பேட்டி கொடுத்துள்ளார். இயக்குனர் பிரகாஷ் தன்னை வளர்த்த சமூகத்திற்கு, தன் கலாச்சாரத்திற்கு செய்யும் நன்றிக்கடனா இது? காலம் மாற மாற கலாச்சாரமும் தன்னை சீர்படுத்திக் கொள்ளும் தன்மை கொண்டவை தான். ஆனால் சமூகத்தின் அடிப்படையான ஒருவனுக்கு ஒருத்தி, ஒழுக்கம், சுயகட்டுப்பாடு ஆகியவைகள் மீது பிரகாஷ் மாதிரியானவர்கள் கலை என்கிற பெயரில், நிகழ்ச்சி என்கிற பெயரில் செய்யும் தாக்குதல்கள் எதிர்கால சந்ததியினருக்கு, அவர்களின் மனதுக்குள் மிகப் பெரிய மாறுதல்களை ஏற்படுத்தி அழிவுக்கு தள்ளி விடுமே அதைப் பற்றி அவர்கள் கொஞ்சமாவது சிந்தித்தார்களா?

ஆர்யா தனக்குப் பிடிக்காத பெண்களை எலிமினேட் செய்வார் அல்லவா? சினிமாக்காரனுக்கே உன்னைப் பிடிக்கலைன்னா வேறு எவண்டி ஒன்னைக் கட்டிக்குவான்னு சமூகத்தில் பேசுவார்களே அப்போது என்ன செய்யப்போகின்றார்கள் இவர்கள்?

தன் படத்தைக் காசு கொடுத்துப் பார்க்கும் சமூகத்திற்கு ஆர்யா செய்யும் நன்றிக்கடன் இதுதானா? செய் நன்றி மறந்து தன் சுகமே பெரிது, தன் நலத்திற்காக எத்தனை பேரை வேண்டுமானாலும் அழித்து ஒழிப்பேன் என்று வாழும் இவர்களைப் போன்றவர்களின் வாழ்க்கை அவ்வளவு சுகமாக இருந்திடாது. ஆர்யா பெண்களின் மீது நடத்தும் பாலியல் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். நான்காவது பாகத்தில் ஒவ்வொரு பெண்களும் ஆட்டம் போடுகிறார். எவ்வளவு அசிங்கம் இது. எந்த ஒரு ஆண்மகனும் செய்யக்கூடாத அடாத செயலைச் செய்யும் ஆர்யாவுக்கு நல்ல மனது ஒன்று இருக்கிறதா என்று புரியவில்லை. கொஞ்சம் கூட சங்கடமே இல்லாமல் ஒவ்வொரு பெண்ணுடனும் அமர்ந்து கொண்டு பேசுகிறார். கட்டிப் பிடிக்கிறார். டான்ஸ் ஆடுகிறார். இது அக்மார்க் பாலியல் அத்துமீறலே. சட்டப்படி நடக்கக் கூடிய பாலியல் அத்துமீறல் இது. ஏனென்றால் அந்தப் பெண்கள் 18 வயதைத் தாண்டி இருப்பார்கள்.

இந்த உலகம் பல்வேறு வரலாற்றுப் பதிவுகளை தன்னகத்தே வைத்திருக்கிறது. பெண்களின் விஷயத்தில் எவனொருவன் ஆட்டம் போடுகின்றானோ அவன் நிம்மதியாக வாழ்ந்து செத்த வரலாறு இல்லவே இல்லை. தேடினாலும் கிடைக்காது. 

அந்தப் பதினைந்து பெண்களின் மனது படும்பாடு, அவர்களின் எதிர்கால வாழ்க்கை, சமூகத்தின் எதிர்காலம் இவைகளைக் கருத்தில் கொண்டு ஆர்யா இந்த நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும். தன் ஒருவனின் நலனுக்காக சமூகத்தின் கலாச்சாரத்தின் மீது ஆர்யா நடத்தும் தாக்குதல் அவருக்கு நல்ல விளைவுகளைத் தந்து விடாது. 

இந்தியாவின் சமூகக்கோட்பாடுகளின் மீதும், கலாச்சாரத்திலும் தாக்குதல்களை நிகழ்த்தும் இந்த நிகழ்ச்சியை எந்தக் கட்சியும் நிறுத்துவதாகத் தெரியவில்லை. ஆபாசம் தெறிக்கும் இந்த நிகழ்ச்சி தடை செய்யபடல் அவசியம். தொடர்ந்து ஒளிபரப்புவது பல்வேறு ஆபத்துக்களை உருவாக்கி விடும். சமூகச் சிந்தனையாளர்கள், கலாச்சாரகாவலர்கள் முன்னெடுக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் இது.

உண்மையில் தன் பெண் குழந்தையின் மீது அதீதப்பாசம் உள்ள எந்த ஒரு பெற்றோரும் செய்யவே கூடாத செயல் தான் இது.

யாரும் இங்கே தனித்தனியாக வாழ முடியாது. சமூகத்தின் இடையே தான் வாழ வேண்டும்.

ஏற்கனவே ஐபிஎஃப்பில் எனது ஆட்சேபனையைப் பதிவு செய்திருக்கிறேன். இன்னும் ஒரு பதிலும் இல்லை. 

நானும் ஒரு பெண்ணுக்குத் தகப்பன் என்கிற முறையில் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒரு அக்கிரமமான நிகழ்ச்சி இது. எனது கடுமையான எதிர்ப்பினை நான் இங்கு பதிவு செய்கிறேன்.

ஆர்யா இந்த நிகழ்ச்சியை நிறுத்தவில்லை எனில் காலம் அதற்கான விளைவை அவருக்கு அளிக்கும்.