குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, October 10, 2024

ரிங் டோன்

ரத்தன் டாட்டா 

வந்தார், வாழ்ந்தார், வாழ வைத்தார், சென்றார்.

மொபைல் போனில் ரிங்க் டோன் மாற்றினேன். பல நண்பர்களிடமிருந்து என்ன ஆச்சு? ஏன் மாற்றி விட்டீர்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

கெட்டவன் என்ற படத்தினை இயக்கி, தயாரித்து - குடும்பத்துக்கும், கடன்காரர்களுக்கு கெட்டவனாய் போனார் இயக்குனர் கதிர். பெரும் போராட்டத்தின் பின்னும், பல வலிகளை அனுபவித்து கடந்த பிறகு - இப்போது நல்ல நிலைக்கு வந்து விட்டார். 

அவருக்கு எனது பழைய நிறுவனமான ஃபெமோ சினிமாஸ் மூலமாக ஒரு விளம்பரப் படத்தினை தயாரிக்கும் பொறுப்பைக் கொடுத்து, அவர் அதை வெற்றிகரமாக முடித்து தந்தார். அந்த நேரத்தில் அவரின் செல்போனில் இருந்த ரிங் டோன் - எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே, நதி போல ஓடிக் கொண்டிரு - எனக்கு இந்த ரிங்க் டோன் பிடித்ததால் எனது போனில் தொடர்ந்தேன்.

நதி போல ஓடிக் கொண்டிருந்தால் - கர்நாடகா போல எவராவது தடுப்பணை கட்டி விட்டால், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தீர்ப்பினைப் பெற வேண்டியவை போன்ற வம்புகள் ஏதேனும் வந்து விட்டால் - என்பதற்காக ரிங்க் டோனை மாற்றி விட்டேன். 

காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருக்கும் எனது நண்பரொருவர் - நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வளர்க, ஊராண்ட மன்னர் புகழ் போலே, உலகாண்ட புலவர் தமிழ் போலே, நூறாண்டு காலம் வாழ்க - என்ற ரிங்க் டோனை வைத்திருந்தார். 

இந்த ரிங்க் டோனில் தமிழ் வருவதாலும், நோய்க்கே நோய் கொடுக்கலாமே என்ற நல்ல எண்ணத்தினாலும் நீண்ட காலம் வைத்திருந்தேன்.

ஏர்டெல்லின் அட்டகாசம் தாங்க முடியாமல் - ஜியோவுக்கு மாறிய பின்னாலே இந்த ரிங்க் டோனை வைக்க காசு கேட்டார்கள். பாவம் ஏழை முகேஷ் அம்பானி. ஆனால் நான் அவரை விட ஏழையானதால் - மீண்டும் இலவசமாய் கிடைத்த எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே ரிங்க் டோனை வைத்திருந்தேன்.

ஏதோ ஒரு சமயத்தில் ஜியோ ஏமாந்து போய் - நூறாண்டு காலம் வாழ்க ரிங்க் டோனை இலவசமாக கொடுக்க, காத்திருந்த கொக்கு போல - படக்கென்று மாற்றி விட்டேன்.

எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும் நம்மை அழைக்கும் நபர்களுக்கு வாழ்த்தைப் போட்டால் அந்த நொடியில் மகிழ்வார்களே என்ற எண்ணத்தில் வைத்திருந்தேன். பலரும் பாராட்டினார்கள். ஒரு சிலரோ இந்தப் பாட்டெல்லாம் சினிமாவிலா வந்தது? என அமலாக்கத்துறை போல விசாரித்தார்கள். அ.துறை விசாரிக்க மட்டும் தானே செய்யும்?

எப்போதுமே யாராவது நம்மை, நாம் செய்யும் செயலை தீர்மானித்து விடுகிறார்கள். அப்படி இப்போது ரிங்க் டோனை மாற்ற வேண்டிய சூழல் வந்து விட்டது. 

ஒரு நன்னாளிலே - திருப்பதி லட்டுவும் மாட்டுக் கொழுப்பும் அதன் தொடர்பாக பவன் கல்யாணின் விரதமும் பரபரக்க - நான் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் அவர்களின் பரம ரசிகன் என்ற வகையில் - வேதத்தில் லட்டுவைப் பற்றிய விபரங்களை ஆராய, வேதத்தைப் படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.

பவன் கல்யாண் நான்கு கல்யாணங்களைச் செய்தவர் அதாவது அஃபீஷியலாக என்ற ஒற்றை சம்பவத்துக்காக அவரின் ரசிகனானேன். ஒரு கல்யாணத்துக்கே மூச்சு முட்டுது, முட்டியும் கழடுது. இதில் நான்கைந்து கல்யாணம் வேறு. நம்மால் முடியாததை வேறொருவர் செய்தால் ஆட்டோமேட்டிக்காக ஒரு ஈர்ப்பு வந்து விடுமே. அது போல என வைத்துக் கொள்ளுங்கள். 

பவன் கல்யாண் பக்தியினை வெங்கடாஜலபதிப் பெருமாள் ரட்சித்து - அவருக்கு துணை முதல்வர் பதவியெல்லாம் கொடுத்ததே - அவரின் ரசிகனான எனக்கு அவருக்கு கொடுத்தது போல வேண்டாம், ஒரு சிறு பதவி கொடுத்து விடமாட்டாரா பெருமாள் என்ற ஆசையினாலும் - ஜக்கி வாசுதேவின் அத்தனைக்கும் ஆசைப்படு- வை நான் ஏற்றிருக்கும் காரணத்தினாலும் - வேதத்தை படித்து அதிலே லட்டுவைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறது எனப் படித்து - ஒரு பதிவை எழுதலாமென்று எண்ணத்தினாலே படிக்க ஆரம்பித்தேன்.

சத்தியமாகச் சொல்கிறேன். அந்தக் காலத்தில் ரகசியமாக விற்ற சரோஜாதேவி காமக்கதைகளை விட - பெரும் கிளர்ச்சி தரக்கூடிய சம்பவங்களை படித்தேன். 

இதோ கீழே இருக்கிறது அதிலொரு பகுதி. நீங்களும் படித்துக் கொள்ளுங்கள். 

சிறார்கள் படிக்க வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். அப்கோர்ஸ் எட்டாவது வயதில் திருமணம் செய்ய வேதம் அனுமதித்தாலுமே கூட - பருவம் வந்த பின்னாலே படித்துக் கொள்ளுங்கள். 

தெய்வங்களும் மனித ரூபாய நமஹ...!

மனைவிக்கு சந்தேகம் வந்து விட்டது. என்னங்க, என்ன அப்படி விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அவ்வப்போது அருகில் வந்து டென்சன் படுத்திக்கொண்டிருந்தார். 

அவருக்குத் தெரியாமல் ஒரு வழியாக அந்த பள்ளம் தோண்டும் மிஷின் பெயருடைய அதைப் படித்து விட்டு - பிரம்மனுக்கு நான்கு தலை வந்த காரணத்தைத் தெரிந்து கொண்டு - யோசனையிலும் ஆழ்ந்தேன். 

தொடர்ந்து படிக்கும் போது, ஒவ்வொருவரின் செயலுக்கும் அவரவரே பொறுப்பு என்பது போல இருந்ததால் - அந்த நொடியில் - போதி மரத்தின் வழியாக புத்தருக்குக் கிடைத்த ஞானம் போல - எனக்கு ஞானம் கிடைத்தது. 

நீ யார் மற்றவரை வாழ்த்த? உனக்கு என்ன அருகதை இருக்கு? என்றெல்லாம் ஞானம் பெற்ற மனசு தனியாகப் பிரிந்து நின்று - என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே- கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தது. இதுவரை சினிமாவில் மனச்சாட்சி பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த எனக்கு - முதல்முறையாக என் முன்னால் நின்ற என்னைப் பார்த்து டென்சன் வந்து விட்டது.

இன்று காலையில் எனக்கொரு மெசேஜ் வந்திருந்தது. கீழே இருப்பதைப் படித்துப் பாருங்கள். 

உழைப்பின் இலக்கணமே,

யுக்திகளின் உறைவிடமே,

பணிவின் பிறப்பிடமே,

பண்பின் பாடசாலையே,

பரோபகாரத்தின் இமயமே, 

இதுவரை  வாழ்ந்தாய் இப்புவியில்,

இன்று முதல் விதைத்தோம் எங்கள் இதயத்தில் ,

கனத்த இதயத்துடன் பிரியா விடை தருகிறோம் உங்களுக்கு,

உங்கள் முன்னாள் ஊழியன்,

நான்கு மணிக்கு விழித்து எழும் எனக்கு இதைப் படித்த அந்த நொடியில் உயிரோடு இருக்கிறேனா? என்று என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். இந்த நண்பர் ஏன் இப்படி ஒரு மெசேஜை அனுப்பி இருக்கிறார்? 

நேற்று ரத்தன் டாட்டா மறைந்ததற்காக - அவரின் புகைப்படத்தினைத் தொடர்ந்து எழுதிய போது - எனக்கு அனுப்பும் போது ரத்தன் டாட்டாவின் புகைப்படத்தை அனுப்ப மறந்து போனார் நண்பர்.

அப்டேட்டில் இல்லையென்றால் எழக்கூடிய அபத்தங்களை நினைத்தேன். 

உடனே வேதத்தைப் படித்ததால் பிறந்த ஞான தங்கவேல் உதித்து விட்டான். இதற்காகத்தான் சொல்கிறேன். நீ யார்? என்று பினாத்த ஆரம்பித்தான். இந்த ஞானம் இருக்கிறதே அது பெரிய பிரச்சினை. 

மனச்சாட்சி என்பதோ  அவ்வப்போது வந்து செல்வது. 

அழகான பெண்ணைப் பார்க்கிற போது - டேய் நீ திருமணமானவன் - இன்னொரு பெண்ணைப் பார்ப்பது தவறு - எனச் சொல்லும். 

ஆனால் ஞானமோ அதிலென்ன தவறு. அழகை அந்த நொடியில் ரசித்து விடு. அந்த நொடியே மறந்து விடு என்று சொல்கிறது. 

இந்தக் கதை உங்களுக்குத் தெரியும் தானே? முனிவர் ஒரு பெண்ணை ஆற்றைக் கடந்து தூக்கிக் கொண்டு போய் விட்டது. தெரியவில்லை எனில் கமெண்ட் போடுங்கள். எழுதுகிறேன்.

மனச்சாட்சிக்கும் - ஞானத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறதா? ஞானம் பெரிய தொல்லை என்பதால் - அவன் சொன்னதை செய்து விடலாம் என முடிவெடுத்து இந்த ரிங்க் டோனை வைத்தேன்.


இந்த ரிங்க் டோனை வைத்த பிறகு - அந்த ஞான தங்கவேல் ஓடியே போனான். ஏனெனில் அவனுக்கு மலையாளம் தெரியாது. ஒரு வழியாக அவனை விரட்டி விட்டு நிம்மதி அடையலாம் என்று நினைத்த நொடியில் - படுபாவி மனசாட்சி வந்து விட்டான்.

அவன் சொன்னதையெல்லாம் எழுத முடியாது. இன்னொரு வேதத்தை நாடு தாங்காது. 

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.