குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, April 16, 2018

குருசாமிகவுண்டருக்காக கருப்பசாமியின் கண்ணீர்

கடந்த வாரம் கோவையில் வெயில் உயிரினங்களை வறுத்தெடுத்தது. சூடு தாங்க முடியவில்லை. உடலெல்லாம் புசுக் புசுக்கென கட்டிகள் தோன்றின. லிட்டர் லிட்டராய் தண்ணீரைக் குடிக்க வேண்டியதாகி விட்டது. முன்பெல்லாம் இப்படி கோவை இருந்தது கிடையாது. வெயில் அடிக்கும், ஆனால் சுடாது. வர வர கோவை கொதிக்கிறது. காவிரியாலா அல்லது வெப்பச்சூடாலா என்று இனம் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அவனுக்குத் தீர்க்கவே முடியாத இடியாப்பச் சிக்கல்களை உருவாக்குவது உறவினர்கள் தான். வாழ்ந்தாலும் ஏசுவார்கள், தாழ்ந்தாலும் ஏசுவார்கள். ஆக அவர்களுக்கு குறை சொல்லித்தான் வழக்கம். தங்கத்தட்டில் வைத்து சாப்பாடு பரிமாறினாலும் தட்டு நெளிந்திருக்கிறதே என்றும் குறை சொல்லும் அளவுக்கு உள்ளுக்குள் வெம்மையில் வெம்பிக் கிடப்பதால் வாயில் வரும் வார்த்தைகள் வன்மத்துடன் வெளிவரும். இப்படியானவர்களால் தான் பல குடும்பங்களுக்குள் குத்து வெட்டு என்று கூட நடக்கிறது. பைசாவுக்கும் பிரயோஜனமல்லாத பிரச்சினைகள் கோர்ட்டு வரை வந்து நின்று கொண்டிருக்கும். ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவரவர்களுக்கு மறந்து போன விஷயம் அவர்களின் மரணம். அது எப்போது வரும்? எப்படி வரும்? என்று தெரிந்து கொள்ளாமல் ஏதோ ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் வாழ்வது போல செம கெத்துக் காட்டிக் கொண்டிருப்பார்கள்.

விளாங்குறிச்சியில் எனக்குத் தெரிந்த, பழக்கமான ஒரு கவுண்டர் இருந்தார். அவர் ஒரு விவசாயி. எதார்த்தவாதி. தன் அப்பாவுடன் பிறந்த பெண்களுக்கு சொத்துக்களை பாகம் பிரித்துக் கொடுத்தவர். அந்தளவுக்கு தன்மையானவர். அதிர்ந்து பேசத் தெரியாதவர். சத்தம் போட்டுப் பேசிப் பார்த்ததில்லை. எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பார். பெரும்பாலும் தென்னைத் தோப்பில் களைகளுக்கு மருந்து அடித்துக் கொண்டும், தென்னை மட்டைகளை வெட்டிக் கொண்டும், தண்ணீர் பாய்ச்சிக் கொண்டும் இருப்பார். அவர் வீட்டுக்குச் சென்றால் வரவேற்று எளிமையாகப் பேசிக் கொண்டிருப்பார். அவர் மீது எனக்கு கொஞ்சம் பிரியம் சாஸ்தி. இறந்து போன எனது சித்தப்பா குருசாமி போலவே இருப்பார் அவர். அவரிடம் இதைச் சொல்லி இருக்கிறேன். எப்போது பார்த்தாலும் சிரித்து நலம் விசாரிப்பார்.

அவருக்கு ஆஞ்சியோ செய்திருப்பதாக செய்தி கிடைத்திட அவரைச் சந்திக்க வீட்டுக்குச் சென்றேன். என்னைப் பார்த்ததும் அருகில் நாற்காலியைத் தூக்கிப் போட்டு அமர்ந்து கொண்டு,”டாக்டர் இரண்டு மாசம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லி இருக்கிறார். அதுக்கப்புறம் வேலை செய்வேன்” என்றுச் சொல்லிச் சிரித்தார்.  அவரின் முகம் களையிழந்து கிடந்தது. மருத்துவமனையின் வாசமும், மருந்துகளின் தாக்கமும் அவரின் பொலிவைக் குறைந்திருந்தன. முகத்தில் அந்த வசீகரப் புன்னகை ஒளிந்து கொண்டது. அதற்குள் உறவினர்கள் வரிசைக் கட்டி நிற்க, அவரிடமிருந்து விடை பெற்றேன். நோயுடன் போராடுவது ஒரு பிரச்சினை என்றால், உறவினர்களுக்குப் பதில் சொல்வது மற்றொரு பிரச்சினை.

மூன்று நாட்களுக்கு முன்பு அவர் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டவுடன் மனது இருப்புக் கொள்ளாமல் வீட்டுக்குச் சென்றேன். உறவுகளின் கூட்டமும், அக்கம் பக்கத்தார், பழக்க வழக்கங்கள் உள்ளோர், நண்பர்கள், வேலைக்காரர்கள் என கூட்டம் வர ஆரம்பித்தன. உறவுகள் அழுது கொண்டிருந்தனர். ஒரு சிலர் கைகளில் மாலைகளோடு வந்தார்கள். அவரின் மீது போட்டு, கும்பிட்டு விட்டு வந்து அமைதியாக உட்கார்ந்து கொண்டார்கள். சொல்லி வைத்தாற்போல அங்கு வந்திருந்த அனைவரின் முகங்களும் வீங்கி இருப்பதைப் போல தெரிந்தது. எனக்குள் வருத்தம் மண்டிக் கிடந்தது. அயர்ச்சி அடைந்தது உள்ளம். அழுகுரல்களின் ஒலி அவ்வப்போது மனதைக் கனக்கச் செய்து கொண்டிருந்தன. 

இந்த பூமி எத்தனையோ உயிர்களைத் தாங்கி இருக்கிறது. இன்னும் தாங்கிக் கொண்டிருக்கிறது. ஐம்பூதங்களின் கூட்டுக் கலவையான உடல் காற்றுப் போனவுடன் அழுகி விட ஆரம்பிக்கிறது. உடல் நாற்றம் வீசுவதற்குள் பூமிக்குள்ளோ அல்லது நெருப்பிலோ எரிக்கப்படுகிறது. அத்தனை ஆசைகளும், கோப தாபங்களும் காற்றுப் போன அடுத்த நொடியில் காணாமல் போய் விடுகின்றன. 

ஒரு சிலரைப் பார்த்திருக்கிறேன். படுக்கையில் உயிரோடும் உடம்போடும் போராடிக் கொண்டிருப்பார்கள். எழுந்து நடமாட முடியாது. கடைசிக் கட்டத்தில் இருப்பார்கள். ஆனாலும் உயிரை இழுத்துக் கொண்டு கிடப்பார்கள். உயிரின் மகிமை அது. உடம்பின் சுகம் அது. அவ்வளவு எளிதில் உயிர் உடம்பை விட்டு விட்டுப் போகாது. ஒரு சிலருக்கு மரணம் என்பது நொடியில் வலியின்றி, என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள் வந்து விடும். இப்படியான மரணங்களை நல்ல சாவு என்பார்கள். கவுண்டருக்கும் நல்ல சாவுதான் வந்திருக்கிறது என்று பேசிக் கொண்டார்கள்.

அப்போது வயதான ஒருவர் வாயில் துண்டைப் பொத்தியபடி கண்களில் கண்ணீர் வழிய என்னருகில் வந்து நின்று கொண்டு குலுங்கிக் கொண்டிருந்தார். அவரின் கண்ணீர் என்னைப் படுத்தியது. அவரின் தோளைத்தொட்டு அருகில் அழைத்தேன். 

“என்னைத் தொடாதீர்கள்” என்றார் அவர்.

“ஏனய்யா?” என்றேன்.

”அரிஜன்!” என்றார்.

எனக்குள் எரிச்சல் மண்டியது. அவரின் வயது அவரின் எண்ண ஓட்டத்தைக் காட்டியது. அந்தக் காலத்து ஆட்கள் இப்படித்தான் இருப்பார்கள். அது அவரின் குற்றமல்ல, அவரின் பழக்கம். 

அவரை அருகில் அழைத்து, “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, ஏன் இப்படி அழுகின்றீர்கள்? கவுண்டரை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டேன்.

“பதினைந்து வயதிலிருந்து எனக்குத் தெரியும். அவர் வீட்டின் வேலைக்காரன் நான். வயதாகியதால் தான் என்னால் வர முடியவில்லை. அவர் எனக்குக் கொடுக்கும் மரியாதையும், அவரால் நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையையும் நினைத்தேன் அழாமல் இருக்க முடியவில்லை” என்றுச் சொல்லி மீண்டும் அழுதார்.

அவரை அருகில் அழைத்து தட்டிக் கொடுத்து, “இதோ என் வீடு இருக்கிறது. கவுண்டர் இல்லைன்னா என்னா? நீங்கள் என் வீட்டுக்கு வாருங்கள், உங்களுக்கு என்னால் முடிந்ததைச் செய்கிறேன்” என்றுச் சொல்லி ஆற்றுதல் படுத்தினேன். கொஞ்சம் சரியானார். 

இறந்து போன குருசாமிக் கவுண்டருக்காக அவரின் வேலைக்காரர் விட்ட அந்தக் கண்ணீர்த்துளிகளில் மறைந்து கிடக்கிறது அவர் வாழ்ந்து சென்ற வாழ்க்கை.

* * *
16/04/2018

1 comments:

Tamilus said...

நெஞ்சம் கனக்கும் பதிவு.. இப்படியான நல்ல பதிவுகள் நாலு பேரைச் சென்றடைய...

வணக்கம்,

www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

நன்றி..
தமிழ்US

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.