குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, January 10, 2014

சுரைக்காயும் நாட்டுப் பொன்னாங்கண்ணியும்


எனது பிறந்த ஊரான தஞ்சைப் பக்கம் நாட்டுச் சுரைக்காய் போட்டு இரால் குழம்பு வைப்பார்கள். சுவை என்றால் சுவை அப்படி ஒரு சுவையாக இருக்கும். எனது பைங்கால் சித்தி அபூர்வம் அவர்களின் கைப்பக்குவம் என்றால் பக்குவம் தான். சித்தியின் சமையலைச் சாப்பிட்டு விட்டு வேறு எங்கேயும் சாப்பிடவே பிடிக்காது. சுரைக்காயுடன் இராலை உறித்துப் போட்டு தேங்காய் சோம்பு அரைத்து ஒரு குழம்பு வைப்பார்கள் பாருங்கள். அடடா ! அதற்குப் பெயர் தான் குழம்பு. எங்களூர் பக்கம் இக்குழம்பு அடிக்கடி வைப்பார்கள்.

கோவை வந்ததிலிருந்து நானும் தேடாத இடமில்லை. கேட்காத ஆளில்லை. நாட்டுச் சுரைக்காயைத் தேடித் தேடி அலுத்துப் போய் விட்டது. 

ஒரே ஒரு முறை வரதராஜபுரம் சந்தையில் ஒரு பாட்டி ஒரு நாட்டுச் சுரைக்காயை விற்பனைக்கு வைத்திருந்தார். அடித்துப் பிடித்து வாங்கிக் கொண்டு சென்றேன்.

சிங்கா நல்லூர் உழவர் சந்தை, கணபதி சந்தை என்று ஒவ்வொரு சந்தையாக தேடியும் காய்கறிக் கடைகளிலும் கேட்டுக் கேட்டு அலுத்துப் போய் விட்டது. கணிணியில் வேலை செய்வதால் கண்ணுக்கு நல்லது என்று சிவப்பு பொன்னாங்கண்ணிக் கீரையைத் தேடி ஒரு வழியாக பச்சைப் பொன்னாங்கண்ணிக் கீரையை உக்கடம் சந்தையில் பிடித்து விட்டேன். தொடர்ந்து கிடைக்கவில்லை.

எங்கள் வீட்டு குப்பைக்கிடங்கின் ஓரமாக விதை போட்டு விட்டால் செடி வளர்ந்து அழகழகாய் சுரைக்காய்கள் காய்க்கும். காலையில் ஒரு சுரைக்காயை பறித்து வந்து தோல் சீவி அம்மா பொறியல் செய்து தருவார்கள். தட்டில் சுடச்சுட சாதத்தைப் போட்டு, வெண்ணெய்  கடைந்த மோர் ஊற்றி தட்டில் சுரைக்காய் பொறியலை வைத்துச் சாப்பிட்டால் அந்த சுவைக்கு எந்த உணவுப் பொருளும் ஈடாகாது. குண்டுச் சுரைக்காயின் சுவையே அலாதியானது.

ஆனால் இப்போது மார்க்கெட்டில் கிடைக்கும் சுரைக்காய் இருக்கிறதே அது ஒரு கொடுமை. சக்கையை போன்று இருக்கும். அதைப் பார்த்தாலே எனக்கு வாந்திதான் வரும். 

என்னடா சுரைக்காயைப் பற்றி இவ்வளவு எழுதுகின்றாரே என்று உங்களுக்குத் தோன்றும். சுரைக்காய் உடல் சூட்டைத் தணிக்கும். தோல் மினுமினுப்பாக மாறும். கபத்தைப் போக்கும். அது என்ன கபம் என்கின்றீர்களா? நம் உடம்பில் நமக்குத் தேவையே இல்லாத நம்மை நோயில் தள்ளும் சளியைத் தான் கபம் என்கிறேன். இந்தக் கபத்தை நீக்கினால் உடன் திண்மை பெரும். பித்தமிருப்பவர்களுக்கு இது உதவாது. பகலில் சாப்பிட்டுக் கொள்ளுங்கள். இரவில் தவிர்த்து விடுங்கள். 

கபத்தை நீக்கும் செயல்முறைதான் “எண்ணெய்க் கொப்பளிப்பு”. தொண்டையில் இருக்கும் சளியை நீக்கி விட்டால் உடல் நல்ல ஆரோக்கியமாய் இருக்கும்.

பொன்னாங்கண்ணிக் கீரையை கணிணியில் வேலை செய்யும் அனைவரும் அவசியம் சாப்பிட வேண்டும். சந்தைகளில் விற்கும் பொன்னாங்கண்ணி சரியில்லை. இந்தப் பொன்னாங்கண்ணிக் கீரையில் இலையின் முன்புறம் பசுமையாகவும், பின்புறம் பிங்க் நிறத்திலும் இருக்கும். படத்தினைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


கீரையில் பொன்னைப் போன்றது. பொன் என்றால் தங்கம். இக்கீரை கண்ணுக்குத் தங்கம். உடலுக்கு அமிர்தம் போன்றது. அவசியம் அனைவரும் சாப்பிடுவதற்கு முயற்சியுங்கள்.

இந்தக் கீரை கிடைத்தால் எங்கு கிடைக்கிறது என்பதை பின்னூட்டத்தில் எழுதுங்கள். அப்படி சுரைக்காய் பற்றியும் தகவல் கிடைத்தால் எழுதுங்கள்.

* * *

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இங்கு இரண்டும் கிடைக்கிறது...

ராஜி said...

நாட்டுச் சுரைக்காய் கிடைப்பது அம்புட்டு கஷ்டமா!?

Thangavel Manickam said...

ஆமாம் ராஜி, கோவையில் எனக்கு கிடைக்கவே இல்லை. கிட்டத்தட்ட ஐந்து வருடமாக தேடிக் கொண்டிருக்கிறேன்.

Anna said...

http://www.thehindu.com/features/metroplus/going-organic/article4750177.ece

"They find farmers via the Tamil Nadu Agriculture University."
நீங்கள் மேல் உள்ள இணையத்தளத்தை பார்க்கவும்

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.