குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, January 18, 2018

அறத்தின் மீது அடி விழுகிறதா?

”மனிதன் எப்போதுமே மனிதன் தான். எத்தனை கடவுள்கள் வந்தாலும் மனிதனால் மாறவே முடியாது” என அறிந்தவர்களிடம் பேசிக் கொண்டிருப்பேன். ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தெரிந்த வகையில் பிறருக்குப் பிரச்சினை கொடுப்பவனாகவே இருக்கிறான். சூழ்நிலைக் கைதியான மனிதனிடம் மனிதம் அவ்வப்போது எட்டிப் பார்க்குமே ஒழிய எப்போதுமே தன் வயிற்றுப் பசிக்கும், இடுப்புப் பசிக்கும் தான் அவன் வேலை செய்வான்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பேட்டியைக் கண்டவுடன் இந்தியாவின் இறையான்மாவின் மீது அரசியல் தாக்குதல் நடத்தப்படுகிறது என்பது புரிந்தது. யார் எதை நம்புகின்றார்களோ அந்த நம்பிக்கைக்கும் மேலே உலகினை இயக்கி வரும் “அறம்” (தர்மம்) தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது என்று தெளிவாகப் புரிந்தது. 

இந்திய ஜனநாயகத்தில் வானளாவிய அதிகாரம் கொண்டவர்களாக நீதிபதிகள் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. நீதிபதிகளும் மனிதர்கள் என்கிற வகையில் எல்லை மீறிய அதிகாரம், எப்பேர்பட்ட மனிதனையும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்க வைத்து விடும். நல்ல நீதிபதியாகவே இருந்தாலும் எல்லையற்ற அதிகாரம் தவறு செய்யத் தூண்டி விட்டு விடும். குடும்பம் இருந்தாலே அவர்களும் ஒரு சில சூழலுக்குத் தள்ளப்படுவார்கள் என்பது நிதர்சனமானது.

இதற்கு யார் என்ன செய்ய முடியும்? என்பது தான் இந்திய மக்களின் மனதில் இப்போதைக்கு எழுந்திருக்கும் விடை தெரியா கேள்வி. அந்தக் கேள்விக்கு ஒரே பதிலாக என் முன்னே இருப்பது, இந்தியாவின் இறையான்மா மட்டுமே.

இந்த உலகம் எத்தனையோ சர்வாதிகாரிகளைப் பார்த்திருக்கிறது. எத்தனையோ ஆதிக்கஜாதிகளைப் பார்த்திருக்கிறது. அவர்கள் எல்லோரும் இப்போது எங்கே போனார்கள்? 

ஒரு காலத்தில் உலகிற்கே மறை சொன்ன தமிழ்சாதி(சாதிதான்) மக்களின் இன்றைய நிலைமை - அய்யோ பாவமாக இருக்கிறது அல்லவா? அதே போலத்தான். தமிழ்சாதி மக்களைச் சுற்றிச் சுற்றி அடி விழுகிறது. தமிழ்சாதி கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகிறது. போனவன் வந்தவன் எல்லாம் அடிக்கிறான். அடி வாங்கிக் கொண்டே இருக்கிறது. சினிமாவில் ஆடும் இடுப்பாட்டக்காரிகளின் தொடைகளில் அல்லவா தமிழ் சாதியின் உயிர் இருக்கிறது. ஆடும் அந்தச் சதைகளின் மீது அல்லவா தமிழ்சாதி தினமும் துயில் கொண்டு துயிலெழுகிறது. அந்தச் சதைகளைத் தடவி உசுப்பேத்தும் ஹீரோக்களை அல்லவா தலைவர்கள் என்று நம்புகிறது. தன்னைத் தானே அழித்துக் கொள்வதில் தமிழ்சாதிக்கு நிகரேது இந்த உலகில்.

காலையில் உதித்தெழுந்து மாலையில் மறையும் படி சூரியனைச் சுற்றி இயங்கி வரும் பூமியை எது அந்தரத்தில் நிற்க வைத்ததோ அது என்னைப் பொறுத்த வரை “அறம்” 

உலகில் இந்தியா மட்டுமே மனிதன் வாழக்கூடிய தர்ம பூமியாக இருக்கிறது. அதர்மம் ஓங்குகிற போதெல்லாம் தன்னைத் தானே சிலிர்த்து எழுந்து சுத்தப்படுத்திக் கொள்ளும் இந்த பூமியைப் பாதுகாக்கும் அந்த அறம் நீதி என்கிற பெயராலே அழைக்கப்படுகிறது. அந்த நீதி அரசியலின் பேரால் தாக்கப்படுகிறது என்பது பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தினார்கள் அந்த நீதிபதிகள். அந்தத் தாக்குதலுக்குக் காரணமான யாரானாலும் சரி. அதற்குரிய விலையைக் கொடுத்தே ஆக வேண்டும். கொடுப்பார்கள். அது கொடூரத்தை மிஞ்சிய கொடூரத்தின் தாக்குதலாகவே இருக்கும். ஆட்டம் போட்டவர்கள் எல்லாம் அடங்கிய கதைகள் வரலாற்றிலே நிறைந்திருக்கிறது. ஆடட்டும். அடக்கப்படுவார்கள் என்று கடந்த காலம் சொல்லிக் கொண்டே இருக்கிறது.

கீழே ஒரு சில நீதிபதிகளின் வரலாறு இருக்கிறது. படித்துப் பயனடையுங்கள்.



ஆண்டாள் பாவம். தன்னால் தமிழகத்தில் இப்படி ஒரு நிலைமை உண்டாகும் என நினைத்தே பார்த்திருக்க மாட்டார். மொத்தத்தில் இங்கு யாரும் அவரவர் வேலையைப் பார்ப்பது கிடையாது என்பது மட்டும் புரிகிறது. கட உள்ளே என்பதை கடவுள் என மாற்றி வியாபாரம் செய்யும் உலகமல்லவா இது.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.