குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, May 10, 2014

ஒரு ரூபாய் இருபத்தைந்து பைசா




கீரமங்கலம் அரசு பள்ளியில் ப்ளஸ் 1, 2 படித்துக் கொண்டிருந்த போது பைங்காலில் இருந்த சின்னம்மா வீட்டிலிருந்து பள்ளிக்கு வந்து கொண்டிருந்தேன். தம்பி நடராஜ் தான் அழைத்து வருவான்.

காலை, மாலை சின்னம்மா வீட்டில் சாப்பாடு, மதியம் மட்டும் செட்டியார் கடையில் சாப்பாடு. செட்டியார் அழுக்கு வேட்டி கட்டி இருப்பார். எப்போதுமே வியர்வையுடனே இருப்பார். புகை படிந்த ஹோட்டல். இரண்டு பக்கமும் பெஞ்ச் போடப்பட்டிருக்கும்.

மாதா மாதம் செட்டில்மெண்ட் என்பதால் எனக்கு இரண்டு ரூபாய் சாப்பாடு எனக்கு ஒரு ரூபாய் இருபத்தைந்து பைசா. சிறு வயதிலிருந்தே அசைவம் சாப்பிடுவதில்லை என்பதால் 75பைசா விலை குறைத்து தான் சாப்பாடு போட்டார்.

வாழை இலை மீது சூடான சாதத்தைப் போட்டு குழம்பு ஊற்றுவார் அப்படி ஒரு வாசம் வரும். அத்துடன் அவர் வைக்கும் கூட்டு சுவையோ சுவையாக இருக்கும். ஆனால் மோர் மட்டும் புளிச்ச வாடை இல்லாது இருக்கவே இருக்காது.

அருகில் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர் இலையில் மீன் வறுவல் வைப்பார். என்னைப் பார்ப்பார் வைக்கவா என்பார். நான் மறுத்து விடுவேன்.

கிட்டத்தட்ட ஆறு மாதம் அக்கடையில் சாப்பிட்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் மீன் வைக்கவா என்று அவர் கேட்கத் தவறுவதில்லை. நான் மறுப்பதையும் விடுவதில்லை.

அவர் ஏன் தினமும் கேட்டுக் கொண்டிருந்தார் என்பது எனக்குப் புரியவே இல்லை.

செட்டியார் கடைச் சாப்பாட்டுச் சுவையும், அவை வைக்கும் கூட்டும் இன்றைக்கும் என் நாவில் மறையாது இருக்கிறது.

அது ஒரு ரூபாய் இருபத்தைந்து பைசா சாப்பாடு என்பதால் தானோ என்னவோ அவ்வளவு சுவையாக இருந்தது போலும்.

அதுமட்டுமல்ல காரணம் !

செட்டியாரின் மீன் வறுவலும் தான் என்கிறது மனசு !


1 comments:

ராஜி said...

மீன் வறுவல் ஒருநாளைக்காவது சாப்பிட்டிருக்கலாமோ!!

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.