குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label வீடு விற்பனை. Show all posts
Showing posts with label வீடு விற்பனை. Show all posts

Thursday, February 13, 2020

நிலம் (62) - வீடு கட்டப் போறீங்களா? இதைக் கொஞ்சம் படியுங்க

வீடு என்பது இரண்டு எழுத்துக்கள் சேர்ந்த வார்த்தை. வேறு எந்தச் சொல்லுக்கும் இல்லாத விசேஷங்கள் பல உண்டு இந்தச் சொல்லுக்கு. வீடு என்பது எளிதில் கடந்து போகும் சொல் அல்ல. உணர்வு, வாழ்க்கை, வரலாறு என இந்தச் சொல்லின் பின்னால் மறைந்து கிடப்பவை அனேகம். வீடு என்பது ஒருவரின் வரலாறு மட்டும் அல்ல. சூரிய உலகில் பூமி எப்படி மனிதர்களுக்கு ஆதாரமோ அதைப் போல வீடு, ஒவ்வொரு மனிதர்களின் ஆதாரம். வீடின்றி மனித வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. 

வீடுகளுக்கு இலக்கணம் ஒன்றே ஒன்று தான். மறைப்பு. அது பத்து அடி அளவில் இருக்கலாம். குடிசையாக இருக்கலாம். மாளிகையாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அது வீடு தான். வீடு முழுமை அடைவது நல்ல தகப்பன், தாய், பிள்ளைகளால் மட்டுமே. யோசித்துப் பார்த்தால் வீடு பிள்ளைகளுக்காகத்தான் இருக்கும். தான் மட்டும் வாழ ஒருவர் வீடு கட்ட மாட்டார். தன் பிள்ளைகள், மனைவிக்காக, உறவினர்களுக்காக, அந்தஸ்துக்காக என்று பல காரணிகள் இருப்பினும் பிள்ளைகள் முதல் காரணமாக இருக்கும்.

சம்பாதித்து, வீடு கட்டி வாழ்வது என்பது சமூக அந்தஸ்து என முன்னாட்களில் கருதப்பட்டது. ஆனால் இப்போது அப்படி இல்லை. காலம் மாற மாற வீடு மனிதர்களின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றம் கண்டிருக்கின்றது.

பொருளாதாரத்தை முன்வைத்து சமூக அந்தஸ்து இப்போது முன்னிலைப் படுத்தப்படுகிறது. வல்லவர்களை முதன்மை மனிதர்களாக கருத ஆரம்பித்திருக்கிறது சமூகம். அவர்கள் என்ன அக்கிரமம் செய்தாலும் சரி, அது பற்றிய பிரக்ஞை சமூகத்தின் பால் பெரிதாக எடுபடுவதில்லை. பணம் இருந்தால், அவன் உயர்ந்தவன் என கருத ஆரம்பித்து விட்டது. இதன் காரணமாக சமூகத்தில் உயர் அந்தஸ்து பெற மனிதர்கள் தங்கள் நல்லியல்புகளை இழக்க ஆரம்பித்து விட்டார்கள். நல்லியல்புகள் மறைய மறைய, சமூகத்தில் குற்றங்களும், அக்கிரமங்களும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டன. பிறரின் வார்த்தைகளுக்காக தங்கள் வாழ்க்கையை, சந்தோஷத்தை இழப்பதில் மனிதனுக்கு நிகர் மனிதன் மட்டுமே.

மனிதர்கள் எப்போதும் தன் வயத்தில் சிந்திப்பது இல்லை. யாரோ ஒருவரின் சிந்தனைக்கு உட்பட்டு தான் தனது செயல்களையும், சிந்தனைகளையும் கொண்டிருக்கிறார்கள். ஒரு இந்து தனக்கான வாழ்க்கையை சமூகத்தின் கட்டுப்பாட்டுக்குள் தான் வைத்திருக்க முடியும். கட்டுப்பாட்டை மீற வேண்டுமானால் பெரும் தனக்காரனாக இருந்தால் தான் சாத்தியமாகும். இப்படியான சூழலில் ஒருவன் வீடு கட்டி வாழ்வது என்பது எதன் அடிப்படையில் என்றொரு கேள்விக்கு விடையைத்தான் கீழே எழுதி இருக்கிறேன். இதுதான் உண்மை. இதுதான் எதார்த்தம். மன்னர் கட்டிய கோட்டைகள் சிதிலமடைந்து கிடப்பது கண்முன்னாலே இருக்கும் சாட்சி. இதை மறந்து விடாதீர்கள். என்றைக்கும் இது உங்கள் நினைவிலிருக்க வேண்டிய உண்மை.

எனது அனுபவத்தில் ஒருவரின் வீடு பற்றிய சம்பவத்துக்கு வரலாம்.

சமீபத்தில் எனது நண்பரின் வேண்டுகோளுக்காக விற்பனைக்கு வந்திருக்கும் வீடு ஒன்றினைப் பார்வை இடச் சென்றிருந்தேன். வீட்டின் உரிமையாளரை வரச் சொல்லி இருந்தார் நண்பர். வீடு அல்ல அது. மாளிகை. ஒவ்வொரு சதுர அடியையும் செதுக்கி இருந்தார் உரிமையாளர். 

இது என் அறை, இது மகனுக்காக, மகள்களுக்காக என அவர் காட்டிய ஒவ்வொரு அறைகளிலும் பணம் கொட்டப்பட்டிருந்தது. நகரின் பிரதான இடத்தில் அமைந்திருக்கும் இடத்தில் உள்ள அந்த வீடு தூசு படிந்து காணப்பட்டது. பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டில் வசிக்க மகனும் மகளும் மறுத்து விட்டார்கள். 

என் ரசனை வேறு, அப்பாவின் ரசனை வேறு என்றுச் சொல்லி வேறு வீடு கட்டிச் சென்று விட்டார்கள். கோடிகளைக் கொட்டி யாருக்காக கட்டினாரோ அவர்களுக்கு அந்த வீடு பிடிக்கவில்லை.  மனைவிக்கோ இவ்வளவு பெரிய வீட்டினைக் கட்டி மாளவில்லை என சலிப்புத் தட்டி விட, அவரின் கனவு வீடு அவரின் முன்னால் நின்று சிரித்தது. பார்த்துப் பார்த்து கட்டிய வீடு இப்போது விற்பனைக்கு வந்து விட்டது. அவர் அந்த வீட்டின் மீது கொண்ட அன்பு, ஆர்வம் விலை சொல்லும் போது கண்ணீராக வழிந்தது.

நான் வேறு, என் கனவுகள் வேறு. என் வாரிசுகளின் கனவு வேறு தங்கம். இதைப் புரிந்து கொள்ள இத்தனை ஆண்டுகாலம் பிடித்து விட்டது. இவ்வளவு பெரிய வீட்டினைக் கட்டியதற்கான செலவில் பாதியை வங்கியில் வைத்திருந்தால் இன்றைக்கும் ஏதாவது கொஞ்சம் வருமானம் வந்து கொண்டிருக்கும். அறிவு அப்போது வேலை செய்யவில்லை. உணர்ச்சிதான் என் அறிவை மழுங்க அடித்து விட்டது என்றார். 

இன்றைய காலத்தில் பொருளாதாரத்தை மிகத் துல்லியமாக கணித்து வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. படாடோபம் அழிவைத் தரும். சேமிப்பு நிம்மதியைத் தரும் என்று புரிந்து கொள்ள வேண்டும். முதலீடு என்பது எதிர்காலத்தில் வளர்ந்து இருக்க வேண்டும்.

வீடு கட்டி வாடகைக்கு விடுபவர்களுக்கு அவ்வீடு, முதலீட்டில் 4 சதவீதம் கூட சம்பாதித்து தருவதில்லை என்பது புரிவது இல்லை. புதிய வீடு பழைய வீடாகும், செலவுகள் வந்து கொண்டே இருக்கும் என்று புத்திசாலிகளுக்குப் புரியும். அக்கிரமம் செய்து சம்பாதிப்பவர்களின் கதை வேறு. அவர்களின் கதையே வேறு. பெரும்பாலான மிடில் கிளாஸ் மக்களைப் பற்றி இங்கு சொல்கிறேன். வீடு கட்டி வாடகைக்கு விடலாம். அது 20 பர்செண்டேஜ் லாபம் தருமென்றால். முதலீடு குறைவாக இருத்தல் அவசியம், அந்த முதலீட்டின் மூலம் வரக்கூடிய வருமானம் நிறைவானதாக இருக்க வேண்டும். 

அதற்கு என்ன செய்யலாம் என இனி எழுத வேண்டியதில்லை என நினைக்கிறேன். புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

உங்களுக்காக வீடு கட்ட வேண்டும். அவ்வீடு நீங்கள் அர்த்தத்துடன் வாழ்வதற்காக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் செலவுகள் வந்து மிரட்டுவதாக இருக்க கூடாது. கடன் வாங்கி வீடு கட்ட கூடாது. எவருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலையில் வீடு கட்டவே கூடாது என்று பல கூடாதுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வளவு கூடாதுகளைக் கருத்தில் கொண்டு வீடு கட்டினால் மிகச் சந்தோசமாக வாழலாம். அது சாத்தியமா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. முடியாதது என ஒன்று இவ்வுலகில் உண்டா? டீக்கடைக்காரர் நாட்டை ஆளும் காலம் இது என்பதை மறந்து விடாதீர்கள். அவர் முடியாது என்று நினைத்திருந்தால் பிரதமராக முடிந்திருக்குமா?

பல முடியாதுகளை முடியும் என்ற கனவுகளோடு நாங்களும் உங்களுடன் பயணிக்க இருக்கிறோம். வீடு என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இப்பதிவு. 

காலங்கள் மாற மாற வீடும், அதைப் பற்றிய தேவைகளும் மாறக்கூடும். ஆனால் மனிதர்கள் என்றைக்கும் அதே ஆசா பாசங்களுடன், தேவைகளுடன் தான் பிறக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.  மனிதர்களின் மாறாத அந்தக் குணங்களுடன் இயைந்து வீடு இருப்பின் அதை விட சந்தோஷம் வேறொன்றும் இருக்காது அல்லவா?

வாழ்க வளமுடன்....!