குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label வாழைதோட்ட அய்யன் கோவில். Show all posts
Showing posts with label வாழைதோட்ட அய்யன் கோவில். Show all posts

Saturday, January 7, 2017

வாழைதோட்ட அய்யன் கோவில்

பூச்சியூரில் சுருட்டையை பரலோகத்திற்கு அனுப்பிய வயதான போலீஸ்காரர் ”வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலுக்குச் சென்று விட்டு வாருங்கள்” என்றுச் சொன்னார். ”அது எங்கே இருக்கிறது? என்ன விஷயம்?” என்று கேட்ட போது ”பாம்புகள் வந்தால் அய்யன் கோவிலுக்குச் சென்று வந்தால் பாம்புகள் மீண்டும் வராது” என்றார். 

தினமும் பாம்பு இருக்கிறதா என்று பார்த்து விட்டுத்தான் வண்டியை வெளியில் எடுப்பது. பையன் பூண்டை நசுக்கி உள்ளே வைத்திருந்தான். வண்டியைச் சுற்றிலும் உப்பினைப் போட்டு வைத்திருந்தான். ஆனாலும் அந்த சிலீர் பயம் இருந்து கொண்டே தானிருக்கிறது. 

வீட்டின் இடது பக்கமும் மேற்கு பக்கமும் திறந்த வெளி. அதுமட்டுமில்லாமல் முயல்கள், மயில்கள், கிளிகள், பல்வேறு பறவைகள், குயில்கள் போன்ற பறவைகள் தங்கி இருக்கின்றன. இதன் கூட அணில்கள், ஓணான்களும் வேப்பமரத்தில் குடியிருக்கின்றன. வாசலில் தண்ணீர் தெளித்தால் ஆங்காங்கு தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் அலகுகளை விட்டு தண்ணீரைச் சிதறியடித்து அந்தத் தண்ணீரில் குளிக்கும் பறவைகள் கூட்டமொன்றினை வாசற்படியிலிருந்து வேடிக்கைப் பார்ப்பதுண்டு. அனைத்துப் பறவைகளுக்கும் அரிசியும் தண்ணீரும் எப்போதும் வைப்பதுண்டு. 

வெள்ளை வெளேர் நாயொன்று வீட்டு வாசலில் படுத்திருக்கும். சமீப காலமாக அதற்கு இரவில் மட்டும் சாப்பாடு வைக்கிறார். நாங்கள் வீட்டில் இல்லையென்றால் அது வாசலில் படுத்து இருக்கும். பின் எங்கே போகிறது எப்போது திரும்ப வருகிறது என்றெல்லாம் தெரியாது. இப்படியான சூழல் கொண்ட வீட்டில் பாம்புகளுக்கு மட்டும் தடை விதிப்பது ஏன் என்ற கேள்வியுடன் இருந்தேன்.

நான்கைந்து நண்பர்கள் வாழைத்தோட்டத்து அய்யனைச் சந்தித்து விட்டு வாருங்கள் என்றுச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். விளாங்குறிச்சியிலிருந்து சிங்கா நல்லூர் வழியாக திருச்சி சாலையைப் பிடித்து, வீரபாண்டி பிரிவு தாண்டி சூலூர் வழியாக சோமனூர் நான்கு முக்கு சாலையிலிருந்து சாமளாபுரம் செல்லும் சாலையில் வண்டியைத் திருப்பி, அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்று வலது புறம் திரும்பி அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்றால் வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் இருக்கிறது.

(வாழைதோட்ட அய்யன் கோவில் கருவறை)

நல்லவேளை வீல் சேர் இருந்தது. உள்ளே சென்று அய்யன் அருகில் அமர்ந்து தரிசனம் செய்து விட்டு புற்று நீர் எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தோம். அய்யன் அந்தப் பகுதியில் மிகவும் பிரபலம். பாம்பு கடி, தேள்கடி போன்றவற்றிற்கு அய்யனின் புற்று நீர் அருமருந்து. இணையத்தில் தேடியபோது அய்யனின் வரலாறு தினமலர் டாட் காமில் கிடைத்தது. 

இணைப்பினைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள். படம் உதவி தினமலர்.

வீடு வந்து சேர்ந்து புற்று நீரை வீட்டைச் சுற்றிலும் தெளித்து வைத்தார் மனையாள். 

“பாம்புகளே கொஞ்சம் விலகியே இருங்கள். பார்த்தாலே நடுக்கம் எடுக்கிறது” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.

வாழைத்தோட்டத்து அய்யன் ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையுடன் !