குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label பதிவுத்துறை மோசடி. Show all posts
Showing posts with label பதிவுத்துறை மோசடி. Show all posts

Monday, December 14, 2020

நிலம் (73) - பதிவுத்துறை மோசடி - பத்திரங்களின் நிலை என்ன?

இரண்டு நாட்களாக பத்திரப்பதிவுத் துறை அல்லோலகலப் பட்டுக் கொண்டிருக்கிறது. காரணம் யார்?

வேறு யார்? துணைப்பதிவாளரைத் தவிர. அங்கிருக்கும் காண்ட்ராக்ட் பணியாளர்களின் உதவியுடன் இந்த அக்மார்க் அயோக்கியத்தனத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் துணைப்பதிவாளர் மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள்.

இதுவரை எவரும் வாய் திறக்கவில்லை. எந்தெந்தப்பத்திரத்திற்கு போலி ரசீது காட்டி பதிவு செய்தார்களோ தெரியவில்லை. திருப்பூர் துணைப்பதிவு அலுவலகத்தில் நடத்தப்பட்ட அயோக்கியத்தனத்தை இத்தனை காலம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றார்கள்.

பாதிக்கப்படுவது மக்கள். 

வாயைக்கட்டி, வயித்தைக் கட்டி, நல்லது கெட்டதுக்கும் போகாமல், உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்து ஒரு இடத்தை வாங்க படாத அவஸ்தைப் பட்டு, அதைக் கிரையம் செய்யச் செல்லும் இடத்திலும் இப்படியான ஊழல், அயோக்கியத்தனத்தைச் செய்தால் என்னதான் செய்ய முடியும் மக்களால்?

வங்கியில் பணம் போட்டால், அது எப்போது திவாலாகுமோ தெரியாமல் விழி பிதுங்கி, அதை நிலத்தில் போட்டாலாவது கிடக்குமே என்று அவரவர்கள் எங்கெங்கோ அலைந்து திரிந்து ஒரு இடத்தைப் பார்த்து விலை பேசி கிரையத்துக்கு வந்தால் பதிந்த பத்திரமும் போலியாகப் பதிந்திருக்கின்றார்கள் என்றால் இப்படிப்பட்ட அக்கிரமம் செய்தவர்களை உடனடியாக பதவி நீக்கமோ பணி விடுப்போ செய்யாமல், அங்கேயே வைத்திருக்கும் அரசின் லாவணிக்கு அளவே இல்லை.

மக்களிடம் ஜி.எஸ்.டி எனச் சுரண்டி சுரண்டி கொழுத்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு ஒரு பக்கம். காணும் இடமெல்லாம் ஊழல் செய்து கொண்டிருக்கும் தமிழக அரசு அதிகாரிகள் ஒரு பக்கம்.

இதற்கிடையில் மக்கள் இரயில் தண்டவாளத்தின் இடையில் மாட்டிய கதையாக கதி கலங்கிப் போய் கிடக்கின்றார்கள்.

பத்திரத்திரத்தைப் பதிவு செய்யவே மோசடி வேலை செய்திருக்கும் அந்தப் பதிவாளர் என்ன விதமானவர் என்று யோசிக்க கூட முடியவில்லை. இப்படியுமா ஒரு அதிகாரி இருப்பார் என்று யோசிக்கத் தோன்றுகிறது. கணிணி அலுவலக நடைமுறையின் இன்னொரு கோர முகம் இது. 

பட்டா மாற்றத்தில் நடத்தப்பட்ட பல்வேறு முறைகேடுகள் இன்னும் சரி செய்யவில்லை.  நத்தம் பட்டாவில் நடத்தப்பட்ட பெரும் முறைகேடுகள் இன்னும் சரி செய்யப்படவில்லை.

இதற்கிடையில் பத்திரப்பதிவு செய்யவே முறைகேடு. 

ஏன் இப்படி ஆகிப்போனது தமிழக அரசு? காரணம் மக்கள். மக்களைத் தவிர வேறு யாரும் காரணம் இல்லை. 

இது பற்றி நிறைய பேசியாகி விட்டது. ஆனாலும் எவரும் திருந்தப் போவதில்லை. 

ரஜினிக்கு ஓட்டுப் போடுவோம் என்று சொல்லுபவர்கள் எந்த மாதிரியான ஆட்கள் என்று எனக்குப் புரியவே இல்லை. 

தமிழருவி மணியன் அவர் அருகில் நிற்கிறார் வெட்கமில்லாமல். கோவையைச் சேர்ந்த ஒருவர் வேறு. அதிகாரத்தின் போதையில் இப்படியும் கீழ் மன நிலையில் மனிதர்கள் இருப்பார்களா என அதிர்ச்சியாக இருக்கிறது.

சீமான் சொன்ன மாதிரி, ஸ்ரெயிட்டா கல்யாணத்தில் தாலி கட்டத்தான் ரஜினி வருவார். 

அரசியல் என்பது இன்றைக்கு இவ்வளவு கீழ் தரத்திற்கு தமிழகத்தில் போய் விட்டது. ஆனால் பாருங்கள் அவர்களை உலகம் தலைவர்கள் என்கிறது. இதுதான் வேதனையிலும் வேதனை.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இனி போலி பத்திரப்பதிவினை எப்படித் தடுப்பது என்று பார்க்கலாம்.

ஆன்லைனில் டோக்கன் பதிவு செய்த பிறகு, ஸ்டாம்பு கட்டணம், பதிவு கட்டணம் இரண்டையும் நேரடியாக ஆன்லைனில் கட்டி ரசீது பெற்றுக் கொள்ளவும். இதை தனிப்பட்ட முறையில், எவரிடமாவது கொடுத்தால் இப்படியான சிக்கலில்தான் சிக்க வேண்டி வரும்.

அவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு போலி ரசீது காட்டி பதிவு செய்து விட்டார்கள். ஆனால் உண்மையில் அரசுக்குப் பணம் போகவில்லை. அந்தப் பத்திரத்தின் நிலை இப்போது NULL AND VOID.

ஆகவே நண்பர்களே, கொஞ்சமாவது கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

உழைப்பு உங்களது. பணம் உங்களது. அது உங்களிடம் இருக்க வேண்டும். ஆகவே கவனம் தேவை.

பதிவுத்துறை மோசடி இணைப்புச் செய்தி : https://www.dinamalar.com/news_detail.asp?id=2670493


மேலும் ஒரு குறிப்பு : கமல்ஹாசனுக்கோ, ரஜினிக்கோ ஓட்டுப் போட கிஞ்சித்தும் நினைத்து விடாதீர்கள். அவர்கள் இன்னும் தமிழ் நாட்டை கூறு போட முனைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்கு தெரியும் அதிமுக, திமுக தவிர அவர்களால் பதவிக்கு வர இயலாது என. ஆனாலும் இந்த வேலையைச் செய்கிறார்கள். நோக்கம் ஒன்றுதான் செட்டில்மெண்ட். அல்லது அயோக்கியத்தனம். 

போதும் சினிமாப் பைத்தியமாகி அலைந்து திரிந்தது. சினிமாக்காரர்களுக்கு தமிழ் நாட்டை எழுதி வைத்த காலத்தை மலையேற்றுவோம். 

நல்லவர்கள் எவரோ அவர்களுக்கு ஓட்டுப் போடுவோம். 

தர்மம் ஜெயிக்க வேண்டும். அறம் ஜெயிக்க வேண்டும். அதுதான் நம்மையும், நம் சந்ததியினரையும் வாழ வைக்கும். 

இவர்கள் இரத்தம் உறிஞ்சும் கொடிய அட்டையை விட கொடியவர்கள். அட்டை பசிக்கு உறிஞ்சும். ஆனால் இவர்களோ கொடூரர்கள்.

மேலும் சில செய்திகள் - செய்தி உதவி தினமலர் - நன்றி

சும்மா படிச்சு வையுங்க. என்னைக் கவர்ந்த செய்திகள் இவை.