குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label ஜோதி சாமி. Show all posts
Showing posts with label ஜோதி சாமி. Show all posts

Thursday, April 2, 2020

குருவைக் கண்டடைதல் மானிடக் கடைமை


உலகின் அத்தனை இன்பங்களும் கொட்டிக் கிடக்கும் அமெரிக்கா ஏன் இப்போது இத்தனை தடுமாற்றத்தில் தள்ளாடுகிறது எனத் தெரியுமா? உலகம் முழுவதையும் டாலரில் வர்த்தகம் செய்ய வைத்து, தன் நாட்டை வளமையின் உச்சிக்கு உயர்த்திய அமெரிக்காவின் பிம்பத்தை உடைத்தெரிந்த கொரானா என்ற கிருமி ஏதோ இயற்கையின் சீற்றத்தால் விளைந்ததா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இது கர்ம வினைப்பயன். உலகத்தாரின் அத்தனை பேரின் நிம்மதியையும் குலைத்த பலனை அமெரிக்கா அனுபவிக்கிறது. அமெரிக்கா இனி தள்ளாட ஆரம்பிக்கும் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அமெரிக்க அதிபராக டிரம்ப் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்? வியாபாரிகளுக்கு நாட்டை ஆளத் தெரியாது. அவர்கள் வியாபாரத்தில் வெற்றிக் கொடி நாட்டி இருக்கலாம். ஆனால் அரசியல் என்பது வேறு. ஆட்சி என்பது வேறு. அமெரிக்கா என்பது பிற நாட்டினருக்கு கனவு உலகம். அமெரிக்க மக்களின் மனம் வாழ்க்கை ஒரு பிசினஸ் என்று நம்பத் தொடங்கியதன் விளைவுதான் இன்றைய நிலைக்கு காரணமாய் இருக்கும் என நம்புகிறேன். ஒரே நாளில் 1000 பேர் மரணம் என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை 5000 ஆக இருக்கலாம் என நினைக்கிறேன். அது காலத்தின் விதி. செயல்பலன் அமெரிக்காவிற்கு திரும்ப ஆரம்பித்திருக்கிறது. அதன் முதல் விதை ஒரு பிசினஸ்மேன் அதிபராக வந்தது.

புரியும்படிச் சொல்கிறேன். விதி தனக்கான நிகழ்வுகளை எப்படி உருவாக்கும் என்பதை உங்களுக்குத் தெரிந்த புராணத்தைக் கொண்டு விளக்குகிறேன்.

மகாபாரதத்தில் காந்தார நாட்டின் இளவரசி காந்தாரி. காந்தாரியின் சகோதரன் சகுனி. பீஷ்மர், இளவரசர் திருதராஷ்டிரனுக்கு காந்தார மன்னர் தன் மகளை திருமணம் செய்து தர சம்மதிக்கவில்லை எனில், எடுத்துக் கொள்ள தகுதி உண்டு என அச்சமேற்படுத்துவார். காந்தார மன்னர் தன் மகன் சகுனி அடுத்த மன்னனாக வர வேண்டுமென்பதற்காக, ஹஸ்தினாபுரத்தை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆகையால் தன் மகளை இரு கண்களும் இழந்த திருதராஷ்டிரனுக்கு கன்னிகாதானம் செய்து வைக்க சம்மதிக்கிறார். சகுனிக்கு இந்த விஷயம் தெரியவர, ஹஸ்தினாபுரத்தை அடியோடு அழிக்க முடிவெடுக்கிறான். தொடர் நிகழ்வு உங்களுக்குத் தெரியும். சகுனியால் விஷமேற்றப்பட்ட துரியோதனன் முற்றிலுமாக அழிக்கப்பட்டான். அதர்மத்தின் பக்கம் நின்றவர்களை அழிக்க விதி செய்த சித்து விளையாட்டுதான் மஹாபாரதம். விதி தன்னை நிலை நிறுத்த, அதற்கான ஆட்களை சிக்க வைக்க பெரும் சதிராட்டங்களை நிறைவேற்றும். விதியை மதியால் வெல்ல முடியாது நண்பர்களே. பகவான் கிருஷ்ணரும் விதியின் முன்னாலே தோற்று, ஒரு வேடனின் அம்பாலே மாண்டார், விதியின் முன்னாலே கடவுளால் கூட வெற்றி அடைய முடியவில்லை அல்லவா?

ஆனால் விதியை ஒருவரால் வெல்ல முடியும். அது யார் தெரியுமா? குரு….!

குருவானவர்கள் (கோவில் குருக்களை மறந்து விடுங்கள். அவர்கள் குருவின் வேடத்தில் இருக்கும் வியாபாரிகள்) இறைவனுடன் ஒன்றி இருப்பார்கள். அவர்கள் தன்னையே நம்பி இருக்கும் சீடர்களுக்கு விதியால் வேகமாய் வீசப்படும் கத்தியைத் தடுக்கும் கேடயமாய் இருப்பார்கள். நல்ல குரு, சீடன் அமைவதும் குருவின் விருப்பத்தைப் பொறுத்தது. குருவானவர் தன் சீடனுக்குப் பல்வேறு பரிட்சைகள் வைப்பார். சீடன் தன் நிலை மாறுகிறானா என்று பார்ப்பார். ஏனென்றால் நாளை அந்தச் சீடன் இன்னொருவரின் குருவாவான். புடம் போட்ட தங்கம் தான் ஜொலிக்கும்.

ஒரு சூஃபிக் கதை உங்களுக்காக. படித்தவர்கள் எல்லாம் புத்திசாலிகள் என்று நினைப்போம். ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு படிப்பறிவில்லாத நாட்டுப்புறத்தான் ஒரு சூஃபிக் குருவை வைத்து என்ன செய்தான் என்பதைத் தொடர்ந்து படியுங்கள்.
அபுல்ஹசன் என்ற சூஃபி ஞானியை படிப்பறிவில்லாத ஒரு நாட்டுப்புறத்தான் சந்தித்து, “என்னுடைய கழுதை காணாமல் போய் விட்டது, அதை நீங்கள் தான் திருடினீர்கள் என எனக்கு நன்கு தெரியும். ஆகவே எனக்கு எல்லாமுமாக இருந்து என் வாழ்க்கை நடத்த உபயோகமாய் இருக்கும் அந்தக் கழுதையை உடனடியாக என்னிடம் திருப்பித் தாருங்கள். இல்லையென்றால் ஊரைக் கூட்டி, நீங்கள் என் கழுதையைத் திருடி விட்டதாகச் சொல்லி விடுவேன்” என்று முறையிடுகிறான்.

அதைக் கேட்ட அபுல்ஹசன், ”என்ன சொல்கிறாய்? நான் ஏன் உன் கழுதையைத் திருட வேண்டும். இதுவரையிலும் உன்னைப் பார்த்ததே இல்லையே, நீ சொல்லும் குற்றச்சாட்டை என்னால் ஏற்க இயலாது. சென்று விடு இங்கிருந்து” என்கிறார்.

“முடியாது. நீங்கள் தான் என் கழுதையைத் திருடினீர்கள். என் கழுதையை வாங்காமல் இங்கிருந்து செல்ல மாட்டேன்” என்று சொல்லி கைகூப்பி நின்றான்.

செய்வதறியாது திகைத்து நின்ற அந்த சூஃபி இறைவன் மீது இறையச்சம் கொண்டவர். இறைவனிடம், “இறைவா, உன் நாட்டம் எதுவோ அதுவே நடக்கட்டும், உங்களின் விருப்பத்தின் படியே எல்லாம் நடக்கட்டும்” என முறையிடுகிறார்.

அங்கு, எங்கிருந்தோ வந்த ஒருவன், “உன் கழுதை கிடைத்து விட்டது” எனச் சொல்கிறான்.

அதைக் கேட்ட உடன், அந்த நாட்டுப்புறத்தான் சூஃபி அபுல்ஹாசனின் காலைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, “குருவே, என்னை மன்னித்து அருளுங்கள். என் கழுதைக் காணாமல் போய் விட்டது. கழுதை இல்லையென்றால் என் வாழ்க்கை அழிந்து விடும். ஆகவே உங்களிடம் வந்து நீங்கள் தான் என் கழுதையைத் திருடினீர்கள் என்றால், நீங்கள் இறைவனிடம் முறையிடுவீர்கள். இறைவன் உங்களின் வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றுவார் என தெரியும். ஆகவே தான் நீங்கள் தான் கழுதையைத் திருடினீர்கள் என்று சொன்னேன்” என சொல்லி மன்னித்து விடும்படி மன்றாடினான்.

அதற்கு அபுல்ஹாசன், “இதுவும் இறைவனின் நாட்டமே” என்றுச் சொல்லி அவனை வழி அனுப்பி வைத்தார்.

இன்றைக்கு பெரும்பாலானவர்கள் குருவினை அணுகுவது இந்த நாட்டுப்புறத்தான் போலத்தான். குருவிற்குத் தெரியும் யார் உண்மையானவர் என.

இறைவனின் நாட்டமும், வல்லமையும் ஒருங்கே அமையப்பெற்ற நல்ல குருவினை தேடிக் கண்டடைதல் ஒவ்வொரு மனிதனின் முதற்கடைமை. அவர்கள் போதகராக இருக்கலாம், சூஃபியாக இருக்கலாம், முனிவராக இருக்கலாம். ஆனால் அவர்கள் எல்லோரும் பல மணம் வீசும் மலர்களே…!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மணம். ஆனால் அவர்கள் அன்றலர்ந்த மலர்களே…!

மலர்கள் பூப்பது இயற்கை. தேனிக்கள் மலர்களைத் தேடிச் செல்வது வாழ்க்கை அல்லவா நண்பர்களே..! புரிந்து விட்டதா உங்களுக்கு….???

வாழ்க வளமுடன்…!