குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Friday, September 23, 2011

சிக்க வைக்கும் சில தூண்டில்கள்


ஃபெமோ மாடலிங் கம்பெனியைச் சேர்ந்த மாடல் ஒருவருக்கு சினிமா ப்ராஜெக்ட் ஒன்றிற்காக டெல்லியில் இருந்து சென்னை வர, ஏர் இந்தியாவில் டிக்கெட் புக் செய்திருந்தேன். டிக்கெட்டில் எனது நம்பரைக் கொடுத்து வைத்திருந்தேன். 6.10க்கு கிளம்ப வேண்டிய ஏர் இந்தியா ஃப்ளைட் சரியாக 10.55க்குத்தான் கிளம்பியது. அதற்குள் சென்னையில் ரிசீவ் செய்ய சென்றிருந்தவர், போனில் அழைத்து சரியான ரகளை. ஏர் இந்தியா வழங்கும் சர்வீஸ் எத்தகையது என்று நேற்று எனக்குப் புரிந்தது.

திரும்ப மாடல் டெல்லிக்கு கிளம்ப டிக்கெட்டைக் கையில் கொடுத்து, செக்கின் செய்து விட்டு, நண்பரும் வீட்டிற்கு திரும்ப வந்து விட்டார்.

ஒரு வழியாக வேலை முடிந்து விட்டது என்று ஆசுவாசப் பட்ட அடுத்த சில நொடிகளுக்குள் அது எப்படி அத்தனை எளிதாக முடியும் என்பது போல, ஒரு போன் கால் வந்தது.

யாரென்று கேட்டேன். மாடல் பெயரைச் சொல்லி, அவர் எங்கே என்று கேட்டார். என்ன விஷயம் என்றேன். அவரின் பேக் ஒன்று மிஸ்ஸாகி எங்களிடம் இருக்கிறது. அதை அவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றார். நண்பரை அழைத்தால் ஆள் போன் எடுக்கவே இல்லை. என்ன ரகளையடா இது என்று டென்ஷனாகி மாடலை அழைத்து, உனது பேக் ஏதாவது மிஸ்ஸாகி விட்டதா என்று கேட்டேன். இல்லையே என்றாள் அவள்.

”உன் பேக் ஏர்போர்ட் அத்தாரியிடம் இருக்கிறது என்று போன் வந்திருக்கிறது, உன் லக்கேஜை மிஸ் பண்ணி விட்டாயா? ”என்று கேட்டேன்.

”அதெல்லாம் ஒன்றுமில்லையே” என்றுச் சொன்னவள், ”அயாம் ஸ்கேர்டு” என்று கதற ஆரம்பித்தாள். எனக்கு ஒரு மாதிரியாகப் போய் விட்டது. மாடல் அமெரிக்கன் ஆங்கிலம் பேசுகிறாள். எனக்கோ நம்ம தமிழ் ஆங்கிலம் தான் புரியும். அவசரத்தில் அவள் பேசுவதைப் புரிந்து கொள்வது என்பது எனக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. 

அதன் பிறகு அழைத்திருந்த நம்பரை மீண்டும் தொடர்பு கொண்டு, என்ன பேக், நீங்கள் யார் என்று கேட்ட போது தான் அந்த ஆள் ஏதோ பிரச்சினைக்கு அடிப்போடுகிறான் என்றுத் தெரிந்தது. கேரி பேக்கில், சில கேரி பேக்குகள் இருக்கின்றனவாம்,  அதை அவளிடம் கொடுக்க வேண்டுமாம். ஆகையால் அவளின் தொடர்பு எண்ணைக் கொடு என்றான். எனக்கு விர்ரென்று கோபம் தலைக்கேறியது. அவன் டிக்கெட்டில் இருந்த நம்பரை எப்படிக் கண்டுபிடித்தான் என்று தெரியவில்லை. அவன் சென்னை ஏர்போர்ட்டைச் சேர்ந்தவன் தானா என்பதும் தெரியவில்லை.

”ஐ வில் செண்ட் மை கலீக் டுமாரோ டு கலெக்ட் பேக்” என்றுச் சொல்லிக் கட் செய்தேன். யார் அந்த ஆள்? எதற்காக போன் செய்தான் என்பதையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருந்தால் வேறு எந்த வேலையையும் பார்க்க முடியாது அல்லவா? ஆகையால் விட்டு விட்டேன். அதற்குள் மாடல் பல முறை எனக்கு அழைக்க, நான் அவளிடம் சொன்னேன்.

நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய் அல்லவா, அதனால் உன்னுடன் பேச முயன்றிருப்பான் போல”. கேட்டதும் சிரி சிரியென்று சிரித்தாள் மாடல்.

டெல்லியில் இருந்து போன் வந்தது. “ ரீச்டு” என்ற குரலைக் கேட்டதும் தான் தூங்கவே சென்றேன்.

* * *

தமிழ் பேசத் தெரிந்த ஆண்கள், பெண்கள் எங்களது இணையதள முகவரியில் இலவசமாய் பதிவு செய்து கொள்ளவும். தமிழ் பட வாய்ப்புகளைப் பெற உதவுகிறோம். 

இணையதள முகவரி : http://www.femo.in

Wednesday, September 8, 2010

நடிகர் முரளியும் நானும்




முரளி உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

எனது நெருங்கிய நண்பரொருவர் நடிகர் முரளியை அறிமுகம் செய்து வைத்தார். அடிக்கடிப் பேசிக் கொள்வோம். வீட்டுக்கு அவசியம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்திருந்தார். பையன் அதர்வாவின் திரைப்படத்திற்காக ரொம்பவும் மெனக்கெட்டார். படம் வெளியானவுடன் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

பூவிலங்கு படத்திலிருந்து மனதிற்குள் அச்சாய் பதிந்தவர் நடிகர் முரளி. சமீபத்தில் நடிகை லட்சுமியோடு ஒரு பேட்டியில் அவரைக் கண்டேன்.

அவரின் திரைப்படப் போராட்டத்தை விவரித்தார். ஹீரோவாக கமிட் ஆகி மறு நாள் சூட்டிங் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் போது, செய்திதாளில் வேறொரு ஹீரோவை போட்டு விளம்பரம் வருமாம். உள்ளுக்குள் கதறிக் கொண்டு அமைதியாகி விடுவாராம். அப்பாவின் படத்தில் நடிக்கும் போது “டேய் கருப்பா” என்ற சத்தத்தைதான் முதலில் கேட்டாராம். சினிமா எல்லோருக்கும் தனது கதவுகளை திறந்து விடுவது கிடையாது. அதிர்ஷ்டமும், மாறாத அர்ப்பணிப்பும், திறமையும் கொண்டவர்களால் தான் வெற்றி பெற இயலும் என்று உணர்த்தினார்.

காலையில் என் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, முரளியின் மரணத்தைப் பற்றிய ஃப்ளாஷ் நியூஸ் பற்றிச் சொன்னதும் பதறிப் போய் விட்டேன்.

வழக்கம் போல அவருக்கு அழைத்தேன்.

மறு முனையில் அதர்வா.


Wednesday, December 2, 2009

ஏனோ மனிதன் பிறந்து விட்டான்

பனித்திரை என்ற திரைப்படத்தில் வரும் இந்தப் பாடல் சொல்வது அனேகம். சமூகம் இந்தளவுக்கு கேடு கெட்டதாய் ஆக ஏதோ சிலரின் தன்னலப் போக்குதான் காரணம் என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்தப் பாடலைப் படித்துப் பாருங்கள்.

ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்
ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

எதிலும் அச்சம் எதிலும் ஐயம்
எடுத்ததற்கெல்லாம் வாடுகிறான் - தன்
இயற்கை அறிவை மடமையெனும்
பனித் திரையாலே மூடுகிறான்

ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

பெண்ணே தெய்வம் அன்னை கடவுள்
பெருமை என்று பேசுகிறான்
பெண்ணே தெய்வம் அன்னை கடவுள்
பெருமை என்று பேசுகிறான் - பெண்
பேதைகள் என்றும் பீடைகள் என்றும்
மறு நாள் அவனே ஏசுகிறான்

ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும்
நன்றி எனும் குணம் நிறைந்திருக்கும்
நரியாய் அவனே உருவெடுத்தாலும்
தந்திரமாவது தெரிந்திருக்கும்
காக்கைக் குலமாய் அவதரித்தாலும்
ஒற்றுமையாவது வளர்ந்திருக்கும்
காற்றாய் நெருப்பாய் நீராய் இருந்தால்
கடுகளவாவது பயனிருக்கும்
ஆறறிவுடனே பேச்சும் பாட்டும்
அறிந்தே மனிதன் பிறந்து விட்டான் - அந்த
ஆறாம் அறிவைத் தேறா அறிவாய்
அவனே வெளியில் விட்டு விட்டான்

ஏதோ மனிதன் பிறந்து விட்டான் அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

Saturday, January 31, 2009

நாகேஷ் - காமெடி

மக்களின் மனதில் என்றும் மறையாத நடிப்புக் கொண்டவர் நாகேஷ். விருதுகளுக்கும் அப்பாற்பட்ட நடிகரின் மரணம் சற்று வேதனையாக இருந்தாலும் சினிமா உலகில் என்றும் மறையாத புகழுடையவர். நடிப்பின் மூலம் மற்றவரை சிரிக்க வைத்தவர் அவர். அழுவது அவருக்குப் பிடிக்காது என்பதால் தான் இந்த கிளிப்பினை இணைக்கிறேன்.

Friday, January 2, 2009

யாரது யாரது ????

புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றி. எனக்கு புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் எல்லாம் நம்பிக்கை இல்லை.

வாழ்க்கை அதன் பாதையினை தொலைத்து விட்டு பரிதவித்து நிற்கும்போது கொண்டாட்டங்களில் மனது செல்ல மாட்டேன் என்று அடம்பிடிக்கிறது.

எங்குபார்த்தாலும் தர்மம் கொல்லப்படுகிறது. பூமி முழுதும் அதர்மம் தலை தூக்கி மனிதர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். கொண்டாட்டம் என்ற பெயரில் உடம்பினை அழித்துக் கொள்ளும் காரியங்களில் ஈடுபடுகிறார்கள். மனிதர்கள் இயந்திரங்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை சுலபமாக இல்லாமல் கடும் இருள் சூழ்ந்த பாலைவனமாக மாறி வருகிறது. எங்கு செல்வது யார் மீது நம்பிக்கை கொள்வது என்று அறியாமல் மனிதர்கள் மனம் பிறழ்ந்து என்னென்னவோ செய்கிறார்கள்.

இருப்பினும் மனசினை சற்று ஆற்றுமைப் படுத்திக் கொள்ள சில பாடல்களை அவ்வப்போது கேட்பேன். எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. வெகு அழகான பாடல் வரிகள். நல்ல இசை... கேட்க கேட்க மனசு சற்று ஆறுதல் படுகிறது. இயற்கையினை விட எவரும் அழகில்லை இந்தப் பெண் உட்பட. ஆனால் இந்தப் பெண் அழகாக இருக்கிறார். இவரின் வாழ்வு சிறக்க இறைவனை பிரார்த்திப்போம்.


Friday, December 5, 2008

சின்னப்பயலே சின்னப்பயலே

எம்ஜியாருக்காக பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பாடல். எனது ஊருக்கு அருகில் இருக்கிறது இந்தப் பட்டுக்கோட்டை. கல்யாண சுந்தரத்துக்கு சாலையின் முக்கில் ஒரு சிலையுமுண்டு. என் மகன் என்னிடம் கேட்டான் ” யாரப்பா அவரு” பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம் என்றேன். அவரின் பாடல் நினைவுக்கு வந்தது.

கம்யூனிச தத்துவம் இப்பாடலில் அங்குமிங்கும் வெளிப்படுகிறது. இன்றையக் கால கட்டத்தில் கம்யூனிச தத்துவமெல்லாம் எடுபடுமா என்ன ???

ஒரு பக்கம் உல்லாசத்தின் உச்சகட்டத்தை அனுபவிக்கும் மனிதர்கள்
மறு பக்கம் ஒரு வேளை சோற்றுக்கும் வழியில்லா தவிக்கும் மனிதர்கள்.



ஒருவன் மனதில் ஒன்பதடா...

மனிதனின் மனம் இருக்கிறதே, அதனால் செய்ய இயலாத காரியம் என்று ஒன்று இருக்கிறதா என்ன? அந்த அளவுக்கு வலிமை வாய்ந்த மனம் பற்றிய பாடல் இது என்பதால் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

ஒவ்வொரு மனிதனின் மனதில் மறைந்து கிடக்கும் மர்மங்கள் எவ்வளவோ ???????

Friday, November 28, 2008

ராதையின் காதல் வலி

ஒரு நாள் காதலியைக் காணவில்லை. வருவாள் வருவாள் என்று காத்திருந்தேன். காணவில்லை. அவளின் தங்கையையும் காணவில்லை. எனக்குள் ஏதோ ஒன்று உடைந்தது போல உணர்ந்தேன். கலீல் ஜிப்ரானின் கவிதைகளை படித்து மனதினை தேற்றிக் கொள்வேன். இருந்தாலும் மனசு கேட்காது. எப்போது தான் வருவாளோ என்று பிரவச வலியால் துடிக்கும் பெண்ணைப் போல மனசு துடித்துக் கொண்டிருந்தது. என் நண்பன், நான் படும் வேதனையைக் காணச் சகிக்காமல் அழுதான். ஏனடா, இப்படி உன்னையே சாகடித்துக் கொள்கிறாய் என்று கண்ணீர் சிந்தினான்.

” இறந்த பிறகும் என் கண்கள் திறந்தே இருக்கும்
ஏனென்றால் இன்னும் உனக்காக காத்திருக்கிறேன் “

என்ற கலீல் ஜிப்ரானின் கவிதை வரிகளை அவனிடம் சொன்னேன். ஜெயதேவர் கண்ணனின் காதலி ராதை கண்ணனைப் பார்க்க இயலாமல் காதல் பிரிவில் படும் வேதனையை பாடலாக எழுதி இருப்பார். கண்ணதாசனின் வரிகளில் வழிந்தோடும் ராதையின் காதல் பிரிவின் வலிகள் நான் படும் துயரத்தின் வலியை விட சுமாராகத்தான் இருந்தது.

காதலிக்காக காதலன் பாடும் பாடல் என்று இந்தப் பாடலை எடுத்துக் கொள்ளுங்களேன்.


காதலிக்கும் போது கேட்ட பாடல்

நான் ஒரு காலத்தில் எனது வகுப்புத் தோழியுடன் காதல் வயப்பட்டிருந்தேன். எனக்கும் அவளுக்கும் காதல் தூது தோழியின் தங்கை. தோழி சுமாராகத்தான் இருப்பாள். ஆனால் இவள் தங்கையோ அழகு என்றால் அப்படி ஒரு அழகு. தேவதை போலவே இருப்பாள். உடல்வாகும், நடையும், முகமும் அவ்வளவு லடசணமாக இருக்கும்.

என் மீது கொள்ளைப் பிரியம் வைத்திருந்தாள். ஆனால் நான் தான் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டேன். எனக்கு மகன் பிறந்த பின்னர் எனது உறவினர் வீட்டுக்கு மகனுடன் சென்றேன். என் மனைவி மகனுக்குச் சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த போது தோழியின் தங்கை என் மனைவியிடம் சொன்னது “ இவன் என் வயிற்றில் இருந்து பிறக்க வேண்டியவன், எங்கோ பிறந்திருக்கிறான்”. என் மனைவி என்னிடம் வந்து சொன்னாள். அப்படியா சொன்னாள் என்று சொல்லிச் சிரித்து வைத்தேன்.

தோழியுடன் காதல் வயப்பட்டிருந்த போது அவளின் சிரிப்புக்காக நாள் முழுதும் தவமிருப்பேன். அந்த நேரங்களில் இந்தப் பாடலைத்தான் அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பேன். நீங்களும் கேட்டுப் பாருங்களேன்.

Wednesday, November 19, 2008

சொர்க்கமே என்றாலும்....

இப்பாடலை எனது மனம் கவர்ந்த பதிவர் ஒருவருக்காக இங்கு பதிவிடுகிறேன்.




அனானிமஸின் கமெண்ட்ஸ்சுக்காக பழைய போட்டோவை இணைத்துள்ளேன். இந்த போட்டோவில் ஒரு விஷயமிருக்கிறது. என் மனைவியால் மூன்று வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் இது. எனது புகைப்படங்களிலேயே இது தான் அழகாய் இருப்பதாக அவளிடம் சொல்வேன். அதற்கு அவளின் பதில் : கணவர் எந்த போஸில் அழகாய் இருப்பார் என்று மனைவிக்குத் தான் தெரியும்.

Thursday, October 23, 2008

Survival of fitness

எனது சில நண்பர்கள் சினிமா இயக்குனர்கள். அந்த இயக்குனர்களில் ஒருவர் ” தங்கம், புது படம் கமிட் ஆகியிருக்கிறேன். புது முகம் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆரம்பகால ரேவதி போல, புதுமுகம் தேவை, உனக்குத் தெரிந்தவர்களிடம் கேட்டுப்பாருங்களேன் “ என்றார். எனது நண்பர்கள் பல பேரிடமும் சொல்லி வைத்திருந்தேன். அதில் ஒரு நண்பர் எனது முன் அனுமதி இல்லாமல் இரண்டு பெண்களிடம் எனது தொலைபேசி எண்ணைக் கொடுத்து விட்டார்.

மாலை நேரம், புது எண்ணிடமிருந்து அழைப்பு வந்தது.

”சார் மதுமதி பேசறேன், தங்கம் சாரா?”
“எஸ் சொல்லுங்கள் “
“சார், போட்டோ கிடைத்ததா “
” ஓ... நீங்களா, கிடைத்து விட்டது. இயக்குனருக்கு அனுப்பி இருக்கிறேன்”
“ஏதாவது பதில் வந்ததா சார்”
“இல்லேம்மா, டைரக்டரைப் பிடிக்க முடியவில்லை. அவரே கூப்பிடுவார். அதன் பின்னர் தான் தெரியும்”
“சார், வேற ஏதாவது வேணுமா ”
“ வேற ஏதாவதுன்னா, என்னம்மா ?”
” உங்களை நேரில் வந்து பார்க்கலாமா “ என்றார்.

எனக்கு விர்ரென்று கோபம் தலைக்கேறியது. இந்தப் பெண் உமனைசர் என்று நினைத்து விட்டது போல தெரிகிறதே என்று நினைத்துக் கொண்டு,

“அதெல்லாம் வேண்டாம். உன்னை இயக்குனர் செலக்ட் செய்தால், நீயாச்சு, அந்த இயக்குனராச்சு. என்னை எதுக்குப் பார்க்கனும்?” என்று கர்ண கடூரமாக சொன்னேன்.

ஒரு நிமிடம் பேச்சே கேட்கவில்லை.

“சார், மன்னிச்சுக்கங்க “ என்று விம்மிய குரல் வந்தது.
“ பாரும்மா, எதுக்கு சினிமாவுக்கு வரனும்னு நினைக்கிறே” என்றேன்.
“ சர்வைவல் ஆஃப் பிட்னெஸ்” என்றார் அந்தப் பெண்.

இரண்டு வார்த்தைகளில் அவரின் சூழ்நிலையை விளக்கிய அந்தப் பெண்ணின் அறிவினை எண்ணி வியந்தேன்.

ஆம், சர்வைவல் ஆஃப் பிட்னெஸ். நினைத்துப் பார்த்தால் கொலை, கொள்ளை, போர், ஊழல், சர்வாதிகாரம் எதுவுமே தப்பே இல்லை என்று தான் தெரிகிறது.

வாழ வேண்டும். அதற்கு எது வேண்டுமானாலும் செய்யலாம்.

குறிப்பு : சர்வைவல் ஆஃப் பிட்னெஸ் என்று இரவில் புலம்பிக் கொண்டிருந்தீர்கள். அதற்கேற்ற கதையை எழுதவா ? என்று மனைவி இந்தப் பதிவை படித்த பின்னர் சொன்னார்.

Saturday, October 18, 2008

சூர்யவம்சம் - பாடல்

எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. பாடலாசிரியரும், இயக்குனரும், இசையமைப்பாளரும் ஒருங்கே ஒரு கோட்டில் இணைந்ததன் விளைவு இந்தச் சுவையான பாடல்.

Tuesday, September 16, 2008

மனதை மயக்கும் பாடலில் இதுவுமொன்று

இளையராஜாவின் குரலிலும் இசையிலும் இந்தப் பாடல் ஜொலிப்பதை கேளுங்கள். எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் இந்தப் பாட்டை மிஞ்ச எவர் இருக்கிறார் இசையுலகில்.

சற்று நேரம் .. சற்று நேரம்.. மனதை இலேசாக்குங்கள். கால்களையும் கைகளையும் படர விடுங்கள். மூச்சினை மெதுவாக விடுங்கள். மனது லேசா லேசா இருப்பது போல உணருங்கள். இப்போது இந்தப் பாட்டைக் கேளுங்கள். மனம் மிதக்கும்.... கண்கள் சொக்கும்... குரலில் தேன் சொட்டும். அது உம்மை நனைக்கும்... நீங்கள் நனைவீர்கள்.. நிச்சயம் நனைவீர்கள் இசை மழையில்.... மனம் சட்டென்று ஒருமைப்படும்....

கேட்கும்போதே கிளுகிளுப்பைத் தரும் பாடல்

என் சிறு வயதில் வேலைக்காரர் ஜெயராஜ் என்னை மாரியம்மன் கோவில் முன்புறம் நடந்து கொண்டிருந்த கீழே இறங்காமல் சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். அன்று கடைசி நாள். சுற்றி வரக் கயிறு கட்டி இருந்தனர். ஜெயராஜ் துண்டை விரித்து அமரச் சொன்னார்.

ஒரு பெண்ணும் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தவரும் இந்தப் பாட்டை ஒலிபெருக்கியில் போட்டு விட்டு ஆடினர். ஆட்டம் பட்டையக் கிளப்பியது. அந்த வயதில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் கேட்கவும் பார்க்கவும் படு ஜோராக இருந்தது. பாம்புபோல நெளிந்து வளைந்து ஆடி பார்ப்போரின் மனதினை சிதற வைத்த ஆட்டம் அது. அந்த வயதிலேயே பார்க்கும் போது கிளுகிளுப்பாய் இருந்ததன் விளைவு இதோ இன்று... கொட்டக் கொட்டக் விழித்துக் கொண்டு எழுதுகிறேன்.

இந்தப் பதிவை எழுதும் போது மணி 10.56 இரவு நேரம். அருகில் உள்ள வீட்டார்கள் அனைவரும் உறங்கி இருப்பார்கள். தப்பித் தவறி யாராவது இந்தப் பாட்டைக் கேட்டால், தங்கம் வீட்டில் மஜாவா இருக்கான் பாருன்னு அப்படி இப்படின்னு பேசிக்கிட்டே அவங்க அவங்க வீட்டில ஏதாவது நடக்கும்ல.... நடக்கட்டும்.. நடக்கட்டும்...

பாட்டைக் கேட்க கேட்க கிளுகிளுப்பாய் இருக்க, யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்ற நல்லெண்ணத்தில்.... இதோ சிலுக்கு ஸ்மிதாவும், கமலும்...

அடி தூள்...............


Sunday, August 31, 2008

தஞ்சாவூரென்றாலே குளிர்ச்சி தான் போலும் !

அடியேன் தஞ்சாவூர்காரன். எப்போதும் பசுமையும், தண்ணீரும், திருவிழாக்களும், காதணி விழாக்களும், திருமண விருந்துகளும் களை கட்டும் எங்கள் தஞ்சையில். இசையும், கொண்டாட்டமும் எங்கள் ஊரின் முக்கிய அம்சங்கள். உழைப்பு... உழைப்பு.... உறவுகள்... விழாக்கள்... இது தான் தஞ்சை மாவட்டம்.

ஆனால் பாருங்க, இந்தப் பாட்டில் தஞ்சாவூர் பெயர் வர, என்னவென்று எட்டிப் பார்த்தால்... ஆகா.. ஆகா.. இளமை துள்ளி விளையாடுகிறது பாருங்கள் இங்கே.... பாடல் வரிகளும் எங்க ஊர்க்காரனுங்க பேச்சுலே அசத்தற மாதிரி வேற இருக்கு. பச்சைப் பசேல்னு இருக்கு பாருங்க...

பார்த்து ரசிங்க .......... முடிந்தால் தஞ்சாவூர் பக்கம் ஒரு தடவை வந்து பாருங்க....

Saturday, August 23, 2008

தங்கத்தைக் காதலிக்கும் உலகம்

தங்கம்! உலகெங்கும் அனைவராலும் விரும்பப்படும் ஒரு உலோகம். அரசாங்கங்கள் தங்கத்தை சேகரித்து வைத்திருக்கின்றன. தங்க நகைக் கடைகளை காணும் போதெல்லாம் சொர்க்கலோகம் போல இருக்கும். உலகப் பெண்கள் பெரும்பாலோராலும் விரும்பப்படும் பொருள் தங்கம். ஆண்களும் விரும்புவார்கள்.

இந்தப் பாடலைக் பார்த்து வையுங்கள். எதுக்கும் இருக்கட்டும்.

பின்குறிப்பு : இந்தப் பாடலுக்கும் எனது பெயருக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. அப்படி யாராவது நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. பாடலைக் கேட்ட பின்னர் உங்களுக்கு தங்கத்தைப் பார்க்கும் போதெல்லாம் என் நினைவு வந்தால் நான் என்ன செய்ய.

Thursday, August 21, 2008

எனக்குப் பிடித்த பாடலின் வீடியோ - 4

அவள் உயிர் பெற்று வந்த பிரம்மனின் படைப்புகளின் உன்னதம். அவள் சிரித்தால் பார்ப்பவனுக்குள் பூகம்பம் உண்டாகும். சில்லென்று ஒரு குளிர்ச்சி உடல் முழுதும் பரவும். சடக்கென்று மனசு அமைதி பெறும். அழகு என்பது இவளா. இல்லை இவள் தான் அழகா. இரண்டுக்கும் வேறுபாடு சொல்ல இயலாது மனிதனால். அப்படி ஒரு தேவதை. அவளுக்கு ஒரு தங்கை.

ஆண்மகன் அவன். அழகு திருமகன். இவனுக்கு ஒரு அண்ணன். இருவரும் பெண்பார்க்கச் செல்வார்கள். அக்கா தம்பியை நோக்குவாள். தம்பியும் அப்படியே. அந்தப் பார்வையின் அர்த்தம் காதல். இதைத் தான் கம்பனும் கவி பாடியிருப்பானோ ? பார்வையில் காதலைப் பறிமாறும் அந்த உள்ளங்கள் தவித்துப் போகின்றன. ஏன்... அது தான் விதி என்பார்கள் மனிதர்கள். மனிதனால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகளின் பாதையில் அண்ணன் அக்காவையும், தம்பி தங்கையையும் மணக்க நேரிடுகிறது.

அண்ணன் இறந்து விடுகிறான். அக்கா விதவையாகிறாள். ஒரு குளிர்காலப் பொழுதில் மழை கொட்டுகிறது. இவனும் அவளும் தனிமையில் சந்திக்கும்படி நேர்கிறது. அவள் மனதில் விளையும் உணர்வுகளின் தொகுப்பு இது...

பாடலா இது... வாழ்க்கையின் கோரங்களைச் சொல்லும் பாடல் இது. விதவைப் பெண்ணின் தவிப்பை கொட்டி எழுதப்பட்ட பாடல். கேட்கும் என் மனதை உள்ளுக்குள் அழவைக்கும் இந்தப் பாடல். சோகத்திலும் சுகம் இருக்கத்தானே செய்கிறது.


எனக்குப் பிடித்த பாடலின் வீடியோ -3

சத்ரியன் படத்தில் பானுபிரியா நடித்த இந்தப் பாடலைக் கேட்கும் போது மனசு லேசாகி விடும். மிகவும் அருமையான பாடல் இது.

எனக்குப் பிடித்த பாடலின் வீடியோ - 2

இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் மனசு துள்ளி விளையாடும். என்றும் இனிமை தரும் பாடல்


எனக்குப் பிடித்த பாடலின் வீடியோ - 1

ஆகாய கங்கை - இளையராஜாவின் இன்னிசையில் எப்போது வேண்டுமானாலும் கேட்க தூண்டும் பாடல் இது.