குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label கொரானா ரசம். Show all posts
Showing posts with label கொரானா ரசம். Show all posts

Thursday, April 2, 2020

கொரானா ரசம் செய்வது எப்படி?


கோவையில் கொரானா பரவல் அதிகரித்து வருவது திகைக்க வைக்கிறது. கோவை மக்கள் எந்த ஒரு விஷயத்தையும் வெகு சிரத்தையாக கையாள்பவர்கள். தெருக்கள் எல்லாம் ஆள் அரவமற்று கிடக்கின்றன. கடைகளில் சொல்லும்படி கூட்டம் இல்லை. இருந்தாலும் கொரானா அதிகம் பரவிக் கொண்டிருக்கிறது மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில், இன்றைய பத்திரிக்கைச் செய்தி அப்படித்தான் சொல்கிறது. மனது பெரும் கவலையில் சிக்குகிறது.

அன்பு நண்பர்களே…!

இந்த நேரம் நம்மையும், நம் நண்பர்களையும் தற்காத்துக் கொள்ள வேண்டிய தருணம். வெகு கவனமாக இருங்கள். நேற்றிலிருந்து இன்னும் 7 நாளைக்கு யாரும் வீட்டை விட்டு எந்த காரணத்துக்காகவும் வெளியில் வருவதை இயன்ற அளவில் நிறுத்துங்கள். ஓடிக் கொண்டிருந்த வேளையில் அமைதியாக இருப்பது உடலளவில், மனதளவில் பாதிப்பினை உண்டாக்கும். ஆனால் நம் ஓட்டத்திற்கு இது இறைவனால் கொடுக்கப்பட்ட ஓய்வு என்று நினைத்துக் கொள்ளுங்கள். உள்ளத்தையும், உடலையும் இரும்பாக்குங்கள். வரும் காலம் இன்னும் சவாலான காலகட்டமாய் இருக்கும். அதை எதிர் நோக்கிட மனபலமும், உடல் பலமும் தேவை.

உடலளவில் கொரானா பாதிப்பை தடுக்கும் வலிமை கொண்ட ரசம் செய்வது எப்படி எனப் பார்க்கலாம். இந்த ரசம் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு சரியாக வருமா எனத் தெரியவில்லை. இருப்பினும் கொஞ்சமாய் முயற்சித்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள் என்னவென்று படித்துக் கொள்ளுங்கள்.

கைப்பிடி அளவு துவரம்பருப்பு
மஞ்சள் தூள் சிட்டிகை அளவு

மேற்கண்ட இரண்டையும் குக்கரில் சேர்த்து நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து வாணலியில் (கடாய்) மூன்று தக்காளியை நான்காக வெட்டிப் போடவும், நான்கு பச்சை மிளகாயைக் கீறி போடவும். ஒரு சிறிய துண்டு இஞ்சியை நன்கு துருவி வாணலியில் போடவும். ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போடவும். கொஞ்சம் மஞ்சள் தூள், கொஞ்சம் பெருங்காயத்தூள் ஆகியவற்றைப் போட்டு, இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, இஞ்சி வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.

பிறகு பருப்பை எடுத்து நன்கு மசித்து, இந்த தக்காளி வெந்த கலவையுடன் சேர்க்கவும். ஒரு டீஸ்பூன் ரசப்பொடி சேர்த்து கிளறி விடவும். நுரை கட்டி வரும் போது கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி வைக்கவும்.

ஒரு முழு எலுமிச்சைப் பழம் ஒன்றினைப் பிழிந்து சாறு எடுத்து அதனை இறக்கி வைத்த ரசத்தில் சேர்க்கவும்.

அடுத்து ஒரு சிறிய தாளிப்புக் கரண்டியில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து, அதில் கடுகு, சீரகம், பெருங்காயம், சிவப்பு மிளகாய் வற்றல் இரண்டு, மீண்டும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்தில் கொட்டி கலக்கி விடவும்.

வெகு அருமையான சுவையில் இஞ்சி, லெமன் ரசம் தயார். தாளிப்பு நெய்யில் செய்தால் தான் ரசத்தின் தன்மை சரியாக வரும். இல்லையெனில் பித்தச் சூடு அதிகரித்து விடும். நெய் இல்லையெனில் இந்த ரசம் செய்ய வேண்டாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Picture Courtesy : Google

இனி தேங்காய் துவையல் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.

அரை மூடி தேங்காயை துருவியோ அல்லது பற்களாகவோ எடுத்துக் கொண்டு, அதனுடன் ஆறு சிவப்பு மிளகாய், கொஞ்சமே கொஞ்சம் புளி, நான்கு பூண்டு பற்கள், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்து அதனுடன் தேவையான அளவு உப்புச் சேர்த்துக் கிளறிக் கொள்ளவும்.

இந்த ரசத்துக்கு தேங்காய் துவையல் சேர்த்துக் கொள்வது இன்னும் சிறப்பு. துவையலில் தாளிப்பு, எண்ணெய் இல்லாததால் அனைவரும் சாப்பிடலாம்.

இப்போது இரண்டும் தயாராகி விட்டது.

தரையில் அமர்ந்து கொள்ளுங்கள். தட்டில் சுடு சாதத்துடன் ரசம் சேர்த்து கையால் நன்கு தளர பிசைந்து கொள்ளுங்கள். சோறு ரசத்தில் கலந்து இருக்க வேண்டும். நன்கு பிசைவது முக்கியம். ரசம் அப்போது தான் சாதத்துடன் கலக்கும்.

ஒரு வாய் ரசம் சாதம், ஒரு கிள்ளு தேங்காய் துவையல் எடுத்து, அருகில் உள்ள பிள்ளைகளுக்கு ஒரு வாயும், மனைவிக்கு ஒரு வாயும் ஊட்டி விடுங்கள். பிறகு உங்களுக்கு.

வாழ்க்கை இந்த ரசம் சுவைப்பது போல சுவைக்கும்.

நம் வாழ்க்கை நமக்காக அல்ல நண்பர்களே…!

நாம் பிறருக்காக வாழ படைக்கப்பட்டவர்கள் என்பதை உணருங்கள். கொடுப்பதில் இருக்குமின்பம் பெருவதில் இல்லை. கொடுக்க கொடுக்க, பிறருக்குக் கொடுப்பதற்காகப் பெருகிக் கொண்டே இருக்கும் அது எதுவாக இருந்தாலும்.

அதற்காக நபிகள் நாயகம் வாழ்க்கை போல இல்லாமல், நமக்கும் கொஞ்சம் வைத்துக் கொண்டு, பிறருக்கும் கொடுக்கலாம் அளவோடு என்பதை மறந்து விடாதீர்கள்.

வாழ்க வளமுடன்..! நலமுடன்…!