குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, January 29, 2014

கும்பகோணம் டிகிரி காபி

சமீப காலமாக என்.எச் சாலைகளில் கும்பகோணம் டிகிரி காபி - மட்டும் என்றெல்லாம் அழைப்புகள் தென்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடந்த வாரத்தில் அன்னூர் தாசில்தார் அலுவலகம் சென்று விட்டு வரும் போது ஒரு கும்பகோணம் டிகிரிக் காபிக்கடையின் அருகிலேயே பசு மாடுகளைப் பார்த்தேன். சரி கறந்த பாலில் காபி ஒன்றினைக் குடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டு காபிக்கடைக்குள் சென்றேன்.

முதலில் டிகிரி காபி என்றால் என்ன என்று பார்த்து விடுவோம்.

தஞ்சாவூர் பக்கம் ஐயங்கார் ஆத்தில்(வீட்டில்) இந்த டிகிரிக் காபி பிரபல்யம். ஐயர்கள் என்றால் டிகிரி காபி நினைவுக்கு வந்து விடும். 

ஒரிஜினல் நயம் காபிக் கொட்டைகளை வாங்கி வந்து, விறகு அடுப்பில் மண்சட்டியில் வைத்து வறுக்க வேண்டும். வறுக்கும் போது காபி கொட்டையிலிருந்து கசியும் ஒரு வித எண்ணெய் வெளிப்படும் முன்பு பக்குவமாய் எடுத்து ஆற வைக்க வேண்டும். வறுபட்ட காபிக் கொட்டைகளை கொரகொரப்பாக அறைத்து காபி பில்டரில் போட்டு சுடுதண்ணீரை ஊற்றி வைத்தால் காபி டிகாஷன் இறங்கும். கறந்த காராம் பசு மாட்டின் பாலை ரொம்பக் காய்ச்சாமல் பக்குவமாய் ஒரு கொதி கொதிக்க வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

பித்தளை டம்ளரில் சர்க்கரை  போட்டு, அதில் காபி டிகாஷனை ஊற்றி அதன் பிறகு தேவைக்கு ஏற்ப பாலைச் சேர்த்து டபராவில் ஒரு ஆற்று ஆற்றி குடித்தால் கிடைக்கும் கசப்பும், இனிப்பும், பாலின் நறுமணமும், காபியின் சுவையும் தொண்டையில் இறங்கும் போது கிடைக்கும் இன்பத்தினை சொல்ல முடியாது. அனுபவித்துக் குடித்தவர்களுக்குத் தான் தெரியும் அதன் அருமை.

திருவையாற்றில் இருக்கும் எனது ஐயாராத்து தோழியின் வீட்டில் இந்தக் காபி கிடைக்கும். அப்பக்கம் போகும் வாய்ப்புக் கிடைத்தால் காபிக்காவே தோழியைப் பார்க்கச் செல்வதுண்டு. கடைகளில் நான் காபி குடிப்பது கிடையாது.

சில நண்பர்கள் வீடுகளில் கிடைக்கும் காபியைக் குடித்து விட்டு “இன்றைக்கு நாள் நன்றாக இல்லை” என்று எனக்குள் சொல்லிக் கொள்வேன். என்ன செய்வது? பிறர் மனம் நோகக்கூடாது என்ற கொள்கையால் அடிக்கடி நான் நொந்து போய் விடுவேன்.

சரி கோவை கும்பகோணம் டிகிரி காபிக் கடைக்குள் செல்வோம்.

பித்தளை டம்ளரில் காபிக் கொண்டு வந்து கொடுத்த போதே ஒரு வீச்சம் அடித்தது. பாக்கெட் பாலில் தான் இந்த வீச்சம் இருக்கும். ஒரு வித கவுச்சி வாடை. பெயரில் தான் கும்பகோணமே தவிர இந்தக் காபி கலனித் தண்ணீர் .

காபி கொண்டு வந்து கொடுத்தவரிடம் ”பசுமாட்டுப்பாலா?” என்று கேட்க, அவர் ”இல்லை சார் பாக்கெட் பால் ”என்றார். அத்துடன் தெரியாத்தனமாக சாம்பார் வடையொன்றும் ஆர்டர் செய்ய அதுவும் வந்து விட்டது. வடை ரசத்தில் மிதந்தது. மேலே கொத்தமல்லி கிடந்தது. 

கும்பகோணம் டிகிரி காபி எனக்குள் மறக்க முடியாத நினைவினைப் பதிப்பித்தது.

7 comments:

Yaathoramani.blogspot.com said...

நானும் ஒருமுறை குடித்து
தங்கள் அனுபவத்தைப் போலவே
அவதிப்பட்டேன்
சொல்லிச் சென்றவிதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

நானும் ஒருமுறை குடித்து
தங்கள் அனுபவத்தைப் போலவே
அவதிப்பட்டேன்
சொல்லிச் சென்றவிதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Thangavel Manickam said...

இப்போதெல்லாம் அது மாதிரியான காபியைக் குடிப்பதற்கு பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டி உள்ளது. காராம் பசுவைத் தேடினாலும் பார்க்க முடியாது. காப்பிக் கொட்டையில் கூட கலப்படம் வந்து விட்டது. ஊக்கத்திற்கு நன்றி

Thangavel Manickam said...
This comment has been removed by the author.
திண்டுக்கல் தனபாலன் said...

அந்த சுவையே தனி தான்...

கோவை நேரம் said...

இனி காபி குடிப்பீங்க அங்க.....

Thangavel Manickam said...

நாக்கு அறிவு சொல்லியதைக் கேட்காததால் வந்த வினை அது!

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.