குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, December 9, 2020

சித்ராவுக்கு ஒரு கடிதம்


(சின்னத்திரை நடிகை சித்ரா)

அவ்வளவு அவசரம் ஏனோ சித்ரா? 

உணர்வுகளின் பிடியில் சிக்கி விட்டீரோ?

உணர்வுக்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லை என நிருபித்து விட்டாயே சித்ரா.

இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்து சென்றிருக்கலாமே?

உன்னிடம் விளம்பரப் படத்திற்காகப் பேசி இருக்கிறேன். உன் குரலைக் கேட்டால், எனக்கு உன் மீது காதல் கொப்பளித்து அருவி போல கொட்ட ஆரம்பித்து விடும்.

அதைத் தவிர எனக்கும் உனக்குமான நேரங்கள் ஏதும் இல்லை. 

என்னிடம் உனக்கும், உன்னிடம் எனக்கும் எந்த வித பயனும் இருந்ததில்லை.

ஆனால்,

இரண்டொரு நாள் உன் குரலின் தாக்கத்தால் பெரும் மன வலி அடைவேன். 

இருப்பதே ஒரு மனசு. 

எனக்கு கடவுளின் மீது எல்லையில்லா கோபம் உண்டு இந்த விஷயத்தில்.

ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் மனசைப் படைத்து இருக்கலாம்.

அதில் இன்னொரு விஷேசத்தையும் இணைத்திருக்கலாம். ஒவ்வொரு மனசுக்கும் தொடர்பில்லா வண்ணம் செய்திருக்கலாம்.

மனித உலகினை கடவுள் வஞ்சித்து விட்டார்.

அது கிடக்கட்டும் அழகு தேவதையே….. !

மனசு வலித்து வலித்து உதிரம் கொட்டுகிறதடி உன் பிரிவால்.

எல்லாமும் முடித்து வைத்து விட்டாய்.

உன் சின்னஞ்சிறு உதடுகளைச் சுழித்துச் சுழித்து நீ பேசுகையில் சின்னக் குழந்தையின் மழலைப் பேச்சை கேட்பது போல இருக்கும். குழந்தையாகத் தானே இருந்தாய். அதற்குள் என்ன அவசரமோ உனக்கு?

உன் உருவமும், அழகும் ஒரு கிராமத்து அத்தியாயத்தின் நடிகையாக வந்த மருத்துவரைப் போல உள்ளத்தை அள்ளிச் செல்லுமே? இனி எவரிடம் காண்பது அதை? உன்னோடு எல்லாமும் போனதடி.

அத்தனை அழகையும், உன் அறிவையும் இரக்கமே இல்லாத நெருப்பிடமா கொண்டு போய் சேர்த்தாய்? மிச்சம் சொச்சமில்லாமல் தின்று விடுமே உன்னை.

இதற்குத்தானா இத்தனை அழகாய் ஆடினாய், பாடினாய்?

ஏனடி உனக்கு இத்தனை கோபம் வாழ்க்கை மீது?

வாழ்க்கை சிக்கலானது இல்லை சித்ரா.

நாம் தான் சிக்கலாக்கி வைத்திருக்கிறோம். நாமே பின்னிய வலைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பது கூட தெரியவில்லையா உனக்கு?

மதியம் போல உன் செய்தி.

வேதனையில் கண்கள் குளமாயின.

இன்றைக்கு தமிழகமே தண்ணீரில் மிதக்கிறது.

உனக்காத்த்தான் மழையும் அழ ஆரம்பித்ததோ சித்ரா? இயற்கைக்கு எல்லாமும் தெரிந்திருக்குமோ?

என் பெரிய மாமன் மகள் பெயர் சித்ரா. என்னைக் கண்டு கொள்ளவே மாட்டாள். அதனாலோ என்னவோ உன் மீது எனக்குப் பிரியம் அதிகம்.

எனக்கும் சித்ராவுக்கும் எப்போதுமே ஒத்துப் போகாது போல. அதைப் போல நீயும் விட்டுப் பிரிந்து போனாயோ?

சித்ரா உனக்காக உலகக் கவிஞன் கலீல் ஜிப்ரானின் ஒரு சில வரிகளைக் கடன் வாங்கி இருக்கிறேன்.

இதோ....!


நான் எக்காலமும் இந்த கரைகளில் கடல் மணலுக்கும்

நுரைக்கும் நடுவே உலாவிக் கொண்டிருக்கிறேன்.

உயர் அலைகள் என் காலடிச்சுவடுகளை அழித்துவிடும்

அவ்வாறே காற்று நுரையினை ஊதித்தள்ளிவிடும்.

ஆனால் இந்த கடலும் அதன் கரையும் எக்காலமும் இருக்கும்.

 

ஒருமுறை பனிப்புகையை என்கைகளில் ஏந்தியிருந்தேன்.

கைகளை விரித்து பார்த்தபோது பனிப்புகை ஒரு புழுவாய் மாறி இருந்தது.

மீண்டும் கைகளை மூடி திறந்தபோது அங்கே ஒரு பறவை இருந்தது

 

இன்னொருமுறை கைகளை மூடி திறந்தபோது

அதனிடுக்கில் கவலை தோய்ந்த முகத்துடன்

மேல்நோக்கி பார்த்தபடி ஒரு மனிதன் நின்று கொண்டிருந்தான்!!

 

நான் மீண்டும் கைகளை மூடி, திறந்தபொழுது

அங்கே பனிப்புகையை தவிர ஒன்றுமில்லை.

ஆனால் இனிமையிலும் இனிமையான ஒரு பாடலை நான் கேட்டேன்.


(கலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும் எனும் கவிதையிலிருந்து)

ஆம் சித்ரா உலகம் இருக்கும் வரை துன்பங்களும் துயரங்களும் உண்டு மனதுக்கு மட்டும். ஆனால் உனக்கு அல்ல சித்ரா.

மனதுதான் துன்பத்தினை அனுபவிக்கிறது உன் ஆன்மா அல்ல சித்ரா.

மனதை வெல்லத் தெரிந்து கொள்ள வேண்டும் சித்ரா.

ஆனால் நீ இருந்த துறை முற்றிலும் உணர்வுகளால் பீடிக்கப்பட்ட ஒரு சாக்கடை.

ஒரு பன்றிக்கு எப்படி சாக்கடை இன்பமோ அதைப் போல பல கோடி மனிதர்களுக்கு சாக்கடை மனதே இன்பம்.

சித்தாந்தமும் தத்துவமும் பேசுவதால் பயனில்லை சித்ரா.

உனது ஆன்மா அமைதியாகட்டும்.

க்

கு

ரு

நினைவூட்டல்

நான் வாழ்ந்து வரும் இக்காலத்தில் ‘இனிமையிலும் இனிமையான ஒரு பாடலைக் கேட்டேன்’

அப்பாடல்

சித்ரா…..!

* * *

உணர்வுகளின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் போது ஒரு வார்த்தை என்னிடம் பேசி விடுங்கள் நண்பர்களே. ஒரு சில மணித்துளிகள் நாம் பேசலாம். ஏனென்றால் நான் உங்களின் நண்பனாக, தோழனாக, தோழியாக, மகனாக, மகளாக இருக்க விரும்புகிறேன்.

உங்களின் உணர்வுகளில் சிக்கி வாழ்க்கையைத் தொலைக்க முற்பட்டால், அந்த வாழ்க்கையை எனக்குத் தந்து விடுங்கள் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். சித்ராவைப் போல முடிவெடுக்கும் முன்பு ஒரு சில வார்த்தைகள் என்னிடம் எனக்குக் கடனாய் தந்து விடுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

எனது மொபைல் : 96005 77755 (இந்தியா)

* * *

என்றைக்குமே இனி கேட்காத ஒரு பாடலாக மாறிப் போன நடிகை சித்ராவிற்காக எழுதப்பட்டது.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.