குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, September 27, 2017

16347 கோடி முதலீட்டிற்காகக் கொட்டிக் கொடுக்கப்போகும் இந்தியர்கள்

கிரிக்கெட் இந்தியாவின் மர்ம விளையாட்டு. ஐபில் கிரிக்கெட்டைப் பற்றி அடியேன் எழுதிய கட்டுரை பரபரப்புச் செய்தி பத்திரிக்கையில் வெளியானது. அதன் இணைப்பையும் அக்கட்டுரையினையும் கீழே இருக்கும் இணைப்பினை சொடுக்கிப் படித்துக் கொள்ளவும்.


கடந்த செம்டம்பர் மாதம் 6ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் ஒரு செய்தி வெளிவந்தது. செய்தி கீழே,

Star Sports under the Star India umbrella shelled out an exorbitant Rs 16,347.5 crore or $2.55 billion for IPL media rights over the next five years till 2022. This is nearly triple of what Sony, the previous TV rights holders, had paid for ten years in 2009. In all it converts to Rs 55 crore from every IPL match or Rs 23.3 lakhs for every legal delivery bowled. It leaves the IPL sandwiched between the English Premier League (Rs 84 crore per match) and the NBA (Rs 18 crore per match) in terms of highest grossing sporting leagues in the world, with the NFL the clear leader earning Rs 150 crore per match. But beyond the sheer astronomical numbers, the query for the fans, other broadcasters and the DTH providers revolves around how to compete with their sheer might.


படித்து விட்டீர்களா? இப்போது விஷயத்துக்கு வருவோம்.

சாதாரண டிவிதானே, நாம் பொழுதைப் போக்குகிறோம் அதை வைத்து இவ்வளவு பணம் சம்பாதிக்க முடியுமா? என்று திகைக்கின்றீர்கள். ஆமாம் உங்களின் பொழுதுபோக்கையும் காசாக்கிட முடியும் என்பது தான்  முக்கியமான சாரம்.

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் விளையாட்டினை ஐந்து வருடம் ஒளிபரப்புச் செய்ய ஸ்டார் குழுமம் 16347 கோடி ரூபாய் கொடுக்கிறது என்றால் ஒளிபரப்புச் செலவு, அலுவலகச் செலவு, அட்மின் செலவுகள் இதையெல்லாம் சேர்த்து 20000 கோடி என்று வைத்துக் கொண்டாலும் இந்தளவு முதலீடு செய்வது நஷ்டமடையவா செய்வார்கள்? இல்லை அல்லவா? 20000 கோடி முதலீடு 100000 லட்சம் கோடி வருவாய் கிடைக்கத்தான் இவ்வளவு முதலீடு போடுவார்கள். இத்தனையும் எங்கிருந்து அவர்களுக்கு கிடைக்கிறது? விளம்பரதாரர்களிடமிருந்து அவர்களுக்கு கொட்டக்கூடிய பணமும் எங்கிருந்து கிடைக்கிறது? டிவி பார்க்கும் மக்களிடமிருந்து விளம்பரதாரர்கள் வசூலித்து அதில் பத்து பர்செண்டேஜ் அளவு பணத்தினை மீடியாக்களிடம் கொடுக்கின்றார்கள். கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். மலைத்து விட வேண்டாம். 

ஒரு சோப்பின் உண்மையான அடக்கவிலை 5 ரூபாய் இருக்கலாம். ஆனால் விற்கும் விலை 40 லிருந்து 60 ரூபாய் வரை. இந்தக் காசுதான் மீடியாக்களுக்கும் செல்கிறது. அரசியல்வாதிகளுக்கும் செல்கிறது. கிரிக்கெட் வீரர்களுக்கும் செல்கிறது. ஆக மக்களிடமிருந்து பறிக்கப்படும் பணம் தான் இத்தனை கோடி. 5 ரூபாய் சோப்புக்கு நாம் கொடுக்கும் அதிகபட்ச விலை தான் இப்படியாகச் செல்கிறது. நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் விளம்பரங்களைப் பார்த்து தானே வாங்குகிறோம். தேவைக்கு ஏற்ப என்று எவராவது சிந்திக்கின்றீர்களா? பிராண்டட் தான் போடுவேன் என்பவர்களிடமிருந்து எப்படி காசைப் பறிக்கின்றார்கள் என்று நினைத்துப் பாருங்கள். 

காலம் நேரம் தெரியாமல் டிவி முன்னாள் உட்கார்ந்து கொண்டிருக்கின்றீர்களே அதற்கு நீங்கள் கொடுக்கும் விலையில் ஒரு சதவீதம் தான் மேலே எழுதி இருப்பவை.

டிவியின் முன்பு உட்காரும் போது இந்தக் கணக்கை நினைவில் கொள்ளுங்கள். வீட்டிற்குள் இருக்கும் வில்லன் யார் என்று தெரிய வரும்.  

ஒழுக்கம் என்றால் என்ன விலை என்று கேட்கும் நடிகன் முதல்வராக ஆசைப்படுவதையும் தடுக்கலாம். ஒழுக்கம் கெட்டவர்கள் தலைவர்கள் ஆனால் தமிழகத்தின் நிலை என்ன ஆகும் என்று ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்.

அடியேன் டிவி பார்ப்பதை முற்றிலுமாக நிறுத்தியே விட்டேன். எப்போதாவது டிராவல்ஸ் அன்ட் லிவிங், டிஸ்கவரி சானல், ஹிஸ்டரி சானல் பார்ப்பதோடு சரி. முக்கியமாக செய்தி சானல்களைப் பார்ப்பதே இல்லை. விவாத நிகழ்ச்சிகளை எட்டிக் கூடப் பார்க்கமாட்டேன். காலையில் செய்திதாள்கள் படிப்பேன். அவ்வளவுதான். வேலை இல்லையென்றால் புத்தகங்கள் படிப்பதோடு என் நேரம் கழிந்து விடுகின்றது. ஃபேஸ்புக், டிவிட்டர் பக்கம் எட்டிக்கூடப் பார்ப்பது இல்லை. மாதம் ஒரு தடவை சும்மாவாச்சும் லாக்கின் செய்வேன். 

நீங்களும் ஒரே ஒரு நாள் அவ்வாறு இருந்து பாருங்கள்.செம ஜாலியாக இருக்கும்.


Tuesday, September 19, 2017

சமையல் எண்ணெயில் பருத்தி எண்ணெய்

வீட்டுக்கு அருகில் ஆப்பக்கடை உணவகம் ஒன்று இருக்கிறது. எப்போதாவது அந்தப்பக்கமாகச் செல்லும் போது இரண்டு ஆப்பமும், கொஞ்சம் கொண்டக்கடலைக் குருமாவும் சாப்பிட்டு வருவது வழக்கம். அந்த ஆப்பக்கடை அம்மாவிடம் ”என்ன எண்ணெய் பயன்படுத்துகிறீர்கள்?” என்று கேட்ட போது ”ஆயில்தான்” என்றார். ”என்ன ஆயில்?” என்றேன். ”ரீஃபைண்ட் ஆயில் தான் பயன்படுத்துகிறேன், நானும் அதைத்தான் சாப்பிடுகிறேன். பிரச்சினை இல்லை” என்றுச் சொன்னார்.

அதே போல மிட்டாக்கடையில் முருக்கு வாங்கிய போது அந்த அம்மாவிடம்,”என்ன ஆயில் பயன்படுத்துகின்றீர்கள்?” என வினவிய போது “ரீஃபைண்ட் ஆயில்தான், ஹோட்டல்களில் பயன்படுத்துகின்றார்களே அதே தான்” என்றுச் சொன்னார். லிட்டர் 65 ரூபாய் என்றார் அவர். ஹோட்டல்களில் கரண்டி கரண்டியாய்க் கொட்டுகின்றார்களே அதே ஆயில் தான் என்ற போது மனதுக்குள் ஃபாமாயிலைத்தான் சொல்கின்றார்கள் போல என நினைத்தேன். 

மூன்று மாதங்களுக்கு முன்பொருனாள் கவுண்டரின் தோட்ட வீட்டிற்குச் சென்றிருந்தேன். இளநீரைப் பருகிக் கொண்டிருந்த போது சமையல் எண்ணெய் பற்றிப் பேச்சு வந்தது. ஊரின் அருகாமையில் இருக்கும் செக்கில் இருந்து எண்ணெய் வாங்குவதாகவும், விலை குறைவாக இருப்பதாகவும் சொன்னார். ”விலை எப்படி குறைவாக கிடைக்கும்?” என்று கேட்டேன். ஆட்கள் கேட்க ஆட்டிக் கொடுக்கிறார்கள் என்றுச் சொல்லிக் கொண்டிருந்தார். ஐந்து லிட்டர் கடலை எண்ணெய் வாங்கினேன். 

சமைக்கும் போது கடலை வாசனை வீசியது. நன்றாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார் மனையாள். சாப்பிட்டவுடன் வயிறு மந்தமாக இருந்தது. சுத்தமான கடலை எண்ணெய் அல்லவா? அதனால் அப்படி இருக்கும் போல என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் சரியாகவே இல்லை. இரண்டு நாட்கள் சமையலில் அந்த எண்ணெய் தான் பயன்படுத்தினார்கள். ஏதோ பிரச்சினை என்பது மட்டும் புரிந்தது. 

எண்ணெய் பாட்டிலில் இருந்த நெம்பரைத் தொடர்பு கொண்டு “எப்படி விலை குறைவாக விற்க முடிகிறது?” எனக் கேட்டேன். ”வெகு சுத்தமான கடலை எண்ணெய் விலை அதிகம் சார். அதனால் கடலை எண்ணெயில் அரைவாசி காட்டன் சீட் எண்ணெய் கலந்து விற்பனை செய்கிறோம்” என்றார். அதாவது பருத்திக் கொட்டை எண்ணெய். ”வாங்குபவர்களிடம் சொல்லி விற்கின்றீர்களா?” என்றேன். ”ஆமாம்” என்றார். ஆனால் என்னிடம் அதுபற்றிச் சொல்லவே இல்லை. அது விற்பனைத்தந்திரம் என்று என்னால் எடுத்துக் கொள்ளவே முடியவில்லை. பச்சை அயோக்கியத்தனம்.

பத்து வருடங்களுக்கு முன்பு ரைஸ்பிரான் ஆயில் என்று மார்க்கெட்டில் வந்தது. கொலெஸ்ட்ரால் இல்லை என்றார்கள். அதை தொடர்ந்து பயன்படுத்தி வந்து ஒரு கட்டத்தில் நிறுத்தி விட்டேன். விவசாய வேலை முடிந்ததும் வயலில் எள்ளை விதைத்து, அறுவடை செய்து ஊரில் இருந்து நல்லெண்ணெய் வந்து கொண்டிருந்த போது எண்ணெய் பிரச்சினை எனக்கு வரவில்லை. விவசாயம் பொய்த்த பிறகு கடையில் எண்ணெய் வாங்க ஆரம்பித்த போதுதான் ஆரோக்கியப் பிரச்சினைகள் ஆரம்பமாகின.

கடைகளில் பலகாரம் சுடவும், சிறிய ஹோட்டல்களில் பயன்படுத்துவதும் ரீஃபைண்ட் ஆயில் என்று அழைக்கக் கூடிய பருத்திக் கொட்டை எண்ணெய் தான் பயன்படுத்துகிறார்கள் போலும். 

யாரைத்தான் நம்புவதோ என்று தெரியவில்லை. உணவு என்கிற பெயரில் விஷத்தை விற்றுக் கொண்டிருக்கின்றார்கள். எண்ணெய் இல்லா சமையல் செய்வது எப்படி என்ற புத்தகத்தை வாங்கி வீட்டில் கொடுத்து விட்டேன். எதற்கு வம்பு? ஹாஸ்பிட்டல் பக்கம் சென்றால் சொத்தில் கால் வாசியைக் கட்டணமாக வசூலித்து விடுகின்றார்கள். 

தமிழக அரசின் காப்பீடு திட்டத்தில் கிளைம் செய்ய முடியுமா? என்றால் அதெல்லாம் இங்கே ஆகாது என்கிறார்கள். எனக்காக கட்டப்படும் ப்ரீமியம் தொகை எங்குதான் போகின்றதோ தெரியவில்லை. கலப்படத்தைக் கூட கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்கமாட்டேன் என்கிறார்கள்.  தமிழகம் இந்தளவுக்கு கீழான நிலைக்குச் செல்லும் என நினைக்கவே இல்லை. வாக்குச் சுத்தம் என்று முன்பெல்லாம் சினிமாவில் பேசுவார்கள். இப்போது வாக்கு அசுத்தமாகி விட்டது.