குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, December 29, 2014

ஊடகங்கள் செய்யும் மக்கள் துரோகம் - தொடர்ச்சி

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கோவை டைம்ஸ் பகுதியில் ரஜினி காந்த் அவர்களின் சொத்து ஏலம் பற்றி ஒரு பத்தி வெளிவந்திருக்கிறது. எந்த ஒரு செய்திக்கும் விரிவான அலசலை அளிக்கும் பத்திரிக்கை ரஜினி என்கிற கோபுரத்தின் கதையைப் பற்றி விரிவாக அலசி இருக்க வேண்டிய தருணத்தை வேண்டுமென்றே தவிர்த்து இருக்கிறது.

கோடம்பாக்கத்தின் தெருக்களிலும், ஒவ்வொரு சினிமா அலுவலகத்திலும் இளைமையையும், எதிர்காலத்தையும், குடும்பத்தையும் தொலைத்து விட்டு கட்டுக்கட்டாகப் பணமும், புகழும் கிடைக்க வேண்டுமென்பதற்காக எல்லாவற்றையும் இழந்து நிற்கும் எண்ணற்ற இளைஞர்களின் மனதுக்குள் ஒரு கேள்வியை எழுப்பி இருக்க வேண்டிய அலசலை டைம்ஸ் ஆஃப் இந்தியா தவற விட்டு தன் ஊடக தர்மத்தை வசதியாக மறந்து விட்டது. சினிமா என்ற மாயா உலகத்தின் மறுபக்கம் தான் ரஜினியின் சொத்து ஏலத்திற்கு வந்தது. இதே போல அமிதாப்பச்சனின் சொத்தும் ஏலத்திற்கு வந்தது நினைவிலிருக்கலாம். சினிமா மோகத்தின் மீதான மாயையை அலசி ஆராய்ந்து கட்டுரையை வெளியிட வேண்டிய தர்மத்தை டைம்ஸ் ஆஃப் இந்தியா மறந்து விட்டது.

என்னைப் போன்று எத்தனை எத்தனையோ லட்சோப லட்சம் வாசகர்கள் கொடுக்கும் சிறு பணத்தில் வளர்ந்து நிற்கும் இந்தப் பத்திரிக்கை மக்களுக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டிய தார்மீகக் கடமைக்கு ஆட்பட்டது. ஆனால் ரஜினி போன்ற மாயா உருவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தன் தர்மத்தைக் காக்கத் தவறி நிற்கிறது.

என்றைக்கு ஒரு தராசு ஒரு பக்கமாக சாய்ந்து நிற்கிறதோ அன்றிலிருந்து தன் முடிவுக்கான ஆரம்பப் படியை அது எடுத்து வைத்து விட்டது எனலாம். நூற்றாண்டு கால டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இன்றைய நிலைக்கு இன்னுமொரு உதாரணம்,

இன்றைய சினிமா விமர்சனத்தில் கயல் திரைப்பட விமர்சனம் என்பதற்குப் பதிலாக வெள்ளைக்காரத்துரை திரைப்படத்தை தவறுதலாக வெளியிட்டு இருக்கிறது.

காலம் சொல்லும் பதிலுக்கு கேள்வியை இவர்களே தயார் செய்திருக்கிறார்கள். பதில் வெகு கடுமையாக இருக்கக் கூடாது என்று அதன் வாசகன் என்ற நிலையில் விரும்புகிறேன்.


Saturday, December 27, 2014

ஊடகங்கள் செய்யும் மக்கள் துரோகம்

கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கோவையில் தன் பதிப்பினை வெளியிட்ட ஆண்டு முதலாய் இது நாள் வரையிலும் தொடர்ந்து அப்பத்திரிக்கையை வாசித்து வரும் வாசகன் என்ற முறையில் இப்பதிவு எழுத எனக்கு உரிமை இருக்கிறது என்ற வகையில் எழுதுகிறேன்.

தினமணி, தினத்தந்தி, தினமலர் மற்றும் இதர நாளிதழ்களை நான் செய்திக்காக மட்டுமே படிப்பேன். ஒரு வகையான டெம்ப்ளேட் தனமான செய்திகளையே தொடர்ந்து வழங்கி வரும் இப்பத்திரிக்கைகள் மீதான ஒரு வித பிடிமானம் எனக்கு எப்போதுமே இருந்ததில்லை. ஆனால் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை மீது எனக்கு மிகுந்த பிரியம். அதன் செய்திகளும் தலைப்பும் செய்திக்குச் சம்பந்தப்பட்டவர்களை விமர்சித்தே வெளிவரும். தகவல் செய்திகள் கூட அப்படித்தான் இருக்கும்.

மக்களின் வரிப்பணத்தில் ஊழியம் பெறும் அரசு வேலையில் இருப்போரும், மக்கள் பணத்தை செலவிடும் அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளும் தன் கடமை மறந்து தனக்கு சம்பளமும், பணிப்பாதுகாப்பும் தரும் மக்களுக்குத் துரோகமிழைக்கும் செயல்களில் ஈடுபடும் போது அந்தத் தவற்றினைச் சுட்டிக்காட்டி அவர்களை சட்டப்படியான வழியில் பணியைத் தொடரச் செய்ய வேண்டிய மாபெரும் சேவையில் இருக்கும் ஊடகத்தினர் தம் கடமை மறந்து செய்திகளை வெளியிட மறுப்பதும், மறைப்பதும் தகுமா? என்ற கேள்வி எனக்குள் உதித்தது.

ஏனென்றால் சின்னஞ் சிறு செய்தியாக இருப்பினும் அதை விரிவாக எழுதும் டைம்ஸ் ஆஃப் இந்தியா தமிழகத்தின் தன்னிகரில்லா நடிகரும், உலகத்திலேயே அதிக மக்கள் விரும்பும் நடிகருமான திரு.ரஜினி காந்த் சொத்து ஏலம் வருகிறது என்ற செய்தியை ஒரு வரியாகக் கூட வெளியிடவில்லை. ஏனென்று யாரும் கேட்கப்போவதில்லை அப்படியே கேட்டாலும்  அவர்கள் பதில் சொல்லப்போவதும் இல்லை. எந்தச் செய்தியை வெளியிட வேண்டும்? எந்தச் செய்தியை வெளியிடக்கூடாது என்ற சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது என்கிற போதிலும், டைம்ஸ் நவ் டிவியில் பலரைக் கேள்வி கேட்கும் அர்னாப்பை இனி பார்க்கும் போது மனதுக்குள் நகைப்புத்தான் தோன்றும்.

வேஷம் கலைந்து விட்டது....