குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, July 22, 2013

தினமலர் அக்கம் பக்கத்தில்

கடந்த செவ்வாய்க் கிழமையன்று கோவை தினமலர் அக்கம்பக்கத்தில் எனது பிளாக்கை அறிமுகம் செய்திருந்தார்கள். இதோ அப்பக்கங்கள் கீழே. நன்றி தினமலர். படத்தைக் கிளிக் செய்து படிக்கலாம்.




சாஸ்திரங்களில் உணவு சாப்பிடும் முறைகள்(1)

கடந்த சனிக்கிழமை எனது நண்பர் திரு ஜோதி ஸ்வாமிகள் அவர்கள் பாடி மக்களுக்கு அர்பணித்த “திருமந்திரம் 3000” ஒலிப்பேழை வெளியீட்டு விழா பூண்டி வெள்ளிங்கிரி ஸ்வாமிகள் ஆலயத்தில் நடைபெற்றது. வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் தூவிக் கொண்டிருந்த மழையிலும், சில்லென்று வீசிய மலைக்காற்றின் குளுமையிலும் விழா இனிமையாக நடந்தேறியது. 

விழாவின் இடையில் விழா மேடையில் ஒவ்வொருவரும் பேசி முடித்த பிறகு பொறுப்பாக கை தட்டி அனைவரையும் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்.

நூற்றுக் கணக்கான நபர்கள் கூடியிருந்தனர்.விழாவில் கொடுக்கப்பட்ட மிக்ஸர், ஜிலேபி,  தண்ணீர் பாட்டில்களை சாப்பிட்டபின் தான் அமர்ந்திருந்த இடத்திலேயே குப்பையைப் போட்டு விட்டுச் சென்றனர். 

விழா முடிந்த பிறகு அங்கு கிடந்த தண்ணீர் பாட்டில், மிக்ஸர் காகிதம் போன்றவற்றை அழகிய இளைஞர் ஒருவர் பொறுக்கி எடுத்து அங்கு வைத்திருந்த குப்பைக்கூடையில் போட்டுக்கொண்டிருந்தார்.  இதோ அந்த இளைஞர் உங்கள் பார்வைக்காக.




சரி, இனி முக்கியமான விஷயத்திற்கு வருவோம்.

மனிதனுக்கு நோய் ஏன் வருகிறது? உடம்பிற்குள் செல்லும் பொருட்கள் மற்றும் மனசு (??????) இரண்டைத் தவிர வேறு எந்தக் காரணத்தினாலும் நோய் வரக்கூடிய சாத்தியங்கள் இல்லவே இல்லை எனலாம். ஆனாலும் மூன்றாவதாய் வேறொரு காரணமும் உண்டு. உயிருக்கு உணவே தேவையில்லை என்பார் எனது மாஸ்டர். மூன்றாவது காரணத்தை இங்குச் சொல்வதில் அர்த்தமில்லை என்பதால் சமயம் வரும்போது எழுதுகிறேன்.

முன்னோர்கள் தன் வம்சங்கள் நோயின்றி வாழ எத்தனையோ நல்ல வழிகளை அனுபவித்து உணர்ந்ததை எழுதியும், சொல்லியும் வைத்துச் சென்றிருக்கின்றார்கள். ஆனால் நாமோ எதைப் பற்றியும் கவலைப்படுவதும் இல்லை. உணர்ந்து கொள்வதும் இல்லை.

சாஸ்திரங்களில் உணவு உட்கொள்ளும் முறைகளைப் பற்றிச் சொல்லி இருக்கின்றார்கள். ஸ்ரீ வராகி விஜயம் என்ற புத்தகத்தில் விரிவாக எழுதி இருந்தார்கள். அதில் முக்கியமானவை உங்களின் கவனத்திற்காக. மனதில் குறித்துக் கொள்ளுங்கள். 

ஆயுளை விரும்புகிறவன் கிழக்கு முகமாக அமர வேண்டும்
கீர்த்தியை விரும்புவன் தெற்குமுகமாக அமர வேண்டும்
சம்பத்தை விரும்புவன் மேற்கு முகமாக உட்கார வேண்டும்.
சத்தியத்தை விரும்புகிறவன் வடக்கு முகமாக உட்கார்ந்து உணவு வேண்டும்.

சாப்பிடும் போது அன்னத்தில் மயிர் இருந்தால் அந்த அன்னத்தைக் கீழே வைத்து விட்டு மீதி உள்ளதை புசிக்க வேண்டும். தலைமயிரையும், நகத்தையும், வேஷ்டியில் பிரித்த நூலையும் வீட்டு முன்வாசலில் போடுதல் கூடாது. பின் வாசலில் தான் போட வேண்டும்.

சாப்பிடும் போது வாயில் மயிர் அகப்படுதல் முன் கூட்டியே வரும் கவலையை உணர்த்துவதாகும். அப்படி வந்தால் அதை உமிழ்ந்து விட்டு ஒரு நெல் சாப்பிட்டு விட்டால் எந்தக் கவலையும் வராது. வந்தாலும் சிக்கல் இருக்காது.

இன்னும் இருக்கிறது.

தொடரும் விரைவில்...


Friday, July 12, 2013

நிலம்(2) - லீகல் ஒப்பீனியன் ஜாக்கிரதை

வெளிநாடு வாழ் தமிழர்கள் சிலருக்கு அவர்களின் தேவைக்காக, நிலம் தேர்ந்தெடுத்து, அதற்குத் தேவையான டாக்குமெண்ட்களை பெற்று, சரிபார்த்து, மார்க்கெட் விலைக்கு ஏற்ப விலை நிர்ணயித்து கிரயம் செய்து கொடுத்து வருகிறேன். அவர்கள் பணம் அனுப்புவதோடு சரி. கையெழுத்துப் போட மட்டும் வருவார்கள். அதன் பிறகு பட்டா, சிட்டா, அடங்கல், வரி, கந்தாயம் போன்றவற்றை அவர்கள் பெயருக்கு மாற்றி கொடுத்தும் வருகிறேன். கடந்த வருடம் இரண்டு  ஏக்கர் 23 லட்சத்துக்கு வாங்கிக் கொடுத்தேன். இன்றைக்கு இந்த தேதியில் அதன் விலை ஏக்கர் 45 லட்சம் செல்கிறது. எவ்வளவு பெரிய வருமானம் பாருங்கள். அடுத்த வரும் ஏக்கர் 50 லட்சம் ஆகி விடும். கோடீஸ்வரர் ஆகி விடுவார். 

எனது இத்தொழில் மூலம் நான் அறிய வந்த சில தகவல்களைத்தான் பகிர்ந்து கொள்கிறேன். அது அனைவருக்கும் உதவும் என்ற நம்பிக்கையின் காரணமாக.

ஒவ்வொரு நிலமும் ஒவ்வொரு விதம். அந்த நிலத்தின் வரலாறோ அது ஒரு விதம். அதன் டாக்குமெண்ட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.சிலர் தேவையான டாக்குமெண்ட்கள் வைத்திருப்பார்கள். சிலருக்கு என்னவென்றே தெரியாது. மூதாதையர் நிலமாய் இருக்கும். அதன் உரிமையாளர்கள் யார் என்று கண்டுபிடிப்பது பெரும் சிரமம்.  

ஒரு நிலத்தின் கையெழுத்துதாரர்கள் 170 பேர் இருந்தார்கள். இவர்களை ஒன்று திரட்டி கையெழுத்து வாங்குவது பற்றி ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். நான்கு அல்லது ஐந்து வேன்கள் வாடகைக்கு எடுக்க வேண்டும். இப்படியெல்லாம் ஒரு சில நிலத்தின் கதைகள் இருக்கும். 

இப்படித்தான் ஒரு தடவை,நண்பரொருவர் நிலம் வாங்க வேண்டி டாக்குமெண்ட்கள் சரிபார்க்க என்னிடம் வந்தார். அவர் கொடுத்த அத்தனை டாக்குமெண்ட்களையும் வாங்கி சரிபார்த்து வரும் போது வக்கீல் ஒருவரின் லீகல் ஒப்பீனியன் ஒன்றும், டைப் செய்யப்பட்ட ரிஜிஸ்டருக்கு தயாராக இருந்த பத்திரம் ஒன்றும் இருந்ததைப் பார்த்தேன்.

அனைத்து டாக்குமெண்ட்களையும் வரிசைப்படுத்தி ஒவ்வொன்றாக செக்கிங் செய்து வந்த பிறகு,  வக்கீல் கொடுத்த லீகல் ஒப்பீனியனை படித்தேன்.
சி ஷெட்யூலின் படி நண்பருக்குப் பாத்தியப்பட்ட சொத்தினை வக்கீல் பி ஷெட்யூல் என்று போட்டு, சொத்து விபரத்தையும் தவறாக குறிப்பிட்டு எல்லாம் 100% சரி என்று சான்று கொடுத்திருந்தார்.இதை ஆதாரமாக வைத்துக் கொண்டு, டாக்குமெண்ட்டும் தயார் செய்யப்பட்டு வந்திருந்தது. இந்த சொத்தினை நண்பர் வாங்கினால்,கிரையம் செய்திருந்தால் விளைவு என்ன? அப்பத்திரம் செல்லாது. கொடுத்த பணமும் போச்சு. நண்பரும் பணத்தை இழந்திருப்பார்.

கோவையில் ஏக்கர் 15 லட்சத்திலிருந்து 10 கோடி வரை விலை போகிறது. பல ஊரிலிருந்து பலர் இங்கு வசிக்க, தொழில் செய்ய வருகின்றனர்.  இவர்களில் பலர் சொத்துக்களை வாங்குகிறார்கள். பின்னர் விற்கிறார்கள். ஆக நிலத்தின் வரலாற்றை அட்சர சுத்தமாய் கண்டுபிடிக்க பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டும்.நிலம் வாங்க நினைக்கும் போது அந்த நிலத்தின் அத்தனை வரலாற்றினையும் எடுத்து ஆராய்ந்து பார்த்து வாங்க வேண்டும். இல்லையென்றால் பணமும் அத்தோடு நிம்மதியும் போய் விடும். நிலம் வாங்கும் போது அதிக கவனம் தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சிலர் வக்கீல் லீகல் ஒப்பீனியன் கொடுத்தால் போதும், அதை வைத்து கிரயம் பெறலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். லீகல் ஒப்பீனியன் சரி என்று நினைத்தால் அதுவும் தவறாகப் போய் விடும் ஆபத்து இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  

தொடரும் விரைவில்

Wednesday, July 3, 2013

வள்ளுவரும் வாசுகியும் - வாழ்க்கைத் தத்துவம்



எல்.சி.டி டிவி, உடலை கொன்று கூறாக்கும் ஏ.சி, ஷோபா, மெத்தை, கட்டில், கையணி, காதணி, ஒன்றுக்கும் உதவாத பட்டுச்சேலைகள், பளபளக்கும் ஆடைகள், கார், ஃப்ளைட் என்று ஆண்களும், பெண்களும் பொருட்களின் மீதான மோகத்தில் திளைத்து, அதற்காக தன் வாழ்க்கையை வேலை வேலை என்று அட்டையைப் போல உறிஞ்சும் கார்ப்பொரேட் கம்பெனிகளுக்கு உழைத்து அவர்கள் போடும் காசைப் பொறுக்கிக் கொண்டு, அதே கார்ப்பொரேட் கம்பெனிகள் நடத்தும் மால்களில், அவர்களால் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் பொருட்களை வாங்கி ஏமாந்து போய் நிற்கிறார்கள் இன்றைய நவ நாகரீக மனிதர்கள். அதுமட்டுமா, உழைத்து முடித்து உடலில் அத்தனை நோய்களையும் பெற்றுக் கொண்டு, முடிவில் ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்ட ஆன்மீக வியாபாரிகளிடம் சென்று அடைக்கலமாகி இருக்கும் சொத்தினையும் அவர்களிடம் இழந்து விடுகின்றார்கள். இதைப் பற்றிய புரிதல் என்பது கொஞ்சம் கூட மனிதர்களிடையே இல்லை என்பதுதான் நாகரீகத்தின் மோசமான விளைவினைக் காட்டுகிறது. மூளைச் சலவை செய்து சுத்தமாக மடித்து வைக்கப்பட்ட துணியைப் போல ஆகி விட்டார்கள் மனிதர்கள்.

எத்தனை லட்சம் கொடுத்து வாங்கினாலும் கார் தெருவில்தான் நிற்கும். எத்தனை லட்சம் கொடுத்து ஆடைகள் வாங்கினாலும் அது கிழிந்து சாயமிழந்து பழதாகி விடும். இன்றைக்கு எல்.சி.டி நாளைக்கு என்ன டிவியோ? வாங்கிய எல்சிடிக்கு என்ன மதிப்பு இருக்கிறது? ஒன்றுமில்லை. இன்றைக்கு ஆப்பிள் போன். நாளைக்கு அப்கிரேடு ஆனால் வாங்கிய போன் மதிப்பிழந்து போய் விடும். நான் பிராண்டட் சர்ட்தான் போடுவேன். நான் வைத்திருக்கும் காரின் விலை 20 லட்சம் என்றெல்லாம் பேசிக் கொண்டு திரிகிறார்கள். இப்பெருமை வந்தது இப்பொருட்களால் என்றால் அது பொருட்களை தயாரிப்பவர்களுக்குத்தானே சேரும். உனக்கு என்ன இதில் தற்பெருமை இருக்கிறது? இப்படியான பொருட்களை விற்பவர்களுக்கு வேண்டுமானால் லாபம் கொட்டும். வாங்கியவர்களுக்கு ஈகோவினால் பொருள் இழப்புதான் மிச்சம். இப்படியான மக்களுக்குத்தான் இந்தக் கதை. தொடர்ந்து படியுங்கள்.

திருவள்ளுவரின் திருக்குறளில் ஒரு இடத்தில் கூட கமா போட்டு விடமுடியாது. வார்த்தைகளை மாற்றிப் போடவும் முடியாது. அப்படிப் போட்டால் பாடலின் அர்த்தமே மாறிப்போய்விடும். இப்படியான படைப்பை இன்றிருக்கும் எவராவது எழுத முடியுமா?  ஏன் முடியவில்லை? என்ன காரணம்? யாராவது யோசித்துப் பார்த்ததுண்டா? வள்ளுவரும் அவரின் மனைவியும் எப்படி வாழ்ந்தார்கள் தெரியுமா? வள்ளுவரும், அவரின் மனைவி வாசுகியும் ஒரே ஒரு ஆடையை ஒருவர் மாற்றி ஒருவர் அணிந்து கொண்டுதான் வெளியில் சென்று வருவார்களாம். வள்ளுவரின் தேவைகளை அறிந்து அவருக்கு பணிவிடை செய்வது மட்டுமே தன் வாழ் நாள் கடமையாக கொண்டிருந்தவர் வாசுகி அம்மையார். இன்றைக்கு வாழும் கணவன் மனைவிகளில் எத்தனை பேர் இவர்களைப் போல இருக்கின்றார்கள். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு சிலர் இருக்கலாம். கணவன், மனைவி உறவென்பது படைக்கும் தொழில், ஆக்கும் தொழில் கொண்டது. இல்லையென்று எவராவது மறுக்கமுடியுமா? இவ்வுறவுக்கு இன்றைக்கு நாகரீகம் என்ற பெயரில், ஸ்டைல் என்ற பெயரில் எவ்வளவு கேடுகள் விளைவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு குடும்ப நல நீதிமன்றங்களில்  பார்த்தால் தெரியும்? எத்தனை எத்தனை வழக்குகள். ஏன் ? எதற்கு? என்று கேட்டால் ஒரே ஒரு காரணம் தான் சொல்வார்கள். “பொருள்”

திருப்பதியில் ஜீவசமாதி அடைந்து திருப்பதி பெருமாள் சன்னிதிக்கே பெரும் புகழைத் தேடித்தந்த கொங்கனவர் என்கிற சித்தர் ஒரு முறை திருவள்ளுவரும், வாசுகி அம்மையாரும் வசிக்கும் தெருவழியாகச் செல்லும் போது பசியெடுக்க, இவர்களின் வீட்டு வாசலில் நின்று கொண்டு பிச்சை கேட்டிருக்கிறார். அந்த நேரத்தில் வாசுகி அம்மையார் திருவள்ளுவருக்கு உணவிட்டுக் கொண்டிருந்திருக்கிறார். கணவர் சாப்பிட்டு முடித்தவுடன் வாசலுக்கு வர, அங்கு கொங்கணவர் கோபத்துடன் நின்று கொண்டிருக்கிறார்.

இந்தக் கொங்கணவர்  மகா தவ பலம் நிரம்பியவர். வழியில் வந்து கொண்டிருக்கையில் அவர் மீது எச்சம் போட்ட கொக்கினை கோபத்துடன் பார்க்க அந்த நிமிடத்தில் கொக்கு தீப்பிடித்து இறந்து விட்டது. அவரின் கண் வீச்சுக்கு அவ்வளவு சக்தி. அச்சம்பவம் முடிந்த பிறகுதான் வாசுகி அம்மையாரிடம் பிச்சை கேட்டு வந்திருக்கிறார். அம்மையார் வர காலதாமதமானதால் கோபத்துடன் அவரை நோக்க, அவரைப் பார்த்துச் சிரித்த வாசுகி அம்மையார், “கொக்கென நினைத்தாயோ கொங்கணவா?” என்று கேட்க சித்தருக்கு சித்தபிரமை பிடித்து விட்டதாம்.

இவருக்கு எப்படி அச்சம்பவம் தெரியும் என்று குழம்புகிறார். பிறகு தெளிவுறுகிறார். எத்தனையோ காலம் தவம் செய்து கிடைத்த பலனை, ஒரு சாதாரண பெண் வெகு அலட்சியமாய் சொல்கிறார் என்றால் காரணம் என்ன? கணவனுக்கு பணிவுடை செய்யும் மனைவிக்கு அத்தனை சக்தி எப்படிக் கிடைக்கும்? இதெல்லாம் சாத்தியமா?

ஆம். எல்லாம் சாத்தியமே. 

அர்ப்பணிப்பு, தூயமனது, தியாகம்.

வள்ளவருக்கும் வாசுகிக்கும் இருந்தது அர்ப்பணிப்பு, தூயமனசு, தியாகம். வாசுகியின் அர்ப்பணிப்பு தான் வள்ளுவருக்கு திருக்குறளை எழுத வைத்தது.

கொங்கணவர் இவர்கள் இருவரும் இருக்கும் ஏழ்மை நிலையைப் பார்த்து விட்டு வள்ளுவரை தனி இடத்துக்கு அழைத்துச் செல்கிறார். தன் தவ வலிமையால் நினைத்ததைச் சாதிக்கும் வல்லமை படைத்த அச்சித்தர், தன் கமண்டலத்திலிருந்து கொஞ்சம் தீர்த்தம் எடுத்து எதிரில் இருந்த பாறை மீது தெளிக்க அது தங்கமாகிறது. வள்ளுவரிடம் காட்டி, இதை வைத்துக் கொண்டு வசதியாய் வாழுங்கள் என்றுச் சொல்லி இருக்கிறார்.

அவரைப் பார்த்து நகைத்த வள்ளுவர், இன்னும் கொஞ்ச தூரத்தில் இருந்த பாறையின் அருகில் சென்று அதன் மீது சிறு நீர் கழித்திருக்கிறார். அப்பாறையே தங்கமாகி விட்டது.

கமண்டலத்தின் தீர்த்தத்துக்கு இருந்த வல்லமை வள்ளுவரின் சிறுநீருக்கு இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்? யோசித்துப் பாருங்கள். 
வள்ளுவர், வாசுகியின் வாழ்க்கை புரியும்.

குறிப்பு : இக்கதைகள் எனது மாஸ்டர் சொல்லி நான் கேட்டது. அவரிடம் அனுமதி கேட்டு பதிக்கப்பட்டது.