குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, January 27, 2013

கொஞ்சம் எட்டிப் பார்த்து விட்டுச் செல்லுங்களேன்


அன்றைக்கு வெள்ளிகிழமை. முட்டம் நாகேஸ்வரரையும், முட்டத்து வாளியம்மனையும் தரிசித்து வரலாம் என்று ஆலாந்துறை புறப்பட்டேன்.  தன் வாழ்நாளில், விபரம் தெரிந்த நாள் கொண்டு காசைக் கையால் தொடாமலே வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்த ‘சத்குரு ஞானி வெள்ளியங்கிரி சுவாமிகள்” அவர்களைத் தரிசித்து வாருங்கள் என்ற நண்பரின் அறிவுரையின் படி, முட்டம் நாகேஸ்வரர் ஆலயத்திலிருந்து செம்மேடு வழியாக பூண்டி வெள்ளியங்கிரி ஆலயம் செல்லும் வழியில், வன காளியம்மன் ஆலயத்தின் இடதுபுறம் செல்லும் வழியில் சென்றேன். வலது புற பாதை வழியாகச் சென்றால் ஈஷா யோக மையம் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.

இடதுபுறச் சாலையில் சென்றால் புளியமரங்கள் நிரம்பிய காடு தென்படுகிறது. அங்கிருக்கும் பதி வரை செல்லும் சாலை அங்கேயே முடிந்து விடுகிறது. சத்குருவின் ஜீவ சமாதிக்கு ஒற்றை அடிப்பாதைச் செல்கிறது. அதில் சென்று ஆஸ்ரமத்தை அடைந்தேன்.

சத்குருவின் ஜீவ சமாதியில் வேலை நடந்து கொண்டிருந்தது. தியானம் செய்ய முடியவில்லை. செல்லும் அனைவருக்கும் உணவளிக்கின்றார்கள். ஜீவசமாதியின் அருகில் செல்ல முடியவில்லை. கல் பதிக்கின்றார்கள். அடுத்த வாரத்திற்குள் வேலைகள் நிறைவு பெறும் என்றார்கள். ஜோதி சுவாமி, அருண், சீனிவாசன் ஆகியோரிடம் உரையாடிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினேன்.

ஈஷாயோகமையம் சென்று திருநீறும், எள் உருண்டையும் வாங்கி வரலாம் என்று சென்றேன்.செல்லும் வழியில் தென்பட்ட ஒருவரை நிறுத்தி ஈஷா யோகமையம் செல்லும் சாலைதானே இது என்று விசாரித்தேன். அது வேறு பாதை என்றுச் சொன்னார். பைக்கை திருப்பியவுடன், “இவ்வளவு தூரம் வந்து விட்டீர்கள், பக்கத்தில் தான் வெள்ளியங்கிரி சுவாமி திருக்கோவில் இருக்கிறது, கொஞ்சம் எட்டிப் பார்த்து விட்டுச் செல்லுங்களேன் ” என்றார்.

சுற்றிலும் காடு, அதன் நடுவே வளைந்து நெளிந்து செல்லும் கருமை படர்ந்த தார்ச்சாலை. கணேசர் அடிக்கடித் தென்படுவார் என்ற எச்சரிக்கை வேறு மனதுக்குள் நிழலாட திக் திக் நெஞ்சுடன் வெள்ளியங்கிரிக்கு பயணமானேன்.

ஏழுமலை தாண்டி இருக்கும் பூண்டி வெள்ளியங்கிரி சுவாமி கோவிலின் அடிவாரத்தில் இருக்கும் கோவிலுக்குச் சென்று சேர்ந்தேன். வருடத்தின் ஒரே ஒரு நாள் நடக்கும் பூப்பந்தல் விழாவாம் அன்று. நல்ல தரிசனம். ஆலயத்தில் தீபம் அருளி, மலர்களும், பூக்களும், பிரசாதமும் தந்தார்கள். சத்குருவைத் தரிசிக்கச் சென்றால், அவர் இறைவனைத் தரிசிக்க அனுப்பி வைத்து விட்டார். பூண்டி கோவிலுக்குச் செல்லும் நினைப்பே என்னிடத்தில் இல்லை. எல்லாம் சத்குருவின் ஆசீர்வாதம்.

நிறைவுடன் திரும்பிய வழியில் மையம் சென்று திருநீறும், எள் உருண்டையும் வாங்கிக் கொண்டு திரும்பினேன். இதோ கீழே இருக்கும் படத்தில் இருப்பவர்தான் வெள்ளியங்கிரி சுவாமி.



வெள்ளியங்கிரி சுவாமி ஆஸ்ரமத்திற்கு அருகில் இருக்கும் பதியில் வசிக்கும் கிராம மக்களுக்கும், குழந்தைகளுக்கும்,  மலைகளில் அலைந்து மூலிகைகளைப் பறித்துக் கொண்டு, கோவை டவுனிற்குள் வந்து சித்த மருந்துக் கடைகளிடம் மூலிகைகளைக் கொடுத்து விட்டு, அதற்குப் பதிலாக உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டு போய் சமைத்து அவர்களுக்குத் தருவாராம். மனிதனுக்கு என்றுமே தீரவே தீராத பிணி “பசிப்பிணி” அல்லவா. 

பூண்டி வெள்ளியங்கிரி கோவிலுக்கோ அல்லது மையத்திற்கோ செல்பவர்கள் நான்கைந்து நிமிடங்கள் ஆற்றங்கரையோரத்தில் அமைதியாய் அமைந்திருக்கும் வெள்ளியங்கிரி சுவாமிகளின் ஜீவ சமாதியில் அமர்ந்து தியானம் செய்து விட்டுச் செல்லுங்கள். வற்றவே வற்றாத மூலிகை ஆற்றில் ஆர தீர குளித்து விட்டுச் செல்லுங்கள். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும். 

ஆஸ்ரமம் செல்ல விரும்புபவர்கள் இப்போது ஆஸ்ரமத்தில் தங்கி இருக்கும் ஜோதி சுவாமியிடம் பேசி விட்டுச் செல்லுங்கள். இவர் திடீரென்று குகை, மலை என்று சென்று விடுவார். நீங்கள் அங்குச் சென்றால் ஒருவாய் தண்ணீராவது தர ஆள் வேண்டுமே அதற்காகத்தான் சொல்கிறேன். அது மட்டும் காரணமல்ல. அங்குச் செல்பவர்களுக்கு உணவளிக்கின்றார்கள். சொல்லாமல் சென்று விட்டால் அளவோடு சமைக்கும் உணவை நமக்கு அளித்து விடுவார்கள். தொலைபேசி எண் : 98948 15954. 



Thursday, January 17, 2013

நம்பினால் நம்பலாம்

மனையாளும், குழந்தைகளும் பொங்கல் விழாவிற்காக சொந்த ஊருக்குச் சென்று விட்டார்கள். எனக்குப் இது போன்ற பாவனை விழாக்கள், சடங்குகள் இவற்றில் எல்லாம் நம்பிக்கைகள் இல்லாது போய் விட்டது. அனுபவம் தந்த பாடம் இது. இதைப் பெறுவதற்கு நான் கொடுத்தது அனேகம்.

கலாச்சாரத்தின் மீது நான் கொண்டிருக்கும் பிடிப்பானது அதிகம். அது மனிதனுக்கு நல் வாழ்க்கைக்கு உதவுகிறது என்பதால்.அதன் காரணமாய் மனிதர்கள் சமூகத்தின் மீது பற்று வைக்கும் இவ்வகை விழாக்கள் பல்லாண்டுகளாய் தொடர்ந்து வர, குழந்தைகள் மனதில் அவை பதிய வைக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன். அதன் காரணமாய் இவ்வகை விழாக்களை விமரிசையாக கொண்டாடும் கிராமத்தை நோக்கி குழந்தைகளை அனுப்பி வைத்தேன்.

தனிமை என்பது எப்போதும் மனிதனுக்கு உள்ளுணர்வைத் தூண்டி விடும் அற்புதத்தின் தருணம். நான்கு நாட்களின் தனிமை தந்த உற்சாகம் இன்னும் ஒரு வருஷத்திற்கு இருக்கும். அப்படியான தனிமையின் ஊடே கோவையின் ரேஸ்கோர்ஸில் அமர்ந்திருந்தேன்.

அழகான நடைபாதை. அழகிய யுவன்களும், யுவதிகளும், வாழ்க்கையில் பெரும்பகுதியைக் கடந்து விட்டவர்களும் நடந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது கிட்டத்தட்ட அறுபது வயது மிக்க முதியவர் ஒருவர் என் அருகில் வந்து அமர்ந்தார். வந்ததும் என்னிடம் பேச ஆரம்பித்தார்.

“ மனிதனுக்கு எப்போதும் ஒரு கூட்டம் துணையாக இருக்க வேண்டும். அது நண்பர்களாகவோ அல்லது உறவினர்களாகவோ இருப்பின் நலம். கோபத்தை விடுத்து இப்படிப்பட்ட நல்ல நண்பர்களை யார் யாரை எந்தெந்த வட்டத்தில் வைக்க வேண்டும் என்று அறிந்து கொண்டு அதன் படி அவர்களை வரிசைப்படுத்தி உங்கள் வாழ்வைச் செம்மைப்படுத்துங்கள்” என்றார்.

அவர் சொல்லிய கருத்து என்னைக் கவர்ந்தது. சிரித்துக் கொண்டே தலையாட்டினேன். 

அடுத்த நொடி அவர் அங்கிருந்து சென்று விட்டார். யார் அவர் ? தெரியாது. எதற்காக என்னிடம் அவர் பேசினார்? தெரியாது. விடை தெரியாத எத்த்னையோ கேள்விகளுடன் இவரும் ஒரு கேள்வியாய் மனதில் பதிந்து விட  ரேஸ்கோர்ஸ் குளிர ஆரம்பித்தது. 

நடைபாதையில் மேலும் பலர் நடந்து கொண்டிருந்தனர். ரேஸ் கோர்ஸ் சாலை வட்டவடிமாய் இருந்தது. சுற்றிலும் மரங்களும் இருந்தன.

* * *

Wednesday, January 16, 2013

துண்டு


கிராமத்தானுக்கு துண்டு என்பது நண்பன். வெயிலில் உழும் போது தலைக்கு பாதுகாப்பாகவும், வியர்வையைத் துடைக்கும் போதும், குளிக்கும் போதும் இப்படி துண்டு என்பது அவனுடன் ஒட்டிப் பிறந்த உறுப்பாகவே இருக்கும். இதே துண்டு விழாக்காலங்களிலும், உறவுகளின் வீடுகளிலும் அவனுக்கு மரியாதையை அளிக்கும். இப்படிப்பட்ட துண்டுக்கு வேறொரு முகமும் உண்டு. 

இந்த ஆண்டு இந்தியாவின் பட்ஜெட்டில் விழுந்த துண்டு 5.13 லட்சம் கோடி. மேலும் மேலும் துண்டு அதிகமாகிக் கொண்டே போகிறது. 

கிராமத்தானுக்கு உதவியாய் இருந்த துண்டு, மரியாதையை அளித்த துண்டு இந்தியாவிற்கு மாபெரும் அச்சுறுத்தலாய் மாறிய அவலம் இருக்கிறதே அதற்கு காரணம் யார் தெரியுமா ?அனைவரின் விரலும் சுட்டும் ஒரே ஒரு நபர் “ பாரதப் பிரதமர்”. 

வரவை விட செலவு அதிகமாகும் போது விழும் எக்ஸ்ட்ராவைத் தான் துண்டு என்கிறோம். இந்தியாவிற்கு துண்டு எப்படி விழுகிறது என்பதை திரு க்ருமூர்த்தி அவர்கள் துக்ளக்கில் பதிவு செய்திருக்கிறார். 

அரசின் வரவை விட செலவு அதிகமாகும் போது விழும் துண்டு நம்பர் ஒன்.

ஏற்றுமதி செய்யும் மதிப்பை விட இறக்குமதி செய்யும் மதிப்பு அதிகமானால் வர்த்தகத்தில் துண்டு விழுகிறது. இது நம்பர் டூ.

நம்பர் ஒன்னுக்கு பல காரணங்கள் இருக்கின்றன.

அதில் நம்பர் ஒன் - மானியம். மானியம் கொடுப்பதினால் அரசின் வரவில் இருந்து செலவழிக்க வேண்டி இருக்கிறது. துண்டு விழுகிறது.

நம்பர் டூ - வரி விலக்கு. அரசுக்கு கிடைக்கக் கூடிய வரவில் பெரும் வெடியை வைப்பது இந்த வரிவிலக்குகள். இதனாலும் துண்டு விழுகிறது.

நம்பர் த்ரீ - இலவசம். மக்களுக்கு இலவசம் கொடுப்பது அக்மார்க் அயோக்கியத்தனம். இதனாலும் பெரிய துண்டு விழுகிறது.

வரி வசூலில் காட்டப்படும் மந்தம், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதால் அதிலும் ஒரு துண்டு விழுகிறது.

ஆகவே நான்கு துண்டுகளும் ஒன்று சேர்ந்து இந்தியாவின் பொருளாதாரக் கழுத்தை நெரிக்கிறது. மக்கள் மூச்சுத் திணற ஆரம்பிக்கின்றார்கள். விலைவாசி உயர ஆரம்பிக்கிறது. மக்கள் துன்பத்தில் உழல ஆரம்பிக்கின்றார்கள்.

நம்பர் டூ துண்டுக்கு காரணம் என்ன தெரியுமா?

ஏற்றுமதி இறக்குமதியில் வித்தியாசம் ஏற்படும் போது, உலக அளவில் இந்திய ரூபாய்க்கு இருக்கும் மதிப்புக் குறைகிறது. ரூபாய் மதிப்பு உயர்ந்தால் நாம் குறைவான ரூபாய் கொடுத்தால் போதுமானது. ரூபாய் மதிப்பு உயர்ந்தால் அதிக ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கும். இந்த அதிக ரூபாயும் துண்டாய் மாறி விடுகிறது.

இப்படி விழுந்து கொண்டே செல்லும் துண்டினைச் சமாளிக்க கடன் வாங்குகிறது அரசு. கடனுக்கு கொடுக்கும் வட்டியும் ஒரு துண்டு. இப்படியே எல்லாத் துண்டுகளும் ஒன்று சேர்ந்து தான் இந்தியாவின் நடப்பாண்டு பற்றாக்குறை 5.13 லட்சம் கோடி ரூபாய் ஆகி விட்டது. 

இந்த துண்டு விழாமல் தடுக்க எஸ்.க்ருமூர்த்தி சில கருத்துக்களை எழுதி இருக்கிறார்.

1. வரியை உயர்த்த வேண்டும்.
2. வரிச்சலுகைகளை நீக்கிட வேண்டும்.
3. ஓட்டுக்காக வழங்கப்படும் இலவசங்களை ஒழித்திட வேண்டும்.
4. மானியங்களை முற்றிலுமாக ஒழித்து விட வேண்டும்.

இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் தான் இந்தியாவின் கழுத்தை நெறிக்கும் துண்டினை எடுக்க முடியும் என்கிறார் அவர்.

துண்டு எப்பேர்பட்ட வேலைகளைச் செய்கிறது என்று பாருங்கள். நாம் என்னவோ துண்டினை வெகு சாதாரணமான ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். 

 நன்றி : துக்ளக் மற்றும் எஸ்.க்ருமூர்த்தி அவர்கள். (க்ருவிற்கு காரணம் இருக்கிறது)

திரு சுப்புவிற்கு ஒரு கேள்வி விரைவில்